29 டிசம்பர், 2018

ஆயிரம் books கண்ட அபூர்வ சிகாமணி!

ஆயிரம் books கண்ட அபூர்வ சிகாமணி  என்கிற இந்தப் பட்டத்தை, ஒரு காலத்தில் முப்பது சிறுகதைகள் எழுதி, தொண்ணூறுகளிலேயே இலக்கிய மெனோபாஸ் அடைந்துவிட்ட குடுகுடு எழுத்தாளர் விமலாதித்த மாமல்லன் அவர்களுக்கு வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

அவருக்கு ‘மச்சி சார்’ என்கிற உயரிய இலக்கியப் பட்டத்தையும் ஏற்கனவே வழங்கியவர்கள் நாம்தான். அவர் ஆறு புத்தகத்தை கூட வாசித்தவர் இல்லையே, ஏன் இந்த திடீர் ஆயிரப் பட்டம் என்று அவரை அறிந்தவர்கள் குழம்புவார்கள்.

ப்ரூஃப்ரீடிங் செய்வதில் மச்சி சார் வல்லவர். தியேட்டர் பாத்ரூம் சுவர்களில் யாராவது ‘குதி’ என்று எழுதிவிட்டுப் போனால்கூட, கரித்துண்டு வைத்து அந்த எழுத்துப் பிழையை சரிசெய்துவிட்டுதான் ஜிப்பையே அவிழ்ப்பார். நாம் அவருக்குக் கொடுத்திருக்கும் இந்த லேட்டஸ்ட் பட்டத்திலும் ஓர் எழுத்துப்பிழை விட்டிருக்கிறோம். ‘k' என்று தவறாக எழுதப்பட்டிருப்பதை ‘b' என்று மச்சிசாரே ப்ரூஃப் மிஸ்டேக் திருத்தி எழுதிப் படித்துக் கொள்வார்.

அவ்வளவுதான் மேட்டர்.
ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இணையத்தில் யாருடனேயோ மச்சி சாருக்கு சண்டை. ஸ்க்ரீன்ஷாட் எடுப்பதற்காகவே பிறப்பெடுத்த மச்சி சார், அந்த சண்டை தொடர்பாக ஒரு ஸ்க்ரீன்ஷாட் எடுத்துப் போட்டிருந்தார். அதில்தான் அவருடைய இலக்கியத்தேடல் எவ்வளவு ‘பெருசு’ என்பதை எல்லோரும் அறிந்தோம்.

மினிமைஸ் செய்யப்பட்டிருந்த கூகிள் இமேஜஸ் தேடல் டேப்பில் மச்சி சார் டைப் செய்து தேடியிருந்த இலக்கிய குறிச்சொல் deepa boobs. கூகிள் பிளஸ்ஸில் அம்பலப்படுத்தப்பட்டு, இணையமே சிரிப்பாய் சிரித்த நிகழ்வு அது. ‘தீபா பீப்பாயை தேடுறது அவ்ளோ பெரிய குத்தமாய்யா?’ என்று மச்சி சாரே நாணத்தோடு ஒப்புக்கொண்ட அஜால்குஜால் மேட்டர் அது.

தப்புன்னு சொல்ல முடியாது மச்சி சார். ஆனா, அதையெல்லாம் தொப்புள் பார்க்குற எங்க ஜல்லிக்கட்டு வயசுலே நீங்க செஞ்சிருக்கணும். அப்படி செஞ்சிருந்தா நார்மல். ராமா, கிருஷ்ணான்னு காசி ராமேஸ்வரத்துக்குப் போகிற ரிட்டையர்ட் வயசுலேயும் செஞ்சுக்கிட்டிருந்தீங்கன்னா நீங்கவொரு caligulaன்னு லேடீஸெல்லாம் நினைச்சுப்பாங்க.

ஓக்கே.

விஷயத்துக்கு வருவோம்.

ஆயிரம் books கண்ட அபூர்வ சிகாமணி (kவை bயாக மாற்றி வாசிக்கவும்) மச்சி சார், 1970களின் இறுதியில் சுந்தரராமசாமி, அசோகமித்திரன் போன்ற எழுத்தாளர்கள் எழுதிய ஓரிருக் கதைகளை வாசித்திருக்கிறார். அந்த உத்வேகத்தில் அவரும் இலக்கியவாதி ஆகிவிட்டார்.

அவர் இலக்கியவாதியாக இருந்த அந்தக் காலக்கட்டங்களில் இலக்கியவாதிகள் பெரும்பாலும் ‘அவா அவா க்யா அவா’வாக இருந்த காரணத்தால், இலக்கிய உலகில் ரொம்பவே கம்ஃபர்டபுளாக ஃபீல் செய்தார்.

இலக்கிய உலகம் போலவே எல்லா உலகமும் அக்கிரகாரமாகவே இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று அந்தக் காலத்து பார்ப்பன எழுத்தாளர்களுக்கு இருந்த இலட்சியக்கனவு இவருக்கும் இருந்ததில்  வியப்பேதுமில்லை.

ஆயிரம் books கண்ட அபூர்வ சிகாமணிக்கு (kக்கு பதில் b) ஓர் அபூர்வப் பிரச்சினை உண்டு.

புலவர் இந்திரகுமாரியின் மருமகன் செல்வா ஹீரோவாக நடித்த ‘கோல்மால்’ படத்தை உங்களில் சிலர் பார்த்திருக்கலாம். அதில் முக்கியப் பாத்திரத்தில் நடித்திருந்த நடிகை பல்லவி, ஒரு சினிமாப் பைத்தியம். எப்போதும் வீடியோ கேசட்டில் படம் பார்த்துக் கொண்டே இருப்பார். அப்போதைக்கு அவர் பார்க்கும் படத்தில் வரும் கேரக்டராகவே தானும் மாறிவிடுவார். பக்திப்படம் பார்த்தால் சிகப்புச் சேலை, வேப்பிலை. பிட்டுப் படம் பார்த்தால் தன் கணவர் தியாகுவின் பெண்டை இரவுபகல் பாராமல் நிமிர்த்துவிடுவார். நம்ம ஆபூஆசி-க்கும் அதுவேதான் பிரச்சினை.

இலக்கியத்தை துறந்துவிட்டு நாடு, மதம், கோயில் குளம், வேலை என்று அவ்வப்போது ஏதோ ஒன்றில் டீப்பாக மூழ்கிவிடுவார். இதனால் அடிக்கடி அவரது இலக்கியவாழ்வுக்கு வனவாச கேப் விழும். ஒவ்வொரு முறையும் சின்ன இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வந்து, “அத்திம்பேர் நல்லா இருக்கேளா?” என்று சக இலக்கியவாதிகளை குசலம் விசாரிப்பார்.

கடைசியாக ஆபூஆசி-யின் வனவாசம் கொஞ்சம் நீண்டு விட்டது. தொண்ணூறுகளின் மத்தியில் காணாமல் போனவர் கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வருகிறார். அத்திம்பேர்களை உபயகுசலோபரிக்கலாம் என வந்தவருக்கு கடும் அதிர்ச்சி. ஆளாளுக்கு “இன்னா மாம்ஸு சவுக்கியமா, மச்சி நல்லாருக்கியா?” என்று நலம் விசாரிக்கிறார்கள்.

இப்போது பார்த்தால் இணையம் வந்துவிட்டது. தமிழிலக்கியத்துக்கு அடிப்படைத்தகுதியான வெள்ளைநூல் ஐடெண்டிட்டி கார்டு இல்லாதவர்கள் எல்லாம் இலக்கியவாதி ஆகிவிட்டார்கள்.

அப்போதைய தமிழின் டாப்-3 பெஸ்ட்செல்லர் இலக்கியவாதிகளில் ஒரே ஒரு அத்திம்பேர் கூட இல்லை.

“அக்கிரகாரம், அப்பார்ட்மெண்ட் ஆனா பரவாயில்லை. பெரியார் நினைவு சமத்துவபுரமா மாத்திட்டீங்களேடா” என்று ஆபூஆசி குமுறினார். இந்த நிலைக்கு என்ன காரணம் என அறிய சபதம் பூண்டார்.

பாழாய்ப்போன திராவிடம்தான் இதுக்கெல்லாம் காரணம் என்று அவரது ஆராய்ச்சிக் குறிப்புகள் சொன்னது. மச்சி சாரின் தாத்தா ஆச்சாரியார் ராஜாஜி, இந்த எழவெல்லாம் விழக்கூடாது என்பதற்காகதான் மச்சி சார் பிறப்பதற்கு முன்பாகவே குலக்கல்வித் திட்டம் கொண்டுவந்து 3000 பள்ளிகளை மூடவைத்தார். ஆனால் இந்துமத துவேஷியான இராமசாமி நாயக்கரோ, ராஜாஜியை இறக்கி காமராஜரை முதல்வராக்கி மூடப்பட்ட 3000 பள்ளிகளுக்குப் பதிலாக 6000 பள்ளிகளை திறந்தார்.

இதன் காரணமாக சூத்திரவாள், பஞ்சமரெல்லாம் ‘அ, ஆ, இ, ஈ’ படிக்க ஆரம்பித்தார்கள். ஆரம்பத்தில் தினத்தந்தி படித்துக் கொண்டிருந்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி சிறுபத்திரிகைகள் எல்லாம் படித்து புரிந்துக்கொள்ளும் திறனை பெற்றுவிட்டார்கள்.

முன்பெல்லாம் அத்திம்பேர்கள் இலக்கிய விமர்சனம், அரசியல் அபிப்ராயம், கலை என்றெல்லாம் ஏதாவது வாந்தியெடுத்தால் துணியெடுத்து துடைத்து க்ளீன் செய்துக் கொண்டிருந்தவர்கள், இப்போது பதிலுக்குப் பதிலாக எதிர்வாதம் செய்கிறார்கள். வாய்ப்பு கிடைத்த இடங்களில் எல்லாம் அவர்களும் எழுத ஆரம்பித்தார்கள். அக்கிரகாரத்து எழுத்துகளைவிட, எளிமையாக புரியும்படி எழுதிய இவர்களுக்கு தமிழுக்கு மவுசு சேர்ந்தது. நூல்களும் அதிகம் விற்பனையாகின.

1980களில் ‘தன் கையே தனக்குதவி’ முறையில் மச்சி சார் அவரே எழுதி அவரே பதிப்பித்த புத்தகங்கள் மூட்டை மூட்டையாக வீட்டுப் பரணில் கிடக்க, கண்டவனெல்லாம் இலக்கியம் அரசியல் என்று வந்துவிட்டானே என்று காண்டாகிவிட்டார்.

அந்த காண்டுதான் எவனெல்லாம் தன்னை திராவிடன் என்று அறிவித்துக் கொள்கிறானோ, அவனையெல்லாம் ஜமுக்காளத்தில் வடிகட்டிய 100 சதவிகித பொய்யான அவதூறுகளால் இழிவுப்படுத்துவது என்கிற சைக்கோ மனநிலைக்கு நம் ஆபுஆசி-யை கொண்டுச் சேர்த்திருக்கிறது. தனிப்பட்ட வகையில் இலக்கியத்தில் மிகப்பெரிய தோல்வி அடைந்தவரான மச்சி சார், நெட்டில் ஏதாவது பிசாத்துப் பயல்களுக்கு பத்து லைக் விழுந்தால்கூட பொறாமைப்பட ஆரம்பித்தார்.
யாரைத் திட்டுவது, எதற்குத் திட்டுவது என்று எவ்வித வரையறைகளுமின்றி 24 மணி நேரமும் வெறுப்பரசியலில் ஊறி, ‘திரிஷா இல்லன்னா நயன்தாரா’ படத்தில் வரும் செங்கல் சைக்கோ மாதிரி பரிதாபமான உளவியல் சிக்கல்களுக்கு ஆளானார்.


அதுவே பார்ப்பனரல்லாதவர்களை படுமோசமான மொழிகளில் அவரை வசைபாட வைக்கிறது. சில நாட்கள் முன்புகூட என்னுடைய போட்டோவை பதிவேற்றி, உருவக்கேலி செய்திருக்கிறார். 
உப்புமூட்டைக்கு கைகால் முளைத்த தோற்றத்தில் இருக்கும் அவர் கேலி செய்யுமளவுக்கெல்லாம் நானில்லை என்றாலும், 1980களின் சமூகத்திலேயே தேங்கிவிட்ட அவருடைய பார்ப்பன வெறியைக் கண்டு பரிதாபம்தான் வருகிறது.

என்னோடு அவருக்கு என்னதான் பிரச்சினை?

ஒன்றுமில்லை.

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பற்றிய உண்மைக்கு கொஞ்சமும் தொடர்பில்லாத ஓர் அவதூறை ஓவிஓபி முறையில்  கிளப்பினார். அதாவது ஆசிரியரின் பேத்திக்கு திருமணம் பேசியபோது சகுனம் பார்த்தார் என்று வழக்கமான தினமலர்த்தனமான குற்றச்சாட்டுதான். அவர் குறிப்பிட்டிருந்த காலக்கட்டத்தில் ஆசிரியருக்கு திருமண வயதில் பேத்தியே இல்லை என்று தர்க்கப்பூர்வமாக நாம் வாதாடினோம். அவர் செய்த அவதூறுக்கு ஆதாரம் இருப்பதாக சொல்லி, நிரூபிக்கிறேன் என்று சொன்னவர் மூன்று ஆண்டுகளாக நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.

நினைவுப்பிழையால் தெரியாமல் சொல்லிவிட்டவர்கள் மன்னிப்பு கேட்பார்கள். குறைந்தபட்சம் வருத்தமாவது தெரிவிப்பார்கள். பார்ப்பனக் கொழுப்பால் தெரிந்தே பச்சைப்பொய் சொன்னவர்களிடம் நாம் அத்தகைய பண்பாட்டையெல்லாம் எதிர்ப்பார்க்க முடியாது.

அந்த விவகாரத்தில் இருந்து ஆபூஆசி-க்கு நம் மீது வெறித்தனமான கோபம். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சாதியத்திமிரை இணையத்தில் காட்டுவார். நானென்னவோ தகுதியே இல்லாத இடத்தைப் பிடித்திருப்பதாக குத்திச் சொல்வார். அதெப்படி பார்ப்பனரல்லாத ஒருத்தன் பத்திரிகை உலகில் ஏதோ ஒரு பொசிஷனில் இருக்கப் போச்சு, அப்போவெல்லாம் நம்ம அத்திம்பேருங்கதானே டிசம்பர் இசைக்கச்சேரி எழுதிட்டிருந்தாங்கன்னு அவருக்கு எண்ணம்.

நான் பெற்றிருக்கும் இடம் முழுக்கவே என்னுடைய சொந்த அறிவால், உழைப்பால், திறமையால் பெற்றிருப்பது. சாதிரீதியாக எப்போதோ என் முன்னோருக்கு அரசுவேலை கிடைத்து, அது படிப்படியாக ‘குலக்கல்வி’ டைப்பில் பாஸ் செய்யப்பட்டு எனக்குக் கிடைத்த கருணை வேலை அல்ல.

சூத்திரர்கள் நுழையமுடியாத இரும்புக்கோட்டையாக இருந்த ஒரு துறை, திராவிட மறுமலர்ச்சியில் எல்லோருக்குமானதாக ஜனநாயகப் பூர்வமானது. அந்தச் சூழலில் வாய்ப்பு பெற்றிருப்பவன் நான். இதற்காக அந்த சமூகசீர்த்திருத்த இயக்கத்துக்கும், போராடிய தலைவர்களுக்கும் காலத்துக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

சரி, லேட்டஸ்ட் விஷயத்துக்கு வருவோம்.

கம்யூ.க்களுக்கும், திராவிட இயக்கத்தாருக்கும் 1930களில் இருந்தே பிரச்சினை. தேர்தல்களில் அவ்வப்போது உடன்பாடு செய்துக்கொள்வோமே தவிர, சித்தாந்தரீதியாக (என்ன பெரிய ஹைகோர்ட்டு சித்தாந்தம், மொழி இன உணர்வுகள் சுத்திகரிக்கப்பட்ட அவர்களது பார்ப்பனப் போக்கோடுதான் பிரச்சினை) ஒருவருக்கு ஒருவர் வேப்பங்காய்தான்.

அந்தவகையில் நல்ல மனிதரான தோழர் நல்லக்கண்ணு அவர்களது அரசியல், சமூகப்பணிகள் குறித்த பங்களிப்பு குறித்த விவாதம் ஒன்று. அதில், “நல்லது செய்ய வாய்ப்பிருந்தும்கூட தன்னுடன் இருந்தவர்களுக்கே அதை செய்ய நல்லக்கண்ணு தவறியிருக்கிறார்” என்பதை ஒரு சம்பவத்துடன் சொல்லியிருந்தேன்.

உடனே பார்ப்பனக்கொம்பு நட்டுக்கொண்டது : https://maamallan.com/?p=4169

லிங்கில் இருக்கும் பார்ப்பனப் பொச்சரிப்பை படித்து விட்டீர்களா?

எவனோ ஒரு சூத்திரனுக்கு என்ன இலக்கியம் தெரியப்போகிறது என்று வழக்கமான திமிர் மொழியில் நம்முடைய கவிதையில் குற்றம் கண்டுப்பிடித்திருக்கிறார் ஆபூஆசி. அதற்காக விக்கிப்பீடியாவில் இருந்தும், தனக்குத் தெரிந்த அத்திம்பேர்களிடம் தொலைபேசி வாயிலாகவும் ஆதாரம் திரட்டியிருக்கிறார்.

நாம் குறிப்பிட்ட சம்பவம் உண்மைதான் என்பதால்தான், ஓரளவுக்கு கம்யூனிஸ வரலாறு தெரிந்தவர்கள்கூட அமைதியாக இருக்கிறார்கள்.

ஆனால் -

ஃபேஸ்புக்குக்கு வந்துவிட்டதால் மட்டுமே கம்யூனிஸ்ட் ஆன ஒரு சிலர்தான் கம்பு சுத்திவருகிறார்கள். குறிப்பாக சொல்லவேண்டுமானால் ‘லண்டன்’ படத்து வடிவேலுவாகவே ‘வாழ்வு’ பெற்றிருக்கும் யமுனாராஜேந்திரன் (இவரது வாழ்க்கையைதான் ஏதோ அசிஸ்டெண்ட் டைரக்டர் சொல்லி சுந்தர்.சி காமெடி காட்சியாக வைத்தார் என்று தகவல்). நமக்கு ஏதோ வரலாறு தெரியாது, புவியியல் புரியாது என்று உளறி வைத்திருக்கிறார் என்று கேள்விப்பட்டோம்.

இலக்கிய மெனோபாஸ் அடைந்துவிட்ட மச்சி சாரால்தான் எதையும் எழுதவோ, வாசிக்கவோ முடியாது என்பதால் அவருக்கு இச்சம்பவம் குறித்து எதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

நான்தான் ஃபேஸ்புக்கில் ஏதோ உள்நோக்கத்தோடு சொல்லியிருப்பதாகவே ஒரு வாதத்துக்கு வைத்துக் கொள்வோம்.

ஒருவர் எழுத்துப் பூர்வமாகவே இதை பதிந்திருக்கிறார். அது நூலிலும் இடம்பெற்றிருக்கிறது.

வேறு யாருமல்ல. தொ.மு.சி.ரகுநாதனோடு அரைநூற்றாண்டுக் காலம் பழகிய நைனா கி.ராஜநாராயணன்தான். ‘தொ.மு.சி’ என்று அவர் எழுதியிருக்கும் நீண்ட கட்டுரையில், நான் குறிப்பிட்டிருக்கும் சம்பவம் வருகிறது. நைனாவுக்கு பொய் சொல்ல வேண்டிய எந்த அவசியமுமில்லை. இப்போது கம்யூனிஸ்டு என்று ஜபுல் விட்டுக் கொண்டிருப்பவர்களுக்கெல்லாம் தாத்தா கம்யூனிஸ்டு அவர். கம்யூனிஸ்டுகளை இழிவு செய்யவோ, காட்டிக் கொடுக்கவோ எந்த காரணமும் இல்லாத ஒரிஜினல் கம்யூனிஸ்ட் அவர்.

------

“சோவியத் ஆட்சி நொடித்தவுடன், சென்னையில் நடந்து வந்த ‘சோவியத்நாடு’ இதழ் மற்றும் வகையறாக்கள் அனைத்தையும் கடை ஏறக்கட்டியபோது, இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அங்கே பணியில் இருந்த ரகுநாதன் உட்பட மற்றவர்களையும், பிணையலில் சுற்றிக் கொண்டிருந்த காளைகளை அவிழ்த்து விடுவது போல் போங்க என்று அனுப்பி வைத்து விட்டார்கள்.

இருபது ஆண்டுகள் என்பது ஒரு இந்தியனின் சராசரி வயசில் சரிபாதி.

ஆயுள் தண்டணை என்பதே இப்போது பதினெட்டு ஆண்டுகள்தான். இருபது ஆண்டுகள் பிழிந்து வேலை வாங்கினோமே, அனுப்பப்படும் இந்த பாவிமட்டைகளுக்குப் போய் தலைசாய்க்கச் சொந்தவீடு ஏதேனும் உண்டா என்று அவர்கள் நினைத்துப் பார்த்திருப்பார்களா என்று தெரியவில்லை.

