15 மார்ச், 2011

உலோகம்!


நூலின் பெயர் : உலோகம்

நூல் ஆசிரியர் : ஜெயமோகன்

விலை : ரூ.50

பக்கங்கள் : 216

வெளியீடு : கிழக்கு பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் சாலை,
ஆழ்வார்ப்பேட்டை, சென்னை - 600 018.
தொலைபேசி : 044-42009601/03/04
தொலைநகல் : 044-43009701

நூலினை ஆன்லைனில் வாங்க இங்கே சொடுக்கவும்.



ஆங்கில 'த்ரில்லர்' நாவல்களின் தமிழ் மொழியாக்கத்தை (பெரும்பாலும் கண்ணதாசன் பதிப்பகம்) வாசிக்கும்போது, தமிழ் புனைவுலகின் 'த்ரில்' போதாமை குறித்த ஏக்கம் அடிவயிற்றிலிருந்து தொண்டைக்கு பந்தாய் கிளம்பும். ஒரு அகதா கிறிஸ்டியோ, ஜேம்ஸ் ஹேட்லி சேஸோ தமிழில் ஏன் உருவாகவில்லை என்ற கேள்வி இயல்பாய் எழும்பும்.

தமிழ் த்ரில்லர்களின் வடிவம் ரொம்ப சுலபமானது. ஏதோ ஒரு கதாபாத்திரத்தின் மகிழ்ச்சியான ஒரு நாளில் தொடங்கும் முதல் அத்தியாயத்தின் முடிவில் ஒரு கொலை. வழக்கை ஒரு இன்ஸ்பெக்டர் விசாரிப்பார். அல்லது ஒரு வக்கீல். இல்லையேல் ஒரு தனியார் துப்பறியும் நிபுணர். அந்த நிபுணரின் உதவியாளர், பெருத்த மார்புகள் கொண்ட, ஆங்கில அசாதாரண வாசகங்கள் அடங்கிய டீ-ஷர்ட் போட்ட பெண். இடையிடையே அசட்டு நகைச்சுவை. சில ஆக்‌ஷன் காட்சிகள். தேவைப்பட்டால் மேலும் சில கொலைகள். கொலையாளி யாரென்று, கடைசி அத்தியாயம் வரை யூகிக்க முடியாத நடை மட்டும் தமிழ் த்ரில் நாவல்களின் ஒரே சாதனை.

இந்த படா அலுப்பான வழக்கத்தை அனாயசமாக உடைத்தெறிந்திருக்கிறது ஜெயமோகனின் உலோகம்.

தமிழகத் தமிழனுக்கு தெரிந்த ஈழப்போர் பின்னணிக்கு ஒரே ஒரு பரிணாமம்தான். தமிழ்ப் போராளிகள் மாவீரர்கள். இலங்கை ராணுவத்தினர் முட்டாள்கள். இந்திய உளவுத்துறையினர் அடிமுட்டாள்கள். உண்மையோ, பொய்யோ. பலமாக நிறுவப்பட்டுவிட்ட இந்த கற்பிதத்துக்கு பின்னால் வேறு சில பரிணாமங்களும் இருக்கக்கூடும் இல்லையா? உதாரணத்துக்கு, போர் இயந்திரமாய் மாறிவிட்ட இயக்கத்துக்காரனுக்கும் காதல் இருக்கும், காமம் இருக்கும்.

முப்பது ஆண்டுகள் ஓயாமல் துப்பாக்கிச் சத்தம் கேட்டுக் கொண்டிருந்த நாட்டிலும், மனிதர்களுக்கு போர் மட்டுமே வாழ்க்கையல்ல. ஜெயமோகன், 'உலோகம்' மூலமாக வாசகனுக்கு காட்ட விரும்பும் சித்திரம் இதுதான். 'ஈழப்போர் பின்னணியில் திகைப்பூட்டும் த்ரில்லர்' என்று அட்டை குறிப்பிட்டாலும், ஒரு போர்க்காட்சியைக் கூட சித்தரிக்காமல், போருக்கான த்ரில்லை தருகிறார் ஜெயமோகன். ஈழப்போர் வெறும் 'த்ரில்' மட்டும்தானா என்று அசட்டுத்தனமாக, அவசரமாக கேட்டுவிடாதீர்கள். 'த்ரில்'லும் உண்டு. உலோகம், த்ரில்லை தனக்கான கச்சாவாக தேர்ந்தெடுத்துக் கொள்கிறது. கூடுதலாக புலம்பெயர் வாழ்க்கையின் அவலமான நிதர்சனத்தை போகிற போக்கில் தொட்டுச் செல்கிறது.

