கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

25 ஆகஸ்ட், 2020

விஜயகாந்த்

தேவக்கோட்டை ராம்நகர் வழியாக வந்துக் கொண்டிருந்த அரசு பஸ் அது.

பஸ் டிரைவர் அசப்பில் நடிகர் மன்சூர் அலிகான் சாடையில் முரட்டுத் தனமாக இருந்தார்.

நன்கு ஒதுக்கப்பட்ட வெட்டறுவா மீசை. குடித்து குடித்தே சிவந்த கண்கள். சீப்புக்கு அடங்காத பரட்டைத் தலை. ஐ.எஸ்.ஓ 9001 தரச்சான்று பெற்ற அக்மார்க் தமிழ் சினிமா வில்லன் மாதிரியான தோற்றம்.

அந்த வட்டாரத்தில் அடாவடிக்காக அவர் ரொம்பவும் பிரபலம். எப்போதும் எவரிடமாவது எதற்காகவாவது சண்டை. வெறும் வாய்ச் சண்டையல்ல. இரும்பு உலக்கை மாதிரியான அவரது கைகள் தான் பேசும். எதிராளியின் வாய் உடனே வெத்தலைப் பாக்கு போடும்.

பேருந்து கூட்டத்தால் பிதுங்கி வழிந்தது.

இருந்தாலும் வழக்கம்போல ஏடாகூடமாக அங்குமிங்குமாக ஸ்டியரிங்கை திருப்பி தெனாவட்டாகவே ஓட்டிக் கொண்டு வந்தார் அந்த டிரைவர்.

எடக்கு மடக்காக சாலையில் வரும் இவரது பேருந்தை பார்த்து பாதசாரிகளும், மிதிவண்டிக் காரர்களும் அலறியடித்து ஓடுவதை காண்பது டிரைவருக்கு விருப்பமான பொழுதுபோக்கு.

என்னாயிற்றோ, ஏதாயிற்றோ திடீரென சடக்கென்று சடன் பிரேக் அடித்தார்.

கீச்சென்ற பெரும் சத்தத்தோடு பேருந்து அதிர்ந்து குலுங்கி நின்றது. கம்பியை பிடித்தப்படியே நின்றுக் கொண்டிருந்த கருவாட்டுக் கூடை கிழவி நிலைதடுமாறி கண்டக்டர் மேல் விழுந்தாள்.

கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகளான சில பெண்கள் ‘ஓ’வென கீச்சுக் குரலால் அலறினார்கள். ஆண்கள் முணுமுணுவென்று அவர்களுக்கு மட்டுமே கேட்கும் வண்ணம் சடன் பிரேக் அடித்த முரட்டு டிரைவரை திட்டினார்கள்.

என்னவென்று எட்டிப்பார்க்க பஸ்ஸில் இருந்து இறங்கினார் கண்டக்டர். கொஞ்சம் இளம் வயதினராகவே இருந்தார். பூஞ்சை உடம்பு. மீசை சரியாக வளரவில்லை. இந்த டிரைவரோடு ட்யூட்டி பார்ப்பது அவருக்கும் தான் பிடிக்கவில்லை. எப்போது பார்த்தாலும் யாரிடமாவது சண்டை. அடிதடி. இப்போது என்ன பிரச்சினையோ?

பேருந்துக்கு முன்னால் சீருடையில் நூற்றுக் கணக்கில் பள்ளி மாணவர்கள் திரண்டிருந்தார்கள். எந்த வாகனத்தையும் செல்லவிடாமல் சாலையை மறித்திருந்தார்கள்.

சாலை மறியல்.

கூட்டத்தை மீறி முரட்டுத்தனமாக வண்டி ஓட்டிய ஓரிரு லாரிகள் கல்வீச்சால் அடித்து நொறுக்கப்பட்டிருந்தது. திரண்டிருந்தவர்கள் பொதுவாக பத்திலிருந்து பதினைந்து வயதுக்கு உட்பட்டவர்கள். ஆர்வம் தாங்காமல் என்ன கலாட்டாவென்று பஸ்ஸில் இருந்த சிலரும் இறங்கிப் பார்த்தனர்.

இந்தி எதிர்ப்புப் போர்.

இந்தி ஒழிக. தமிழ் வாழ்க.

தேவக்கோட்டையில் ஒழுக்கத்துக்கு பெயர் போன பள்ளி டி.பிரிட்டோ பள்ளி. மறியல் செய்த மாணவர்கள் இப்பள்ளியைச் சேர்ந்தவர்கள். தலைமை ஆசிரியர் அருள் பிரகாசம் மிகக் கண்டிப்பானவர். அடங்காத மாணவர்களை தடியான பிரம்பால் விளாசித் தள்ளி விடுவார். அவரது பிரம்பையும் மீறி மறியலுக்கு வந்திருந்தார்கள் மாணவர்கள்.

“டேய் பசங்களா ஒழுங்கு மருவாதையா வழியை உடுங்க. இல்லேன்னா பஸ்ஸை எல்லார் மேலயும் ஏத்தி தள்ளி கொன்னுப்புட்டு போயிக்கிட்டே இருப்பேன். என்னைப் பத்தி தெரியுமில்லே. எங்கிட்டே உங்க வேலையை வெச்சுக்காதீங்க” முரட்டு பஸ் டிரைவர் சன்னல் வழியாக தலையை நீட்டி மாணவர்களை பார்த்து எச்சரிக்கைத் தொனியில் கத்தினார். ஷிப்ட் முடித்து சீக்கிரம் வீட்டுக்குப் போகும் அவசரத்தில் இருந்தார் அவர்.

ம்ஹூம். அந்த எச்சரிக்கையால் பலனில்லை. குறிப்பாக அரசு பஸ்கள் மீதுதான் மாணவர்களுக்கு கோபம் அதிகமாக இருந்தது. பஸ்ஸில் எழுதப்பட்ட எழுத்துக்கள் இந்தியிலும், ஆங்கிலத்திலும் இருந்தது. தமிழுக்கு கொஞ்சம் கூட இடமில்லை.

“தமிழ்நாட்டில் தமிழனுக்காக ஓடுற பஸ்ஸுலே தமிழுக்கு இடமில்லை. உங்க பஸ்ஸை ஊருக்குள்ளே அனுமதிக்க முடியாது” மாணவர்களில் யாரோ ஒருவன் சத்தமாக டிரைவரைப் பார்த்து சொன்னான். மாணவர்களின் கண்களில் தமிழுணர்வு தகித்தது.

போர்.. போர்.. இந்தி எதிர்ப்புப் போர்.

“ம்ம்.. இதுக்கு முன்னாடி எவ்ளோ பிரச்சினைங்க பார்த்திருப்பேன். இந்த தம்மாத்தூண்டு பசங்க வேலைக்கு ஆவ மாட்டானுங்க. பஸ்ஸை ஸ்டார்ட் பண்ணி கூட்டத்துக்குள்ளே விட்டோமுன்னா அவனவன் சிதறி ஓடிடுவான்” டிரைவர் பயணிகளிடம் முணுமுணுத்தார். வண்டியை ஸ்டார்ட் செய்தார். விர்ரூம்.. விர்ரூம்.. ஆக்ஸிலேட்டரை அழுத்தி மிதித்தார்.

‘அய்யய்யோ இந்த பைத்தியக்காரன் ரெண்டு மூணு பசங்களை போட்டுத் தள்ளிடுவான் போலிருக்கே?’ கண்டக்டர் உள்ளுக்குள் அச்சப்பட்டார். நிலவரம் மோசமாகிக் கொண்டிருப்பதை கண்ட பயணிகளுக்கும் உள்ளுக்குள் நடுக்கம். மதுரையில் பல பேருந்துகள் கொளுத்தப்பட்டதாகவும், கல்வீசி தாக்கப்பட்டதாகவும் செய்திகள் வந்தவண்ணம் இருந்தன.

கியரை போட்டு வண்டியை சில அடிதூரம் விருட்டென்று ஓட்டி மாணவர்களை டிரைவர் அச்சமடைய வைத்த சமயம்…

யாரும் எதிர்பாரா வகையில்..

டிரைவருக்கு முன்பாக இருந்த பேருந்து கண்ணாடி தூள்தூளாக நொறுங்கியது. நொறுக்கப்பட்டது. கண்ணாடியை உடைத்துக்கொண்டு வந்த நீளமான இருகால்கள் டிரைவரின் மார்பில் எட்டி உதைத்தது.

பல அடிதூரம் பறந்துப் போய் விழுந்த டிரைவருக்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை. மூளைக்குள் பல வண்ணங்களில் பூச்சி பறந்தது. தலை மீது இடிவந்து விழுந்ததோ என்று அஞ்சினார். ஒருபக்க காது செவிடாகிப் போனது.

ங்கொய்யென்று ரீங்காரம்.

நிமிர்ந்துப் பார்த்தார்.

பார்வையே மங்கலாகி விட்டது. ஆயிரம் வயலின்கள் அகோரமாக இசை எழுப்ப.. டிரம்ஸ் ஒலி திடும்.. திடும்..மென திடுதிடுக்க.. நெருப்பும், ஒளியும் மாறி மாறி பளீரிட, டிரைவரின் கண்கள் கூசியது.

திரை முழுக்க நெருப்பு. நெருப்பு மறைந்து கருப்பு, சிவப்பு, மஞ்சள் நிறம் கொடியாய் பளிச்சிட.. கொடிக்கு நடுவே கருப்புநிலா இளம்வயது கேப்டன் என்ட்ரி. கோபத்தில் கண்கள் எரிமலையாய் நெருப்பை கக்கிக் கொண்டிருந்தது. நெற்றியில் வந்து விழுந்த முடியை அனாயசமாக தலையை வெட்டியே ஒதுக்கினார். இரு புருவமும் வில்லாக தெரித்தது. இடி போன்ற அடியை வாங்கிய டிரைவர் பயந்துபோய் கையெடுத்து கேப்டனை கும்பிட..

“தமிழுக்காக தண்டவாளத்துலே தலையை வைக்கவும் தெரியும். தேவைப்பட்டா தமிழ் எதிரிகளோட தலையை எடுக்கவும் தெரியும்” – சவுண்டாக பஞ்ச் டயலாக் பேசிவிட்டு கேப்டன் திரும்ப, இம்முறை வெற்றியிசை பின்னணியில் இசைக்க.. நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஓடிவந்து கேப்டனை தங்கள் தோள்மீது தூக்கி வைத்துக் கொள்கிறார்கள்.

யாரோ ஒருவர் பெரிய ஆளுயர ரோஜாமாலையை கேப்டனின் கழுத்தில் போடுகிறார். டாப் ஆங்கிளில் லாங் ஷாட். நடுவில் கேப்டன், சுற்றி மாணவர்கள்.

“வெற்றி மேல வெற்றி தான் உங்கள் கையிலே” ரோட்டில் சென்று கொண்டிருந்த வழிப்போக்கர் யாரோ பெருங்குரலெடுத்து பாட, ஓபனிங் சாங்.

ம்… நியாயமாகப் பார்க்கப் போனால் கேப்டனைப் பற்றிய புத்தகம் இப்படித்தான் தொடங்கப் படவேண்டும். இது சினிமாப் படமல்ல, புத்தகம் என்பதாலும்.. இப்புத்தகத்தை எழுதுவது இயக்குனர் பேரரசு அல்ல என்பதாலும் கொஞ்சம் அடக்கியே வாசிப்போம்.

(‘விஜயகாந்த்’ புத்தகத்தின் முதல் அத்தியாயம்)

8 நவம்பர், 2018

96

என் பெயர் ராம். அதாகப்பட்டது கே.ராமச்சந்திரன். பதினேழு வருஷங்களுக்கு முன்னாடி லயோலாவில் பி.எஸ்சி. (விஸ்காம்). இன்று, வைல்ட்லைஃப் போட்டோகிராஃபர். ஒரு ஆங்கில சேனலுக்காக வேலை செய்கிறேன்.