‘அய்யரே, ஆத்துநீரில் அடிச்சிக் கொண்டு போறப்போ, அவரோட அழகான முன்குடுமி போகுதே’ என்று கி.ரா கவலைப்படுகிறார் என்று என்னை எகத்தாளம் பேசலாம். தலை சாய்ந்து அங்கே வீழ்ந்தது தனியார் மூலதனம் அல்ல. உழைப்பாளர்களுக்குப் பார்த்துப் பார்த்து செய்கிறவர்கள் அவர்கள். அவர்களே இப்படி அம்போ என்று விட்டு விட்டார்களே என்றுதான் வருத்தம்.

ரகுநாதனிடம் எனக்குக் கடைசியாக வந்த கடிதத்தில், தனக்கு தலைசாய்க்க ஒரு சொந்த வீடு இல்லையே என்று வருத்தப்பட்டு எழுதியிருந்தார். அவர் தனது கஷ்டங்களை யாரிடமும் - நெருங்கிய நண்பர்களிடம் கூட - சொல்ல மாட்டார்.

இந்தக் கடிதம் என்னை ரொம்பவும் பாதித்தது. உடனே தோழர் நல்லக்கண்ணுவுக்கு அவசரமாக ஒரு கடிதம் எழுதினேன். அப்போது ஆட்சியில் இருந்தவர்களோடு நல்லக்கண்ணுவுக்கு நெருக்கம் இருந்தது. பாளையங்கோட்டையில் அரசு கட்டுகிற தொகுப்பு வீடுகளில் ஒன்றை இனாமாகக் கேட்க மனம் இடம் தராது. என்றாலும் பத்திரிகையாளர், படைப்பாளர் என்ற முறையில் எளிய தொகையில் லைசென்ஸ் கட்டணம் (மிகக்குறைந்த வாடகை) என்ற முறையில் ரகுநாதனுக்கு ஓர் ஏற்பாடு செய்துத் தந்திருக்கலாம். ஆனால், நல்லக்கண்ணுவிடமிருந்து உடனே பதில் வந்தது. ‘பார்த்தீர்களா எப்பேர்ப்பட்ட படைப்பாளிக்குக் குடியிருக்கக்கூட ஒரு குடிசை இல்லாமல் போனதே’ என்று வருத்தப்பட்டு எழுதியிருந்தார்.

‘வருத்தப்படத்தான் ஆள் இருக்கு; வகை செய்ய ஆளில்லை’ என்ற சொல்வம்தான் ஞாபகத்துக்கு வந்தது.

‘நாராய் நாராய் செங்கல் நாராய்’ காலத்திலிருந்து இன்றைக்குத் தேதிவரைக்கும் தமிழில் கவிஞர், படைப்பாளிகளின் பாடு ததிக்குணத்தோம்தான் கண்டது.
நூலின் பெயர் : பதிவுகள்
எழுதியவர் : கி.ராஜநாராயணன்
தேர்வும், தொகுப்பும் : கழனியூரன்
வெளியீடு : அன்னம், தஞ்சை.
மேற்கண்ட பகுதி, நூலின் 237 மற்றும் 238-ஆம் பக்கங்களில் இடம்பெற்றிருக்கிறது.

---

வாசித்து விட்டீர்களா? மீண்டும் ஒருமுறை பார்ப்பனக்கொம்பு நட்டுக்கொண்ட மாமல்லனின் பொய்ப்பிரசாரப் பதிவை வாசிக்கவும். தன்முனைப்பும், சுயசாதி அபிமானமும், திராவிட வெறுப்பும் தவிர்த்து அவரிடம் வேறு ஏதேனும் தன்மைகள் இருக்கின்றனவா என்று யோசியுங்கள்.

கெட்டிக்காரன் புளுகு எட்டுநாள் என்பார்பர்கள். நாம் உரிக்க ஆரம்பித்தால் பார்ப்பனப்புளுகெல்லாம் பத்துநிமிஷம் கூட தாங்காது.

18 டிசம்பர், 2018

ராணி மங்கம்மாளின் கடைசி நாட்கள்!


வரலாறு ஒரே மாதிரியான சம்பவங்களைதான் திரும்பத் திரும்ப பதிவு செய்து வருகிறது. சம்மந்தப்பட்ட நபர்கள்தான் மாறுபடுகிறார்கள்.

உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவுக்கு அருகில் ஆலம்பாக் பகுதியைச் சார்ந்த 75 வயது மூதாட்டி லீலாவதி சமீபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். ரயில்வேயில் பணிபுரியும் அவரது மகன், தன்னுடைய தாயை ஓர் அறையில் பூட்டிவிட்டு கோபித்துக்கொண்டு வெளியேறி விட்டாராம்.

சோறு, தண்ணீர் இல்லாமல் பட்டினியில் வாடி லீலாவதி மரணித்திருக்கிறார்.

லீலாவதி, ஓஹோவென்று ராணி மாதிரி ஒரு காலத்தில் செல்வச் செழிப்போடு வாழ்ந்தவர். அவருடைய கணவர், உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் மேலவை உறுப்பினராம்.

கிட்டத்தட்ட இதே மாதிரி சம்பவம், நம்முடைய தமிழக அரசியலிலும் நடந்திருக்கிறது. சமீபகால வரலாறு ஏதேனும் உங்கள் நினைவுக்கு வந்தால், அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. நாம் குறிப்பிடும் சம்பவம் நடந்து இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக ஆகிவிட்டது.

மதுரையை முப்பத்தாறு ஆண்டுகள் தன்னுடைய இரும்புக்கரம் கொண்டு ஆண்டவர் திருமலை நாயக்கர். கூடல்மாநகரை தலைநகரமாக மட்டுமின்றி கலைநகரமாகவும் மாற்றிக் காட்டியவர் இவர்தான்.

திருமலை நாயக்கரின் மறைவுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த இரண்டாம் முத்து வீரப்ப நாயக்கர் வெறும் நாலு மாதங்களே ஆட்சியில் இருந்து காலமானார்.

மன்னர் பொறுப்பை அடுத்து ஏற்ற 16 வயது சொக்கநாத நாயக்கர், தன் தாத்தா திருமலை நாயக்கரைவிட பெரும் புகழ் பெறக்கூடிய வகையில் வீரமும், கலைமனமும் வாயத்தவராக விளங்கினார். போர்முனையில் பெரும் தீரம் காட்டினார்.

தஞ்சையை ஆண்ட விஜயராகவ நாயக்கரின் மகள் மங்கம்மாவை காதலித்தார். விஜயராகவ நாயக்கர் பெண் கொடுக்க மறுத்துவிட, அவர் மீது போர் தொடுத்து வலுக்கட்டாயமாக பெண்ணெடுக்க முற்பட்டார். தன் தந்தை போரில் தோல்வியடைய, அவருடைய வீழ்ந்த தலை மீதேறி, சொக்கநாத நாயக்கரை கைப்பிடிக்க மறுத்து மங்கம்மா தன்னைதானே தீயில் மாய்த்துக் கொண்டார்.

எதிர்பாராமல் ஏற்பட்ட இந்த காதல் தோல்வியால் மதுரை மன்னர் சொக்கநாதர், பித்து பிடித்தாற்போல ஆனார். அவரை சகஜநிலைக்குக் கொண்டுவர வேறொரு மங்கம்மாளை மணமுடித்து வைத்தனர்.

அவர்தான் பிற்காலத்தில் மதுரை கண்ட மகத்தான பெண்ணரசி மங்கம்மா.

திருமணமான பிறகும்கூட (தாம்பத்தியமெல்லாம் சரியாக நடந்தும்கூட) தஞ்சை மங்கம்மாவின் நினைவை, சொக்கநாதரின் மனசிலிருந்து இந்த மங்கம்மாவால் முடியவே இல்லை.

அந்த நினைவிலேயே தன்னை இழந்துவிட்ட சொக்கநாதர், மிக இளம் வயதிலேயே காலமானார். அப்போது மங்கம்மாளின் கைகளின் மூன்று மாத கைக்குழந்தையாக அடுத்த மன்னர் அரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர் இருந்தார்.

அந்தக் காலத்தில் மன்னர்கள் மறைந்தால் கூடவே உடன்கட்டை ஏறும் சதி சடங்கு வழக்கத்தில் இருந்தது.

மங்கம்மாவோ அரசியல் குழப்பங்களை தவிர்க்க உடன்கட்டை ஏற மறுத்தார். தன்னுடைய குழந்தைக்கு அரசியல் கற்பித்து, தகுதியுள்ள மன்னனாக உருவாக்க முடிவெடுத்தார்.

முத்துவீரப்ப நாயக்கர், பட்டத்துக்கு வரும்வரை தானே நாட்டை மறைமுகமாக ஆண்டார். மங்கம்மா அரசியலில் ஈடுபட்டிருந்த அதே காலத்தில் மதுரை அரசுக்கு ஏகப்பட்ட பிரச்சினைகள். அக்கம் பக்கம் நாடுகளின் படையெடுப்பு, அவுரங்கசீப்பின் முகலாய அரசின் நேரடி மிரட்டல் ஆகியவற்றை சமாளித்தார். போர்களில் வெற்றியும், அரசியல் நடவடிக்கைகளில் ராஜதந்திரத்தையும் வெளிப்படுத்தி மதுரையை காத்தார்.
மக்களுக்கு அன்ன சத்திரம், கல்வி நிலையங்கள், கோயில்களுக்கு மானியம், பெரிய நகரங்களை மதுரையோடு இணைக்க சாலைகள், கால்நடைகளுக்கு சாலையோரங்களில் தண்ணீர்த் தொட்டிகள், ஊர் தோறும் ஊருணி, குளம், ஏரி, கிணறு என்று கட்டமைப்புகளை மேம்படுத்தினார். இன்றும்கூட மதுரையில் மங்கம்மா காலத்து சாதனைகள் வழிவழியாக போற்றிப் பாடப்படுகின்றன.

மங்கம்மாவின் மகன் முத்துவீரப்ப நாயக்கருக்கு 15 வயதில் பட்டம் சூட்டப்பட்டது. தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி எண்பதடி பாய்ந்தது. நாயக்க மன்னர்களிலேயே பெரும் வீரமும், அறிவுத்திறனும், மக்கள் மீதான பாசமும் கொண்டவராக கணிக்கப்பட்டார் முத்துவீரப்பன். கடற்படை அமைப்பது, மக்களுக்கு ஏராளமான நலத்திட்டங்கள் என்று திட்டமிட்டுக் கொண்டிருந்தார். ஒருவேளை அவர் நினைத்ததெல்லாம் நடந்திருந்தால் தமிழகத்தின் வரலாறே மாறியிருக்கக்கூடும்.

ஆனால் –

அவரும் தன்னுடைய தந்தை சொக்கநாதரை போலவே மிகவும் இளம் வயதில் எவரும் எதிர்பாராவிதமாக காலமானார். முத்துவீரப்பன் மறைந்தபோது அவரது மனைவி முத்தம்மா கர்ப்பிணியாக இருந்தார். அடுத்த மன்னனை வயிற்றில் சுமக்கும் ராணியை, உடன்கட்டை ஏறவிடாமல் தடுத்தார் மங்கம்மா.

தன்னுடைய மாமியாரின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டாக ஆண் குழந்தையை பெற்றுக் கொடுத்துவிட்டு, தற்கொலை செய்து மறைந்தார் முத்தம்மா.

கைக்குழந்தையாக தன்னுடைய மகனை வளர்த்த அதே கதைதான் மீண்டும் மங்கம்மாவுக்கு. இம்முறை பேரன் விஜயரங்க சொக்கநாதன்.

குழந்தை விஜயரங்கனை மன்னனாக பெயரளவுக்கு பட்டம் சூட்டிவிட்டு, மங்கம்மாவே ஆட்சி புரிந்தார். மகனை கண்டிப்பாக வளர்த்த அம்மாவான மங்கம்மா, பேரனை ரொம்ப செல்லமாக வளர்த்த பாட்டியாக இருந்துவிட்டார்.

அதுதான் அவர் செய்த மாபெரும் தவறு. இதனால், நாயக்க வம்சத்தின் ஆட்சியே மதுரையில் முடிவுறுவதற்கு காரணமாகவும் அமைந்தார்.

எந்நேரமும் அந்தப்புரம், நண்பர்களோடு உல்லாசம் என்று மைனராக வளர்ந்தார் விஜயரங்கன் நாயக்கர். ஒரு பெண் தங்களை ஆள்வதா என்று நினைத்த அந்தக்கால ஆணாதிக்க அரசியல் பிரமுகர்கள், விஜயரங்கனை தங்களுடைய கைப்பாவை ஆக்கிக் கொண்டனர்.

எப்போதும் பேரனுக்கும், பாட்டிக்கும் ராஜ்ய பரிபாலனம் குறித்து பிரச்சினை ஏற்பட்டுக் கொண்டே இருந்தது. ஒருக்கட்டத்தில் அதிகாரம் மொத்தத்தையும் கைப்பற்றிய விஜயரங்கன், தன்னுடைய பாட்டி மங்கம்மாவையே தனிமைச்சிறையில் அடைத்தார். அவருக்கு உரிய நேரத்தில் உணவு உள்ளிட்ட வசதிகள் வழங்காமல் சித்திரவதைக்கு உள்ளாக்கினார்.

கட்டிய கணவனோடும் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையவில்லை. கண்ணுக்கு கண்ணாக வளர்த்த மகனும் அல்பாயுசில் மறைந்துவிட்டான். செல்லமாக வளர்த்த பேரனே தன்னை கொடுமைப்படுத்திக் கொண்டிருக்கிறான் என்று கடைசிக்காலத்தில் புலம்பி, புலம்பியே காலமானார் அந்த மகத்தான மாதரசி.

அந்நாட்களில் மங்கம்மா ஏதேனும் தெரியாத்தனமாக தன் பேரனை சபித்துவிட்டாரோ என்னவோ, விஜயரங்க சொக்கநாதர் பிள்ளை பாக்கியம் இல்லாதவராகிப் போனார். தன்னுடைய பாட்டியின் மரணத்துக்கு தானே காரணமாகிவிட்ட கழிவிரக்கம், அவரை முழுமையாக இறைச்சேவையில் ஈடுபடுத்தியது.

இருபத்தைந்து ஆண்டுகள் பெயருக்கு ஆட்சியில் இருந்து காலமானார். அவருக்கு வாரிசுகள் இல்லாததால் அவரது மனைவி மீனாட்சி சில காலம் அரசு பொறுப்பேற்றார். ஆற்காடு நவாப் படையெடுத்து வந்து மீனாட்சியை வென்றதோடு 200 ஆண்டுகால மதுரை நாயக்கர் ஆட்சி முடிவுக்கு வந்நது.

(நன்றி : குங்குமம்)

24 நவம்பர், 2018

மஞ்சள் நீராட்டுவதற்கு முன்...

உங்கள் குழந்தை பெரிய மனுஷியாகி விட்டாள் என்பதற்காக, ஊரைக்கூட்டி மஞ்சள் நீராட்டு சடங்கு நடத்துவதெல்லாம் நல்ல விஷயம்தான். நடத்தாதீர்கள் என்று சொல்லுவதற்கு சட்டத்துக்கு கூட உரிமையில்லை. உங்கள் மரபையும், கலாச்சாரத்தையும் நீங்கள் பேணிக்காப்பது உங்களது பிறப்புரிமை.

ஆனால் –

காலம் மாறிக் கொண்டிருக்கிறது என்பதை மட்டும் நினைவூட்டும் கடமை நமக்கு இருக்கிறது.

ஏனெனில் –

சமீபத்திய அவலச் செய்தி ஒன்று இது குறித்து பேசவேண்டிய தேவையை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழகத்தை சூறையாடி சென்ற கஜா புயல், மதிப்பிட முடியாத அளவுக்கு சேதங்களை மாநிலத்துக்கு ஏற்படுத்தி இருக்கிறது. தனிப்பட்ட வகையில் பல்லாயிரம் மனிதர்களின் வாழ்வை மீண்டும் ‘அ’விலிருந்து தொடங்கவேண்டிய மிகப்பெரிய இயற்கை அவலமாக கஜா அமைந்துவிட்டது.

பட்டுக்கோட்டை அடுத்த அணைக்காடு கிராமத்தை சார்ந்த செல்வராஜ் – பானுமதி தம்பதியினருக்கு கஜா கொடுத்த துயரம் மிகவும் அவலமானது. இவர்களது ஒரே மகள் விஜயலட்சுமி பூப்பெய்தி இருக்கிறார். அவர்களது குடும்ப வழக்கப்படி சடங்குகள் செய்வதற்கு முன்பாக விஜயலட்சுமிக்கு தனி குடிசை கட்டி தங்க வைத்திருக்கிறார்கள். கடந்த 16-ம் தேதி அதிகாலை வேதாரணயத்தில் கொடூரத் தாக்குதல் நடத்திய கஜா புயலால், தென்னை மரம் ஒன்று குழந்தை தங்கியிருந்த குடிசை மீது வீழ்ந்திருக்கிறது. தூங்கிக் கொண்டிருந்த விஜயலட்சுமியின் மீது வீழ்ந்த தென்னை மரம் அவளது உயிரைப் பறித்திருக்கிறது. தனிக்குடிசை கட்டாமல் தங்களுடன் வைத்திருந்தால், தங்கள் ஒரே மகள் உயிருடனாவது இருந்திருப்பாளே என்று அவளது பெற்றோர் கதறிக் கொண்டிருக்கிறார்கள்.

இயற்கையின் கோரத்தாண்டவம் பறித்திருப்பது நூற்றுக்கணக்கான உயிர்கள். இயற்கைப் பேரிடர் தவிர்க்க முடியாதது.

ஆனால் –

பூப்பெய்தும் சடங்குக்காக தனிக்குடிசை கட்டி விஜயலட்சுமியை தங்க வைத்திருக்காவிட்டால், அவளது மரணத்தை அந்தக் குடும்பம் தவிர்த்திருக்க முடியும்.

இந்தக் காலத்திலும் என்றோ அந்தந்த காலக்கட்டத்து மதிப்பீடுகளின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட சடங்கு வழிமுறைகளை நாம் இன்றும் கேள்வியின்றி பின்பற்றி வரவேண்டுமா என்கிற கேள்வியை விஜயலட்சுமியின் இழப்பு ஏற்படுத்துகிறது.

ஒரு பெண் வயதுக்கு வருவது என்பது இயற்கை. அறிவியல்ரீதியாக ஒரு பெண் குழந்தை, இனப்பெருக்கத்துக்கு தயாராகிறாள் என்பதற்கான சமிக்ஞை, அவ்வளவுதான்.

தென்னிந்திய சமூக அமைப்பில் பெண் வயதுக்கு வருவதை படோடபமாக ஊர், உறவைக் கூட்டி விருந்து வைத்துக் கொண்டாடுவது என்பது நூற்றாண்டுக்கால வழக்கம்.

மாதவிடாய் வரும் நாட்களில் நோய்த்தொற்று எளிதாக பெண்ணுடலை பாதிக்கக்கூடும். எனவேதான் முதன்முதலாக ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் வரும்போது, அவளை தனிமைப்படுத்தி அவள் ஆரோக்கியம் பாதிக்கப்படாத வகையில் வைத்தார்கள். மருத்துவம் நவீனமான காலக்கட்டத்துக்கு முன்பாக நோய் எதிர்ப்பு மருந்துகள், தடுப்பூசி போன்றவை இல்லாத காலக்கட்டங்களில் இதுபோன்ற நடவடிக்கைகள் அவசியமாக இருந்தது என்பது உண்மைதான்.

மேலும், அவளுக்கு அப்போது கர்ப்பப்பையை உறுதியாக்கக்கூடிய ஊட்டச்சத்துகள் கொண்ட உணவை வழங்குவதும் வழக்கமாக இருந்தது. இந்த காலக்கட்டங்களில் ஊட்டமான உணவு மூலமாக குழந்தை பிறப்புக்கு வாகாக இடுப்பு எலும்புகளுக்கு ஏற்படுத்தக்கூடிய உறுதி, பின்னாளில் அவளுக்கு சுகப்பிரசவம் ஏற்பட ஏதுவாக இருக்கும். எனவேதான், பத்திய முறையிலான உணவு வழங்குவதற்கு வசதியாக சில நாட்கள் முறையான ஓய்வு வழங்கப்பட்டது.

மேலும், திடீரென தன்னுடைய உடலில் ஏற்பட்ட மாற்றத்தைக் கண்டு குழந்தை குழம்பியிருக்கும். அது என்னவகையான மாற்றம் என்பதை அத்தை, பெரியம்மா, சித்தி போன்ற குடும்பத்தின் மற்றப் பெண்கள், அந்தக் குழந்தைக்கு எடுத்துச் சொல்வதற்கான வாய்ப்பாகவும், அக்குழந்தைக்கு தனிமை ஏற்படுத்தப்பட்டது. பெரிய மனுஷியாகி விட்டதால் நாணப்படுவாள் என்பதற்காக தந்தை உட்பட மற்ற ஆண்களை அவள் எதிர்நோக்கி தர்மசங்கடப்படுவதையும் தவிர்க்க இந்த தனிமை உதவியது.

