மசாலா மிக்ஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மசாலா மிக்ஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

2 பிப்ரவரி, 2017

கமால் ஹாசன்

"என்ன ரங்கராஜன் சொல்றீங்க? கமல் ஒரு முஸ்லீம். எனக்கு நல்லாவே தெரியும்”

“சார். எனக்கு அவங்க ஃபேமிலியை நல்லாவே தெரியும். கமல் ஒரு அய்யங்காரு. அவங்க அப்பா லாயரு”

“பாருங்க ரங்கராஜன். நான் சொல்றதை கேளுங்க. அவரோட பேரு கமால் ஹாசன். சினிமாவுக்காக பாலச்சந்தர் கமல்ஹாசன்னு மாத்தியிருக்காரு. அவங்க அண்ணனுங்க பேரெல்லாம் கூட பாருங்க ஹாசன்னுதான் முடியும்”

ரா.கி.ரங்கராஜனுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. எல்லாம் தெரிந்த எடிட்டருக்கு ஏன் இந்த சின்ன விஷயம் போய் தெரியவில்லை. அதுவும் அவர் சொல்வதுதான் சரி என்று சின்னக் குழந்தை மாதிரி அடம் பிடிக்கிறாரே? இத்தனைக்கும் கமல் பற்றியும், அவரது குடும்பம் பற்றியும் தமிழ்நாட்டுக்கே ரொம்ப வருஷமாக தெரியுமே?

ரா.கி.ரங்கராஜன் எடிட்டரிடம் சமரசத்துக்கு வருகிறார்.

“ஒண்ணு செய்யலாம் சார். நம்ம செல்லப்பாவை அனுப்பி கமலோட அப்பா கிட்டேயே பேசவைக்கிறேன்”

எடிட்டர் இந்த ஏற்பாட்டுக்கு ஒத்துக் கொள்கிறார். செல்லப்பா, குமுதம் இதழின் நிருபர்.

கமல்ஹாசனின் தந்தை சீனிவாசன் அப்போது சென்னையில்தான் இருந்தார். செல்லப்பா அவரை சந்தித்து பேசினார். ஹாசன் என்கிற பெயரில் தனக்கு ஒரு நண்பர் ஜெயிலில் (சீனிவாசன், சுதந்திரப் போராட்டத்தில் சிறைசென்ற காங்கிரஸ்காரர்) இருந்ததாகவும், அவரது நினைவாகவே தன் குழந்தைகளுக்கு ஹாசன் என்கிற பெயரை சூட்டியதாகவும் சொல்கிறார்.

“எம்புள்ளையை தமிழ் சினிமாவில் பெரிய ஹீரோன்னு சொல்லுறாங்க. ஆனா, ஒருநாள் கூட அவன் என்னை ஷூட்டிங்குக்கு கூட்டிக்கிட்டு போனதே இல்லை”

“சார், நான் வேணும்னா உங்களை ஷூட்டிங்குக்கு கூப்பிட்டுக்கிட்டு போகட்டா?”

“ஓக்கேப்பா. ஆனா, எனக்கு கமல் ஷூட்டிங் பார்க்க ஆசையில்லை”

“ரஜினி ஷூட்டிங்?”

“அதுவும் வேணாம். சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதே. எனக்கு சிலுக்கு சுமிதாவை ரொம்பப் பிடிக்கும். அந்தப் பொண்ணு நடிக்கிற ஷூட்டிங்கைதான் பார்க்கணும்”

ஆபிசுக்கு திரும்பிய செல்லப்பா, கமலின் தந்தையை சந்தித்துப் பேசியதையும், அவர் அய்யங்கார்தான் என்பதையும் எடிட்டரிடம் உறுதிப்படுத்துகிறார். கூடவே, சிலுக்குவை அவர் பார்க்க ஆசைப்பட்டதையும்.

“அப்போன்னா நான்தான் இவ்ளோ நாளா தப்பா நினைச்சுக்கிட்டு இருந்தேனா? சரி செல்லப்பா. அவங்க அப்பா ஆசைப்பட்ட மாதிரியே சிலுக்கு ஷூட்டிங்குக்கு கூட்டிக்கிட்டு போங்க. அதை அப்படியே ஒரு ஸ்டோரியா எழுதிக் கொடுத்துடுங்க”

குமுதம் செல்லப்பா ஏற்பாட்டில் ஒரு ஷூட்டிங்கில் சிலுக்கை சந்திக்கிறார் சீனிவாசன். சில நாட்கள் கழித்து பரமக்குடிக்கு திரும்பியதும் சிலுக்கை தான் சந்தித்த நிகழ்வை ‘ஜில்’லென்று எழுதி குமுதத்துக்கு கடிதமாக அனுப்புகிறார். அதற்குள் செல்லப்பா எழுதிய கட்டுரை குமுதத்தில் அச்சாகி விட்டதால், சீனிவாசனின் சிலுக்கு கட்டுரையை பிரசுரிக்கவில்லை.

ரா.கி.ரங்கராஜன் மூலமாக பின்னர் சிலுக்கு குறித்து தன் தந்தை இப்படியொரு கடிதம் எழுதியதை அறிந்தார் கமல். அந்த கடிதத்தை குமுதம் அலுவலகத்தில் கேட்டு வாங்கிக் கொண்டவர், பத்திரமாக இன்னும் பாதுகாத்து வைத்துக் கொண்டிருக்கிறார்.

17 மார்ச், 2015

உல்லாசம்

‘உல்லாசம்’ என்ற சொல்லை கேட்டால் உங்களுக்கு என்ன நினைவுக்கு வரும்?

அஜித் நடித்த சினிமா?

ஜாலி, ஹேப்பி மாதிரியான உணர்வுகள்?

அதெல்லாம் நினைவுக்கு வரும் பட்சத்தில் நீங்கள் ‘உல்லாசமாக’ இருக்க லாயக்கே இல்லை.

நமக்கு ‘உல்லாசம்’ என்றாலே தினத்தந்தி நினைவுக்கு வரும். அதில் உல்லாசம் என்கிற சொல்லை வாசிக்கும்போதே ‘உல்லாசமாக’ இருக்கும். செய்தி எழுதும் உதவி ஆசிரியர்கள், பேனாவில் ‘உல்லாசத்தை’ ஊற்றி எழுதுகிறார்கள்.

தந்தி, ‘உல்லாசம்’ என்கிற தமிழ்ச் சொல்லை எந்த அர்த்தத்தில் பயன்படுத்துகிறது என்பது தமிழர்கள் யாவரும் அறிந்ததே. உதாரணத்துக்கு நேற்று வாசித்த ‘உல்லாச’ செய்தி ஒன்று சாம்பிளுக்கு கீழே.

சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் கடை வீதியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 34). அவருடைய மனைவிக்கும், நாமக்கல்லைச் சேர்ந்த என்ஜினியர் (வயது 28) ஒருவருக்கும் செல்போன் மூலம் பழக்கம். அப்படியே அது ‘கள்ளக்காதலாக’ உருவெடுக்கிறது.

செல்போனில் அடிக்கடி ராமசாமியின் மனைவி, என்ஜினியருடன் பேசிக்கொண்டே இருக்கிறார். ராமசாமி இந்த நடவடிக்கையை கண்டிக்கிறார். உடனே ராமசாமியின் மனைவி, என்ஜினியரிடம் தன் கணவர் இதுபோல திட்டுவதாக புகார் செய்கிறார்.

இதையடுத்து அந்த என்ஜினியர், ஆத்தூருக்கு வந்து ராமசாமியிடம் தன்னிலை விளக்கம் கொடுத்திருக்கிறார். “உங்கள் மனைவியோடு எனக்கு ‘தொடர்பு’ எதுவுமில்லை. சும்மா ‘பழக்கம்’ தான்”

“அப்படியா, அப்படியெனில் நாம் இருவரும் இனி நண்பர்களாக இருப்போம்” என்று பெருந்தன்மையோடு அவரை நண்பராக்கிக் கொண்டார் ராமசாமி.

உடனே, அந்த என்ஜினியரை தன் வீட்டுக்கு அழைத்து வந்திருக்கிறார். இருவரும் இணைந்து ‘சரக்கு’ சாப்பிட்டிருக்கிறார்கள். ராமசாமியின் மனைவி ‘சைட் டிஷ்’ ஏற்பாடு செய்திருக்கிறார். சரக்கு போதையில் ராமசாமி ராஜதந்திரமாக ஒருவேலை செய்தார்.

என்ஜினியரிடம், “என் மனைவியோடு ‘உல்லாசமாக’ இருக்க விரும்பினால் இருந்துக்கொள்” என்று சலுகை காட்டியிருக்கிறார்.

இதை கேட்டு மகிழ்ந்த இருவரும், நள்ளிரவில் நிர்வாண நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.

கையும், களவுமாக இருவரையும் பிடித்துவிட்ட ராமசாமி, என்ஜினியரை கடுமையாக தாக்கினார். கொடுவாள் எடுத்து வெட்ட முயன்றார். உடையை மாற்றிக் கொள்ளக்கூட அவகாசமற்ற நிலையில் பேண்ட், சட்டை, ஜட்டி உள்ளிட்ட உடைகளை கையில் எடுத்துக்கொண்டு என்ஜினியர் தப்பி ஓடினார். அவரை ராமசாமி விரட்டிச் சென்றும் போதை காரணமாக பிடிக்க முடியவில்லை. உடனே வீட்டுக்கு திரும்பியவர் நிர்வாண நிலையில் இருந்த தன் மனைவியை கத்தரிக்கோலால் குத்த முயன்றிருக்கிறார். அவரும் உயிருக்குப் பயந்து ‘அப்படியே’ தெருவில் ஓடியிருக்கிறார்.

ஒரு வாலிபரும், அழகியும் தெருவில் ‘இந்த’ கோலத்தில் ஓடியதால், அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

பின்னர் அங்கிருக்கும் பொதுமக்கள் தலையிட்டு அழகிக்கு நைட்டி கொடுத்து மாட்டிக்கொள்ள சொல்லியிருக்கிறார்கள். ஒரு மரநிழலில் என்ஜினியரும் உடை மாற்றிக் கொண்டார். இருவரும் காயத்துக்கு சிகிச்சை பெற ஆத்தூர் மருத்துவமனையில் அட்மிட் ஆனார்கள். விசாரணைக்குச் சென்ற போலிஸாரிடம் இருவரும் வழக்கு எதுவும் பதியவேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்கள். கீழே விழுந்து இருவருக்கும் அடிபட்டு விட்டது என்று வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்கள்.

ஆனால் நேர்மையாளரான ராமசாமியோ நேராக காவல்நிலையத்துக்குச் சென்று நடந்த சம்பவத்தை எடுத்துக் கூறியிருக்கிறார். அவர் மீது பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் பிரிவின் கீழ் போலிஸார் வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர். ஆத்தூர் உதவி கலெக்டர் ‘நீதி விசாரணை’ நடத்த இருக்கிறார்.

நேற்று (மார்ச் 17, 2015) வாசித்த செய்தியை அப்படியே என்னுடைய மொழியில் மொழிபெயர்த்திருக்கிறேன். தந்தி லெவல் மொழிப்புலமை நமக்கு வராது.

மேற்கண்ட சம்பவத்தில் ஒரே ஒரு லாஜிக் இடிப்பதாக தோன்றுகிறது. அனேகமாக இது உதவி கலெக்டரின் நீதிவிசாரணையில் தெளிவாகும்.

‘நிராயுதபாணியாக’ என்ஜினியர் தப்பி ஓடியபோது, ராமசாமி துரத்திக்கொண்டு சென்றிருக்கிறார். கிடைத்த அவகாசத்தில் அந்த அம்மணி உடை மாற்றிக் கொண்டிருக்கலாமே? ராமசாமி வீட்டுக்கு திரும்பும்வரை ஏன் ‘அப்படியே’ இருந்திருக்கிறார்? – நேற்றிலிருந்து மண்டையை குடைந்துக் கொண்டிருக்கும் சந்தேகம் இது.

3 நவம்பர், 2014

பினாமி ஆட்சி

முந்தைய அதிமுக ஆட்சியின் போது ஜெயலலிதாவுக்கு ‘வாய்தா ராணி’ பட்டம் வழங்கிய ஸ்டாலின், இம்முறை ‘பினாமி ஆட்சி’ என்கிற சொல்லை பிரபலப்படுத்தி வருகிறார். அப்பாவின் சாமர்த்தியம் இவருக்கும் இருக்கிறது. வெகுஜன அரசியலில் இதுபோன்ற கவர்ச்சியான word coining ஒரு தலைவருக்கு எப்பவும் அவசியம். ஆனாலும் அதிமுக முன்வைக்கும் ‘மக்களின் முதல்வர்’ கான்செப்ட்தான் டாப்.

* * * * * * *
ஷோபாசக்தியின் ‘கண்டிவீரன்’ கடைக்கு வந்துவிட்டது. ஏற்கனவே வாசித்த கதைகள்தான் என்றாலும் தொகுப்பாக வாசிக்கும்போது ஷோபாவின் வீச்சு இன்னும் வலிமையாக மூளையை தாக்குகிறது. விடுதலைப்புலிகள் vs சிங்கள ராணுவம்; இருவருக்குமிடையே சாண்ட்விச்சாக மாட்டிக்கொண்ட மக்களின் மனவியல்தான் அவரது ஏரியா.

சோகம் பிழியப்பிழிய ‘துலாபாரம்’ மாதிரி சொல்லவேண்டிய கதைகளை, ‘தெனாலி’ மாதிரி காமெடியாக எழுதுகிறார். உற்றுநோக்கினால், ஷோபாவின் கதைகளுக்கு ஒரே டெம்ப்ளேட்தான். கதை மாந்தர்கள் பேசுவதைவிட கதைசொல்லியே தொணதொணவென்று (ஆனால் ரசிக்கும்படியாக) பேசிக்கொண்டு இருப்பார். நாம் பரிதாபப்பட்டு ‘உச்சு’ கொட்டவேண்டிய மனிதர்களை அபத்தமானவர்களாகதான் காட்டுவார். அதே நேரம் வில்லன்களான விடுதலைப்புலிகளையும், சிங்கள ராணுவத்தையும் டபுள் அபத்தமாய் முன்வைப்பார். முடிக்கும்போது கடைசி பாராவில் நீங்கள் அடையவேண்டிய மகிழ்ச்சி, நெகிழ்ச்சி, புரட்சி, எழுச்சி, புட்டு, பொடலங்காய் உள்ளிட்ட நவரச உணர்வுகளையும் ஏற்படுத்திவிடுவதில்தான் ஷோபாவின் வெற்றி அடங்கியிருக்கிறது. இருபத்தோராம் நூற்றாண்டின் இணையற்ற கதைசொல்லி ஷோபாசக்தி. கடந்த நான்கு ஆண்டுகளில் அவர் எழுதிய அபாரமான சிறுகதைகளின் தொகுப்பு கண்டிவீரன்.

ஏற்கனவே கலைஞரை தமிழின விரோதியாக தமிழ் தேசியர்கள் வசைபாடிக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் தமிழின துரோகியான ஷோபாசக்தி, இந்த நூலை கலைஞருக்கு வேறு சமர்ப்பணம் செய்துத் தொலைத்திருக்கிறார். ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு என்று தமிழ் ஜோசியர்களுக்கு தெரியாதா என்ன. இதற்கும் கலைஞரின் தலைதான் உருளப் போகிறது. அவருக்கு இருக்கும் ஆயிரத்தெட்டு பிரச்சினைகள் போதாதா?

நூல் : கண்டிவீரன்

பக்கங்கள் : 192

விலை : ரூ.160

வெளியீடு : கருப்புப் பிரதிகள்
மொபைல் போன் – 9444272500
மின்னஞ்சல் : karuppupradhigal@gmail.com

* * * * * * *

நடைபெறுவதற்கு சாத்தியமே இல்லாத சம்பவங்கள் எப்படிதான் நடைபெறுகின்றனவோ என்று செய்தித்தாளை வாசிக்கும்போது அயர்ச்சி ஏற்படுகிறது.

கோவையில் ஏதோ ஆயத்த ஆடை தயாரிப்பு தொழிற்சாலையில் பணிபுரியும் பத்தொன்பது வயது பெண் அவர். ஆந்திராவைச் சேர்ந்தவர். ஊருக்கு ஏதோ திருவிழாவென்று சொந்தக்காரர்கள் சிலரோடு ஆந்திரா நோக்கி ரயிலில் சென்றுக் கொண்டிருந்தார். சேலத்துக்கு அருகில் ஒரு ஆற்றுப் பாலத்தை கடக்க ரயில் நிற்கிறது. திடீரென அந்தப் பெண்ணுக்கு தலைசுற்ற, கதவுக்கு அருகில் வந்து குனிந்து வாந்தியெடுக்கிறார். கையில் இருந்த பர்ஸ் கீழே விழுந்துவிடுகிறது. அதை எடுக்க இறங்குகிறார். ரயில் கிளம்பிவிடுகிறது.

இவரைப் போலவே அதே ரயிலில் ஓர் இருபத்துநான்கு வயது இளைஞர். ரயிலில் ஏறும்போதே நன்கு ‘ஸ்ருதி’ ஏற்றிக் கொண்டிருக்கிறார். வாந்தி பிரச்சினையால், போதையில் ரயிலில் இருந்து இறங்கிவிட்டிருக்கிறார்.

அந்த அதிகாலையில் ஆளரவமற்ற அந்தப் பகுதியில் இவர்கள் இருவர் மட்டும். போதையில் இருக்கும் இளைஞர் அந்தப் பெண்ணை மிரட்டி, புதர்பக்கமாக அழைத்துச் சென்று…

அதிகாலையில் டிராக் வழியாக இருவரும் நடந்து அருகிலிருக்கும் ரயில்நிலையத்துக்கு சென்றிருக்கிறார்கள். அங்கிருந்த ஸ்டேஷன் மாஸ்டரிடம் இந்தப் பெண் அழுதுகொண்டே அத்தனையையும் சொல்லியிருக்கிறார். போலிஸை அழைத்து அந்த இளைஞரை கைது செய்யவைத்தார் ஸ்டேஷன் மாஸ்டர். அப்போதுதான் போதை தெளிந்த இளைஞன் சொல்லியிருக்கிறான். “போதையிலே என்ன நடந்துச்சின்னே தெரியல்லைங்க. அப்படி ஏதாவது தப்புதண்டா நடந்திருந்தா நானே அந்தப் பொண்ணை கட்டிக்கறேன்”

* * * * * * *

மரம் நடுவது குறித்த மானமுள்ள கவிஞர் நண்பர் வா.மணிகண்டன் அவர்களுடைய பதிவினைப் பார்த்தேன். அனேகமாக இன்னும் இரண்டு மாதத்தில், சென்னை புத்தகக் காட்சி அரங்கில், ’கத்தி’ ஜீவானந்தத்துக்கு ரோட்டரி க்ளப் பாராட்டு விழா நடத்தியதைப் போன்ற ஒரு பாராட்டுவிழாவை இவருக்கு நாம் நடத்த வேண்டியிருக்கும் என்று தோன்றுகிறது. மரம் நடுவிழா நடத்துகிறோமோ இல்லையோ, குறைந்தபட்சம் இதையாவது நடத்தலாமே. என்ன சொல்லுகிறாய் தமிழ் அன்னையே?

