31 மார்ச், 2014

லெஜெண்ட்

கால்கள் இரண்டையும் சேர்த்துவைத்து நேராக நிமிர்ந்து நிற்கமுடியாவிட்டால் உங்களை ஸ்கூல் என்.சி.சி.யில் கூட சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். ஆனால் பாருங்கள். பாலகிருஷ்ணா சாமியின் ரீமேக்கான லக்‌ஷ்மி நரசிம்மாவில் டெபுடி கமிஷனர். பரமவீர சக்ராவில் இராணுவ மேஜர். ரசிகர்களும் அவரை போலிஸாகவும், இராணுவ மாவீரனாகவும் ஏற்றுக்கொண்டு கொண்டாடி தீர்க்கிறார்கள். உங்களுக்கு என்ன சாமி போச்சு?

பாலகிருஷ்ணாவுக்கு வயது ஐம்பத்தி மூன்று. இருபத்தைந்து வயதை எட்டிவிட்ட பெண்கள் கூட அவருக்கு ஹீரோயினாக முடியாது. சுமோவை சுண்டுவிரலால் தூக்கியடிக்கிறார். கிராபிக்ஸோ கேமிரா டெக்னிக்கோ அல்லது என்ன எழவோ. மைக்கேல் ஜாக்ஸனைவிட சிறப்பாக மூன்வாக் செய்கிறார். அவரது விரல் லேசாக தொப்புளில் பட்டதுமே நயன்தாராவே விரகதாபம் கொள்கிறார். பாலைய்யா தொடையை தட்டினால் ஆகாயத்தில் பறக்கும் விமானமே ஆட்டம் காண்கிறது. கண்ணசைவில் கடல் கொந்தளிக்கிறது. ஹாலிவுட் சூப்பர் ஹீரோக்களை வரிசைகட்டி வந்து இவரிடம் பிச்சையெடுக்கச் சொல்லுங்கள்.

சென்னையில் பிறந்துவளர்ந்த பாலகிருஷ்ணா தன்னுடைய அப்பா என்.டி.ஆரின் இயக்கத்தில் குழந்தை நட்சத்திரமாக நிறைய தெலுங்கு படங்களில் நடித்தார். அப்பா ஆரம்பித்த கட்சியான தெலுங்குதேசம் அவருக்கு உயிர். தன்னுடைய மூத்த மகளை அக்கா மகனுக்கே மணம் முடித்து கொடுத்தார். சம்பந்தி வேறு யாருமல்ல. ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுதான். அவருடைய பின்னணி புரியாமல் அவரது படத்தை பார்க்கும் மாபாவிகள் மொக்கை என்று விமர்சிக்கிறார்கள். பாலைய்யாவின் பாத்திரங்களை ஆந்திர அரசியல், சமூக சூழல் புரிந்தவர்களால் மட்டுமே ரசிக்க முடியும். அவர் ஏன் ஆரஞ்சு கலரில் பேண்ட் போடுகிறார், கிளிப்பச்சை கலரில் சட்டை அணிகிறார், ஊதா கலரில் பெல்ட் மாட்டியிருக்கிறார் என்பதன் பின்னாலெல்லாம் நியாயமான காரணங்கள் இல்லாமல் இல்லை. நரம்பு புடைக்க, கன்னத்து தசைகள் அதிர அவர் பேசும் வசனங்கள் வெறும் சினிமா வசனங்கள் அல்ல. ஒவ்வொரு ஆந்திர குடிமகனின் உள்ளத்துக்குள் கனன்று கொண்டிருக்கும் நெருப்பு. இதையெல்லாம் புரிந்துகொள்ள முடியாத தமிழ் ஸ்டுடியோ அருண்கள் ‘சினிமா பாரடைஸோ’விலேயே தங்கிவிடலாம். தெலுங்கு படங்களை பார்க்கும் தற்கொலை முயற்சியில் குதிக்கவேண்டியதில்லை.

‘லெஜெண்ட்’ பாலையாவின் தொண்ணூற்றி எட்டாவது படம். நேற்றைய மழையில் முளைத்த காளான்கள் எல்லாம் அரசியல் பஞ்ச் பேசி க்ளாப்ஸ் அள்ளிக் கொண்டிருக்கையில், வெயிட்டான பேக்கிரவுண்ட் வைத்திருக்கும் பாலைய்யாவுக்கு சமீபமாக சொல்லிக்கொள்ளும்படி ஹிட் இல்லை. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பொங்கலுக்கு வெளிவந்து பாக்ஸ் ஆபிஸை சுக்குநூறாக்கிய சிம்ஹாதான் கடைசி ஹிட். என்.டி.ஆருக்கு பிறகு உருவெடுத்த சிரஞ்சீவி, நாகார்ஜூனா, பவன்கல்யாண், மகேஷ்பாபு, ஜூனியர் என்.டி.ஆர்., ராம்சரண் என்று தெலுங்கு சினிமாவின் அடுத்தடுத்த சூப்பர் ஸ்டார்களுக்கு ஒரே ஒருவர்தான் நிரந்தர போட்டி. தி ஒன் அண்ட் ஒன்லி பாலைய்யா.

ஆந்திரா இரண்டாக பிரிக்கப்படுகிறது. பாராளுமன்றத் தேர்தல் வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் அப்படிப்பட்ட பாலைய்யா என்ன செய்யவேண்டுமோ அதைதான் லெஜண்டில் செய்திருக்கிறார். காட்டுத்தனமான கொலைவெறியாட்டம். சிம்ஹாவில் பாலைய்யாவுக்கு ரீலைஃப் கொடுத்த அதே பொயப்பட்டி சீனுதான் இயக்குனர். ஒரு மாஸ் ஹீரோவை எப்படி புரொஜெக்ட் செய்யவேண்டும் என்கிற நாடி தெரிந்த இயக்குனர். ரவிதேஜாவை தன் அறிமுகப்படமான பத்ராவிலேயே ஷார்ப்பாக தீட்டியவர். ஜூனியர் என்.டி.ஆரின் மிருகவெறிப் படமான ‘தம்மு’தான் அவருடைய முந்தைய படைப்பு.

தெலுங்கில் இப்போது புது டிரெண்ட். ஒரே டிக்கெட்டில் இரண்டு படங்கள். இவ்வருட தொடக்கத்தில் இந்த ஃபார்மேட்டில் வெளிவந்த ராம்சரணின் ‘எவடு’ சூப்பர்ஹிட். ‘லெஜண்ட்’டும் அதே வடிவம்தான். டோலிவுட் படங்களில் ஹீரோவின் அறிமுகக் காட்சிக்குதான் கிரியேட்டிவ்வாக இயக்குனர்களும், உதவி இயக்குனர்களும் டிஸ்கஷனில் மண்டையை உடைத்துக் கொள்வார்கள். களேபரமாக, இதுவரை உலக சினிமாவில் வந்திருக்காத காட்சியாக அந்த பில்டப் அமைந்தால்தான் ரசிகர்களிடம் எடுபடும். லெஜண்டில் ஒவ்வொரு சண்டைக் காட்சியின் தொடக்கத்திலும் ஒன்றுக்கு ஆறாக அதகள பில்டப். பாலையாவுக்கு மட்டுமல்ல, காமெடியன் பிரம்மானந்தத்துக்கு ‘பாட்ஷா’ லெவல் (பாட்ஷா லெவலென்ன, பாட்ஷாவேதான்) பிளாஷ்பேக் வைத்து அமர்க்களம் செய்திருக்கிறார்கள்.

பாலையா டேன்ஸில் கொஞ்சம் கூடுதலாக காண்சன்ட்ரேட் செய்யக்கூடியவர். பாடல் காட்சிகள் வித்தியாசமான லொகேஷன்களில், செம தீமில், அட்டகாசமான நடன அசைவுகளோடு அமையவேண்டும் என்று ஆசைப்படக்கூடியவர். ஆனால் ஆந்திராவின் இளையதலைமுறை ரசிகர்கள் இவரது நடனத்தை காமெடிக் காட்சியாகதான் பார்க்கிறார்கள். இந்த வரலாற்று சோகத்தையும் முற்றிலுமாக துடைத்தெறிந்திருக்கிறது லெஜண்ட். இப்படத்தில் ஆடுபவர் பாலகிருஷ்ணாவா அல்லது ஜூனியர் என்.டி.ஆரா என்று கையை கிள்ளி பார்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. அவரது முதுமையையும் தாண்டி ரிஸ்க் எடுத்து, டூப் போடாமல் அசுரத்தனமான அசைவுகளை அனாயசமாக செய்திருக்கிறார்.

இங்கே ‘தல’யோட பைக்கை காட்டினாலேயே விசில் அடிக்கிறார்கள். ‘தல’க்கு மட்டும்தான் பைக்கே ஓட்டத்தெரியும் என்று தமிழர்களுக்கு அப்படியொரு நம்பிக்கை. பாலைய்யா பைக், கார், ரயில், குதிரை, ஹீரோயினையெல்லாம் அசால்டாக ஓட்டுகிறார். ப்ளைட் மற்றும் கப்பல் ஓட்டக்கூடிய காட்சிகள் இல்லாததுதான் படத்தின் ஒரே குறை.