அடுத்து விமரிசையாக நடத்தப்படும் மஞ்சள் நீராட்டு விழா.

‘பெண்ணின் திருமண வயது 18’ என்றெல்லாம் முறையான சட்ட அறிவுறுத்தல்கள் இல்லாத காலக்கட்டத்தில் ஒரு பெண், பெரிய மனுஷி ஆனதுமே திருமணம் செய்துவைக்க மாப்பிள்ளை தேடுவது வழக்கமாக இருந்திருக்கிறது. என்னுடைய வீட்டில் திருமணத்துக்கு ஒரு பெண் தயாராக இருக்கிறாள் என்று அப்பெண்ணின் தந்தையார் விளம்பரப் படுத்துவதற்காகவே மஞ்சள் நீராட்டு விழா என்கிற சடங்கு ஏற்படுத்தப்பட்டது. அந்தக் காலத்தில் எல்லாம் இணையத்தில் மாப்பிள்ளை தேடக்கூடிய வசதியெல்லாம் இல்லைதானே?

மேற்கண்ட விஷயங்கள் எல்லாம் நம் பாட்டிக்கு, ஏன் நம் அம்மாவுக்கே கூட நடந்தவைதான்.

இப்போது நம் மகள்களுக்கும் இதையெல்லாம் செய்ய வேண்டிய தேவை இருக்கிறதா, இந்தக் காலத்துக்கு இவையெல்லாம் பொருத்தமானவைதானா என்றுதான் நாம் யோசிக்க வேண்டும்.

நம் குழந்தை பிறக்கும்போதே நோய்த்தொற்றுகளுக்கு எதிரான முறையான தடுப்பூசிகளை போட்டுவிடுகிறோம். அவரவர் வசதிக்கு ஏற்ப ஊட்டமான உணவுகளை வழங்குகிறோம். அந்தக் காலத்தில் சிக்கன், முட்டை என்பதெல்லாம் ஆடிக்கு ஒருமுறை அமாவாசைக்கு ஒருமுறை சமைக்கக்கூடிய உயர்தர உணவு. இப்போது குறைந்தது வாரம் ஒரு முறையாவது கறியெடுக்க கசாப்புக் கடை வரிசையில் நிற்கிறோம்தானே?

அதுவுமின்றி, அந்தக் காலத்தில் பெண் குழந்தைகள் கல்வி மறுக்கப்பட்டு வெளியுலகத் தொடர்பு இன்றி வீட்டிலேயே வளர்க்கப்பட்டார்கள். இப்போது பள்ளி, கல்லூரி மற்றும் பணியிடங்களுக்கு செல்கிறார்கள். உலக நடப்பை அறிந்து வைத்திருக்கிறார்கள். அவரவர் வாழ்க்கையை தெரிவு செய்யக்கூடிய சமூக அந்தஸ்தை எட்டியிருக்கிறார்கள்.

ஆணும், பெண்ணும் சமம் என்று இயற்கை வழங்கியிருக்கக்கூடிய இயல்பு நீதியை, சமூகமும் ஒப்புக்கொள்ளத் தொடங்கியிருக்கிறது. ஒரு ஆண் குழந்தை எப்படியோ, அப்படியேதான் பெண் குழந்தையும் என்கிற விழிப்புணர்வும் ஏற்பட்டு வருகிறது.

தூய்மை உள்ளிட்டக் காரணங்களால் அந்தக் காலத்தில் கற்பிக்கப்பட்ட மாதவிடாய் தீண்டாமையை இன்னும் நாம் அனுசரித்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் ஏதுமில்லை. அந்நாட்களில் அவர்கள் தூய்மையைப் பேணுவதற்கு வசதியாக நாஃப்கின்கள் பெருமளவு புழக்கத்துக்கு வந்துவிட்டன. இன்னும் அவர்களை வீட்டுக்குள் புழங்க விடாமல் செய்வதற்கு ஏதேனும் காரணம் நம்மிடம் மிச்சமிருக்கிறதா?

வயதுக்கு வருவது குறித்து அவர்களுக்கு முன்பு இருந்த அச்சமெல்லாம் இன்றைய நாகரிக உலகில் அகன்று, உடல் மாற்றத்தை இயல்பாக ஏற்றுக்கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள்.

நகர்ப்புறக் குடும்பங்களில் இந்த மாற்றங்களின் விளைவுகளை கண்கூடாக நாம் காண முடிகிறது.

எனினும் –

இன்னமும் கிராமப்புற மக்களிடம் இந்த விழிப்புணர்வு ஏற்படாததின் ஓர் விளைவாகவே அணைக்காடு விஜயலட்சுமியின் இழப்பைக் காண வேண்டியிருக்கிறது.

முன்னெப்போதோ ஒரு காலத்தில் முன்னோர் அனுஷ்டித்தார்கள் என்பதற்காக அர்த்தமற்ற சடங்குகளை இன்றும்கூட நாம் கடைப்பிடித்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.

மஞ்சள் நீராட்டு விழா போன்ற குடும்ப விசேஷங்களை கொண்டாடலாமா என்று அதில் சம்மந்தப்பட்ட பெண் குழந்தைகள் முடிவெடுத்துக் கொள்ளட்டும். அவர்களுக்கு விருப்பமிருந்தால் செலவு செய்துக் கொண்டாட வேண்டியது பெற்றோரின் கடமையும்கூடதான்.

ஆனால் –

அதன் பேரில் பெண் குழந்தைகளை தனிமைப்படுத்துவது, தீண்டாமை அனுசரிப்பது போன்ற மூடப்பழக்க வழக்கங்கள் இனியும் வேண்டாமே? இவற்றையெல்லாம் தவிர்ப்பதின் மூலமாகதான் நாம் நாகரிகமான சமுதாயத்தின் ஓர் அங்கம் என்பதை நிரூபிக்க முடியும்.

(நன்றி : குங்குமம்)

23 நவம்பர், 2018

ஈ.வெ.ராமசாமி நாயக்கராகிய நான்..

..இன்று முதல் ஈ.வெ.ராமசாமி!

அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் சுமார் 1200 பணியிடங்களுக்கு சமீபத்தில் குரூப்-2 முதல்நிலைத் தேர்வு நடைபெற்றது. ஆறு லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர்.

தேர்வுத் தாளில் இடம்பெற்றிருந்த ஒரு கேள்வி :

“திருச்செங்கோடு ஆசிரமத்தை நிறுவியவர் யார்?”

இதற்கு நான்கு பதில்கள் கொடுக்கப்பட்டு, அதில் சரியான பதிலை தேர்வு எழுதுபவர் தேர்வு செய்ய வேண்டும்.

கொடுக்கப்பட்டிருந்த நான்கு பதில்கள் :

A) இ.வெ.ராமசாமி நாயக்கர்

B) ராஜாஜி

C) காந்திஜி

D) சி.என்.அண்ணாதுரை

தந்தை பெரியாரின் இனிஷியலில் இடம்பெறும் ‘ஈ’ என்பது ஈரோட்டைக் குறிக்கும். அதையேகூட கேள்வித்தாள் தயாரித்த மேதாவி அதிகாரிகள் ‘இ’ என்று தவறாகக் குறிப்பிட்டதைக் கூட விட்டுவிடலாம்.

ஆனால் –

பெரியாரின் பெயருக்குப் பின்னால் அவரது சாதியை குறிப்பிட்டிருப்பதுதான் தமிழகம் முழுக்க பெரும் எதிர்ப்புகளைக் கிளப்பியிருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்களின் கடுமையான கண்டனங்களுக்கும் உள்ளாகியிருக்கிறது.

தந்தை பெரியார் யார் என்பதை உணர்ந்தவர் யாவருமே உள்ளம் கொதித்துப் போய்விடக்கூடிய அடாத செயல்பாடு இது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தமிழகம் சாதிய இறுக்கத்தில் மூச்சுவிட திணறிக்கொண்டிருந்த சூழலில் பிறந்தவர் தந்தை பெரியார். 94 வயதில் தான் இறுதிமூச்சை விடும் நொடி வரைக்கும் சாதிய ஏற்றத்தாழ்வுகளை மிகவும் கடுமையாக விமர்சித்து, சாதியை விட்டொழிக்க வேண்டும் என்று மக்களிடம் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை நடத்தி வந்தவர்.

அவர் மறைந்து 45 ஆண்டுகள் ஆனாலும், இன்னமும் சாதி ஒழிப்புச் சூரியனாக பிரகாசித்துக் கொண்டிருக்கிறார்.

தந்தை பெரியார், சாதியொழிப்பு லட்சியத்துக்காகவே கடவுளை, மதத்தை எதிர்க்கும் கடுமையான நிலைப்பாட்டுக்குச் சென்றார்.

“அவருக்கு முன்பான தலைவர்களில் இரட்டைமலை சீனிவாசன், அயோத்திதாசப் பண்டிதர், எம்.சி.ராஜா உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த தலைவர்களே சாதியமைப்புக்கு எதிராக அரசியல் தளத்தில் செயல்பட்டவர்கள். பெரியார்தான் சாதியொழிப்பைப் பேசிய ஒடுக்கப்பட்டோர் அல்லாத முதல் தலைவர்” என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குறிப்பிடுகிறார்.

பெரியார், ஈரோட்டில் விவசாயிகளும் வியாபாரிகளும் நிறைந்த இடைநிலைச் சாதியில் பிறந்தவர். அவரது குடும்பம் ஈரோட்டிலேயே வணிகத்துக்கு பிரசித்தி பெற்றிருந்த பணக்காரக் குடும்பம். சிறுவயதிலிருந்தே சாதிரீதியிலான ஒடுக்குதலை அவர் எதிர்கொண்டதில்லை.

தந்தையுடன் ஏற்பட்ட மனஸ்தாபத்தில் ஒருமுறை கோபித்துக்கொண்டு காசிக்கு செல்கிறார். தான் பிறந்த சாதியின் காரணமாக அங்கே சில அவமானங்களை எதிர்கொள்கிறார். சாதி ஒரு கொடிய நோய் என்கிற புரிதலை அச்சம்பவங்கள் அவருக்கு ஏற்படுத்துகின்றன.

இங்கே நீதிக்கட்சி வலுப்பெற்று திராவிடர் இயக்கத்தின் தோற்றுவாயாக உருவெடுத்துக் கொண்டிருந்த காலத்தில் எல்லாம் பெரியார், முற்போக்குப் பிரச்சாரங்கள் செய்யக்கூடிய நிலையில் இல்லை. அவர் ஈரோட்டின் நகராட்சித் தலைவராக தெரிவு செய்யப்பட்டு, பொதுவான மக்கள் சேவையில்தான் ஈடுப்பட்டிருந்தார். அதன் மூலமாக கொங்குப் பகுதியில் மக்கள் செல்வாக்கு பெற்ற மகத்தான தலைவராக உருவெடுத்தார்.

சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சி, தந்தை பெரியாரை தன்னுடைய கட்சியில் இணைத்துக் கொண்டது. தீண்டாமைக்கு எதிரான கேரளாவில் நடந்த வைக்கம் போராட்டத்தில் தலைமை தாங்கிப் போராட பெரியாரை பணித்தது.

‘வைக்கம் கோயில் கதவுகள் ஒடுக்கப்பட்டோருக்கும் திறக்கப்பட வேண்டும்’ என்று களமிறங்கிய பெரியாரை நசுக்க அன்றைய திருவாங்கூர் அரசாங்கம் சாம, பேத, தான, தண்டங்கள் அத்தனையையும் பயன்படுத்தி தோல்வியடைந்தது.த

வைக்கம் வீரராக பெரியார் பெற்ற வெற்றி, இந்திய வரலாற்றிலேயே சமத்துவத்துக்கான போராட்டங்களுக்கு சரியான பாதையை அடையாளம் காட்டியது.

எனினும், பெரியாரின் வழிமுறையில் காங்கிரஸ் கட்சிக்கு சில பிரச்சினைகள் இருந்தது. ‘சத்தியாக்கிரகம்’ மாதிரியான அகிம்சை முறை போராட்டங்கள், சாதியத்துக்கு எதிரான மென்மையான எதிர்ப்பு ஆகியவை காங்கிரஸுக்கும், பெரியாருக்கும் இடைவெளியை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்தே காங்கிரஸில் இருந்து வெளியேறி ‘சுயமரியாதை இயக்கம்’ கண்டார் பெரியார். காங்கிரஸார், தங்கள் அடையாளமாக வெள்ளைச்சட்டை அணிய, பெரியாரோ தன்னுடைய தொண்டர்களை கறுப்புச்சட்டை அணியச் சொன்னார்.

1929ஆம் ஆண்டு செங்கல்பட்டு நகரில் பிப்ரவரி 17 மற்றும் 18ஆம் தேதிகளில் முதன்முறையாக சுயமரியாதை மாநாடு நடத்தினார். அப்போது சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த ப.சுப்பராயன், இந்த மாநாட்டை தொடக்கி வைத்தார்.

தமிழக அரசியலில் பெரியார் என்ன செய்யப் போகிறார் என்பதற்கான கொள்கை விளக்க அறிவிப்புகள், அம்மாநாட்டில்தான் தீர்மானங்களாக வரையறுக்கப்பட்டன.

சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும், மதம் மற்றும் மூடநம்பிக்கைகள் ஒழிப்பு குறித்தும் பேசினார்கள். சுயமரியாதை திருமணத்துக்கு ஆதரவாகவும், விதவை மறுமணத்தை ஊக்குவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றினார்கள். தமிழக அரசியல் வரலாற்றில் பெரும் பங்களிப்பு செய்த மாநாடு அது. இந்த மாநாட்டின் விளைவாகவே திராவிட இயக்கத்தின் வளர்ச்சி, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நாலு கால் பாய்ச்சலில் அமைந்தது.

அந்த மாநாட்டில் பெரியார் பேசியதை, சத்யராஜ் நடித்த ‘பெரியார்’ திரைப்படம் துல்லியமாகப் பதிவு செய்திருக்கிறது.

“ஒரு சமத்துவ உலகத்தை நிர்மாணிக்கிறதுக்காக நான் உங்களையெல்லாம் அழைக்கிறேன். இனிமேல் இந்த சமூகத்துலே பிராமணன், சூத்திரன், பஞ்சமன்னு யாருமே இருக்கக்கூடாது.

அதனாலே.. இன்னையிலிருந்து நம்ம பேர்களுக்குப் பின்னாடி இருக்கிற சாதி அடையாளங்களை நாம எல்லாம் நீக்கிடறோம். ஈ.வெ.ராமசாமி நாயக்கர் ஆகிய நான், இன்று முதல் ஈ.வெ.ராமசாமி”

பெரியார் இவ்வாறு முழங்கியதைத் தொடர்ந்து, மாநாட்டில் கலந்துக் கொண்டவர்கள் தங்கள் பெயருடன் இருந்த சாதி அடையாளத்தை மேடையிலேயே துறந்தார்கள்.

அவ்வாறாக தொண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பாக தந்தை பெரியார் துறந்த சாதிப்பட்டத்தை தான் தமிழ்நாடு தேர்வாணையக் குழு அதிகாரிகள், மீண்டும் அவரது பெயரோடு சேர்க்கும் முயற்சியைதான் குரூப்-2 தேர்வு வினாத்தாள் மூலமாக செய்திருக்கிறார்கள்.

சாதியைக் கடந்து வரும் தமிழகத்தின் முற்போக்கு முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போட்டு, மீண்டும் ஓர் நூற்றாண்டுக்கு முந்தைய சாதிய, சனாதன அடக்குமுறை நிலையை ஏற்படுத்த விரும்பும் விஷமனம்தான் இவ்வளவு வக்கிரமாக சிந்தித்திருக்க முடியும்.

பெரியார் மறைந்தும் அவருக்கு இழைக்கப்பட்ட இந்த அவமானத்துக்கு தமிழக அரசு வருத்தம் தெரிவித்தால் மட்டும் போதாது. இதற்கு காரணமான கருப்பு ஆடு யார் என்பதையும் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவதே சரியான செயல்பாடு ஆகும்.

(நன்றி : குங்குமம்)

8 நவம்பர், 2018

96

என் பெயர் ராம். அதாகப்பட்டது கே.ராமச்சந்திரன். பதினேழு வருஷங்களுக்கு முன்னாடி லயோலாவில் பி.எஸ்சி. (விஸ்காம்). இன்று, வைல்ட்லைஃப் போட்டோகிராஃபர். ஒரு ஆங்கில சேனலுக்காக வேலை செய்கிறேன்.

அசைன்மென்ட் விஷயமாக யாங்கூனுக்கு கிளம்பிக் கொண்டிருக்கிறேன். சென்னை சர்வதேச விமான நிலையம். ஃப்ளைட்டுக்காகக் காத்திருந்த நேரத்தில்தான் அவளைப் பார்த்தேன்.

அவளை என்று ஒருமையிலா சொன்னேன்?

அவள்களைப் பார்த்தேன் என்று பன்மையில் திருத்தி வாசியுங்கள். முகங்களைப் பார்க்கவில்லை. முதுகுகளைத்தான் பார்த்தேன்.

எங்கேயோ கண்ட முதுகுகள்!

ஜானகியும், மைதிலியுமா?

யெஸ். அப்படித்தான் தோன்றுகிறது.

அன்று 35 எம்.எம். இப்போது 70 எம்.எம். அகன்ற திரை. அகலம்தான் வித்தியாசம்.

நொடியில் சிலிர்த்த ஆழ்மனசு, 22 ஆண்டுகளுக்குப் பின்னோக்கி ஃப்ளாஷ்பேக்கில் பயணித்தது.

அது 96ம் வருடம். பத்தாம் வகுப்பு ‘அ’ பிரிவு. தந்தை பெரியார் அரசினர் உயர்நிலைப் பள்ளி. புழுதிவாக்கம். பரங்கிமலை ஒன்றியம். காஞ்சிபுரம் மாவட்டம்.

தூக்கம் கண்ணைச் சுழற்றிக் கொண்டிருந்த ஒரு சோம்பலான, சோர்வான மதியப் பொழுது. தமிழய்யா வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தார்.

கைக்கிளை, பெருந்திணை, பசலை என்றெல்லாம் போடு போடென போட்டுக் கொண்டிருந்தார். பக்கத்து சீட்டு சதீஷ், குறட்டை விட்டுக் கொண்டிருந்தான். கண்களைத் திறந்து கொண்டே எப்படித் தூங்குவது என்று அவனிடம்தான் பயிற்சி எடுக்க வேண்டும்.

அய்யாவோ கர்மமே கண்ணாக தலைவன், தலைவி என்றெல்லாம் சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்தார். எனக்குத் தெரிந்த தலைவன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தலைவி குஷ்பூ. அய்யாவின் தலைவன், தலைவியெல்லாம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாக சங்க காலத்தில் வாழ்ந்தவர்கள்.

வகுப்பில் பாதிப்பேர் அரைத்தூக்கத்திலும், மீதிப் பேர் முழுத்தூக்கத்திலும் ஆழ்ந்து விட்டதை அய்யா கவனித்து விட்டார். இதுமாதிரி சமயங்களில் சட்டென்று கியர் மாற்றி ஆக்ஸிலேட்டரை முறுக்குவது அவர் வழக்கம்.

எருமை மாட்டுக்கு வாழைப்பழத்துக்கு நடுவில் மாத்திரை வைத்துத் தருவது மாதிரி ‘சூடாக’ ஏதாவது மேட்டர் பிடித்து, வகுப்பறை கும்பகர்ணன்களை எழுப்புவார். அன்றும் அப்படித்தான்.

“எலேய் ராமச்சந்திரன், உன்னை ஒரு பொண்ணு காதலிக்கிறா. அவளுக்கு உன்னைப் புடிச்சிருக்குன்னு எப்படிய்யா தெரிஞ்சுக்குவே?”என்னை நோக்கி அணுகுண்டு வீசுவார் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு போன்ற உணர்வுகளெல்லாம் கலந்து கட்டி புயலாய் என் நெஞ்சுக்குள் வீசின. ஒட்டுமொத்த வகுப்பும் என்னைப் பார்த்து ‘கொல்’லென்று சிரித்து வைக்க, தயக்கத்தோடு எழுந்தேன் “ம்ம்... அய்யா... அது வந்து…” காலால் கோலம் போட்டேன்.

“ஆம்புளைப் புள்ளே தானே? என்னலே வெக்கம்?”

“வந்து... வந்து... என்னை புடிச்சிருக்கான்னு கேட்பேன். அவளுக்கு புடிச்சிருந்தா ‘புடிச்சிருக்கு’ன்னு சொல்லுவா...”

“தூத்தேறி.. புடிக்கலைன்னா செருப்பால அடிப்பாளா?”

நான் அவமானப்படுவது கண்டு வகுப்பு குதூகலம் அடைந்தது.

