26 மார்ச், 2011

குடிமகன்களே அம்மாவை ஆதரிப்போம்.

தேசிய முற்போக்கு திம்மி கழக தலைவரான விஜயகாந்த் தற்போது தங்கத்தாரகையோடு கூட்டணியில் இருக்கிறார் என்பதால் அவரை குறித்து தேசத்தில் எண்பது கோடி ஹிந்துக்களும் பெருமை அடைந்திருக்கிறார்கள். அதே நேரம் அவர் குறித்து தமிழகத்தில் தற்போது நிலவிவரும் கொடூர வதந்திகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம்.

மூத்த திம்மியின் லேட்டஸ்ட் அல்லக்கை திம்மியாக நகைச்சுவை நடிகர் வடிவேலு மாறியிருக்கிறார். திருவாரூரில் நடந்த திம்மிகள் முன்னேற்ற கழக பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் ஈ காக்கை கூட இல்லையாம். அந்த மேடையில்தான் வடிவேலு குடித்துவிட்டு 'குடிகார' வாந்தி எடுத்திருக்கிறார். தங்கத்தாரகையோடு கூட்டணி அமைத்திருக்கும் விஜயகாந்த் குடிகாரர் என்று பேசியிருக்கிறார். அன்புச் சகோதரர் விஜயகாந்த் குடிக்கும்போது, இவரென்ன ஊறுகாய் வாங்கிக் கொடுத்தாரா?

அதெல்லாம் இருக்கட்டும். அன்புச் சகோதரர் குடிப்பார் என்கிற விஷயத்தையே இவர்தான் கண்டுபிடித்தது போல பீத்திக் கொள்கிறாரே? அதை கேட்டு மூத்த திம்மியும், அவரது மகன்களான மதுரை திம்மி, கொளத்தூர் திம்மி உள்ளிட்டோர் வாய்விட்டு சிரிக்கிறார்களே? இந்த அநியாயத்தை தட்டிக் கேட்பார் இல்லையா? தட்டிக் கேட்க வேண்டிய நிலையில் இருக்கும் அயல்நாட்டு அண்டோமேனியாவின் அடியாளான தாடிவைத்த சர்தார்ஜியோ ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடிக்கு எத்தனை சைபர் என்று எண்ணிக் கொண்டிருக்கிறாராம்.

அன்புச் சகோதரருக்கு சோமபானம் அருந்தும் பழக்கம் இருப்பதை கண்டறிந்து முதன்முதலாக உலகுக்கு தெரிவித்த பெருமை நம் தங்கத்தாரகையே சாரும். இண்டெலிஜென்ஸ் பிராப்பர்ட்டி ரைட்ஸ் என்கிற சட்டம் மூலம் பார்க்கப் போனாலும் கூட, புரட்சித்தலைவியே இந்த கண்டுபிடிப்புக்கான உரிமை பெற்ற சொந்தக்காரர் ஆவார். நேற்று வந்த வடிவேலுவோ அல்லது யாரேனும் குடிவேலுவோ இதை தங்கள் கண்டுபிடிப்பு என்று மக்கள் முன் சொன்னால், அதை நம்பிவிட தமிழக மக்கள் என்ன மாங்காய்களா? வாழை மட்டைகளா?

அம்மா அன்புச் சகோதரரை குடிகாரர் என்று செல்லம் கொஞ்சியதும், பதிலுக்கு குடிகாரச் சகோதரர், நீதான் ஊத்திக் கொடுத்தாயா என்று அன்பாக பதிலளித்ததையும் திம்மிக்கள் மறைக்க நினைத்தாலும், தமிழக மக்கள் மறக்க மாட்டார்கள். ஆயிரம் பாட்டில்கள் மறைத்து நின்றாலும், இரட்டை இலை மறைவதில்லை.

இந்த வதந்தியைப் போலவே இன்னொரு வதந்தியும் உலவுகிறது. ஏதோ 'டாஸ்மாக்' என்கிற சேவை அமைப்பினை முதன்முதலாக மூத்த திம்மிதான் அமைத்ததைப் போல குடிகார வாக்காளர்களிடம் பிரச்சாரம் செய்து, அவர்களது வாக்கினை கவரும் அடாத செயலிலும் திம்மிக்கட்சியினர் ஈடுபட்டிருக்கிறார்கள். டாஸ்மாக் பெயரில் சரக்கு விற்கமுடியும் என்கிற பேருண்மையை அண்ட சராசரங்களுக்கும் முதன்முதலாக உணர்த்தியவர் அம்மா. தங்கத்தாரகையின் ஆட்சியில்தான் தமிழகம் வளமாக, பசுமையாக இருந்தது என்பதை குறிக்கும் பொருட்டு, டாஸ்மாக் போர்டுகளை பச்சை வண்ணத்தில் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டவரே அம்மாதான் என்பதை தமிழக குடிகார வாக்காளர்கள் அவ்வளவு விரைவில் மறந்து விட மாட்டார்கள். அந்த டாஸ்மாக்குக்கு சரக்கு பஞ்சம் ஏற்பட்டு விடுமோவென்று அஞ்சி, 'மிடாஸ்' தொழிற்சாலையை உருவாக்கியவரும் அம்மாதான்.

'குடி'யரசு என்கிற உயர்ந்த சித்தாந்தம் அடிப்படையில் பார்க்கப்போனாலும் எந்த திம்மியை விடவும், புரட்சித்தலைவி அம்மா தலைசிறந்தவர் என்பதை நாடு மறக்காது. நாட்டு மக்கள் நன்றி மறக்கவும் கூடாது. காலை முதல் மாலை வரை உழைத்து களைத்த தமிழன், நிம்மதியாக குவார்ட்டர் வாங்கி சரக்கு அடிக்கக்கூடிய நிலைமை இன்று தமிழகத்தில் நிலவுகிறதென்றால், நாமெல்லாம் நன்றி கூற கடமைப்பட்டவர் உலகம் போற்றும் உத்தம அம்மா புரட்சித்தலைவி டாக்டர் தங்கத்தாரகை அவர்கள்தான். எனவே 'குடி'யாட்சி நீடிக்க, குடிமகன்களே அம்மாவை ஆதரிப்போம். அம்மாவின் சின்னம் இரட்டை இலை.

குடியுயர அம்மா வரவேண்டும், அம்மா உயர நாடுயரும். அம்மா வாழ்க. திம்மி வீழ்க.

25 மார்ச், 2011

கதாநாயகி

தமிழகத்தில் தேர்தல் வாக்குறுதிகளை மக்கள் சீரியஸாக கவனிக்க ஆரம்பித்த தேர்தல் 1967ல் நடந்த சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தல். அவுன்ஸ் அரிசி வாங்கிக் கொண்டிருந்த மக்களுக்கு அண்ணாவின் ரூபாய்க்கு மூன்றுபடி அரிசி வாக்குறுதி, பாலையில் பூத்த சோலையாய் நம்பிக்கை தந்தது. வாக்குறுதி கொடுத்து வாக்குகளை கவர முடியும் என்கிற ஃபார்முலாவை ஏற்படுத்திய பெருமை பேரறிஞர் அண்ணாவையே சாரும்.

அன்றிலிருந்து இன்றுவரை மக்கள் கொஞ்சமாவது சீரியஸாக பரிசீலிப்பது திமு கழகத்தின் வாக்குறுதிகளைதான். அதற்கேற்ப திமுகவும் ஒவ்வொரு தேர்தலின்போது வாக்குறுதிகளை ரொம்பவும் மெனக்கெட்டே உருவாக்க வேண்டியிருக்கிறது.

நமக்கு ஓரளவு நினைவுதெரிந்த தேர்தல் 1989 சட்டமன்றத் தேர்தல். சென்னை நகரின் ஒவ்வொரு இல்ல முகப்பிலும் 'நாடு நலம்பெற, நல்லாட்சி மலர' என்கிற வாசகங்களோடு திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் அச்சடிக்கப்பட்ட ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட தேர்தல் அது. 'பெண்களுக்கு சம சொத்துரிமை' போன்ற வாக்குறுதிகளை திமுக தந்திருந்ததாக நினைவு.

அதிமுகவைப் பொறுத்தவரை தேர்தல் அறிக்கை என்பது ஒரு சம்பிரதாயம். எம்.ஜி.ஆர் காலத்திலும் கூட. தேர்தல் முடிந்து ஆட்சிக்கு வந்ததும் அந்த வாக்குறுதிகள் கூட அதிமுக தலைவர்களுக்கு நினைவில் இருக்குமா என்பது சந்தேகமே. அதே நேரம் 'சொல்லாததையும் செய்வோம்' என்கிற திமுகவின் பிரபலமான வசனம் அப்பட்டமாக பொருந்துவது அதிமுகவுக்குதான். சத்துணவுத் திட்டம் போன்ற சமூகநலத் திட்டங்களை அதிமுக வாக்குறுதியாக தரவில்லை. ஆட்சிக்கு வந்து சொல்லாமலே கொடுத்தது. 91 தேர்தலின் போதுகூட 69 சதவிகித இடஒதுக்கீட்டை தேர்தல் வாக்குறுதியாக அம்மா தந்ததாக நினைவில்லை. ஆயினும் பல்வேறு தடைகளை உடைத்து இதனை நடைமுறைக்கு கொண்டுவந்தார்.

2006 வரை திமுகவின் தேர்தல் அறிக்கை மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியை முன்னிறுத்தி முன்மொழியப்பட்டுக் கொண்டிருந்தது. கலைஞரின் மனசாட்சியான மாறனின் சிந்தனைகள் பலவும் வாக்குறுதிகளாக இடம்பெறும். 'மாநில சுயாட்சி' என்கிற வாசகம் ஒரு ஒப்புக்காவது இன்றும், திமுக அறிக்கைகளில் இடம்பெறுவது மாறன் காலத்திய பாரம்பரியமே. மாறன் மறைந்தபிறகு கலைஞருக்கு கிடைத்த பொருளாதார ஆலோசகர் நாகநாதன். 2006 தேர்தல் அறிக்கையை கவர்ச்சிகரமான வகையில் உருவாக்கியதில் அவரது பங்கு அளப்பறியது. உலகமயமாக்கல் நுழைந்து பதினைந்து ஆண்டுகள் கழிந்த நிலையில் மக்கள் மனதில் ஏற்பட்ட மாற்றங்களை கணக்கில் கொண்டு உருவாக்கிய அறிக்கை அது. 'நான் உனக்கு ஓட்டு போட்டால், தனிப்பட்ட முறையில் எனக்கென்ன கிடைக்கும்?' என்று ஒவ்வொரு வாக்காளரும் அரசியல் கட்சிகளிடம் பலனை எதிர்ப்பார்க்கத் தொடங்கியிருந்தார்கள்.