கதை?

அதை விட்டுத்தள்ளுங்கள். இங்கே கே.எஸ்.ரவிக்குமார், ஹரியெல்லாம் நிறைய செய்துவிட்ட கதைதான். ஆனால் ட்ரீட்மெண்ட் பின்னி பெடல் எடுக்கிறது. பரபர திரைக்கதை. போதுமான இடைவெளிகளில் சூப்பர் பாடல்கள். ரொமான்ஸ். ஆக்‌ஷன் என்று அமர்க்களமான மசாலா. பி அண்ட் சி ஏரியாவின் அதிரடி பேட்ஸ்மேனான பாலகிருஷ்ணா இம்முறை மல்ட்டிப்ளக்ஸிலும் சிக்ஸர்களாக விளாசியிருக்கிறார். தன்னுடைய அரசியல் மூவ் அடுத்து என்னவென்று இறுதியில் ரசிகர்களுக்கு க்ளூவும் கொடுத்திருக்கிறார். Balaiah rules the tollywood summer!

லெஜண்ட் : மரண கொண்டாட்டம்!

26 மார்ச், 2014

மரணருசி

“வீட்டில் நான் இல்லாதபோது, நான் இருக்கிறேனா என்று யாராவது கேட்டால் ‘இல்லை’ என்றுதான் சொல்வார்கள். இதுபோல நாம் ஏராளமான இடங்களில் இருக்கிறபோதே ‘இல்லை’ ஆகிக்கொண்டிருக்கிறோம். இந்த இன்மையைப் பற்றியெல்லாம் கவலைப்படாத நாம், என்றோ ஒருநாள் நிரந்தரமாக உலகில் ‘இல்லை’ எனப்படும் மரணம் குறித்துதான் எப்பவும் அச்சப்பட்டுக் கொண்டிருக்கிறோம்”

‘கதைகள் பேசுவோம்’ இலக்கிய முகாமில் எஸ்.ராமகிருஷ்ணன் பேசிக்கொண்டிருந்தபோதே, அங்கு வந்திருந்த சில பத்திரிகையாளர்களின் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். வந்துகொண்டிருந்தது. சகோதரர்களான இரு மூத்த பத்திரிகையாளர்களின் தாயார் காலமாகி விட்டார். உடனடியாக செங்கல்பட்டிலிருந்து கிளம்பிவந்து, இறுதிமரியாதையில் கலந்துகொள்ள சாத்தியமில்லை.

மறுநாள் அண்ணன் சிவராமனோடு துக்கம் விசாரிக்க சென்றிருந்தேன். மொட்டை அடித்திருந்தவர் மெதுவாக பேச ஆரம்பித்தார். “நமக்கு இந்த நம்பிக்கையெல்லாம் இல்லைன்னா கூட, அம்மாவுக்கு இதில் தீவிரமான ஈடுபாடு இருந்தது. அதனாலே அவங்க ஆசைப்பட்டமாதிரியே அனுப்பி வெச்சிட்டோம்”

மரணத்துக்கு முன்பாக சில காலம் அவரது தாயார் அனுபவித்த உடல் உபாதைகள், அதன் விளைவாக அவர் மற்றவர்களை சிறுசிறு தேவைகளுக்காகவும் அணுகவேண்டியதினால் ஏற்பட்ட சுயமரியாதை தொடர்பான உளவியல் சிக்கல், மருத்துவ சிகிச்சைகள் என்று பேசிக்கொண்டே இருந்தார்.

சட்டென்று கண்கலங்கியவர் சிறுவயது நினைவுகளுக்குள் நுழைந்தார். தன்னையும், தம்பியையும் அவர் வளர்த்த விதம், தொடர்பான சம்பவங்கள் என்று முன்பின்னாக சொல்லத் தொடங்கினார். தன்னுடைய தாயாரின் நுண்ணுணர்வு குறித்து அவர் சொன்ன தகவல்கள், கேட்பவர்களுக்கு கொஞ்சம் அமானுஷ்யமான தன்மையை தரும். எத்தனையோ வருடங்களுக்கு முன்பாக யதேச்சையாக வீட்டுக்கு வந்தவர்களை, பல வருடங்கள் கழித்து சந்தித்தாலும் துல்லியமாக முந்தைய சந்திப்பின்போது நடந்தவை, பேசியவற்றையெல்லாம் நினைவுகூர்வார் என்றார். அவர் கற்ற கல்விக்கும், வெளியுலக அனுபவத்துக்கும் சற்றும் தொடர்பில்லாத துல்லியமான கேள்விகளை மற்றவர்களிடம் எழுப்பக்கூடியவராக வாழ்ந்திருக்கிறார்.

எண்பத்தேழு வயது தாயை பற்றி அவரால் எண்ணூறு பக்கங்களுக்கு எழுதக்கூடிய நினைவுப்பொக்கிஷங்கள் நிறைய இருக்கிறது என்று தெரிந்தது. மரணம் ருசித்த ஒரு முழு மனிதர் ஒட்டுமொத்தமாக, உலகில் எந்த தடயமுமின்றி இல்லாமல் போய்விடுவதில்லை. நினைவுகள் வாயிலாக உற்றார், உறவினரிடம் சில காலத்துக்கு அவர் இருந்துக்கொண்டுதான் இருக்கப்போகிறார்.

அன்றிரவு எஸ்.ராமகிருஷ்ணனின் ‘உறுபசி’ வாசித்தேன்.

நாவலின் முதல் வரியிலேயே நாயகன் சம்பத் மரித்துப் போகிறான். அவனோடு கல்லூரியில் படித்த மூன்று நண்பர்கள் கானகத்துக்குள் நடந்துக்கொண்டே இருக்கிறார்கள். சம்பத்தின் மரணம் ஒவ்வொருவரையும் ஒவ்வொருவிதமான மனப்பிறழ்வுக்கு ஆளாக்கியிருக்கிறது. அந்த கானகத்துக்குள் தங்கியிருந்த நாட்களில், அவர்களது ஒவ்வொருவரின் மீள்பார்வையாக நாவல் விரிகிறது. இடையில் சம்பத்தின் மனைவி, முன்னாள் காதலி ஆகியோரும் அவரவர் தொடர்புடைய சம்பவங்களை நினைத்துப் பார்ப்பதாக, கிட்டத்தட்ட ‘ரோஷோமான்’ உத்திகொண்டு நாவல் பின்னப்பட்டிருக்கிறது.

சம்பத் குறித்த குழப்பமான பிம்பமே ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. வாசிப்பவர்களுக்கும் அந்த பாத்திரத்தை எடைபோடுவதில் சிக்கல் ஏற்பட்டு தத்தளிப்பதை எழுத்தாளர் விஷமப் புன்னகையோடு ரசிக்கிறார். ஒரு கட்டத்தில் உலகத்திலேயே இவன்தான் புத்திசாலி என்று கருதக்கூடியவனாக இருக்கிறான். மறு சந்தர்ப்பத்தில் அவன் மனநோயாளியா என்று சந்தேகிக்கக்கூடிய சாத்தியங்கள் தோன்றுகிறது. சம்பத்தோடு வாழ்ந்த அவனுடைய மனைவிக்கே கூட இறந்தபின்னும் அவனை எப்படி எடுத்துக் கொள்வது என்கிற குழப்பம் இருக்கிறது. பாதசாரி எழுதிய காசியின் தாக்கம் சம்பத்துக்கு உண்டு என்று எஸ்.ரா சொல்கிறார்.

கல்லூரி நாட்களில் கதாநாயகனாக பார்க்கப்பட்ட சம்பத் காட்டாறாய் வாழ்ந்து தனக்கும் தன்னைச் சுற்றியிருந்தவர்களுக்கும் எதிர்பாராத இன்ப அதிர்ச்சிகளையும், சொல்லவொண்ணா துயரங்களையும் சரிபாதியாய் வழங்குகிறான். மனம்போன போக்கில் வாழவிருப்பப்படும் சம்பத்துக்கு குடும்பமும், சமூகமும் தடைகளாக தோன்றியிருக்க வேண்டும் என்று நாம் யூகித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால் இரத்தம் சுண்டத் தொடங்கும் நடுத்தர வயது காலக்கட்டத்தில் காமத்தின் தேவைக்காவும், வாழ்க்கைத் துணைக்காகவும் திருமணம் செய்துக் கொள்கிறான். அவன் அன்பான கணவனா அல்லது சைக்கோவா அல்லது இரண்டுமேவா என்கிற தெளிவு நாவல் முடிந்தபோதும் நமக்கு ஏற்படுவதில்லை. ஐந்து பேர் அவனது வாழ்க்கையை அக்குவேறு ஆணிவேறாக அலசியும் கடைசிவரை சம்பத் ஒரு மர்மப் பாத்திரமாகவே, விளங்காத புதிராகவே இருப்பதுதான் நாவல் தரும் சுகமான சுவாரஸ்யம்.