டி.எஸ்.பாலையா மாதிரி விஸ்தாரமான சிரிப்பு ஒன்றைச் சிரித்தார் தமிழய்யா. அவர் நல்ல திராவிட நிறம். பல் மட்டும் பளீரென்று மல்லிகைப்பூ மாதிரி வெள்ளை வெளேரென்று மினுக்கும்.

‘இன்னைக்கு ஏதோ தரமான சம்பவம் நடக்கப் போவுது’ என்று ஒட்டுமொத்த வகுப்பறையும் சுவாரஸ்யமாக கவனிக்க ஆரம்பித்தது.

“தெரியலீங்க அய்யா. நீங்களே சொல்லிடுங்க...”

“மூதி. இதெல்லாம் கூட உங்களுக்குச் சொல்லிக் கொடுக்கணும். அதுக்குதான்டா சங்கத்தமிழ் படிக்கணுங்கிறது. நான் பாடம் நடத்துனா எல்லாப் பயலும் தூங்குறீங்க. நீங்க எப்படி காதலிச்சி, கல்யாணம் பண்ணி, புள்ளை பெத்து வாழப்போறீங்களோ. தமிழைப் படிச்சவனுக்கு தமிழே வழிகாட்டும்…”

அய்யா ஒரு சின்ன சஸ்பென்ஸ் வைத்துவிட்டு, சொம்பில் நிறைந்திருந்த தண்ணீரை எடுத்துக் குடித்தார். அவரே திரும்ப ஆரம்பிக்கட்டும் என்று நாங்களெல்லாம் உன்னிப்பானோம்.

“ஒரு தெருவோட இந்த முனையிலே இருந்து நீ நடக்குற. இன்னொரு முனையிலே இருந்து உன்னை விரும்பற பொண்ணு நடந்து வர்றா. இடையிலே ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தரு தாண்டி நடக்குறீங்க. வெட்கங்கெட்ட ஆம்பளைப் பய நீ. சட்டுன்னு நிமிர்ந்து பார்த்துடுவே. அவ, பொண்ணு இல்லையா? அப்படியெல்லாம் பார்க்க மாட்டா. ஓரக்கண்ணுலே பார்ப்பா. அது உனக்குத் தெரியாது.

ஆனா, தெரு முக்குலே திரும்பறதுக்குள்ளே ஒரு முறையாவது தீர்க்கமா திரும்பி விரும்பி முழுசா உன்னைப் பார்ப்பா. அவ அப்படிப் பார்க்குறாளான்னு நீ உறுதிப்படுத்திக்கணும்...”

“திரும்பிப் பார்க்கலைன்னா அய்யா?” சதீஷ், ஆர்வமாகக் கேட்டான்.

“இந்த எருமை அந்தப் பசுவோட மனசுலே இல்லேன்னு அர்த்தம்!”

அட. காதலிக்கிறவளின் மனசில் நாம் இருக்கிறோமா என்று தெரிந்துகொள்வதற்கு இவ்வளவு சுலபமான வழியா?

‘இதயம்’ முரளிக்கு இந்த சூத்திரம் தெரிந்திருந்தால், எத்தனையோ படங்களின் கிளைமேக்ஸே மாறியிருக்குமே?

அய்யா, மீண்டும் பாடத்தைத் தொடர என் மனசோ ஜிவ்வென்று றெக்கை கட்டி ராக்கெட் மாதிரி சஞ்சாரமற்ற சூனிய வெளியில், சத்தமற்ற முத்தங்களைப் பறக்கவிட்டுக் கொண்டே பயணிக்கத் தொடங்கியது.

அன்று பள்ளி முடிந்தது. டியூஷனுக்குச் செல்ல வேண்டும். சதீஷும் என்னோடு டியூஷனுக்கு வருவான். சைக்கிள் ஸ்டேண்டுக்கு வரும் வரையில் அவனிடம் பேசாமலேயே மிதந்து வந்துகொண்டிருந்தேன்.

“மச்சி. தமிழய்யா சொன்னதை டெஸ்ட் பண்ணி பார்க்கப் போறேண்டா...” என்றேன்.

கொஞ்சம் ஆவலோடு கேட்டான். “ஜானகி கிட்டேயா?”

ராமச்சந்திரனுக்கு ஜானகிதான் ஹீரோயினாக முடியும் என்பதெல்லாம் விதி. களிமண் மண்டையன் சதீஷுக்கே இது தெரிந்திருப்பது கடவுளின் சதி. அனைத்துக்கும் மேல் நான் ஜானகியிடம் ஃப்ளாட் ஆகியிருந்தேன் என்பதையும் ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும்.

கடலளவு காதல் அது. மீடியம் சைஸ் மெரூன் ஸ்டிக்கர் பொட்டு. அதற்கு இருபக்கத்திலும் 3 மில்லிமீட்டர் சுற்றளவுக்கு வெள்ளை சாந்து வைத்து டக்கராக இருப்பாள். வட்ட முகம். சிவப்பு என்று சொல்லிவிட முடியாது. கருப்பு என்றும் கழற்றிவிட முடியாது. மாநிறம். வெள்ளை ஜாக்கெட். பச்சைப் பாவாடை தாவணியில் அவளைப் பார்த்ததுமே ‘மாங்குயிலே பூங்குயிலே’ பாட்டு மனசுக்குள் லூப்பில் ஓடும்.

சதீஷ் என் நம்பிக்கையை சுக்குநூறாக உடைத்தான்.

“மச்சீ. தப்பா நினைச்சுக்காதே. அது திம்சுக்கட்டை மாதிரி இருக்கு. நீயோ கிரிக்கெட் ஸ்டெம்பு மாதிரி இருக்கே! வேலைக்கு ஆவும்னு நெனைக்கறீயாடா?”

அவன் சொன்னதும் என் பர்சனாலிட்டியை நினைத்து நானே கழிவிரக்கம் கொண்டேன். இருந்தாலும் கண்ணாடியில் பார்க்கும்போது ‘ரசிகன்’ விஜய் மாதிரிதான் என் முகமும் இருந்தது. கன்னத்தில் லேசாக டொக்கு விழுந்திருப்பதால் அழகு இல்லை என்றாகிவிடுமா? அஜீத்குமாரேகூட ‘காதல் கோட்டை’ படத்தில் இப்படித்தானே இருக்கிறார்? அவரை ஹீரா துரத்தித் துரத்திக் காதலிக்கவில்லையா? பெருத்த நம்பிக்கையோடு சொன்னேன். “இல்லை மாமா. எனக்குத் தோணுது. ஜானுவும் என்னை லவ் பண்ணுறா. FLAMES போட்டுப் பார்த்தப்போகூடாதுனு வந்தது!”

“சரி மச்சான். உன் நம்பிக்கையைக் கெடுப்பானேன். இப்போ ஜானகி, சைக்கிள் எடுக்க வருவா இல்லே. தமிழய்யாவோட ஃபார்முலாபடி நடந்துட்டா நீங்க லவ்வர்ஸுன்னு ஏத்துக்கறேன்...”

நல்ல வேளையாக அந்தக் காலத்தில் ஒவ்வொரு விஜய்க்கும், அஜீத்துக்கும் சின்னி ஜெயந்த், விவேக், கரண் மாதிரி காதலுக்கு உதவிக்கரம் நீட்டும் நண்பர்கள் அமைந்திருந்தார்கள். எனக்கு சதீஷ்.

‘ஆ’ பிரிவிலிருந்து ஜானு வருவதற்கு பத்து நிமிடம் காத்திருக்க வேண்டும். ஏனெனில் ‘அ’ பிரிவு ஆண்கள் எல்லாரும் கிளம்பியபிறகே, ‘ஆ’ பிரிவு பெண்களை பாதுகாப்பு நிமித்தமாக புஷ்பவல்லி மேடம் அனுப்புவார்.

இந்த விஷயத்தில் மேடம் ரொம்பவே ஸ்ட்ரிக்ட். மேடத்தின் இதுமாதிரி தீவிரமான கண்டிஷன்களால் கடுப்பான சில மாணவர்கள், வெறுத்துப்போய் அந்த மேடத்தையே சைட் அடிக்கும் சம்பவங்களும் சமயங்களில் நடந்ததுண்டு.

அன்றைய பத்து நிமிடம், பத்து ஆண்டுகளாய் எனக்குக் கழிந்தது. பத்து விரல் நகங்களையும் கடித்துத் துப்பியிருந்தேன். கடிக்க மேலும் நகம் இல்லாமல், கால் நகங்களைக் கடிக்கலாமா என்று எண்ணிய வேளையில், பச்சைத் தாவணிகள் பட்டாம்பூச்சிகளாகப் பறந்துவரத் தொடங்கியிருந்தன. ஜானு, தூரத்தில் ஒளியாய்த் தெரிந்தாள்.

புத்தகப்பையை மார்போடு அணைத்துக் கொண்டிருந்தாள். கண்ணில் பட்டையாக மை வைப்பது அவளது ஸ்பெஷாலிட்டி. ட்ரிம் செய்த புருவம். இமைகளின் இருபுறமும் லேசாக மையைத் தீற்றியிருந்தது அன்று கூடுதல் கவர்ச்சியாக எனக்குப் பட்டது. அவள் சைக்கிள் எடுக்கும்போது அவளது கண்பார்வையில் படும்படி நின்றுகொண்டேன்.

சதீஷ், பாதுகாப்பாக தலைமறைவாகி எங்களைக் கவனித்துக் கொண்டிருந்தான். என்னை ஒரு பொருட்டாகவே நினைக்காமல், சைக்கிளை ஸ்டாண்டில் இருந்து விடுவித்தாள். தமிழய்யாவின் குரல் அசரீரியாய் ஒலித்தது.

“வெட்கங்கெட்ட ஆம்பளைப் பய நீ. சட்டுன்னு நிமிர்ந்து பார்த்துடுவே. அவ, பொண்ணு இல்லையா? அப்படியெல்லாம் பார்க்க மாட்டா. ஓரக்கண்ணுலே பார்ப்பா. அது உனக்குத் தெரியாது...”

ஹேண்டில்பாரை லாவகமாகப் பிடித்து சைக்கிளை ரிவர்ஸ் எடுத்தவள், பெடலை மிதிக்க ஆரம்பித்தாள்.

‘போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே’ என்று பேத்தோஸாக எஸ்.பி.பாலசுப்பிரமணியம் எனக்கு மட்டும் கேட்கும் குரலில் பாட ஆரம்பித்தார்.

கொஞ்சம் கொஞ்சமாக ஜானு என்னைவிட்டு தூரமாகப் போய்க் கொண்டிருக்கிறாள். ‘திரும்பிப்பாரு ஜானு, திரும்பிப்பாரு ஜானு’ என்று மனசுக்குள் மந்திரம் ஒலிக்க ஆரம்பித்தேன். திருப்பத்துக்கு இன்னும் பதினைந்து, இருபது அடி தூரம்தான்.

திரும்பிப் பார்க்காமல் போய்விட்டால் எனக்கு மனசு தாங்காது. சதீஷ் வேறு கிண்டலடித்தே சாகடிப்பான். சட்டென்று அனிச்சையாக சைக்கிள் பெல்லை இருமுறை அடித்தேன்.

திருப்பத்தில் திரும்புவதற்கு முன்பாக எனக்கே எனக்கான ஜானு ஒன்றரை நொடி திரும்பிப் பார்த்து மறைந்தாள். அந்த ஒன்றரை நொடிக்குள் அவள் சிந்திய புன்னகையை அப்படியே ஸ்க்ரீன்ஷாட் எடுத்து வைத்துக் கொண்டேன்.

“மச்சான், சக்சஸ்டா!” சதீஷைப் பார்த்து உற்சாகமாகச் சொன்னேன்.

“போடா இவனே. பெல்லு அடிச்சா பொண்ணு என்னா... கிழவி, எருமை, ஆடு, நாயி எல்லாம்தாண்டா திரும்பிப் பார்க்கும்...”

மெதுவாக மிதக்க ஆரம்பித்திருந்த நான், சதீஷ் சொன்ன யதார்த்தமான உண்மையைக் கேட்டதும் பொத்தென்று தரையில் விழுந்தேன்.

அதன்பின் பல சந்தர்ப்பங்கள். பிரேயரில், டியூஷனில், கோயிலில், பிளேகிரவுண்டில், மாணவர் தேர்தலுக்கு ஓட்டு கேட்க ‘ஆ’ பிரிவுக்குச் சென்ற நேரத்தில் என்று ஏகப்பட்ட இடங்களிலும் என்னைப் பார்க்கிறாளா என்று பார்த்துப் பார்த்து ஏங்கினேன்.

ஒருவேளை ஸ்கூல் யூனிஃபார்மில் என்னுடைய பர்சனாலிட்டி கொஞ்சம் கம்மியாக இருப்பதால்தான் பார்க்க மறுக்கிறாளோ என்று சந்தேகம். சதீஷுக்கும் சொல்லாமல் ஒரு ரகசியத் திட்டம் தீட்டினேன். மானை, மான் வசிக்கும் இடத்திலேயே மடக்குவது என்று முடிவெடுத்தேன்.

டார்க் ப்ளூ ஜீன்ஸ் பேண்ட், பூனை படம் போட்ட ஒரு ஸ்கை ப்ளூ டீஷர்ட், பச்சைக்கலர் கூலிங் கிளாஸ் சகிதமாக அந்த சனிக்கிழமை காலை சீக்கிரமே சுறுசுறுப்பாகி விட்டேன். ட்யூஷனுக்குக் கிளம்புவதாக வீட்டில் சொல்லி, நம்பகத்தன்மை ஏற்படுத்துவதற்காக ரஃப்பாக ஒரு ரஃப் நோட்டை கையில் வைத்துக்கொண்டு, பிஎஸ்ஏ சைக்கிளைக் கிளப்பினேன்.

ஜானுவை பல மாதங்களாக புலனாய்வு செய்ததில் எனக்குக் கிடைத்திருந்த தகவல்கள் ஆயிரம் பக்க ஆவணமாக இருந்தன. அதன்படி பள்ளி விடுமுறை நாட்களில் காலை பத்து மணி வாக்கில், அவள் வீட்டின் தெருமுனை கைப்பம்பில் தண்ணீர் இறைக்க வருவாள்.

ஒன்பதே முக்காலுக்கு கைப்பம்புக்கு இருபத்தைந்து அடி தூரத்தில் பாதுகாப்பான இடத்தில் நிலைகொண்டேன். வேண்டுமென்றே சைக்கிள் செயினைக் கழற்றிவிட்டு, அதை மாட்டுவது போல நடித்துக்கொண்டிருந்தேன். இதைத்தவிர வேறு டெக்னிக் எதுவும் எனக்குத் தோன்றவில்லை. வெட்டியாக சைக்கிளோடு நின்றுகொண்டிருந்தால் போவோர், வருவோர் ஒரு மாதிரியாக பார்ப்பார்கள். ஏரியாவில் இமேஜ் ரொம்ப முக்கியம்.

பத்துமணிக்கு ஐந்து நிமிடங்கள் முன்பாகவோ அல்லது பின்பாகவோ ஜானு, குடத்துடன் வந்தாள். எப்போதும் யூனிஃபார்மில் பார்த்தவளை வண்ண உடையில் கண்டபோது கூடுதல் கவர்ச்சி தெரிந்தது.

அவளுக்கும் அப்படித்தான் என்னைப் பார்க்கும்போது இருக்குமென்ற நினைப்பே கிளுகிளுவென்றிருந்தது. ஜானுவின் கூடவே ஒரு வாண்டு. அச்சு அசல் ஜானு மாதிரியே இருந்தாள். அவளை மினியேச்சர் செய்தமாதிரி இருந்தவளின் பெயர் மைதிலி என்று பிற்பாடுதான் அறிந்தேன்.

‘மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது, மனசுக்குள்ளே பஞ்சவர்ணக் கிளி பறக்குது...’ ஜானு, கைப்பம்பில் தண்ணீர் அடித்துக் கொண்டிருக்க என் மனசோ கூட்ஸ் வண்டியாக தடதடத்துக் கொண்டிருந்தது.

படபடப்பைக் குறைக்க சைக்கிள் செயினை மாட்டிவிட்டு பெடலை வேகமாகச் சுற்றி விட்டுக் கொண்டிருந்தேன்.

ஜானு என்னைக் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. ஒருவேளை மாறு வேடத்தில் வந்திருப்பதால் அடையாளம் தெரியவில்லையோ? என்னுடைய தன்னம்பிக்கையின் டெம்ரேச்சர் குறையத் தொடங்கியது.

குடத்தில் தண்ணீர் நிரம்பியவுடன் இருவரும் கிளம்பினார்கள்.

‘திரும்பிப் பாரு ஜானு... திரும்பிப் பாரு ஜானு...’ ஸ்ரீராமஜெயம் மாதிரி நூற்றியெட்டு முறை எனக்கு மட்டுமே கேட்பது போல சன்னமான குரலில் பிதற்ற ஆரம்பித்தேன். என் பிரார்த்தனை வீண் போனது. தெருமுனையை எட்டிவிட்டாள் ஜானு. இதற்கு மேல் என்னைப் பார்ப்பதற்கு வாய்ப்பே இல்லை.

சங்கக்கால தமிழில் எழுதப்பட்ட காதல் சூத்திரமெல்லாம் எனக்கு வேலைக்கு ஆகவில்லை. திருப்பத்தில் திடீர் திருப்பம். திரும்பிப் பார்த்தாள்.

‘பார்த்தாள்’ என்று ஒருமையிலா சொன்னேன்?

‘பார்த்தார்கள்’ என்று பன்மையில் திருத்திக் கொள்ளுங்கள்.

ஆமாம். அக்கா, தங்கை இருவருமே திரும்பிப் பார்த்தார்கள்!

இருவருமே காதலோடு சிரித்தது மாதிரிகூட எனக்குத் தோன்றியது. தமிழய்யாவின் குரலில் மீண்டும் அசரீரி.

“ஆனா, தெரு முக்குலே திரும்பறதுக்குள்ளே ஒரு முறையாவது தீர்க்கமா திரும்பி விரும்பி முழுசா உன்னைப் பார்ப்பா..!”

யாங்கூன் விமானத்துக்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன்.

என்னைக் கடந்து போன இருவர் ஜானகி, மைதிலி மாதிரிதான் தோன்றுகிறார்கள்.

மீண்டும் 22 ஆண்டுகள் கழித்து ஸ்ரீராம ஜெயம் மாதிரி, ‘திரும்பிப் பாரு ஜானு... திரும்பிப் பாரு மைதிலி...’ என்று மந்திரம் ஓத ஆரம்பிக்கிறேன்.

ம்ஹூம். இது 2018. ஃபார்முலாவெல்லாம் மாறிவிட்டது போலிருக்கிறது. அவர்கள் ஜானுவும், மைதிலியும்தானா என்றுகூடத் தெரியவில்லை.

எனக்கும் ஃப்ளைட்டுக்கு நேரமாச்சு. ஜானுவின் குரலில் போர்டிங்குக்கு யாரோ அழைக்கிறார்கள்.

Tata bye bye!

(நன்றி : குங்குமம்)

22 ஆகஸ்ட், 2018

ஏகலைவன்!

தமிழ் சினிமாவில் முதன்முதலாக ஒரு வசனகர்த்தாவின் பெயரை டைட்டிலில் கண்டதுமே, ஒரு சூப்பர் ஸ்டாருக்கான ஆரவாரம் திரையரங்கங்களில் எழுந்ததென்றால், அது ‘மு.கருணாநிதி’ என்கிற பெயருக்குதான். இந்த சாதனை கலைஞரால், அவ்வளவு எளிதில் படைக்கப்பட்டு விடவில்லை. அவரது மொழியில் சொன்னால் தென்றலை தீண்டியதில்லை, தீயை தாண்டியிருக்கிறார்.

‘குடியரசு’ இதழில் மாதம் 40 ரூபாய் சம்பளத்துக்கு உதவி ஆசிரியராக கலைஞர் பணிபுரிந்துக் கொண்டிருந்த சமயம். ஒவ்வொரு இதழிலுமே அவரது தமிழ், நெருப்பைக் கக்கிக் கொண்டிருந்ததை கவனித்த ஜூபிடர் பிக்சர்ஸ் நிறுவனம், ‘ராஜகுமாரி’ படத்துக்கு வசனம் எழுதுவதற்காக அவரை அழைத்தது. தந்தை பெரியாரிடம், சினிமாவில் பணிபுரிய கலைஞர் அனுமதி கேட்டபோது, மகிழ்வோடு வாழ்த்தி அனுப்பி வைத்தார். பெரியாருக்கு, சினிமா என்றாலே வேப்பங்காய் என்றாலும், கலைஞர் என்றாலே தித்திப்பு.