அசைன்மென்ட் விஷயமாக யாங்கூனுக்கு கிளம்பிக் கொண்டிருக்கிறேன். சென்னை சர்வதேச விமான நிலையம். ஃப்ளைட்டுக்காகக் காத்திருந்த நேரத்தில்தான் அவளைப் பார்த்தேன்.

அவளை என்று ஒருமையிலா சொன்னேன்?

அவள்களைப் பார்த்தேன் என்று பன்மையில் திருத்தி வாசியுங்கள். முகங்களைப் பார்க்கவில்லை. முதுகுகளைத்தான் பார்த்தேன்.

எங்கேயோ கண்ட முதுகுகள்!

ஜானகியும், மைதிலியுமா?

யெஸ். அப்படித்தான் தோன்றுகிறது.

அன்று 35 எம்.எம். இப்போது 70 எம்.எம். அகன்ற திரை. அகலம்தான் வித்தியாசம்.

நொடியில் சிலிர்த்த ஆழ்மனசு, 22 ஆண்டுகளுக்குப் பின்னோக்கி ஃப்ளாஷ்பேக்கில் பயணித்தது.

அது 96ம் வருடம். பத்தாம் வகுப்பு ‘அ’ பிரிவு. தந்தை பெரியார் அரசினர் உயர்நிலைப் பள்ளி. புழுதிவாக்கம். பரங்கிமலை ஒன்றியம். காஞ்சிபுரம் மாவட்டம்.

தூக்கம் கண்ணைச் சுழற்றிக் கொண்டிருந்த ஒரு சோம்பலான, சோர்வான மதியப் பொழுது. தமிழய்யா வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தார்.

கைக்கிளை, பெருந்திணை, பசலை என்றெல்லாம் போடு போடென போட்டுக் கொண்டிருந்தார். பக்கத்து சீட்டு சதீஷ், குறட்டை விட்டுக் கொண்டிருந்தான். கண்களைத் திறந்து கொண்டே எப்படித் தூங்குவது என்று அவனிடம்தான் பயிற்சி எடுக்க வேண்டும்.

அய்யாவோ கர்மமே கண்ணாக தலைவன், தலைவி என்றெல்லாம் சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்தார். எனக்குத் தெரிந்த தலைவன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தலைவி குஷ்பூ. அய்யாவின் தலைவன், தலைவியெல்லாம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாக சங்க காலத்தில் வாழ்ந்தவர்கள்.

வகுப்பில் பாதிப்பேர் அரைத்தூக்கத்திலும், மீதிப் பேர் முழுத்தூக்கத்திலும் ஆழ்ந்து விட்டதை அய்யா கவனித்து விட்டார். இதுமாதிரி சமயங்களில் சட்டென்று கியர் மாற்றி ஆக்ஸிலேட்டரை முறுக்குவது அவர் வழக்கம்.

எருமை மாட்டுக்கு வாழைப்பழத்துக்கு நடுவில் மாத்திரை வைத்துத் தருவது மாதிரி ‘சூடாக’ ஏதாவது மேட்டர் பிடித்து, வகுப்பறை கும்பகர்ணன்களை எழுப்புவார். அன்றும் அப்படித்தான்.

“எலேய் ராமச்சந்திரன், உன்னை ஒரு பொண்ணு காதலிக்கிறா. அவளுக்கு உன்னைப் புடிச்சிருக்குன்னு எப்படிய்யா தெரிஞ்சுக்குவே?”என்னை நோக்கி அணுகுண்டு வீசுவார் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு போன்ற உணர்வுகளெல்லாம் கலந்து கட்டி புயலாய் என் நெஞ்சுக்குள் வீசின. ஒட்டுமொத்த வகுப்பும் என்னைப் பார்த்து ‘கொல்’லென்று சிரித்து வைக்க, தயக்கத்தோடு எழுந்தேன் “ம்ம்... அய்யா... அது வந்து…” காலால் கோலம் போட்டேன்.

“ஆம்புளைப் புள்ளே தானே? என்னலே வெக்கம்?”

“வந்து... வந்து... என்னை புடிச்சிருக்கான்னு கேட்பேன். அவளுக்கு புடிச்சிருந்தா ‘புடிச்சிருக்கு’ன்னு சொல்லுவா...”

“தூத்தேறி.. புடிக்கலைன்னா செருப்பால அடிப்பாளா?”

நான் அவமானப்படுவது கண்டு வகுப்பு குதூகலம் அடைந்தது.

டி.எஸ்.பாலையா மாதிரி விஸ்தாரமான சிரிப்பு ஒன்றைச் சிரித்தார் தமிழய்யா. அவர் நல்ல திராவிட நிறம். பல் மட்டும் பளீரென்று மல்லிகைப்பூ மாதிரி வெள்ளை வெளேரென்று மினுக்கும்.

‘இன்னைக்கு ஏதோ தரமான சம்பவம் நடக்கப் போவுது’ என்று ஒட்டுமொத்த வகுப்பறையும் சுவாரஸ்யமாக கவனிக்க ஆரம்பித்தது.

“தெரியலீங்க அய்யா. நீங்களே சொல்லிடுங்க...”

“மூதி. இதெல்லாம் கூட உங்களுக்குச் சொல்லிக் கொடுக்கணும். அதுக்குதான்டா சங்கத்தமிழ் படிக்கணுங்கிறது. நான் பாடம் நடத்துனா எல்லாப் பயலும் தூங்குறீங்க. நீங்க எப்படி காதலிச்சி, கல்யாணம் பண்ணி, புள்ளை பெத்து வாழப்போறீங்களோ. தமிழைப் படிச்சவனுக்கு தமிழே வழிகாட்டும்…”

அய்யா ஒரு சின்ன சஸ்பென்ஸ் வைத்துவிட்டு, சொம்பில் நிறைந்திருந்த தண்ணீரை எடுத்துக் குடித்தார். அவரே திரும்ப ஆரம்பிக்கட்டும் என்று நாங்களெல்லாம் உன்னிப்பானோம்.

“ஒரு தெருவோட இந்த முனையிலே இருந்து நீ நடக்குற. இன்னொரு முனையிலே இருந்து உன்னை விரும்பற பொண்ணு நடந்து வர்றா. இடையிலே ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தரு தாண்டி நடக்குறீங்க. வெட்கங்கெட்ட ஆம்பளைப் பய நீ. சட்டுன்னு நிமிர்ந்து பார்த்துடுவே. அவ, பொண்ணு இல்லையா? அப்படியெல்லாம் பார்க்க மாட்டா. ஓரக்கண்ணுலே பார்ப்பா. அது உனக்குத் தெரியாது.

ஆனா, தெரு முக்குலே திரும்பறதுக்குள்ளே ஒரு முறையாவது தீர்க்கமா திரும்பி விரும்பி முழுசா உன்னைப் பார்ப்பா. அவ அப்படிப் பார்க்குறாளான்னு நீ உறுதிப்படுத்திக்கணும்...”

“திரும்பிப் பார்க்கலைன்னா அய்யா?” சதீஷ், ஆர்வமாகக் கேட்டான்.

“இந்த எருமை அந்தப் பசுவோட மனசுலே இல்லேன்னு அர்த்தம்!”

அட. காதலிக்கிறவளின் மனசில் நாம் இருக்கிறோமா என்று தெரிந்துகொள்வதற்கு இவ்வளவு சுலபமான வழியா?

‘இதயம்’ முரளிக்கு இந்த சூத்திரம் தெரிந்திருந்தால், எத்தனையோ படங்களின் கிளைமேக்ஸே மாறியிருக்குமே?

அய்யா, மீண்டும் பாடத்தைத் தொடர என் மனசோ ஜிவ்வென்று றெக்கை கட்டி ராக்கெட் மாதிரி சஞ்சாரமற்ற சூனிய வெளியில், சத்தமற்ற முத்தங்களைப் பறக்கவிட்டுக் கொண்டே பயணிக்கத் தொடங்கியது.

அன்று பள்ளி முடிந்தது. டியூஷனுக்குச் செல்ல வேண்டும். சதீஷும் என்னோடு டியூஷனுக்கு வருவான். சைக்கிள் ஸ்டேண்டுக்கு வரும் வரையில் அவனிடம் பேசாமலேயே மிதந்து வந்துகொண்டிருந்தேன்.

“மச்சி. தமிழய்யா சொன்னதை டெஸ்ட் பண்ணி பார்க்கப் போறேண்டா...” என்றேன்.

கொஞ்சம் ஆவலோடு கேட்டான். “ஜானகி கிட்டேயா?”

ராமச்சந்திரனுக்கு ஜானகிதான் ஹீரோயினாக முடியும் என்பதெல்லாம் விதி. களிமண் மண்டையன் சதீஷுக்கே இது தெரிந்திருப்பது கடவுளின் சதி. அனைத்துக்கும் மேல் நான் ஜானகியிடம் ஃப்ளாட் ஆகியிருந்தேன் என்பதையும் ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும்.

கடலளவு காதல் அது. மீடியம் சைஸ் மெரூன் ஸ்டிக்கர் பொட்டு. அதற்கு இருபக்கத்திலும் 3 மில்லிமீட்டர் சுற்றளவுக்கு வெள்ளை சாந்து வைத்து டக்கராக இருப்பாள். வட்ட முகம். சிவப்பு என்று சொல்லிவிட முடியாது. கருப்பு என்றும் கழற்றிவிட முடியாது. மாநிறம். வெள்ளை ஜாக்கெட். பச்சைப் பாவாடை தாவணியில் அவளைப் பார்த்ததுமே ‘மாங்குயிலே பூங்குயிலே’ பாட்டு மனசுக்குள் லூப்பில் ஓடும்.

சதீஷ் என் நம்பிக்கையை சுக்குநூறாக உடைத்தான்.

“மச்சீ. தப்பா நினைச்சுக்காதே. அது திம்சுக்கட்டை மாதிரி இருக்கு. நீயோ கிரிக்கெட் ஸ்டெம்பு மாதிரி இருக்கே! வேலைக்கு ஆவும்னு நெனைக்கறீயாடா?”

அவன் சொன்னதும் என் பர்சனாலிட்டியை நினைத்து நானே கழிவிரக்கம் கொண்டேன். இருந்தாலும் கண்ணாடியில் பார்க்கும்போது ‘ரசிகன்’ விஜய் மாதிரிதான் என் முகமும் இருந்தது. கன்னத்தில் லேசாக டொக்கு விழுந்திருப்பதால் அழகு இல்லை என்றாகிவிடுமா? அஜீத்குமாரேகூட ‘காதல் கோட்டை’ படத்தில் இப்படித்தானே இருக்கிறார்? அவரை ஹீரா துரத்தித் துரத்திக் காதலிக்கவில்லையா? பெருத்த நம்பிக்கையோடு சொன்னேன். “இல்லை மாமா. எனக்குத் தோணுது. ஜானுவும் என்னை லவ் பண்ணுறா. FLAMES போட்டுப் பார்த்தப்போகூடாதுனு வந்தது!”

“சரி மச்சான். உன் நம்பிக்கையைக் கெடுப்பானேன். இப்போ ஜானகி, சைக்கிள் எடுக்க வருவா இல்லே. தமிழய்யாவோட ஃபார்முலாபடி நடந்துட்டா நீங்க லவ்வர்ஸுன்னு ஏத்துக்கறேன்...”

நல்ல வேளையாக அந்தக் காலத்தில் ஒவ்வொரு விஜய்க்கும், அஜீத்துக்கும் சின்னி ஜெயந்த், விவேக், கரண் மாதிரி காதலுக்கு உதவிக்கரம் நீட்டும் நண்பர்கள் அமைந்திருந்தார்கள். எனக்கு சதீஷ்.