அத்தேர்தலில் இலவச கலர் டிவி, அண்ணா பாணியில் ஒரு கிலோ அரிசி இரண்டு ரூபாய்க்கு மாதிரியான அதிரடி வாக்குறுதிகள். ஆரம்பத்தில் இவையெல்லாம் சாத்தியமேயில்லை என்று சாதித்த ஜெயலலிதாவே பிற்பாடு பத்து கிலோ அரிசி இலவசமென்று அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மீதி பத்து கிலோ அரிசியை கிலோ ரூ.3.50/- விலையில் வாங்கிக் கொள்ளலாம். இதன்படி பார்க்கப்போனால் ஒரு கிலோ அரிசி ரூ.1.75/-க்கு வழங்கப்படுமென்பது ஜெ.வின் வாக்குறுதி. இது திமுகவின் வாக்குறுதியை காட்டிலும் 25 பைசா குறைவு.

2006 தேர்தல் பிரச்சார காலத்தில் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சி பசுமையாக நினைவில் நிற்கிறது. அதிமுக கூட்டணியின் பிரச்சாரப் பீரங்கி வைகோ ஒரு மேடையிலே முழங்கிக் கொண்டிருக்கிறார். "தோல்வி நிச்சயம் என்பதால், சாத்தியமில்லாத வாக்குறுதிகளை வழங்கிக் கொண்டிருக்கிறார் கலைஞர். ஏற்கனவே மானியத்தில் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கும் அரிசியை இன்னும் எப்படி ஒண்ணரை ரூபாய் குறைத்து கொடுக்க முடியும்?" என்று கர்ஜித்தார். அவருக்கு ஒரு துண்டுச்சீட்டு வருகிறது. 'அம்மா இன்று மாலை ஆண்டிப்பட்டி பிரச்சாரத்தில் பத்து கிலோ அரிசி இலவசமென்று வாக்குறுதி தந்திருக்கிறார்'. அதுவரை பேசிய பேச்சை அப்படியே மாற்றிப்பேச வேண்டிய நெருக்கடி வைகோவுக்கு. தனது பேச்சாற்றலால் மாற்றியும் பேசினார். ஆனால், மதிமுகவினரே நொந்துப்போனார்கள். மக்கள் சிரிப்பாய் சிரித்தார்கள்.

வாக்குறுதிகளால் திமுக ஆட்சிக்கு வந்தது. தேர்தலுக்கு முன் ஒரு பிரச்சாரக் கூட்டத்தில் ப.சிதம்பரம்தான் முதன்முறையாக திமுக தேர்தல் அறிக்கையை 'கதாநாயகன்' என்கிற வார்த்தைகொண்டு Branding செய்தார் என்பதாக நினைவு.

2006ல் ஆட்சிக்கு வந்த திமுக தனது வாக்குறுதிகளை பெருமளவில் நிறைவேற்றியும் இருக்கிறது. 

ஒரு கிலோ அரிசி இரண்டு ரூபாய்க்கு என்று சொன்னது. ஆனால் ஒரு கிலோ அரிசியை ஒரு ரூபாய்க்கே நியாய விலைக் கடைகளில் கொடுத்து வருகிறது.

ஏழைக்குடும்பங்களுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சி என்றது. ஏழை, பாழை மட்டுமில்லாமல் ரேஷன் கார்ட் வைத்திருக்கும் அனைவருக்குமே வண்ணத் தொலைக்காட்சி வழங்கப்பட்டு வருகிறது.

ஜெயலலிதா ஆட்சியில் நிறுத்தப்பட்டிருந்த பெண்களுக்கான திருமண உதவித்தொகை மீண்டும் அமல்படுத்தப்பட்டு, ரூபாய் பதினைந்து ஆயிரமாக உயர்த்தப்பட்டது.

கர்ப்பிணிப் பெண்களுக்கான உதவித்தொகை ரூ.6000/- வழங்கப்படுகிறது.

இலவச கலர் டிவி, இலவச கேஸ் அடுப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு வாரம் ஒரு முட்டை.

கூட்டுறவுக் கடன் தள்ளுபடி.

வேலையிழந்த சாலைப்பணியாளர்களுக்கு மீண்டும் வேலை.

அரசு ஊழியர்களிடமிருந்து பறிக்கப்பட்ட சலுகைகள் மீண்டும் வழங்கப்பட்டது.

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டம்.

இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்துவர்களுக்கும் இட ஒதுக்கீடு.

- இம்மாதிரி இன்னும் ஏராளமாக தேர்தலுக்கு முன் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் நிஜமாகவே திமுக ஆட்சி முனைப்பு காட்டியிருக்கிறது. அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு மாதிரி சொல்லாததையும் செய்துக் காட்டியிருக்கிறது. ஒரு அரசியல் கட்சி கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவது என்கிற அதிசயம் தமிழகத்தில்தான் கடந்த ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்திருக்கிறது.

இதோ அடுத்த தேர்தல். மீண்டும் ஒரு கவர்ச்சி அறிக்கை திமுகவிடமிருந்து. இம்முறை கலைஞர் 'கதாநாயகி' என்று தம் கழக அறிக்கையை branding செய்திருக்கிறார். ஊடகங்களோடு சேர்ந்து மக்களும் பரபரப்படைந்திருக்கிறார்கள். தேர்தல் அறிக்கைக்கு பின்பாக ஒரு சர்வே எடுக்கப்படுமாயின், திமுகவின் செல்வாக்கு ராக்கெட் வேகத்தில், கடந்துமுறையைப் போலவே உயர்ந்துக் கொண்டிருப்பதை இம்முறையும் அறிய முடியும்.

அம்மா ரொம்ப சிரமப்படவில்லை. திமுக தேர்தல் அறிக்கையை அப்படியே ஜெராக்ஸ் எடுத்து ஆங்காங்கே எண்களை உயர்த்தி, மானே தேனே போட்டு சம்பிரதாயமாக வாசித்துக் காட்டி விட்டார். மிக மிக நகைச்சுவையான தேர்தல் அறிக்கை இது. ஒருவேளை நகைச்சுவை நடிகர் வடிவேலு திமுகவுக்கு நகைச்சுவைப் பிரச்சாரம் செய்வதை ஈடுகட்ட, அம்மாவே நகைச்சுவை வேடம் பூண்டுவிட்டாரோ என்று தோன்றுகிறது. அம்மாவின் அறிக்கையை அவரது கட்சிக்காரர்கள் கூட சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை என்பதுதான் பரிதாபம்.

கதாநாயகன் அறிவித்த அறிக்கை கதாநாயகியாகவும், கதாநாயகி அறிவித்த அறிக்கை காமெடியாகவும் அமைந்திருப்பது என்னமாதிரியான ஒரு சுவாரஸ்யமான முரண்!

22 மார்ச், 2011

பெரியார் - அறம், அரசியல், அவதூறுகள்

தோழர் சுகுணா திவாகர் எழுதிய
பெரியார் - அறம், அரசியல், அவதூறுகள் நூல் வெளியீட்டு விழா!

நாள் : 29-03-2011, செவ்வாய் மாலை 5.30 மணி

இடம் : சென்னை பத்திரிகையாளர் மன்றம்,
(சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் எதிரில்)

பங்கேற்போர் :
கவிஞர் யாழன் ஆதி
கவிஞர் லிவிங் ஸ்மைல் வித்யா
பத்திரிகையாளர் கஜேந்திரன்
பேராசிரியர் அ.மார்க்ஸ்

ஏற்புரை :
கவிஞர் சுகுணா திவாகர்

நன்றியுரை :
தோழர் கவின்மலர்

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு :
கருப்புப் பிரதிகள்

அனைவரும் வருக!

21 மார்ச், 2011

அதே இருபத்தியொன்று...

ஊழ்வினையில் நமக்கு நம்பிக்கையில்லை. அது பகுத்தறிவுக்கு எதிரானது. அதே நேரம் 'எல்லா வினைக்கும், இணையான எதிர்வினை உண்டு' என்கிற அறிவியல் கூற்றை நாம் நம்புகிறோம். இன்றைய மதிமுக பொதுச்செயலாளரும், கலைஞரின் முன்னாள் போர்ப்படைத் தளபதியுமான வைகோவும் இந்த கூற்றினை நம்பியே ஆகவேண்டும்.

2001ல் ஜெ. ஆட்சிக்கு வந்தார். கலைஞரை கைது செய்தார். வைகோவை கைது செய்தார். சுபவீயை கைது செய்தார். நெடுமாறனை கைது செய்தார். இன்னும் ஏராளமானோரை தகுந்த காரணம் ஏதுமின்றி, வெறும் காழ்ப்புணர்வு காரணமாகவே கைது செய்தார். வைகோ கைது செய்யப்பட்ட காட்சி இன்னமும் நெஞ்சில் நிழலாடுகிறது. அமெரிக்காவில் இருந்து திரும்புகையில், விமான நிலையத்தில் வைத்து தீவிரவாதி மாதிரி கைது செய்யப்படுகிறார். போலிஸார் முரட்டுத்தனமாக இழுத்துச் செல்ல "ஆணவக்காரியின் ஆட்சி ஒழிக" என்று கோஷமிட்டவாறே கம்பி போட்ட வாகனத்துக்குள் சென்றார்.

அகில இந்தியாவும் அமைதியாக கைகட்டி வேடிக்கைப் பார்க்க கலைஞர் மட்டுமே பதறினார். உடன்பிறப்பு ஆயிற்றே? ஆட்சியிலிருந்த பாஜகவோடு பொடாவில் முரண்பட்டார். திமுகவின் மத்திய அமைச்சர்கள் அமைச்சரவைக் கூட்டங்களில் கர்ஜித்தார்கள். வேலூர் சிறைக்கு நேராக சென்று வைகோவுக்கு ஆறுதலும் சொன்னார் கலைஞர். ஒருவழியாக 2004 பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக வைகோ உள்ளிட்டவர்கள் வெளியில் வந்தார்கள். உள்ளே இருந்தபோது ஆதரவளித்த கலைஞருக்கு (நெடுமாறன் தவிர்த்து) நன்றியோடும் இருந்தார்கள். வைகோ, திமுக-காங்கிரஸ் கூட்டணியில் இணைந்தார்.