‘ராஜகுமாரி’ டைட்டிலில் ‘வசனம்’ என்கிற இடத்தில் இயக்குநர் ஏ.எஸ்.ஏ.சாமியின் பெயர்தான் இடம்பெற்றது என்றாலும், ‘உதவி ஆசிரியர்’ என்று கலைஞரின் பெயர் இடம்பெற்றது. நெற்றி நிறைய விபூதி, கழுத்தில் துளசிமாலை, தூய்மையான வெள்ளை கதராடையோடு இந்தப் படத்தில் நாயகனாக நடித்தவர், வசனகர்த்தா கலைஞருக்கு நெருக்கமான நண்பரானார். பின்னர் கலைஞரால் ‘கொள்கை மாற்றம்’ அடைந்து திராவிடப் புரட்சி நடிகரான எம்.ஜி.ஆர்தான் அவர்.

‘ராஜகுமாரி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ‘அபிமன்யூ’ படத்துக்கும் வசனம் எழுதும் வாய்ப்பு கலைஞருக்கு கிடைத்தது. ‘அபிமன்யூ’ வெளியானபோது, படத்தைக் காண்பிப்பதற்காக தியேட்டருக்கு தன்னுடைய மனைவியையும், நண்பர்களையும் அழைத்துச் சென்றார் கலைஞர். டைட்டிலில் அவரது பெயர் இடம்பெறவில்லை. அதிர்ச்சியடைந்தார் கலைஞர்.

பட அதிபர்களிடம் சென்று நீதி கேட்டபோது, ‘நீங்கள் மிகவும் வயதில் குறைந்தவர். மேலும் உங்கள் பெயருக்கு பின்னால் பட்டமளிக்கக்கூடிய கல்வித்தகுதியும் இல்லாதவர். இன்னும் நீங்கள் சினிமாவில் புகழ் பெற்ற பிறகே உங்கள் பெயரை டைட்டிலில் போட முடியும்’ என்றார்கள். படத்தின் டைட்டிலில் வசனம் என்கிற இடத்தில் இடம்பெற்ற எஸ்.ஏ.சாமிக்கு, ‘பி.ஏ’ என்கிற பட்டம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

மறைவுக்குப் பிறகும் மெரீனாவில் இடம் பிடிக்க கலைஞர் போராடி வென்ற வரலாறுதான், அவருடைய ஆரம்பகால சினிமாவுலக வரலாறும்கூட.

டைட்டிலில் ‘இடஒதுக்கீடு’ கொடுக்க மறுத்தவுடன், கோபத்துடன் ஜூபிடர் பிக்சர்ஸை விட்டு சுயமரியாதை காக்க வெளியேறினார் கலைஞர். நல்ல சம்பளம் கொடுக்கிறார்களே என்று தன்னை அவர் சமரசப்படுத்திக் கொள்ளவில்லை. தன் பெயர் இல்லாத இடத்தில், தான் இருப்பதை அவர் விரும்பவில்லை.

கோவையிலிருந்து ஊர் திரும்பியவர், திருவாரூரில் முகாமிட்டிருந்த ‘தேவி நாடக சபா’வினருக்கு ‘குண்டல கேசி’யை ஆதாரமாக வைத்து ‘மந்திரி குமாரி’ நாடகத்தை எழுதிக் கொடுத்தார். ‘சக்தி நாடக சபா’விடமிருந்து பிரிந்து வந்து புதிய சபாவை அமைத்திருந்த அந்த நாடகக் குழுவினருக்கு ‘மந்திரி குமாரி’, மாஸ்டர்பீஸாக அமைந்தது. மக்களிடம் பெரும் வரவேற்பை அந்த நாடகம் பெற்றிருந்தது.

மயிலாடுதுறையில் இந்த நாடகத்தை கண்டு வியந்த கவிஞர் கா.மு.ஷெரீப், இந்நாடகத்தின் வசன சிறப்புகளைப் பற்றி மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரத்திடம் எடுத்துச் சொன்னார். சுந்தரம், ‘மந்திரி குமாரி’யை திரப்படமாக்க விரும்பினார். 40களின் இறுதியிலேயே மாதம் ரூ.500 (அப்போது ஒரு சவரன் தங்கமே 75 ரூபாய்தான்) என்கிற மிகப்பெரிய சம்பளத்துக்கு மாடர்ன் தியேட்டர்ஸில் பணிபுரிய கலைஞர் ஒப்பந்தமானார். ஜூபிடரில் பணிபுரிந்தபோது எப்படி எம்.ஜி.ஆரை தன்னுடைய கொள்கைக்கு திருப்பினாரோ, அது போலவே மாடர்ன் தியேட்டர்ஸில் பணிபுரிந்தபோது கண்ணதாசனையும் தி.மு.கழகத்துக்கு கலைஞர் கொண்டுவந்து சேர்த்தார்.

‘கொள்ளையடிப்பது ஒரு கலை’ போன்ற பஞ்ச் வசனங்களால் ‘மந்திரி குமாரி’ தமிழகமெங்கும் பரபரப்பை கிளப்பியது. தமிழ் சினிமாவின் முதல் பஞ்ச் வசனகர்த்தா என்றுகூட கலைஞரை சொல்லலாம்.

‘மந்திரி குமாரி’யைப் பார்த்து மகிழ்ந்த என்.எஸ்.கிருஷ்ணன் சேலத்துக்கு வந்து கலைஞரை சந்தித்தார். தான் எடுக்கவிருக்கும் ‘மணமகள்’ படத்துக்கு வசனம் எழுதித்தர வேண்டுமென்று கேட்டார். என்.எஸ்.கிருஷ்ணனும், தந்தை பெரியாரின் அபிமானி என்கிற அடிப்படையில் அவருடன் அன்புடன் பழகினார் கலைஞர். எனவேதான் சம்பளப்பேச்சு வந்தபோது, ‘நீங்க கொடுக்கிறதை வாங்கிக்கறேன்’ என்றார் கலைஞர்.“நான் எவ்வளவு கொடுத்தாலும் வாங்கிப்பீரா?”, என்.எஸ்.கே கேட்க, கலைஞர் மகிழ்ச்சியாக தலையாட்டினார்.

ஒரு வெள்ளை பேப்பரில் ஒரு தொகையை குறிப்பிட்டு, அதை நான்காய் மடித்து கலைஞரின் பாக்கெட்டில் வைத்தார் என்.எஸ்.கே., கலைஞர் அதை பிரித்துக்கூட பார்க்கவில்லை.

“பிரித்துப் பாரும் ஓய். அப்போதானே தொகை தெரியும்...”

கலைஞர் பிரித்துப் பார்க்க.. அதில் நான்கு பூச்சியங்கள் எழுதப்பட்டிருந்தன.“அண்ணே, எதுவாக இருந்தாலும் சம்மதம்தான்” என்று கலைஞர் சொல்ல, அப்படியே அவரை கட்டிப் பிடித்துக் கொண்டார் என்.எஸ்.கே.

உடனே பேப்பரை வாங்கி நான்கு பூச்சியங்களுக்கு முன்னால் ‘ஒன்று’ என்கிற எண்ணை என்.எஸ்.கே. எழுத, கலைஞருக்கு ஆனந்த அதிர்ச்சி. பத்தாயிரம் ரூபாய். ஒரு வசனகர்த்தாவுக்கு இந்த தொகை என்பது அந்த காலத்தில் மிகவும் அதிகம். இந்தப் பணத்தில் அப்போது ஆயிரம் கிராம் தங்கம் வாங்கலாம் என்றால், இன்றைய மதிப்பில் எவ்வளவு பெரிய தொகை என்று எண்ணிப் பாருங்கள். கலைஞரின் வயது அப்போது 25 தான். ‘மணமகள்’ படத்துக்கு கிடைத்த அந்த அபாரமான சம்பளம்தான் கலைஞரை சென்னைக்கு குடிபெயர வைத்தது. எந்த சினிமாவின் டைட்டிலில் கூட தனக்கு பெயர் போட மறுத்தார்களோ, பின்னாளில் அதே சினிமாவை தன் தீந்தமிழால் கட்டியாண்டார் கலைஞர்.

சினிமாவில் கதை, வசனத்தில் கலைஞர் நிகழ்த்திய சாதனைகளை காட்டிலும், சினிமாவில் ஒரு சாதாரணர் சாதிக்க முடியும் என்று அவர் நிகழ்த்திக் காட்டிய சாதனையே தலையாயது. ஏனெனில், கலைஞருக்கு முன்பு வரை பாகவதர்களும், பண்டிதர்களும்தான் சினிமாத்துறையில் ஜொலிக்க முடியும் என்கிற நிலை இருந்தது. அந்த இரும்புக்கதவை எட்டி உதைத்துத் திறந்த முதல் சாமானியன் கலைஞர்தான். அவர் திறந்துவிட்ட கதவுதான் அன்றிலிருந்து இன்றுவரை சென்னையை நோக்கி, நம்பிக்கையை மட்டுமே மூலதனமாகக் கொண்டு, கண்களில் சினிமா கனவோடு ரயிலேறிய பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு கலங்கரை விளக்கம்.

கலைஞர் ஒரு சுயம்பு. கலைஞர் ஒரு ஏகலைவன். அவர் இளைஞர்களுக்காக எழுதிய இந்த ஒரு கவிதை போதும். சினிமாவில் மட்டுமல்ல. எத்துறையிலும் போராடி, வெல்லுவதற்கான உந்துசக்தியாக இளைஞர்களுக்கு என்றுமே இருக்கும்.

ஏகலைவன் வித்தை கற்க
எந்த சாத்திரமும் அனுமதிக்கவில்லை
அவன் வில்லில் விஜயனையும் வெல்வான் என்று
கட்டைவிரலைக் காணிக்கையாய் பெற்றதென்ன நியாயம்?
தவம் செய்தான் சம்பூகச் சூத்திரன்
தகுதி அவனுக்கேது என்று சீறி
அவன் தலை வெட்டிச் சாய்த்தகதை
இராமபிரான் வரலாரன்றோ?
கட்டை விரலையோ, தலையையோ
காணிக்கையாக இந்நாளில் எவனும் கேட்டால்
பட்டை உரியும் சுடுகாட்டில்
அவன் கட்டை வேகும். பிறகென்ன?
முதலுக்கே மோசம் வந்தபின்னர்
முயலாக ஆமையாக கிடத்தல் நன்றோ?
ஆயிரம் அடி பள்ளத்தில் வீழ்ந்தவனை
கைதூக்கிக் கரையேற்றும் நேரத்தில்
கனமான பாறையொன்றை
அவன் தலையில் உருட்டி விட
எத்தனிக்கும் உளுத்தர்களை கண்டால்
உதைக்கத் தான் வேண்டும்
ஓட ஓட விரட்டத்தான் வேண்டும்

(நன்றி : தினகரன் வெள்ளிமலர்)

14 ஆகஸ்ட், 2018

ஞாயிறு போற்றுதும்

தலைவர்கள் பிறப்பதில்லை. காலம்தான் அவர்களை உருவாக்குகிறது. ஒரு சமூகத்தின் சூழலும், தேவையுமே தங்களில் ஒருவரைத் தலைவராக  உயர்த்துகிறது. குடிமையியலின் இந்தக் கோட்பாட்டை உடைத்தெறிந்து தலைவராக உருவெடுத்தவர் டாக்டர் கலைஞர். பிறக்கும்போதே அவர்  தலைவர்தான். தலைவருக்குரிய தலைமைப் பண்புகள் அவரிடம் இளம் பிராயத்திலேயே காணப்பட்டன. திராவிட முன்னேற்றக் கழகம் உருவானபோது  கலைஞரின் வயது 25. அடுத்த இருபதாண்டுகளில் இளைஞர்கள் நிறைந்த இந்த இயக்கத்தை அவர்தான் தலைமையேற்று, அரைநூற்றாண்டுக்  காலத்துக்கு நடத்தப் போகிறார் என்று யாராவது ஜோசியம் சொல்லியிருந்தால் கலைஞரே கூட நம்பியிருக்க மாட்டார்.

ஜோசியத்தில் அவருக்கு நம்பிக்கையில்லை என்பது வேறு விஷயம். உலகிலேயே வேறெங்கும் காமுடியாத அதிசயமாக, எழுபது ஆண்டுகளாக ஒரு  பிராந்திய இயக்கம் மக்கள் செல்வாக்கில் வலிமை யானதாக, இந்தியா போன்ற மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் ஏற்றங்களிலும், கொள்கை  முடிவுகளிலும் பங்களிக்கக்கூடியதாக இருக்கிறதென்றால், அதில் கிட்டத்தட்ட அரைநூற்றாண்டுக் கால கலைஞரின் தலைமையின் முக்கியத்துவத்தை நாம் உணரலாம்.கடந்த நூற்றாண்டின் மத்தியில் ஏராளமான சாமானியர்கள் தலைவர்களாக உயர்ந்திருக்கிறார்கள் என்றாலும்,  கலைஞர் மற்றவர்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்டவர்.

அவர் நிரம்பப் படித்த பட்டதாரி அல்ல. அவரை தலைவராக உயர்த்தக்கூடிய பெரும் எண்ணிக்கை மிகுந்த சமூகப் பின்னணியும் கொண்டவரல்ல.  சினிமாவில் ஜொலித்து, அதன் மூலம் மக்கள் அபிமானத்தைப் பெற்றவரும் அல்ல. அரசியல் / சமூக செயற்பாட்டாளராக அவர் பெற்றிருந்த  புகழைத்தான், தான் பொருள் ஈட்ட பயன்படுத்திய சினிமாவுக்கும் பயன்படுத்தினாரே தவிர, சினிமா புகழ் அவருடைய முன்னேற்றத்துக்கான  மூலதனமாக எப்போதும் இருந்ததில்லை. மேலும், சினிமாவை, தான் ஏற்றுக் கொண்ட இயக்கத்தை வலுப்படுத்தவும், இயக்கத்தின் கொள்கைகளைப்  பிரசாரம் செய்யவும் வலிமையான ஊடகமாகத்தான் கையாண்டார்.

செயல் மட்டுமே அவரது அத்தனை வளர்ச்சிகளுக்கும் காரணம். பலனை எதிர்பாராது, ஏற்றுக் கொண்ட கொள்கைக்காக அல்லும் பகலும் உழைத்துக்  கொண்டிருப்பது மட்டுமே அவர் அறிந்த ஒரே முன்னேற்ற யுக்தி. ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு கலைஞரின் வாழ்க்கையை ஆராய்ந்து பார்த்தோமானால்,  உழைப்பு மட்டுமே அவரை மகத்தான ஓர் இயக்கத்தின் தலைவராகவும், மாநிலத்தை ஆளும் முதல்வராகவும், நாட்டின் பிரதமர்களைத் தேர்ந்தெடுக்கக்கூடிய உயரிய பொறுப்பு களுக்கும் உயர்த்தியது என்பதை உணரலாம்.அவருடைய தீந்தமிழ் எழுத்தாற்றலும், பேச்சாற்றலும், லட்சக்கணக்கான  தொண்டர்களை அரவணைத்துச் செல்லும் அமைப்பாற்றலும் அவருடைய உழைப்புக்கு உதவும் ஆயுதங்களே தவிர.. அவை மட்டுமே அவருடைய  மகத்தான சாதனைகளுக்குக் காரணமல்ல. எனவேதான், ‘ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’ என்று தன்னுடைய கல்லறை வாசகத்தை அவரே எழுதினார்.

துள்ளித் திரிந்ததொரு காலம்

திருவாரூர் நகரிலிருந்து 25 கி.மீ. தூரத்தில் அமைந்திருக்கும் திருக்குவளை என்கிறகிராமத்தில்தான், எளிய பின்னணி கொண்ட குடும்பத்தில் கலைஞர்  1924, ஜூன் 3-ஆம் தேதி பிறந்தார். தந்தையார் முத்துவேலர். தாயார் அஞ்சுகம் அம்மாள்.முத்துவேலர் பழுத்த ஆத்திகர். நெற்றியில் திருநீறு  இல்லாமல் அவரைக் காணவே முடியாது. அந்த கிராம மக்களுக்கு ஏற்படும் சிறிய உடல்நலக் குறைவுகளையெல்லாம் மந்திரித்தே குணப்படுத்துவார்  என்பார்கள். தந்தையைப் போலவேதான் தனயனும் சிறுவயதில் இருந்தார். திருநீறுக்கு மத்தியில் அழகாக குங்குமப்பொட்டு வைத்து காட்சியளிப்பார்  குழந்தை கலைஞர். கோயிலிலிருந்து ரிஷப வாகனம் உலா வருவதைக் கண்ட கலைஞர், அதுபோன்ற ஒரு வாகனத்தைச் செய்து தன் நண்பர்களைக்
கூட்டிவைத்து  வீட்டிலேயே உற்சவம் நடத்துவார்.

திருக்குவளை சிவன் கோயில், திருக்குளம், முனீசுவரன் கோயில், அய்யனார் கோயில் இங்கெல்லாம் நடைபெறும் உற்சவங்கள் மற்றும் விழாக்கள்  கலைஞரை உற்சாகப்படுத்தும். கிரிக்கெட், ஹாக்கி, கால்பந்து போன்ற விளையாட்டுகளிலும் சிறுவர் கலைஞருக்கு ஆர்வமிருந்தது.முத்துவேலருக்கு  தன்னுடைய ஒரே மகன், கலை மற்றும் கல்வியில் கரைசேர வேண்டுமென்ற பெரும் விருப்பம் இருந்தது.  கலைஞர், திருக்குவளையில் இருந்து ஐந்து  கி.மீ. தூரம் நடந்து பேருந்து ஏறி திருவாரூருக்குச் சென்று அங்கிருந்த உயர்நிலைப் பள்ளியில் கல்வி கற்க வேண்டியிருந்தது. மகனுடைய  சிரமங்களைக் கருத்தில் கொண்டுதான் குடும்பத்தையே திருவாரூருக்கு இடம்பெயர வைத்தார் முத்துவேலர். கல்வியோடு இசை பயிலும்  ஏற்பாட்டையும் முத்துவேலர் செய்தார்.

சமத்துவச் சிந்தனை பிறந்தது

கலைஞருக்கு இசையில் பெரும் ஈடுபாடு உண்டு. எனினும், இசை பயில மறுத்து, தந்தையாரையே எதிர்த்து போராட்டம் நடத்தினார். அதற்குக்  காரணம், அக்காலத்தில் இசைக்கலைஞர்கள் மேடையில் மேலாடை அணியக்கூடாது, இடுப்பைச் சுற்றி துண்டு கட்டிக் கொண்டிருக்க வேண்டும்,  காலில் செருப்பு அணியக்கூடாது என்கிற சம்பிரதாயங்கள் இருந்தன. ஏனெனில், இசையை ரசிப்பவர்கள் பெரும் பண்ணையார்களாக விளங்கினார்கள்.  ‘கலைஞர் என்போர் பண்ணையார்களுக்கு அடிமைகள் அல்ல, எல்லோரும் சமம்’ என்கிற சமத்துவ எண்ணம் கலைஞருக்குப் பிறந்ததாலேயே, துண்டு  கட்டிக் கொண்டு, மேலாடையின்றி, காலில் செருப்பு அணியாமல் கச்சேரி செய்யும் வழக்கம் இந்த கருணாநிதிக்குக் கிடையாது என்றுகூறி இசை பயில  மறுத்தார். ‘தான் அடிமை அல்ல’ என்று தந்தையாரிடம் வாதிட்டார்.

திருவாரூர் பள்ளியில் அவருக்குக் கிடைத்த சமூகச் சிந்தனைகளும், கேள்வியின்றி மரபை ஏற்றுக்கொள்ளும் வழக்கத்தை எதிர்க்கக்கூடிய  மனப்பான்மையை அவருக்குத் தோற்றுவித்தது. தந்தை பெரியார் அப்போது பேசிக்கொண்டிருந்த சமூகக் கருத்துகளில் பெரிதும் ஈடுபாடு கொண்டார்.  திராவிட இயக்கக் கவிஞரான பட்டுக்கோட்டை அழகிரிசாமியின் பேச்சுகளும் அவருக்குள் கனலை மூட்டிக் கொண்டிருந்தன.திருவாரூரில் ஒரு முறை  ஆவேசமாக பட்டுக்கோட்டை அழகிரி பேசிக்கொண்டிருந்தார். காசநோயாளியான அவர் பேச்சுக்கு இடையே திடீரென மயங்கி விழுந்தார். கூட்டத்தின்  மத்தியில் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த சிறுவனான கலைஞர், “நோயாளியான நீங்கள், இவ்வளவு சிரமப்படலாமா?” என்று கண்ணீரோடு  கேட்டார்.அதற்கு அழகிரி, “என் நோயைவிட இந்த நாட்டைப் பீடித்திருக்கும் நோய் கடுமையானது. அதைச் சரிப்படுத்தத்தான் நாம் உழைக்க  வேண்டும்...” என்று பதிலளித்தார். கலைஞர், தன்னை முழுமையாக சமூகத்துக்கு ஒப்புக்கொடுக்க, அழகிரி அன்று கொடுத்த பதில்தான் பிரதான  காரணம்.