‘ஆ’ பிரிவிலிருந்து ஜானு வருவதற்கு பத்து நிமிடம் காத்திருக்க வேண்டும். ஏனெனில் ‘அ’ பிரிவு ஆண்கள் எல்லாரும் கிளம்பியபிறகே, ‘ஆ’ பிரிவு பெண்களை பாதுகாப்பு நிமித்தமாக புஷ்பவல்லி மேடம் அனுப்புவார்.

இந்த விஷயத்தில் மேடம் ரொம்பவே ஸ்ட்ரிக்ட். மேடத்தின் இதுமாதிரி தீவிரமான கண்டிஷன்களால் கடுப்பான சில மாணவர்கள், வெறுத்துப்போய் அந்த மேடத்தையே சைட் அடிக்கும் சம்பவங்களும் சமயங்களில் நடந்ததுண்டு.

அன்றைய பத்து நிமிடம், பத்து ஆண்டுகளாய் எனக்குக் கழிந்தது. பத்து விரல் நகங்களையும் கடித்துத் துப்பியிருந்தேன். கடிக்க மேலும் நகம் இல்லாமல், கால் நகங்களைக் கடிக்கலாமா என்று எண்ணிய வேளையில், பச்சைத் தாவணிகள் பட்டாம்பூச்சிகளாகப் பறந்துவரத் தொடங்கியிருந்தன. ஜானு, தூரத்தில் ஒளியாய்த் தெரிந்தாள்.

புத்தகப்பையை மார்போடு அணைத்துக் கொண்டிருந்தாள். கண்ணில் பட்டையாக மை வைப்பது அவளது ஸ்பெஷாலிட்டி. ட்ரிம் செய்த புருவம். இமைகளின் இருபுறமும் லேசாக மையைத் தீற்றியிருந்தது அன்று கூடுதல் கவர்ச்சியாக எனக்குப் பட்டது. அவள் சைக்கிள் எடுக்கும்போது அவளது கண்பார்வையில் படும்படி நின்றுகொண்டேன்.

சதீஷ், பாதுகாப்பாக தலைமறைவாகி எங்களைக் கவனித்துக் கொண்டிருந்தான். என்னை ஒரு பொருட்டாகவே நினைக்காமல், சைக்கிளை ஸ்டாண்டில் இருந்து விடுவித்தாள். தமிழய்யாவின் குரல் அசரீரியாய் ஒலித்தது.

“வெட்கங்கெட்ட ஆம்பளைப் பய நீ. சட்டுன்னு நிமிர்ந்து பார்த்துடுவே. அவ, பொண்ணு இல்லையா? அப்படியெல்லாம் பார்க்க மாட்டா. ஓரக்கண்ணுலே பார்ப்பா. அது உனக்குத் தெரியாது...”

ஹேண்டில்பாரை லாவகமாகப் பிடித்து சைக்கிளை ரிவர்ஸ் எடுத்தவள், பெடலை மிதிக்க ஆரம்பித்தாள்.

‘போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே’ என்று பேத்தோஸாக எஸ்.பி.பாலசுப்பிரமணியம் எனக்கு மட்டும் கேட்கும் குரலில் பாட ஆரம்பித்தார்.

கொஞ்சம் கொஞ்சமாக ஜானு என்னைவிட்டு தூரமாகப் போய்க் கொண்டிருக்கிறாள். ‘திரும்பிப்பாரு ஜானு, திரும்பிப்பாரு ஜானு’ என்று மனசுக்குள் மந்திரம் ஒலிக்க ஆரம்பித்தேன். திருப்பத்துக்கு இன்னும் பதினைந்து, இருபது அடி தூரம்தான்.

திரும்பிப் பார்க்காமல் போய்விட்டால் எனக்கு மனசு தாங்காது. சதீஷ் வேறு கிண்டலடித்தே சாகடிப்பான். சட்டென்று அனிச்சையாக சைக்கிள் பெல்லை இருமுறை அடித்தேன்.

திருப்பத்தில் திரும்புவதற்கு முன்பாக எனக்கே எனக்கான ஜானு ஒன்றரை நொடி திரும்பிப் பார்த்து மறைந்தாள். அந்த ஒன்றரை நொடிக்குள் அவள் சிந்திய புன்னகையை அப்படியே ஸ்க்ரீன்ஷாட் எடுத்து வைத்துக் கொண்டேன்.

“மச்சான், சக்சஸ்டா!” சதீஷைப் பார்த்து உற்சாகமாகச் சொன்னேன்.

“போடா இவனே. பெல்லு அடிச்சா பொண்ணு என்னா... கிழவி, எருமை, ஆடு, நாயி எல்லாம்தாண்டா திரும்பிப் பார்க்கும்...”

மெதுவாக மிதக்க ஆரம்பித்திருந்த நான், சதீஷ் சொன்ன யதார்த்தமான உண்மையைக் கேட்டதும் பொத்தென்று தரையில் விழுந்தேன்.

அதன்பின் பல சந்தர்ப்பங்கள். பிரேயரில், டியூஷனில், கோயிலில், பிளேகிரவுண்டில், மாணவர் தேர்தலுக்கு ஓட்டு கேட்க ‘ஆ’ பிரிவுக்குச் சென்ற நேரத்தில் என்று ஏகப்பட்ட இடங்களிலும் என்னைப் பார்க்கிறாளா என்று பார்த்துப் பார்த்து ஏங்கினேன்.

ஒருவேளை ஸ்கூல் யூனிஃபார்மில் என்னுடைய பர்சனாலிட்டி கொஞ்சம் கம்மியாக இருப்பதால்தான் பார்க்க மறுக்கிறாளோ என்று சந்தேகம். சதீஷுக்கும் சொல்லாமல் ஒரு ரகசியத் திட்டம் தீட்டினேன். மானை, மான் வசிக்கும் இடத்திலேயே மடக்குவது என்று முடிவெடுத்தேன்.

டார்க் ப்ளூ ஜீன்ஸ் பேண்ட், பூனை படம் போட்ட ஒரு ஸ்கை ப்ளூ டீஷர்ட், பச்சைக்கலர் கூலிங் கிளாஸ் சகிதமாக அந்த சனிக்கிழமை காலை சீக்கிரமே சுறுசுறுப்பாகி விட்டேன். ட்யூஷனுக்குக் கிளம்புவதாக வீட்டில் சொல்லி, நம்பகத்தன்மை ஏற்படுத்துவதற்காக ரஃப்பாக ஒரு ரஃப் நோட்டை கையில் வைத்துக்கொண்டு, பிஎஸ்ஏ சைக்கிளைக் கிளப்பினேன்.

ஜானுவை பல மாதங்களாக புலனாய்வு செய்ததில் எனக்குக் கிடைத்திருந்த தகவல்கள் ஆயிரம் பக்க ஆவணமாக இருந்தன. அதன்படி பள்ளி விடுமுறை நாட்களில் காலை பத்து மணி வாக்கில், அவள் வீட்டின் தெருமுனை கைப்பம்பில் தண்ணீர் இறைக்க வருவாள்.

ஒன்பதே முக்காலுக்கு கைப்பம்புக்கு இருபத்தைந்து அடி தூரத்தில் பாதுகாப்பான இடத்தில் நிலைகொண்டேன். வேண்டுமென்றே சைக்கிள் செயினைக் கழற்றிவிட்டு, அதை மாட்டுவது போல நடித்துக்கொண்டிருந்தேன். இதைத்தவிர வேறு டெக்னிக் எதுவும் எனக்குத் தோன்றவில்லை. வெட்டியாக சைக்கிளோடு நின்றுகொண்டிருந்தால் போவோர், வருவோர் ஒரு மாதிரியாக பார்ப்பார்கள். ஏரியாவில் இமேஜ் ரொம்ப முக்கியம்.

பத்துமணிக்கு ஐந்து நிமிடங்கள் முன்பாகவோ அல்லது பின்பாகவோ ஜானு, குடத்துடன் வந்தாள். எப்போதும் யூனிஃபார்மில் பார்த்தவளை வண்ண உடையில் கண்டபோது கூடுதல் கவர்ச்சி தெரிந்தது.

அவளுக்கும் அப்படித்தான் என்னைப் பார்க்கும்போது இருக்குமென்ற நினைப்பே கிளுகிளுவென்றிருந்தது. ஜானுவின் கூடவே ஒரு வாண்டு. அச்சு அசல் ஜானு மாதிரியே இருந்தாள். அவளை மினியேச்சர் செய்தமாதிரி இருந்தவளின் பெயர் மைதிலி என்று பிற்பாடுதான் அறிந்தேன்.

‘மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது, மனசுக்குள்ளே பஞ்சவர்ணக் கிளி பறக்குது...’ ஜானு, கைப்பம்பில் தண்ணீர் அடித்துக் கொண்டிருக்க என் மனசோ கூட்ஸ் வண்டியாக தடதடத்துக் கொண்டிருந்தது.

படபடப்பைக் குறைக்க சைக்கிள் செயினை மாட்டிவிட்டு பெடலை வேகமாகச் சுற்றி விட்டுக் கொண்டிருந்தேன்.

ஜானு என்னைக் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. ஒருவேளை மாறு வேடத்தில் வந்திருப்பதால் அடையாளம் தெரியவில்லையோ? என்னுடைய தன்னம்பிக்கையின் டெம்ரேச்சர் குறையத் தொடங்கியது.

குடத்தில் தண்ணீர் நிரம்பியவுடன் இருவரும் கிளம்பினார்கள்.

‘திரும்பிப் பாரு ஜானு... திரும்பிப் பாரு ஜானு...’ ஸ்ரீராமஜெயம் மாதிரி நூற்றியெட்டு முறை எனக்கு மட்டுமே கேட்பது போல சன்னமான குரலில் பிதற்ற ஆரம்பித்தேன். என் பிரார்த்தனை வீண் போனது. தெருமுனையை எட்டிவிட்டாள் ஜானு. இதற்கு மேல் என்னைப் பார்ப்பதற்கு வாய்ப்பே இல்லை.

சங்கக்கால தமிழில் எழுதப்பட்ட காதல் சூத்திரமெல்லாம் எனக்கு வேலைக்கு ஆகவில்லை. திருப்பத்தில் திடீர் திருப்பம். திரும்பிப் பார்த்தாள்.

‘பார்த்தாள்’ என்று ஒருமையிலா சொன்னேன்?

‘பார்த்தார்கள்’ என்று பன்மையில் திருத்திக் கொள்ளுங்கள்.

ஆமாம். அக்கா, தங்கை இருவருமே திரும்பிப் பார்த்தார்கள்!

இருவருமே காதலோடு சிரித்தது மாதிரிகூட எனக்குத் தோன்றியது. தமிழய்யாவின் குரலில் மீண்டும் அசரீரி.

“ஆனா, தெரு முக்குலே திரும்பறதுக்குள்ளே ஒரு முறையாவது தீர்க்கமா திரும்பி விரும்பி முழுசா உன்னைப் பார்ப்பா..!”

யாங்கூன் விமானத்துக்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன்.

என்னைக் கடந்து போன இருவர் ஜானகி, மைதிலி மாதிரிதான் தோன்றுகிறார்கள்.

மீண்டும் 22 ஆண்டுகள் கழித்து ஸ்ரீராம ஜெயம் மாதிரி, ‘திரும்பிப் பாரு ஜானு... திரும்பிப் பாரு மைதிலி...’ என்று மந்திரம் ஓத ஆரம்பிக்கிறேன்.

ம்ஹூம். இது 2018. ஃபார்முலாவெல்லாம் மாறிவிட்டது போலிருக்கிறது. அவர்கள் ஜானுவும், மைதிலியும்தானா என்றுகூடத் தெரியவில்லை.

எனக்கும் ஃப்ளைட்டுக்கு நேரமாச்சு. ஜானுவின் குரலில் போர்டிங்குக்கு யாரோ அழைக்கிறார்கள்.

Tata bye bye!

(நன்றி : குங்குமம்)

2 ஜூன், 2018

அலிபாபா!

அம்மாவை பளாரென்று அறைந்தார் அப்பா.