இது பழைய கதை.

2006 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக திருச்சியில் திமுகவின் மாநில மாநாடு. கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கிறார்கள் என்று அவர்களது கட்-அவுட்டுகள் மாநாட்டு முகப்பில் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. திமுகவினருக்கு இயல்பாகவே வைகோ மீது பாசம் அதிகம் என்பதால் 'கலைஞரின் போர்வாளுக்கு'தான் வரவேற்பு தொண்டர்கள் மத்தியில் அதிகம். மாலை நடைபெறும் நிகழ்வில் வைகோ பங்கேற்பார் என்று அக்கம் பக்கத்து ஊர்களில் இருந்து மதிமுகவினரும் திரளாக வந்திருந்தனர்.

மாலை வைகோ வரவில்லை. மதிமுகவினர் ஏமாற்றத்தோடு திரும்பிச் சென்றனர். மாநாட்டு முகப்பில் திமுக தொண்டர்கள் வைகோவுக்கு எதிராக கோஷமிட்டனர். அவரது படம் ஒட்டிய சுவரொட்டிகளை நகரெங்கும் கிழித்து எறிந்தனர். ஏனெனில் அன்று மதியம் வைகோ, போயஸ் தோட்டம் சென்று அன்பு சகோதரியோடு 35 சீட்டுக்கு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தார். தாலிகட்டிக் கொள்ள மேடையில் காத்திருந்த மணமகளை ஏமாற்றிவிட்டு ஓடிய மணமகன் மாதிரியான காரியத்தை செய்திருந்தார் வைகோ.

திமுக கூட்டணியை விட்டு அவர் வெளியேற அப்போது சொன்ன காரணம் இருபத்தியொன்று.

ஆம். திமுக இருபத்தியொன்று சீட்டுகள் மட்டுமே தர முன்வந்ததால் அன்புச்சகோதரியோடு தேர்தலை சந்திக்க முடிவெடுத்ததாக சொன்னார் (திமுகவே அப்போது மொத்தமாக 132 சீட்டுகளில்தான் போட்டியிட்டது). இந்த அடாத முடிவினை மதிமுக தொண்டர்களை சுலபமாக ஒப்புக்கொள்ள வைக்க அவரால் முடிந்தது. ஒரே ஒருவரை மட்டும் அவரால் சமாதானப்படுத்த இயலவில்லை. கலிங்கப்பட்டிக்கே நேராக சென்று அவரை சமாதானப்படுத்த வேண்டியிருந்தது. அவர் வைகோவை ஈன்றெடுத்த அன்னையார். மகனை வெஞ்சிறையில் போட்ட சீமாட்டியுடனேயே, அதே மகன் தேர்தல் களம் காண்பதை அந்த தாயுள்ளத்தால் பொறுத்துக் கொள்ள இயலவில்லை.

இதோ ஐந்தாண்டுகள் கழிந்துவிட்டது. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் வைகோ தலைமையிலான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிடப் போவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறது.

இப்போதும் காரணம் அதே இருபத்தியொன்று.

அன்று கலைஞர் தருவதாக சொன்ன இருபத்தியொன்றை வைகோ உதாசீனம் செய்தார். இன்று புரட்சித்தலைவியிடம் அதே இருபத்தியொன்றை மட்டுமாவது தாருங்கள் என்று கெஞ்சிக் கூத்தாடியும், அம்மாவின் மனம் இரங்கவில்லை. கடைசிவரை காக்க வைத்து கழுத்தறுத்திருக்கிறார்.

இப்போதும் வைகோ கலிங்கப்பட்டிக்கு விரைகிறார், அன்னையின் திருமுகத்தை காண. ஒருவேளை ஐந்தாண்டுகளுக்கு முன்பு அன்னையின் உள்ளத்தை புண்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்பதற்காகவும் இருக்கலாம்.

15 மார்ச், 2011

உலோகம்!


நூலின் பெயர் : உலோகம்

நூல் ஆசிரியர் : ஜெயமோகன்

விலை : ரூ.50

பக்கங்கள் : 216

வெளியீடு : கிழக்கு பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் சாலை,
ஆழ்வார்ப்பேட்டை, சென்னை - 600 018.
தொலைபேசி : 044-42009601/03/04
தொலைநகல் : 044-43009701

நூலினை ஆன்லைனில் வாங்க இங்கே சொடுக்கவும்.



ஆங்கில 'த்ரில்லர்' நாவல்களின் தமிழ் மொழியாக்கத்தை (பெரும்பாலும் கண்ணதாசன் பதிப்பகம்) வாசிக்கும்போது, தமிழ் புனைவுலகின் 'த்ரில்' போதாமை குறித்த ஏக்கம் அடிவயிற்றிலிருந்து தொண்டைக்கு பந்தாய் கிளம்பும். ஒரு அகதா கிறிஸ்டியோ, ஜேம்ஸ் ஹேட்லி சேஸோ தமிழில் ஏன் உருவாகவில்லை என்ற கேள்வி இயல்பாய் எழும்பும்.

தமிழ் த்ரில்லர்களின் வடிவம் ரொம்ப சுலபமானது. ஏதோ ஒரு கதாபாத்திரத்தின் மகிழ்ச்சியான ஒரு நாளில் தொடங்கும் முதல் அத்தியாயத்தின் முடிவில் ஒரு கொலை. வழக்கை ஒரு இன்ஸ்பெக்டர் விசாரிப்பார். அல்லது ஒரு வக்கீல். இல்லையேல் ஒரு தனியார் துப்பறியும் நிபுணர். அந்த நிபுணரின் உதவியாளர், பெருத்த மார்புகள் கொண்ட, ஆங்கில அசாதாரண வாசகங்கள் அடங்கிய டீ-ஷர்ட் போட்ட பெண். இடையிடையே அசட்டு நகைச்சுவை. சில ஆக்‌ஷன் காட்சிகள். தேவைப்பட்டால் மேலும் சில கொலைகள். கொலையாளி யாரென்று, கடைசி அத்தியாயம் வரை யூகிக்க முடியாத நடை மட்டும் தமிழ் த்ரில் நாவல்களின் ஒரே சாதனை.

இந்த படா அலுப்பான வழக்கத்தை அனாயசமாக உடைத்தெறிந்திருக்கிறது ஜெயமோகனின் உலோகம்.

தமிழகத் தமிழனுக்கு தெரிந்த ஈழப்போர் பின்னணிக்கு ஒரே ஒரு பரிணாமம்தான். தமிழ்ப் போராளிகள் மாவீரர்கள். இலங்கை ராணுவத்தினர் முட்டாள்கள். இந்திய உளவுத்துறையினர் அடிமுட்டாள்கள். உண்மையோ, பொய்யோ. பலமாக நிறுவப்பட்டுவிட்ட இந்த கற்பிதத்துக்கு பின்னால் வேறு சில பரிணாமங்களும் இருக்கக்கூடும் இல்லையா? உதாரணத்துக்கு, போர் இயந்திரமாய் மாறிவிட்ட இயக்கத்துக்காரனுக்கும் காதல் இருக்கும், காமம் இருக்கும்.

முப்பது ஆண்டுகள் ஓயாமல் துப்பாக்கிச் சத்தம் கேட்டுக் கொண்டிருந்த நாட்டிலும், மனிதர்களுக்கு போர் மட்டுமே வாழ்க்கையல்ல. ஜெயமோகன், 'உலோகம்' மூலமாக வாசகனுக்கு காட்ட விரும்பும் சித்திரம் இதுதான். 'ஈழப்போர் பின்னணியில் திகைப்பூட்டும் த்ரில்லர்' என்று அட்டை குறிப்பிட்டாலும், ஒரு போர்க்காட்சியைக் கூட சித்தரிக்காமல், போருக்கான த்ரில்லை தருகிறார் ஜெயமோகன். ஈழப்போர் வெறும் 'த்ரில்' மட்டும்தானா என்று அசட்டுத்தனமாக, அவசரமாக கேட்டுவிடாதீர்கள். 'த்ரில்'லும் உண்டு. உலோகம், த்ரில்லை தனக்கான கச்சாவாக தேர்ந்தெடுத்துக் கொள்கிறது. கூடுதலாக புலம்பெயர் வாழ்க்கையின் அவலமான நிதர்சனத்தை போகிற போக்கில் தொட்டுச் செல்கிறது.

சார்லஸ் (எ) சாந்தனின் சுயவாக்குமூலம் உலோகம். பலாலி போர்முனையில், அவனது தொடைக்குள் பாய்ந்த ஈயக்குண்டுதான் உலோகம். அவ்வப்போது தொடைத்தழும்பில் அந்த உலோகத்தை தடவிப் பார்த்துக் கொள்கிறான். அது அவனது உடலுக்குள் இருப்பதை விரும்புகிறானா, வெறுக்கிறானா என்பது முக்கியமில்லை. தன்னுடைய உடலுக்குள் ஒரு குண்டு இருப்பதை ஏற்றுக் கொள்கிறான். சாந்தன் அந்த ஈயக்குண்டை ஒத்தவன். இயக்கங்களுக்கும், இந்திய உளவுத்துறைக்கும் இடையில் ஈயக்குண்டினைப் போல அல்லாடிக் கொண்டிருக்கிறான். அவன் ஒரு கொலை இயந்திரம். இந்த நிலையை அவன் விரும்பவும் இல்லை. வெறுக்கவும் இல்லை. ஏற்றுக் கொள்கிறான்.

அங்காடித் தெரு மாதிரி உலோகமும் க்ளைமேக்ஸ் ஓபனிங். பொன்னம்பலத்தாரை போடுவதுதான் முதல் அத்தியாயம். எனவே, க்ளைமேக்ஸில் சாந்தன் பொன்னம்பலத்தாரை போடுகிறானா இல்லையாவென்று, இயல்பாக வாசகனுக்கு கிடைக்க வேண்டிய 'த்ரில்', 'மிஸ்' ஆவதுதான் மிகப்பெரிய குறை. எப்படி போடுகிறான் என்பதும் ஓபனிங்கிலேயே சொல்லியாகிவிட்டது. மீதிக்கதையை இருநூறுக்கும் மேற்பட்ட பக்கங்களுக்கு விரிப்பது, படைப்பாளிக்கு மிகப்பெரிய சவால். ஜெயமோகன், இச்சவாலை அனாயசமாக வெற்றி கொள்கிறார்.