சார்லஸ் (எ) சாந்தனின் சுயவாக்குமூலம் உலோகம். பலாலி போர்முனையில், அவனது தொடைக்குள் பாய்ந்த ஈயக்குண்டுதான் உலோகம். அவ்வப்போது தொடைத்தழும்பில் அந்த உலோகத்தை தடவிப் பார்த்துக் கொள்கிறான். அது அவனது உடலுக்குள் இருப்பதை விரும்புகிறானா, வெறுக்கிறானா என்பது முக்கியமில்லை. தன்னுடைய உடலுக்குள் ஒரு குண்டு இருப்பதை ஏற்றுக் கொள்கிறான். சாந்தன் அந்த ஈயக்குண்டை ஒத்தவன். இயக்கங்களுக்கும், இந்திய உளவுத்துறைக்கும் இடையில் ஈயக்குண்டினைப் போல அல்லாடிக் கொண்டிருக்கிறான். அவன் ஒரு கொலை இயந்திரம். இந்த நிலையை அவன் விரும்பவும் இல்லை. வெறுக்கவும் இல்லை. ஏற்றுக் கொள்கிறான்.

அங்காடித் தெரு மாதிரி உலோகமும் க்ளைமேக்ஸ் ஓபனிங். பொன்னம்பலத்தாரை போடுவதுதான் முதல் அத்தியாயம். எனவே, க்ளைமேக்ஸில் சாந்தன் பொன்னம்பலத்தாரை போடுகிறானா இல்லையாவென்று, இயல்பாக வாசகனுக்கு கிடைக்க வேண்டிய 'த்ரில்', 'மிஸ்' ஆவதுதான் மிகப்பெரிய குறை. எப்படி போடுகிறான் என்பதும் ஓபனிங்கிலேயே சொல்லியாகிவிட்டது. மீதிக்கதையை இருநூறுக்கும் மேற்பட்ட பக்கங்களுக்கு விரிப்பது, படைப்பாளிக்கு மிகப்பெரிய சவால். ஜெயமோகன், இச்சவாலை அனாயசமாக வெற்றி கொள்கிறார்.

இயக்கங்கள் குறித்து பெயர் குறிப்பிடாமல் எழுதுகிறார். எனவே சாந்தன் எந்த இயக்கம் (probably LTTE), ஜார்ஜ் எந்த இயக்கமென்று வாசிக்கையில் குழப்பம் ஏற்படுகிறது. இயக்கம் மூலமாக இந்தியாவில் ஜார்ஜ் பயிற்சி பெற்று, தாயகம் திரும்புகிறான். அவனுடைய வயது நாவலில் இருபத்தி மூன்று. கதை நடைபெறும் காலம் 2004-05 என்று, கதையில் இடம்பெறும் சினிமாக்கள் (கில்லி, திருப்பாச்சி, etc) வாயிலாக அறிய முடிகிறது. 1991ல் ராஜீவ் கொலைக்குப் பிறகு ஏதேனும் ஈழப்போராளி அமைப்புகளுக்கு இந்தியாவில் பயிற்சி கொடுக்கப்பட்டதா என்று உறுதியாக தெரியவில்லை. கதைக்களம் எண்பதுகளின் இறுதியாக குறிப்பிடப்பட்டிருந்தால், பொருத்தமானதாக இருந்திருக்கும். ஆனால் செல்போன் போன்ற நவீன நாகரிக வஸ்துக்களை கதைக்குள் கொண்டுவந்திருக்க இயலாது. அதுபோலவே பொன்னம்பலத்தாரின் இயக்கம் எதுவென்றும் மண்டையைப் பிய்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. பொன்னம்பலத்தார் பாத்திரத்தை, வரதராஜபெருமாளில் இருந்து பிய்த்து எடுத்திருக்கிறார் ஆசிரியர் என்பதை மட்டும் ஓரளவுக்கு யூகிக்க முடிகிறது.