கம்யூனிஸமும், கலைஞரும்

மாணவப் பருவத்தில் தன் சக மாணவர்களோடு இணைந்து ‘மாணவர் மன்றம்’ உருவாக்கி, சமுதாய விழிப்புணர்ச்சி விவாதங்களை அடிக்கடி நடத்திக்  கொண்டிருப்பார் கலைஞர். தங்களுடைய எண்ணங்களை வெளியிட ஏடு ஒன்று தேவை என்பதை உணர்ந்து, ‘மாணவ நேசன்’ என்கிற கையெழுத்துப்  பத்திரிகையை கலைஞர் தொடங்கினார். ரஷ்யாவில் புரட்சி ஏற்பட்டு உலகெங்கும் கம்யூனிஸத் தாக்கம் உருவாகி வந்த காலம் அது. இந்திய  கம்யூனிஸ்டு இயக்கம், மாணவர்களை ஒருங்கிணைத்து ‘மாணவ சம்மேளனம்’ என்கிற இயக்கத்தைக் கட்டமைத்துக் கொண்டிருந்தது.திருவாரூரில்  மாணவர்களின் சூப்பர் ஸ்டாராகத் திகழ்ந்த கலைஞரை அந்த அமைப்புக்குள் கொண்டுவரும் முயற்சிகளில் வெற்றி பெற்றனர். மாணவ சம்மேளத்தினர்  ‘தமிழ் வாழ்க’ கோஷத்தோடு, ‘இந்தி வளர்க’ என்றும் கோஷம் எழுப்பியது கலைஞருக்கு கருத்து மாறுபாட்டை ஏற்படுத்தியது.

எனவே, திருவாரூர் மாணவ சம்மேளனத்தைக் கலைத்துவிட்டு, ‘தமிழ் மாணவர் மன்றம்’ என்கிற புதிய அமைப்பினை உருவாக்கினார். இந்த புதிய  அமைப்பு, பெரியாரின் சுயமரியாதைக் கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கத் துவங்கியது. கம்யூனிஸ்ட் இயக்கங்களின் செயல்பாடுகளிலிருந்து  தொடக்க காலத்திலேயே விலகி நின்றாலும் அவருக்குள் பொதுவுடைமைச் சிந்தனை இருந்துகொண்டேதான் இருந்தது. எனவேதான்,  பின்னாளில்  ‘நானும் ஒரு கம்யூனிஸ்ட்தான்’ என்று கலைஞர் பகிரங்கமாகவே அறிவித்தார்.

முரசொலி

‘தமிழ் மாணவர் மன்றம்’, திருவாரூரில் நிகழ்த்திய பல்வேறு நிகழ்வுகளுக்கு அன்பழகன், மதியழகன் போன்ற அந்தக்கால மாணவர் தலைவர்களை  அழைத்துப் பேசச் செய்தார் கலைஞர். இதற்கான செலவு களுக்கு வீட்டில் இருந்து சங்கிலி, வெள்ளிக் கிண்ணம் போன்றவற்றை வீட்டாருக்குத்  தெரியாமல் அடகு வைப்பார். இந்தித் திணிப்பை எதிர்க்க பெரியார், மாணவர்களுக்கு அழைப்பு விடுத்தார். இதை ஏற்றுக் கொண்டு இந்தி எதிர்ப்பு  ஊர்வலங்களில் கலைஞர் தீவிரமாகப் பங்கு பெற்றார். ஊர்வலத்தில் வந்து கொண்டிருந்தபோது எதிரில் வந்த தன்னுடைய பள்ளி ஆசிரியரிடமே இந்தி  எதிர்ப்புக் கொடியைத் திணித்து, தன் எதிர்ப்பை வலிமையாகப் பறைசாற்றினார். மறுநாள் இந்தி வகுப்பில், இந்தி படிக்க மாட்டேன் என்று சொல்லி  அதே ஆசிரியரிடம் அறையும் வாங்கினார்.

இந்தக் காலகட்டத்தில் தந்தை பெரியார், மணவை திருமலைச்சாமி, மூவலூர் ராமாமிருதம் அம்மையார், பட்டுக்கோட்டை அழகிரி, அறிஞர் அண்ணா  உள்ளிட்டோரின் இந்தி எதிர்ப்புப் பேச்சுகள் அவரைப் பெரிதும் கவர்ந்தன. இந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழகத்தில் ஏற்படுத்தியிருந்த சமூக  உணர்வலையில் நீந்திக் கரையேறியவர்களில் தலையானவர் கலைஞர். இந்தி எதிர்ப்பு மட்டுமின்றி, மக்களிடையே நிலவி வந்த மூடநம்பிக்கைகள்,  சமூக ஏற்றத் தாழ்வுகள் ஆகியவற்றைப் பற்றி மேடைகளில் அருமையான தமிழ்நடையில் பேசத் தொடங்கினார். தான் நடத்திய கையெழுத்துப்  பிரதியில் எழுதினார்.“ஏரோட்டும் மக்களெல்லாம் ஏங்கித் தவிக்கையிலேதேரோட்டம் ஏன் உனக்கு தியாகராசா?”என்று திருவாரூர் தேரோட்டத்தை  நோக்கிய கேள்வியோடு கூடிய புகழ் பெற்ற வாசகத்தை கலைஞர் எழுதியது அப்போதுதான்.

‘திராவிட நாடு’ இதழுக்கு அவர் எழுதிய ‘இளமைப் பலி’ என்கிற கட்டுரையின் காரணமாக அறிஞர் அண்ணா இவரது தமிழாற்றலை உணர்ந்தார்.  எனினும், பள்ளி மாணவன் முழுமையாகத் தன்னை இயக்கப் பணிகளில் ஈடுபடுத்திக்கொண்டு, படிப்பை கோட்டைவிடுவதை அண்ணா  விரும்பவில்லை. அதனால்தான் தொடர்ந்து கலைஞர் அனுப்பிய கட்டுரைகளை அவர், ‘திராவிட நாடு’ இதழில் வெளியிடவில்லை. எனவே, தன் எழுத்துக்கென்றே பிரத்யேகமான ஊடகம் தேவை என்பதை உணர்ந்த கலைஞர், ‘முரசொலி’ என்கிற பெயரில், தான் நடத்தி வந்த ‘மாணவ  நேசன்’ கையெழுத்துப் பத்திரிகையைத் துண்டுப் பிரசுரமாக, மாத இதழாக மாற்றினார். ஒருங்கிணைந்த தஞ்சை முழுக்க கருணாநிதி என்கிற பெயர்  பிரபலமாக, ‘முரசொலி’யே முதல் காரணம்.

ஈரோட்டு குருகுலம்

பாண்டிச்சேரியில் திராவிடர் கழக மாநாடு ஒன்று நடந்தது. இதில் குழப்பம் விளைவிக்க ஏராளமானோர் காத்திருந்தார்கள். பாரதிதாசனோடு சாலையில்  நடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென்று கலைஞர் மீது தாக்குதல் நடைபெற்றது. இதில் பாரதிதாசன் தப்பிக்க, கலைஞரின் கதி என்னஆனது என்றே யாருக்கும் தெரியவில்லை. ‘கலைஞரைக் காணோம்’ என்றதுமே பெரியார் இடிந்து போனார். விடியற்காலையில் இஸ்லாமியரைப்  போன்று தலையில் குல்லா, கைலி மாறுவேடத்தில் கலைஞர் வந்து சேர்ந்தபோது கண்ணீரோடு அவரைக் கட்டித் தழுவிக் கொண்டார் பெரியார்.  தாக்குதலில் கலைஞருக்கு ஏற்பட்ட காயங்களுக்கு தன் கையாலேயே மருந்திட்டார் பெரியார். அப்போதே கலைஞரை, ‘குடியரசு’ இதழின் உதவி  ஆசிரியராக பணிக்கு சேர்த்துக் கொண்டு ஈரோட்டுக்கு அழைத்துச் சென்றார். ‘குடியரசு’ பத்திரிகையில் பெரியாரின் நேரடிப் பார்வையில்  பணிபுரிந்தபோதுதான் பல்வேறு தலைவர்களுடனான அறிமுகம் அவருக்குக் கிடைத்தது. அவருடைய எழுத்தாற்றலை தமிழகம் உணர, சினிமாவில்  வசனம் எழுதக்கூடிய வாய்ப்பும் கலைஞருக்குக் கிடைத்தது. பெரியாரும் வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.

கலையுலகில் கலைஞர்

‘ராஜகுமாரி’, கலைஞருக்கான ராஜபாட்டையை சினிமா உலகில் ஏற்படுத்தியது. தொடர்ந்து ‘மருதநாட்டு இளவரசி’, ‘மந்திரிகுமாரி’ என்று பயணித்த  அவரது சினிமாப்பயணம் ‘பராசக்தி’யில் உச்சத்தை எட்டியது. 1947ல் ‘ராஜகுமாரி’ மூலமாக சினிமாவுக்கு வந்த கலைஞர், 2011ல் ‘பொன்னர் சங்கர்’  வரை 64 ஆண்டுகளில் எண்ணற்ற படங்களில் எழுத்தாளர், தயாரிப்பாளர் என்று தன்னுடைய அபரிமிதமான பங்களிப்பை வழங்கியிருக்கிறார். சினிமா  மட்டுமின்றி ‘மந்திரி குமாரி’, ‘தூக்குமேடை’என்று அவரது நாடகங்களும் பிரபலம். சினிமா, நாடகம் மட்டுமின்றி கவிதை, கடிதங்கள், சிறுகதைகள்,  நாவல்கள் என்றும் அவரது பன்முக பங்களிப்புகள் தமிழ் பேசும் பேருலகுக்குக் கிடைத்தன. ‘குறளோவியம்’, ‘சங்கத்தமிழ்’, ‘தொல்காப்பியப் பூங்கா’, ‘தென்பாண்டிச் சிங்கம்’, ‘ரோமாபுரி பாண்டியன்’, ‘நெஞ்சுக்கு நீதி’ உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட  நூல்களை தொடர்ச்சியாக எழுதி யிருக்கிறார். அயராத அரசியல் பணிகளுக்கு இடையே கலை, இலக்கியம்தான் தன்னை ஓய்வெடுக்க வைக்கிறது  என்று அந்த கடுமையான உழைப்பையும் ‘ஓய்வு’ என்று குறிப்பிடுகிறார் கலைஞர்.

சட்டமன்றத்தில் கலைஞர்

திராவிடர் கழகத்தில் இருந்து திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றியபோது அறிஞர் அண்ணாவின் தளகர்த்தர்களில் ஒருவராகத் தன்னை  அடையாளப் படுத்திக் கொண்டார் கலைஞர். 1953ல் திமுக அறிவித்திருந்த மும்முனைப் போராட்டம், கலைஞரின் போர்க்குணத்தை தமிழகத்துக்குப்  பறைசாற்றியது. மும்முனைப் போராட்டத்தின் ஓர் அங்கமாக நடந்த கல்லக்குடி போராட்டத்தில் ரயில் தண்ட வாளத்தில் தலைவைத்துப் படுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் கலைஞர். இளைஞர்கள் அவர் பின்னால் திரள, இந்தப் போராட்டமே முதல் காரணம்.1957ல் முதன் முறையாக  திமுக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டபோது திருச்சி மாவட்டம் குளித்தலையில் போட்டியிட்டு வென்றார் கலைஞர். அந்தத் தேர்தலில் 112  தொகுதிகளில் போட்டியிட்ட திமுகவுக்கு சுயேச்சை வேட்பாளர்களுக்கு வழங்கப்படுவதைப் போல வெவ்வேறு சின்னங்கள்தான் வழங்கப்பட்டன.  கலைஞருக்கு அப்போதே கிடைத்த சுயேச்சை சின்னம்தான் ‘உதயசூரியன்’. பின்னர் திமுக அரசியல் கட்சியாக அங்கீகாரம் பெற்ற பிறகும், அதே  சின்னத்தில்தான் இன்றுவரை போட்டியிடுகிறது. 1957ல் குளித்தலை, 1962ல் தஞ்சாவூர், 1967 மற்றும் 1971ல் சைதாப்பேட்டை, 1977 மற்றும் 1980ல் அண்ணா நகர், 1989 மற்றும் 1991ல் துமுகம், 1996, 2001 மற்றும் 2006ல் சேப்பாக்கம், 2011 மற்றும் 2016ல் திருவாரூர் என்று அறுபது ஆண்டு களுக்கும் மேலாக தமிழக சட்டமன்றத்தில்  உறுப்பினராக மகத்தான ஜனநாயகப் பங்களிப்பைத் தந்திருக்கிறார் கலைஞர். இந்தியாவிலேயே வேறு எவரும் இவ்வளவு நீண்டகால மக்கள் மன்ற  சேவையைச் செய்ததில்லை.

முதல்வர் கலைஞர்

1967ல் திமுக ஆட்சிக் கட்டிலில் ஏறுவதற்கு கழகத்தின் பொருளாளராக இருந்த கலைஞரின் புயல்வேகப் பணிகள் பெரும் காரணமாக இருந்தன.  அறிஞர் அண்ணாவே கூட, “தம்பி, உனக்கு ‘நிதி’ என்று தந்தையும் தாயும் சும்மாவா பெயரிட்டார்கள்?” என்று விளையாட்டாக அவரைப் புகழ்ந்தார்.பத்து  லட்சம் தேர்தல் நிதியென்று நிர்ணயித்து, பதினோரு லட்சமாக சேர்த்துத் தந்த பொருளாளர் என்றால் சும்மாவா?ஆட்சிக்கு வந்த இரண்டே ஆண்டில்  உடல்நலக்குறைவு காரணமாக அறிஞர் அண்ணா திடீரென மறைவுற்றார். அப்போது முன்னணித் தலைவர்களையும் தாண்டி இயக்கத்தை நடத்தக்கூடிய  வலிமை கொண்டவராக கலைஞரை கட்சியினர் தேர்வு செய்து, அவரை முதல்வராகவும் ஆக்கினார்கள். நாற்பத்திஐந்து வயதிலேயே முதல்வராகி  கலைஞர், தமிழகத்துக்குச் செய்த சாதனைகள் அளப்பரியவை.

சாதனை நாயகன்

போக்குவரத்தை தேசிய மயமாக்கியது, அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம், குடிநீர் வடிகால் வாரியம், குடிசை மாற்று வாரியம், கண் சிகிச்சை  முகாம், பிச்சைக்காரர்கள் மறுவாழ்வுத் திட்டம், கைரிக்‌ஷா ஒழிப்பு, இந்தியாவிலேயே முதன் முறையாக காவல்துறை ஆணையம், பிற்படுத்தப்பட்டோர்  மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு தனித்துறை, விவசாயக் கல்லூரி, அரசு ஊழியர்கள் குடும்ப நலத் திட்டம், நிலவிற்பனை வரையறை, சிட்கோ மற்றும்  சிப்காட் தொழிற்பேட்டைகள், இந்தியாவிலேயே முதன்முறையாக விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், ஆசியாவிலேயே முதன்முறையாக கால்நடை  மற்றும் விலங்குகள் பல்கலைக்கழகம், பெண்களுக்கு சொத்தில் சம உரிமை, ஏழைப்பெண்களுக்கு திருமண உதவித்திட்டம், விதவைப் பெண்களுக்கு  மறுமண உதவித்திட்டம், பெண்கள் சுய உதவிக்குழு, கிராமந்தோறும் கான்கிரீட் சாலைகள், இந்தியாவின் தெற்கு எல்லையாக திருவள்ளுவர் சிலை,  தமிழுக்கு செம்மொழி மாநாடு, எல்லோருக்கும் கலர் டிவி, பல்கலைக்கழகங்கள்... என்று ஐந்து முறை தமிழகத்தை ஆண்ட கலைஞரின் எண்ணிலடங்கா  மக்கள் சேவைகளைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

ஆளுங்கட்சியாக இருந்தபோதும் சரி, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தபோதும் சரி, அவரது இதயம் தமிழர்களுக்காகவே துடித்துக் கொண்டிருந்தது. ஒரு  தெருவுக்கோ, மேம்பாலத்துக்கோ பெயர் வைப்பதிலும்கூட அவருக்கு கட்சி மற்றும் மாநில நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கம்  இயல்பாகவே இருந்தது.கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக கலைஞரின் பெயர் இடம்பெறாத செய்தித்தாள்களே தமிழகத்தில் இல்லை எனலாம்.  இனி, தமிழக வரலாற்றை எழுதும் எவருமே கலைஞரின் பெயரைத் தவிர்க்கவே முடியாது என்பதுதான் அவரது சாதனைகளுக்கெல்லாம் மகுடம்.

(நன்றி : குங்குமம்)

9 ஆகஸ்ட், 2018

திரும்பிப் பார்க்காதே! முன்னால் பார்!!

சீனாவில் ஹூஹான் என்றொரு நகரம். இங்கே சீற்றத்துக்கு பேர் போன மஞ்சளாறு சுழித்துக்கொண்டு ஓடும். நம்மூரில் ஜல்லிக்கட்டு போல, ஆண்டுக்கு ஒருமுறை இந்த ஆற்றில் இளைஞர்கள் குதித்து ஆற்றின் போக்கை எதிர்த்து எதிர்நீச்சல் போடுவது வீர மரபாக அங்கே பின்பற்றப்பட்டு வருகிறது.ஜூலை 16, 1966.சீன மக்கள் குடியரசின் தலைவர் மாவோ, ஹூஹான் நகருக்கு வருகை தந்தார். அந்த எதிர்நீச்சல் திருவிழாவைத் தொடங்கி வைத்தவர், திடீரென தானும் ஆற்றில் குதித்தார். சீறிக்கொண்டு வந்த நீரோட்டத்தில் மாவோவும் எதிர்நீச்சல் போட ஆரம்பிக்க, வேறு வழியின்றி அவரது பாதுகாவலர்களும் நீரில் குதித்து, கரையேறச் சொல்லி அவரை வற்புறுத்தினார்கள்.ஆனால், மாவோவோ, மற்ற சீன இளைஞர்களுக்குப் போட்டியாக சுமார் பதினைந்து கிலோ மீட்டர் தூரத்துக்கு நீந்தினார். அப்போது அவரது வயது 73 என்பது குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுக்க மாவோவின் இந்த எதிர்நீச்சல் பிரபலமானது. இந்த சாதனையை தன் அரசியலுக்கும் அவர் பயன்படுத்திக் கொள்ளத் தவறவில்லை. அப்போது அவர்மீது சுமத்தப்பட்டிருந்த பல்வேறு குற்றச்சாட்டுகள் இந்த சாதனை எதிர்நீச்சலின் காரணமாகத் தவிடு பொடியானது. கடுமையான அரசியல் நெருக்கடி நேரத்தில் எல்லாம் ‘நீச்சல்’தான் மாவோவைக் கரையேற்றியது. “சிறுவயதிலேயே என்னுடைய அப்பா எனக்கு நீச்சல் கற்றுக் கொடுத்தார். நீந்தும்போதுதான் எப்படிப்பட்ட சிக்கல்களுக்கும் தீர்வு காணக்கூடிய சிந்தனைகள் எனக்கு ஏற்படுகிறது...” என்றார் மாவோ.

அவருடைய புரட்சிகர சிந்தனைகளில் பெரும் பகுதி, அவருடைய நீச்சலின்போது தோன்றியவையே. மாவோவின் இறுதிக் காலத்தில், “மாவோவின் அத்தியாயம் முடிந்தது. இனி அவரால் நடக்கக்கூட முடியாது...” என்று மேற்கத்திய ஊடகங்கள் எழுதிக் கொண்டிருந்தன.எழுந்து நடமாடியதோடு மட்டுமின்றி, அதே மஞ்சளாற்றை இக்கரையிலிருந்து அக்கரைக்கு நீந்திக் கடந்து சீன மக்களுக்கு தன்னுடைய மன வலிமையைப் பறைசாற்றினார் மாவோ. 82 வயதில் இத்தகைய அரிய சாதனையைச் செய்தார்!உலகின் மகத்தான தலைவர்கள் அனைவருக்குமே இந்த ‘Never Ever Give Up’ என்கிற மனோபாவம் இருக்கும். எத்தகைய நெருக்கடியும் தங்களைச் சாய்த்து

விடாமல், வெற்றி தோல்வியைக் கருத்தில் கொள்ளாமல் எதிர்த்து நின்று போராடுவார்கள்.
மாவோவைப் போன்ற ஓர் எதிர்நீச்சல் நாயகன், நம்மூரிலும் உண்டு. மாவோவின் புகழ்பெற்ற அந்த 1966 நீச்சலுக்கு, முப்பதாண்டுகள் முன்னதாகவே தன்னுடைய டீன் ஏஜில் இப்படியொரு நீச்சல் சாதனை நிகழ்த்தியவர், வேறு யாருமல்ல,திமுக தலைவர் கலைஞர் அவர்கள்தான்.

கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலமாக வாழும் கலைஞர், காலம் முழுக்கவே ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் ஓயாமல் போராடிக் கொண்டிருப்பவர். அவருக்கு பிரியமான கலை, இலக்கியப் பணிகளில் அவரை முழுமையாக ஈடுபடவைக்க இடம் கொடுக்காமல், அரசியல் மற்றும் சமூகப் பணிகள் அவரது அசுர உழைப்பை கோரிக்கொண்டேதான் இருக்கின்றன.