அதிர்ந்தான் அலிபாபா.

முதன்முறையாக அம்மாவை அப்பா அடிப்பதை இப்போதுதான் பார்க்கிறான்.

அவனைப் பொறுத்தவரை அப்பாதான் உலகிலேயே மிகவும் நல்லவர். வாத்யாரின் வெறிபிடித்த ரசிகர். தலைவரின் உயிரினும் மேலான உடன்பிறப்பு.

அவனுக்கு தெரிந்து அந்த ஊரிலேயே, ஏன் உலகத்திலேயே அலிபாபா என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது அவனுக்குதான்.

வைப்பதற்கு பெயரா இல்லை?

திராவிட இயக்கப் பெயர்தான் வைக்க வேண்டுமென்றால் உதயசூரியனில் தொடங்கி குணசேகரன் வரை எத்தனையோ பெயர்கள் இருக்கின்றன.

அலிபாபாவின் துரதிருஷ்டம் என்னவென்றால் -

அப்பாவுக்கு மிகவும் பிடித்த படம் வாத்யாரின் ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’.

1956 ஏப்ரல் 14-ஆம் தேதி அப்பா பிறந்த அன்றுதான் அலிபாபாவாக வாத்யார் நடித்த அந்தப் படம் ரிலீஸ் ஆனதாம்.

நியாயமாகப் பார்த்தால் தாத்தா, அப்பாவுக்குதான் அலிபாபா என்று பெயர் சூட்டியிருக்க வேண்டும்.

என்ன செய்வது?

தாத்தா பழுத்த காங்கிரஸ்காரர்.

அப்பாவுக்கு ஜவகர் என்று தேசியத்தனமாக பெயரை வைத்துவிட்டார்.

அப்பாவோ திராவிட எழுச்சியில் வளர்ந்தவர்.

பத்து வயதிலேயே இந்தி அரக்கிக்கு எதிராக தார்ச்சட்டி ஏந்தியவர். அதனால் தாத்தாவிடம் தடியடியும் வாங்கியவர். தாத்தா, அப்பாவுக்கு வெறும் அப்பா மட்டுமல்ல. தமிழ் சமூகத்துக்கு போலிஸ்காரரும்கூட.

தாத்தா பணிபுரிந்த காவல்நிலையத்தின் பெயர் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்திருக்கிறது. அதை இந்தி என்று தவறுதலாக எண்ணிய ஹைஸ்கூல் மாணவர்கள் சிலர் தார் கொண்டு காவல்நிலையப் பலகையை அழித்திருக்கிறார்கள். அந்தக் கூட்டத்தில் ஆரம்பப்பள்ளி அப்பாவும் இருந்திருக்கிறார்.

அவ்வகையில் அவர் இந்தி எதிர்ப்புப் போராளியாகவும் அறியப்படுகிறார்.

‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ படத்தை அப்பா ஐம்பது தடவைக்கு மேல் பார்த்திருக்கிறாராம்.

சிறுவயதில் தன்னை அலிபாபாவாகவே நினைத்துக் கொண்டு பல்லாவரம் குன்றில் போய் ஏதாவது குகையிருக்கிறதா என்று தேடுவதே அவரது வழக்கமாம்.

அந்த எழவெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.

அவனுக்கு ஏன்தான் அலிபாபா என்று பெயர் வைத்து தொலைத்தாரோ தெரியவில்லை.

இத்தனைக்கும் அலிபாபா பிறந்தபோது வாத்யார்தான் ஆட்சியில் இருந்தார்.

தலைவரை பிரிந்து வாத்யார் தனிக்கட்சி ஆரம்பித்தபோது, தீவிர ரசிகராக இருந்தும் வாத்யாரோடு போகாமல் தலைவரின் கட்சியிலேயே விசுவாசமாக இருந்தவர் அப்பா.

எதிர்க்கட்சியாக மாறிவிட்டாலும் வாத்யார் மீதான ரசிப்புத்தன்மை மட்டும் அவருக்குள் அப்படியே தங்கிவிட்டது.

பள்ளியில் சேர்க்கும்போது அலிபாபா என்று சொன்னபோது, ஒருமுறைக்கு இருமுறை கேட்டு, அதுதான் நிஜப்பெயரா என்று உறுதிப்படுத்திக் கொண்டார்களாம்.

தனக்கு தன்னுடைய அப்பா நியாயமாக சூட்டியிருக்க வேண்டிய இந்தப் பெயரை சூட்டாத காரணத்தால், தன்னுடைய மகனுக்கு சூட்டி அழகு பார்த்திருப்பதாக பெருமையாக சொல்லியிருக்கிறார்.

“முஸ்லீமா?” என்று கேட்டிருக்கிறார்கள்.

“எனக்கு சாதியுமில்லை. மதமுமில்லை. நாத்திகன். கழகத்தைச் சார்ந்தவன்” என்று அப்பா பகுத்தறிவு எக்காளமிட்டிருக்கிறார்.

“உங்களுக்கு மதமில்லை சரி. எப்படியோ போகட்டும். பள்ளி வழக்கப்படி பையனுக்கு ஏதாவது சாதி, மதம் போட்டே தீரவேண்டும்” என்று கட்டாயப்படுத்தி இருக்கிறார் தலைமையாசிரியர். அனேகமாக அவர் காங்கிரஸ் அனுதாபியாக இருந்திருக்க வேண்டும்.

வேறு வழியில்லாமல் வேண்டாவெறுப்பாக ‘இந்து’ என்று போட்டுக்கொள்ள அனுமதி கொடுத்திருக்கிறார் அப்பா.

அலிபாபா என்கிற பெயரின் காரணமாக அலிபாபா சந்தித்துவரும் துயரங்கள் எண்ணிலடங்கா.

சக பள்ளி மாணவர்கள் பெயரை சுருக்கமாக முதல் இரண்டு எழுத்துகளில் அழைத்து கேலியாக சிரிப்பதுண்டு.

பெயர் ‘அ’வில் ஆரம்பிப்பதால் வருகைப் பதிவேட்டில் முதல் பெயரே அலிபாபாதான்.

அப்போதுதான் வயசுக்கு வந்த சிறுமி தோற்றத்தில் வெடவெடவென்று ஒல்லியாக சிகப்பாக இருக்கும் ஒண்ணாங்கிளாஸ் காஞ்சனா டீச்சர், ‘அலிபாபா’ என்று கீச்சுக்குரலில் அழைக்கும்போதெல்லாம் வகுப்பறையே கொல்லென்று சிரிக்கும்.

இந்த ‘கொல்’ அடுத்த பன்னிரெண்டு ஆண்டுகள் பள்ளிப் பருவம் முழுவதிலும் நிழல்போல இடைவிடாமல் தொடர்ந்தது என்பதுதான் கொடுமை.

அப்படிப்பட்ட அலிபாபாதான் ஆறு வயசாக இருந்தபோது, இந்த அத்தியாயத்தின் துவக்கத்தில் அதிர்ச்சியடைந்தான்.

ஏனெனில் –

அம்மாவை பளாரென்று அறைந்தார் அப்பா.

அப்போது அவனுக்கு வயசு ஆறுதான்.

வாத்யார் ரசிகர் என்கிற முறையில் ‘தாய்க்கு பின் தாரம்’ என்கிற கொள்கையில் உறுதியோடு இருப்பவர் அப்பா.

அம்மாவை நோக்கி அதிர்ந்து ஒரு வார்த்தைகூட பேசமாட்டார்.

எல்லா அப்பாக்களும் அவரவர் மனைவியை ‘போடீ வாடீ’ என்று அழைக்கும்போது, இவர் ‘டீ’ போட்டு பேசியதுகூட இல்லை.

வாத்யார், தன்னுடைய நாயகிகளுக்கு சினிமாவில் எத்தகைய மரியாதை கொடுத்து நடித்தாரோ, அதை அப்படியே வாழ்க்கையில் கடைப்பிடித்தவர் அப்பா.

அம்மாவை தவிர மற்ற பெண்களை சகோதரி என்றுதான் அழைப்பார்.

அத்தை மற்றும் மாமன் மகள்களைகூட சகோதரி என்று அழைக்குமளவுக்கு வாத்யார்தனமான உயர்ந்த பண்பு கொண்டவர்.

அப்படிப்பட்ட அவரா அம்மாவை அறைந்தார்?

அப்பாவுக்கு இவ்வளவு கோபம்கூட வருமா?

அன்று காலை அலிபாபா வசித்துவந்த கிராமமான மடிப்பாக்கமே விழாக்கோலம் பூண்டு இருந்தது.

தலைவர் வருகிறார்.

மடிப்பாக்கம் கிராம கிளைக்கழகச் செயலராக இருந்தவர் மோ.அமரசிகாமணி.

ஒருவகையில் தலைவரின் துணைவியாருக்கு உறவுமுறையில் தம்பி.

அரசுப்பணியில் இருந்தவரான அமரசிகாமணி, தன்னுடைய துணைவியார் வள்ளி பெயரில் அரசியலில் இயங்கிக் கொண்டிருந்தார்.

அடுத்து வரவிருந்த உள்ளாட்சித் தேர்தலில் தன்னுடைய மனைவியை பஞ்சாயத்துத் தலைவராக்கி அழகு பார்க்க உறுதி பூண்டிருந்தார்.

தமிழகத்தை ஆண்டுக் கொண்டிருந்த வாத்யாருக்கு உள்ளாட்சி என்றாலே அலர்ஜி. தேர்தலை நடத்தாமல் தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தார்.

சர்வ அதிகாரத்தோடு நாட்டை ஆள தான் இருக்க, ஊரை மட்டும் ஆள பஞ்சாயத்துத் தலைவர் வேறு தனியாக எதற்கு என்கிற எண்ணம் ஒருபுறம்.

அப்படி ஒருவேளை தேர்தல் நடந்து, அதில் எதிர்க்கட்சியான கழகம் கணிசமாக வெற்றி பெற்றுவிட்டால் தன்னுடைய பிம்பம் தகர்ந்துவிடுமே என்கிற தயக்கமும் வாத்யாருக்கு இருந்தது.

இருப்பினும் பல்வேறு தளங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி ஜனநாயகத்தை காப்பாற்றியே தீரவேண்டும் என்கிற நெருக்குதல் அரசுக்கு கொடுக்கப்பட்டுக் கொண்டே இருந்தது.

இத்தகைய நிலையில்தான் அமரசிகாமணி, தன்னுடைய மனைவியை பஞ்சாயத்துத் தலைவர் பதவியில் நிறுத்துவதற்காக தன்னுடைய செல்வாக்கை கழகத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

அதன் ஒரு பகுதியே, இல்லத் திறப்பு விழா.

மோ.அமரசிகாமணி புதியதாக கட்டியிருந்த இல்லத்தை திறந்துவைக்க தலைவர் ஒப்புதல் கொடுத்திருந்தார்.

தலைவரை வரவேற்க வழியெங்கும் வாழைமரங்கள் கட்டியிருந்தன. இருவண்ண கொடி பறக்காத மரங்களே ஊரில் இல்லை. சுவரெங்கும் தலைவரை வரவேற்று வாசகங்கள் வரையப்பட்டிருந்தன.

அவரை வரவேற்பதாக உள்ளூர் கட்சிக்காரர்கள் மட்டுமின்றி, மாவட்ட அளவிலான கழக நிர்வாகிகளும் குவிந்திருந்தனர்.

அலிபாபா, அப்பாவின் தோள்மீது அமர்ந்திருந்தான். அருகில் ஆரத்தித் தட்டை ஏந்தியவாறு அம்மா.

கூட்டத்தை கிழித்துக் கொண்டு வெள்ளைநிற அம்பாஸடர் கார், தேர் மாதிரி ஊர்ந்து வந்தது.

பத்தாயிரம் வாலா பட்டாசுக்கு திரி கொளுத்தப்பட்டது.