ஈழப்போராட்டத்தில் இந்திய உளவுத்துறையின் பங்கு என்கிற விஷயம் குறித்த நடுநிலையான பார்வையை தமிழ்ச்சூழலில் நாம் கண்டறிய இயலாது. விடுதலைப்புலிகளின் வெற்றிகளைத் தவிர்த்துப் பார்த்தோமானால், புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களால் அதிகம் மிகைப்படுத்தப்பட்ட விஷயம் இதுவாகதானிருக்கும். ஈழத்திலே கட்டெறும்பு ஒருவனை கடித்தால் கூட, அது இந்திய உளவுத்துறையான 'ரா'வின் வேலை எனுமளவுக்கு பிரச்சாரம் செய்யப்படுவதை இணையங்களிலே வாசிக்கலாம். ஜெயமோகன், 'ஜெய்ஹிந்த்' போடாமல், 'ரா'வின் பங்கை முடிந்தளவுக்கு நேர்மையாக, இந்நாவலில் சித்தரிக்க முனைகிறார் என்றே நம்பலாம். 'ரா' அமைப்பு, ஈழப்போராட்ட அமைப்புகளுக்கு இடையே, ஒப்புக்குச் சப்பாணி அமைப்புகளை உருவாக்கி, அமைப்புகளுக்குள் எவ்வகையான குழப்பங்களை ஏற்படுத்தியிருக்கும் என்பது குறித்த ஒரு தெளிவான, நுட்பமான சித்திரம் உலோகம் வாயிலாக நமக்கு கிடைக்கிறது.

போர்ச்சூழலின் பக்கவிளைவாக உடைபடும் கலாச்சார விழுமியங்களையும், ரெஜினா பாத்திரம் மூலமாக கவலையோடு பதிவு செய்கிறார் ஜெயமோகன். குறிப்பாக 'ஒருவனுக்கு ஒருத்தி' என்கிற தமிழ்க்கலாச்சாரம் சூழல்கள் காரணமாக சீரழிவதை, ரெஜினா, வைஜயந்தி பாத்திரங்கள் மூலமாக எடுத்துக் காட்டுகிறார். முந்தையக் காட்சி ஒன்றினில் 'அண்ணை' என்று சாந்தனை அழைக்கும் ரெஜினா, பிற்பாடு தனது உடல்மொழி மூலம் அவனுக்கு உடல்சார்ந்த உறவுக்கு சமிக்ஞை கொடுக்கிறாள். பிறிதொரு சந்தர்ப்பத்தில், அடக்க முடியாத வேட்கையோடு முரட்டுத்தனமாக அவளது உடலை கையாளுகிறான் சாந்தன். இருவருக்குமே 'அண்ணை' நினைவில் இல்லை.

சாந்தனை, 'ரா' அலுவலகத்தில் செய்யும் வதைக்காட்சிகளின் சித்தரிப்பு வாசகனை வலிக்கச் செய்கிறது. பரபரப்பின் எல்லையை தொட்டு மீளுகிறோம். மிகக்கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகள் கடைசி இரண்டு அத்தியாயங்களின் பக்கங்களை 'திக் திக்' மனதோடுதான் கடந்து செல்ல வேண்டியிருக்கிறது.

வன்முறையும், காமமும் ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள். இரண்டும் ஏற்படுத்தும் கிளர்ச்சியும், உச்சமும் ஒன்றுக்கொன்று சளைத்ததல்ல. சராசரி மனித உணர்ச்சிகளை வீழ்த்தி உலோகமாக வாழப் பழகிக்கொண்டவன், தவிர்க்க இயலா சந்தர்ப்பத்தில் வைஜயந்தி மீதான காமத்தில் மீண்டும் மனிதனாகிறான். இதன் விளைவாக சிக்கல்களுக்கு உள்ளாகிறான். சிக்கலில் மீண்டு எழுந்த மறுகணம், மீண்டும் உலோகம் ஆகிறான். துரோகங்களால் ஆன முடிச்சுகளும், முடிச்சுகளை சிக்கலின்றி அவிழ்ப்பதும் என்று மாறி மாறி எழுத்தில் விளையாடித் தள்ளியிருக்கிறார் ஜெயமோகன்.