கென்யாவைச் சேர்ந்த வாங்காரி மாத்தாய் இப்படிதான் சுற்றுச்சூழலுக்காக போராடி நோபல் பரிசெல்லாம் வென்றார். நம் இணைய, இலக்கிய உலகில் இருந்து அப்படியொருவர் நோபல் பெற்றால் நமக்கெல்லாம் பெருமைதானே?

நிசப்தமாக இருக்க வேண்டாம். அசப்தமாக இருப்போம். nobel causeக்கு கை கொடுக்கலாம் தோழர்களே!

* * * * * * *
‘நெருங்கி வா முத்தமிடாதே’ பார்த்தேன். லோபட்ஜெட் குறைகளையும் தாண்டி, இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணனின் intelligent படத்தை சுவாரஸ்யப்படுத்துகிறது. ஏற்கனவே ஓரிரு ரோட் ட்ரிப் ஸ்டோரி தமிழில் வந்திருக்கிறது. ஆனாலும் மசாலா கலக்காத அசலான ‘ரோட் ட்ரிப்’பாக இதை சொல்லலாம். ‘ஹைவே’ எல்லாம் வரும்போது வரட்டும்.

‘திடீரென்று இரண்டு மூன்று நாட்களுக்கு தொடர்ச்சியாக எங்குமே பெட்ரோல் டீசல் கிடைக்கவில்லை என்றால் என்னவாகும்’ என்று தடாலடியாக படம் ஆரம்பிக்கிறது. நாட்டுக்கு ஏதோ பெரிய ஆபத்து என்கிற பில்டப்போடு. இரண்டாம் பாதியில் அந்த பில்டப் படுமோசமாக பிசுபிசுத்துப் போகிறது என்று வைத்துக் கொள்ளுங்களேன். ஆனால் இடையில் லாரி ஓட்டத்தின்போது செருகிய காட்சிகளும், பாத்திரங்களும் அபாரம். குறிப்பாக விஜிசந்திரசேகரின் கதை அட்டகாசம். நைசாக திவ்யா-இளவரசன் கதையை எடுத்துக் கொண்டிருக்கிறார். ஆனாலும் கடைசியில் “விளைவுகளைப் பற்றி யோசிக்காம நீங்க பாட்டுக்கும் காதலிச்சிடறீங்க” என்கிற கீறல்விழுந்த அட்வைஸ்தான்.

நாடு ஸ்தம்பித்துவிட்டால் நாம் மட்டுமல்ல. ரோட்டோரத்தில் லாரிக்கு கைகாட்டும் பாலியல் தொழிலாளர்களுக்கும் கூட வாழ்வாதாரம் ஸ்தம்பித்துவிடும் என்றெல்லாம் யோசித்த லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு ஷேக் ஹேண்ட். முதல் பாதிக்கு சீன் யோசித்த அளவுக்கு, இரண்டாம் பாதிக்கு யோசிக்க முடியாத அவரது சோம்பேறித்தனத்துக்கு தலையில் குட்டு. தம்பி ராமையா மாதிரி பிஸி ஆர்ட்டிஸ்ட் கால்ஷீட் கொடுத்திருக்கிறார் என்பதற்காக, அவருடைய மொக்கை காமெடியை எல்லாம் அப்படியே வைக்காமல் எடிட்டித் தள்ளியிருக்கலாம்.

இதைவிட நூறு மடங்கு அதிக பொருட்செலவில் தயாரிக்கப்படும் படங்கள் அட்டக்கத்தியாக இருக்கும்போது, ‘நெருங்கிவா முத்தமிடாதே’ கொஞ்சம் ஷார்ப்பாகதான் இருக்கிறது. ஒருமுறை நெருங்கி முத்தமிடலாம் (படத்தை).

27 அக்டோபர், 2014

பஞ்சாபி லஸ்ஸி

“சார் போஸ்ட்!” என்று வாசலில் தபால்காரரின் சப்தம் கேட்டது. சமையல் அறையில் இருந்த அம்புஜம் போட்டது போட்டபடியே ஓடினாள் – என்று எண்பதுகளிலும், தொண்ணூறுகளிலும் ஆயிரக்கணக்கானோரால் சிலிர்ப்பாக வாசிக்கப்பட்ட தமிழ் சிறுகதைகள் கடந்த இருபது ஆண்டுகளில் அடைந்திருக்கும் பரிணாமம் பாராட்டத்தக்கது.

கே.என்.சிவராமன் தினகரன் தீபாவளி மலரில் எழுதியிருக்கும் ‘தேங்க்ஸ்’ கதையின் தொடக்க வரியே இவ்வளவுதான் “காரணம். அம்மா”.

வர்ணனைகள் இல்லை. கதாசிரியரின் தத்துவ சிந்தனை கோட்பாட்டு அலசல் இல்லை. வாசகனுக்கு ஸ்பூன் ஃபீடிங் செய்யும் விளக்கங்கள் அறவே இல்லை. ‘நறுக்’கென்று கதைக்கு எது தேவையோ, அதை தவிர்த்து ஒரே ஒரு சொல் கூட கூடுதலாக இல்லை.

சுஜாதா செத்துப்போன பிறகுதான் அவர் சொல்லியபடி கதை எழுத ஆரம்பித்திருக்கிறார்கள் தமிழ் எழுத்தாளர்கள்.

* * * * * * * * * *

ஆறேழு ஆண்டுகளுக்கு முன்னால் திடீரென்று அந்த ஆசை தோன்றியது. மொத்த ஷெல்ஃபையும் அலசிப் போட்டு அந்த புத்தகத்தை தேடியெடுத்து விடியும் வரை படித்தேன். ‘கணையாழியின் கடைசிப் பக்கங்கள்’. மறுநாள் இரவு ஒரு பிரஸ்மீட்டில் இருந்தபோது குறுஞ்செய்தி வந்தது. “சுஜாதா காலமானார்”.

போனவாரம் எஸ்.எஸ்.ஆரின் வாழ்க்கை வரலாறு வெளிவருகிறது என்று கேள்விப்பட்டு, கடைக்கே வராத புத்தகம் வேண்டும் என்று நியூபுக்லேண்ட்ஸ் முன்பு தர்ணா செய்து, மேனேஜர் சீனிவாசன் எங்களுக்காக எப்படியோ புத்தகத்தை வரவழைத்தார். இரண்டு நாட்கள் கழித்து நடு இரவில் புத்தகத்தைப் புரட்டினேன். மறுநாள் முற்பகலில் வந்த செய்தி. “எஸ்.எஸ்.ஆர் இறந்துவிட்டார்”

பயமாக இருக்கிறது. எனக்கு ஏதோ அமானுஷ்ய சக்தி திடீரென்று ஏற்பட்டிருக்கிறது.

* * * * * * * * * *

‘ஃபெஸ்டிவல் மூட்’ என்றொரு ‘மாஸ் மெண்டாலிட்டி’ இருக்கிறது. சினிமா, பத்திரிகை என்று வெகுஜனத் தளங்களில் பணிபுரிபவர்கள், மக்களின் இந்த மனோபாவத்தை கணக்கிலெடுத்துக் கொண்டு பணிபுரிய வேண்டும். எம்.ஜி.ஆரும், ரஜினியும், குமுதமும், சரவணா ஸ்டோர்ஸும் அடைந்த மகத்தான வெற்றிகளுக்கு, மாஸ் மீதான அவர்களது ஆழ்ந்த புரிதலே காரணம்.

தீபாவளிக்கு ஷாருக் நடிப்பில் வெளிவந்திருக்கும் ‘ஹேப்பி நியூ இயர்’ படத்தை காணும்போது, வடஇந்தியாவில் மக்கள் கூட்ட கூட்டமாக ஏன் இதை கொண்டாடுகிறார்கள் என்பதை உணரமுடிகிறது. ரிலாக்ஸான மனநிலையில் இருக்கும் மக்களின் மத்தியில் அன்பேசிவமோ, விவசாய சிறப்பிதழோ எடுபடாது. பர்ஸ்ட் நைட் ஸ்பெஷலாக எந்த மாப்பிள்ளையாவது நங்கநல்லூர் போய் ஆஞ்சநேயரை வழிபடுவாரா?

* * * * * * * * * *

சேகுவேரா ஒரு டெர்ரர். இதயத்துடிப்பை நிறுத்திவிட்ட சே-வின் கண்கள் மட்டும் திறந்துக் கிடந்தன. அவரது உடலை கைப்பற்றப் போன அமெரிக்க வீரர்கள் சே-வின் உயிரோட்டமான பார்வையை பார்த்து மரணபயத்தை உணர்ந்தது வரலாறு. சே மறைந்து ஐம்பது ஆண்டுகள் ஆகப்போகிறது. இன்னமும் அமெரிக்கர்கள் சே-வை பார்த்து பயந்து பயந்து சாகிறார்கள். இறந்த பின்னாலும் ஒரு மனிதன் தன்னுடைய எதிர்தரப்பினரை ஆயுளுக்கும் ராவில் பயத்தில் உச்சா போக வைக்க முடியுமா?

நம்மூரில் பெரியார் இன்னமும் மிரட்டிக்கொண்டே இருக்கிறார்.

* * * * * * * * * *

“இந்தி திணிக்கப்பட்டால் மொழிப்போர் வெடிக்கும்” என்று ‘நாம் தமிழர்’ சீமான், மத்திய அரசை எச்சரித்திருக்கிறார்.

இன்னமும் தமிழர்கள் மீது சீமானுக்கு இவ்வளவு நம்பிக்கை இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. மக்கள் முதல்வருக்கு நீதி கிடைக்க அவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். நீதி கிடைக்கும் வரை மொழியோ, இனமோ, ஊனோ, உறக்கமோ தமிழர்களுக்கு பொருட்டே அல்ல.

* * * * * * * * * *

ஸ்ருதிஹாசன், சமந்தாவையெல்லாம் மறந்துடுங்க. டோலிவுட்டே இப்போது ரகுல் ப்ரீத் சிங்கைதான் கொண்டாடுகிறது. இருபத்து நாலு வயசு இளமைப் பெட்டகம். திக்கான பஞ்சாபி லஸ்ஸி.

2009ல் ‘7ஜி ரெயின்போ காலனி’ கன்னடத்தில் ரீமேக்கப்பட்டபோது அனிதாவாக அறிமுகம். தமிழில் ‘தடையறத் தாக்க’வில் செகண்ட் ஹீரோயின், ‘புத்தகம்’ மற்றும் ‘என்னமோ ஏதோ’ படத்தில் ஹீரோயின். இதுமாதிரி லோ மற்றும் மீடியம் பட்ஜெட் படங்களில் காமாசோமோவென்றுதான் நடித்துக் கொண்டிருந்தார். ‘வெங்கடாத்ரி எக்ஸ்பிரஸ்’ஸில் இவரது கிளாமர் பச்சக்கென்று டாலடிக்க, “இந்த பொண்ணு கிட்டே ‘என்னமோ ஏதோ’ இருக்கு” என்று அடுத்தடுத்து தெலுங்கு இயக்குனர்கள் இவரை புக் செய்தார்கள்.

லேட்டஸ்ட் ஹிட்டான கோபிசந்த் நடித்த ‘லவுகியம்’தான் ஜாக்பாட். படத்தில் இவர் தோன்றும் முதல் காட்சியே க்ளோஸ் அப்பில் ‘தொப்புள் தரிசனம்’தான். பத்து நொடிகள் தோன்றும் அந்த ஷாட்டை திரும்பத் திரும்ப பார்ப்பதற்கென்றே தெலுங்கு ரசிகர்கள் பத்துக்கும் மேற்பட்ட தடவை திரையரங்குகளுக்கு படையெடுக்கிறார்கள்.

மனோஜ் மஞ்சுவின் ‘கரண்ட் தீகா’வில் சன்னிலியோனுக்கு சவால்விடும் அளவுக்கு கவர்ச்சி விருந்து. சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் ரவிதேஜாவின் கிக்-2 படத்திலும் ஹீரோயின். வருட தொடக்கத்தில் பாலிவுட்டிலும் ‘யாரியான்’ மூலம் கணக்கை தொடக்கியிருக்கிறார். அடுத்து ரமேஷ்சிப்பியின் ‘சிம்லா மிர்ச்சி’. பவன் கல்யாணின் கப்பார் சிங்-2விலும் இவர்தான் ஹீரோயின் என்கிறார்கள்.

இந்தியத் திரையுலகை புரட்டிப்போட கிளம்பியிருக்கும் இந்த புயல், தமிழ்நாட்டை மீண்டும் எப்போது தாக்கும் என்று தெரியவில்லை. சிம்பு மாதிரி யாராவது மனசு வைக்கணும்.

* * * * * * * * * *

2006லிருந்து 2010 வரை. தமிழில் வலைப்பதிவுகள் கோலோச்சிக் கொண்டிருந்த காலம். ட்விட்டர், ஃபேஸ்புக் என்று மைக்ரோப்ளாக்கிங் சிஸ்டம் வந்து வலைப்பதிவுகளை விழுங்கிவிட்டது. ஆனாலும் இன்னமும் ஆங்காங்கே வலைப்பதிவர் சந்திப்புகள் நடக்கிறது என்பதெல்லாம் ஆச்சரியமாகதான் இருக்கிறது. எனக்கெல்லாம் ப்ளாக்கில்தான் வசதியாக ஆற, அமர ஆடமுடிகிறது. அதனால்தான் நேரமே இல்லையென்றாலும், மூளையில் சரக்கே இல்லையென்றாலும் வவ்வால் மாதிரி வலைப்பதிவை பிடித்து தொங்கிக் கொண்டிருக்கிறேன்.

ப்ளாக் எழுதுபவர்கள் சிக்கன நடவடிக்கையாக 2000 – 3000 வார்த்தைகளில் எழுதாமல் 500 – 700 வார்த்தைகளில் சுவாரஸ்யமாக எழுதிப்பழக வேண்டும் என்று ஏதோ ஒரு வலைப்பதிவர் சந்திப்பில் ‘மூத்தப் பதிவர்’ என்கிற முறையில் அட்வைஸ் செய்திருந்தேன். வாசகர்களை (!) துடிக்க துடிக்க கொல்லக்கூடாது இல்லையா? நிறைய இளம்பதிவர்கள் அப்போது எனக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். கிண்டல் அடித்தார்கள். அனேகமாக அந்த பதிவர்களும் இப்போது 50 – 100 வார்த்தைகளில் ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போட்டுக் கொண்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

இப்போதும் சொல்கிறேன். வலைப்பதிவுகள் முற்றிலுமாக பிராணனை விட்டுவிடக் கூடாது என்றால், மைக்ரோப்ளாக்கிங் தரும் சுவாரஸ்யத்தை மேக்ரோப்ளாக்குகளும் தரும் விதத்தில் எழுதவேண்டும். தமிழில் நன்றாக எழுதத் தெரிந்திருப்பது மட்டும் போதாது. கட்டுரைகளின் வடிவ நேர்த்தியும் அவசியம். கவிதை, சினிமா விமர்சனம், கதை, அரசியல், இலக்கியம் என்று எதை எழுதினாலும் லேசாக ‘மீறி’ பார்க்கலாம். நாலு தோசை சுட்டுப் பார்த்தால்தான் ஒரு தோசையாவது உருப்படியாக வரும்.

27 ஜூன், 2014

நெய்மார் அடித்த சூப்பர் கோல்

பிரேஸில் ஒட்டுமொத்தமாக தூக்கத்தில் கூட ‘நெய்மார், நெய்மார்’ என்று பினாத்திக் கொண்டிருக்கிறது. எப்படியும் உலகக் கோப்பையை உதைத்து கொடுத்து விடுவார் என்று நாடு முழுக்க நம்பிக்கை பரவியிருக்கிறது. இருபத்தி இரண்டு வயது நெய்மாருக்கு இளம்பெண்கள் மத்தியில் அப்படியொரு கிரேஸ். ஆளும் பார்க்க கொஞ்சம் சுமாராகவே இருக்கிறார். அவரது காலுக்கு பால் வந்துவிட்டால், எதிரணியினர் பந்தை திரும்ப எடுக்க முடியாத அளவுக்கு காந்தம் மாதிரி ஒட்டிக் கொள்கிறது. தலையில் முட்டியோ அல்லது காலால் தள்ளியோ லாகவமாக அவர் கோல் போட்டதுமே, போட்டியை பார்க்கும் பெண்களும் தங்கள் டீஷர்ட்டை கழட்டி தலைக்கு மேல் சுழற்றி இன்ப அதிர்ச்சி வழங்கும் கிளுகிளுப்பான காட்சியை நள்ளிரவில் கண்முழித்து டிவியில் கண்டுகளித்து நாமே இங்கு சிலிர்த்துக் கொண்டிருக்கிறோம்.

அப்படிப்பட்ட நெய்மாருக்கு உலகக்கோப்பை துவங்கும்போது பயங்கரமான பிராண சங்கடம் ஏற்பட்டு விட்டது. நகத்தை கடித்துக்கொண்டே வெட்கமாய் சங்கடப்பட்டார். பார்ப்பவரெல்லாம் “ம்... ம்... நடக்கட்டும்.. நடக்கட்டும்” என்று சீண்டிவிட, கடுப்பாகிப் போய் கோர்ட்டுக்குப் போனார். விவகாரம் என்னவென்றால், ப்ளேபாய் கொஞ்சம் விபரீதமான பத்திரிகை என்பதை நாம் அனைவரும் அறிந்ததே. ப்ளேபாயின் ஜூன் மாத பிரேஸில் பதிப்பில் ஒரு சூப்பர் அட்டைப்படம் இடம்பெற்றிருந்தது. பேட்ரிசியா ஜோர்டான் எனும் பிரேஸிலின் ஹாட்டான மாடல், கோல் கீப்பரின் கிளவுஸை (மட்டுமே) அணிந்துக்கொண்டு சூப்பர் போஸ் கொடுத்திருந்தார் (எச்சரிக்கை : சாம்பிள் படம் பதிவின் கீழே இணைக்கப்பட்டிருக்கிறது)

வெறும் படத்தை மட்டும் ப்ளேபாய் பிரசுரித்திருந்தால் நம்மை மாதிரியே நெய்மாரும் ஹேப்பி ஆகியிருப்பார். ஆனால், ‘நெய்மாரின் மனங்கவர்ந்த மாது இவர்’ என்று டைட்டிலும் போட்டுத் தொலைத்துவிட்டதால்தான் இவ்வளவு சங்கடம். “அடப்பாவீங்களா. நீங்கள்லாம் அண்ணன் தம்பியோடவே பொறக்கலையா? இனிமே எனக்கு யாரு பொண்ணு கொடுப்பா” என்று மூக்கால் அழுதுக்கொண்டே நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். உடனடியாக பேட்ரிசியாவை ட்விட்டரில் அவர் அன்ஃபாலோ செய்துவிட்டார் என்றொரு உறுதியாகாத தகவல் ஒன்றை லக்கிலுக் ஆன்லைன் டாட் காம் உறுதி செய்திருக்கிறது.