‘டாக்டர் கலைஞர் வாழ்க’, ‘முத்தமிழறிஞர் வாழ்க’ கோஷம் விண்ணை முட்டியது.

புது இல்லத்தின் முன்பாக கார் நின்றது.

ஓட்டுநருக்கு அருகாமையில் இருந்த இருக்கையில் இருந்து உற்சாகமாக தமிழ் இறங்கியது. கூடியிருந்த கூட்டத்தை நோக்கி கையை விரித்து உதயசூரியன் சின்னத்தை காட்டியது.

தொண்டர்களின் ஆர்வம் கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருந்தது. ‘டாக்டர் கலைஞர்’ என்று அப்பா, அடித்தொண்டையிலிருந்து ஒலியெழுப்ப, உச்சஸ்தாயியில் ‘வாழ்க’ கோஷம் எதிரொலித்தது.

மாடியிலிருந்து தலைவர் மீது மலர்கள் வீசப்பட்டன.

மோ.அமரசிகாமணி, தலைவருக்கு ஆளுயர மாலை போட்டார்.

அம்மாவும், கட்சிக்காரர் வீட்டுப் பெண்கள் சிலரும் ஆரத்தியெடுத்து தலைவருக்கு திருஷ்டி கழித்தார்கள்.

தலைவர், ரிப்பன் வெட்டி வீட்டுக்குள் வலதுகால் எடுத்து வைத்தார்.

ஹாலில் அமைக்கப்பட்டிருந்த சிறிய மேடையில் தலைவருக்கு மட்டும் இருக்கை. முன்பிருந்த ஒலிப்பெருக்கியில், “என் உயிரினும் மேலான உடன்பிறப்புகளே…” என்று கரகரத்த குரலில் அவர் பேசத் தொடங்க, கரவொலியில் இல்லம் அதிர்ந்தது. “…ஆகவே, நிதி மிகுந்தோர் பொற்குவை தாரீர். நாம் புது இல்லத்துக்குள் புகுந்திருக்கிறோம். அராஜக ஆட்சியை, அதர்மத்தின் பேரில் நடக்கும் ஆட்சியை இல்லத்துக்கு அனுப்ப சூளுரை ஏற்போம்” என்று அவர் முடிக்கும்வரை அலிபாபா கைத்தட்டிக் கொண்டே இருந்தான்.

தலைவரை நேரில் கண்ட மகிழ்ச்சியோடு அவர்கள் இல்லம் திரும்பினார்கள்.

“தலைவர் எப்படி தகதகன்னு உதயசூரியன் மாதிரி இருக்காரு பார்த்தியா?” சைக்கிள் மிதிக்கும்போது அப்பா, அம்மாவிடம் சொன்னார்.

“நல்லா செவப்பாதான் இருக்காரு. ஆனா, எம்.ஜி.ஆரு இவரைவிட கலரு” அம்மா சொன்னதும், அப்பா மவுனமானார்.

அந்த மவுனம் அவருக்குள் எரிமலையாய் குமுறி, வீட்டுக்குள் நுழைந்ததுமே வெடித்தது.

“எந்தலைவன் என்ன கூத்தாடியா, எப்பவும் மேக்கப் போட்டுக்கிட்டு திரிய… காட்டுலேயும், மேட்டுலேயும் அலையுற பாட்டாளிகளோட தலைவண்டி…” என்று பெருங்குரலெடுத்து கத்தியவாறேதான் சட்டென்று எதிர்பாராத கணத்தில் அம்மாவின் கன்னத்தில் அறைந்தார்.

- எப்போதோ எழுதத் தொடங்கி, பாதியிலேயே முக்கிக் கொண்டிருக்கும் நாவலில் ஓர் அத்தியாயம்...

3 நவம்பர், 2017

தோகை விரி!

“இயற்கையை பழிக்காதேடா பாவி..” அப்பா அடிக்கடி சொல்வார்.

அடிவானம் கறுக்கும்போதே எங்களுக்கெல்லாம் அடிவயிற்றில் அச்சம் எழும். தூறல் விழ ஆரம்பித்தாலே ‘எழவெடுத்த மழை’ என்று இயல்பாக எங்கள் உதடுகள் உச்சரிக்கும். அப்பாவுக்கு கண்மூடித்தனமாக கோபம் வரும்.

நாங்கள் மழையை வசைபாடும்போதெல்லாம், அவர்தான் மழைக்கு வக்காலத்து வாங்குவார்.

“பழிக்காம.. இந்த எழவெடுத்த மழையை பாராட்டவா சொல்றீங்க.. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி இதே இயற்கைதான் நம்மை மொத்தமா குடும்பத்தோட பலிவாங்கப் பாத்துச்சி” என்பேன்.

அப்பா ஏற்றுக்கொள்ள மாட்டார்.

அந்தந்த பருவத்தில் வெயிலும், மழையில் இயற்கையின் இயல்பு. அதனால் மனிதர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்றால், அதற்கு மனிதப்பிழைதான் காரணம் என்பது அவருடைய ஆணித்தரமான வாதம்.

அவர் சொல்வது அறிவியல்ரீதியாக சரிதான். நான் கற்ற கல்வி அவருடைய தர்க்கத்தை ஏற்றுக் கொள்கிறது.

ஆனால்-

கருமேகம் சூழ்ந்து வானம் இருட்ட ஆரம்பிக்கும்போதெல்லாம் என் வயிற்றுக்குள் சடுகுடு நடக்கிறது.

ஆமாம் சார்.

நான் வரதராஜபுரத்துக்காரன். எனக்கு அப்படிதான் இருக்கும்.

மழைத்தூறல் விழுந்ததுமே மகிழ்ச்சியில் பெண் மயில் தோகை விரிக்கும் என்பார்கள். எங்கள் வரதராஜபுரத்துக்காரர்களுக்கு ‘மழை’ என்கிற சொல் காதில் விழுந்தாலே முகம் பேயறைந்துவிடும்.

அப்பா மட்டும் விதிவிலக்கு. அவரைப் பற்றி அப்புறம் பார்ப்போம்.

மழையை யாராவது வெறுக்க முடியுமா என்று கேட்டீர்களேயானால், நீங்கள் புண்ணியவான். மழையை ரசிக்கும் மனசை உங்களுக்கு பரம்பொருள் அருளியிருக்கிறது.

மன்னித்துக் கொள்ளுங்கள்.

தமிழ்நாட்டிலேயே மழையை அதிகம் வெறுக்கும் மனிதர்களாக வரதராஜபுரத்துக்காரர்கள் சமீபத்தில் மாறிப்போனோம்.

ஏன் என்பதற்கு ஒரு சிறிய நினைவூட்டல்.

ஆண்டு 2015. தேடி டிசம்பர் ஒன்று. உங்களில் யாருக்காவது நினைவிருக்கிறதா?

ஒருவேளை அந்த தேதியில் நீங்கள் சென்னையில் இருந்திருந்தால், சாகும்வரை அந்நாளை மறந்திருக்க மாட்டீர்கள். நாங்களெல்லாம் அன்றைய ஊழித்தாண்டவத்தை நினைத்து நாள்தோறும் இன்றும் நடுநடுங்கிக் கொண்டிருக்கிறோம்.

பரவாயில்லை.

அந்த ஆண்டு நவம்பர் மாதமே வானத்தை யாரோ திட்டமிட்டு வாள் கொண்டு கிழித்திருப்பார்களோ என்று சந்தேகம் கொள்ளுமளவுக்கு வரலாறு காணாத மாமழை பொழிந்தது. மாலை ஆனாலே மழைதான். ஒட்டுமொத்த சென்னை, காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஆறு, ஏரி, குளம், வாய்க்கால், குழியெல்லாம் தளும்பத் தளும்ப தண்ணீர்.

குடிக்கும் தண்ணீரைகூட காசு வாங்கி குடிக்கும் கூட்டம்தானே? அந்த மழையை சிகப்புக் கம்பளம் விரித்து வரவேற்றோம். அந்த ஆண்டு தீபாவளியை அவ்வளவு சிறப்பாக கொண்டாடினோம்.

மழை, செகண்ட் இன்னிங்ஸ் ஆடுமென்று யாருக்கு தெரியும்? டிசம்பர் முதல் நாளிலேயே பேயாட்டம் ஆடியது. போதுமான முன்னறிவிப்பு இல்லாமல் ஆட்சியாளர்கள் வேறு காஞ்சிபுரம் மாவட்டத்திலேயே பெரிய ஏரியான செம்பரம்பாக்கத்தை வேறு திறந்து விட்டார்கள். சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற வட்டாரங்களில் பிரளயமே நேர்ந்துவிட்டது.

ஒட்டுமொத்த ஊரும் நீரில் மிதந்தது. ஆடு மாடுகளோடு மனிதர்களும் அடையாற்றில் அடித்துக்கொண்டு போனார்கள். ஒரு வாரத்துக்கு மின்சாரம் இல்லை. லட்சக்கணக்கான குடும்பங்களின் அன்றாட அலுவல்கள் மொத்தமாக முடங்கி, அத்தனை பேரும் வீட்டுக்குள் அடைந்துக் கிடந்தார்கள். பாடுபட்ட சேர்த்த அத்தனையும் வெள்ளத்தில் அடித்துக் கொண்டுச் செல்வதை கண்டு மனம் நொந்தார்கள். வீட்டின் தரைத்தளம் முழுக்க நீரால் நிரம்ப, மொட்டை மாடிக்கு போய் மழையில் நனைந்தவாறே உயிரைக் காப்பாற்றிக் கொண்டார்கள்.

தன்னார்வலர்களின் தொண்டு உள்ளத்தால்தான் மீண்டது சென்னை. அரசிடம் நியாயம் கேட்ட மக்களுக்கு, “நூற்றாண்டு கண்டிராத மழை. நாங்கள் என்ன செய்ய முடியும்?” என்று பதில் சொன்னார்கள் ஆட்சியாளர்கள்.

எல்லா நிகழ்வுகளையும் நீங்களும் டிவியில் பார்த்திருப்பீர்கள். செய்தித்தாள்களில் வாசித்திருப்பீர்கள். இரண்டு மாடி கட்டிடங்கள் வரை மூழ்கிய நிலையில், மிதக்கும் நகரமான வெனிஸை போன்ற ஓர் ஊரை அப்போது அடிக்கடி டிவியில் காட்டிக்கொண்டே இருந்தார்கள். நினைவிருக்கிறதா?

மக்கள், குடும்பம் குடும்பமாக படகுகளில் அகதிகளாக வெளியேறிக் கொண்டே இருந்தார்களே. ஹெலிகாஃப்டர் வந்துதான் நூற்றுக்கணக்கான மக்களின் உயிரை காப்பாற்ற முடிந்ததே. தன்னார்வலர்களும், மீட்புப் படையினரும் பணிபுரிய மிகவும் சிரமப்பட்டார்களே. அந்த ஊர்தான் வரதராஜபுரம். நான் வசிக்கும் பகுதி.

தாம்பரத்திலிருந்து ஏழு கிலோ மீட்டர் தூரம்தான். இயற்கை வனப்பு சூழ்ந்த பகுதி. கிணறு வெட்ட வேண்டாம். பள்ளம் தோண்டினாலே போதும். பத்தடியில் இளநீர் சுவையில் தெளிவான குடிநீர். சென்னை, செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர் என்று முக்கிய நகரங்களுக்கு மையத்தில் அமைந்திருக்கும் அழகான ஊர். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாக இங்கே சல்லிசான விலைக்கு இரண்டு கிரவுண்டு நிலம் வாங்கிப் போட்டிருந்தார் அப்பா.