இந்நாவல் மரணம் குறித்த விசாரணைகளை விஸ்தாரமாக அலசுகிறது. நவீன மனிதவாழ்வு மரணங்களை எப்படி எதிர்கொள்கிறது என்பதை அப்பட்டமாக காட்டுகிறது. மரணவீட்டின் அபத்தத்தை கேலி பேசுகிறது (உதா : கணவன் பிணமாக கிடக்கிறான். தலைமாட்டில் அமர்ந்திருக்கும் மனைவிக்கு சிறுநீர் முட்டிக்கொண்டு வருகிறது). மரணத்துக்கு முன்னான நோய்மைக்காலத்தை வலியோடு எழுதுகிறது. மருத்துவமனை வராண்டாவில் இருவர் நடக்கும் காட்சியை, ‘நாங்கள் நோய்மையின் தாழ்வாரத்தில் நடந்துக்கொண்டிருந்தோம்’ என்று விவரிக்கிறார் எஸ்.ரா.

நாவலை வாசித்து முடித்ததுமே இதுதான் தோன்றியது. சாதாரண மனிதனின் மரணம் ஒன்றும் சமூகத்துக்கு அவ்வளவு முக்கியமான நிகழ்வு அல்ல. நாம் அச்சப்படக்கூடிய அளவுக்கு நம்முடைய மரணம் பெரிய பின்விளைவுகளை ஏற்படுத்திவிடாது. பைக் பஞ்சர் ஆனதுமே, கடையில் கொடுத்து பஞ்சர் ஒட்டி ஓட்டிக்கொண்டு செல்வதைப் போல, நம்முடைய மரணத்துக்குப் பிறகு ஒரு சில நாள் சோகத்தை முடித்துக்கொண்டு காரியம் செய்துவிட்டு சுற்றமும், நட்பும் வழக்கம்போல வாழத் தொடங்கிவிடும். மிகக்குறைவான நபர்களின் நினைவில் மட்டுமே மரணத்துக்குப் பிறகும் சில காலம் நாம் வாழக்கூடும்.

மரணம் ஒரு சலுகை தருகிறது. வாழும்போது நாம் செய்த காரியங்களில் பெரும்பாலான கெட்டதை எல்லாம் அழித்துவிட்டு, நல்லதை மட்டுமே மற்றவர்களின் நினைவுகளில் உலவவிடுகிறது. மரணித்து விட்டவர்கள் மீது யாருக்கும் கறாரான விமர்சனங்கள் இருப்பதில்லை.
நூல் : உறுபசி
எழுதியவர் : எஸ்.ராமகிருஷ்ணன்
பக்கங்கள் : 136
விலை : ரூ.110
வெளியீடு : உயிர்மை பதிப்பகம்
11/29, சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை-600018.
போன் : 044-24993448

21 மார்ச், 2014

ஒரு சிடி 30 ரூபா

அப்போது கிழக்கு பதிப்பகத்தில் மாதநாவலுக்கு ஒரு இம்பிரிண்ட் தயார் செய்துக் கொண்டிருந்தார்கள். ‘கிழக்கு த்ரில்லர்’. நிறைய எழுத்தாளர்களிடம் கதைகளை கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

“2012 பொங்கலுக்கு ‘நண்பன்’ ரிலீஸ் ஆவுது. ஆனா 2011 டிசம்பர் 31ஆம் தேதியே திருட்டு டிவிடி வெளிவந்துடுது; இந்த ஒன்லைனரை வெச்சி ஒரு இருவதாயிரம் வார்த்தையிலே ஒரு கதை எழுதி கொடு பார்க்கலாம்” என்றார் பாரா.

அவர் சொன்ன காலக்கெடுவுக்குள் எழுத முடியவில்லை. கொஞ்சம் நாள் கழித்து கொடுத்தேன். இடையில் பாரா கிழக்கில் இருந்து விலகி சீரியல் உலகில் நுழைந்துவிட்டார். கிழக்கும் அந்த மாதநாவல் இம்ப்ரிண்டை நிறுத்திவிட்டது.

‘நண்பன்’ திரைப்படம் வெளியாக ஒரு மாத காலம் இருந்தபோது, என்னுடைய வலைத்தளத்தில் ஒவ்வொரு அத்தியாயமாக பதிய ஆரம்பித்தேன். அதை வாசித்த நண்பர் கே.ஆர்.பி.செந்தில், நண்பரும் இயக்குனருமான கேபிள்சங்கரிடம் இந்த கதை பற்றி சொல்லியிருக்கிறார். அதை புத்தகமாக கொண்டுவர வேண்டும் என்று என்னிடம் பேசிய கேபிள், உடனடியாக நட்பு அடிப்படையில் முயற்சிகளை மேற்கொண்டார். நண்பர் உலகநாதன் தன்னுடைய பதிப்பகம் மூலமாக அழிக்கப் பிறந்தவனை கொண்டுவந்தார்.

அந்த நாவல் தமிழ் வாசக பரப்பில் பெரிய அதிர்வுகளை எல்லாம் ஏற்படுத்திவிடவில்லை என்றாலும், முக்கியமான பலர் என்னை கவனிக்க காரணமாக அமைந்தது. என்னுடைய ‘விசிட்டிங் கார்ட்’ என்றுகூட அழிக்கப்பிறந்தவனை சொல்லலாம். குறிப்பாக சினிமாக்காரர்கள் நிறையபேர் வாசித்துவிட்டு என்னை தொடர்புகொண்டு பேசினார்கள். ஒரு படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதக்கூடிய வாய்ப்புகூட கதவை தட்டியது.

“இந்த கதையை ஸ்க்ரிப்டாக எழுதிக் கொடுங்கள்” என்று நான்கைந்து உதவி இயக்குனர்கள் கேட்டார்கள். “என்னால் ஸ்க்ரிப்ட் எழுத முடியாது. அனுபவமும் இல்லை. யார் முதலில் எழுதி, படத்தை இயக்க வாய்ப்பு கிடைக்கிறதோ அவர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஆனால் டைட்டிலில் ‘based on the novel அழிக்கப் பிறந்தவன், written by yuvakrishna’ என்று கிரெடிட் கொடுக்கவேண்டும் என்று மட்டும் நிபந்தனை விதித்திருந்தேன். அவர்களில் ஓர் உதவி இயக்குனர் ஸ்க்ரிப்ட் தயார் செய்து, ஒரு தயாரிப்பாளரை பிடித்து படம் இயக்கவும் வாய்ப்பு பெற்றுவிட்டார். ஆனால் படப்பிடிப்புக்கு போவதற்கு முன்பாக நான் ஸ்க்ரிப்ட்டை பார்வையிட வேண்டும். நாவலில் நெருடும் சில விஷயங்களை சரி செய்ய வேண்டும் என்று என்னிடம் அனுமதி கேட்ட அத்தனை பேரிடமும் சொல்லி வைத்திருக்கிறேன். உதாரணமாக இஸ்லாமிய தோழர்கள் மனம் புண்படுகிற விதமாக அதில் ஒரு காட்சியமைப்பு இருக்கிறது. இதை நண்பர் அப்துல்லா எனக்கு சுட்டி காட்டினார். நாவல் வேறு வடிவத்திலோ அல்லது இரண்டாம் பதிப்பு வருகையிலோ அதை சரிசெய்துவிடுவேன் என்று அவரிடம் வாக்கு கொடுத்திருக்கிறேன்.
நாவல் வெளிவந்திருந்தபோது பாடலாசிரியர் பா.விஜய், நாவலை வாசித்துவிட்டு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டி பேசினார். அதற்கு பிறகு சிலமுறை அவரிடம் போனில் பேசியிருக்கிறேன். நேரிலும் ஒருமுறை பார்த்திருக்கிறேன். சமீபத்தில் அவர் நடிக்கும் புதிய திரைப்படம் ஒன்றின் விளம்பரத்தை ‘தட்ஸ் தமிழ்’ இணையத்தளத்தில் கண்டதுமே, அவருக்கு ‘வாழ்த்துகள்’ தெரிவித்து குறுஞ்செய்தியும் அனுப்பி வைத்தேன்.