நாவலின் உள்ளடக்கம் மட்டுமல்ல. தயாரிப்பும் சர்வதேசத் தரம். தங்க நிறத்தில் எம்போஸிங் செய்யப்பட்ட எழுத்தாளரின் பெயரோடு கூடிய அட்டை. புத்தகத்தின் அளவு. வடிவம். வரிகளுக்கு இடையேயான இடைவெளி என்று ஆங்கில நாவல்களின் தரத்தை, தனது முதல் முயற்சியிலேயே எட்டிப் பிடித்திருக்கிறது 'கிழக்கு த்ரில்லர்'. இந்நாவல் கிழக்கு த்ரில்லருக்கு செமத்தியான கிக் ஸ்டார்ட்.

உலோகம் - சாகஸ எழுத்தின் உச்சம்!

15 கருத்துகள்:

  1. நல்ல விமர்சனம்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. யு கி

    உங்களின் அருமையான விமர்சனம் இந்த நாவலை படிக்கத் தூண்டுகிறது.

    சாரு கோபித்து கொள்ள மாட்டாரே?!

    நன்றி

    மயிலாடுதுறை சிவா...

    பதிலளிநீக்கு
  3. உலோகம் , அலோகம் எல்லாம் ஈழ மக்களின் ரத்தத்தை பணமாக்துடிக்கும் நய வஞ்சகம்.

    பதிலளிநீக்கு
  4. யுவா,

    நான் இன்னும் அந்த நாவலை படிக்கவில்லை. ஆனால் உங்களின் விமர்சனம் என்னைப் படிக்கத்தூண்டுகிறது.

    அதுவும் உங்களிடம் இருந்து இந்த புத்தகத்திற்கு வரும் இந்த விமர்சனம் மிக முக்கியமானது.

    ஒரு நடுநிலையான விமர்சகன்/ பத்திரிக்கையாளன் என்ற அளவில் உங்களை பாராட்டுகிறேன்.

    என்றும் அன்புடன்,
    என்.உலகநாதன்

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லா8:43 PM, மார்ச் 15, 2011

    Interesting review...
    I will try to read this book. Is it available in Dubai ?

    பதிலளிநீக்கு
  6. Chaaruvin rasigaridamirunthu ippadi ori +ve vimarsanama? ethiparkkavillai..

    பதிலளிநீக்கு
  7. பெயரில்லா10:12 PM, மார்ச் 15, 2011

    first good review i hear about "ulogam"..surprising !!

    பதிலளிநீக்கு
  8. பெயரில்லா10:14 PM, மார்ச் 15, 2011

    aiyoyo....charu kocchikka poraru :-)

    பதிலளிநீக்கு
  9. ஜே யின் மற்ற நாவல்களை ஒப்பிட்டால் இது சுமார் என்பது என் கருத்து...

    தேகத்துக்கு போட்டியாக எழுதப்பட்ட நாவலோ என்றும் தோன்றியது...

    அப்படி ஒப்பிட்டு பார்த்தால் , தேகம் நாவலே அபார வெற்றி அடைகிறது..

    பதிலளிநீக்கு
  10. என்னுடைய விமர்சனம் உங்களின் அணுகுமுறையில் இருந்து மிகவும் வேறுபடுகிறது. ஒரே விஷயத்தை ஒவ்வொருவரும் எப்படி அணுகுகிறார்கள் என்பது ஆச்சர்யம் அளிக்கிறது.

    virutcham.com/2011/02/உலோகம்-புத்தக-விமர்சனம்

    பதிலளிநீக்கு
  11. Mr.Yuvakrishna,

    We lived in war for years...we were affeced by partialism by sri lankan government...we were betrayed by counties like india to enforce their power. we still feel that how we were let down as livestock. we still burning. you will only feel it when you dont have a country to love and a country to get rights. i agree we got some issues with LTTE,but those were totally different and connected with the war purpose. but,the issue Jeyamohan raised is a bulshit(sorry to use this word). i wonder what do you know about our land. can i make a request? if you know about Eelam a to z, then pl continue writing. it is dicussable, but you wont write in the same way then. Anyway, thank you.