அண்ணனும், நானும் வங்கியில் வீட்டுக்கடன் வாங்கி ஏழு ஆண்டுகளுக்கு முன்புதான் வீடு கட்டினோம். பங்களா மாதிரி பெரிய வசதியான வீடு. அப்பாவுக்கு மழையை பிடிக்கும் என்பதால், வீட்டுக்குள்ளேயே மழை பெய்வதற்கு ஏதுவாக பழைய வீடுகள் பாணியில் வீட்டுக்கு நடுவே ஓர் அழகான முற்றம். வீட்டுக்கும் முன்பும் பின்புமாக பெரிய தோட்டம். நிறைய மரங்கள். அக்கம் பக்கம், சொந்தம் பந்தம், உற்றார் உறவினர் அத்தனை பேரும் மூக்குமேல் விரல்வைத்து ஆச்சரியப்படுமளவுக்கு அத்தனை அழகான வீடு. கூட்டுக் குடும்பமாய் அவ்வளவு சந்தோஷமாய் வாழ்ந்து வந்தோம்.

நாங்கள் கட்டியிருக்கும் வீடு கடல் மட்டத்துக்கு கீழே இருக்கிறது என்கிற புவியியல் உண்மையெல்லாம் அப்போது தெரியாது. ஒரு காலத்தில் இங்கே பிரும்மாண்டமான ஏரி இருந்தது. அந்த ஏரியின் நீர்ப்பாசனம் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களுக்கு உதவியது என்பதெல்லாம் ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு. அதையெல்லாம் யாராவது எடுத்துச் சொல்லியிருந்தாலும்கூட, வீடு கட்டும்போது எங்கள் தலையில் ஏறியிருக்காதுதான்.

2015ல் பெய்த மழைதான் இதையெல்லாம் நினைவுறுத்தியது.

அந்த டிசம்பர் ஒன்று நாள்ளிரவில் எங்கள் வீடே ஆற்றுக்கு மத்தியில் கட்டப்பட்டதை போன்று ஆனது. அழையா விருந்தாளியாக அடையாறு எங்கள் வரவேற்பறைக்குள் நுழைந்தது. குழந்தை குட்டிகளோடு மொட்டைமாடியில் குளிரில் விரைத்து ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டு ஆறுதல்படுத்தகூட தெம்பில்லாமல் அச்சத்தோடு இருந்தோம். பசி மயக்கம் வேறு. யாராவது காப்பாற்ற வருவார்களா, உயிர் பிழைப்போமா என்கிற அச்சத்துடன் கழிந்த அந்த முழு இரவை எப்படிதான் அவ்வளவு சுலபமாக மறக்க முடியும்?

உடுத்திய உடையை தவிர வேறொன்றும் எங்கள் கைவசமில்லை. ஒரே இரவில் எல்லாம் இருந்தும் ஏதுமற்றவர்களாகிப் போனோம். குழந்தைகள், பெண்களோடு ஒரு வார காலம் அகதிகளாக தாம்பரத்தில் ஒரு கல்யாண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டோம். சாப்பாட்டுக்கு வரிசையில் நின்று தட்டேந்தினோம். அப்போது என் தம்பி மனைவி பச்சை உடம்புக்காரி. குழந்தை பிறந்து பதினைந்து நாட்கள்தான் ஆகியிருக்கும். அப்போது நாங்கள் அடைந்த மன உளைச்சலை இப்போது வார்த்தைகளில் முழுமையாக விவரிக்க முடியுமா என்பதே சந்தேகம்தான்.

இப்போது சொல்லுங்கள்.

மழை பெய்தால், நாங்கள் மயில் மாதிரி தோகை விரித்து மகிழவா முடியும்?

ஆனால்-

அப்பா அப்படியேதான் இருக்கிறார்.

சொல்லப்போனால், மயிலைவிட மகிழ்ச்சி அவருக்குதான்.

என் வாழ்நாளில் அப்பா, மழைக்காக எங்கும் ஒதுங்கியதில்லை. குடைபிடித்து நடந்ததில்லை. ரெயின்கோட் அணிந்ததில்லை.

“மழைன்னா நனையனும். எங்க ஊருலே அப்படிதான். ஆடு, மாடெல்லாம் குடை பிடிச்சி பார்த்திருக்கியா? அதென்னவோ தெரியலை. இந்த மெட்ராசுலேதான் அவனவன் மழையிலே நனையுறதுன்னாலே அப்படி அலறுறான். நனைஞ்சா காய்ச்சல் வரும்னு சொல்றான். தண்ணீதான் உலகத்தோட ஜீவன். அதுலே நனைஞ்சு காய்ச்சல் வருதுன்னா, நீ உன் உடம்பை பார்த்துக்கற லட்சணம் அப்படி” ஒவ்வொரு மழையின் போதும் இதுமாதிரி ஒவ்வொரு வியாக்கியானம் பேசுவார்.

அப்பாவுக்கு தர்மபுரி பக்கமாக மழையே பார்க்காத ஏதோ ஒரு வறண்ட ஊராம். அவருக்கு பத்து வயது இருக்கும்போது மிகப்பெரிய பஞ்சம் வந்ததாம். சுற்றுவட்டார மொத்தப் பகுதியுமே பாலைவனமாகி, பஞ்சம் பிழைக்க குடும்பம் குடும்பமாக இடம்பெயர்ந்தார்களாம். தன்னுடைய பால்ய வயது உறவுகளையும், நட்புகளையும் பிரிந்ததற்கு மழை பொய்த்ததே காரணம் என்பார். அதற்காக வெயிலையும் அவர் திட்டியதில்லை.

அப்படி இப்படி எப்படியோ படித்து சென்னைக்கு வந்தார். அரசு வேலையில் இணைந்தார். தன்னுடைய வேரை இங்கே உறுதியாக நிலைப்படுத்திக் கொண்டார்.

அக்னி வெயில் முடிந்தாலே போதும். அடிக்கடி அம்மாவிடம், “அடிவானம் கறுக்குற மாதிரியில்லே. இந்த வருஷம் சீக்கிரமே மழை வரப்போகுது” என்பார். மழை வர தாமதமானால் அவருக்கு இரத்த அழுத்தம் எகிறிவிடும். கடற்கரைக்கு போய் கடலையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பார். அப்போதுதான் அவரால் சமநிலைக்கு வரமுடியும். அவருடைய பழைய விஜய் சூப்பர் ஸ்கூட்டரின் ஸ்டெப்னியில் ‘மாமழை போற்றுதும்’ என்று பெயிண்டால் எழுதி வைத்திருப்பார். அப்படிப்பட்ட மழை வெறியர்.

அம்மாவுக்கும், அப்பாவுக்கும் கல்யாணம் ஆனதே ஐப்பசி மாதம்தான். அடைமழையில்தான் தாலி கட்டினார். முப்பத்து முக்கோடி தேவர்களும் மழையால் அட்சதை இட்டு எங்களை ஆசிர்வதித்தார்கள் என்று அடிக்கடி கல்யாணப் பெருமை பேசுவார்.

அவருக்கு ஐப்பசியில் முகூர்த்தம் அமைந்துவிட்டது என்கிற ஒரே காரணத்தால் எங்கள் வீட்டில் அத்தனை பேருக்கும் ஐப்பசியில்தான் கல்யாணம் என்பதில் பிடிவாதமாக இருந்து சாதித்தார்.

அப்பாவுடைய மழைக்காதலை அம்மா, திருமணமான சில காலத்திலேயே புரிந்து, அவருடைய அலட்டல்களை சகித்துக் கொண்டார். எங்களுக்குதான் கடுப்பு. “ஏம்பா, சிவாஜி மாதிரி ஓவர் ஆக்டிங் பண்றே..?” என்று நக்கலடிப்போம்.

சிறுவயதில் நாங்கள் பள்ளிக்கு கிளம்பிக் கொண்டிருப்போம். மழை பெய்தால், “லீவு போட்டுட்டு மழையை ரசிங்கடா” என்பார். அப்போதெல்லாம் அப்பாவே லீவு போடச் சொல்கிறார் என்று மகிழ்ச்சியாகதான் இருந்தது.

ஆனால்-

முக்கியமான தேர்வுகள் வந்தபோதெல்லாம் கூட மழையென்றால், “எக்ஸாமெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம். வர வர மழையை பார்க்கிறதே அபூர்வமாயிக்கிட்டிருக்கு. அதை ரசிக்காம படிப்பு என்ன வேண்டிக் கிடக்கு?” என்று அவர் கேட்டபோது எங்களுக்கு ஆச்சரியமும், அதிர்ச்சியும் ஏற்பட்டது.

அக்காவுக்கு காலேஜில் கடைசிநாள் தேர்வு. அன்று திடீரென கோடைமழை. அக்காவை, தேர்வெழுதப் போகக்கூடாது என்று சொல்லி அப்பா ஒரே அடம். இவர் வேற மாதிரி அப்பா என்பதை நாங்கள் உணர்ந்துதான் இருந்தோம். மழை பொழிந்தால் ‘மவுன ராகம்’ ரேவதி, ‘ஓஹோ.. மேகம் வந்ததே’ என்று ஆடிப்பாடினால் ரசிக்கலாம். பூர்ணம் விசுவநாதன் ஆடினால் சகிக்குமா?

எங்கள் அப்பா அப்படிதான் ஆடிக்கொண்டிருந்தார்.

நாங்கள் எல்லாம் காலேஜ், ஆபிஸ் என்று செட்டில் ஆகி, ஒரு நாளைக்கு ஆயிரத்தெட்டு பிரச்சினைகளில் அல்லல் பட்டுக் கொண்டிருந்தோம். அப்போதும்கூட மழை வந்தால் குடும்பமாக உட்கார்ந்து கும்மியடித்து கொண்டாட வேண்டும் என்கிற அப்பாவின் அன்புக்கட்டளை எங்களை எரிச்சலுக்கு உள்ளாக்கியது. “இதே ரோதனையாப் போச்சிப்பா” என்று சலித்துக்கொண்டே அவரை கடந்துச் செல்வோம்.

அப்பா டிவியில் செய்திகள் மட்டும்தான் பார்ப்பார். குறிப்பாக செய்திகளின் இறுதியில் இடம்பெறும் வானிலை தகவல்கள். செய்தித்தாளிலும்கூட மழை பற்றிய தகவல்களைதான் தேடி வாசிப்பார். நம்மூர் மழை மட்டுமல்ல. வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் பொழிந்த மழை பற்றியெல்லாம் அப்டேட்டாக இருப்பார். நுங்கம்பாக்கம் வானிலைமைய இயக்குநர் ரமணனுக்கு மனதளவில் ரசிகர் மன்றமே வைத்திருந்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

அப்பா ஓய்வு பெற்று வீட்டுக்கு வந்ததுமே சொன்னார்.

“நானும், உங்கம்மாவும் மேகாலயாவுக்கு டூர் போகப் போறோம்”

எங்களுக்கு நினைவு தெரிந்ததில் இருந்து அவர்கள் இருவரும் வெளியூருக்கு எங்கேயும் போனதாக நினைவே இல்லை. எப்போதும் அப்பாவுக்கு ஆபிஸ், அம்மாவுக்கு வீட்டு வேலையென்றே எங்களுக்காக தங்கள் இளமைக்காலம் மொத்தத்தையும் தொலைத்தவர்கள்.

ஆச்சரியமாக கேட்டேன். “நீங்க டூர் போறது நல்ல விஷயம்பா. ஆனா, காசி ராமேஸ்வரம்னு சொன்னாகூட ஓக்கே. அதென்ன மேகாலயா?”

“அங்கேதாண்டா சிரபூஞ்சி இருக்கு. உலகத்துலே அதிகம் மழை பொழிகிற ஊர். மனுஷனா பொறந்த ஒவ்வொருத்தனும் தரிசிக்க வேண்டிய புண்ணியஸ்தலமே அதுதாண்டா”

இதற்கும் மேல் அவரைப் பற்றி என்னதான் சொல்ல? அந்த கொடூரமான டிசம்பர் மழைக்கு பிறகும்கூட மழைமீதான நேசம் அவருக்கு எள்ளளவும் குறையவில்லை என்பதுதான் எங்களுக்கு அதிர்ச்சி. மாறாக நாங்களெல்லாம் மழையை தெலுங்கு சினிமா வில்லனை மாதிரி வெறுக்க ஆரம்பித்து விட்டோம்.