விசாரணை செய்த நீதிபதி, “முதல்லே படத்தை கண்ணுலே காட்டுங்கய்யா. அதுக்கப்புறம்தான் தீர்ப்பு சொல்ல முடியும்” என்று தெளிவாகவே சொல்லிவிட்டாராம். நெய்மார் தரப்பு வக்கீல் கருப்பு கோட்டில் நெஞ்சோடு மறைத்துவைத்திருந்த அந்த ப்ளேபாய் இதழை வெட்கப்பட்டுக் கொண்டே நீதிபதியிடம் சமர்ப்பித்திருக்கிறார். அரை மணி நேரத்துக்கு அட்டைப்படத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த நீதிபதி, தீர்ப்பை தள்ளிவைத்துவிட்டு ஓய்வறைக்கு சென்றும் படத்தை உற்று உற்றுப் பார்த்து விட்டு, நெஞ்சில் நீதி நெருப்பாய் எரிய கோர்ட்டுக்கு வந்து வரலாற்றுப் பிரசித்தி பெற்ற தீர்ப்பினை வழங்கியிருக்கிறார்.

“ப்ளேபாய் உடனடியாக பிரேசிலில் விற்கக்கூடிய தன்னுடைய ஜூன் மாத இதழ்களை திரும்பப் பெறவேண்டும். இம்மாத இதழ்களுக்கு இந்த கோர்ட் தடையை விதிக்கிறது. இல்லையேல் புத்தகம் கடையில் கிடைக்கக்கூடிய ஒவ்வொரு நாளும் நாலாயிரத்து ஐநூறு டாலரை அபராதமாக நீதிமன்றத்துக்கு கட்ட வேண்டும்”

தீர்ப்பை கேட்டதுமே நெய்மாரின் வழக்கறிஞர், நீதியரசருக்கு அருகில் வந்து தலையை சொறிந்தவாறே நின்றிருக்கிறார்.

“அதுதான் தீர்ப்பு கொடுத்தாச்சில்லே. அப்புறம் என்னய்யா?” என்று ஸ்பானிஷ்மொழியில் நீதிபதி கேட்டார்.

“என்னோட புக்கை கொடுத்திட்டீங்கன்னா வீட்டுக்கு கெளம்பிடுவேன்” என்று வக்கீலும் தன்னுடைய உரிமையை விட்டுக் கொடுக்காமல் பதிலளித்திருக்கிறார்.

தீர்ப்பை கேட்ட நெய்மாருக்கு சந்தோஷம்தான். ஆனால், “கடைசியில் மிச்சம் மீதி சாஸ்திரத்துக்கு ஒரு காப்பியையும் வைக்காமல் இலக்கிய ஆர்வம் காரணமாக ஒட்டுமொத்தமாக ஒண்ணாம் தேதியே வாசகர்கள் காலி செய்துவிட்டார்களே, நெய்மாரின் கற்பு போனது போனதுதான்” என்று ரியோடிஜெனிரோ பெரிய பஸ் ஸ்டேண்டில் வெத்தலைப்பாக்கு கடை வைத்திருக்கும் பெட்டிக்கடைக்காரரான சோகபாரா பிதல்காஸ்த்ரோகூபா நம்மிடம் வருத்தத்தோடு கூறினார்.

கடைசியாக, பிரேஸில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டால் ப்ளேபாய் அட்டைப்பட காஸ்ட்யூமிலேயே ஸ்டேடியத்துக்கு போய் நெய்மாரை குஷிப்படுத்தலாமா என்று பேட்ரிஷியா யோசித்துவருவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

‘பின்’குறிப்பு : ஒரிஜினல் அட்டைப்படத்தில் முன்பக்கமாக ‘போஸ்’ கொடுத்திருக்கிறார்

6 டிசம்பர், 2013

சமையல் மந்திரம்

பத்தோடு பதினொன்றாக ஏதோ ஒரு சமையல் நிகழ்ச்சி என்றுதான் ஆரம்பத்தில் நினைத்தேன். சரி அந்த கருமத்தை ஏன் நைட்டு பதினொன்று மணிக்கு ஒளிபரப்புகிறார்கள் என்கிற ஆர்வத்தில் என்றோ ஒருநாள் கேப்டன் டிவியின் உள்ளே நுழைந்தவுடன்தான் தெரிந்தது இது மன்மத மந்திரம் என்று. புதிரா புனிதமாவையெல்லாம் ஓவர்நைட்டில் பீட் செய்துவிட்டார்கள். கேப்டன் அரசியலுக்கு வந்ததால் தமிழர்களுக்கு இது ஒன்றுதான் பிரயோசனமான விஷயம்.

நீண்டகால செயல்பாட்டுக்காகவும், முறுக்குக் கம்பி மாதிரி வலிமையை பெறவும் ஏதோ பேருக்கு ஒரு சமையல் குறிப்பு. ‘இச்சையை கிளப்பும் மொச்சை’, ’ஆண்மை வீரியத்துக்கு அமோக கிழங்கு’, ‘நரம்பு ஸ்டெடியாக புடலங்காய் கூட்டு’, ’குஜால் குன்னூர் ஜாம்’ மாதிரி ஏதோ ஒரு கிக்கான சமையல் குறிப்பு. யாராவது சமைத்துப் பார்த்து ‘பலன்’ தெரிந்ததா என்று தெரியவில்லை. ஆனால் நிகழ்ச்சியே சும்மா கிர்ரென்றிருப்பது என்னவோ நிஜம்தான்.
கேமிராவை ஆன் செய்தவுடனேயே திருதிருவென்று முழித்தவாறே பேசுகிறார், நிகழ்ச்சியின் கதாநாயகன் டாக்டர் சின்னையா. இவர் ஒரிஜினல் டாக்டர் தானா என்று சி.பி.ஐ.தான் விசாரித்து சொல்லவேண்டும். குறுந்தாடி, பாக்யராஜ் பாணி குரல் என்று அவரது தோற்றமே ஒரு மாதிரியாக நிகழ்ச்சியோடு ரசிகர்களை ஒன்றவைத்துவிடுகிறது. நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கிரிஜா ஸ்ரீதான் ஹைலைட். டாக்டரே கொஞ்சம் அடக்கி வாசித்தாலும், அம்மணி அநியாயத்துக்கு ஆட்டம் போடுகிறார்.

சமையல் குறிப்பு முடிந்ததுமே ஆலோசனை நேரம். நேயர்கள் யாராவது சந்தேகம் கேட்கிறார்கள். அந்த கடிதத்தை நிகழ்ச்சி பார்க்கும் நாமே கூச்சப்படும் வகையிலான குரலில் கொஞ்சிக் கொஞ்சி தொகுப்பாளர் படிப்பார். டாக்டரும் அசால்டாக, சிவராஜ் சித்தவைத்தியரை மிஞ்சும் வகையில் பதில் சொல்வார். இம்மாதிரி நிகழ்ச்சிகளில் கேட்கப்படும் கேள்விகள் ஒரே மாதிரியாகதான் அலுப்பூட்டும். ‘இருபது வருட கைவேலை, ரொம்ப சிறுத்திடிச்சி’, ‘கல்யாணம் முடிஞ்சி எட்டு மாசமாவது, இதுவரைக்கும் ஒண்ணுமே முடியலை’ ரேஞ்சு சந்தேகங்கள்தான்.
கேள்வியைப் படித்துக் கொண்டிருக்கும்போதே டாக்டர் குறுக்கிட்டு ஏதாவது கமெண்டு சொல்வார். “மெட்ரோ வாட்டர் பைப் மாதிரி யூஸ் பண்ணுவார் போலிருக்கே?” என்று டாக்டர் ஒரு போடு போட, கிரிஜா ஸ்ரீயோ ஒரு படி மேலே போய் “ஆமாம். அப்படித்தான் நானும் நினைக்கிறேன்” என்று புகுந்து விளையாடுகிறார். “இவருக்கு இன்னேரம் கைரேகையெல்லாம் அழிஞ்சிட்டிருக்கும்னு நெனைக்கிறேன்” என்று டாக்டர் சீரியஸாக கமெண்ட் செய்ய, “பின்னே.. கொஞ்ச நஞ்ச உழைப்பா” என்று டாக்டரையே காலி செய்கிறார் கிரிஜா.

கடிதம் போடுபவர்களில் பெரும்பாலானவர்கள் ஏன் ‘கேப்டனுக்கு வாழ்த்துகள்’ என்று ஆரம்பித்துவிட்டு, தங்கள் பாலியல் சந்தேகத்தை கேட்கிறார்கள் என்பதன் லாஜிக் மட்டும் புரியவில்லை. நிகழ்ச்சிக்கு பிரமாதமான வரவேற்பு இருப்பதால், நிகழ்ச்சி நேரத்தை கொஞ்சம் ‘நீட்டிக்க’ சொல்லி நிறைய நேயர்கள் கேட்கிறார்கள். கேப்டன்தான் மனசு வைக்கணும்.|

டோண்ட் மிஸ் இட்!

4 டிசம்பர், 2013

மசாலாவே வாழ்க்கை!

தீவிர இலக்கியத்தின் வாசல் மட்டுமல்ல. ஆரோக்கியமான சமூகத்தின் அடையாளமும் வெகுஜன இலக்கியமே என்று தீவிரமாக நம்புகிறோம். இலக்கியத்துக்கு மட்டுமல்ல. வெகுஜன முயற்சிகள் சமூகத்தின் எல்லா தளங்களிலும் ஏற்படும் இடைவெளிகளையும் நிரப்புகின்றன. எல்லா துறைகளுமே தொடர்ச்சியான இயங்குதலுலை நடத்த இது அத்தியாவசியமான பணியும் கூட.

துரதிருஷ்டவசமாக டிஜிட்டல் தலைமுறை இளைஞர்களுக்கு வெகுஜன கலை இரண்டாம் தரமானதாகவோ அல்லது தீண்டப்பட தகாததாகவோ படுகிறது. அவர்களை சொல்லி குற்றமில்லை. பல்வேறு காரணங்களால் தொண்ணூறுகளின் இறுதியில் ஏற்பட்ட தொய்வு இதற்கு காரணமாகிறது. எழுபதுகளின் இறுதியிலும், எண்பதுகளின் தொடக்கத்திலும் பிறந்த எங்களுக்குதான் சமையலுக்கு மட்டுமல்ல, வாழ்க்கைக்கும் ‘மசாலா’ எவ்வளவு அவசியமானது என்று தெரியும். நண்பர்களுக்குள் பேசிக்கொள்ளும்போது இதையெல்லாம் மிகத்தீவிரமாக விவாதித்திருக்கிறோம்.  இதன் விளைவே LIPS (எ) Life is pulp society. நாங்கள் நம்பும் கருத்தாக்கங்களுக்கு எங்களுடைய பங்காக எதையாவது செய்யவேண்டும். அது நமது கடமையும் கூட.

LIPS அமைப்பின் தொடக்கம் வரும் ஞாயிறு (08-12-2013) அன்று காலை 10.30 மணிக்கு சென்னை திருவான்மியூர் பனுவல் புத்தக விற்பனை நிலையத்தில் நிகழ்கிறது.

எங்களது முதல் நிகழ்வே ‘வாசகருக்கு மரியாதை’

வாசகர்தான் வேர் என்கிற அடிப்படையில், வெகுஜன இதழ்களை வாசிக்கவும், வாசித்தபின் அதுகுறித்த கருத்துகளை வெளிப்படுத்தவும் (நம் மொழியில் சொல்லப்போனால் பின்னூட்டம், கமெண்ட்) கடந்த முப்பத்தைண்டு ஆண்டு காலமாக தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் வாசக மனங்களின் மன்னன் அயன்புரம் சத்தியநாராயணன் அவர்களுக்கு சிறியளவில் பாராட்டு விழா நடத்துகிறோம். ‘அந்நியன்’ திரைப்படத்தில் ஒரு பத்திரிகையாளர் பாத்திரத்துக்கு வாத்யார் சுஜாதா, அயன்புரம் சத்தியநாராயணன் அவர்களது பெயரை சூட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை பத்திரிகை அதிபர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் பாராட்டு விழாக்கள் நிறைய நடைபெற்றிருக்கிறன. நாம் நடத்தப்போவது அப்படியே உல்டா. ஒரு பத்திரிகை ஆசிரியர், வாசகரை பாராட்டுகிறார். அயன்புரம் சத்தியநாராயணன் அவர்களை கவுரவித்து உரையாற்ற குங்குமம் இதழின் முதன்மை ஆசிரியர் அண்ணன் தி.முருகன் அவர்கள் பெருமனதோடு ஒப்புக்கொண்டிருக்கிறார். இடம் கொடுத்து உதவும் பனுவல் புத்தக நிலையத்தாருக்கும், பரிசல் செந்தில்நாதன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

எவ்வளவோ எழுத்தாளர்களோடு ‘வாசகர் சந்திப்பு’ நடைபெற்றிருக்கிறது. ஒரு வாசகரோடு வாசகர் சந்திப்பு நடத்த அனைவரையும் அன்போடு அழைக்கிறோம். தொடர்ச்சியாக இம்மாதிரி நிகழ்வுகளை நடத்த உத்தேசித்திருக்கிறோம். உங்களது அன்பான வருகையும், அவசியமான ஆலோசனையும் எங்களை வழிநடத்த வேண்டுமென்று விரும்புகிறோம். ஞாயிறு காலை உங்கள் அனைவரின் அப்பாயிண்ட்மெண்டும் எங்களுக்கு தேவை.

7 செப்டம்பர், 2013

மிருதங்க சக்கரவர்த்தி vs விகடன்

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடிப்பில் 1983ல் வெளிவந்த திரைப்படம் மிருதங்க சக்கரவர்த்தி. தில்லானா மோகனாம்பாளில் நாதஸ்வர வித்வானாக அசத்தியவர் இப்படத்தில் மிருதங்க வித்வானாக பரிணாமம் பெற்றிருந்தார். கிரிட்டிக்கலி அக்ளெய்ம்ட் ஆன இப்படம், ஏனோ பாக்ஸ் ஆபிஸில் சோடை போனது.

இப்படம் வந்திருந்தபோது விகடனில் எழுதப்பட்ட விமர்சனத்தில் சிவாஜியின் மிருதங்க நடிப்பு தாறுமாறாய் கிழிக்கப்பட்டிருந்தது. சிவாஜி மிருதங்கம் வாசிப்பதை பார்க்கும்போது, வலிப்பு நோய் வந்தவரை பார்ப்பது போல இருக்கிறது என்று விகடன் காரசாரமாக எழுதிவிட்டது. இந்த விமர்சனத்துக்கு சிவாஜி ரசிகர்கள் கடுமையான எதிர்ப்பை கிளப்பினார்கள். இதையடுத்து விகடன், புகழ்பெற்ற மிருதங்க வித்வான்களிடம் சிவாஜியின் நடிப்பு குறித்து கருத்து கேட்டிருக்கிறது. நிஜ மிருதங்க வித்வான்களை மிஞ்சும் வகையில் சிவாஜியின் நடிப்பு மிகவும் தத்ரூபமாக அமைந்திருக்கிறது என்று அவர்கள் சான்றிதழ் தர, விகடன் மனப்பூர்வமாக தன் வாசகர்களிடம் மன்னிப்பு கோரியது.

செய்த பாவத்துக்கு பரிகாரமாக அடுத்த ஓராண்டுக்கு விகடனில் விமர்சனமே வராது என்றும் அதன் ஆசிரியர் எஸ்.பாலசுப்பிரமணியன் அறிவித்தார். அதன்படியே விகடனும் ஓராண்டுக்கு சினிமா விமர்சனம் எழுதவேயில்லை.

இது நடக்கும்போது நான் சிறுவனாக இருந்திருப்பேன். விகடனோடு பரிச்சயம் இருந்ததா என்றும் நினைவில்லை. எனவே சம்பவம் பற்றி தெரியவில்லை. ’தங்கமீன்கள்’ திரைப்படம் குறித்து விகடன் எழுதிய விமர்சனத்துக்கு, எதிர்வினையாக இயக்குனர் ராம் எழுதிய பதிவுகளை பற்றி பேசிக்கொண்டிருந்தபோது, ஒரு மூத்தப் பத்திரிகையாளர் இந்த சம்பவத்தை சொன்னார். தங்கமீன்கள் விமர்சனம் குறித்த ராமின் தரப்பையும், விகடனின் விளக்கத்தையும் அடுத்தவாரம் விகடன் பிரசுரிக்கப் போகிறது என்று ராம் எழுதியிருக்கிறார். ஐ யாம் வெயிட்டிங்.

மிருதங்க சக்கரவத்தி காலத்தில் இச்சம்பவம் நடந்திருக்கும் பட்சத்தில், அதையும் தங்கமீன்கள் குறித்த விளக்கம் வரும் இதழிலேயே, விகடன் பொக்கிஷம் ஆட்கள் மீள்பிரசுரித்தால் சுவையாக இருப்பதோடு, விகடனின் பாரம்பரியப் பெருமையையும் அடுத்த தலைமுறை வாசகர்களுக்கு எடுத்துக் காட்டுவதாக அமையும்.

21 செப்டம்பர், 2012

சிப்ஸ்


கடனுக்கா குடிக்கிறோம், கண்டு நடுங்கிட..
ஊத்திக் கொடுப்பவர்கள் உரிமைகள் கேட்கிறபொழுது
உயிரை பணயம் வைத்து குடிக்கும் நாம் உரிமைகள் கேட்கக்கூடாதா?