    பதிலளிநீக்கு
  12. Super ad Yuva...:) got a thirst to read the book after ur comment.

    பதிலளிநீக்கு
  13. ஈழம் பற்றிய எந்த செய்தியானாலும் அதைப் படிப்பதற்கு‍ அசாத்திய தைரியமும், மன உறுதியும் வேண்டும். உலோகம் புத்தகத்தை கடையில் பிரித்த பொழுது‍ யாரோ ஒருவன் மற்றொருவனின் பல்லை டிரில்லரால் ஓட்டை போடும் கட்டம். துணிச்சலாக எடுத்த இடத்திலேயே புத்தகத்தை வைத்துவிட்டு‍ வந்தேன்.

    பதிலளிநீக்கு
  14. யுவகிருஷ்ணா அவர்களுக்கு,
    தங்களின் உலோகம் விமர்சனம் சாதாரண சாகச எழுத்தாளர்களின் புத்தகத்துக்கு எழுதிய விமர்சனம் போல் உள்ளது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. :(
    தமிழ் இலக்கியச் சூழல் கண்ட\கண்டுகொண்டிருக்கிற\இனிமேல் காணமுடியாத ஆகச் சிறந்த மற்றும் அறச்சிறந்த ஒரு எழுத்தாளர் மற்றும் இந்த வருடத்து இலக்கியத்துக்கான நோபல் பரிசை அரை ஓட்டு வித்தியாசத்தில் தவற விட்ட :( , அடுத்த வருடத்தின் ஆகச் சிறந்த அறத்த்துக்கான நோபல் பரிசு மற்றும் இலக்கியத்துக்கான நோபல் பரிசையும் பெறப் போகிற உத்தம எழுத்தாளர் :) {நன்றி இன்னொரு உத்தம எழுத்தாளரான திரு.சாரு} பத்துப் பதினைந்து வருடங்களாக இக்கதைக் கருவை மனதில் சுமந்து, விடுதலைப் புலிகள் போரில் முற்றிலும் தோற்கடிக்கப் பட்ட சூடு ஆறாத சூழலில் தற்போது விரைந்து எழுதி முடிக்கப் பட்டு , அவர் சொந்த வலைத் தளத்தில் ஈழப் போரைப் பின்னணியாகக் கொண்ட சாகச நாவல் என்று முன்கூட்டியே சொல்லி விளம்பரப் படுத்தப்பட்டு, புத்தகத் திருவிழா வசூலைக் குறிவைத்து சமயோசிதமாய் வெளியிடப் பட்ட, விளம்பரங்களை கவனிக்கத் தவறி சாதரணமாய் புத்தகத்தைப் பார்ப்பவர்களுக்கும் உதவியாய் ஈழப் போரைப் பின்னணியாகக் கொண்ட பர பர பப்ரப்பர நாவல் என அட்டையிலும் குறிப்பிடப்பட்ட , தமிழ் கூறும் நல்லுலகமே பெரிதும் எதிர்பார்த்த ஒரு நாவலுக்கான விமர்சனம் போல இல்லை.
    விமர்சனத்த கொஞ்சம் பாத்து மீட்டருக்கு மேல ஏதாவது போட்டு எழுதுங்க யுவகிருஷ்ணா. :)

    பதிலளிநீக்கு
  15. பெயரில்லா3:06 AM, மே 17, 2012

    Hi there would you mind stating which blog platform you're working with? I'm looking to start my own blog in the near future but I'm having a tough time choosing between BlogEngine/Wordpress/B2evolution and Drupal. The reason I ask is because your layout seems different then most blogs and I'm looking for something unique. P.S My apologies for getting off-topic but I had to ask!

    பதிலளிநீக்கு