இயக்கங்கள் குறித்து பெயர் குறிப்பிடாமல் எழுதுகிறார். எனவே சாந்தன் எந்த இயக்கம் (probably LTTE), ஜார்ஜ் எந்த இயக்கமென்று வாசிக்கையில் குழப்பம் ஏற்படுகிறது. இயக்கம் மூலமாக இந்தியாவில் ஜார்ஜ் பயிற்சி பெற்று, தாயகம் திரும்புகிறான். அவனுடைய வயது நாவலில் இருபத்தி மூன்று. கதை நடைபெறும் காலம் 2004-05 என்று, கதையில் இடம்பெறும் சினிமாக்கள் (கில்லி, திருப்பாச்சி, etc) வாயிலாக அறிய முடிகிறது. 1991ல் ராஜீவ் கொலைக்குப் பிறகு ஏதேனும் ஈழப்போராளி அமைப்புகளுக்கு இந்தியாவில் பயிற்சி கொடுக்கப்பட்டதா என்று உறுதியாக தெரியவில்லை. கதைக்களம் எண்பதுகளின் இறுதியாக குறிப்பிடப்பட்டிருந்தால், பொருத்தமானதாக இருந்திருக்கும். ஆனால் செல்போன் போன்ற நவீன நாகரிக வஸ்துக்களை கதைக்குள் கொண்டுவந்திருக்க இயலாது. அதுபோலவே பொன்னம்பலத்தாரின் இயக்கம் எதுவென்றும் மண்டையைப் பிய்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. பொன்னம்பலத்தார் பாத்திரத்தை, வரதராஜபெருமாளில் இருந்து பிய்த்து எடுத்திருக்கிறார் ஆசிரியர் என்பதை மட்டும் ஓரளவுக்கு யூகிக்க முடிகிறது.

ஈழப்போராட்டத்தில் இந்திய உளவுத்துறையின் பங்கு என்கிற விஷயம் குறித்த நடுநிலையான பார்வையை தமிழ்ச்சூழலில் நாம் கண்டறிய இயலாது. விடுதலைப்புலிகளின் வெற்றிகளைத் தவிர்த்துப் பார்த்தோமானால், புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களால் அதிகம் மிகைப்படுத்தப்பட்ட விஷயம் இதுவாகதானிருக்கும். ஈழத்திலே கட்டெறும்பு ஒருவனை கடித்தால் கூட, அது இந்திய உளவுத்துறையான 'ரா'வின் வேலை எனுமளவுக்கு பிரச்சாரம் செய்யப்படுவதை இணையங்களிலே வாசிக்கலாம். ஜெயமோகன், 'ஜெய்ஹிந்த்' போடாமல், 'ரா'வின் பங்கை முடிந்தளவுக்கு நேர்மையாக, இந்நாவலில் சித்தரிக்க முனைகிறார் என்றே நம்பலாம். 'ரா' அமைப்பு, ஈழப்போராட்ட அமைப்புகளுக்கு இடையே, ஒப்புக்குச் சப்பாணி அமைப்புகளை உருவாக்கி, அமைப்புகளுக்குள் எவ்வகையான குழப்பங்களை ஏற்படுத்தியிருக்கும் என்பது குறித்த ஒரு தெளிவான, நுட்பமான சித்திரம் உலோகம் வாயிலாக நமக்கு கிடைக்கிறது.

போர்ச்சூழலின் பக்கவிளைவாக உடைபடும் கலாச்சார விழுமியங்களையும், ரெஜினா பாத்திரம் மூலமாக கவலையோடு பதிவு செய்கிறார் ஜெயமோகன். குறிப்பாக 'ஒருவனுக்கு ஒருத்தி' என்கிற தமிழ்க்கலாச்சாரம் சூழல்கள் காரணமாக சீரழிவதை, ரெஜினா, வைஜயந்தி பாத்திரங்கள் மூலமாக எடுத்துக் காட்டுகிறார். முந்தையக் காட்சி ஒன்றினில் 'அண்ணை' என்று சாந்தனை அழைக்கும் ரெஜினா, பிற்பாடு தனது உடல்மொழி மூலம் அவனுக்கு உடல்சார்ந்த உறவுக்கு சமிக்ஞை கொடுக்கிறாள். பிறிதொரு சந்தர்ப்பத்தில், அடக்க முடியாத வேட்கையோடு முரட்டுத்தனமாக அவளது உடலை கையாளுகிறான் சாந்தன். இருவருக்குமே 'அண்ணை' நினைவில் இல்லை.

சாந்தனை, 'ரா' அலுவலகத்தில் செய்யும் வதைக்காட்சிகளின் சித்தரிப்பு வாசகனை வலிக்கச் செய்கிறது. பரபரப்பின் எல்லையை தொட்டு மீளுகிறோம். மிகக்கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகள் கடைசி இரண்டு அத்தியாயங்களின் பக்கங்களை 'திக் திக்' மனதோடுதான் கடந்து செல்ல வேண்டியிருக்கிறது.

வன்முறையும், காமமும் ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள். இரண்டும் ஏற்படுத்தும் கிளர்ச்சியும், உச்சமும் ஒன்றுக்கொன்று சளைத்ததல்ல. சராசரி மனித உணர்ச்சிகளை வீழ்த்தி உலோகமாக வாழப் பழகிக்கொண்டவன், தவிர்க்க இயலா சந்தர்ப்பத்தில் வைஜயந்தி மீதான காமத்தில் மீண்டும் மனிதனாகிறான். இதன் விளைவாக சிக்கல்களுக்கு உள்ளாகிறான். சிக்கலில் மீண்டு எழுந்த மறுகணம், மீண்டும் உலோகம் ஆகிறான். துரோகங்களால் ஆன முடிச்சுகளும், முடிச்சுகளை சிக்கலின்றி அவிழ்ப்பதும் என்று மாறி மாறி எழுத்தில் விளையாடித் தள்ளியிருக்கிறார் ஜெயமோகன்.

நாவலின் உள்ளடக்கம் மட்டுமல்ல. தயாரிப்பும் சர்வதேசத் தரம். தங்க நிறத்தில் எம்போஸிங் செய்யப்பட்ட எழுத்தாளரின் பெயரோடு கூடிய அட்டை. புத்தகத்தின் அளவு. வடிவம். வரிகளுக்கு இடையேயான இடைவெளி என்று ஆங்கில நாவல்களின் தரத்தை, தனது முதல் முயற்சியிலேயே எட்டிப் பிடித்திருக்கிறது 'கிழக்கு த்ரில்லர்'. இந்நாவல் கிழக்கு த்ரில்லருக்கு செமத்தியான கிக் ஸ்டார்ட்.

உலோகம் - சாகஸ எழுத்தின் உச்சம்!

14 மார்ச், 2011

அமெரிக்கா வேண்டாம்.. அவினாசி போதும்!

நாம் வரவேற்பறையில் காத்துக் கொண்டிருந்தபோது, அவரை சந்திக்க ஊர்ப்பெரியவர்கள் சிலரும் நம்மோடு காத்திருந்தார்கள். அவர் வணக்கம் கூறியவாரே வந்தார்.

"வணக்கம் அம்மா. கோயில் நன்கொடை விஷயமா பார்க்க வந்தோம்!" பெரியவர்களில் ஒருவர் மெதுவாக ஆரம்பித்தார்.

அவசரமாக அவர் இடைமறித்து, "கோயில்களுக்கு நன்கொடை தராமல் இருப்பதை கொள்கையாகவே வெச்சுருக்கேன். உங்க ஊர் பள்ளிக்கு எது வேணும்னாலும் கேளுங்க. அரசாங்கத்திடம் இருந்து எவ்வளவு கிடைக்குமோ வாங்கித் தருகிறேன். பத்தலைன்னா என் சொந்தக் காசையும் கூட செலவளிக்கிறேன்" என்று நாகரிகமாக மறுக்கிறார்.

அவர், அவினாசி ஒன்றியத்தலைவி சாந்திபாபு. கோவை மண்டலத்தில் அரசியலில் ஈடுபட்டிருக்கும் பெண்களில் முக்கியமானவர். வயது 32. உள்ளாட்சி மன்றங்களில் மைக்கும், நாற்காலிகளும் பறக்க, சூடாக சபைக்கூட்டங்கள் நடக்கும் காலமிது. சாந்திபாபு தலைமை வகிக்கும் ஒன்றியக்குழு கூட்டங்களில் இதுவரை ஒரு சலசலப்பு கூட எழுந்ததில்லை. "அவ்வளவு பாந்தமா அம்மா கூட்டத்தை நடத்துவாங்க" என்று சிலிர்க்கிறார் ஊராட்சி ஒன்றியக்குழு அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர்.

சாந்தியின் சொந்த ஊர் அவிநாசி அருகில் நம்பியாம்பாளையம். நடுத்தரக் குடும்பம். படிப்பில் கில்லி. +2வில் பள்ளியில் முதலிடம். பின்னர் கம்ப்யூட்டர் அறிவியலில் பி.ஈ. பட்டம் பெற்றார். தூரத்து உறவினரான பாபுவை காதலித்து வந்தார் சாந்தி. பி.ஈ. படித்த பெண்ணை, +2 படித்த பாபுவுக்கு கொடுக்க பெற்றோருக்கு விருப்பமில்லை. நீண்டகாலப் போராட்டத்துக்குப் பிறகு இருவீட்டார் சம்மதத்தோடு காதல் வென்றது. 'உங்கள் மகள் பி.ஈ. தானே.. என்னுடைய மனைவி எம்.ஈ-யாக இருக்கவேண்டும்' என்று வைராக்கியத்தோடு, மனைவியை மேற்படிப்பு படிக்கவைத்தார் பாபு. தனியார் பொறியியற் கல்லூரி ஒன்றில் அப்போது விரிவுரையாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார் சாந்தி பாபு.