கேப்டன் இயக்கப் போகும் அடுத்த படத்துக்கு இந்த போஸ்டருக்கு வாசகம் எழுதியவரை வசனம் எழுத கூப்பிடலாம். லியாகத் அலிகான், பேரரசு மாதிரி ஜாம்பவான்களை எல்லாம் அனாயசமாக ஒரே போஸ்டரில் தூக்கியடித்திருக்கிறார்.


பொறுத்தார் ஆள்வார்


தோற்றப்பிழை என்பது காணும் காட்சிகளில் மட்டுமில்லை. கேள்விப்படும் செய்திகளிலும் உண்டு. ‘இன்னொசென்ஸ் ஆஃப் முஸ்லிம்’ படம் தொடர்பாக உலகெங்கும் நடக்கும் இஸ்லாமியர்களின் போராட்டம் குறித்த ஊடகச் செய்திகளை வாசிப்பவர்கள், அந்த மதத்தையே மதவெறி கொண்ட வன்முறை கும்பலாக கருதக்கூடிய வாய்ப்புகள் அதிகம். கொஞ்சம் மூளையை கசக்கி யோசித்துப் பார்த்தோமானால் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறுவதற்கு சில மாதங்களுக்கு முன்பாக இஸ்லாமியர்கள் தொடர்ச்சியாக சீண்டப்படுவதை கடந்தகால வரலாறுகளில் இருந்து அறியலாம். ஓட்டு போடும் ஒவ்வொரு அமெரிக்கனையும் உசுப்ப நடத்தப்படும் நாடகங்களில் ஒன்றுதான் இன்னொசென்ஸ் ஆஃப் முஸ்லிம். பனிப்போர் காலங்களில் அமெரிக்க அதிபர் ஹீரோ என்றால், வில்லனாக ரஷ்யா சுட்டிக் காட்டப்படும். சோவியத் கூட்டமைப்பு உடைந்தபிறகு வில்லனே இல்லாததால், அமெரிக்க அதிபரும் ஹீரோ ஆக வாய்ப்பில்லை. எனவே வலிந்து ஒரு வில்லனை உருவாக்கும் முயற்சியாகவே, கிறிஸ்தவ அமெரிக்கா இஸ்லாமியர்களை கட்டம் கட்டிக் கொண்டிருக்கிறது.

மேற்கண்ட படத்தில் காணப்படும் சமாச்சாரம் என்னவென்று நினைக்கிறீர்கள்? நீங்கள் நினைத்தது சரியா என்று சரிபார்க்க படத்தை ரைட்க்ளிக் செய்து,
save image as ஆணை கொடுத்து ஃபைல் நேம் மூலமாக உறுதிப்படுத்திக் கொள்ளவும்.


பெங்களூரில் பெண்கள் அழகாக இருக்கிறார்கள் என்பது பரம்பரை பரம்பரையாக நாம் செவிவழியாகவும், அங்கு போய் பார்த்தவர்கள் கண்வழியாகவும் உணர்ந்த செய்தி. சிலமுறை பெங்களூர் செல்லும் வாய்ப்பு கிடைத்தபோது, பையன்களும் கூட சென்னைப் பையன்களை மாதிரியே சுமாராக இருப்பதாகவே என்னால் கவனிக்க முடிந்தது. ஆனால் கன்னட சினிமா ஹீரோக்கள் மட்டும் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்கிற கேள்விக்கு 360 டிகிரி பரப்பளவில் யோசித்தும் விடை கிடைக்கவில்லை.


இன்று காலை தினகரனில் ஒரு செய்தியை வாசித்ததுமே வசீகரப்பட்டு விட்டேன். வசீகரத்துக்கு காரணம் செய்தியல்ல. படம். ஊட்டியைச் சேர்ந்த நிஷாலி மஞ்சுபாஷினி கின்னஸ் சாதனைக்காக லட்சம் விநாயகர் சிலைகளை சேகரிக்கும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறாராம். இதுவரை நாலாயிரம் சிலைகளை சேகரித்திருக்கும் அவரது சாதனையைப் பாராட்டி தினகரன், கலர் படத்துடன் செய்தி வெளியிட்டிருக்கிறது. என்னைப் போலவே ஏராளமான தமிழ் இயக்குனர்களும் இந்த படத்தை பார்த்திருப்பார்கள். ‘அடுத்த படத்துக்கு ஹீரோயின் ரெடி’ என்று இன்னேரம் ஊட்டிக்கு டிக்கெட்டும் போட்டிருப்பார்கள். போட்டோவைப் பார்த்ததுமே அவசரமாக ‘சைட்’ அடித்தவன், செய்தியை வாசித்து பேஜாராகிப் போனேன். மஞ்சுவின் அப்பா போலிஸ் எஸ்.ஐ.யாம்.


பழையங்குடி ஊராட்சி மன்றத் தலைவர் திரு ஏ.எஸ்.பாண்டியன் அவர்களைப் போலவே தமிழ்நாடு முழுக்க இருக்கும் எல்லா உள்ளாட்சித் தலைவர்களும் நல்லவர்களாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட இனமான குடிவெறியர்கள் மீதுதான் எவ்வளவு கரிசனம் இவருக்கு?


வரும் ஞாயிறன்று பிள்ளையார் சிலைகள் கடலில் கரைக்கப்படும் என்று தெரிகிறது. சென்னையில் இப்போதிருக்கும் அளவுக்கு மதரீதியான பதட்டம் முன்னெப்போதும் இருந்ததாக நினைவில்லை. சாத்வீகமான போலிஸ் கமிஷனர் மாற்றப்பட்டு, அதிரடியான ஆணையாளர் சென்னை மாநகரத்துக்கு நியமிக்கப்பட்டிருக்கிறார். எல்லாம் நல்லபடியாக முடிய விநாயகப் பெருமான்தான் அருள்புரிய வேண்டும்.

15 பிப்ரவரி, 2012

’தாலியக் கட்டு!’ - காதலர்தின எச்சரிக்கை!

ஏதோ ஒரு காதலர் தினத்துக்கு அடுத்தநாள் எழுதியது இது. இனி எல்லா காதலர் தினத்துக்கும் அடுத்தநாள் இதை அப்படியே பதிந்துவிடலாம் போல தெரிகிறது. வாழ்க காதல்!


நேற்று காதலர் தினம் தமிழகத்தில் விமரிசையாக கொண்டாடப்பட வில்லை என்றாலும் ஏதோ பரவாயில்லை என்ற அளவில் கொண்டாடப்பட்டிருக்கிறது. இதுவரை பிகர் கிடைக்காமல் அல்லல்பட்ட கொலைவெறி காதலர்கள் ஏதோ ஒரு தைரியத்தில் நேற்று சூப்பர் பிகர்களை பிரபோஸ் செய்து, அந்த பிகர்களும் பாவப்பட்டு காதலை ஏற்றுக் கொண்டார்கள் என்றெல்லாம் செய்திகள் வெளிவருகிறது.

இவ்வாறாக மக்கள் மகிழ்ச்சியோடு காதலர் தினத்தை கொண்டாடி மகிழ்ந்ததை கண்டு வயிறெரிந்து குழப்பத்தை விளைவித்திருக்கிறார்கள் பொந்துமுன்னணியினர். தங்களை கலாச்சாரக் காவலர்களாக காட்டிக் கொள்ளவும், சாதிமறுப்பு - மதமறுப்பு திருமணங்கள் காதலால் விளைந்து தாங்கள் இதுவரை கட்டிக் காத்த வருணாசிரமக் கோட்டை இடிந்துவிடுமோ என்ற பயத்தில் நூதனப் போராட்டம் என்ற பெயரில் காதலர்களையும், பொதுமக்களையும் துன்புறுத்தியிருக்கிறார்கள்.


கும்பகோணம் பகுதியில் தெருவில் அதுபாட்டுக்கு காதலர் தினத்தை கொண்டாடி அலைந்துகொண்டிருந்த ஜோடி நாய்களை பிடித்துவந்து அந்த நாய்களின் கழுத்தில் பிப்ரவரி-14 காதலர் தினம் என்று போர்டு மாட்டி துன்புறுத்தியிருக்கிறார்கள். இதனால் கும்பகோணம் சுற்றுவட்டாரத்தில் அலைந்துகொண்டிருக்கும் தெருநாய்கள் பொந்துமுன்னணியினரை கண்டாலே கிலி பிடித்து, குலைத்து ஓடுவிடுகின்றன. இச்செய்தியை கேள்விப்பட்டு தமிழ்நாட்டில் இருக்கும் எல்லா தெருநாய்களும் அதிருப்தியடைந்திருப்பதாக தெரியவருகிறது. நாய்களுக்கு கூட தமிழ்நாட்டில் காதல் செய்ய உரிமையில்லையா என்று மக்கள் கொதிப்பில் இருக்கிறார்கள்.

திருச்சி மாவட்டத்தில் காதலர் தினம் கொண்டாடி மகிழ்ந்த காதலர்களை 'தாலி கட்டிக் கொள்ளுங்கள்' என்று கூறி மஞ்சள் கயிறு ஒன்றை கொடுத்து காதலர்களை மறித்து வன்முறை வெறியாட்டம் ஆடித்தீர்த்திருக்கிறார்கள் பொந்துமுன்னணியினர். காதலர் தின சிறப்பு பூஜை செய்யவந்த காதலர்கள் தாலி கட்டிக் கொண்டுதான் கோயிலுக்குள் நுழைய வேண்டும் என்று கூறி கோயில் வாசலில் அராஜகம் செய்திருக்கிறார்கள் இந்த காவாலிகள்.

எங்கே தங்கள் காதலிகளின் கழுத்தில் இவர்களே மஞ்சள் கயிறு கட்டிவிடுவார்களோ என்ற அச்சத்தில் பல காதலர்கள் காதலிகளை கூட்டிக்கொண்டு சிதறிஓடியிருக்கிறார்கள். திருச்சி மலைக்கோட்டை, முக்கொம்பு போன்ற இடங்களுக்கு காதலர்தினத்தை கொண்டாடி மகிழ வந்த ஜோடிகள் இதனால் பாதிக்கப்பட்டதாக தெரிய வருகிறது.


அதுபோலவே காதலர்தின வாழ்த்து அட்டைகளை விற்ற கடைகளை சூறையாடி, வாழ்த்து அட்டைகளையும் கிழித்தெறிந்திருக்கிறார்கள்.

மாறாக பொந்துமுன்னணியினரின் இந்த செயல்கள் கள்ளக்காதலர்களுக்கு வசதியாக அமைந்திருக்கிறது. அடுத்தவன் மனைவியை தள்ளிக் கொண்டு வந்தவன், பொருந்தாக்காதல் செய்தவன் போன்ற காமக்கொடூரன்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு பொந்துமுன்னணியினர் அளித்த மஞ்சக்கயிற்றை தங்கள் ஜோடிகளுக்கு கட்டி தங்கள் இழிச்செயல்களுக்கு அங்கீகாரம் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த இவர்கள் மீது காவல்துறை எந்தமாதிரியான நடவடிக்கைகளை எடுத்தது என்று தெரியவில்லை. காதலர்களுக்கு தனி இடஒதுக்கீடே தரவேண்டும் என்ற ரேஞ்சில் சிந்தனையாளர் ஞாநி போன்றவர்கள் கருத்து தெரிவித்துக் கொண்டிருக்கும் வேளையில் இதுபோன்ற கேலிக்கூத்தான விஷயங்களை நடத்திய பொந்துமுன்னணியினரின் போராட்டங்கள் குறித்து துக்ளக்கின் அட்டைப்படத்தில் கேலிச்சித்திரம் வரையப்படுமா? தலையங்கம் எழுதப்படுமா? என்று பொதுமக்கள் கேட்கிறார்கள்.


நானும் கூட கவர்ச்சி பெருங்கடல் சன்னி லியோனை உயிருக்குயிராக காதலித்து வருகிறேன். பொந்துமுன்னணியினர் என்னை கட்டாயப்படுத்தி சன்னியின் கழுத்தில் மஞ்சக்கயிறு கட்டவைத்துவிடுவார்களோ என்று இன்பமாக பயந்துபோயிருக்கிறேன் :-(

6 ஜனவரி, 2012

தினகரன் வெள்ளி மலர்

எண்பதுகளின் இறுதியும், தொண்ணூறுகளின் தொடக்கமும் கலந்த காலக்கட்டம் வெகுஜன வாசகர்களுக்கு பொற்காலமாக இருந்திருக்க வேண்டும். குமுதம், விகடன் இதழ்கள் முழுவீச்சோடு இயங்கிக் கொண்டிருந்த அக்காலக் கட்டத்தில் புதிய வார இதழ்கள் பலவும், புதுப்புது கான்செப்டுகளில் நல்ல சர்க்குலேஷனோடு சக்கைப்போடு போட்டுக் கொண்டிருந்தது.

எங்கள் வீட்டில் குமுதம்தான் மெயின் பத்திரிகை என்றாலும், வேறு சில பத்திரிகைகளையும் அவ்வப்போது அப்பா வாங்குவார். ‘கலைப்பூங்கா’ மாதிரி முழுமையான சினிமாப் பத்திரிகைகளை அப்போது வாசித்திருக்கிறேன். மாத இதழ் என்றாலும் ஒரு மாதம் ரஜினி ஸ்பெஷல், அடுத்த மாதம் கமல் ஸ்பெஷல் என்று கலக்கல் கட்டுரைகள், துல்லிய தகவல்களோடு நல்ல மிக்ஸிங்கில் எடிட் செய்யப்பட்ட புத்தகம் அது. குறிப்பாக அட்டைப்படம் கண்ணில் ஒத்திக் கொள்ளலாம் போல இருக்கும். அதே காலக்கட்டத்தில் ‘கலைப்பூங்கா’ மாதிரி ஒரு குறைந்தது ஒரு டஜன் சினிமாப் பத்திரிகைகளாவது நல்ல தரத்தோடு வந்துக் கொண்டிருந்ததாக நினைவு.

போகியை ஒட்டி பரணை சுத்தம் செய்யும்போது பழைய ‘பேசும்படம்’, ‘சினிமா எக்ஸ்பிரஸ்’ இதழ்களை காணமுடியும். பெரும்பாலும் அவை எண்பதுகளின் துவக்கத்தில் வந்த இதழ்களாக இருக்கும். அட்டைப்படத்திலேயே ஏதோ வெளிவரவிருக்கும் சினிமாப் படத்தின் விளம்பரம்தான் இடம்பெறும் (முத்து எங்கள் சொத்து என்கிற சொத்தைப்படத்தின் விளம்பரம் இடம்பெற்ற இதழ் இன்னும் நினைவில் மிச்சமிருக்கிறது).

யோசித்துப் பார்த்தால் வெகுஜன சினிமாப் பத்திரிகைகள் தரத்திலும், விற்பனை அடிப்படையிலும் 90களின் துவக்கத்தில் உச்சத்தில் இருந்திருக்கின்றன என்று புரிகிறது. ஆனால் இன்றைய நிலையில் நார்மல் பத்திரிகையே சினிமாப் பத்திரிகை லெவலுக்கு மாறிவிட்டதால், ‘பேசும் படம்’ மாதிரி ஒரு பத்திரிகைக்கு வாய்ப்பில்லையோ என்றும் நினைக்கத் தோன்றும். ‘சினிமா எக்ஸ்பிரஸ்’ வருகிறதுதான். ஆனால் பழைய தரம் இருப்பதாக தோன்றவில்லை. சினிக்கூத்து, வண்ணத்திரையெல்லாம் ’திரைச்சித்ரா’ லெவலுக்கு இறங்கிவிட்டதால் போட்டியில் சேர்த்துக்கொள்ள விருப்பமில்லை. காட்சிப்பிழை, படப்பெட்டி என்று புதியதாக சில மாத இதழ்கள் வரத் தொடங்கியிருக்கின்றன. அவை ‘ஒலக’ சினிமாவைப் பேசுவது என்பதால், தமிழ்நாட்டின் முன்னூத்தி சொச்சத்துக்கும் குறைவான அறிவுஜீவிகளுக்கான இதழ்களாக ஆகிப்போயிருக்கிறது.

என்னைப் போன்ற வெகுஜன சினிமா ரசிகனுக்கு என்று பிரத்யேகமாக சொல்லிக் கொள்ளும்படியாக ஒரு சினிமாப் பத்திரிகை கூட இல்லையென்பது சோகம்தான். முன்பெல்லாம் தினமலர் வாரமலரின் இருபக்க ‘துணுக்கு மூட்டை’ ஓரளவு திருப்திபடுத்தும். இப்போது து.மூ.வும் கச்சடாவாகி விட்டது.

சினிமாக்காரர்களுக்கு ஜால்ரா தட்டாமல் சினிமா குறித்த செய்திகள் மற்றும் அலசலோடு ஏதேனும் பத்திரிகை கிடைக்குமாவென்று தேடிக்கொண்டிருந்தவனுக்கு யதேச்சையாக சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமானது தினகரன் வெள்ளிமலர். நாளிதழோடு வரும் இணைப்புகள் பொதுவாக ’தலையெழுத்தே’ என்று தற்போது வந்துக்கொண்டிருக்க, வெள்ளி மலரில் மட்டும் ஏதோ சிரத்தையாக நடந்து வருவதை அறிய முடிந்தது. கொஞ்சம் கொஞ்சமாக தனக்கான வடிவத்தை தானே உருவாக்கி, இன்று ஒரு முழுமையான சினிமாப் பத்திரிகையாக உருவெடுத்திருக்கிறது வெள்ளி மலர். இதுதான் இப்போது தமிழின் நெ.1 சினிமா பத்திரிகை என்று தயங்காமல் சொல்லலாம். சந்தேகமிருப்பவர்கள் இன்றைய தினகரனை வாங்கி வெள்ளிமலர் வாசித்துப் பார்த்துக் கொள்ளலாம். இன்றைய வெள்ளிமலர் ஒரு பென்ச்மார்க் இஷ்யூ (2011 புத்தாண்டு இதழும் இதேமாதிரி ஒரு கிளாசிக்). வெள்ளிமலர் குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!


வெள்ளிமலரின் சிறப்பு என்னவென்றால் தமிழ் சினிமாவையும் தாண்டி மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி, ஹாலிவுட் சினிமாக்களையும், அங்கு பணியாற்றும் நடிகர்-நடிகைகள் மட்டுமின்றி இயக்குனர்கள் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்களையும் எளிய முறையில் தமிழுக்கு அறிமுகப்படுத்துவதுதான். தொடர்ச்சியாக இதை வாசித்து வருவதால், இன்று கன்னடத்தில் சுதீப்தான் சக்கைப்போடு போடும் ஹீரோ என்று தெரிகிறது. சிரஞ்சீவி குடும்பத்தில் பிரச்சினை, தில்லாலங்கடியை ரீமேக் செய்து சல்மான் நடிப்பது, மம்மூட்டியும் மோகன்லாலும் தொடர்ச்சியாக பல்பு வாங்குவது என்று எல்லா விஷயமுமே அத்துப்படியாகிறது. வெள்ளிமலர் தருவது வெறும் தகவல்களை மட்டுமல்ல. அத்தகவல்களின் பின்னணி, ஃப்ளாஷ்பேக் உள்ளிட்ட விஸ்தாரமான அலசல்களையும் கூட.