அந்த மழையோடு சரி.

அதன்பிறகு எங்களுடைய வேண்டுதலை ஏற்றோ என்னவோ வருணபகவான், நீண்ட விடுமுறைக்கு போய்விட்டார். அதற்கு அடுத்த ஆண்டு வந்த வார்தா பெரும்புயலிலும்கூட காற்றுதான் கோரத்தாண்டவம் ஆடி லட்சக்கணக்கான மரங்களை பலி கொண்டதே தவிர்த்து, மழையோ வெள்ளமோ இல்லாமல் நாங்கள் மீண்டும் தண்ணிக்கு சிங்கி அடிக்க ஆரம்பித்தோம்.

அப்பாதான் தவிக்க ஆரம்பித்தார். பால்கனியில் ஈஸிசேரில் அமர்ந்துக் கொண்டு அடிவானத்தை பார்த்துக்கொண்டே இருப்பார். கையை நெற்றி மீது வைத்து கண்சுருக்கிப் பார்த்து, “வானம் இருட்டற மாதிரி இல்லே?” என்பார்.

“அதெல்லாம் ஒண்ணுமில்லே. சாயங்காலம் சூரியன் மறையுறப்போ எப்பவுமே கருப்பு மேகம்தான் இருக்கும்” என்று சொன்னால் முகம் வாடி அப்படியே உட்கார்ந்து விடுவார்.

திடீரென இரவில் எழுந்து தோட்டத்துக்கு வருவார். இப்படி அப்படியுமாக மெதுவாக தளர்ந்த நடை போடுவார். யாராவது யதேச்சையாக எழுந்து அவரைப் பார்த்துக் கேட்டால், “லேசா ஈரக்காத்து அடிக்குது. மண்வாடையும் வீசுது. அனேகமா காஞ்சிவரத்துக்கு அந்தப் பக்கம் மழைன்னு நெனைக்கிறேன்” என்பார்.

அய்யோடா என்றிருக்கும்.

ஒருமுறை அம்மா என்னிடம் சொன்னார். “ப்ளீஸ்டா. அப்பாவை கோச்சுக்காதீங்க. நீங்கள்லாம் மழையை தொல்லையா பார்க்குறீங்க. அவருக்கு அதுதான் எப்பவும் கனவு. சின்ன வயசுலே மழை இல்லாததாலே சொந்த மண்ணை பிரிஞ்ச மனுசண்டா”

அப்பாவை அம்மா புரிந்துக் கொண்ட மாதிரி நாங்கள் இருவரையுமே புரிந்துக் கொண்டுதான் இருந்தோம். இருந்தாலும் பதில் சொன்னேன்.

“அம்மா, தாம்பரத்துலே அனாதைங்க மாதிரி நம்ம குடும்பம் தவிச்ச அந்த வாரத்தை நினைச்சுப் பாரு. புதுசா பொறந்த உன் பேத்தியை வெச்சுக்கிட்டு நீ எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு. எல்லாம் இந்த மழையாலேதானே?”

“நம்ம நியாயம் நமக்கு. அவரு நியாயம் அவருக்கு” அப்பாவை விட்டுக் கொடுக்காமல்தான் அம்மா சொன்னார்.

மழையை நாம் நேசித்தாலும் சரி. வெறுத்தாலும் சரி. எவ்வித பாகுபாடு பார்க்காமல் எல்லோருக்கும் பொதுவாகதான் பெய்கிறது மழை. பருவம் தப்புவதும் அப்படிதான். இயற்கையின் புதிர் விளையாட்டுக்கு அற்பப் பிறவிகளான மனிதர்களிடம்தான் விடை ஏது?

இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே வரலாறு காணாத வெயிலில் வாடினோம். “மழை பெய்ஞ்சித் தொலைக்கக் கூடாதா?” என்று வரதராஜபுரத்து ஆட்களே ஏங்குமளவுக்கு அப்படியொரு அசுர வெயில்.

அப்பா மட்டும் குஷியானார். “இப்படி வெயில் காட்டு காட்டுன்னு காட்டிச்சின்னா, அந்த வருஷம் கண்டிப்பா அடைமழை நிச்சயம். 1967லே இப்படிதான் ஆச்சு. அப்போ அடிச்ச புயல்லே ஒரு கப்பலு, மெரீனா பீச்சுலே கரை ஒதுங்கி மாசக்கணக்குலே கிடந்துச்சி. நாங்கள்லாம் ஆதம்பாக்கத்துலே இருந்து நடந்தே போயி பார்த்தோம்”

தேவுடா. அப்பா இப்போது வெயிலையும் ரசிக்க ஆரம்பித்து விட்டாரா? ஒவ்வொரு வருட மழைக்கும் அவரிடம் ஒவ்வொரு கதை உண்டு. அவரது அனுபவ ஞானம் கொண்டு, இந்தாண்டு பெருமழை நிச்சயம் என்று கணித்தார்.

போனமாதம் காலையில் கடுமையான வெயிலில் கார் ஓட்டிக் கொண்டிருந்தேன். அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய நேரம் தப்பி செம டென்ஷன். நந்தனம் சிக்னலில் மெட்ரோ ரயில் பணிகள் முடிவடையாததால் பேரணி மாதிரி டிராஃபிக் ஜாம்.

திடீரென செல்போன் கிணுகிணுத்தது. மனைவி calling. நேரம் கெட்ட நேரத்தில் அவரிடமிருந்து போன் வராது. ஏதாவது முக்கியமான விஷயம் என்றால் மட்டுமே தொடர்பு கொள்வார்.

ஸ்பீக்கரை போட்டு “ஹலோ..” சொன்னேன்.

“மாமாவுக்கு திடீர்னு நெஞ்சுவலிங்க. இந்து மிஷன் ஆஸ்பிடலுக்கு அழைச்சிட்டு போயிருக்காங்க”

பதில்கூட சொல்லாமல் போனை கட் செய்தேன். வண்டியை ‘யூ டர்ன்’ எடுக்கவே அரை மணி நேரம் ஆகிவிட்டது. என் அவசரம் மற்றவர்களுக்கு எப்படி தெரியும். நான் தாம்பரம் போய் சேர்ந்தபோது எல்லாமே முடிந்துவிட்டது.

அப்பா, சில நாட்களாகவே சோர்வாகதான் தெரிந்தார். சர்க்கரை, இரத்த அழுத்தம் என்றெல்லாம் அவருக்கு உடல்ரீதியாக பிரச்சினைகள் இருந்தாலும் இவ்வளவு சீக்கிரமாக விடைபெற்றுக் கொள்வார் என்று யாருமே எதிர்ப்பார்க்கவில்லை.

அம்மா, அழக்கூட மறந்து உறைந்துப் போயிருந்தார். ஐம்பது ஆண்டுகால தாம்பத்யம் அவருக்கு எவ்வளவோ நல்ல நினைவுகளை பரிசளித்துவிட்டுதான் சென்றிருக்கிறது. அண்ணன், அக்கா, தங்கை, தம்பி என்று குடும்பமே கதறிக் கொண்டிருக்க எனக்கு மட்டும் ஏனோ அழுகையே வரவில்லை.

அப்பாவுக்கு இறுதியஞ்சலி செலுத்த வீட்டுக்கு வந்தவர்கள் எல்லாமே அவரை மழையோடு தொடர்பு படுத்திதான் நினைவு கூர்ந்தார்கள்.

“மழைன்னா மனுஷனுக்கு அவ்வளவு உசுரு”

“மழை பெய்யுறப்போ எல்லாம் உங்கப்பாதாம்பா நினைவுக்கு வருவாரு”

அப்பாவை வெறித்து பார்த்துக்கொண்டே இருந்தன். கொஞ்சம் நேரம் ஒதுக்கி தினமும் அவரோடு இன்னும் கொஞ்சம் நெருங்கி பேசிப்பழகி இருக்கலாமோ என்று தோன்றியது. நாங்கள் குழந்தைகளாக இருந்தபோது எங்களோடு மழையில் அவர் போட்ட ஆட்டமெல்லாம் நினைவுக்கு வந்தது. அவர் கடைசிவரை அப்படியேதான் இருந்தார். நாங்கள்தான் வளர்ந்ததும் மழையிடமிருந்து வெகுதூரம் விலகிவிட்டோம்.

சுட்டெரிக்கும் வெயிலில்தான் அப்பா இறுதி யாத்திரை சென்றார். எந்த வெயிலால் சொந்த ஊரிலிருந்து இடம் பெயர்ந்தாரோ, அதே வெயில்தான் கடைசிவரை அவரோடு வந்துக்கொண்டே இருந்தது.

இடுகாட்டில் நடக்க வேண்டிய சடங்கெல்லாம் நடந்து முடிந்தது. அண்ணன் கொள்ளி வைக்கப் போகிறான். மூடியிருந்த விறகு விலக்கி, அப்பாவின் முகத்தை இறுதியாக பார்க்கிறேன். விபூதி பூசியிருந்த அவரது நெற்றியின் மீது சட்டென்று ஒரு பொட்டு ஈரம். வானத்தைப் பார்த்தேன். இருள் மேகம் எங்கள் தலைக்கு மேலே கூடியிருந்தது. குளிரான பெரிய மழைத்துளிகள் சடசடவென்று கொட்டியது. நான் முதன்முதலாக பெருங்குரலெடுத்து வெடித்து அழ ஆரம்பித்தேன்.

(நன்றி : தினகரன் தீபாவளிமலர்)
ஓவியம் : ஸ்யாம்

28 மார்ச், 2017

ஏங்க...

“ஏங்க....”

அமானுஷ்யமான குரலைக் கேட்டு பதறிப்போய் சட்டென்று கழுத்தில் வெட்டிக் கொண்டேன். கொஞ்சம் ஆழமான வெட்டு. ரத்தம் கொப்பளித்தது.

“எத்தனை தடவை சொல்லியிருக்கேன்... ஷேவிங் பண்ணறப்ப பிசாசு மாதிரி கத்தாதேன்னு...” எரிந்து விழுந்தபடி வெட்டுப்பட்ட இடத்தில் ‘கலோன்’ தடவினேன். தீயாய் எரிந்தது. “சொல்லித் தொலை. எதுக்கு இப்படி ‘ஏங்க ஏங்க’ன்னு உயிரை எடுக்கறே?”

“உங்க பொண்ணு என்னா சொல்றான்னு கேளுங்கன்னு கூப்பிட்டா இப்படி பைத்தியக்காரன் மாதிரி கத்தறீங்களே?” பதிலுக்கு இளவரசியும் சீறினாள்.

நேரடியாக சொல்ல மாட்டாள். கூடவே ஒரு ‘மாதிரி’யையும் இணைப்பாள். சொன்ன மாதிரியும் ஆச்சு. சொல்லாத மாதிரியும் ஆச்சு.

அப்பாவும், அம்மாவும் மாறி மாறி கத்துவதைப் பார்த்து ஷாலு மிரண்டாள். ஆறு வயதுக் குழந்தையை அரண்டுப்போக வைப்பதில் விருப்பமில்லை.

“என்னடா செல்லம்?” புன்னகைக்க முயன்றேன்.

“போடா மொக்கை அப்பா...” முகத்தை சுளித்து அம்மாவுக்கு பின்னால் ஒளிந்தாள்.

“அப்படியே ஆத்தாளை உரிச்சி வெச்சிக்கா...’’ பாத்ரூம் கதவை அறைந்தேன்.

திருமணத்துக்கு முன்பு வரை, ‘எதற்கும் அஞ்சமாட்டேன்...’ என நெஞ்சை நிமிர்த்தியபடி நடமாடினேன். முதலிரவில் இளவரசியின் ஹஸ்கி வாய்ஸில் - குரல் என்னவோ ‘வெறும் காத்துதாங்க வருது...’ எஸ்.ஜானகி மாதிரி இனிமைதான்! - “ஏங்க...” ஒலித்தபோது முதுகை சில்லிட வைக்கும் திகில் உணர்வை முதன்முதலாக உணர்ந்தேன்.