எம்.ஈ (சாஃப்ட்வேர் என்ஜீனியரிங்) இறுதியாண்டு படிக்கும்போது சர்வதேச அளவில் நடந்த கருத்தரங்கில் ஆய்வுக்கட்டுரை ஒன்றினை சமர்ப்பிக்கும் வாய்ப்பும் இவருக்கு கிடைத்தது. இவரது ஆய்வுக்கட்டுரையை கண்ட அமெரிக்க நிறுவனம் ஒன்று, மூன்று லட்ச ரூபாய் சம்பளத்துக்கு தங்கள் நிறுவனத்துக்கு பணிபுரியவருமாறு இவரை அழைத்தது. "அமெரிக்கா வேண்டாம். என்னுடைய அவினாசியே போதும்" என்று வாசல்தேடி வந்த வாய்ப்பை கம்பீரமாக மறுத்தார் சாந்திபாபு.

அமெரிக்க வாய்ப்பை மறுத்தவருக்கு அவினாசி வாய்ப்பு கேட்காமலேயே கிடைத்தது. சொந்த ஊரான நம்பியாண்டம்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினருக்கான தேர்தலில் நின்று வென்றார். இது அவினாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது. பின்னர் அவினாசி ஊராட்சி ஒன்றியத் தலைவியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இருநூற்று இருபத்தியாறு குக்கிராமங்கள் அடங்கிய முப்பத்தியோரு ஊராட்சி மன்றங்களை இப்போது நிர்வகித்து வருகிறார் சாந்திபாபு. இப்பதவிக்கு வரும்போது இவரது வயது இருபத்தி எட்டு. இந்தியாவிலேயே இவ்வளவு இளம்வயதில் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவியாக பதவியேற்றது இவர் மட்டும்தான்.

ஊராட்சி ஒன்றியப் பள்ளிகள், சத்துணவுக்கூடம், அங்கன்வாடி மையம், ஆரம்ப சுகாதார நிலையம், ஊராட்சி அலுவலகம், கூட்டுறவு அங்காடி, நியாயவிலைக்கடை என்று எங்காவது திடீரென அதிரடி விசிட் அடித்து சோதனை செய்வது இவரது வழக்கம். கையும் களவுமாக சிலர் மாட்டியதும் உண்டு. 'இல்லாதவருக்கு இலவச கைப்பேசி' என்றொரு திட்டத்தினை மத்திய அரசு அமலாக்கி வருகிறது தெரியுமா? தமிழகத்திலேயே அவினாசி ஒன்றியத்தில்தான் முதன்முறையாக இது அமலுக்கு வந்திருக்கிறது. அவினாசி ஒன்றியக்குழு கட்டிடம் சுமார் ஒன்றரைக் கோடி செலவில் கட்டப்பட்டு வருவதும் இவரது சாதனைகளில் குறிப்பிடத்தக்க ஒன்று. தொழில் கடன், கல்விக் கடன் என்று தன்னை நாடி வரும் ஒன்றிய மக்களுக்கு சாந்திபாபு ஒரு கலங்கரை விளக்கம்.

சமூகக்கல்வி மற்றும் முன்னேற்ற மையம் சார்பாக உள்ளாட்சி பெண் பிரதிநிதிகளுக்கும், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கும் அவ்வப்போது விழிப்புணர்வு முகாம் நடத்தி வருகிறார்.

தன்னுடைய வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு ரத்ததானம் குறித்து அடிக்கடி அறிவுறுத்துகிறார். மாணவ மாணவியருக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்பதற்காக கணவரோடு சேர்ந்து, தன்னுடைய உடலையும் கோவை மருத்துவக் கல்லூரிக்கு தானமாக தந்திருக்கிறார்.

திறம்பட செயல்படும் இவரைப்பற்றி மாவட்ட ஆட்சியர் மற்றவர்களிடம் விசாரித்துப் பார்த்திருக்கிறார். அப்போதுதான் சாந்திபாபுவின் கல்வி பின்புலம் தெரிய வந்திருக்கிறது. கற்ற கல்வி வீணாகக்கூடாது என்று அறிவுறுத்திய மாவட்ட ஆட்சியர், விரிவுரையாளர் பணியையும் தொடரவேண்டும் என்று சாந்திபாபுவைக் கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து கருமத்தம்பட்டியிலுள்ள தமிழ்நாடு பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராக பணிக்குச் சேர்ந்தார். இளங்கலை கம்ப்யூட்டர் அறிவியல் மாணவர்களுக்கு 'டேட்டா மைனிங்' பாடம் நடத்தி வருகிறார்.

குடும்பத்தலைவி, பஞ்சாயத்து யூனியன் தலைவி, கல்லூரி விரிவுரையாளர், மகளிர் சுய உதவிக்குழுக்களின் ஆலோசகர் – இத்தனை பொறுப்புகளையும் எப்படி சமாளிக்கிறீர்கள் சாந்தி?

"இது மட்டுமல்ல. டேட்டா மைனிங் துறையில் பி.எச்.டி. முடித்து டாக்டர் பட்டமும் பெற இருக்கிறேன். காலையில்தானே கல்லூரி? மாலை சும்மாதானே இருக்கிறது. மாலை மட்டுமல்ல. சனி, ஞாயிறு வாரயிறுதிகளும் எனக்கு விடுமுறைதான். இவ்வளவு நேரம் கிடைக்கிறதே? இந்தப் பணிகளை செய்ய இது போதாதா? உண்மையை சொல்ல வேண்டுமானால் எனக்கு இன்னும் கூட நிறைய நேரம் மீதமிருக்கிறது" என்று சொல்லி சிரிக்கிறார்.

சாந்தி – பாபு தம்பதியினருக்கு இரண்டு வயதில் கலைநிதி என்று ஒரு மகன் உண்டு. திருமணம் ஆகி எட்டு வருடங்கள் ஆகிவிட்டாலும் இன்னமும் கூட்டுக் குடும்பம்தான். சாந்திபாபுவின் வெற்றி ரகசியம் இப்போது புரிகிறதா? கணவரின் - புகுந்த வீட்டின் ஆதரவு இருந்தால், எந்த மருமகளும் ஊருக்கே தலைவி ஆகலாம்.

(நன்றி : புதிய தலைமுறை)

11 மார்ச், 2011

புரட்சி பாரதம்!

நீங்கள் வழக்கமாக செய்தித்தாள் படிக்கிறவராக இருந்தால்.. இரண்டு, மூன்று நாட்களுக்கு முன்பாக இந்தப் பெயரை வாசித்திருப்பீர்கள். 'புரட்சி பாரதம்'. "திமுக கூட்டணியிலிருந்து புரட்சி பாரதம் விலகல்!" என்று சிங்கிள் காலத்திலோ, டபுள் காலத்திலோ நிச்சயம் வாசித்திருப்பீர்கள். தேர்தல் பரபரப்பு மிகுந்த இந்த சூழலில் கூட்டணியிலிருந்து ஒரு கட்சி விலகுவது என்பது மக்களுக்கு ஆச்சரியத்தையோ, அதிர்ச்சியையோ, மகிழ்ச்சியையோ, வருத்தத்தையோ தந்திருக்க வேண்டும். துரதிருஷ்டவசமாக 'புரட்சி பாரதம்' விவகாரத்தில் இதில் ஓர் உணர்ச்சி கூட யாருக்குமே ஏற்படவில்லை. இக்கட்சி தங்கள் கூட்டணியில் இருந்து விலகி, தனித்துப் போட்டியிடுவது குறித்து கலைஞருக்காவது தெரிந்திருக்குமா என்றுகூட தெரியவில்லை.

1991ல் அம்மா ஆட்சிக்கு வந்த காலக்கட்டத்தில் அரக்கோணம் பக்கமாக போய்வந்தவர்களுக்கு தெரிந்திருக்கும். வாழப்பாடியார், வீரப்பாண்டியார் ஸ்டைலில் "மூர்த்தியார்" என்ற பெயர் சுவர்களில் மெகா சைஸில் எழுதப்பட்டிருக்கும். இந்த 'யார்' என முடியும் பெயர்களுக்கு ஓர் ஒற்றுமை உண்டு. ஊர் பெயரை மையப்படுத்தி பெயர் வைத்திருப்பர்களுக்குதான் இந்த 'யார்' அந்தஸ்து கிடைக்கும். உதாரணம் மதுராந்தகத்தார். முதன் முதலாக தனது பெயருக்குப் பின்னால் 'யார்' சேர்த்து கூடுதல் மரியாதையை ஏற்படுத்திக் கொண்டவர் பூவை மூர்த்தியார்தான். இவர் ஏன் பூவையார் என்று போட்டுக் கொள்ளாமல், மூர்த்தியார் என்று போட்டுக் கொள்கிறார் என்று அப்போது ஆச்சரியப்பட்டிருக்கிறேன். இப்போது சுவரொட்டிகளில் 'ராசாத்தியார்' லெவலுக்கு வந்துவிட்டதால், அது ஒன்றும் பெரிய பிரச்சினையாக தெரியவில்லை.

பா.ம.க. அரசியல் கட்சியாக உருவெடுத்து விஸ்வரூபமாக வடமாவட்டங்களில் வளர்ந்து வந்த காலக்கட்டம் அது. 'அந்த' சாதிக்காரர்கள் ஒன்று சேருகிறார்கள் என்றதுமே, அப்பகுதியில் பெரும்பான்மையானவர்களாக வசித்து வந்த தலித் மக்கள், தங்களுக்கும் ஒரு அமைப்பினை எதிர்நோக்கி இருந்தார்கள். தங்களுக்குள் ஒரு தலைவன் தோன்ற மாட்டானா என்று ஏங்கிப் போய் கிடந்தார்கள். அம்மக்களது விருப்பத்தைப் புரிந்துகொண்டு திடீரென்ற களத்தில் குதித்தவர் பூவை மூர்த்தியார். புரட்சியாளர் அம்பேத்கர் பாணியில் இவரும் வக்கீல். எப்போதும் கோட்டு, சூட்டு போட்டு ஜம்மென்றிருப்பார். அரசியலுக்கு வாகான, களையான கருப்பு முகம்.