வெள்ளி மலரின் ஒரே குறையாக நான் கருதுவது, அதில் வாராவாரம் மூன்று பக்கங்களுக்கு வெளிவரும் ‘மேஷராசி நேயர்களே!’ டைப் ஜோசியம்தான். முழுமையான சினிமாப் பத்திரிகையாக மலர்ந்திருக்கும் மலருக்கு ‘ஜோசியம்’ சற்றும் பொருந்தவில்லை. சன் குழுமத்திலிருந்து அடுத்தடுத்து பக்தி, மகளிர் பத்திரிகைகள் வரவிருப்பதாக தெரிகிறது. வெள்ளி மலரை தனிப் பத்திரிகையாக கொண்டுவந்தால் ‘பேசும்பட’ காலத்திய பொற்காலம் மீண்டும் மலரும்.

21 நவம்பர், 2011

அம்மான்னா சும்மாவா?

பஸ் கட்டணம் உயர்வு என்றதுமே முதலில் மகிழ்ந்தது எங்கள் ரூட்டில் பஸ் ஓட்டிக் கொண்டிருக்கும் கண்டக்டரும், டிரைவரும்தான். இருவருமே புரட்சித்தலைவி கண்ட சின்னமான ரெட்டை எலையை கையில் பச்சையாகக் குத்தியவர்கள்.

“ஆயிரம் ரூபாய்க்கு 23.50தான் பேட்டாவா கொடுக்குறாங்க. இப்போ கட்டணத்தை உயர்த்தியது மூலமா எங்களுக்கெல்லாம் தாயுள்ளம் கொண்ட அம்மா 30 ரூவாயா பேட்டாவை உயர்த்துவாங்க” என்று நாக்கை தொங்கப் போட்டுக்கொண்டு நம்பிக்கை தெரிவித்தார் எங்க ரூட்டு கண்டக்டர்.

ஆயிரக்கணக்கான போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஆவலாக எதிர்ப்பார்த்த ‘பேட்டா உயர்வையும்’ அம்மா அறிவித்திருக்கிறார். இனிமேல் ஆயிரம் ரூபாய் கலெக்‌ஷனுக்கு ரூ.16.50/- ஆக பேட்டாவை உயர்த்தி ஆணையிட்டிருக்கிறார்.

அடுத்து நம் மடியிலும் தங்கத்தாரகை அம்மா கைவைத்து விடுவாரோ என்று அஞ்சிப்போய், அவசர அவசரமாக மாடு மடியை தஞ்சமடைந்திருக்கிறார்கள் பால் உற்பத்தியாளர்கள்.

* * * * * * * * * *

செந்தமிழன் சீமான் என்றொரு சிங்கத்தின் கர்ஜனையில் மே மாதம் வரை நாடு அதிர்ந்துக் கொண்டிருந்தது. மே பதினைந்தாம் தேதி காலையில் இருந்து அவருக்கு தொண்டையில் ‘கிச் கிச்’. இப்போதெல்லாம் கர்ஜிக்க முயற்சித்தாலும் ‘மியாவ் மியாவ்’ என்றுதான் சவுண்டு வருகிறது.

அவருடைய லேட்டஸ்ட் ‘மியாவ் மியாவ்’ மூவர் தூக்குத்தண்டனை தொடர்பானது. புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அமைச்சரவையைக் கூட்டி மூவரின் உயிரையும் காப்பார் என்று ஆக்ரோஷமாக கைகளை உயர்த்தி, கண்கள் சிவசிவக்க வீர உரையாற்றியிருக்கிறார் ‘தள்ளு தள்ளு’ தலைவர்.

அம்மா, இவரை இப்படியே விட்டுவிட்டால் ’ஈழத்துக்கு ராணுவத்தை அனுப்பி ராஜபக்‌ஷேவை கைது செய்வார் புரட்சித்தலைவி’ என்கிற ரேஞ்சுக்கு அள்ளிவிட ஆரம்பித்துவிடுவார்.

இந்த ஆனந்தத் தொல்லையை சமாளிக்க அம்மாவுக்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. உடனடியாக அமைச்சரவையைக் கூட்டி, ஒரு நடிகையை கற்பழித்ததாக இவர் மீது பதியப்பட்டிருக்கும் முதல் தகவல் அறிக்கையை தள்ளுபடி செய்வது மட்டுமே ஒரே வழி.

அப்படி மட்டும் செய்துவிட்டால் ஈழத்தாய்க்கு பிரமோஷன் கொடுத்து, உலகத்தாயாக்கவும் எங்கள் தன்மானச் சிங்கம் சீமான் ரெடியாகவே இருக்கிறார். அம்மா மனசு வைப்பாரா?

* * * * * * * * * *

கங்கை, யமுனை, சரஸ்வதி மாதிரி தமிழகத்துக்கு வற்றாத ஜீவநதி ஒன்று இல்லையே என்று புரட்சித்தலைவி அம்மா 91-96 காலத்திலேயே சிந்தித்திருக்கிறார். இடையில் தீயசக்தி ஆட்சி வந்ததையடுத்து ஜீவநதியை உருவாக்கும் திட்டம் தள்ளிப்போய் 2001 ஆட்சிக்காலத்தில் நடைமுறைக்கு வந்தது. டாஸ்மாக் எனும் அந்த ஜீவநதி மட்டும் இல்லையேல் 2006 தீயசக்தி ஆட்சியே நடந்திருக்காது. திவால் ஆகியிருக்கும்.

மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கும் அம்மா, அந்த ஜீவநதியை மேலும் புனிதமாக்கும் முயற்சிகளின் முனைப்பாக இருக்கிறார். தமிழகத்தில் உயர்த்தர குடிமக்களை உருவாக்கும் பொருட்டு ‘எலைட் ஷாப்’புகளை ஏற்படுத்தப் போகிறாராம். குடிவெறியர்கள் சாதாரண சப்பைப் பார்களிலேயே காட்டு, காட்டு என காட்டுவார்கள். எலைட் பார்கள் வந்துவிட்டால் ஒட்டுமொத்தமாக உருவி காட்டிவிடுவார்களோ என்று கிளுகிளுப்படைந்துப் போயிருக்கிறது தமிழகம்.

* * * * * * * * * *

தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதை மட்டுமே ஒரே லட்சியமாக இதுவரை கொண்டிருந்த புரட்சித்தலைவி அம்மாவின் கருணைப்பார்வை மகாராஷ்டிரம் மீதும் திரும்பியிருக்கிறது. இனி மகாராஷ்டிரமும் இந்தியாவின் முதல் மாநிலம் ஆகும்.

கடந்த மாதம் சோ.அய்யர் அவர்களது டைரக்‌ஷனில் மிகச்சிறப்பாக படமாக்கப்பட்டு வெளியான உள்ளாட்சித் தேர்தல் திரைப்படத்தின் மராத்திய ரீமேக், அடுத்த மாதம் மகாராஷ்டிராவில் வெளியாகிறதாம்.

எனவே அம்மாநிலத்தின் பர்பானி மாவட்டம், ஜிந்தூர் நகராட்சியில் இருக்கும் இருபத்தோரு வார்டுகளையும் கைப்பற்ற அம்மா ஓ.பி.எஸ். வகையறாக்களுக்கு ஆணையிட்டிருக்கிறார்.

ரபாட்பேகம் காதிர், முன்னிஷா பெரோஜ்கான், பிட்டு அப்பாசமி, முனாப், சைதை எஸ்.டயாப், காட்டூன் ஷாகிப்கான், யாசின் கரீம், விக்ரம் தேஷ்முக் உள்ளிட்ட 21 வேட்பாளர்கள் இரட்டை இலைச் சின்னத்தில் களம் காணப்போகும் சிறுத்தைகள். இவர்களில் பெரும்பாலானோர் தமிழகத்தில் போனமாசம் வரைக்கும் சேட்டுக்கடை வைத்துக் கொண்டிருந்தவர்கள் என்று ரத்தத்தின் ரத்தம் ஒருவர் நம் காதில் கிசுகிசுக்கிறார்.

இரட்டை இலை அங்கே வென்றதும் பால், பஸ் கட்டணம், மின்சாரம் ஆகியவை மகாராஷ்டிராவிலும் உயர்த்தப்பட்டு விடுமோ என அங்கிருக்கும் மக்கள் பேதியடைந்திருக்கிறார்கள்.

* * * * * * * * * *

எத்தனை முறை எட்டி உதைத்தாலும், போயஸ் கார்டனுக்கு சென்று பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை புரட்சித்தலைவின் பொற்பாதங்களை கழுவிவிட்டு வரும் தமிழக இடதுசாரிகள் தற்போது கடுமையான குழப்பத்தில் இருப்பதாக தெரிகிறது.

சட்டமன்றத் தேர்தல் முடிந்ததுமே, அம்மா அவருடைய வழக்கமான பாணியில் உதைத்துத் தள்ளிவிட, கடைசியாக கேடுகெட்டுப்போய் கோயம்பேடு டாஸ்மாக்குக்கு போய் கூட்டணி பேசி மார்க்ஸ், லெனின், மாவோவின் பெயரையும் கெடுத்தாயிற்று. உள்ளாட்சியில் ‘பல்பு’ வாங்கியதற்குப் பிறகு டாஸ்மாக் தலைவரும் கூட மதிப்பதில்லை.

வேறு போக்கிடமின்றி தவிக்கும் இடதுசாரிகள் மீண்டும் தா.பா. தலைமையில் செந்தமிழன் தள்ளு தள்ளு, இனமான நெடுமாறன் பாணியில் அம்மாவுக்கே தீச்சட்டி தூக்கினாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை.

தமிழக இடதுசாரிகளின் அவலநிலைக்கு சற்றும் சளைத்ததல்ல தமிழக ஊடகங்களின் நிலையும்.

பின்னே, அம்மான்னா சும்மாவா?

7 நவம்பர், 2011

கமல்ஹாசன் - சில சாதனைகள், சில தகவல்கள்!

• நான்கு முறை தேசிய விருதும், மூன்று முறை சர்வதேச விருதும் பெற்ற ஒரே இந்திய நடிகர். களத்தூர் கண்ணம்மா, மூன்றாம் பிறை, நாயகன், இந்தியன் படங்களுக்காக தேசிய விருது பெற்றார்.- விருமாண்டி, சுவாதி முத்யம், சாகர சங்கமம் படங்களுக்கு சவுத் ஏசியன் இண்டர்நேஷனல் விருதுகள் சிறந்த படத்திற்கான விருதுகள் தரப்பட்டது.

• இதுவரை இந்திய நடிகர்களிலேயே இவர் நடித்த படங்கள் தான் அதிக முறை (7 முறை) ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப் பட்டிருக்கிறது.- இந்திய சினிமா வரலாற்றிலேயே 18 முறை பிலிம்பேர் விருது பெற்ற ஒரே நடிகர். திலீப் குமாரே 14 பிலிம்பேர் விருதுகள் தான் வாங்கியிருக்கிறார்.

• இதுவரை உலகிலேயே அதிக விருதுகள் (170க்கும் அதிகம்) பெற்ற ஒரே நடிகர் கமல்ஹாசன் மட்டுமே.

• கமல்ஹாசன் இந்தியாவில் குடிமகன்களுக்கு வழங்கப்படும் விருதுகளிலேயே 4வது சிறந்த விருதான பத்மஸ்ரீ பெற்றிருக்கிறார்.

• கமல்ஹாசனுக்கு அவர் செய்யும் கலைசேவைகளுக்காக சத்யபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தால் "டாக்டர்" பட்டம் கையளிக்கப் பட்டது.

• கமல்ஹாசனின் சொந்தப் பட நிறுவனமான ராஜ்கமல் நிறுவனம் இதுவரை 450 மில்லியனுக்கும் மேற்பட்ட வர்த்தகம் செய்திருக்கிறது.

• கமல்ஹாசனின் கனவுப்படைப்பான மருதநாயகம் இங்கிலாந்து மகாரானி எலிஸபெத்-2 அவர்களால் துவக்கப்பட்டது.

• உலகிலேயே ரசிகர் மன்றங்களை மக்களுக்கு சேவை செய்யும் நற்பணி மன்றங்களாக மாற்றிய முதல் நடிகர் கமல்ஹாசன்.

• கமல்ஹாசன் மற்றும் அவரது நற்பணி இயக்கத்தினர் இதுவரை 10000 ஜோடி கண்களை தானம் செய்திருக்கிறார்கள். 10000 கிலோ அரிசியை மக்களுக்கு வழங்கியிருக்கிறார்கள்.

• 100 கோடி ரூபாய் தருகிறோம் என ஒரு அரசியல் கட்சி அழைத்தும் அதை துச்சமாக மதித்தவர் கமல்ஹாசன்.

• இரண்டுமுறை ஆந்திர அரசின் மாநில விருதைப் பெற்றவர் டாக்டர் கமல்ஹாசன்.

• 8 முறை தமிழக அரசின் மாநில விருதைப் பெற்று மாபெரும் சாதனை புரிந்தவர் கமல்ஹாசன்.

• கமல்ஹாசனுக்கு தமிழக அரசு கலைமாமணி பட்டமும் வழங்கி கவுரவித்திருக்கிறது.

• கமல்ஹாசனுக்கு மற்ற கலையுலக வித்தகர்களால் வழங்கப்பட்ட பட்டங்கள் "காதல் இளவரசன்" - ஜெமினி கணேசன், "புரட்சி மன்னன்" - கே. பாலச்சந்தர், "சூப்பர் ஆக்டர்" - பஞ்சு அருணாசலம், "கலைஞானி" - டாக்டர் கலைஞர், "உலக நாயகன்" - கே.எஸ். ரவிக்குமார்.

• The Fuel Instrument Engineers (FIE) Foundation, (Ichalkaranji, Maharashtra ) எனும் அமைப்பு நம் காலத்தில் வாழும் சிறந்த இந்தியர் எனும் விருதை கமல்ஹாசனுக்கு வழங்கி இருக்கிறது. இதுவரை இந்த விருதைப் பெற்றவர்கள் 5 பேர் மட்டுமே (டாடா உட்பட)

• சென்னை ரோட்டரி சங்கமும் கமல்ஹாசனுக்கு "சிறந்த மனிதர்" விருது வழங்கி சிறப்பித்துள்ளது.

• டாக்டர் ஏ.டி. கோவூர் தேசிய விருது சிறந்த மனிதாபிமானம் மற்றும் சமூகசேவைகளுக்காக கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டது. இந்த விருதினை வழங்கியவர்கள் Bharatheeya Yukthivadi Sangham (Rationalist Association of India ).

• மதுரையில் திரைப்படத் துவக்க விழா செய்த ஒரே நடிகர் கமல்ஹாசன் மட்டுமே. விருமாண்டிப் படத்துக்கான துவக்க விழா மதுரையில் நடைபெற்றது.

• கமல்ஹாசனுடன் இன்டெல் நிறுவனம் இணைந்து இந்தியாவில் டிஜிட்டல் எண்டெர்டெயிண்ட்மெண்டை அறிமுகப்படுத்த பணியாற்றி வருகிறது. அந்த நிறுவனம் இந்தியாவில் கமல்ஹாசன் ஒருவருடன் மட்டுமே இதுபோல ஒரு பார்ட்னர்ஷிப் வைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

• ஒரே ஆண்டில் 5 சில்வர்ஜூப்ளி திரைப்படங்களை அளித்தவர் கமல்ஹாசன் மட்டுமே. எந்த ஒரு நடிகராலும் இந்த சாதனையைக் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது. அந்தப் படங்கள் : 1982 - ஜன. 26 - வாழ்வே மாயம் (200 நாள்), பிப். 19 - மூன்றாம் பிறை (329 நாள்), மே 15 - சனம் தேரி கஸம் (175 நாள்), ஆக. 14 - சகலகலா வல்லவன் (175 நாள்), அக். 29 - ஹே தோ கமல் ஹோகயா (175 நாள்)

• கமல்ஹாசன் நடித்த மரோசரித்திரா பெங்களூரின் கவிதா தியேட்டரில் 1000 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. இதே படம் சென்னை சபையர் திரையரங்கில் 600 நாள் ஓடியது. மரோசரித்திரா இந்தியில் "ஏக் துஜே கலியே" என்ற பெயரில் எடுக்கப்பட்டு அங்கும் 350 நாள் ஓடியது.

• அகில இந்திய ரசிகர் மன்ற மாநாட்டினை இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரு நடிகர் நடத்தியது என்றால் அந்தப் பெருமை கமல்ஹாசனையே சாரும். இவர் 1985ல் கோவையில் இந்த மாநாட்டினை நடத்தினார்.

• கமலுக்கு தனது பிறந்தநாளான நவம்பர் 7ஐ கொண்டாடுவதில் ஒரு சங்கடம் உண்டு. ஏனெனில் இதே தேதியில்தான் அவரது தந்தையார் மறைந்தார்.

• இவரது நூறாவது படமான ராஜபார்வையில் நடிக்கும்போது இவரது வயது 27.

• டைம்ஸ் பத்திரிகை இவர் நடித்த நாயகன் திரைப்படத்தை உலகின் சிறந்த 100 படங்களுக்குள் வகைப்படுத்தியிருக்கிறது.

• உடல்தானம் செய்த முதல் நடிகர் டாக்டர் கமல்ஹாசன் தான். சென்னை மருத்துவக்கல்லூரியில் ஆகஸ்டு 15, 2002 அன்று இதைச் செய்தார்.

• இந்தியத் திரைப்படங்களிலேயே முதன்முறையாக அனிமேஷன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது கமல்ஹாசனின் 100வது படமான ராஜபார்வையில் தான்.

• தமிழில் மார்பிங் தொழில்நுட்பம் முதன்முறையாக பயன்படுத்தப்பட்டது கமல்ஹாசன் நடித்த மைக்கேல் மதன காமராஜனில் தான்.

• ஹாலிவுட்டில் இருந்து மேக்கப் மேன் வரவழைத்து மேக்கப் போடப்பட்ட முதல் இந்தியப்படம் "இந்தியன்"

• கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் முதன்முதலாக ஒரு இந்தியத் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டது என்றால் அது கமல்ஹாசன் நடித்த மங்கம்மா சபதம் திரைப்படத்தில் தான்.