நேற்று மாலை அழிக்கப் பிறந்தவனை வாசித்திருந்த நண்பர் ஒருவர் திடீரென ‘அழிக்கப்பிறந்தவனுக்கு வாழ்த்துகள்’ என்று சொல்லி மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். இரண்டு ஆண்டுகள் கழித்து எதற்கு வாழ்த்துகள் என்று கேட்டதுமே, உங்க நாவல் படமாகுது போல என்று சொன்னார்.
கூடவே மேற்கண்ட இமேஜையும் அனுப்பியிருக்கிறார். அந்த விளம்பரத்தை கண்டதுமே பா.விஜய் நடிக்கும் ‘ஒரு சிடி 30 ரூபா’ என்பது, அழிக்கப்பிறந்தவனை தழுவி எடுக்கப்படுவது நன்கு தெரிகிறது. இதில் இருக்கும் பாத்திரங்கள் அனைத்துமே, நாவலில் அப்படியே இருக்கின்றன. இதுவரை இப்படத்தின் கதையை எழுதி (?) இயக்கும் இயக்குனரோ அல்லது வேறு யாருமோ என்னிடம் இதுபற்றி பேசவில்லை. ‘அழிக்கப் பிறந்தவன்’ நாவலின் ஐந்து அத்தியாயங்கள் கீழ்க்கண்ட இணைப்புகளில் இருக்கிறது. முடிந்தால் அதை வாசித்து, மேற்கண்ட ‘ஒரு சிடி 30 ரூபா’ விளம்பரத்தைப் பாருங்கள்.

| அழிக்கப் பிறந்தவன்-1    |    அழிக்கப் பிறந்தவன்-2    |    அழிக்கப் பிறந்தவன்-3  |
| அழிக்கப் பிறந்தவன்-4    |    அழிக்கப் பிறந்தவன்-5    |    அழிக்கப் பிறந்தவன்-6  |

நூல் வடிவில் வாங்க : ‘டிஸ்கவரி புக் பேலஸ்’

inspiration அல்லது தழுவுதலை பெரிய குற்றமாக நான் நினைக்கவில்லை. சினிமாத்துறை ஆரம்பத்தில் இருந்தே இப்படிதான் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் தமிழிலேயே, சில காலம் முன்புதான் வந்த ஒரு நாவலை தழுவி எடுக்கும்போது, ரத்தமும் சதையுமாக உயிரோடு இருக்கும் சம்பந்தப்பட்டவர்களிடம் முன்கூட்டியே பேசிவிடலாம் இல்லையா?

இந்த நாவலைப் பொறுத்தவரை, சட்டப்படி உரிமை எனக்குதான் சொந்தம் என்றாலும் தார்மீகரீதியாக முழுக்க முழுக்க எனக்கு மட்டுமே சொந்தம் என்று நான் உரிமை கொண்டாடிவிட முடியாது. இதன் ஒன்லைனரை உருவாக்கி தந்தவர் எழுத்தாளர் பா.ராகவன். இதில் ஓர் முழு அத்தியாயத்தை எழுதித் தந்தவர் நண்பர் அதிஷா. கே.ஆர்.பி.செந்தில், கேபிள் சங்கர் போன்றவர்கள் இதை புத்தக வடிவில் கொண்டுவர முயற்சித்தவர்கள். உலகநாதன் பதிப்பாளர். நண்பர் சுகுமார் அட்டைப்படத்தை வடிவமைத்தவர். டிஸ்கவரி புக் பேலஸ் நண்பர் வேடியப்பன் விற்பனை உரிமை பெற்றிருப்பவர். சிவராமன், நரேன் போன்ற இன்னும் நிறைய நண்பர்கள் மறைமுகமாக இதில் பங்களித்திருக்கிறார்கள். இந்நாவல் திரைப்படமாக வருகிறது என்றால் என்னைவிட அதிக மகிழ்ச்சி அடையப் போகிறவர்கள் அவர்கள்தான். அப்படியிருக்க எங்களுக்கு சம்பந்தமேயில்லாத யாரோ மொத்தமாக இதன் பலனை அறுவடை செய்வது நியாயமா?

என்ன செய்யலாம்? சொல்லுங்கள், நண்பர்களே!

18 மார்ச், 2014

டிஜிட்டல் தீண்டாமை

இணையத்தளங்களில் ’பார்ப்பனீயம்’ பற்றி பேசினால் பார்ப்பனத் தோழர்கள் கோபித்துக் கொள்கிறார்கள். ‘பூணூல் எதிர்ப்பு’ தவிர்த்து உங்களிடம் வேறு ஆயுதமே இல்லையா என்று கொதித்தெழுகிறார்கள்.

1998ல் தொடங்கி ’டயல்அப் மோடம்’ காலத்திலிருந்து இணையத்தில் புழங்குகிறேன். சமூகத்தில் இப்போது வெளிப்படையாக காட்டிக்கொள்ள முடியாத பார்ப்பனர்களின் சாதிப்பற்றை இணையத்தில் மறைமுகமாகவேனும் வெளிப்படுத்துவதை, இந்த பதினாறு ஆண்டுகளாக உணர்ந்திருக்கிறேன். இந்த டிஜிட்டல் பார்ப்பனீயத்தை யாரேனும் சுட்டிக் காட்டும்போது அவர்களுக்கு ‘சுர்’ரென்று கோபம் எழுவது இயல்புதான்.

1) குழு சேர்ந்து பார்ப்பனரல்லாதவர்களை கிண்டல் செய்வது. முதல் தலைமுறையாக கல்விகற்று இணையத்துக்கு வருபவர்களை நக்கல் அடித்து துரத்தி அடிப்பது. பிறப்பு, வளர்ப்பு குறித்த inferiority complex ஏற்படுத்துவது.

2) இடஒதுக்கீடு போன்ற விவாதங்கள் வரும்போது ‘தகுதி’ பேசுவது. தகுதி என்பது பூணூலா என்று பதில் கேள்வி கேட்டால், ‘அய்யய்யோ... சாதிவெறி புடிச்சவன்’ என்று கூப்பாடு இடுவது.

3) ‘லைக்’ இடுவது, ‘கமெண்டு போடுவது’, ‘விவாதிப்பது’ போன்ற விஷயங்களில் இருக்கும் partiality. நீண்டகால இணைய விவாதங்களில் நீடிப்பவர்கள் இதை தெளிவாக உணரமுடியும்.

4) மோடி, ஜெயலலிதா என்று அவர்களது தேர்வுகள், எந்த தேசத்தில் வசிப்பவர்களாக இருந்தாலும் unique ஆக இருக்கும். தேசம் கடந்து எப்படி எல்லோரும் ஒரே மாதிரி சிந்திக்கிறார்கள், இவர்களை இணைக்கும் ‘சக்தி’ எதுவென்று நமக்கு ஆச்சரியமாக இருக்கும்.

5) ‘ஈழம்’ மாதிரி பிரத்யேகப் பிரச்சினைகளில் எப்போதும் மெஜாரிட்டியான தமிழர்களுக்கு எதிரான வாதங்களையே முன்வைப்பார்கள். அதுவே பார்ப்பனரல்லாத தலைமைக்கு எதிராக திரும்பும் சந்தர்ப்பம் கிடைக்கிறதென்றால், அதையும் பயன்படுத்திக் கொண்டு தாங்கள் முன்பு பேசிவந்தவற்றிலிருந்து அப்படியே ‘யூ டர்ன்’ அடிப்பார்கள்.

6) தமிழர்களை ‘பொறுக்கி’ என்றே இணையத்தில் எப்போதும் விளிக்கும் சுப்பிரமணிய சாமி போன்றவர்களை இவர்கள் கண்டித்ததில்லை. பதிலுக்கு ரீட்விட்டு, லைக்கும் தூள்பறக்கும். ஏனெனில் அந்த விளிப்பு தங்களுக்கு பொருந்தாது என்று அவர்களுக்கு தெரியும். ஆனால் அதே மொழியை எதிர்விவாதம் செய்பவர்கள் பயன்படுத்திவிட்டால், ‘அய்யய்யோ... நாகரிகம் அற்ற காட்டுமிராண்டிகள்’ என்று கூப்பாடு போடுவார்கள். அயல்நாட்டில் எல்லாம் படித்த பேராசிரியர், லஜ்ஜையே இல்லாமல் தன்னை சாதியடையாளத்தோடு சமூகத்தில் முன்வைத்துக் கொள்கிறாரே என்றெல்லாம் யோசிப்பதேயில்லை.

7) ஊழல்தான் நாட்டின் முதன்மைப் பிரச்சினை என்று வாதாடுவார்கள். சாதி, மதவாதப் பிரச்சினைகளை பேசும் விவாதங்களில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பினைச் சேர்ந்த அரசியல்வாதிகளின் (லாலு, ராசா மாதிரி) பெயர்களை அடுக்குவார்கள். அதாவது இவர்கள் அதிகாரத்துக்கு வரும் பட்சத்தில், இதுதான் நடக்கும் என்பார்கள். இஸ்ரோவிலும் இரண்டு லட்சம் கோடிக்கு மேல் இழப்பு என்று சி.ஏ.ஜி. சொல்லியிருக்கிறதே என்று சுட்டிக் காட்டினால் அப்படியே லீஸில் விட்டுவிடுவார்கள். ஊழல் எதிர்ப்பிலும் கூட இவர்களுக்கு ‘தேர்வு’ இருக்கிறது.