ஆட்சியில் இருக்கும்போதெல்லாம் 100 சதவிகித உழைப்பை மக்களுக்குக் கொடுக்கிறார் என்றால், எதிர்க்கட்சி வரிசையில் அமரும் போதெல்லாம் 200 சதவிகித உழைப்பைக் கொடுத்தாக வேண்டிய நெருக்கடியை தனக்குத் தானே அவர் ஏற்படுத்திக் கொள்வார். தூங்கும்போதும் கூட அவரது மூளை கட்சி நலனையும், மக்களுக்கு ஆற்றவேண்டிய பணிகளையும்தான் சிந்தித்துக் கொண்டிருக்கும்.

 கலைஞரை நோக்கி ஒரு முறை அவருக்கு நெருக்கமான பத்திரிகையாளர் கேட்டார்.‘ஓய்வு, ஒழிச்சல் இல்லாமல் தொடர்ச்சியாக இத்தனை ஆண்டுகளாக உழைத்துக்கொண்டே இருக்கிறீர்களே, இவற்றையெல்லாம் விட்டுவிட்டு உங்கள் மனசை மகிழ்ச்சிப்படுத்தக் கூடிய பணிகளில் ஈடுபடலாமே என்று எப்போதுமே தோன்றியதில்லையா?’அந்தப் பத்திரிகையாளருக்கு கலைஞர் சொன்ன பதில்தான், அவருடைய சிறுவயது எதிர்நீச்சல் கதை.

“பள்ளிப் பருவத்தில், நானும் என்னுடைய உயிர்த் தோழனுமான தென்னனும் எப்போதும் திருவாரூரின் மிகப்பெரிய கோயில் குளமான கமலாலயத்தில் நீந்திக் களித்துக் கொண்டிருப்போம்.ஒரு நாள் இருவருக்கும் அந்தக் குளத்தின் மைய மண்டபத்துக்கு நீந்திச்செல்ல வேண்டும் என்கிற ஆர்வம் ஏற்பட்டது. கோயில் குளங்களிலேயே மிகப்பெரியது கமலாலயம்தான். நீந்திக் கடக்க முடியுமா என்கிற சந்தேகம் இருந்தாலும், இருவரும் ஒரு வேகத்தில் நீந்த ஆரம்பித்து விட்டோம்.பாதி தூரத்துக்கும் மேலாக நீந்திவிட்டோம். இருவருக்கும் மூச்சு இரைக்கிறது. தென்னன், பயந்துப் போனான். நானும்தான். ‘திரும்பிவிடலாம் கருணாநிதி’ என்றான்.

மனசுக்குள் அச்சமிருந்தாலும், தென்னனுக்கு தைரியம் அளிக்கும் விதமாக நான் சொன்னேன். ‘தென்னா, இதுவரை முக்கால் பங்கு நீந்திவிட்டோம். மையத்துக்குச் செல்வதென்றால் இன்னும் கால் பங்குதான். திரும்புவதென்றால் இன்னும் அதிக தூரம் நீந்த வேண்டும். தெரிந்தோ, தெரியாமலோ ஓர் இலக்கை நிர்ணயித்து விட்டோம். அதை எட்டுவோம், வா’ என்று அழைத்தேன்.அதன்படியே மைய மண்டபத்தை அடைந்தோம். சில நிமிடங்கள் ஓய்வெடுத்து விட்டு மீண்டும் உற்சாகமாகக் கரைநோக்கி நீந்த ஆரம்பித்தோம். எங்கள் இலக்கை எட்டிய மகிழ்ச்சியின் காரணமாக, திரும்ப வரும்போது எங்களுக்கு அலுப்பே இல்லை.

அன்றைய சிறுவன் கருணாநிதிக்கு இருந்த அதே போர்க்குணம், இன்றும் எனக்கு இருக்கிறது. முன் வைத்த காலை நான் என்றுமே பின் வைக்க விரும்புவதில்லை. அரசியல் துறையை விரும்பித்தான் தேர்ந்தெடுத்தேன்.எல்லாப் பாதையிலுமே குளிர் சோலையும் இருக்கும், சுடும் பாலையும் இருக்கும். பாலையைக் கண்டு பயந்து திரும்புபவன் குளிர் சோலையின் இன்பத்தை எட்டுவதே இல்லை...” என்று சொன்னார் கலைஞர்.

கலைஞரிடமிருந்து நாம் கற்றுக் கொள்ளவேண்டிய அடிப்படைப் பண்பு இதுதான்.

“திரும்பிப் பார்க்காதே! முன்னால் பார்!!”
(நன்றி : குங்குமம்)

16 ஜூலை, 2018

உலகத் தொப்பையர்களே.. ஒன்று சேருங்கள்!

“பெங்களூரில் தொப்பையுடன் நடமாடும் போலீஸார் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கர்நாடகாவின் கூடுதல் டிஜிபி எச்சரித்திருக்கிறார். காவலர்கள் மற்றும் உயரதிகாரிகள் அணுவகுப்பை பார்வையிட்டபோது, ஏகப்பட்ட தொப்பைகளை கண்ட அதிர்ச்சியில் இத்தகைய கண்டிப்பினை அவர் காட்ட வேண்டிய சூழல் ஏற்பட்டது.

சட்டென்று வாசித்தால் சிரிக்கக்கூடத் தோன்றும். என்னவோ போலீஸ்காரர்களுக்கு மட்டுமே தொப்பை இருப்பதாக நமக்கெல்லாம் எண்ணம். சாலையில் நடக்கும்போது தொப்பையோடு (பெண்களையும் சேர்த்துதான்) நடக்கமுடியாமல் நடந்துக் கொண்டிருப்பவர்கள் எத்தனை பேர் என்று சும்மா கணக்கெடுத்துப் பாருங்களேன். அதற்காக ரொம்ப உற்றுப் பார்த்து பட்டவர்த்தனமாக மாட்டிக் கொள்ளாதீர்கள். நீங்கள் கணக்கெடுப்புக்காகதான் பார்க்கிறீர்கள் என்பது அவர்களுக்கு எப்படி தெரியும்?

இந்த கணக்கெடுப்பில் அதிர்ச்சிகரமான புள்ளிவிவரங்கள் உங்களுக்குக் கிடைக்கலாம். குறிப்பாக திருமணத்துக்குப் பிறகும் தொப்பை வாய்க்காதவர்கள் பாக்கியவான்கள். தொப்பைக்கு சாதி, மதம், வர்க்கம், ஆண் பெண் வேறுபாடு என்றெல்லாம் எதுவுமில்லை. அப்படியிருக்க போலிஸ்காரர்களை மட்டும் தனித்து, தொப்பைக்காக குற்றம் சாட்ட வேண்டிய அவசியம் ஏதுமில்லைதானே?

போலீஸ்காரர்களுக்கு தொப்பையிருந்தால் குற்றவாளிகளை ஓடிப்பிடிக்க முடியாது என்றுதான் அதிகபட்சமாக காரணம் சொல்ல முடியும். ஒரு போலீஸ்காரர், ‘சிங்கம்’ சூர்யா மாதிரி ரன்னிங் ரேஸ் ஓடி குற்றவாளியை பிடித்த காட்சியை நீங்கள் வாழ்வில் என்றாவது கண்டதுண்டா? அப்படி கண்டிருப்பவர் லட்சத்தில் ஒருவராகதான் இருக்க முடியும்

எனவே, ‘தொப்பை’ என்பதை மட்டுமே ஒரு காவலரின் பணிக்கு தகுதியிழப்பாக கருத முடியாது.

ஆனால் –

‘தொப்பை’யோடு இருப்பது என்பது ஆரோக்கியத்துக்கு கேடு. அது போலீஸ்காரர்களுக்கு மட்டுமல்ல. போலியோவுக்கு சொட்டுமருந்து கொடுப்பவருக்கும்கூட பொருந்தும்.

என்னவோ, உலகிலேயே இந்தியப் போலீஸுக்குதான் தொப்பை இருப்பதை போல நாமெல்லாம் கிண்டல் செய்துக் கொண்டிருக்கிறோம். இது சர்வதேசப் பிரச்சினை சாமி.

உலகின் பழைய மற்றும் மிகப்பெரிய காவல்துறைகளில் ஒன்றாக கூறப்படும் நியூயார்க் காவல்துறையேகூட தொப்பைப் பிரச்சினையால் நொந்து நூடுல்ஸ் ஆகிக் கொண்டிருக்கிறது.

சமீபத்தில் நியூயார்க் காவல்துறையில் பணிபுரியும் ஜோஸ் வேகாஸ் என்கிற அதிகாரி, தன் துறையின் மீது ஒரு குற்றச்சாட்டை வைத்து, அதற்காக மாதாந்திர நிவாரணம் கோரியது அமெரிக்கா முழுவதுமே பரபரப்பை ஏற்படுத்தியது.

அதாவது இருபது ஆண்டுகளுக்கு முன்பாக 80 கிலோ எடையுடன் சிக்கென்று பணிக்கு சேர்ந்த ஜோஸ், இருபது ஆண்டுகால காவல்துறை சேவையால் தற்போது 180 கிலோ எடையுடன் பூதாகரமாக மாறியிருக்கிறார். மெகா தொப்பையுடன் காட்சியளிக்கும் அவர், இந்த தொப்பைக்கு காரணம், இந்தப் பணியில் கிடைக்கக்கூடிய அழுத்தமே (stress) தவிர, தன்னுடைய உணவுப்பழக்கமல்ல என்று ஆதாரங்களோடு வாதிடுகிறார்.

காவல்துறையில் இருக்கும்போது உடல்ரீதியான சேதாரம் ஏற்பட்டால் (disability) அதற்காக மாதாந்திர நிவாரணமாக ஒரு குறிப்பிட்ட தொகை வழங்கப்படுவது நியூயார்க் காவல்துறையில் வழக்கம். பணியால்தான் தனக்கு தொப்பை விழுந்தது, எனவே தொப்பையின் சைஸுக்கு தகுந்த நிவாரணம் வழங்கவேண்டும் என்பதே ஜோஸின் வாதம்.

உடல் தகுதியை வைத்தே ஒருவரை வேலைக்கு சேர்க்கும் போலீஸ் அகாடமிகள், வேலைக்கு சேர்ந்த பின்னர் அவர்களது உடல்ரீதியான தகுதிகளை வருடாந்திர அடிப்படையில் சோதனை செய்யாத போக்கு, இந்தியாவில் மட்டுமல்ல, உலகளவிலும் இருக்கிறது. மாறாக ஃபயர் சர்வீஸ் போன்ற ஆபத்துக்கால உதவிச் சேவை துறைகளில் பணிபுரிபவர்களின் உடல் தகுதி மட்டும் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் தொடர்ச்சியாக பரிசோதிக்கப்படுகிறது. ஏதேனும் உடல்ரீதியான குறைபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருந்தால், அதை மருத்துவரீதியாகவும் மனரீதியாகவும் எதிர்கொள்வதற்கான ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.

லண்டன் காவல்துறையில் வேலைக்கு சேர்ந்து பல ஆண்டுகள் ஆன பின்னரும் அடிக்கடி உடல் தகுதி சோதனைகள் நடத்தப்படுகின்றன. அந்த சோதனையில் தகுதி பெறாதவர்கள், மீண்டும் உடல் தகுதி பெறுவதற்கான அவகாசமும் வழங்கப்படுகிறது. அந்த அவகாசத்தில் உடல் தகுதி பெறாதவர்கள் காவல்துறையின் அலுவல்ரீதியான (clerical jobs) மற்றப் பணிகளுக்கு மாற்றம் செய்யப்படுகிறார்கள்.

சரி, மற்ற நாட்டுக் கதைகளையெல்லாம் விடுங்கள்.

இந்தியர்கள் ஏன் தொப்பை வளர்ப்பதில் உலகசாதனைக்கு சொந்தக்காரர்களாக இருக்கிறார்கள்?

* நம்முடைய முன்னோர் நமக்கு சொத்து, பத்துகளை மட்டும் சேர்த்து வைக்கவில்லை. தொப்பை வளத்தையும் சேர்த்துவிட்டே வைகுண்டத்துக்கோ, சிவபாதத்துக்கோ சென்றிருக்கிறார்கள். எனவே, மரபியல் அடிப்படையிலேயே நமக்கு தொப்பை வளரவேண்டும் என்பது நம்முடைய ஜீன்களில், நாம் கருவானபோதே எழுதப்பட்டு விடுகிற விதி.

* நம்முடைய உணவுமுறை பெரும்பாலும் கார்போஹைட்ரேட் சார்ந்ததாக இருக்கிறது. குறிப்பாக தென்னிந்தியாவில் உணவு என்பது 70 முதல் 75 சதவிகிதம் கார்போஹைட்ரேட் அடங்கியவை. வாலிப வயதில் செரித்து விடுகிறது. நடுத்தர வயதை எட்டும்போது கூடுதலாக உடலுக்குள் செலுத்தப்படும் கார்போஹைட்ரேட் செரிமானம் ஆனது போக மீதி கொழுப்பாக மாறி, தொப்பையை பம்மென்று பலூன் ஆக்குகிறது.

* மேற்கண்ட காரணங்கள் தவிர்த்து மது, புகை மாதிரி லாகிரி வஸ்துகளும் கூட தொப்பைக்குக் காரணம்.

* முறையான உடற்பயிற்சியோ, போதுமான உடலுழைப்போ இல்லாத வாழ்க்கை முறைதான் பெரும்பான்மையான மக்களுக்கு வாய்க்கிறது.

உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மாரடைப்பு மாதிரியான பிரச்சினைகள் பெரும்பாலும் தொப்பையர்களுக்கே அதிகம் வருகிறது. போலீஸ்காரர்கள் மட்டுமல்ல. நாம் அனைவருமே ‘தொப்பையை ஒழிப்போம்’ என்கிற இயக்கத்தை தொடங்கவேண்டிய நெருக்கடியில் இருக்கிறோம் என்பதே உண்மை.

(நன்றி : குங்குமம்)

14 ஜூலை, 2018

சொர்க்கம் எங்கே இருக்கிறது?

“இங்கு யாருமே மரணிப்பதில்லை. ‘மரணம்’ என்று உலகம் சொல்லும் நிகழ்வுக்கு பின்னர் ‘மரணித்தவர்கள்’ என்று சொல்லப்படுபவர்கள் மிகச்சிறந்த இடத்தை அடைகிறார்கள்”

சட்டென்று வாசித்தால் ஏதோ உயரிய தத்துவம் மாதிரி தெரியும்.

டெல்லியில் 11 பேர் கொண்ட குடும்பம் செய்துக் கொண்ட கூட்டுத் தற்கொலைக்கு காரணமாக எழுதிவைத்த கடிதத்தில் காணப்படும் வரிகள் இவை.

‘முக்தி’ அடைய, ஆன்மீக நம்பிக்கை கொண்டவர்கள் கூட்டமாக தற்கொலை செய்துக் கொள்வது என்பது புதிதல்ல.

ஜிம் ஜோன்ஸ் என்கிற அமெரிக்க சாமியாரை நம்பி 900க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் 1978ல் நடந்து அமெரிக்காவையே சோகத்தில் ஆழ்த்தியது. ‘மக்கள் ஆலயம்’ என்கிற அமைப்பை நிறுவி, ஆன்மீக செயல்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அவரை நம்பி பல நூறு அமெரிக்கர்கள் குடும்பம் குடும்பமாக திரண்டனர். இவர்களுக்காக கயானா என்கிற நாட்டில் ஜோன்ஸ் டவுன் என்கிற ஊரையே நிர்மாணித்தார் ஜோன்ஸ்.

தொடர்ச்சியாக ஜோன்ஸ் மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுக் கொண்டிருந்தன. வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலும் அமெரிக்கா இவர் மீது விசாரணையை முடுக்கி விட்டது.

இனி தப்பிக்கவே இயலாது என்கிற நிலையில், ‘சொர்க்கத்துக்கு போவோம்’ என்று ஜோன்ஸ் டவுனில் வசித்துக் கொண்டிருந்த தன் பக்தர்களை அழைத்துக் கொண்டு கூட்டாக தற்கொலை செய்துக் கொண்டார். தற்கொலை செய்துக் கொண்ட 909 பேரில் 304 பேர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலானோர் சயனைடு விஷம் அருந்தியும், துப்பாக்கியால் தங்களை தாங்களே சுட்டுக் கொண்டும் ‘சொர்க்கத்துக்கு’ போனார்கள். கைக்குழந்தைகளுக்கு கூட ஃபீடிங் பாட்டிலில் பாலில் சயனைடு கலந்து புகட்டப்பட்டது என்பதுதான் கொடுமை.

உலகையே உலுக்கிய கூட்டுத் தற்கொலை சம்பவம் அது. ஒரு தனி மனிதர் தனக்கு தனிப்பட்டு முறையில் ஏற்பட்ட நெருக்கடிக்காக, ஆன்மீகத்தைப் பயன்படுத்தி பல நூறு மக்களையும் தற்கொலை செய்ய வைத்தது அமெரிக்காவையே அதிரவைத்தது.

அதே அமெரிக்காவில் 1997ல் ‘சொர்க்கத்தின் நுழைவாயில்’ என்கிற அமைப்பு சார்பாக 39 பேர் கூட்டுத் தற்கொலை செய்துக் கொண்ட சோகமும் நடந்தது.

மாசடைந்த உலகம் சுத்திகரிக்கப்படப் போகிறது. அப்போது இங்கிருப்பவர்கள் மரணிப்பார்கள். இந்த மரணத்தில் இருந்து தப்பிக்கும் வாய்ப்பு ‘சொர்க்கத்தின் நுழைவாயில்’ உறுப்பினர்களுக்குக் கிடைக்கும். வேறு உலகில் இருந்து (அதாவது சொர்க்கத்தில் இருந்து) விண்வெளிக் கலம் வரும். அதில் ஏறிச்சென்று வாழ்வதற்காக ‘தற்கொலை’ செய்துக் கொள்ள வேண்டும் என்கிற பைத்தியக்காரத்தனமான நம்பிக்கையில் கூட்டாக மரணித்த கும்பல் அது.

‘உடல் என்பது ஆத்மா பயணிக்கும் வாகனம். இந்த வாகனத்தை விட்டு வேறு வாகனத்தை ஓட்டப் போகிறோம்’ என்றெல்லாம் தன்னுடைய பக்தர்களுக்கு மூளைச்சலவை செய்திருந்தார் ‘சொர்க்கத்தின் நுழைவாயில்’ அமைப்பை நடத்திவந்த மார்ஷல் ஆப்பிள்வொயிட் என்கிற சாமியார்.

கொடுமை என்னவென்றால், அந்த கூட்டுத் தற்கொலை நடந்து இருபது ஆண்டுகள் கழித்து இன்னமும் கூட ‘சொர்க்கத்தின் நுழைவாயில்’ இயங்கிக் கொண்டிருக்கிறது. விண்வெளிக் கலம் வரும், அதில் ஏறி மனித உடல் என்கிற வாகனத்தை விட்டு விட்டு வேறு வாகனத்தில் பயணிக்கலாம் என்று நம்பக்கூடிய பைத்தியக்காரர்கள் இன்னமும் அமெரிக்காவில் இருக்கிறார்கள். அவர்களுக்கு வெப்சைட் எல்லாம் கூட இருக்கிறது.

மனிதன், நாகரிகமடைந்த காலக்கட்டத்தில் சமுதாயமாக சேர்ந்து வாழ சில வரையறைகளை உருவாக்கிக் கொண்டான். அதில் ஒன்றுதான் மதம். அந்த மதத்தை வலுப்படுத்த சில சித்தாந்தங்களை உருவாக்கினான். மதக்கருத்துகள் ஒரு மனிதனின் வாழ்வியல் தொடர்பான எல்லா சந்தேகங்களையும் போக்கும் என்றெல்லாம் வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டு வந்தன.

மரணமே கூடாது என்பது மனிதனின் பேராசை. ஆனால், இயற்கை அதற்கு அனுமதிப்பதில்லை. எனவேதான் மரணத்துக்குப் பின்னான வாழ்வு என்று கனவு காண ஆரம்பித்தான்.

இந்த கனவுக்கு தீர்வாக ஏறக்குறைய எல்லா மதங்களுமே ‘சொர்க்கம்’ என்கிற கற்பனை உலகத்தை உருவாக்கி வைத்திருக்கின்றன. சில மதங்கள், மரணித்தாலும் மறுபிறப்பு உண்டு என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தின.

தானே உருவாக்கிய சொர்க்கத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எல்லாம் எழுதி வைத்திருக்கிறான் மனிதன். அந்த சொர்க்கத்தில்தான் கடவுளர்களும், தேவதைகளும் வாழ்கிறார்கள். நல்லவர்கள் சொர்க்கத்துக்குப் போவார்கள் என்றெல்லாம் ‘கதை’ கட்டப்பட்டது.

அப்படியென்றால் தீயவர்கள்?

அவர்களுக்கென்று ‘நரகம்’ என்கிற சொர்க்கத்துக்கு நேரெதிரான ஓர் உலகத்தை கற்பனையால் சிருஷ்டித்தான்.