• ஹாலிவுட் படமொன்றில் மேக்கப் அசிஸ்டண்டாகப் பணிபுரிந்து அந்தப் படத்தின் டைட்டிலிலும் கமல்ஹாசனின் பெயர் வந்திருக்கிறது.

• சென்னையில் முதன்முதலாக ஆயிரம் காட்சிகள் தொடர்ந்து அரங்குநிறைந்து ஓடிய படம் சகலகலா வல்லவன்.

• கொடைக்கானலில் இருக்கும் ஒரு குகையை கண்டுபிடித்து அதில் குணா படத்தின் படப்பிடிப்பை நடத்தியதால் அந்த குகைக்கே "குணா குகை" என்று பெயரிடப்பட்டிருக்கிறது.

• கமல்ஹாசனுக்கு இதுவரை 34 முறை படப்பிடிப்புகளில் எலும்புமுறிவு ஏற்பட்டிருக்கிறது. டூப் போட்டு கும்மி அடிக்கும் மற்ற நடிகர்களில் வித்தியாசமானவர் நம் கமல்.

• தமிழ் திரையுலக சகாப்தங்களான எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி மூன்று பேருடனும் நடித்தவர் கமல்ஹாசன்.

18 அக்டோபர், 2011

உங்கள் வலைப்பூவை பிரபலப்படுத்த...


நான் பிரபல பதிவராக(?) இருந்த காலத்தில் இந்த டிப்ஸ்களை எழுதினேன். இப்போதைய மாடர்ன் டேமில் பிலாக்கிங்குக்கு இவையெல்லாம் உதவுமா என்று தெரியவில்லை. ஒருவேளை ட்ரெண்ட் மாறியிருக்கலாம். ஆனால் அந்தக் காலத்து வலைப்பதிவு பெருசுகள் அவ்வப்போது இந்த டிப்ஸ்களை என்னிடம் இப்போதும் நினைவு கூர்வதுண்டு... ஒருவேளை நீங்கள் இதையெல்லாம் ஃபாலோ செய்து, எதிர்பாராவிதமாக ‘லத்திகா’ மாதிரி உங்கள் பிலாக் ஹிட் அடித்தாலும் அடிக்கலாம்.

ஓக்கே, கமிங் டூ த பாயிண்ட் :

டைரக்ட் மார்க்கெட்டிங் :

தமிழ்மணத்தில் எந்தப் பதிவை பார்த்தாலும் சிரமம் பார்க்காமல் நுழைந்து விடுங்கள். பதிவை முழுவதாக படிக்க வேண்டுமென்ற அவசியமில்லை. லைட்டாக ஒரு லுக் விட்டு அப்பதிவில் முத்தாய்ப்பாக இருக்கும் ஏதோ ஒரு கருமத்தை Quote செய்து “அருமையாக சொன்னீர்கள். நல்ல பதிவு. வாழ்த்துக்கள்!” என்றொரு பின்னூட்டத்தை போட்டு விட்டு வந்துவிடுங்கள். நம்முடைய பதிவையும் எவனோ ஒரு கம்முனாட்டி பாராட்டிவிட்டானே என்று மெய்சிலிர்த்து சம்பந்தப்பட்ட பதிவர் உங்களது Blogger Profile மூலமாக உங்கள் பதிவுக்கு வந்து பதில் மொய் வைக்கக்கூடிய வாய்ப்பிருக்கிறது. தமிழ் மணத்தின் “ம திரட்டி” மொத்தத்தையும் உங்களது “அருமையாக சொன்னீர்கள்” என ஆரம்பிக்கும் பின்னூட்டத்தின் மூலமாக ரொப்பினீர்கள் என்றால் இன்ஸ்டண்ட் பலன் நிச்சயம் உண்டு.


டெலி-மார்க்கெட்டிங் :

சில கோயிந்து பதிவர்கள் தங்களது டெம்ப்ளேட்டில் கொடூரமான தங்கள் முகத்தை போட்டு கீழே போன் நம்பரையும் கொடுத்து “நிறைய பேசலாம், வாருங்கள்” என்று போட்டிருப்பார்கள். சும்மா டைம் பாஸுக்கு அவர்களுக்கு போன் செய்து, “உங்க பதிவுகளையெல்லாம் தொடர்ந்து படிக்கிறேன். ரொம்ப நல்லா எழுதறீங்க. உங்க சிந்தனைகளோடு ஒத்த சிந்தனை கொண்டவன் நான் என்று ஆரம்பியுங்கள். கொஞ்சம் அழுத்தமாகவே உங்கள் வலைப்பூவின் முகவரியையும் சொல்லிவிடுங்கள். உங்களது டெம்ப்ளேட்டிலும் உங்கள் போன் நம்பரை பிரசுரித்தால் எவனாவது வேலையத்தவன் போன் செய்து பேசுவான். இவ்வாறாக உங்கள் வலைப்பூவை தொலைபேசி வாயிலாகவும் மற்றவன் தலையில் கட்டமுடியும்.


அட்வெர்டைஸிங் :


ஒரு பதிவை போட்டுவிட்டு பின்னூட்டங்கள் வராமல் தேவுடு காத்திருப்பதை விட அனானிமஸாக நீங்களே உங்களை பாராட்டி ஒன்று, ரெண்டு பின்னூட்டங்களை போட்டுக் கொள்ளுங்கள். இந்த பின்னூட்டக்கயமை மூலமாக தமிழ்மணத்தின் முகப்பில் எப்போதும் நின்று கொண்டிருக்கலாம். ஏதோ பின்னூட்டம் வந்திருக்கிறதே, விஷயம் இருக்கிற பதிவு தான் போலிருக்கு என்று சில அப்பாவிகள் வந்து மிக சுலபமாக தூண்டிலில் மாட்டிவிடக்கூடும். அப்படியும் வேலைக்கு ஆகவில்லையென்றால் சம்பந்தப்பட்ட பதிவின் லிங்கை காப்பி செய்துகொண்டு, தமிழ்மணத்தில் வந்திருக்கும் எல்லாப் பதிவுகளுக்கு போய் “நல்ல பதிவு” என்று சொல்லிவிட்டு லிங்கை நைசாக சொருகிவிட்டு வந்துவிடுங்கள். டோண்டு சார் போன்றவர்களுக்கு இதுபோன்ற பின்னூட்டங்களை போட்டால் நல்ல பலன் கிடைக்கும்.


மக்கள் தொடர்பு :


ஒரே ஒரு ஐடி மட்டுமே வைத்துக் கொண்டிருந்தால் வலையுலகில் நாக்கு வழித்துக் கொண்டு உட்கார்ந்திருக்க வேண்டியது தான். குறைந்தது பத்து ஐடிக்களாவது ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு ஐடியில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து சூடான ஒரு பதிவு போடுங்கள். இன்னொரு ஐடியில் அதே பதிவை கடுமையாக தாக்கி முதலாளித்துவம் பேசுங்கள். இரண்டு ஐடியிலும் மாறி மாறி சண்டைப் போட்டுக் கொண்டால் மற்ற பதிவர்கள் இடையே ஒரு சலசலப்பு ஏற்படும். ”என்ன பிரச்சினை?” என்று பிரச்சினைகளுக்கு ஆளாய் பறக்கும் மொக்கை மற்றும் கும்மிப் பதிவர்கள் உங்களை சூழ்ந்து கொள்வார்கள். ஆளாளுக்கு அவரவர் சர்க்கிளில் உங்கள் ஐடிக்களை பிரபலப்படுத்துவார்கள். வலையுலகில் மிகப்பிரபலமாக இருக்கும் ‘லக்கிலுக்' மற்றும் ‘இலைக்காரன்' ஐடிக்கள் இப்படித்தான் பிரபலமடைந்ததாக வாத்ஸ்யாயனர் தன்னுடைய காமசூத்ரா புத்தகத்தில் எழுதியிருக்கிறாராம்.


ஈவண்ட்ஸ் மேனேஜ்மெண்ட் :

பொழப்பத்தவர்கள் சிலர் அவ்வப்போது போண்டாவோ, பஜ்ஜியோ வாங்கிக் கொடுத்து பதிவர் சந்திப்புகள் நடத்துவது வழக்கம். அதுபோலவே சில நாட்களாக சோறு போட்டு பதிவர் பட்டறையும் நடத்துகிறார்கள். இதுபோன்ற ஈவெண்ட்ஸ்களில் தவறாமல் கலந்துகொண்டால் அந்நிகழ்ச்சிகள் குறித்து சிலாகித்து போடப்படும் எல்லாப் பதிவுகளிலும் உங்கள் பெயர் கண்டிப்பாக இடம்பெறும். யாருக்கு தெரியும்? நாளைக்கே இதன்மூலமாக நீங்கள் சன்நியூஸிலும், ஆனந்தவிகடனிலும் கூட பேட்டி தர வாய்ப்பிருக்கிறது.


பிராண்டிங் :

இதை 'பிறாண்டிங்' என்று படிக்கவேண்டாம், Branding என்று படியுங்கள். படிக்கும் எல்லாப் பதிவர்களுக்கும் ”நல்ல பதிவு, சூப்பர்” என்று சொம்படித்துக் கொண்டிருந்தால் ‘நடுநிலை பதிவர்' என்ற பிராண்டிங் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும். அவ்வாறில்லாமல் டோண்டு சாரையோ, இட்லிவடையையோ எதிர்த்து ஒரு பதிவு போட்டாலோ அல்லது பின்னூட்டம் போட்டாலோ “பார்ப்பனீய எதிர்ப்பாளர்” என்ற பிராண்டிங் கிடைக்கும். அதுவும் வேண்டாமா? ‘கலைஞர் கருணாநிதி' வலைப்பூவுக்கு போய் கலைஞரை திட்டி ஒரு சின்ன பின்னூட்டம் போடுங்கள். உடனடியாக ‘பார்ப்பன அடிவருடி' பிராண்டிங் கிடைக்கும். இது எதுவுமே வேண்டாமென்றால் உங்கள் பதிவுகளில் நல்ல பிள்ளையாக ‘நான் பார்த்த முதல் படம்', ‘நான் சைட்டு அடித்த பிகர்', ‘நானும் பினாத்தல் சுரேஷும்' என்று பதிவு போட்டுக் கொண்டிருங்கள். சிறந்த மொக்கை மற்றும் கும்மிப் பதிவராக பிராண்டிங் செய்யப்படுவீர்கள்.

அப்படியில்லையேல் ஒம்மா, த்தா, யோனி போன்ற வார்த்தைகளை பின்னூட்டங்களிலும், பதிவுகளிலும் ஆங்காங்கே அள்ளித் தெளியுங்கள். உயிர்மை, கவிதாச்சரண், காலச்சுவடு ரேஞ்சு புத்தகங்களில் வரும் கட்டுரைகளில் சில பத்திகளை மனப்பாடம் செய்து வார்த்தைகளை ஆங்காங்கே மாற்றிப் போட்டு எல்லா இடத்திலும் கும்மியடியுங்கள். ‘பின்நவீனத்துவ' பிராண்டிங் நிச்சயம் கிடைக்கும்.


கஸ்டமர் Feedback :


உங்கள் பதிவுகள் சூப்பராக இருந்தாலும் சரி, மொக்கையாக இருந்தாலும் சரி. வந்து பின்னூட்டம் போட்டு உங்களை போற்றி புகழ்ந்து கொண்டிருக்க எத்தனை பேருக்கு நேரம் இருக்கப் போகிறது. ஆகையால் தன் கையே தனக்குதவி என்ற அடிப்படையிலும், நமக்கு நாமே திட்டத்திலுமாக சேர்ந்து வெவ்வேறு பெயர்களில் நீங்களே உங்கள் பதிவுகளுக்கு பின்னூட்டம் போட்டுக் கொள்ளுங்கள். பத்து பின்னூட்டங்கள் நல்ல பதிவு என்ற ரேஞ்சிலும் இடையிடையே ஒன்றிரண்டு மோசமான பதிவு, தட்டையான சிந்தனை என்றும் மாற்றி மாற்றி போட்டுக் கொள்ளுங்கள். உங்களுடைய ஒவ்வொரு பதிவுக்கும் இருபதுக்கும் மேற்பட்ட கமெண்டுகள் வருவதாக காட்டிக் கொண்டால் வலையுலகில் கொஞ்சம் கெத்தாக வலம் வரமுடியும்.

ஓக்கே, ரொம்ப போரடிக்குது இல்லே. Bye for now.

27 செப்டம்பர், 2011

மொக்கை ஃப்லிம் க்ளப்

2007 இறுதியா அல்லது 2008 ஆரம்பமா என்று சரியாக நினைவில்லை. மொக்கைப் படங்களின் படுதீவிர ரசிகர்களான நானும், தோழர் கிங் விஸ்வாவும் திடீரென அறச்சீற்றம் கொண்டோம். உப்புமா படங்களை மக்கள் தியேட்டர்களுக்குச் சென்று பார்ப்பதில்லை. திருட்டு டிவிடியிலோ அல்லது டிவியிலோ பார்த்துத் தொலைத்து விடுகிறார்கள். மொக்கைப்பட தயாரிப்பாளர்களின் வீட்டு கேஸ் ஸ்டவ்வில் பூனைகள்தான் தூங்குகிறது. ஏதாவது செய்யணும் பாஸூ.

இந்த சீரிய சிந்தனையின் விளைவாகதான் தொடங்கப்பட்டது மொக்கை ஃப்லிம் க்ளப். எத்தகைய மரண மொக்கைப் படமாக இருந்தாலும் சரி. முதல் நாளே தியேட்டருக்குச் சென்று, சூப்பர் ஸ்டார் படங்களுக்கான ஆரவாரத்தோடு ரசிப்பது என்பதை எங்கள் கொள்கையாக வரையறுத்தோம். தமிழ் மட்டுமின்றி ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என்று மொழிபாகுபாடின்றி மொக்கைப்படங்களை ஆதரிப்பது என்பதாக சபதமும் மேற்கொண்டோம். குறிப்பாக தோழர் கிங்விஸ்வா தெலுங்கு மொக்கைப்படங்களின் தீவிர வெறியர். பிரின்ஸ் மகேஷ்பாபுவின் ஒக்கடு ரிலீஸ் ஆனபோது அவரது ஈமெயில் ஐடி பிரின்ஸ்விஸ்வா@ஜிமெயில்.காம் ஆக இருந்தது. நாகார்ஜூனாவின் ‘கிங்’ ரிலீஸின் போது கிங்விஸ்வா@ஜிமெயில்.காம் ஆக உருமாறியது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். மரணமொக்கைப் படங்களாக தேர்ந்தெடுத்து, கண்டுகளித்து வலைப்பூவில் விமர்சனம் எழுதி, மற்றவர்கள் தாலியறுப்பது எங்கள் திட்டம்.

உன்னத நோக்கத்தோடு தொடங்கப் பெற்றாலும், ஆரம்பத்தில் க்ளப் ரொம்ப மொக்கையாகவே செயல்பட்டது. ஆளே இல்லாத தியேட்டர்களுக்கு போய் எக் பஃப்ஸ் சாப்பிட்டோம். பிற்பாடு தோழர் அதிஷாவும் எங்கள் க்ளப்பில் இணைந்தபிறகு சூடு பிடிக்க ஆரம்பித்தது. உட்லண்ட்ஸ், காசினோ, மோட்சம், பைலட், கிருஷ்ணவேனி, அண்ணா, கே.கே.நகர் விஜயா போன்ற ரெண்டுங்கெட்டான் தியேட்டர்கள்தான் எங்களுக்கு வேடந்தாங்கல். மொக்கைப் படங்கள் என்று தேர்ந்தெடுத்துப் பார்க்கும் சிரமத்தை எங்களுக்கு தராமல், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் தயாரிக்கும் எல்லாப் படங்களுமே மொக்கையாக அமைந்துவிட்ட காரணத்தால், தேர்ந்தெடுக்கும் பணி சுளுவானது. இன்றுவரை நாங்கள் பார்த்த படங்களிலேயே சிறந்த மொக்கைப் படமாக ‘பொக்கிஷம்’ விளங்குகிறது (கருமாந்திரத்தை பிளாக்கில் டிக்கெட் வாங்கிப் பார்த்தோம் என்பது குறிப்பிடத்தக்கது).

அதற்குப் பிறகு எங்களது வட்டம் விரிவடைந்தது. கவிஞர் தா.பி. அவராகவே கழுத்தில் மாலை போட்டுக்கொண்டு வந்து சேர்ந்தார். அதிர்ஷ்டவசமாக அவர் வந்தபிறகு தொடர்ச்சியாக நாங்கள் பார்த்த படங்கள் அனைத்துமே ‘சன்பிக்சர்ஸ் கலாநிதிமாறன் பெருமையுடன் வழங்கும்’ படங்கள் என்பதால் மொக்கை சூடு பிடித்தது. சன்பிக்ஸர்ஸின் படங்கள் அவரது கவிதைகளைவிட மொக்கைகளாக அமைந்ததை கவிஞரால் ஏற்றுக்கொள்ளவே இயலவில்லை. இதனால் வெள்ளிக்கிழமை தோறும், நாங்கள் போன் செய்து கூப்பிடும்போது கவிஞருக்கு டைபாய்டும் வந்து தொலைத்தது. கோயமுத்தூரிலிருந்து புளிச்சோற்றை மூட்டை கட்டிக்கொண்டு டாக்டர் அ.கொ.தீ.க.வும் சென்னைக்கு வந்து, அவ்வப்போது மொக்கைப்பட ஜோதியில் கலந்துகொண்டார். பைலட் தியேட்டருக்கு அழைத்துப்போய் ஹாலிவுட் தமிழ் டப்பிங் மொக்கைகளை ரெண்டு பீஸு சாம்பிள் காட்டியதிலிருந்து, அலுவலகரீதியாக கூட இப்போதெல்லாம் டாக்டர் சென்னைக்கு வருவதில்லை.

சமீபத்தில் ஆறு மாத காலத்துக்கு முன்பாக நம் க்ளப்பில் இணைந்தார் சூப்பர் ஸ்டார் தியேட்டர் டைம்ஸ். இயல்பாகவே இவரிடம் மொக்கைத்தன்மை கைகூடி இருந்ததால், எங்கள் க்ளப்பின் அசைக்க முடியாத ஆணிவேராக அமைந்தார். தமிழ்ப்படம் பார்ப்பதாக இருந்தாலும் கூட இவருக்கு சப்-டைட்டில் அவசியம். தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், ஸ்பானிஷ், பிரெஞ்சு, மாண்டரீன் என்று எந்த மொழியுமே இவருக்குப் புரியாது என்பதுதான் இவருடைய ஸ்பெஷாலிட்டி. படுசோகமான காட்சிகளில் விழுந்து விழுந்து சிரிப்பதும், வயிற்றைப் பதம் பார்க்கும் காமெடிக் காட்சிகளை உருகிப் போய்ப் பார்ப்பதுமாக இவரது ரசனையே அலாதியானது.

