16 ஆகஸ்ட், 2017

படம் வரைந்து பாகம் குறித்தலும் படமெடுத்து பாடம் நடத்துதலும்!

முன்குறிப்பு : ‘வயது வந்தோருக்கு மட்டும்’ என்று சான்றிதழ் கையளிக்கப்படும் திரைப்படங்கள் பெரும்பாலும் வயதுக்கு வாராதோரையே கவரும் என்பது என் முன்முடிவு. என் பால்ய அனுபவங்களில் இருந்து வந்தடைந்திருக்கும் தரிசனம் இது.

வயதுக்கு வந்தோர் கண்ட காட்சிகளும், கொண்ட கோலங்களுமே ‘வயதுக்கு வந்தோருக்கு மட்டும்’ படங்களில் காட்சிப்படுத்தப் படுகின்றன. மாறாக காட்சியையோ, கோலத்தையோ காணாத வயதுக்கு வாராதோர்தான் வயதுக்கு வந்தோருக்கான படங்களை காண்பதற்கான மனப்பாங்கு கொண்டவர்களாக அமைந்திருக்கிறார்கள். காணவேண்டிய தேவையும் அவர்களுக்கே இயல்பாய் ஏற்படுகிறது.

‘துண்டு நிச்சயம் உண்டு’ என்கிற முன்முடிவோடே பால்யத்தை ஒட்டிவாழும் பார்வையாளர்கள் இம்மாதிரி படங்களுக்கு அரங்கம் முன்பாக ஆவலோடு குழுமுகிறார்கள். மீசைக்கு கீழே சில அங்குல மயிர் இல்லாவிட்டாலும், இருக்கையை நிரப்ப ஆள்வேண்டுமே என்கிற எண்ணத்தில் அவர்களும் சட்டத்துக்கு விரோதமாக திரையரங்கு பணியாளர்களால் உள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

வயதுக்கு வந்தோருக்கு மட்டும் படங்கள், வயதுக்கு வாராதோருக்கு புரியக்கூடிய அளவிலான மேலோட்டமான பாணியில் எடுக்கப்பட்டாலும், முதிர்ச்சியான பார்வையாளர்களுக்கான திரட்சியான காட்சிகளோடு மேற்கத்தியப் பாணி திரைப்படமாக்கலை மேற்குத் தொடர்ச்சி மலை வாசனையோடு தருவது வாடிக்கை.

நிற்க.

அடிப்படையில் பாலியல் பசியை பேசினாலும், பருவப் பசிக்கு தீனி போட்டாலும் வயதுக்கு வந்தோருக்கான படங்கள் வயதுக்கு வந்தோருக்கு மட்டுமானது அல்ல என்பதே என் துணிபு.

சரி, விமர்சனத்துக்குள் நுழைவோம்.

* * *

நான்கு இளைஞர்களுக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு. அவர்களில் ஒருவனுக்கு திருமணம் ஆகிறது. அவனுடைய மனைவிக்கு மது அருந்தும் பழக்கம் கிடையாது. இதுவே அவர்கள் இருவருக்குமான ஆண் x பெண் முரணை ஏற்படுத்துகிறது.

தன்னுடைய மனைவிக்கு மது அருந்தும் பழக்கமில்லை என்பது ஒருவகையில் அவனுக்கு மகிழ்வையும் தருகிறது. இரவு வேளைகளில் மது அருந்திவிட்டு, அதிகாலையில் சூரியன் உதிக்கும் வேளையில் இல்லம் திரும்புகிறான். இதனால் இரவில் அவன் செய்யவேண்டிய  அடிப்படை வேலைகளை செய்ய முடியாமல் போகிறது.

புதியதாக மணம் ஆன ஒரு ஆணுக்கும், பெண்ணுக்குமான இந்த அகசிக்கல் பாலியல் அங்கதச்சுவையோடு நீலமாக காட்சிப்படுத்தப் படுகிறது. இருவருக்குமான ஊடல் கூடலை நோக்கிச் செல்லாதவகையில் திரைக்கதை புதுமையான உத்தியில் இயக்குநர் சாஜனால் கையாளப்பட்டிருக்கிறது. இக்காட்சிகள் வயதுக்கு வாரா ரசிக மீன்குஞ்சுகளுக்கு தூண்டிலில் போடப்படும் மண்புழு.

* * *

வனப்பு வாரியிறைக்கப்பட்ட பேரிளம்பெண். அவளது உடல் கட்டோடு குழலாட ஆடவென்று கச்சிதமாக இருக்கிறது. கணவன் அயல்நாட்டில் பொருள் ஈட்டுகிறான்.  இப்பெண்ணுக்கு பக்கத்து இல்லத்தில் வசிக்கக்கூடிய கட்டிளங்காளை ஒருவன் தினசரி அதிகாலை உடற்பயிற்சி செய்வது வழக்கம். காம்பவுண்டு தாண்டி கட்டிளங்காளை. இங்கே காமப்பசி அடங்கா காரிகை.