94 அல்லது 95 என்று நினைவு. புரட்சியாளர் பூவை மூர்த்தியார் தனது 'புரட்சி பாரதம்' கட்சியினை பெரும் கூட்டம் கூட்டி, அரக்கோணத்தில் துவக்கினார். துவக்கி வைத்தவர் புண்ணியவதி புரட்சித்தலைவி என்று சொன்னால் நீங்கள் இப்போது நம்பித்தான் ஆகவேண்டும். பா.ம.க.வுக்கு 'செக்' வைக்க அம்மாவுக்கு கிடைத்த ஆயுதம் புரட்சி பாரதம். பொதுவாகவே இன்றுவரை தலித் மக்களின் விருப்பத்துக்குரிய கட்சியாக அதிமுகதான் இருக்கிறது. எனவே புரட்சி பாரதத்தை, புரட்சித்தலைவி ஆதரவோடு மூர்த்தியார் தொடங்கியது பொருத்தமானதுதான். திமுக, அதிமுக கட்சிகளே இங்கில்லையோ என்று நினைக்குமளவுக்கு அரக்கோணம் சுற்று வட்டார கிராமங்களில் புரட்சி பாரதத்தின் நீலக்கொடி பறந்தது.

96 தேர்தலில் புரட்சி பாரதம் ஆதரித்த அதிமுக படுதோல்வி அடைந்தது. ஏனெனில் அப்பகுதியில் பா.ம.க.வுக்கு இணையான செல்வாக்கு பெற்றிருந்த ஜெகத்ரட்சகன் திமுக அணியில் நின்றார். மாநில அளவில் வீசிய அதிமுக எதிர்ப்பலையும் முக்கியமான காரணம். இந்த தோல்விக்குப் பிறகு புரட்சி பாரதத்தின் 'மவுசு' கொஞ்சம் ஸ்ருதி குறைந்தே காணப்பட்டது. இடையில் 98-99 பாராளுமன்றத் தேர்தல்களில் பா.ம.க.வின் செல்வாக்கும் அசுரபலம் பெற்றது. ஜெகத்ரட்சகனும் திமுகவில் இணைந்து பணியாற்ற ஆரம்பித்தார்.

இதற்கிடையே பூவை மூர்த்தியாரின் தொழில்கள் குறித்து வெவ்வேறு விதமான பேச்சுகளும் கெட்டவிதமாக நிலவ ஆரம்பித்தன. குறிப்பாக சென்னையின் ஒரு பிரபலமான 'சாதி' பிரமுகரோடு இணைந்து, பெட்ரோல் கலப்படத் தொழிலில் அவர் கொடிகட்டிப் பறந்ததாக செய்திகள். 'கட்டைப் பஞ்சாயத்து' இன்னொரு முக்கியத் தொழில். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி புள்ளிகளே பூவையாருக்கு அஞ்சும் காலமும் இருந்தது.

இதெல்லாம் மூர்த்தியாரின் திடீர் மரணம் வரை நீடித்தது. ஒரு நாள் காலை செய்தித்தாளை திறந்துப் பார்த்தபோது, மூர்த்தியார் மாரடைப்பில் காலமாகி விட்டதாக அறிந்துகொள்ள முடிந்தது. புரட்சி பாரதத்தின் அடுத்தத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் அவரது தம்பி ஜெகன். தனது பெயரை ஜெகன் மூர்த்தியார் என்று மாற்றிக்கொண்டு, அண்ணன் பாணியில் அரசியல் நடத்த தொடங்கினார். ஒரே ஒரு வித்தியாசம், அண்ணன் அதிமுக ஆதரவாளர். தம்பி, திமுக ஆதரவாளர்.

கடந்த 2006 தேர்தலில், அரக்கோணம் தொகுதி, திமுக கூட்டணியில் புரட்சி பாரதத்துக்கு ஒதுக்கப்பட்டது. உதயசூரியன் சின்னத்தில் நின்று ஜெகன் மூர்த்தியார், சட்டமன்ற உறுப்பினர் ஆனார். கலைஞர் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய அடையார் டெலிபோன் எக்சேஞ்ச் கூட்டத்தில், புரட்சி பாரதம் கட்சியைச் சேர்ந்த அப்பகுதி புள்ளி (வயது 21 அல்லது 22 இருக்கும்) கொச்சையான முறையில் ஜெ.வைத் திட்டியதை (அது பேயி, பிசாசு, யாருக்கும் அடங்காது. ஓட்டு போட்டீங்கன்னா செத்தீங்க) கலைஞர் மேடையில் பலமாக சிரித்தவாறே பார்த்துக் கொண்டிருந்தது நினைவுக்கு வருகிறது.

ஐந்து ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றக் கூடிய வாய்ப்பு கிடைத்தும், அதை சரியாக ஜெகன் மூர்த்தியார் பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டார் என்றே சொல்லவேண்டும். இடையில் இப்பகுதியில் பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றிய பா.ம.க.வின் வேலு, தன் பெயரை வலுவாக தொகுதியில் நிலைநாட்டி இருக்கிறார். குறிப்பிடத்தகுந்த பணிகளை செய்திருக்கிறார். உண்மையை சொல்ல வேண்டுமானால் இன்று புரட்சி பாரதம், ஒரு காலி பெருங்காய டப்பா.

இந்த தேர்தலிலும் தனக்கு திமுக கூட்டணியில் சீட்டு கிடைக்குமென்று ஜெகன் நம்பிக் கொண்டிருந்தார். அத்தொகுதியை பா.ம.க.வுக்கு கொடுக்கும் எண்ணம் திமுகவுக்கு இருப்பதாக தெரிகிறது. அல்லது ஜெகனை நிறுத்தினால் வெல்ல வாய்ப்பில்லை என்றும் திமுக தலைமை உணர்ந்திருக்கலாம். திமுக தொகுதி பங்கீட்டுக் குழுவிடம் பேசிவிட்டு வெளியே வந்த ஜெகன் இறுக்கமாகவே இருந்திருக்கிறார்.

இப்போது தெளிவாக அறிவித்து விட்டார். "புரட்சி பாரதம், சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும்"

எனக்குத் தெரிந்து, இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் கட்சிகள் இரண்டுதான். ஒன்று பா.ஜ.க. மற்றொன்று புரட்சி பாரதம். டெபாசிட் தேறுவதே கடினம் என்று தெரிந்தும், சுயமரியாதையோடு தனித்து நின்று அக்னிப்பரிட்சை மேற்கொள்ளவிருக்கும் இக்கட்சிகளை ஒரு வகையில் பாராட்டலாம். மற்றொரு வகையில் பரிதாபப் படலாம்.

10 மார்ச், 2011

விளையாட்டு விஷயமா இது?

கிரிக்கெட் இந்தியாவின் மதம். வீரர்கள் இந்தியர்களின் கடவுளர்கள். அதெல்லாம் சரி. கடவுளின் சொந்த தேசத்தை அழித்து கிரிக்கெட் விளையாட வேண்டுமா என்று சர்ச்சை எழுந்திருக்கிறது கேரளாவில்.

கேரளாவைப் பொறுத்தவரை, அங்கிருப்பவர்களுக்கு கிரிக்கெட் ஆர்வம் பெரியதாக கிடையாது. கால்பந்து, தடகளம் என்று கலக்குபவர்கள். எனவேதான் இந்திய கிரிக்கெட் அணியிலும் கூட கேரள வீரர்கள் எப்போதாவது அரிதாக இடம்பெறுவார்கள். கொச்சியில் ஒரு மைதானம் உண்டு. ஜவஹர்லால் சர்வதேச மைதானம். அது கால்பந்து விளையாட கட்டப்பட்ட மைதானம். அவ்வப்போது கிரிக்கெட் போட்டிகளும் இங்கே நடத்தப்படுகிறது. இது கொச்சி பெருநகர வளர்ச்சி மையத்தோடு இணைந்து கேரள அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டது.

கேரளாவில் கிரிக்கெட் அசோசியேஷன் உண்டு. ஆனால் இந்தியாவிலேயே சொந்தமாக கிரிக்கெட் மைதானம் இல்லாமல் இயங்கும் ஒரே அசோசியேஷன் அதுதான்.

இதெல்லாம் சமீபக்காலம் வரைதான். ஆடிக்காற்றில் அம்மியே பறக்குமாம். ஐ.பி.எல் மோகத்தில் கேரளாவும் வீழ்ந்து விட்டது. சமீபத்தில் ஐ.பி.எல். போட்டிகளுக்கு கூடுதல் அணிகள் சேர்க்கப்பட்டபோது, புதியதாக சேர்ந்த அணி கொச்சி அணி. சொந்த அணி, சொந்த ஊரில் விளையாடினால்தான் ஐ.பி.எல்.லில் கூடுதலாக கல்லா கட்ட முடியும். இந்தச் சூழலில் கேரள கிரிக்கெட் அசோசியேஷன் சுறுசுறுப்பானது. சர்வதேசப் போட்டிகளை நடத்தக்கூடிய நவீன சொந்த மைதானம் என்கிற தன் கனவினை நனவாக்க முன்வந்தது.

மைதானம் அமைக்க தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் எடகொச்சி. தெற்கு கொச்சியின் ஓரத்தில் அமைந்த பழமையான ஊர். தேசிய நெடுஞ்சாலை 47 நரம்பாய் ஊடுருவிச் செல்லும் இடம். அரபிக்கடல் உள்வாங்கி நிலத்துக்குள் நுழையும் (Backwater) இயற்கை எழில் கொஞ்சும் பகுதி. அரிதான மாங்குரோவ் காடுகள் நிறைந்த பூமி. தெற்கு ரயில்வே நிலையத்துக்கும், வடக்கு ரயில்வே நிலையத்துக்கும் இடைப்பட்ட கல்லூர் ஜங்ஷனில் கே.சி.ஏ. கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட திட்டமிடப்பட்டது. 50,000 பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கும் வசதி. பகல் இரவு போட்டிகளும் நடத்தும் வண்ணம் மின்விளக்கொளி என்று ஆடம்பரம் தூள் பறந்தது. 2012ஆம் ஆண்டு இந்த மைதானம் தயாராகிவிடும் என கேரள கிரிக்கெட் அசோசியேஷனின் செயலாளர் டி.சி.மேத்யூ அறிவித்திருந்தார். உலகளவில் புகழ்பெற்ற கிரிக்கெட் மைதானங்களான அடிலைட், ஜோகனஸ்பர்க், மொகாலி, ஹைதராபாத் ஆகியவற்றின் வடிவமைப்பினை இம்மைதானத்தில் கொண்டுவர அவர் ஆர்வமாக இருந்தார்.