எங்கள் டீமுக்கு லேட்டஸ்ட் வரவு நரேன். அல்பசினோ, ராபர்ட் டீநீரோ, டிண்டோ ப்ராஸ் என்று ஆங்கிலமாய் அலட்டிக் கொண்டிருந்தவரை, “வாய்யா முனி பார்க்கலாம்” என்று உட்லண்ட்ஸுக்கு தள்ளிக்கொண்டு போனோம். இப்போது ‘மங்காத்தா ஈஸ் த பெஸ்ட் மூவி இன் த வேர்ல்டு. ஒய் ஐ சே திஸ்...’ என்று பெசண்ட் நகர் பரிஸ்டாவில், பீட்டர்களோடு பீலா விட்டுக் கொண்டிருக்கிறார்.

மொக்கை ஃப்லிம் க்ளப்புக்கு இதுவரை பொருளாதாரரீதியான பிரச்சினைகள் ஏதும் வந்து தொலைக்கவில்லை. ஏனெனில் ஒன்று முதல் பத்து தேதிகளுக்குள் 50 ரூபாய் டிக்கெட், பத்து முதல் இருபது தேதிகளுக்குள் 30 ரூபாய் டிக்கெட், இருபது முதல் முப்பது தேதிக்குள்ளாக இருந்தால் 10 ரூபாய் டிக்கெட் என்று பக்காவாக பட்ஜெட் போட்டு படம் பார்க்கிறோம்.

க்ளப்பில் சேர விரும்பும் திரைப்பட ஆர்வலர்கள் திறந்தமனதோடு வரவேற்கப்படுகிறார்கள். ஒரே ஒரு கண்டிஷன். இந்த க்ளப்பின் உறுப்பினர் கடுமையான மொக்கைச்சாமி என்பதற்கான போதுமான சான்றிதழ்களும், சம்பவங்களும், தரவுகளும் அவசியம்.

எங்கள் மொக்கை ஃப்லிம் க்ளப் சோர்வில்லாமல் இயங்கிவருவதற்காக, மிகச்சரியான இடைவெளிகளில் குருவி, வில்லு, வேட்டைக்காரன், காவலன் என்று மொக்கைப்படங்களாக நடித்துத் தள்ளுபவரும், எங்களை வாழவைக்கும் தெய்வமுமான டாக்டர் அணிலுக்கு கோடானுகோடி நமஸ்காரங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

லேட்டஸ்ட் மொக்கை டிப்ஸ் : மொக்கைப் படங்களுக்கு சிகரமாய் லேட்டஸ்டாக வெளிவந்திருக்கும் ஹாலிவுட் தமிழ் டப்பிங் திரைப்படம் ஏலியன்ஸ் விஸ் அவதார். இப்படத்தைக் காணநேரும் மொக்கைரசிகர்களுக்கு நெஞ்சிலிருந்து (ஸ்பெல்லிங் மிஸ்டேக்) ரத்தம் வழிவது நிச்சயம். படம் பார்க்கும்போது கையில் பஞ்சும் அவசியம். எனவே, காணத்தவறாதீர்கள்!

13 செப்டம்பர், 2011

இரண்டு முக்கியச் செய்திகள்

இன்று வாசிக்க கிடைத்த இரண்டு முக்கியச் செய்திகள் :

உலகின் மொத்த அழகிகளும் பிரேஸிலில் குவிந்திருந்தார்கள். இவர்களில் யார் பிரபஞ்ச அழகி என்ற முடிவு இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்துவிடும். அவர்களில் ஒருவர் கொலம்பிய நாட்டைச் சேர்ந்த 22 வயது அழகியான கேத்தலினா ரொபாயோ. 33.5-24-36.5 அளவு கொண்டவர். ஐந்தடி ஒன்பது அங்குலம் உயரம். மிஸ் கொலம்பியா 2010-ம் இவர்தான்.

அமைப்பாளர்களின் ஏற்பாட்டின் படி டாப்-16ல் வந்த அழகிகள் அனைவரும் க்ரூப் போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் வைபவம் நடந்து கொண்டிருந்தது. எல்லாமே நன்றாகதான் நடந்தது.

மறுநாள் உள்ளூர் செய்தித்தாள் ஒன்றில் கேத்தலினாதான் தலைப்புச்செய்தி. பவழவண்ண குட்டைப்பாவாடை அணிந்து போஸ் கொடுத்தவர், துரதிருஷ்டவசமாக கீழ் உள்ளாடை அணிய மறந்துவிட்டிருக்கிறார். இந்த சீனை ‘க்ளிக்’ செய்த போட்டோகிராஃபர் ஸ்பெஷல் ஜூம் போட்டு, ஜொள்ளிக்கொண்டே போட்டோவாக எடுத்துத் தள்ளியிருக்கிறார்.

பரபரவென்று நெருப்பு மாதிரி பற்றிக்கொண்டது மேட்டர். போட்டோ இணையம் மூலமாக பரவ, உலகமகா காமகொடூரர்கள் ஒட்டுமொத்தமாக கூகிளில் கேத்தலினாவின் குட்டைப்பாவாடையை தேடித்தேடி உற்றுப் பார்த்தார்கள். இதுபற்றி கேத்தலினாவிடம் விளக்கம் கேட்டபோது, தான் உள்ளாடை அணிந்திருந்ததாகவே கருத்து தெரிவித்திருக்கிறார்.

பரபரப்புக்காக நிகழ்ச்சி அமைப்பாளர்களோடு கூட்டு சேர்ந்து இவர் ‘அண்டர்ப்ளே’ செய்திருப்பாரோ என்றொரு ஐயம் ஊடகங்களுக்கு. இல்லை, சொந்த பப்ளிசிட்டிக்காகவே இந்த ச்சீ ச்சீ விளையாட்டை விளையாடிருப்பார் கேத்தலீனா என்பது சக அழகிகளின் கருத்து.

சம்பவத்துக்கு பிறகு அம்மணியின் மவுசு எடக்குமடக்காக உயர்ந்திருக்கிறது. இதைக்கண்டு மற்ற அழகிகள் ‘ச்சே.. வடை போச்சே’ என்று கூட புலம்புகிறார்களாம். இப்போதெல்லாம் பொது இடத்துக்கு கேத்தலீனா செல்லும்போதெல்லாம் கூட்டம், இன்னொரு சான்ஸ் கிடைக்காதா என்று எகனைமொகனையாக கூடிவிட, ‘பாடி’கார்டுகளுக்கு செம டென்ஷனாம்.

என்ன காட்டி என்ன பிரயோசனம்? கடைசியில் அங்கோலா நாட்டு அழகி பிரபஞ்சத்திலேயே அழகானவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

எனக்கு இந்த செய்தியில் தெரியவேண்டிய விஷயம் என்னவென்றால், மறக்காமல் தான் உள்ளாடையை அணிந்ததாக கேத்தலினாவின் வெர்ஷன் இருக்கிறது. அவர் அணிந்ததற்கும், போட்டோவுக்கு போஸ் கொடுப்பதற்கும் இடையிலான நேரத்தில், அவருக்கே தெரியாமல் அதை அவிழ்த்த தில்லாலங்கடி யாரென்பதுதான்.

இந்தப் படத்தில் மேடம் உள்ளாடை மட்டுமே அணிந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


இரண்டாவது நம்மூர் செய்தி.

கோவைக்கு அருகில் நடந்திருக்கிறது. போத்தனூர் சிமெண்ட் கலவை ஃபேக்டரியில் ஒரிசாவைச் சேர்ந்த பினோத், நிஸ்தார், டேவிட், பெகோர் ஆகியோர் பணியாற்றியிருக்கிறார்கள்.

ஒருநாள் ரொம்ப காஜூ ஏறிப்போன நால்வரும் தண்டபாணி என்பவரின் வீட்டுத் தோட்டத்துக்கு வந்திருக்கிறார்கள். அங்கு ஒரு அழகான கன்றுக்குட்டி இருந்திருக்கிறது.

அதன் வாயைப் பொத்தி நால்வரும் மாறி, மாறி...

விஷயம் முடிந்ததும் தப்பித்திருக்கிறார்கள். கன்றுக்குட்டியின் கதறல் சத்தத்தைக் கேட்டு வந்த உரிமையாளர் தண்டபாணி நிலைமையை யூகித்திருக்கிறார். தப்பித்துக் கொண்டிருந்தவர்களில் ஒருவனைப் பிடித்து என்ன ‘மேட்டர்’ என்று விசாரித்துத் தெரிந்துக் கொண்டார்.

ஊர்மக்களும் கூடிவிட, காவல் நிலையத்துக்குப் போய் ’புகார்’ செய்துவிட்டு வந்திருக்கிறார்கள். விசித்திரமான புகாரை நம்ப மறுத்ததாலோ என்னவோ போலிஸார் போதிய ஆர்வம் காட்டவில்லை. இதையடுத்து காமுகர்கள் பணிபுரிந்த தொழிற்சாலைக்கு மக்கள் படையெடுத்து, மற்ற மூவரையும் பிடித்து தென்னைமரத்தில் கட்டிவைத்து உதைத்திருக்கிறார்கள். அப்போதும் காவல்துறையினர் வந்து சேரவில்லை.

இதையடுத்து கன்றுக்குட்டிக்கு நீதி கேட்டு காவல் நிலையம் முன்பாக மறியலில் ஈடுபட்டிருக்கிறார்கள். உடனடியாக விழித்துக் கொண்ட காவல்துறை நால்வரையும் கைது செய்தது. கன்றுக்குட்டி மருத்துவப் பரிசோதனைக்கு கால்நடை மருத்துவரிடம் அனுப்பப்பட்டது. மருத்துவர், கன்றுக்குட்டி கற்பழிக்கப்பட்டதை உறுதி செய்து சான்றிதழ் அளித்தால், நாலு பேரின் டவுசரும் கிழியும்.

எந்தப் பிரிவுகளில் வழக்கு தொடுப்பது என்று ஆரம்பத்தில் குழம்பிப் போன காவல்துறை, பின்னர் மிருகத்தை கொலை செய்ய முயற்சித்தது, இயற்கைக்குப் புறம்பான உறவு ஆகிய செக்‌ஷன்களில் வழக்கு பதிந்திருக்கிறது.

எனக்கு இந்தச் செய்தியில் ஆர்வத்தைத் தூண்டிய விஷயம் இந்தப் படம்தான். காமூகர்களோடு, கன்றுக்குட்டியையும் நிற்கவைத்து போட்டோ எடுத்து பத்திரிகைகளுக்கு கொடுத்த அசத்தல் ஐடியா யாருடையது?

9 செப்டம்பர், 2011

தோழர் ஷகீலா!


மன்மதப்புயல் ஷகீலா என்றாலே முகம் சுளிப்பவர்கள் கூட சனிக்கிழமை இரவுகளில் ரகசியமாக முக்காடு போட்டுக் கொண்டு 'சூர்யா டிவி' பார்ப்பதை கண்டிருக்கிறேன். ஷகீலா மிகவும் வெள்ளந்தியானவர், உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாமல் எதிலுமே ‘வெளிப்படையாக' இருப்பவர் என்று சமீபத்தில் அவரை பேட்டி எடுக்க முயற்சித்த நமது பத்திரிகை நண்பர் ஒருவர் சொன்னார். சினிமா இண்டஸ்ட்ரியில் 'ஷகீலா' போன்ற நல்ல குணநலன்களோடு இப்போதும் ஒரு நடிகை இருப்பது ஆச்சரியமானது என்றும் அந்த நண்பர் சொன்னார்.

* ஷகீலா தனது பதினைந்தாம் வயதில் துணைநடிகையாக நடிக்கத் தொடங்கினார். அவர் நடித்த முதல் படம் ‘ப்ளே கேர்ள்ஸ்'. சில்க் ஸ்மிதா கதாநாயகியாக நடித்த திரைப்படம் இது.

* ஷகீலாவின் குடும்பம் பொருளாதாரரீதியாக ரொம்பவும் மோசமான நிலையில் இருந்த காலக்கட்டம் அது. பொருளாதாரத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவே “ச்சீய்” ரக படங்களில் அதன்பின்னர் நடிக்க ஆரம்பித்தார்.

* ”மறுமலர்ச்சி” என்ற மம்முட்டி நடித்த படத்தை பார்த்திருக்கிறீர்களா? அந்தப் படத்தில் விவேக்குக்கு ஜோடியாக ஷகீலா நடித்திருப்பார்.

* ஷகீலா நடித்த ‘கிணரத்தும்பிகள்' படம் மெகாஹிட்.

* ஒரு கட்டத்தில் தொடர்ந்து ஆண்டுக்கு ஆறுபடங்களாவது ஷகீலா நடித்து, அவை செம ஹிட் ஆக மலையாள திரையுலகமே அதிர்ந்தது. மம்முட்டி, மோகன்லால் படங்களின் வசூல் ஷகிலாவால் பாதித்தது. ஷகிலா படங்கள் வெளியாகிறதென்றால் மற்ற படங்களின் வெளியீட்டுத் தேதியை அப்போதெல்லாம் தள்ளி வைத்து விடுவார்களாம். ஷகிலா படங்களை முடக்க மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களும், தயாரிப்பாளர்களும் முயன்றார்கள் என்று பேசப்பட்டது.

* ஷகீலா “ச்சீய்” ரக படங்களில் நடித்தாலும் அவருக்கு பாசில் போன்ற இயக்குனர்களின் இயக்கத்தில் மம்முட்டி, மோகன்லால் போன்ற நடிகர்களுடன் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக காமெடி வேடங்களில் நடிப்பதில் அவருக்கு அலாதிப்பிரியம்.

* ஷகீலா மன்மதப் புயலாக அறியப்பட்ட பிறகு தமிழில் ஜெயம், தூள், அழகிய தமிழ்மகன் போன்ற படங்களில் தலையைக் காட்டினார்.

* சினிமா இண்டஸ்ட்ரியில் "Cyclone" "லேடி லால்” போன்ற பெயர்களால் ஷகீலாவை குறிப்பிடுகிறார்கள்.

* 'வில்ஸ் பில்டர்' சிகரெட்டை விரும்பி புகைப்பாராம்.

* ஷகீலா நடித்த சூப்பர்ஹிட் திரைப்படங்களில் சில : 'ஆலில தோணி', 'மிஸ் சாலு', 'ஸ்நேகா', ‘சாகரா', 'அக்னிபுத்ரி', 'சவுந்தர்யலஹரி', 'பெண்மனசு', 'வீண்டும் துலாபாரம்' போன்றவை. இப்படங்களையே அடிக்கடி பெயர் மாற்றி, சில பிட்டுகளை சேர்த்து புதியப் படங்கள் போல ஆங்காங்கே திரையிடுவது வழக்கம்.

* மலையாளத் திரைப்படங்களில் இப்போது அவ்வளவாக ஷகீலா ஆர்வம் காட்டுவதில்லை. மற்ற மொழித் திரைப்படங்களில் குணச்சித்திர மற்றும் நகைச்சுவைப் பாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். ‘மோனலிசா' திரைப்படம் மூலமாக (இப்படத்தில் ஷகீலாவை விட சதா அதிகமாக காட்டியிருப்பார்) கன்னடத்திலும் கரைகடந்திருக்கிறது இந்தப் புயல்.

* இயக்குனர் தரணியின் படங்களில் ஷகீலாவுக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்கப்பட்டு வருகிறது. தரணி தெலுங்கில் இயக்கிய 'பங்காரம்' திரைப்படம் மூலமாக தெலுங்கிலும் ஒரு ரவுண்டு கட்டி அடிக்க ஆரம்பித்திருக்கிறார் ஷகீலா.

* தமிழில் டப் செய்யப்படும் ஷகீலாவின் திரைப்படங்களுக்கான ப்ரீமியர் காட்சி பரங்கிமலை ஜோதியில் ஒரு காலத்தில் தவறாது காட்டப்பட்ட வந்தது.

17 ஆகஸ்ட், 2011

ரோஜா நினைவுகள்!

விளையாட்டுத்தனமாக இருபது ஆண்டுகள் ஓடிவிட்டதை நினைக்கும்போது கவலையாகவும், அச்சமாகவும் இருக்கிறது. மயிருதிர்ந்துப்போன முன் தலையை கண்ணாடி முன்பாக தடவிப் பார்க்கிறேன். ரோஜாவே டீனேஜை தாண்டிவிட்டாள் என்றால், என் தலைமுறை ‘இளைஞர்’ என்கிற கவுரவத்தை இழந்துவருகிறது என்றே பொருள்.

1992 – இந்த வருடத்தை யார் மறந்தாலும் தமிழ் சினிமா மறக்காது. அப்போதெல்லாம் கார்த்திக்தான் அதிகப் படங்களில் நடித்துக் கொண்டிருந்த நாயகன். 91 தீபாவளிக்கு தளபதியோடு, அமரன் போட்டி போடும் என்றெல்லாம் பெருத்த எதிர்ப்பார்ப்பு இருந்தது. ஏனெனில் ‘ராக்கம்மா கையத் தட்டு’வை விட, அமரனின் ‘வெத்தலைப் போட்ட ஷோக்குலே’ ஆடியோ சூப்பர் டூப்பர் ஹிட். ஏனோ அமரன் தாமதமாகி 92 பொங்கலுக்கு வெளியாகி மொக்கை ஆனது. தொடர்ந்து வெளியான கார்த்திக்-பாரதிராஜா காம்பினேஷனில் நாடோடித் தென்றலுக்கும் டவுசர் அவிழ்ந்தது. இன்று உலகத் தமிழர்களிடையே பல்வேறு காரணங்களால் பிரபலமான ரஞ்சிதாவின் அறிமுகம் நிகழ்ந்த படமிது. பிற்பாடு என்.கே.விஸ்வநாதனின் நாடோடிப் பாட்டுக்காரன் வெளியாகி, கார்த்திக்கின் மானத்தை வசூல்ரீதியாக காப்பாற்றியது.

மன்னன், சின்னக் கவுண்டர் படங்கள் வசூலில் சரித்திரம் படைத்தது. கடலோரக் கவிதைகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் சோலோவாக கோலோச்சிக் கொண்டிருந்த சத்யராஜூக்கு பெரிய லெட்-டவுன் இந்த ஆண்டில். ஆனால் அடுத்த ஆண்டே வால்டேர் வேற்றிவேல் மூலமாக தனக்கான மாஸ்டர் பீஸை அடையாளப் படுத்திக் கொண்டார்.