அந்த பேரிளம்பெண்ணின் காமம் கலங்கரை விளக்க ஒளியாய் காளையை எட்டுகிறது. கண்கூசும் காமவொளியை தாங்கவொண்ணா துயரம் கொண்டவனாய், விளக்கை அணைக்க காம்பவுண்டு தாண்டி வருகிறான். அணைக்க வேண்டியது விளக்கையல்ல. விளக்கு ஏந்திய மங்கையை என்று உணர்கிறான்.

காமச்சுவையில் இருவரும் கரைபுரண்டு ஓடுகிறார்கள். சலிக்க சலிக்க காமம். விடிய விடிய ஹோமம். ஆணுக்கு பெண், பெண்ணுக்கு ஆண் என்கிற மரபான பாலியல் செயல்பாடுகளில் மனதை வசம் இழக்கிறார்கள் இருவரும்.

இந்த காட்சிகளில் ஒளிப்பதிவாளரின் நேர்த்தியான ஒளியமைப்பும், படத்தொகுப்பாளரின் தாராள மனசும் பார்வையாளர்களுக்கு ஓர் ஐரோப்பிய திரைப்படத்தை காணும் அற்புத அனுபவத்தை ஏற்படுத்துகின்றன.

* * *

போதையிலே சுகம் காண்கிறான் மாணவன் ஒருவன். ஆரம்பத்தில் விளையாட்டாக பீர் என்கிற மதுபானத்தை சுவைக்கிறான். அதிலிருந்து சற்று முன்னேறி பிராந்தி, ரம் என்று ஐரோப்பிய பானங்களை பதம் பார்க்கிறான்.

ஒருக்கட்டத்தில் பானங்கள்  பானகம் மாதிரி இனிக்கிறது. அவனது தேவை, மேலும் போதை மேலும் மயக்கம். கஞ்சா புகைக்கிறான். அந்த போதையும் போதாமல் பாலியல் தொழிலாளிகளை நாடுகிறான். போதைகளில் சிறந்தது போகம் என்று உணர்கிறான்.

* * *

மூன்று வெவ்வேறு கிளைகளாக விரிந்த இந்த சிறுகதையாடல்களை கடைசியாக மருத்துவர் ஒருவரின் ஆலோசனைக் காட்சியை நயமாக சேர்த்து பெருங்கதையாடலாக மாற்றுகிறார் இயக்குநர் சாஜன். அவரை எவ்வளவு விரித்துப் பாராட்டினாலும் தகும்.

முதல் கதையில் திருப்தியடையாத புதுமனைவி, கணவனின் நண்பர்களில் ஒருவனோடு கூடுகிறாள். இந்த காட்சி பார்வையாளனுக்கு சுவாரஸ்யமான அனுபவத்தை தருவதோடு வயதுக்கு வராத பார்வையாளர்கள் எதிர்காலத்தில் வேலை செய்யாவிட்டால் என்னவாகும் என்கிற படிப்பினையை பெறக்கூடிய பாடத்தையும் வழங்குகிறது.

இரண்டாவது கதையில், பக்கத்துவீட்டு பாலகனோடு பந்து விளையாடும் பெண், அற்பமான பாலியல் தேவைக்காக அற்புதமான இல்வாழ்க்கையை இழப்பதாக கதையின் போக்கில் அமைக்கப்பட்டிருக்கிறது.

மூன்றாவது கதையில் போதைக்கு பாதை தேடிய மாணவன், பாதை தவறி பல்லாவரத்தில் பாக்கு போட்டுக் கொண்டு பராக்கு பார்த்துக் கொண்டிருப்பதாக முடிவு.

* * *

‘மது, மங்கை, மயக்கம்’ என்கிற இத்திரைப்படத்தின் தணிக்கை சான்றிதழ் சுட்டுவதை போல வயதுக்கு வந்தோருக்கான பாலியல் படம் மட்டுமல்ல. பாலியலை மிகைபுனைவாக கருதும் பாலகர்களுக்கான படமும்தான். எதிர்பாலினத்தவரான பெண்களிடம் என்ன இருக்கிறது என்று அறிய ஆர்வமாக முற்படும் ஆண்களுக்கு எதை காட்ட வேண்டுமோ, அதை மட்டும் இப்படம் சுட்டிக் காட்டுகிறது. ஆண்களிடம் என்ன இருக்கிறது என்பதே ஆண்களுக்கு தெரியாத நம் சமகால சூழலில், ஆண் பெண் இருவரிடமும் என்னென்ன இருக்கிறது என்று படம் வரைந்து பாகம் குறிக்க முற்பட்ட இயக்குநரின் முயற்சி துணிச்சலான முயற்சி.