8) ‘பெரியார்’ என்கிற பெயரை தினமும் தேடுபொறி இயந்திரங்களில் தட்டச்சி தேடுவார்கள். மறைந்து நாற்பத்தி இரண்டு ஆண்டுகள் ஆன தலைவரை கற்பனை செய்யவியலா வார்த்தைகளில் அர்ச்சிப்பார்கள். ’பெரியாரை செருப்பால் அடித்திருக்க வேண்டும்’ என்கிற ஹெச்.ராஜாவின் பேச்சு அதனால்தான் என்னை ஆச்சரியப்படுத்தவில்லை. ஏனெனில் அதைவிட மோசமான, ஆபாசமான வார்த்தைகளை அவர் குறித்து இணையத்தில் வாசித்திருக்கிறேன்.

9) சாதிய அடிப்படைவாதம், மத அடிப்படைவாதம் கொண்டவர்களோடு, அவர்கள் எந்த சாதி, மதம் என்கிற பாகுபாடெல்லாம் காட்டாமல் தற்காலிக கூட்டணி அமைத்துக் கொள்வார்கள். அப்போதைக்கு முற்போக்காளர்கள் மூடிக்கொண்டு போகவேண்டும், அவ்வளவுதான் நோக்கம். ‘விஸ்வரூபம்’ பிரச்சினையின் போது இந்த போக்கை நீங்கள் கண்டிருக்கலாம்.

10) இவர்களோடு ஒத்துப் போகிறவர்களை அடிவருடிகளாக மாற்றிக் கொண்டு, எதிர்நிலை விவாதம் பேசுபவர்களை தேடி அடிக்கும் அடியாட்களாக மாற்றுவது. உதாரணங்கள் தேவையில்லை. அடிபட்டவர்களுக்கு புரியும்.

பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

தீண்டாமை சில இந்திய நகரங்களில் முற்றிலும் ஒழிந்திருக்கலாம். அதன் தாக்கம் சமூகத்தில் குறைந்திருக்கலாம். ஆனால் களம் மாறியிருக்கிறது. ’டிஜிட்டல் தீண்டாமை’ சத்தியமாக இங்கே நிலவுகிறது. உணராதவர்கள் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் இதற்கு அவர்களே பலியாகப்போவது உறுதி!

14 மார்ச், 2014

ஆயிரத்தில் ஒருவன்

“வெற்றி! வெற்றி!!” என்று முழங்கியவாறே அறிமுகமாகும் அந்த நபரை பார்த்ததுமே பிடித்துவிட்டது.

அப்போது அனேகமாக எனக்கு நான்கு அல்லது ஐந்து வயது இருக்கலாம். ஓம் பிரகாஷ் மாமா தலைமையில் என்னுடைய ஏகப்பட்ட அண்ணன்களோடு படத்துக்கு போயிருந்தேன். அம்மா, அப்பா இல்லாமல் தியேட்டருக்கு போய் பார்த்த முதல் படம் அதுவாகதான் இருக்கும். நான் பார்த்த முதல் எம்.ஜி.ஆர் படமும் அதுதான். மடிப்பாக்கம் தனலஷ்மி திரையரங்கம். ஐந்து ஆண்டு லைசென்ஸில் கூரைக்கொட்டகையில் இயங்கும் தற்காலிக ‘சி’ சென்டர் தியேட்டர். அந்த தியேட்டர் இருந்த இடத்தில் இப்போது ஓர் அப்பார்ட்மெண்ட் இருக்கிறது.

ஆறு மணி படத்துக்கு ஐந்து மணிக்கெல்லாம் போய் வரிசையில் முதலில் நின்றிருந்தோம். ஒலிபெருக்கியில் பக்திப் பாடல்கள் கத்திக் கொண்டிருந்தன. டிக்கெட் கிடைத்ததுமே ஆளில்லாமல் ‘ஜிலோ’வென்றிருந்த தியேட்டருக்குள் கத்திக்கொண்டே ஓடினோம். தரை டிக்கெட். சின்னப் பையன் என்பதால் முன்னால் அமருபவரின் தலை மறைக்கும் என்பதற்காக மணலை கூட்டி, எனக்கு கொஞ்சம் ஹெயிட்டான இருக்கை ஏற்படுத்தித் தந்தார் பிரபா அண்ணா. திரையில் நியூஸ் ரீல். கருப்பு வெள்ளையில் காந்தி சத்தியாக்கிரகத்துக்காக ஸ்பீட் மோஷனில் நடந்துக் கொண்டிருந்தார். “ஆனா நம்ம படம் கலருதான்” என்றார் பாலாஜி அண்ணா. அப்போதெல்லாம் தனலஷ்மியில் கருப்பு வெள்ளை படங்கள்தான் அதிகம் திரையிடப்படும்.

அக்கம் பக்கத்தில் அசுவாரஸ்யமாக நிறைய பேர் பீடி வலித்துக் கொண்டிருந்தார்கள். பெண்கள் பக்கம் செம கூட்டம். பெஞ்ச், சேர் என்று எல்லா டிக்கெட்டுகளும் நிறைந்திருந்தது. சட்டென்று புரொஜெக்டர் வண்ணத்தை ஒளிர்ந்தது. திரையில் ‘பத்மினி பிக்சர்ஸின் ஆயிரத்தில் ஒருவன்’. தியேட்டரிலிருந்த அத்தனை பேரும் விசில் அடித்தார்கள். எம்.ஜி.ஆர் பெயர் டைட்டிலில் போடப்பட்டதுமே விசிலின் டெஸிபல் இரண்டு, மூன்று மடங்கானது. காதை பொத்திக்கொண்டேன். கொஞ்சம் அச்சமாகவும் இருந்தது. திரையில் வாத்யாரை கண்டதுமே அந்த அச்சம் அகன்று, விவரிக்க இயலா பரவசம் தோன்றியது. எம்.ஜி.ஆர் தோன்றும் காட்சிகளில் எல்லாம் அவரை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தேன். அவருடைய தலையலங்காரம், உடையலங்காரம், தினவெடுக்கும் தோள்கள், கருணை பொங்கும் கண்கள், லேசாக ஸ்டைலாக கோணும் வாய், சுறுசுறுப்பான நடை, புயல்வேக வாள்வீச்சு... தமிழின் எவர்க்ரீன் சூப்பர் ஸ்டாராக அவர் விளங்குவதில் ஆச்சரியமென்ன? “பூங்கொடி கொஞ்சம் விளையாடிவிட்டு வருகிறேன்” என்று கூறிவிட்டு எம்.ஜி.ஆர் வாளால் விளையாடும் காட்சி முடிந்ததுமே தூங்கிவிட்டதாக ஞாபகம். என்னை தூக்கிக்கொண்டு வந்துதான் வீட்டில் போட்டிருக்கிறார்கள். மறுநாள் அப்பா படத்துக்கு போகும்போதும், அவரோடு அடம்பிடித்து போய் ‘சேர்’ டிக்கெட்டில் அமர்ந்து பார்த்தேன். கடந்த முப்பதாண்டுகளில் ஆயிரத்தில் ஒருவனை எத்தனை முறை பார்த்திருப்பேன் என்று கணக்கு வழக்கேயில்லை. அந்த முதல்நாள் பரவசம் இன்னமும் ரத்தத்தில் கலந்திருக்கிறது. இப்போதும் பரபரப்பாக இருக்கிறது.
நெய்தல் நாட்டின் பிரபலமான மருத்துவர் மணிமாறன். மனிதாபிமானம் கொண்டவர். அந்நாடு சர்வாதிகாரியால் ஆளப்படுகிறது. இந்த சர்வாதிகாரத்தை எதிர்த்து போராடும் புரட்சிக்காரர்களுக்கு மணிமாறன் சிகிச்சை அளிக்கிறார். எனவே அவரும் சதிகாரர் என்று குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு தீவாந்திர தண்டனைக்கு ஆளாகிறார். கன்னித்தீவு என்கிற தீவுக்கு இவர்கள் அடிமைகளாக அனுப்பப்படுகிறார்கள். அங்கே அடிமைகளின் தலைவனாக உருவெடுக்கிறார் மணிமாறன்.

கன்னித்தீவை ஆளும் தலைவனின் மகள் கட்டழகி பூங்கொடி. அழகிலும், ஆற்றலிலும், மனிதாபிமானத்திலும் சிறந்துவிளங்கும் மணிமாறனை காதலிக்கத் தொடங்குகிறாள். அவனுக்கு மட்டும் அடிமைத்தளையிலிருந்து சுதந்திரம் கிடைக்க வழி செய்கிறாள். இதை மறுக்கும் மணிமாறன், தன்னுடைய தோழர்கள் அனைவருக்குமே சுதந்திரம் வேண்டும் என்று போராடுகிறார்.