மரணத்தைக் கண்டு அஞ்சும் மனிதர்களுக்கு சொர்க்கம் இருக்கிறது என்கிற நம்பிக்கை ஒரு காலத்தில் தேவைப்பட்டிருக்கலாம். சமூகத்தின் கட்டுப்பாடு, வரையறையை உடைக்கும் குற்றவாளிகளுக்கு நரகம் என்கிற அச்சம் காட்டப்பட்டிருக்கலாம்.

அதெல்லாம் அந்தந்த காலக்கட்டத்தின் தேவை. அப்போது மக்களை கட்டுப்படுத்தி முறையாக வாழவைக்கவே மந்திரங்களும், ஸ்லோகங்களும் உருவாக்கப்பட்டன.

உலகம், இன்று அறிவியல் மயமாகி விட்டது. நாம் வாழக்கூடிய பூமி என்பது உருண்டை என்பதை கலிலீயோ ஆணித்தரமாக நிறுவி நானூறு ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த உலகம் இயங்கக்கூடிய சூரிய மண்டலம், பிரபஞ்சம் என்பதைப் பற்றியெல்லாம் ஏற்றுக் கொள்ளக்கூடிய கருத்துருவாக்கங்களை அறிவியல் நமக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறது.

மற்ற கிரகங்களை தொலைநோக்கி மூலமாக ஆய்வு செய்ய முடிகிறது. சில கிரகங்களுக்கு விண்வெளிக் கலங்களை நேரடியாகவே அனுப்ப முடிகிறது. பூமியின் துணைக்கோளான சந்திரனுக்கு மனிதர்களே சென்று பார்த்துவிட்டு வந்து விட்டார்கள்.

சொர்க்கமோ, நரகமோ இதுவரை கண்டுப் பிடிக்கப்படவில்லை. இனிமேல் கண்டுப் பிடிக்கப்படக்கூடிய சாத்தியக்கூறும் இதுவரை தெரியவில்லை.

மனிதன் என்பவன் பல கோடி உயிரணுக்களால் ஆனவன். அவன் பிறப்பதற்கு முன் அவனுடைய இடம் என்பது இந்த உலகில் எப்படி வெற்றிடமோ, அவனுடைய மரணத்துக்குப் பிறகும் அதே வெற்றிடம்தான். சில நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் அவனுடைய நினைவு மட்டும் சில காலத்துக்கு வாழும். சில வியத்தகு சாதனைகளை தன் வாழ்வில் நிகழ்த்தியவர்கள் மட்டும் சற்று கூடுதல் காலத்துக்கு மக்களால் நினைவுகூரப்படுவார்கள்.

இதுதான் யதார்த்தம்.

பிறப்பை போலவே மரணமும் வெறும் சம்பவம் மட்டுமே. பிறப்புக்கும், இறப்புக்குமான இடையில் நாம் வாழ்வது மட்டுமே வாழ்க்கை. அதற்கு முன்போ, பின்போ வெறும் சூனியம் மட்டுமே.

நம்முடைய ஆத்மா வாழும், அது சொர்க்கத்துக்கோ நரகத்துக்கோ அவரவர் வாழ்வியல் பண்புகளின் அடிப்படையில் போய் சேரும் என்பதெல்லாம் வடிகட்டிய மூடநம்பிக்கை.

சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்கிறேன் என்றோ, கடவுளை காட்டுகிறேன் என்றோ எவரேனும் உங்களிடம் சொன்னால், அவரை நல்ல மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள். குருவாக்கி, ஆசிரம் கட்டி, சூடமேற்றி வழிபடுவதெல்லாம் அர்த்தமற்ற நேர விரயம்.

அறிவியல்தான் கடவுள். அது ஆதாரத்தோடு எதை சொல்கிறதோ, அதை நம்புவதே அறிவுடைமை.

(நன்றி : குங்குமம்)

3 ஜூலை, 2018

சொரணை இருக்கிறதா நமக்கு?

முன்பொரு காலம் இருந்தது.

நல்ல வெயிலில் நடந்துக் கொண்டிருக்கும் நடைபயணிகள், யார் வீட்டின் முன்பு நின்று தாகத்துக்கு தண்ணீர் கேட்டாலும், செம்பு நிறைய மகிழ்ச்சியோடு கொடுப்பார்கள். டீக்கடைகளில் தொடங்கி சினிமா தியேட்டர்கள் வரை இலவசமாக தண்ணீர் கிடைக்கும். தனியொரு மனிதனின் தாகத்துக்கு யாரிடம் தண்ணீர் கேட்டாலும் கிடைக்கும்.

வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்கு முதல் விருந்தோம்பலே சில்லென்ற தண்ணீர்தான். அதன் பிறகுதான் சவுகரிய விசாரிப்பு எல்லாம்.

மனிதர்களுக்கு மட்டுமல்ல. விலங்குகள் இளைப்பாறவும் ஆங்காங்கே தண்ணீர் தொட்டிகளை கட்டி, தண்ணீர் நிரப்பி வைத்த காலமும் இருந்தது.

தாகத்துக்கு தண்ணீர் கொடுப்பது பெரும் புண்ணியமாக கருதப்பட்ட தலைமுறைகளின் தொடர்ச்சி நாம்.

ஆனால் –

இன்று?

யார் வீட்டுக்காவது போனால், “தண்ணீ குடிக்கறீங்களா?” என்று சம்மதம் கேட்டுவிட்டுதான் கொடுக்கிறார்கள். யாரைச் சொல்லியும் குற்றமில்லை. எல்லோரும் குடிநீரை காசு கொடுத்துதானே வாங்குகிறோம்?

இன்றைய தேதியில் நமக்குத் தெரிந்து எங்குமே தண்ணீர் இலவசமில்லை. தாகமெடுத்தால், காசு கொடுத்து பாக்கெட் வாட்டர் அல்லது வாட்டர் பாட்டில் வாங்கிக் குடித்துக் கொள்ள வேண்டியதுதான்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், மெட்ரோ வாட்டர் போன்ற அரசு அமைப்புகள் மக்களுக்கு குடிநீர் வழங்கும் பணிகளை செய்துவருகின்றன. இதற்காக சொற்ப அளவிலான குடிநீர் வரியையும் நாம் செலுத்தி வருகிறோம். லாரி மூலமாகவோ அல்லது குழாய்கள் மூலமாகவோ சப்ளை செய்யப்படும் இந்த குடிநீரை அப்படியே பயன்படுத்த முடிவதில்லை. காய்ச்சிக் குடிக்கலாம். அல்லது RO முறையில் சுத்திகரித்து குடிக்க வேண்டும். அதற்காக ஒரு இயந்திரத்தை காசு செலவு செய்து வாங்க வேண்டும்.

அரசு, குடிமக்களுக்கு கொடுத்துக் கோண்டிருக்கும் இந்த அடிப்படை உரிமைகூட தனியாருக்கு தாரை வார்க்கப் படுகிறது என்பதுதான் லேட்டஸ்ட் பகீர்.

ஆம்.

கோவை மாநகருக்கு குடிநீர் வழங்கும் உரிமையை தாங்கள் பெற்றிருப்பதாக பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த சூயஸ் என்கிற நிறுவனம், கடந்த பிப்ரவரி ஒன்றாம் தேதி பெருமையோடு அறிவித்திருக்கிறது.

சுமார் பதினாறு லட்சம் மக்களுக்கு அடுத்த இருபத்தாறு ஆண்டுகளுக்கு வழங்கக்கூடிய ஒப்பந்தத்தை 400 மில்லியன் யூரோ (இந்திய மதிப்பில் சுமார் 3,150 கோடி ரூபாய்) பணத்துக்கு பெற்றிருப்பதாக அந்த நிறுவனம் பெருமையோடு சொல்கிறது.

குடிநீர் சப்ளையை தனியாருக்கு தாரை வார்ப்பது இது இந்தியாவில் முதன்முறை அல்ல. ஏற்கனவே டெல்லி, பெங்களூர், கொல்கத்தா போன்ற மாநகரங்களிலும் இதே போன்ற ஒப்பந்தத்தைப் பெற்றிருக்கிறார்கள்.

ஏற்கனவே, நாம் நெடுஞ்சாலைகளை இழந்துவிட்டோம். இந்தச் சாலைகளில் பயணிக்க சுங்கம் செலுத்துவதை போல, இனி கோவைவாசிகள் குடிநீருக்கும் தனியார் நிறுவனம் வரையறுக்கும் கட்டணத்தைச் செலுத்த வேண்டிய நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. தமிழகத்தில் முதற்கட்டம்தான் கோவை. அடுத்தடுத்து சென்னை, சேலம், மதுரை, திருச்சி போன்ற மாநகரங்களின் குடிநீர் சப்ளையையும் தனியார் நிறுவனங்கள் கைப்பற்றி, கொள்ளை லாபம் சம்பாதிக்க திட்டமிடப்பட்டு வருவதாக சொல்கிறார்கள்.

தண்ணீர் என்பது மக்களின் அடிப்படை உரிமை. பாதுகாக்கப்பட்ட குடிநீரை தன் குடிமக்களுக்கு வழங்க வேண்டியது அரசின் கடமை.

ஆனால் –

உலக வங்கியோ, தண்ணீரை தனியார் மயமாக்கச் சொல்லி வற்புறுத்தி வருகிறது. உலக வங்கியின் தலைவராக இருந்த ஜேம்ஸ் வோல்பென்ஸான் என்பவர், “இலவசமாகவோ, குறைந்த காசுக்கோ தண்ணீரை வழங்குவது என்பது பூமியின் வளங்களை சுரண்டுவதற்கு காரணமாகிறது. அதுபோல தண்ணீரை கொடுக்கும்போது, மக்கள் அதன் மதிப்பை அறியாமல் வீணாக்குகிறார்கள்” என்று சொன்னார்.

என்னவோ, இயற்கை வளங்களை அரசுகள் அப்படியே பாதுகாக்க விரும்புவதாகவும், மக்கள்தான் வளங்களை சுரண்டுகிறார்கள் என்பதைப் போன்றும் அவர் உதிர்த்த இந்த முத்துகள், அப்போதே உலகம் முழுக்க கடுமையான எதிர்ப்பைச் சந்தித்தது.

பொலிவியா நாட்டின் நான்காவது பெரிய நகரமான கோசம்பம்பாவில் இதுபோல தண்ணீர் வழங்கும் உரிமை தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டபோது மக்கள் திரண்டு பெரியளவில் 1999-2000 ஆண்டுகளில் போராட்டம் நடத்தினார்கள். தண்ணீர் மற்றும் வாழ்வியல் பாதுகாப்பு அமைப்பு என்கிற இயக்கத்தை நிறுவி, பல்லாயிரக் கணக்கானோர் அரசுக்கு எதிராக வீதிகளில் திரண்டார்கள்.

அந்த திட்டத்தில் முதலீடு செய்திருந்த அந்நிய நிறுவனங்கள், பொலிவியா அரசின் துணை கொண்டு போராட்டங்களை முடக்க கடுமையாக முயற்சித்தனர். சுமார் 90 நாட்கள் தொடர்ச்சியாக நடந்த போராட்டங்களை ஒடுக்க அரச வன்முறை கட்டவிழ்க்கப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். சில மரணங்களும் ஏற்பட்டன.

கடைசியாக பொலிவிய மக்களின் வீரம் செறிந்த போராட்டங்களின் காரணமாக அரசு, ஒப்பந்தம் எடுத்த தனியார் நிறுவனம், உலகவங்கி என்று அனைவரும் மக்கள் முன்பாக மண்டியிட வேண்டி வந்தது. பொலிவிய மக்களின் தண்ணீருக்கான இந்த போர், 2010ஆம் ஆண்டு ‘Even the Rain’ என்கிற பெயரில் ஸ்பானிஷ் மொழியில் திரைப்படமாகவே வந்தது.

இன்று குடிநீர், தனியாரின் கட்டுப்பாட்டுக்கு போகிறது என்றால், நாளை விவசாய பயன்பாடுகளுக்கான தண்ணீரையும் அவர்கள் கட்டுப்படுத்த முனைவார்கள். ஒவ்வொரு அணையையும் ஏதோ ஓர் அந்நிய நிறுவனம் பல்லாயிரம் கோடிகளை கொட்டி வாங்கும். லட்சக்கணக்கான கோடிகளை அறுவடை செய்யும். இது நவீன காலனி ஆதிக்கத்துக்கு அடிகோலும். நம் குழந்தைகளும், பேரன் பேத்திகளும் தண்ணீரை வாங்கி பயன்படுத்த பர்சனல் லோன் போடவேண்டிய அவலமும் வரலாம்.

பொலிவிய மக்களுக்கு இருந்த சொரணை, நமக்கும் இருக்கிறதா?

(நன்றி : குங்குமம்)

19 ஜூன், 2018

யானை டாக்டர்!

‘இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்’ என்கிற சிறப்பு யானைக்குதான் உண்டு. கற்கால காலக்கட்டங்களில் மனிதனுக்கு சினேகமான காட்டுவிலங்காக யானைதான் இருந்திருக்கிறது. தரையில் வாழும் உயிரினங்களில் primateகளுக்கு (கொரில்லா, சிம்பன்ஸி, மனிதனெல்லாம் இந்த வகைதான்) அடுத்தபடியாக யானைக்குதான் அறிவு அதிகம். கருவிகளை பயன்படுத்தக்கூடிய ஆற்றலும், அறிவும் மனிதர்களைத் தவிர்த்து யானைக்குதான் உண்டு.

மனிதர்களைப் போலவே சமூகமாக வாழக்கூடிய நாகரிகம், ஆதிக்காலத்திலிருந்தே யானைகளுக்கு உண்டு. ஒருவேளை தாய்வழி சமூகம் என்கிற வாழ்க்கைமுறையை மனிதர்கள், யானைகளிடமிருந்து கற்றிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். ஆண் யானைகள், பருவம் எய்தக்கூடிய வயது வரை தாயோடுதான் காணப்படும். பெண் யானைகள் கடைசி வரை தாய், சகோதரி, மகள் என்று கூட்டுக் குடும்பமாகவே வசிக்கின்றன.

ஈடு இணையில்லாத இந்த விலங்கினத்தை மனிதர்கள் படுத்திய பாடு கொஞ்சநஞ்சமல்ல. மனிதனோடு சினேகமாக இருக்கக்கூடிய விலங்கு என்பதால், அதை அல்லக்கை மாதிரி மனிதன் பயன்படுத்துகிறான். கடினமான வேலைகளை யானையின் தும்பிக்கை மேல் பாரமாக போடுகிறான். ஆசியாவில் மட்டுமே சுமார் 15,000 யானைகள் இதுபோல மனிதர்களின் வேலைக்காரனாக பணிபுரிவதாக ஒரு கணக்கீடு சொல்கிறது.

யானைகளை கொண்டே யானைகளின் வசிப்பிடமான காடுகளை அழித்து, மனிதர்களுக்கான குடியிருப்புகளாக மாற்றியிருக்கிறோம். வரலாறு நெடுக போர்களில் பயன்படுத்தி பலியிட்டிருக்கிறோம். Zooக்களில் காட்சிப் பொருளாக காட்டுகிறோம். சர்க்கஸ்களில் வித்தை செய்ய விடுகிறோம். கோயில்களில் கட்டிப் போட்டு, அதன் சுதந்திரத்தைப் பறிக்கிறோம்.

ஆற்றலில் நம்மைவிட பெரிய விலங்கு. எனினும் சுபாவத்தில் கொஞ்சம் நட்பாக பழகுகிறது என்பதால் மனிதக்குலம் யானையிடம் எடுத்துக் கொள்ளும் அட்வாண்டேஜ் கொஞ்சநஞ்சமா?

1930ல் தொடங்கி 1940க்குள் ஒரு பத்தாண்டில் மட்டுமே ஒட்டுமொத்த யானைகளின் எண்ணிக்கையை வேட்டையாடி பாதியாக குறைத்த கொடூரமான சாதனைக்கு சொந்தக்காரர்கள் நாம். வீரத்தை வெளிப்படுத்துகிறோம் என்கிற பெயரில் அப்பாவி யானைகளை தேடித்தேடி கொன்றிருக்கிறோம். அவற்றின் தந்தங்களை வெட்டி வீடுகளில் ஃபர்னிச்சர்களுக்கு பயன்படுத்தியிருக்கிறோம்.

சமீபமாகதான் யானை குறித்த இரக்கவுணர்ச்சி நமக்கெல்லாம் ஏற்பட்டிருக்கிறது. அவை பாதுகாக்கப்பட வேண்டிய இனம் என்கிற விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. காலம் கடந்தாவது இந்த ஞானம் நமக்குப் பிறந்ததே என்று சமாதானப்படுத்திக் கொள்ள வேண்டியதுதான்.

இப்போது யானைகளுக்கு பிரச்னை என்றால், சுற்றுச்சூழலாளர்கள் கை கோர்த்து அவற்றுக்கு உதவுகிறார்கள். அரசும்கூட சரணாலயங்களில் யானைகளுக்கு புத்துணர்வு முகாமெல்லாம் நடத்துகிறது.

இந்த சூழலுக்கு வித்திட்டவர் சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் பயின்ற டாக்டர் வைத்தியநாதன் கிருஷ்ணமூர்த்தி. 1929ல் பிறந்து 2002 வரை வாழ்ந்த இந்த கால்நடை மருத்துவர், தன்னுடைய வாழ்நாள் மொத்தத்தையுமே யானைகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதிலேயே செலவழித்திருக்கிறார். முதுமலை தெப்பக்காடு யானை முகாம் இவருடைய சிந்தனையில் உதித்த திட்டம்தான்.

சர்வதேச இதழ்களில் இடம்பெற்ற இவருடைய ஆராய்ச்சிக் கட்டுரைகள், யானைகளின் இருத்தலியல் குறித்த அவசியத்தை எடுத்துரைத்து உலக சமூகத்தின் மனச்சாட்சியை உலுக்கியது. விலங்கியல் மருத்துவ உலகம் இவரை செல்லமாக டாக்டர் கே என்றழைக்க, மக்கள் தாமாக முன்வந்து ‘யானை டாக்டர்’ என்கிற பட்டத்தை வழங்கினர்.

கிணறுகளில் விழுவது, நோயுற்று காடுகளில் கிடக்கும் யானைகளுக்கு சிகிச்சை அளிப்பதன் பொருட்டு மயக்க ஊசி பயன்படுத்தும் முறையை கால்நடை மருத்துவத் துறையில் முதன்முதலாகப் பயன்படுத்தியவர் இவர்தான். மர்மமான முறையில் மரணிக்கும் யானைகளுக்கும் மனிதர்களுக்கு செய்வதைப் போலவே போஸ்ட்மார்ட்டம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தினார். யானைகளுக்கு எப்படி போஸ்ட்மார்ட்டம் செய்வது என்பதை நேரடியாக செய்தும் காட்டினார். இதன் பிறகே தந்தங்களுக்காக யானைகளை கொல்லும் கடத்தல்காரர்கள், சட்டத்தின் பிடியில் சிக்க ஆரம்பித்தார்கள். கோயில்களில் வளர்க்கப்படும் யானைகளை எப்படி பராமரிக்க வேண்டும், அதற்கான கண்காணிப்பு முறைமைகளை அரசு எப்படி ஏற்படுத்த வேண்டும் என்பதற்கெல்லாம் வழிகாட்டு முறைகளை உருவாக்கியவர் இந்த யானை டாக்டர்தான்.

“யானைகள் இவர் பேசுவதை புரிந்துக் கொள்கின்றன. இவர் பேச்சுக்கு கட்டுப்படுகின்றன” என்று இன்று சர்வதேசப் புகழ் பெற்றிருக்கும் விலங்கியல் நிபுணரான இயான் டக்ளஸ் ஹாமில்டன் நேரடியாக கண்டு ஆச்சரியப்பட்டிருக்கிறார்.

இந்தியாவில் இன்று தோராயமாக 28,000 யானைகள் வசிக்கின்றன. இவற்றில் மூவாயிரத்துக்கும் சற்று குறைவான எண்ணிக்கையில் தமிழகத்தில் இருக்கின்றன. நம்மூர் யானை டாக்டர் மட்டும் இல்லையென்றால், இந்த எண்ணிக்கை பத்தில் ஒரு பங்காக இருந்திருந்தாலே அதிசயம்தான்.

இவர் குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய ‘யானை டாக்டர்’ என்கிற சிறுகதை லட்சக்கணக்கான வாசகர்கள் வாசித்து சிலிர்ப்படைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று, யானை குறித்த எந்தவொரு செய்தியை நீங்கள் செய்தித்தாள்களில் வாசித்தாலும், உங்களோடு மானசீகமாக அமர்ந்து புன்னகைத்துக் கொண்டிருப்பார் யானை டாக்டர். உற்று நோக்குங்கள். இந்த கட்டுரையை நீங்கள் வாசிக்கும்போதுகூட உங்கள் எதிரில்தான் இருக்கிறார் டாக்டர் கே.

(நன்றி : குங்குமம்)