முதிர்ச்சியான பார்வையாளன் இம்மாதிரி படங்களில் அழகியல் பாடம் கற்பான். ஐரோப்பிய புது அலை திரைப்படங்களில் ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபதுகளில் உலகம் முழுக்க செய்தது இதைதான். ஆட்டுமந்தை மூளை கொண்டவர்களோ ‘துண்டு’ போடசொல்லி அரங்கில் விசில் அடித்து கலாட்டா செய்வார்கள். யார் யாருக்கு எது வேண்டுமோ, அவரவருக்கு அது அது கிட்டட்டும்.

5 ஆகஸ்ட், 2017

சிவாஜி சிலை

ஜூலை 21, 2006.

அந்நாள் வரை ‘பிக்பாக்கெட்’ என்பது புனைவு என்று கருதிக் கொண்டிருந்தேன்.

சிறுவயதிலிருந்தே வெறித்தனமான எம்.ஜி.ஆர் ரசிகன் என்பதால் சிவாஜியை கொஞ்சம்கூட பிடிக்காது. சிவாஜி படங்கள் பார்ப்பதை புறக்கணிப்பது மட்டுமில்லாமல், சிவாஜிக்கு ரசிகர் என்று யாராவது தெரிந்தால் அவர்களையும் புறக்கணிக்குமளவுக்கு வெறித்தனம்.

அந்த பைத்தியம் தெளிந்தது ஜூலை 2001ல்.

அப்போது தி.நகரில் பாகிரதி அம்மாள் தெருவில் இருந்த ஒரு விளம்பர நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். தினமும் போக் ரோடு வழியாக சிவாஜி வீட்டை கடந்துதான் என்னுடைய டிவிஎஸ் சேம்ப் பயணிக்கும்.

ஆற்காடு சாலையை கடக்கும்போது ஆட்டோமேடிக்காக கன்னத்தில் போட்டுக் கொள்வேன். அந்த சாலையில்தான் எம்.ஜி.ஆர் வாழ்ந்தார். அவருடைய நினைவில்லம் அமைந்திருக்கிறது. இப்போதும் எங்கேயாவது எம்.ஜி.ஆர் படத்தையோ, சிலையையோ காணும்போது ஆட்டோமேடிக்காக கைகள் கன்னத்தில் போட்டுக் கொள்கின்றன. அதே நேரம் சிவாஜி வீட்டை ஒரு வெறுப்போடுதான் கடப்பேன். அங்கே கூடியிருக்கும் ரசிகர்கள் மெண்டல்கள் மாதிரிதான் எனக்கு தோன்றுவார்கள்.

சிவாஜி மறைந்த அன்று அந்த சாலையை கடக்கும்போதுதான் அனிச்சையாக கண்கள் கலங்கின. அன்று முழுக்க சிவாஜி பாடல்களை கேட்டு, அவர் குறித்த செய்தித் தொகுப்புகளை தொலைக்காட்சிகளில் பார்த்துக் கொண்டிருந்தபோதுதான் நம்மோடு வாழ்ந்துக் கொண்டிருந்த ஒரு மகத்தான மேதையை இதுநாள் வரை அவமதித்துக் கொண்டிருந்திருக்கிறோமே என்று தோன்றியது. அதன் பிறகே தொடர்ச்சியாக சிவாஜி நடித்த படங்களை பார்த்து அவருடைய தன்னிகரற்ற மேதமையை உணர்ந்தேன்.

ஸ்டாப்.

சிவாஜி மறைந்ததில் தொடங்கி அவருக்கு மணிமண்டபம், சிலை என்று கோரிக்கைகள் அரசுக்கு தமிழர்களால் முன்வைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. ஏதேதோ காரணங்களால் சிவாஜி மீது அசூயை கொண்டிருந்த ஜெயலலிதா, அவற்றை கண்டுகொள்ளவே இல்லை.

தான் ஆட்சிக்கு வரும்போது சிவாஜிக்கு சிலை வைக்கப்படுமென்று கலைஞர் உறுதியளித்தார்.

சொன்னதை செய்பவர் ஆயிற்றே. 2006ல் ஆட்சிக்கு வந்ததுமே ஆளுநர் உரையில் சிவாஜி சிலையை அறிவித்தார். கடற்கரை சாலை ஐஜி அலுவலகத்துக்கு எதிரே சிவாஜிக்கு சிலை வைக்க இடம் ஒதுக்கினார். பாண்டிச்சேரியில் அமைக்கப்பட்ட சிலை போலவே  கம்பீரமான வெண்கலசிலையும் சிற்பி நாகப்பாவால் செய்யப்பட்டது.