இதற்கிடையே கடற்கொள்ளையர் கன்னித்தீவை தாக்குகிறார்கள். அடிமைகள் இணைந்து கடற்கொள்ளையரை வென்றால் சுதந்திரம் நிச்சயம் என்று அறிவிக்கிறான் தீவின் தலைவன். ஆனால் வெற்றி கண்டபிறகு துரோகம் இழைக்கிறான். கடுப்பான புரட்சிக்காரர்கள் தீவிலிருந்து கலகம் செய்து தப்பிக்கிறார்கள். சூழ்நிலையின் காரணமாக கடற்கொள்ளையரோடு இணைந்து பணியாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. பரபரப்பான ட்விஸ்ட்டுகளை கடந்து பூங்கொடியை கைப்பிடிக்கும் மணிமாறன், தன்னுடைய நாட்டையும் எப்படி சுதந்திர நாடாக்குகிறார் என்பதுதான் கதை.

பார்வைக்கு பரபரப்பான காட்சிகள் மட்டுமின்றி, காதிற்கினிய பாடல்களும் படத்தின் பிரும்மாண்டமான வெற்றிக்கு அடிகோலின. ஜெயலலிதாவின் இளமை, நாகேஷின் நகைச்சுவை, நம்பியாரின் வில்லத்தனம் என்று பல்சுவை விருந்து. காசை தண்ணீராக செலவழித்து பிரும்மாண்டத்தை திரையில் உருவாக்கி காண்பவர்களின் கண்களை ஆச்சரியத்தால் விரியவைத்தார் பந்துலு.

இயக்குனர் பி.ஆர்.பந்துலு முன்பாக தயாரித்து இயக்கிய ‘கர்ணன்’ பல அரங்குகளில் நூறு நாள் ஓடியிருந்தாலும், மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக பலத்த நஷ்டத்துக்கு உள்ளாகியிருந்தார். அதை ஈடுகட்டும் விதமாக வசூல் சக்கரவர்த்தி எம்.ஜி.ஆரை வைத்து ஒரு சூப்பர்ஹிட் படத்தை தயாரித்து இயக்க திட்டமிட்டார். அதுதான் ஆயிரத்தில் ஒருவன். பந்துலுவின் எல்லா கடன்களையும் ஆயிரத்தில் ஒருவன் அடைத்ததோடு மட்டுமில்லாமல், அவரை மீண்டும் திரையுலகில் தலைநிமிரவும் வைத்தான். ‘கேப்டன் ப்ளட்’ என்கிற ஆங்கிலப் படத்தை தழுவி எடுக்கப்பட்டது இப்படம் என்று எம்.ஜி.ஆரின் பெரும் ரசிகரான கலாப்ரியா எழுதியிருக்கிறார்.
சினிமாத்துறையில் நீண்டகாலம் இயங்கிய ஒவ்வொரு நடிகருக்கும் ‘மாஸ்டர் பீஸ்’ என்று சொல்லிக்கொள்ளக் கூடிய ஒரு படம் இருக்கும். ஒன்றுக்கும் மேற்பட்ட மாஸ்டர் பீஸ்களை தந்தவர்களே சூப்பர் ஸ்டார்களாக கருதப்படுகிறார்கள். நாடோடி மன்னனுக்கு பிறகு, அதை மிஞ்சும் வெற்றி எம்.ஜி.ஆருக்கு நீண்டகாலமாக அமையாமல் இருந்தது. இடையில் சிவாஜி ஏகப்பட்ட மாபெரும் வெற்றிப்படங்களாக நடித்துத் தள்ளிக் கொண்டிருந்தார். அம்மாதிரி பெரும் வெற்றியை எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கு ஆயிரத்தில் ஒருவன் ஆபத்பாண்டவன். வசூலில் தன்னை யாராலும் நெருங்கமுடியாத சக்கரவர்த்தியாக ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில்தான் தன்னை மாற்றிக் கொண்டார் எம்.ஜி.ஆர். இதற்கு பிறகு அன்பே வா, எங்க வீட்டுப் பிள்ளை, அடிமைப்பெண், உலகம் சுற்றும் வாலிபன் என்று அவர் படைத்த சரித்திரங்கள் ஏராளம். அவ்வகையில் பார்க்கப் போனால் ‘ஆயிரத்தில் ஒருவன்’ புரட்சித்தலைவரது பிக்பேங்க் ரீ என்ட்ரி.

11 மார்ச், 2014

the female thing

சமீபத்தில் அடுத்தடுத்து காணக்கிடைத்த நான்கு திரைப்படங்களுக்கும் ஒரு யதேச்சையான ஒற்றுமை அமைந்திருந்தது. அவற்றில் ஒன்று தமிழ்-தெலுங்கு இருமொழிகளில் வெளியான திரைப்படம். ஒன்று மலையாளம். மற்ற இரண்டும் இந்தி. ஆக, ஒரே நேரத்தில் தேசம் முழுக்க பரவலான, உற்று நோக்கினால் மட்டுமே உணர்ந்துக்கொள்ளக் கூடிய ஒரு மாய அலை அடித்துக் கொண்டிருக்கிறது.

நான்கு படங்களுக்கான ஒற்றுமை என்னவென்றால், ஒவ்வொன்றுமே தனித்துவக் குணம் கொண்ட நான்கு பெண்களை பிரதான கதாபாத்திரமாக கொண்டவை. இப்பெண்கள் யாரும் ‘so called பெண்ணியம்’ பேசவில்லை. அதே நேரம் ஆண்களுக்கு சவால் கொடுக்கக்கூடிய செயல்வேகமும், மனவோட்டமும் கொண்டவர்கள். அவர்களது கதாபாத்திர அமைப்பு ‘ஆணுக்கு பெண் சமம்’ என்கிற பெண்ணிய அடிப்படை சிந்தனையை, பிரச்சாரப் பாணியாக இல்லாமல், கருத்தியல்ரீதியாக ஆண்களை வலுச்சண்டைக்கு இழுக்காமல் (ஒருவேளை நான்கு படங்களின் இயக்குனரும் ஆண் என்பதால் இருக்கலாம்) இயல்பான காட்சிகளால் வெளிப்படுத்துகிறது.