கேரளாவின் எதிர்க்கட்சிகள் கூட இந்த திட்டத்தை ஆதரிக்கும் நிலையில், எதிர்பாராத இடத்தில் இருந்து இந்த மைதானம் இங்கே அமைக்கப்பட எதிர்ப்பு கிளம்பியது. சுற்றுச்சூழ ஆர்வலர்கள், கேரளாவின் இயற்கை அழகை சிதைத்து விளையாட்டு கேளிக்கைக்கு முன்னுரிமை கொடுப்பதாக போர்க்கொடி எழுப்பினார்கள். வேம்பநாடு ஏரியின் ஒரு பகுதியும் கூட மைதானத்துக்குள் அடகு வைக்கப்பட்டு விடுமாம்.

பூமி, நீதி மற்றும் ஜனநாயக மக்கள் அமைப்பின் (People's movement for Earth, Justice and Democracy) தலைவர் சி.ஆர். நீலகண்டன், "இந்த மைதானம் குறைந்தபட்சம் ஐந்து சுற்றுச்சூழல் விதிகளுக்கு எதிரானது. கடலோர ஒழுங்குமுறை வழிகாட்டுதல்கள், கேரள நெல்வயல் மற்றும் சதுப்புநில பாதுகாப்பு சட்டம், பல்லுயிர் பெருக்கச் சட்டம், நிலச்சீர்த்திருத்தச் சட்டம் மற்றும் வனச்சட்டங்களை மீறி அமைக்கப்படுகிறது. எனவே இத்திட்டத்தை கைவிட வேண்டும்" என்று கோரினார்.

கொச்சியில் ஏற்கனவே ஜவஹர்லால்நேரு மைதானம் இருக்கையில், நகருக்கு வெளியே புதிய மைதானம் தேவையற்றது என்பதும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் ஆதங்கம். பூமி வெப்பமடைதல், மீன்வளம் குறைதல், உணவுப்பொருள் உற்பத்திக்குறைவு என்று ஏற்கனவே பல பிரச்சினைகளை சந்தித்து வரும் சூழலில், மாங்குரோவ் இயற்கைக் காடுகளை, விளையாட்டுக்காக அழிப்பது இயற்கைக்கு விரோதமானது என்பதும் அவர்களது அச்சம்.

சுமார் 350 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் இந்த மைதானம், எடகொச்சியின் சுற்றுலா மற்றும் அதைச்சார்ந்த வளர்ச்சிகளுக்கு உதவும் என்பது மைதானத்தை வரவேற்போரின் வாதம். "இந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்களே இப்படித்தான், மரத்தை வெட்டக்கூடாது, செடியை பிடுங்கக்கூடாது என்று வளர்ச்சித் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுகிறார்கள்" என்பது அவர்கள் சலிப்பு.

மைதானத்துக்கு தேவைப்படும் 24 ஏக்கர் நிலம் மட்டுமல்லாமல், ஏராளமான ஹெக்டேர் விளைநிலங்களும், இயற்கைச் செல்வங்களும் சாலை, கட்டிடங்கள், மேம்பாலங்கள், வாகனம் நிறுத்தும் பகுதி ஆகியவற்றுக்காக அழிக்கப்படும் என்பது சுற்றுச்சூழலாளர்களின் வாதம்.

இந்நிலையில் சுற்றுச்சூழல் அமைச்சகம், கேரள கிரிக்கெட் அசோசியேஷனுக்கு இது தொடர்பாக ஒரு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. கடந்தாண்டு செப்டம்பர் 3 வாக்கில், மாங்குரோவ் காடுகள் அடங்கிய பேக்வாட்டர் பகுதிகள் இங்கே இருந்ததாகவும், அவை செப்டம்பர் 22 வாக்கில் மைதானம் அமைக்கப்பட அழிக்கப்பட்டதாகவும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் பெங்களூர் மண்டல அலுவலகம் குற்றம் சாட்டியது. இது குறித்த விரிவான விசாரணையை கேரள வனத்துறையும் மேற்கொண்டது. கேரள கிரிக்கெட் அசோசியேஷனோ, இங்கே மாங்குரோவ் காடுகள் எதுவுமில்லை, அவற்றை நாங்கள் அழிக்கவுமில்லை என்று வாதிட்டு வருகிறது. இதற்கு ஆதாரமாக 2005ஆம் ஆண்டு இப்பகுதியில் சேட்டிலைட் மூலமாக எடுக்கப்பட்ட கூகிள் மேப் படத்தை முன்வைக்கிறது.

"உதயம்பேரூர் என்கிற இடத்தில் மைதானம் அமைக்க முன்பு கேரள கிரிக்கெட் அசோசியேஷன் திட்டமிட்டது. கையகப்படுத்த வேண்டிய நிலத்துக்கு பத்து லட்ச ரூபாய் முன்பணமும் கொடுக்கப்பட்டது. இந்திய கிரிக்கெட் கண்ட்ரோல் போர்டும் அந்த இடத்தில் மைதானம் அமைக்க ஒப்புதலை தந்தது. ஆனால் அந்த இடத்தை விட்டு, விட்டு குறிப்பாக இந்த இடத்தில் ஏன் மைதானம் அமைக்க அவர்கள் அடம் பிடிக்கிறார்கள் என்பதுதான் மர்மமாக இருக்கிறது" என்கிறார் சி.ஆர்.நீலகண்டன்.

சமீபத்தில் திருவனந்தபுரத்தில் தென்னக வன அமைச்சர்கள் மாநாடு நடந்தது. இம்மாநாட்டுக்கு வந்த மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், "கேரளாவின் எல்லாக் கட்சிகளும் இந்த விஷயத்தில் ஒற்றுமையாக இருக்கிறது. காடுகளை அழித்து கிரிக்கெட் மைதானம் அமைக்கும் முன்பு நாமே நம்மை ஒரு கேள்வி கேட்டுக் கொள்ள வேண்டும். நமக்கு எது முக்கியம், மாங்குரோவ் காடுகளா அல்லது கிரிக்கெட்டா?" என்று பிரச்சினையை சூடாக்கினார்.

இதற்கிடையே மைதானப் பணிகளை துவக்குவதற்கு முன்பாக தேவையான சுற்றுச்சூழல் ஒப்புதல்களை கேரள கிரிக்கெட் அசோசியேஷன் பெற்றிருக்கவில்லை என்பது இப்போது தெரியவந்திருக்கிறது. இதனால், வனபாதுகாப்புச் சட்டம் (1986) செக்‌ஷன் 5 படி நடவடிக்கை எடுக்கப்படலாம். கேரள கடலோர நிர்வாக அமைப்பு (KSCZMA), பணிகளை நிறுத்தச் சொல்லி உத்தரவிடுமாறு மாவட்ட ஆட்சியாளரை கேட்டுக் கொண்டிருக்கிறது. சுற்றுச்சூழலுக்கு இங்கே ஏற்பட்ட சேதாரத்தை கணக்கிட்டு, அவற்றை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு செல்வது குறித்த ஒரு திட்டத்தை விரைவில் கேரள முதல்வருக்கு கொடுக்கவும் இந்த அமைப்பு பணியாற்றி வருகிறது.

கடைசியாக, கேரள உயர்நீதிமன்றமும் மைதானத்தின் பணிகளை முன்னெடுக்க தடை விதித்திருக்கிறது. கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின் தடையில்லாச் சான்று பெற்றபின் தான் பணிகளை தொடங்கவேண்டும் என்று தனது தீர்ப்பில் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. 2012ல் சொந்தமாக ஒரு மைதானம் என்கிற கேரள கிரிக்கெட் அசோசியேஷனின் கனவு, கானல்நீராகதான் மாறும் போலிருக்கிறது.

மாங்குரோவ் காடுகள் இயற்கையே தென்னக மாநிலங்களுக்கு அளித்திருக்கும் பாதுகாப்பு கவசம். சுனாமி வந்தபோது கூட, மாங்குரோவ் காடுகள் சூழ்ந்த பகுதிகள் பெருத்தளவில் பாதிப்புக்கு உள்ளாகவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. விளையாட்டுக்காக கூட கவசத்தை உடைக்கலாமா என்பதுதான் நம் முன்பாக இப்போது முன்வைக்கப்பட்டிருக்கும் கேள்வி.

 

எக்ஸ்ட்ரா நியூஸ் :

அழிந்துவரும் மாங்குரோவ் காடுகள்!

மனித ஆக்கிரமிப்பின் காரணமாக சமீபகாலமாக மாங்குரோவ் காடுகளுக்கு கேரளாவில் மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. மங்கலவனம், பனங்காடு, கும்பாளம், நேட்டூர், பனம்புகாடு, முலுவுகாடு, கும்பாலங்கி, கண்ணமாலி, செல்லானம் போன்ற பகுதிகளில் இருந்து முற்றிலுமாக இக்காடுகள் காணாமல் போயிருக்கின்றன. குடியிருப்புகள், சாலைகள் அமைப்பது போன்ற காரணங்களுக்காக இவை அப்புறப்படுத்தப்படுகின்றன.

1991ஆம் ஆண்டில் கொச்சியில் மட்டுமே 260 ஹெக்டேர் அளவுக்கு மாங்குரோவ் காடுகள் இருந்ததாக வன தகவல் அமைப்பின் குறிப்பில் அறியமுடிகிறது. இப்போது இம்மாவட்டத்தில் அப்படியொரு தகவலே எடுக்கமுடியாத அளவுக்கு இக்காடுகள் அழிக்கப்பட்டிருக்கின்றன.

வெளிநாடுகளில் இருந்து இனப்பெருக்கத்துக்காக கொச்சிக்கு வரும் அரியவகைப் பறவைகளின் வருகை குறைந்திருக்கிறது. மீன் உள்ளிட்ட நீர்வாழ் உயிரினங்களின் வருகையும் அருகி வருகிறது என்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கவலையான பார்வை.

(நன்றி : புதிய தலைமுறை)

4 மார்ச், 2011

பள்ளிக் குழந்தைகளை பாதுகாக்க எஸ் க்யூப்!