ஜூலை 21 அன்றுதான் சிவாஜி சிலை திறப்புவிழா. திடீரென்று யாரோ அல்லக்கைகள், அதிமுக தூண்டுதலால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து சிலை திறப்புவிழாவுக்கு தடைவாங்க முயற்சித்துக் கொண்டிருந்தார்கள். ‘தடையை உடைப்போம்’ என்று கர்ஜித்தார் கலைஞர். உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர்கள் போராடி, ஒருவழியாக மாலை மூன்று மணியளவில் அத்தனை பிரச்சினைகளையும் கட்டுக்கு கொண்டுவந்தார்கள்.

தமிழ் திரையுலகமே திரண்டு வந்து கலந்துகொள்ள போகிறது. திடீர் சிவாஜி ரசிகனாகிவிட்ட நான் அன்று காலையிலிருந்தே ஒருமாதிரி நெகிழ்வான நிலையில் இருந்தேன். விழாவுக்கு போயே ஆகவேண்டும். முதல் நாளே சிவாஜி சிலையை தரிசித்தே ஆகவேண்டும் என்று மனசு அடித்துக் கொண்டது. மனசுக்குள் நிரந்தரமாக சம்மணம் போட்டு அமர்ந்திருந்த எம்.ஜி.ஆர் ரசிகன் மட்டும் கிண்டலடித்துக் கொண்டே இருந்தான்.

மாலை நெருங்க நெருங்க மனசு தாங்கவில்லை. இப்போது மயிலாப்பூரில்தான் அலுவலகம். அங்கிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் விழா. ஹீரோஹோண்டாவை முறுக்கி கடற்கரைக்கு விட்டேன்.

மணல்பரப்புக்கு அந்தப் பக்கம் கடலலை. சாலையில் மனித அலை. நான் இருந்த இடத்தில் இருந்து மேடை சுமார் அரை கி.மீ. தூரத்தில் இருந்தது. அதற்கு மேல் ஒரு இன்ச் கூட முன்னேற முடியாத அளவுக்கு நெரிசல்.

ரஜினிகாந்த் பேசிக்கொண்டிருக்கிறார்.

“ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இதே கடற்கரை சாலையில் இரண்டு இளைஞர்கள் நடந்துச் சென்றுக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு இளைஞன் சொல்கிறான். ‘நண்பா, இதே சாலையில் எனக்கு சிலை வைக்குமளவுக்கு முன்னேற வேண்டும்’

அடுத்த இளைஞன் சொல்கிறான். ‘உனக்கு சிலை அமைக்கக்கூடிய அதிகாரத்தை நான் எட்ட வேண்டும்’

சிலையாக விரும்பியவர் சிவாஜி. சிலை அமைத்தவர் கலைஞர்”

திரண்டிருந்தவர்களின் கரவொலி கடலொலியை மிஞ்சியது. எனக்கு பின்னே ஒருவன் கூட்டத்தில் இடித்துக் கொண்டே இருந்தான். திரும்பி முறைக்க, “சாரி பாஸ்” என்றான். அவனை விட்டு விலகி இன்னும் சற்று முன்னேறினேன்.

ஏதோ குறைவது போல தோன்ற சட்டென்று பேண்ட் பின்பாக்கெட்டை தொட்டுப் பார்த்தபோதுதான் ‘பர்ஸை காணோம்’ என்று தெரிந்தது. இடித்துக் கொண்டிருந்தவன் உருவிவிட்டிருக்கிறான். இருபத்தைந்தாயிரம் பேர் கூடியிருந்த அந்த கூட்டத்தில் அவனை எங்கே தேடுவது, அவனது முகம்கூட நினைவில் இல்லை. பர்ஸில் நாலு கிரெடிட் கார்ட், ரெண்டு டெபிட் கார்ட், கொஞ்சம் பணம் இருந்தது.

இதற்கிடையே விழா முடிந்து விஐபிகள் கிளம்பத் தொடங்கினர். கூட்டம் அப்படியே வரிசை கட்டி சிலையை தரிசித்துவிட்டு கலையத் தொடங்கியது. இரவு 9.30 மணியளவில்தான் என்னால் நடிகர் திலகத்தை அருகே தரிசிக்க முடிந்தது. சிலர் கையிலேயே கற்பூரம் ஏற்றி ஆரத்தி காட்டிக் கொண்டிருந்தார்கள். கோயில் கொடிமரத்தின் முன்பாக நெடுஞ்சாண்கிடையாக விழுவது மாதிரி நிறைய பேர் விழுந்து வணங்கிக் கொண்டிருந்தார்கள். நானும் ஒரு நெடுஞ்சாண்கிடையை போட்டுவிட்டு,  ஹீரோ ஹோண்டோ எங்கிருக்கிறது என்று தேடத் தொடங்கினேன். நல்லவேளை வண்டியை எவனும் லவட்டவில்லை.