ஓம் சாந்தி ஓசண்ணா (மலையாளம்) நஸ்ரியா, ஆஹா கல்யாணம் (தமிழ் & தெலுங்கு) வாணிகபூர், ஹசீ தோ பாஸீ (இந்தி) பரினீத்தி சோப்ரா, ஹைவே (இந்தி) அலியாபாட் என்று நால்வருமே குறிப்பிட்டுப் பேசக்கூடிய - ஆண் மொக்கைகளின் - தேவதைகள். இப்படங்களில் இவர்கள் ஏற்றிருக்கும் பாத்திரங்கள், பொதுவான பார்வையில் ‘டிபிக்கல் ஃபார்வேர்ட் இண்டியன் விமன்’ என்கிற சமகால சமூக கருத்தாக்கத்தின் குறியீடுகள்.
நஸ்ரியாவின் பூஜா பாத்திரம் ஆறேழு ஆண்டுகால அவளது வாழ்க்கையை விவரிக்கிறது. ஓம் சாந்தி ஓசண்ணா திரைப்படமே நாயகியின் கதையாடலாக அவளது குரலில் பார்வையாளனுக்கு விவரிக்கப்படுகிறது. பள்ளி மாணவியான பூஜா, தங்கள் சமூக வழக்கம் ஒன்றை காண நேர்கிறது. அதிகளவில் வரதட்சணை கொடுத்து, கல்யாண மார்க்கெட்டில் கொழுத்த மாப்பிள்ளையை பிடிக்கும் அந்த வழக்கத்தில் அவளுக்கு உடன்பாடில்லை. சிறுவயதிலிருந்தே நன்கு படித்த பெற்றோரால் சுதந்திரம் கொடுத்து வளர்க்கப்படும் ஒரே பெண். ஆண் மாதிரி முரட்டுத்தனமாக உடையணிவதும், நடந்துக் கொள்வதும் அவளுக்கு பிடித்த விஷயங்கள். பள்ளிப் பருவத்திலேயே பைக் வாங்கி, பயங்கர ஸ்பீடாக ஓட்டுபவள். தன்னுடைய வாழ்க்கைத்துணையை தானே தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிற முடிவுக்கு வருகிறாள். சா பூ த்ரீ போட்டு அவள் தேர்ந்தெடுப்பது ஒரு கம்யூனிஸ்ட்டை. துரத்தி, துரத்தி அவனை காதலித்தாலும் தன்னுடைய சுயமரியாதையை எங்கும் விட்டுக் கொடுக்காமல் எப்படி இறுதியில் வெற்றி காண்கிறாள் என்பதுதான் கதை. படம் முழுக்கவே ஆண்களை ஜாலியாக கலாய்க்கும் அவளுடைய கமெண்டுகளால் நிறைந்திருக்கிறது. ஆண்கள் எவ்வளவு அபத்தமானவர்கள் என்பதை அடிக்கடி அழுத்திச் சொல்கிறாள். படம் முடியும்போது அவள் சொல்வதுதான் ஹைலைட். “இந்த ஆம்பளைப் பசங்களுக்கு ஒரு கெட்டப் பழக்கம். தனக்கு பொண்ணு பொறந்தா, தன்னோட முதல் காதலியோட பேரைதான் வைப்பானுங்க”. அவள் இந்த வசனத்தை பார்வையாளர்களிடம் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, அவளுடைய கணவன் தன் குழந்தையை பெயர் சொல்லி (முதல் காதலியின் பெயர்) தூக்கிக் கொஞ்சுகிறான். அவனை பூஜா கேவலமாகப் பார்ப்பதோடு படம் முடிகிறது.
வாணிகபூரின் ஸ்ருதி கேரக்டர் ஒரு லட்சியப்பெண்ணின் வாழ்க்கையை காமெடியாகவும், நெகிழ்ச்சியாகவும் சொல்ல முற்படுகிறது. கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் போதே எதிர்காலம் என்னவென்பதை தீர்மானமாக திட்டம் தீட்டி வைத்திருக்கிறாள். அவள் வாழ்க்கையின் ஒவ்வொரு காலக்கட்டத்தையும் அவளே முன்பு திட்டமிட்ட ‘ப்ளூப்ரிண்ட்’ வடிவாகவே நடைபெறவேண்டும் என்கிற எண்ணம் கொண்டவள். படித்து முடித்ததுமே பிசினஸ். அந்த பிசினஸுக்கான பயிற்சியை படிக்கும் காலத்திலேயே எடுத்துக் கொண்டவள். ஐந்து ஆண்டுகள் தொழில் செய்துவிட்டு, வெற்றிகரமான தொழில்முனைவோராக ஆனபின்னர், அப்பா அம்மா சுட்டிக் காட்டும் ஆட்டுக்கு மாலையை போட்டு வெட்டுவது என்பதுதான் அவள் திட்டம். எதிர்பாராமல் இந்த திட்டத்துக்குள் குறுக்கீடாக ஒருவன் வருகிறான். அவனை காமெடியனாக பார்ப்பதா, காதலனாக பார்ப்பதா என்று அவளுக்கு குழப்பம். தன்னுடைய லட்சியத்துக்கு இவனால் பாதிப்பில்லை என்று அடையாளம் காணும்போது, அவனோடேயே வாழ்க்கையை தொடரலாம் என்கிற முடிவுக்கு வருகிறாள். இவளது ‘ஃபைனான்ஸோடு, ரொமான்ஸ் மிக்ஸ் ஆகக்கூடாது’ என்கிற தத்துவத்தால் குழம்பிப்போன அவனோ எதிர்மறையாக ரியாக்ட் செய்கிறான். இவளால் அவனை விலக்கவும் முடியவில்லை. சேர்த்துக் கொள்ளவும் முடியவில்லை. இறுதியில் தன்னுடைய மனதை அவனிடம் திறந்துக் காட்டி அவனை காமெடி காதலனாக ஏற்றுக் கொள்கிறாள். தன்னுடைய ஆரம்பகால எதிர்காலத் திட்டங்களை வெற்றிகரமாக தொடரவும் செய்கிறாள்.
பரினீத்தி சோப்ராவின் மீட்டா ஒரு ரோலர் கோஸ்டர் கேரக்டர். அவள் ஒரு பார்ன் இண்டெலிஜெண்ட். ஐஐடி கெமிக்கல் என்ஜினியர். புதுத்தொழில் தொடங்க அப்பாவிடம் லம்பாக முதலீடு கேட்கிறாள். அவர் தயங்கவே, பெரும் பணத்தோடு வீட்டை விட்டு சீனாவுக்கு ஓடிவிடுகிறாள். இதன் காரணமாக அவளுடைய அப்பாவுக்கு மாரடைப்பு வருகிறது. ஏழு ஆண்டுகள் கழிந்த நிலையில் மீண்டும் ஊருக்கு வருகிறாள். சீனாவில் சில முதலீட்டாளர்களிடம் இவளது அப்பாவை மாதிரி ‘போர்ஜரி’ கையெழுத்து இட்டு பல கோடிகளுக்கு கடனாளி ஆகியிருக்கிறாள். குறிப்பிட்ட தினங்களுக்குள் அந்த பணத்தை திரும்பத் தராவிட்டால் பெரும் பிரச்சினைக்கு இவளுடைய அப்பா ஆளாகுவார். இங்கே மீட்டாவின் அக்காவுக்கு திருமணம் நடக்கவிருக்கிறது. மீட்டாவின் மீள்வருகையால் தன்னுடைய திருமணம் பாதிக்கப்படலாம் என்று அவளுடைய அக்கா, தன்னை கட்டிக்கொள்ளப் போகும் மாப்பிள்ளையிடம் சொல்லி இருவரும் ஒருவரையொருவர் பார்க்காமல் பார்த்துக்கொள்ளச் சொல்கிறாள். மீட்டாவும், அவளுடைய வருங்கால அக்காள் கணவருக்குமான இந்த ஏழு நாட்கள்தான் கதை. சுட்டிப்பெண்ணாக, கிறுக்காக, போதைக்கு அடிமையானவளாக அவனுக்கு அறிமுகமாகும் மீட்டா, எவ்வளவு பெரிய புத்திசாலி என்பதை ஒரு தருணத்தில் அவன் உணர்கிறான். அவளுடைய பிரச்சினைகளை தீர்க்க சம்மதிக்கிறான். அவனும் மீட்டாவை ஒத்த மனோபாவம் கொண்டவன்தான் என்பதால், இந்த ஏழு நாட்களில் இருவருக்குள்ளும் அவர்கள் அறியாமலேயே ‘காதல்’ பற்றிக் கொள்கிறது. குடும்பத்தின் நன்மைக்காக காதலை துறக்க மீட்டா முடிவெடுக்கிறாள். மீட்டாவை இழக்க அவனுக்கு சம்மதமில்லை. இந்த முரணை பாசிட்டிவ்வான முறையில் களையும் உணர்ச்சிகரமான க்ளைமேக்ஸோடு படம் முடிகிறது.
அலியாபட்டின் வீராத்ரிபாதி கொஞ்சம் டார்க்கான லைஃப் பேக்கிரவுண்ட் கொண்ட பெண் பாத்திரம். பெரும் செல்வந்தரின் மகளான இவர், மறுநாள் திருமணம் எனும் நிலையில் தன்னுடைய வருங்கால கணவனோடு ஜாலி ரைட் போகும்போது யதேச்சையாக ஒரு கும்பலால் தேவையே இல்லாமல் கடத்தப்படுகிறாள். இவளது செல்வாக்கான குடும்பப் பின்னணியை பிற்பாடு உணர்ந்த கும்பல் அச்சப்படுகிறது. காவல்துறையினரிடமிருந்து தப்பிக்க இவளது கடத்தலுக்கு காரணமானவன் வேறு வேறு இடங்களுக்கு இவளை அழைத்துச் செல்கிறான். சில நாட்களிலேயே கடத்தப்பட்டவளுக்கும், கடத்தியவனுக்கும் பரஸ்பர உள்ளப் பரிமாற்றம் நடக்கிறது. அவளுடைய சிறுவயது அனுபவங்கள், ஒரு குழந்தைக்குரிய அடிப்படை சுதந்திரத்தை அளிக்கவில்லை என்பதை அவன் உணர்கிறான். சொந்தக்காரராலேயே பாலியல்ரீதியாக துன்புறுத்தப்பட்டவள் அவள். அதைகூட வெளியே சொல்லமுடியாத கட்டாயம் அவளது குடும்ப கவுரவத்துக்கு இருக்கிறது. பெரும் பணக்காரக் குடும்பத்தில் கூண்டுக்கிளியாக அடைந்துக் கிடந்தவள், இந்த கடத்தல்காரனுடனான இலக்கற்ற பயணத்தில் தன்னுடைய சுதந்திர உணர்வை உணர்கிறாள். ஒரு கட்டத்தில் இவளை திரும்பிப் போகச் சொல்கிறான் கடத்தல்காரன். வீட்டுக்கு திரும்பிச் செல்வது தன்னுடைய சுதந்திரத்தை பறிக்குமென்று இவள் மறுக்கிறாள். ‘ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோம்’ எழவுதான். ஒரு மலை வாசஸ்தலத்தில் இவர்கள் தங்கியிருக்கும்போது, பின்தொடர்ந்து வரும் போலிஸாரால் அவன் என்கவுண்டர் செய்யப்படுகிறான். பழைய வாழ்க்கையை தொடர விருப்பமில்லை என்று குடும்பத்தாரிடம் மறுத்துவிட்டு, அதே மலைவாசஸ்தலத்தில் அவனுடைய நினைவுகளோடு வாழ்க்கையை தொடங்குகிறாள் வீரா.