நீங்களும், உங்கள் துணைவியாரும் காலையிலேயே உங்கள் குழந்தையை பள்ளி வாகனத்தில் ஏற்றிவிட்டு பணிக்குச் சென்று விடுகிறீர்கள். குழந்தை ஒழுங்காக பள்ளிக்குச் சென்று சேர்ந்ததா, பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்துவிட்டதா? என்கிற அச்சம் அடிக்கடி அடிவயிற்றிலிருந்து பந்தாக எழும்பி நெஞ்சுக்கு வரும் அல்லவா?

அண்மையில் கோவையில் இரண்டு குழந்தைகள் கடத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்குப் பிறகு பணிக்குச் செல்லும் பெற்றோருக்கு அடிக்கடி இந்த அச்சம் எழும்புவதுண்டு.

பெற்றோர்களுக்கு உதவும் வண்ணம் 'பள்ளிக் குழந்தைகளை பாதுகாப்பது எப்படி?' என்கிற அட்டைப்படக் கட்டுரையை, நவம்பர் 18, 2010 இதழில் புதிய தலைமுறை வெளியிட்டிருந்தது. அக்கட்டுரையில் நாம் சில தீர்வுகளையும், காவல்துறையின் யோசனைகளையும், அரசு சொல்லும் வழிமுறைகளையும் குறிப்பிட்டிருந்தோம்.

அந்தக் கட்டுரையை வாசித்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த இளைஞர் பிரசன்னபாபு, மென்பொருள் வாயிலாக ஒரு நல்ல தீர்வினைக் கண்டிருக்கிறார். இருபத்தாறு வயதான சுற்றுச்சூழல் ஆர்வலரான பிரசன்னபாபு, சென்னை சிறுசேரியில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றுகிறார்.

தனது மென்பொருள் கண்டுபிடிப்புக்கு எஸ் க்யூப் (Student Security System) என்று பெயரிட்டிருக்கிறார். இரவு, பகல் பாராத மூன்றுமாத உழைப்பிற்குப் பிறகு இது சாத்தியமாகியிருக்கிறது. பள்ளிக்குச் செல்லும் உங்கள் குழந்தையின் ஒவ்வொரு அசைவையும் குறுஞ்செய்திகளாக (SMS) பெற்றோரின் கைப்பேசிக்கு எஸ் க்யூப் அனுப்பி வைக்கும்.

எஸ் க்யூப் எப்படி பணியாற்றும்?

- பள்ளி வேனோ அல்லது பேருந்தோ குழந்தைகளை ஏற்றிச் செல்ல காலையில் பள்ளி வளாகத்தில் இருந்து கிளம்பும்போது பெற்றோருக்கு ஒரு குறுஞ்செய்தி வரும். இதில் சம்பந்தப்பட்ட வேன்/பஸ்ஸின் பதிவு எண், ஓட்டுனர் பெயர், உங்கள் வீட்டுக்கு அருகில் எத்தனை மணிக்கு வரும் போன்ற செய்திகள் அடங்கியிருக்கும்.

- பள்ளியில் முதல் பாட நேரத்தில் அட்டெண்டன்ஸ் எடுக்கப்பட்டவுடனேயே, உங்கள் குழந்தை வகுப்பறையை அடைந்துவிட்டது குறித்த குறுஞ்செய்தி ஒன்று வரும். ஒருவேளை குழந்தை விடுப்பு எடுத்திருந்தாலும், அதுவும் குறுஞ்செய்தியாக பெற்றோருக்கு கிடைக்கும்.

- காலையில் முதல் பாட வகுப்புக்கு வந்த குழந்தை, மதியம் உணவு நேரத்திற்குப் பிறகான பாட வகுப்புக்கு வந்திருக்காவிட்டால், பெற்றோர், ஆசிரியர், தலைமை ஆசிரியர் ஆகியோருக்கு உடனே குறுஞ்செய்தி சென்றுவிடும்.

- மாலையில் பள்ளி முடிந்து வேனிலோ, பஸ்ஸிலோ குழந்தை ஏறியவுடன் காலையில் வந்ததைப் போன்றே வாகனத்தின் பதிவு எண், ஓட்டுனர் பெயர், உங்கள் வீட்டுக்கு வாகனம் வந்தடையும் நேரம் ஆகியவை குறுஞ்செய்தியாக வந்து சேர்ந்துவிடும்.

- மாலைநேரத்தில் பள்ளியில் சிறப்பு வகுப்பு (Special Class) ஏதேனிலும் குழந்தை கலந்துகொண்டால், அதுகுறித்த அறிவிப்பும் கிடைத்துவிடும்.

- குழந்தையின் பள்ளி தொடர்பான அசைவு ஒவ்வொன்றும், உங்கள் கைப்பேசிக்கே வந்துவிடுவதால் நீங்கள் நிம்மதியாக உங்கள் பணியினை பார்க்க இயலும். இந்த நடைமுறையில் எங்காவது 'ஓட்டை' விழுந்திருந்தாலும், உடனடியாக தேவைப்படும் நடவடிக்கைகளை எடுக்க இயலும்.

இந்த ஏற்பாடு பள்ளியை கட் அடித்துவிட்டு சினிமாவுக்கு செல்லும் மாணவர்களுக்கு மட்டுமே பாதகமானது.

இந்த திட்டத்தை செயல்படுத்த என்னென்ன தேவை?

பள்ளியில் இணைய வசதியோடு கூடிய கணினிகள் இருப்பது அவசியம். ஒவ்வொரு வகுப்பறைக்கும் இல்லாவிட்டாலும், தலைமை ஆசிரியரின் அறையில் மட்டுமாவது இருந்தால் போதும். அட்டெண்டன்ஸ் விவரங்கள் கணினியில் ஒருவரால் மிகச்சுலபமான முறையில் ஏற்றப்பட வேண்டும். அதுபோலவே பள்ளி வளாகத்திலிருந்து கிளம்பும் வேன்/பஸ் விவரங்களையும் கணினிக்கு அளிக்க வேண்டும்.

ஆயிரம் மாணவ/மாணவியர் படிக்கும் பள்ளியில் இந்த மென்பொருளை நிறுவ தோராயமாக 50,000 ரூபாய் செலவாகும். அதன்பிறகு வருடாவருடம் 10,000 ரூபாய் செலவழித்தால் போதும். பராமரிப்பு, கண்காணிப்புச் செலவுகள் மிக மிகக்குறைவாகவே ஆகும். குழந்தைகளின் பாதுகாப்பு என்று எடுத்துக் கொள்ளும்போது, கல்வியில் புழங்கும் பண பரிவர்த்தனைகளை ஒப்பிடும்போது இந்தச் செலவு ஒரு சதவிகிதம் கூட இருக்காது.

எப்படி செயல்படுத்தலாம்?

தங்கள் மாணவர்களின் நலனில் அக்கறையுள்ள, ஆர்வமுள்ள பள்ளிகள் தாமாக முன்வந்துச் செய்யலாம்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளி நிர்வாகத்துக்கு, இந்த ஏற்பாட்டினை நிறுவித்தரச் சொல்லி கேட்கலாம்.
அரசே மாநிலம் தழுவிய அளவில் அரசுப்பள்ளிகளில் இந்த வசதியை ஏற்படுத்தலாம். தனியார் பள்ளிகளிலும் இம்முறையை கட்டாயமாக்கச் சொல்லி கேட்டுக் கொள்ளலாம்.

இந்த எஸ் க்யூப் தொழில்நுட்பத்தை எப்படி வேண்டுமானாலும், ஒவ்வொரு பள்ளிக்கும் பொருந்தும் வகையில் மாற்றி அமைத்துக் கொள்ள முடியும். உறைவிடப் பள்ளிகளுக்கும் ஏற்றதுபோலவும் செய்துத் தரலாம். உதாரணத்துக்கு உங்கள் குழந்தை ஊட்டியில் ஓர் உறைவிடப் பள்ளியில் படிப்பதாக வைத்துக் கொள்வோம். நீங்கள் லண்டனிலோ, நியூயார்க்கிலோ இருந்தாலும், உங்கள் குழந்தையின் பள்ளி நடவடிக்கைகள் குறுஞ்செய்திகளாக உங்களுக்கு வந்து சேரும்.

"ஒவ்வொரு சமூகப் பிரச்சினைக்குமே ஏதாவது ஒரு தீர்வினை யோசித்துப் பார்ப்பது எனது வழக்கம். புதிய தலைமுறையில் இந்தப் பிரச்சினையைப் பற்றி வாசித்ததுமே, நான் புழங்கும் துறைசார்ந்த அறிவின் மூலமாக என்ன செய்யமுடியும் என்று யோசித்தே, இதற்கான தீர்வு காணும் முயற்சியில் இறங்கினேன். மூன்று மாத கடின உழைப்புக்குப் பின், இப்போது இந்த மென்பொருள் உடனடியாக எந்தப் பள்ளியிலும் நிறுவக்கூடிய நிலையில் தயாராக இருக்கிறது" என்கிறார் பிரசன்னபாபு.

ஓய்வு பெற்றுவிட்ட தந்தை, படித்துக் கொண்டிருக்கும் தம்பி என்கிற குடும்பச்சூழலில் இவர் மட்டுமே இப்போது இவரது குடும்பத்தில் சம்பாதித்துக் கொண்டிருக்கும் உறுப்பினர். எனவே அவருடைய பணியைப் பாதிக்காத அளவில் பகலில் அலுவலகத்துக்குச் சென்று, இரவுகளிலும், ஓய்வுநேரங்களிலும் இத்திட்டம் குறித்த ஆராய்ச்சிகளிலும், முன்னெடுப்புகளிலும் தனது உழைப்பினைச் செலுத்தியிருக்கிறார்.

ஊடகத்தில் சுட்டப்பட்ட ஒரு செய்தியை வாசித்தோம், அறிந்தோம் என்று வெறுமனே வாசிப்பளவில் நின்றுவிடாமல் நமது வாசகர்கள், தீர்வுக்காகவும் நம்முடன் கைகோர்க்கிறார்கள். பிரசன்னபாபு போன்ற இளைஞர்கள்தான் புதிய தலைமுறையின் அடையாளம்.

பிரசன்னபாபுவை தொடர்புகொள்ள : prasanakpm84@gmail.com

(நன்றி : புதிய தலைமுறை)