சூப்பர் ஸ்டாரின் அண்ணாமலை வசூல்ரீதியாக மட்டுமின்றி, அரசியல்ரீதியாகவும் சூட்டைக் கிளப்பியது. இன்று புரட்சித்தளபதி, சின்னத் தளபதி, செவன் ஸ்டார், ராக்கிங் ஸ்டார், லொட்டு, லொசுக்கு ஸ்டார்களுக்கெல்லாம் டைட்டிலில் விஷ்க் விஷ்க் சவுண்ட் போட்டு அலப்பறை செய்வதற்கு அண்ணாமலையே முன்னோடி.

மலையாள இயக்குனர் பரதனின் ‘ஆவாரம்பூ’ சூப்பர்ஹிட் பாடல்களோடு வெளிவந்து மண்ணைக் கவ்வியது. ஆனாலும் தீபாவளிக்கு அவரது இயக்கத்தில் வெளியான ‘தேவர் மகன்’ இன்றளவும் எவர்க்ரீன் ஹிட். முந்தைய தீபாவளிக்கு குணாவில் மாஸ் இழந்த கமல் ‘சிங்காரவேலன்’ மூலமாக மீண்டெழுந்தார். தேவர் மகனில் சிவாஜிக்கு தேசிய விருது ஜஸ்ட் மிஸ். அதையும் கமலே தட்டிக் கொண்டார்.

டாக்டர் கேப்டன் விஜயகாந்தின் அட்டகாச மேற்கத்திய பாணி நடனத்தில் வெளிவந்த ‘பரதன்’ குறிப்பிடத்தக்க ஒரு படம். பி.சி.ஸ்ரீராம் இயக்கிய மீரா (விக்ரம் அறிமுகம் என்று சொல்வார்கள். ஆனால் அவர் 89லேயே ஸ்ரீதரின் ‘தந்துவிட்டேன் என்னை’யில் அறிமுகமாகி விட்டார்) மரண அடி வாங்கியது. முரளி நடிப்பில் ராஜ்கபூர் இயக்கிய ‘சின்னப்பசங்க நாங்க’ சர்ப்ரைஸ் ஹிட். முந்தைய ஆண்டில் சாதனைப்படமான சின்னத்தம்பியை கொடுத்த பிரபு-வாசு காம்பினேஷன் ‘செந்தமிழ்ப்பாட்டு’ படம் மயிரிழையில் தப்பித்தது. 91ல் என் ராசாவின் மனசிலே மூலம் ஹீரோவாக அறிமுகமான ராஜ்கிரண், அடுத்த வெள்ளிவிழாப் படமான அரண்மனைக் கிளியை தமிழ்ப்புத்தாண்டுக்கு வெளியிட்டார். இன்னும் நிறைய படங்கள். நினைவில் இருந்தவற்றை குறிப்பிட்டிருக்கிறேன். 92ஆம் ஆண்டு தமிழ் சினிமாவின் வசூல் ஆண்டு.

பரபரப்பான சம்பவங்களை வைத்து படமெடுத்துக் கொண்டிருந்த ஆர்.கே.செல்வமணி, முதன்முறையாக ஒரு காதல் படமெடுத்து வெள்ளிவிழா கண்டார். இன்று ஆந்திர அரசியலின் சூறாவளியான ரோஜா மலர்ந்தது அப்போதுதான்தான்.

1992, ஆகஸ்ட் 15. அப்போதெல்லாம் இந்தியா, மூவர்ணக்கொடி என்று கேட்டாலே ரட்சகன் நாகார்ஜூனா மாதிரி நரம்புகள் புடைக்கும். தேசிய நீரோட்டத்தில் கலந்து, பகுத்தறிவு ஓய்வெடுத்துக் கொண்டிருந்த போயிருந்த பருவமது. பள்ளியில் ஒருக்கா, தெருமுனையில் மறுக்கா கொடியேற்றிவிட்டு, தேசக்கொடிக்கு மரியாதை செலுத்தினோம். மடிப்பாக்கத்தில் அப்போது மொத்தமாக மூன்றே மூன்று காங்கிரஸ்காரர்கள் இருந்ததாக நினைவு. ஒருவர் தலைவர். மற்றவர் செயலாளர். மீதியிருந்தவர் பொருளாளர். அதில் ஒருவர் (என்னுடைய நாலுவிட்ட மாமா. ஐந்து விட்ட அக்காவை அவருக்கு கட்டிக் கொடுத்திருந்தோம்) சேவாதள சீருடையில் – யாருமே இல்லாத டீக்கடையில் டீ ஆற்றுவது மாதிரி – ஒரு கம்பத்தை அவரே நட்டு, ‘பாரத்மாதாகீ ஜே’ சொல்லி, அவரே கொடியேற்றி, அவரே கைத்தட்டி, ஒவ்வொரு கதவாக தட்டி சாக்லேட் கொடுத்து சுதந்திர தினத்தைக் கொண்டாடினார்.

டி.டி. தொலைக்காட்சியில் காலை பதினோரு மணியளவில் சிறப்பு ஒலியும், ஒளியும். முதல் பாட்டு ‘அண்ணாமலை அண்ணாமலை ஆசை வெச்சேன் எண்ணாமலே’ என்பதாக நினைவு. இன்றைய காஞ்சனாவான சரத்குமார் ஃபுல் ஹீரோவாக நடித்திருந்த ‘சூரியன்’ அன்றுதான் வெளியானது. செம்பருத்தியில் அறிமுகமான ரோஜாவின் இரண்டாவது படம். பவித்ரன் இயக்கம். இணை இயக்கம் ஷங்கர். ‘லாலாக்கு டோல் டப்பிமா’ பாட்டு பட்டையைக் கிளப்பியது. இந்தப் பாடல் ஒரு விபத்தாக மாறி, அடுத்தடுத்து வால்டர் வெற்றிவேல், ஜெண்டில்மேன் என்று பல படங்களில் பிரபுதேவா அயிட்டம் டேன்ஸராக பலமாக உருமாறி, இந்துவில் கதாநாயகனாகி, காதலனில் மாஸ் ஹீரோவாகி.. அது ஒரு தனி வரலாறு.

‘ஒளியும், ஒலியும்’ முடியும் நேரத்தில் வந்தது அந்தப் பாட்டு. மணிரத்னத்துக்கு முதன்முறையாக இளையராஜா தவிர்த்த புது இசையமைப்பாளர். கமல், ரஜினி, கார்த்திக், பிரபு என்று மாஸ் ஹீரோக்களை விட்டு விட்டு, தளபதியில் துண்டு கேரக்டரில் நடித்த அரவிந்தசாமியை ஹீரோவாக்கியிருந்தார். அதற்கு முன்பாக மதுபாலாவும் அவ்வளவு பிரபலமில்லை. அழகனில் மூன்றாவது, நாலாவது ஹீரோயினாக நடித்திருந்தார்.

எங்கள் வீட்டருகில் பானு அக்கா என்றொருவர் இருந்தார். பதினெட்டு, பத்தொன்பது வயதிருக்கும். பரதநாட்டியம் கற்றுக் கொண்டு நிகழ்ச்சிகளில் ஆடிக்கொண்டிருந்தார். ஒருமுறை அவரது நாட்டிய நிகழ்ச்சிக்கு போகும்போது, கூட வேனில் இன்னொரு சூப்பர் ஃபிகரும் இருந்தார். அவர்தான் மதுபாலா. பானுவும், மதுபாலாவும் ஒரே கட்டத்திலேயே சினிமா வாய்ப்பு தேடிக்கொண்டிருந்தார்கள். குடும்ப சினிமா பின்னணி இருந்ததால் மதுபாலா சுலபமாக நடிகையாகிவிட்டார். பானு என்ன ஆனாரோ தெரியவில்லை.

அதே ஆண்டில் ‘சித்திரைப் பூக்கள்’ படம் மூலமாக மடிப்பாக்கத்தில் இருந்து இன்னொரு ஹீரோயினும் அறிமுகமானார். அவர் வினோதினி. இந்து படத்தின் ‘எப்படி, எப்படி சமைஞ்சது எப்படி?’ பாட்டில் கெட்ட ஆட்டம் போட்டவரும் மடிப்பாக்கத்தைச் சேர்ந்தவர்தான். சாரதா டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட்டில் என்னுடைய சீனியர். அடக்க ஒடுக்கமாக இன்ஸ்டிட்யூக்கு வந்து சென்றுக் கொண்டிருந்தவரை, ஸ்க்ரீனில் வேறுமாதிரி பார்த்தபோது கிடைத்த அதிர்ச்சி கொஞ்சநஞ்சமில்லை. இதே ஆண்டு என் பள்ளித்தோழன் ஆனந்தராஜின் அண்ணன் கணேசராஜூ ’சின்னத்தாயி’ படத்தை இயக்கிக் கொண்டிருந்தார். மடிப்பாக்கமே சினிமாப்பாக்கமாக மாறிவிட்ட ஆண்டு அது. இப்போதும் கூட பழம் பெரும் நடிகைகள், நடிகர்கள், டெக்னீஷியன்கள் நிறைய பேர் இந்த ஊரில் வசிக்கிறார்கள்.

ஓக்கே, மீண்டும் ரோஜாவுக்கு வருவோம்.

வேனில் பார்த்த அதே மதுபாலா ‘சின்ன சின்ன ஆசை’ என்று டிவியில் பாடுவதைப் பார்த்தபோது கிடைத்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. முதல் தடவை கேட்டபோதே வசீகரிக்கும் பாடல்கள் அரிதானவை. சின்ன சின்ன ஆசை அந்தவகை. குறிப்பாக உதய சூரியன் வேகமாக மேலெழும் பாடலின் ஆரம்பக் காட்சியில் வரும் இசை. ‘ரோஜா’வைப் பார்த்தேவிட வேண்டும் என்கிற ஆசை, பேராசையாய் கிளம்பியது.

மறுநாள் வகுப்பில் கூடி பேசினோம். எல்லோரையுமே சூரியனை விட ரோஜா கவர்ந்திருந்தாள். ஆலந்தூர் பாலாஜி என்பவனுக்கு தேவி தியேட்டரில் டிக்கெட் கிழிக்கும் ஆள் யாரையோ தெரிந்திருந்தது. அவர் மூலமாக மொத்தமாக இருபது டிக்கெட்டுகள் ரிசர்வ் செய்தான் பாலாஜி. சொந்தக் காசை போட்டு டிக்கெட் வாங்கிவிட்டு, பிற்பாடு எங்களிடம் வசூல் செய்ய நாய்படாத பாடு பட்ட பாலாஜியை இப்போது நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்.

அதற்கு முன்பாக ஸ்கூல் கட் அடித்துவிட்டு பார்த்திருந்த ஒரே படம் செம்பருத்தி (காசி தியேட்டரில்). தேவிக்கு பஸ்ஸில் கூட்டமாக போகும்போது கொஞ்சம் பயமாகவே இருந்தது. யாராவது தெரிந்தவர் பார்த்துத் தொலைத்தால்? தேவி தியேட்டருக்கு பக்கத்திலேயே ப்ளோ ப்ளாஸ்ட் லிமிடெட்டின் மண்டல அலுவலகம் வேறு இருந்துத் தொலைத்தது. இதே கம்பெனியின் பாரிமுனை கிளையில் அப்பா வேலை பார்த்தார் என்றாலும், அடிக்கடி இங்கே வருவார்.

ஒருவழியாக தியேட்டருக்குள் போய் அமர்ந்தபிறகு படப்படப்பு குறைந்தது. ரோஜா ஏகத்துக்கும் ஆச்சரியப்படுத்தினாள். ரோஜாவில் சித்தரிக்கப்பட்ட நெல்லை சுந்தரபாண்டியபுரம் மாதிரியான டீசண்டான கிராமத்தை இன்றுவரை நான் எங்குமே நிஜத்தில் காணமுடிந்ததில்லை. அர்விந்த்சாமி கம்ப்யூட்டர் இன்ஜினியர். அதுவரை கம்ப்யூட்டரை கண்ணில் மட்டுமே பார்த்திருந்தவனுக்கு, அதுக்கு ஒரு இன்ஜினியரும் இருப்பார் என்பதை தெரிந்துகொள்ள முடிந்தது. தேசக்கொடியை தீவிரவாதிகள் எரிக்க, அதை விழுந்து புரண்டு அர்விந்த்சாமி அணைக்க.. எங்கள் நெஞ்சங்களிலும் பற்றியெறிந்தது தேசவெறி. க்ளைமேக்ஸில் ரோஜா தன் கணவனோடு இணைந்ததைக் காண நேர்ந்தபோது கிடைத்த நிம்மதி சிலாக்கியமானது. ஒரு ஃபிகரை பிரபோஸ் செய்து, அவள் ஏற்றுக் கொண்டபோது கூட இந்த நிம்மதி கிடைத்ததில்லை.

அதுவரை சினிமாவில் பார்த்த கேமிரா வேறு. ரோஜா காட்டிய கேமிரா வேறு. பாத்திரங்களின் பின்னாலே கேமிரா நடந்தது, ஓடியது, குலுங்கியது. பாடல் காட்சிகளில் மொக்கையான டிராலி மூவ் மாதிரி மட்டமான டெக்னிக்குகள் இல்லை. காட்சிகள், படமாக்கம் எல்லாவற்றையும் தாண்டி ஈர்த்தது இசை. ஏ.ஆர்.ரகுமானைப் பற்றி இந்தியா டுடேவில் ஒரு சிறிய துணுக்கு மட்டுமே வாசித்திருந்த நினைவு. அப்போது அவருக்கு வயது 23 என்பதை அறிந்து பெரிய ஆச்சரியம்.

ஏதோ ஒரு நாள் கட் அடித்துவிட்டு படம் பார்த்தோம் என்றில்லாமல், அடுத்த சில மாதங்களுக்கு ரோஜா எந்நேரமும் நினைவில் நிழலாடிக் கொண்டே இருந்தாள். பி.பி.எல் சேனியோவில் ரோஜா கேசட்டை தேய்த்து, தேய்த்து ரெண்டு, மூன்று கேசட் வாங்க வேண்டியதாயிற்று. ‘காதல் ரோஜாவே’ மனப்பாடமானது. ‘புது வெள்ளை மழை’ பாடலில், அதுவரை தமிழ் சினிமாவில் கேட்காத பல ஓசைகளை கேட்க முடிந்தது.

அர்விந்த்சாமி தீவிரவாதிகளிடம் அடைபட்டிருந்தபோது போட்டிருந்தது மாதிரியே ஒரு ரெட் கலர் ஸ்வெட்டர் வாங்கிக் கொண்டேன். கொளுத்தும் கோடையில் கூட ‘தெய்வத்திருமகள் கிருஷ்ணா’ மாதிரி கழட்டாமலேயே அந்த ஸ்வெட்டரோடு அலைந்திருக்கிறேன். கம்ப்யூட்டர் இன்ஜினியர் ஆகிவிடலாமென்ற கனவோடு, மடிப்பாக்கத்தில் ஆரம்பித்திருந்த கம்ப்யூட்டர் சென்டருக்குப் போய் வேர்ட் ஸ்டார் எல்லாம் கற்றுக் கொண்டேன். மேலும் சில வருடங்களுக்கு தேசபக்தி நூறு கிரேடு செண்டிக்ரேடுக்கு குறையாமல் உஷ்ணமாகவே இருந்தது. அதற்கு ரோஜா ஒரு காரணம். பிற்பாடு +2 ஃபெயில் ஆகிவிட்டு வீட்டில் தண்டச்சோறு சாப்பிட்டுக் கொண்டு, ஊர் சுற்றிக் கொண்டிருந்தபோது சிந்திக்க நிறைய நேரம் கிடைத்தது. பாழாய்ப்போன அந்த சிந்தனையால் அந்த 100 டிகிரி செண்டிக்ரேடு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, இப்போது 0 டிகிரி செண்டிக்ரேடாக உறைந்துப் போயிருக்கிறது.

இப்போது ரோஜாவை திரும்பிப் பார்க்கும்போது அது ஒரு மைல்கல் என்பதை அப்பட்டமாக உணரமுடிகிறது. தமிழ் சினிமாவை இந்திய அளவுக்கு நேரடியாக கொண்டுச்சென்ற முதல் படமாக தோன்றுகிறது. சுபாஷ்கய்தான் தேசிய இயக்குனர் என்கிற பாலிவுட்டின் அடாவடியை, இப்படத்தின் மூலமாக அடித்து நொறுக்கினார் மணிரத்னம். தமிழ் தொழில்நுட்பக் கலைஞர்களை ஏற்றுக்கொண்டு, இந்திக்காரர்கள் மதிக்கும் கவுரவத்தை ஏற்படுத்தித் தந்தது ரோஜா. முன்னரே பாலச்சந்தர், எஸ்.எஸ்.வாசன் போன்றவர்கள் இந்தியில் வெற்றிக்கொடி நாட்டியிருந்தாலும், அந்த வெற்றிகள் தற்காலிகமானவை. மணிரத்னம் ரோஜாவில் கண்ட வெற்றி, இன்றளவுக்கும் தொடர்கிறது. சுதந்திர தினம் என்றாலே ‘பாரதவிலாஸ்’ என்கிற டி.டி.யின் அரதப்பழசான சம்பிரதாயமும் நொறுங்கிப் போனது. இந்தியிலும், தமிழிலும் குடியரசுதினம், காந்திஜெயந்தி, சுதந்திரதினம் என்று எண்ணற்ற முறை ரோஜா ஒளிபரப்பானது.

ஏ.ஆர்.ரகுமான் இந்திய சினிமா என்கிற எல்லையைத் தாண்டி ஆஸ்கரையே வென்றுவிட்டார். ‘சொட்டு நீலம் டோய், ரீகல் சொட்டு நீலம் டோய்’ போன்ற டிவி ஜிங்கிள்களுக்கு இசையமைத்தவரின் இன்றைய உயரத்தின் அச்சாணி ரோஜா.

ரோஜாவுக்கு இன்று வயது இருபது. முதல்முறை பார்த்தபோது கிடைத்த அதே அனுபவம், இப்போது பார்க்கும்போதும் கிடைக்கிறது என்பதுதான் இப்படத்தின் தனித்துவம். இன்னும் முப்பதாண்டுகள் கழிந்தாலும் இதே காட்சியனுபவத்தை ரோஜா வழங்குவாள் என்பதில் எனக்கு சந்தேகம் ஏதுமில்லை.