நான்கு படங்களுமே இந்திய மேல்தட்டு வர்க்கத்துப் பெண்களின் பிரச்சினைகளை, எதிர்கொள்ளும் நெருக்கடிகளை பேசுபவை. இவை வர்க்கத்தைவிட அவர்களது பாலினத்தை முதன்மைப்படுத்தியிருக்கின்றன என்பதுதான் குறிப்பிடத்தக்கது. இந்தியா முழுக்க பரவலாக ஒரே மாதிரியாக, ஒரே காலக்கட்டத்தில் வெவ்வேறு இயக்குனர்கள் சிந்தித்திருப்பது யதேச்சையான ஒற்றுமையாகதான் இருக்கக்கூடும். அல்லது மல்ட்டிப்ளக்ஸ் வசூல் (வாங்கும் சக்தி பெண்களுக்கு அதிகரித்திருக்கும் நிலையின் பொருட்டு) அவர்களை இப்படி சிந்திக்க வைத்திருக்கிறதா என்றும் நாம் ஆராய வேண்டும்.

தமிழில் இம்மாதிரி பெண்களின் உணர்வுகளை பேசும் படங்களுக்கு பெரிய பாரம்பரியம் உண்டு. ஸ்ரீதரில் தொடங்கி பாலச்சந்தர், பாலுமகேந்திரா, மணிரத்னம் என்று ஏராளமான இயக்குனர்கள் ஏற்கனவே இங்கு வலுவாக பேசியிருக்கிறார்கள். அந்த கண்ணி எங்கே அறுந்தது என்று நாம் தேடவேண்டும். கதாநாயகி என்பவர் வெறுமனே கதாநாயகனால் காதலிக்கப்படவும், ஃபாரின் லொக்கேஷனில் குத்தாட்டம் போடவும், மேக்கப் பூசிக்கொண்ட பார்பி பொம்மையாகவும் மட்டுமே பெரும்பாலான திரைப்படங்களில் சித்தரிக்கப்படும் போக்கினை இளைய தலைமுறை இயக்குனர்கள் மாற்றுகின்ற போக்கு உருவாக வேண்டும். இந்நான்கு படங்களுமே வணிகரீதியாக வெற்றி கண்டவைதான். குறைந்தபட்சம் வணிகத்தேவைக்காவது நாம் இந்த மாற்றத்தை உருவாக்கியாக வேண்டும்.

3 மார்ச், 2014

தெகிடி

ஷெர்லாக் ஹோம்ஸ், ஜேம்ஸ்பாண்ட், சங்கர்லால், கணேஷ்-வசந்த், விவேக் - ரூபலா, நரேன் - வைஜயந்தி, பரத் –சுசிலா... இவர்கள் எல்லாம் யாரென்று உங்களுக்கு தெரிந்திருந்தால், ‘தெகிடி’ உங்களுக்கான படம்.

எண்பதுகளின் மத்தியில் வெளிவந்த ‘க்ரைம் நாவல்’ தமிழ் சமூகத்தில் குறிப்பிடத்தக்க சலனத்தை ஏற்படுத்திய பத்திரிகை. கிட்டத்தட்ட இதே காலக்கட்டத்தில்தான் சிறுசுகளிடையே சக்கைப்போடு போட்ட ராணிகாமிக்ஸில் ஜேம்ஸ்பாண்ட் இடைவிடாமல் (அரைகுறை ஆடை அழகிகளின் துணையோடு) துப்பறிந்துக் கொண்டிருந்தார். அதற்கு முன்னாலும், பின்னாலும் துப்பறியும் க்ரைம் கதைகளுக்கு தமிழில் குறைச்சல் இல்லையென்றாலும் இந்த காலக்கட்டத்தை ‘கோல்டன் பீரியட்’ எனலாம். ‘டிடெக்டிவ்’ என்கிற ஆங்கில சொல் தமிழர்களின் காதலுக்குள்ளானது. சென்னையில் திடீரென ஆங்காங்கே ‘டிடெக்டிவ் ஏஜென்ஸிகள்’ முளைத்தன. வளர்ந்து பெரியவன் ஆனேனா ‘டிடெக்டிவ் ஏஜெண்ட்’ ஆவேன் என்று அந்தகால சிறுவர்கள் (நானும்தான்) இலட்சியம் கொண்டார்கள். உண்மையில் நம்மூர் டிடெக்டிவ் ஏஜென்ஸிகள் பெரும்பாலும் தரகர் வேலைதான் பார்த்தன என்பதெல்லாம் வேறு கதை. அமைதிப்பூங்காவான தமிழ்நாட்டில் போய் பிரைவேட் டிடெக்டிவ்கள் துப்பறிய அப்படியென்ன பெரியதாக கேஸ் கிடைத்து தொலைக்கப் போகிறது?

தெகிடியின் ஹீரோ ஒரு டிடெக்டிவ். எம்.ஏ. கிரிமினலாலஜி படித்தவனுக்கு ஒரு டிடெக்டிவ் ஏஜென்ஸியில் அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்கிறது. சில தனி மனிதர்களின் ப்ரொஃபைலை அக்குவேறு ஆணிவேறாக அலசி உருவாக்கித் தருவதுதான் அவனுக்கு தரப்படும் அசைன்மெண்ட். இவன் துப்பறிந்த ஆட்கள் ஒவ்வொருவராக மண்டையை போடுகிறார்கள். இது யதேச்சையான ஒற்றுமையல்ல என்று உணருகிறான். பிரச்சினை என்னவென்றால் அவன் பார்த்த கடைசி அசைன்மெண்ட் அவனுடைய காதலியுடையது. அவளும் இறந்துவிடுவாளோ என்கிற அச்சத்தில் ஒட்டுமொத்த கேஸையும் தனிப்பட்ட முறையில் விசாரிக்க ஆரம்பிக்கிறான். கொலையாளிகள் யாரென்பது ‘திடுக்’ க்ளைமேக்ஸ்.

யெஸ். அப்படியே ராஜேஷ்குமார் டெம்ப்ளேட் கதைதான். நீங்கள் நூற்றுக்கும் மேற்பட்ட க்ரைம்நாவல்களை வாசித்திருக்கும் பட்சத்தில் திரைக்கதையின் முடிச்சுகளை படம் பார்க்கும்போதே ஒவ்வொன்றாக நீங்களே அவிழ்த்து விளையாடலாம். உங்களுக்குள் ஒரு புத்திசாலித்தனமான டிடெக்டிவ் இருக்கும் பட்சத்தில் க்ளைமேக்ஸ் வில்லன் யாரென்று இடைவேளையின் போதே கூட யூகித்துவிடலாம்.

தமிழுக்கு புதுசு என்றெல்லாம் சொல்ல முடியாது. ஜெயசங்கரில் தொடங்கி எவ்வளவோ சி.ஐ.டி.கள் ஏகப்பட்ட கேஸ்களை நம்முடைய வெள்ளித்திரையில் துப்பறிந்து வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறார்கள். க்ளைமேக்ஸில் க்ளப் டான்ஸ், காதில் பூச்சுற்றும் ஆக்‌ஷன் காட்சிகள் என்றே நம்மூர் துப்பறியும் படங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ‘தெகிடி’ இதிலிருந்து மாறுபடுவது, அதன் நம்பகத்தன்மை கொண்ட காட்சிகளால். மொக்கைபீஸான நாமே டிடெக்டிவ்வாக இருக்கும்பட்சத்தில் அதிகபட்சமாக நம்மால் எதை செய்யமுடியுமோ அதைதான் ஹீரோ செய்கிறார். படத்தில் வரும் ஒரே ஒரு ஆக்‌ஷன் ப்ளாக் கூட, பறந்து பறந்து தூள்பறத்தும் வகையில் அமையாத நார்மலான சண்டைக்காட்சிதான்.
ஹூரோ அசோக்செல்வன் ஜம்மென்று சாஃப்ட்வேர் புரோகிராம்மர் மாதிரி இருக்கிறார். அவருக்கு நுண்னுணர்வு அதிகமென்று நம்பக்கூடிய தோற்றம். ஹீரோயின் ஜனனிக்கு பெரிய சைஸ் கண்கள். முகத்தில் காது, வாய், மூக்கையெல்லாம் விட கண்தான் பளிச்சென்று தெரிகிறது.

க்ரைம் தொடர்கதைகளுக்கு வரையப்படும் ஓவியங்கள் பாணியில் டைட்டில். தேவையான இடங்களில் மட்டும் பாடல்கள். விறுவிறுப்பான பின்னணி இசை. அலட்டலில்லாத இயக்கம் என்று கமர்சியல் காம்ப்ரமைஸ் இல்லாமல் கச்சிதமான படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் ரமேஷ். ‘நல்ல படமே தமிழில் வரமாட்டேங்குது’ என்று அலுத்துக்கொள்பவர்கள், திரையரங்கம் சென்று பார்த்து ஆதரிக்க வேண்டிய திரைப்படம்.