அப்போது ஆரம்பித்தது இந்த அமானுஷ்யம். இதுவரை லட்சம் முறையாவது ‘ஏங்க...’ ஒலித்திருக்கும். ஒவ்வொரு முறையும் அதே சில்லிடல். அதே உடல் நடுக்கம்.

மனநல மருத்துவனான நண்பனிடம் இந்தப் பிரச்னையை ஒருமுறை மனசு விட்டுப் பேசினேன். “உனக்குமாடா..?’’ என்றான். வீட்டுக்கு வீடு வாசப்படி. பெட்ரூமுக்கு பெட்ரூம் மண்டகப்படி.

ஈர டவலுடன் வெளியே வந்தவன் டிரெஸ்ஸிங் டேபிளில் வாகாக நின்றபடி தலைவார ஆரம்பித்தேன்.

டைனிங் டேபிளில் இருந்து மீண்டும் ‘‘ஏங்க...’’

பதட்டத்தில் டவல் அவிழ... அவசரமாக பேண்டுக்குள் காலைவிட்டு ஜிப்பை இழுக்க... ம்ஹும். மக்கர் செய்தது. முழு வலுவை பிரயோகித்ததும் ஜிப்பின் முனை கையோடு வந்துவிட்டது.

ஷாலுவை ஸ்கூலில் விட்டுவிட்டு அலுவலகம் செல்ல வேண்டும். மணி 8.55. வேறு பேண்டை அயர்ன் செய்ய நேரமில்லை. கைக்கு மாட்டியதை பீரோவில் இருந்து எடுத்து மாட்டினேன். சட்டைக்கும் பேண்டுக்கும் சுத்தமாக மேட்ச் ஆகாமல் சூரிக்கு, சமந்தா ஜோடி மாதிரி இருந்தது. ‘இன்’ செய்ய முற்பட்டபோது மீண்டும் ‘ஏங்க...’.

பெருகிய வியர்வையுடன் ஹாலுக்கு வந்தேன். ‘‘கோயில் கட்டி கும்பிடறேன். பேரை சொல்லி கூப்பிடு. வேணும்னா ‘டா’ கூட போட்டுக்கோ. தயவுசெஞ்சு ‘ஏங்க’ மட்டும் வேணாம். முடியலை...”

டென்ஷன் புரியாமல் சில்லறையாய் சிரித்தாள். நொந்தபடி குழந்தையை அழைத்துக் கொண்டு கிளம்பினேன்.

நல்லவேளையாக ஸ்கூல் வாசலில் ஷாலு அழுது ஆர்ப்பாட்டம் செய்யவில்லை. சமத்துப் பெண்ணாக வகுப்பறை போகும் வரை ‘டாட்டா’ காட்டினாள்.

நிம்மதியுடன் வண்டியை ஸ்டார்ட் செய்தேன்.

“ஏங்க...”

திரும்பிப் பார்த்தேன். கிளாஸ் மிஸ்.

“ஷாலுவுக்கு வர வர ஹேண்ட்ரைட்டிங் சரியில்லை. வீட்டுல எழுதச் சொல்லிக் கொடுங்க. கிளாஸ்ல சரியா கவனிக்க மாட்டேங்கிறா...’’ blah.. blah… blah…

மண்டையை மண்டையை ஆட்டி சமாதானம் சொல்லிவிட்டு பறந்தேன். டீச்சரும் என்னை ‘ஏங்க’ என்றழைத்தது நினைவுக்கு வந்தது. அதென்னவோ தெரியவில்லை. மனைவியைத் தவிர வேறு யார் ‘ஏங்க’ என்றாலும் எரிச்சல் வருவதில்லை.

சைதாப்பேட்டையை எட்டும்போது மணி ஒன்பது நாற்பது. நந்தனம் சிக்னலில் நத்தையாய் நகர்ந்துக் கொண்டிருந்த டிராஃபிக்கில் ஆளாளுக்கு கத்திக் கொண்டிருந்தார்கள். தேவையில்லாமல் ஹாரன் அலறியது. கார் ஓட்டுபவனும், டூவீலரில் ஆரோகணித்திருப்பவனும் ஒருவருக்கொருவர் ‘பீப்’ மொழியை பரிமாறிக் கொண்டார்கள்.

சுற்றிலும் டி.பி.கஜேந்திரன் மாதிரி பிபி ஏற எகிறிக் கொண்டிருந்தவர்களை வேலை மெனக்கெட்டு சர்வே எடுத்துப் பார்த்ததில் ஓர் உண்மை புரிந்தது. எல்லாருமே க்ளீன் ஷேவ். பெரும்பாலானவங்களின் கன்னத்தில் லேசான கீறல். ‘ஏங்க...’ புயலின் பாதிப்பு!

வாய்விட்டு சிரித்துவிட்டேன். பக்கத்தில் நின்றிருந்த ஆட்டோ டிரைவர் சினேகமாய் புன்னகைத்தார். கள்ளமில்லா வெள்ளைச் சிரிப்பு. நிச்சயம் பேச்சிலர்தான். தாடி வைத்திருக்கிறாரே...

அலுவலகத்தை அடைந்தபோது மணி பத்தரை. மேனேஜர் ரூமுக்கு அட்டெண்டன்ஸ் சென்றிருக்கும். இன்னும் ஒரு வருஷத்தில் ரிடையர் ஆகப்போகிற அந்த கிழத்துக்கு என்னை மாதிரி ரெகுலர் லேட் எப்போதும் இளக்காரம்தான். கண்ணாடிக்கு வலிக்காத மாதிரி கதவை திறந்தேன்.

காபியை உறிந்துக் கொண்டே கிழம் மானிட்டரை பார்த்துக் கொண்டிருந்தது. ‘பிட்டு’ படமாக இருக்கலாம். முகம் அச்சு அசல் உர்ராங் உடான். சைலண்டாக கையெழுத்து போட்டுவிட்டு எஸ்கேப் ஆக முடியாது. பாம்பு காது. காச்மூச்சென்று கத்தும்.

கையை விறைப்பாக தூக்கி நெற்றியருகே கொண்டுவந்து “குட்மார்னிங் சார்...” என டெஸிபலை கூட்டினேன்.

அதிர்ந்துப் போய் காபியை தன் சட்டையில் கொட்டிக் கொண்டார். சுட்டிருக்கும் போல. விருட்டென்று எழுந்தார்.

‘‘கதவைத் தட்டிட்டு வரத் தெரியாதா? சரி வந்தது வந்த... கையெழுத்து போட்டுட்டு போக வேண்டியதுதானே? நீ குட்மார்னிங் சொல்லலைனா எனக்கு பேட் மார்னிங் ஆகிடுமா..?’’

காதுக்குள் ‘ங்கொய்’ என்றது. பாவமாய் முகத்தை வைத்துக்கொண்டு ஏறிட்டேன். காதுக்கு கீழே கன்னத்தில் லேசாக ஒரு பிளேடு தீற்றல்! மேனேஜருக்கும் ‘ஏங்க...’ கைங்கரியம்.

கண்ணாடிக்கு வெளியிலும் அவரது அலறல் கேட்டிருக்க வேண்டும். வெளியே வந்தபோது அனைவரும் ஓரக் கண்ணால் பார்த்தார்கள். வாரத்துக்கு நான்கு நாட்களாவது நடப்பதுதானே?

டேபிளுக்கு போய் லன்ச் பேக்கை வைத்துவிட்டு ‘தம்’ அடிக்க கிளம்பினேன்.
மூணு இழுப்புதான் முடிந்திருக்கும். செல்போன் ஒலித்தது. இளவரசிதான்.

‘‘ஏங்க...’’

‘‘ம்...’’ பல்லைக் கடித்தேன்.

“சிலிண்டர் புக் பண்ணச் சொல்லி ஒருவாரமா கரடி மாதிரி கத்திகிட்டிருக்கேன். நீங்க காதுலயே வாங்கலை. இப்ப பாருங்க கேஸ் தீர்ந்துடுச்சுடிச்சு…”

உச்சந்தலைக்கு வேகமாக ரத்தம் பாய்ந்தது. ‘‘ஆபிஸ் நேரத்துல ஏன்டி இப்படி போன் செஞ்சு உசுரை வாங்கறே...”

போனை கட் செய்த வேகத்தில் அவள் ஆடிப்போயிருப்பாள் என்று எனக்கு நானே நினைத்துக் கொண்டேன். அல்ப சந்தோஷம்தான். ஆனால், அதுவும் நிலைக்கவில்லை. அன்று முழுக்கவே நிறைய தப்புகள் செய்தேன். மேனேஜர் நாள் முழுக்க திட்டிக்கொண்டே இருந்தார்.

மாலை வீட்டுக்கு புறப்படும் போது கூட மண்டை முழுக்க ‘ஏங்க...’வின் எக்கோ. இன்றைய பொழுதை நாசமாக்கியதே காலையில் ஒலித்த இந்த ‘ஏங்க...’தான். நினைக்க நினைக்க உச்சி முதல் உள்ளங்கால் வரை அனல் படர்ந்தது.

க்ரின் சிக்னல் விழுந்தது கூட தெரியவில்லை. பின்னாலிருந்த ஆட்டோக்காரர் கொலைவெறியோடு ஹாரன் அடித்த பிறகே சுயநினைவுக்கு வந்து ஆக்சிலேட்டரை முறுக்கினேன். ‘‘காதுலே என்ன ‘பீப்’பா வெச்சிருக்கே?” கடக்கும்போதும் ஆட்டோகாரர் தன் உறுமலை நிறுத்தவில்லை. ‘ஏங்க’வை விடவா வேறு கெட்ட வார்த்தை என்னை கோபப்படுத்திவிடப் போகிறது? இன்றோடு இதற்கு முற்றுப்புள்ளி வைத்தே ஆகவேண்டும்.

வீட்டுக்குள் நுழைந்தபோது ஷாலு டியூஷனில் இருந்து திரும்பியிருந்தாள். தணியாத கோபத்துடன் இளவரசி கொடுத்த காபியை பருகினேன். உதடு வெந்தது.

சனியன்... வேணும்னுதான் இப்படி சுடச் சுட கொடுக்கறா. உன்ன...
இப்போது வேண்டாம். ஷாலு மிரள்வாள்.

பெட்ரூமுக்கு சென்று கைலி மாற்றிக் கொண்டேன். வழக்கமாக சிறிது நேரம் டிவி பார்ப்பேன். இன்று அப்படி செய்யவில்லை. மாறாக புத்தகம் படிக்க ஆரம்பித்தேன்.

வழக்கத்துக்கு மாறான என் அமைதி இளவரசிக்கு திகிலை கிளப்பியிருக்க வேண்டும். அருகில் வந்து ஈஷினாள்.

‘‘ஏங்க...’’

உதட்டைக் கடித்தபடி கண்களை மூடினேன்.

‘‘சாப்பிட்டு படுங்க...”

புத்தகத்தை வீசிவிட்டு எழுந்தேன். மவுனமாக சாப்பிட்டேன். கிச்சனில் பாத்திரங்கள் உருண்டன. கோபத்தின் சதவிகிதம் நூறு கடந்து ஆயிரத்தை தொட்டது.

தொப் என்று படுக்கையில் விழுந்த ஷாலுவுக்கு மூன்று பெட் டைம் ஸ்டோரிஸ் சொன்னேன். அசந்து தூங்கிவிட்டாள்.

கதவை தாளிடும் ஓசையும், டிவியை ஆஃப் செய்யும் சப்தமும் கேட்டது. வரட்டும். இன்று முடிவு கட்டியே ஆக வேண்டும். கைகளை தேய்த்தபடி காத்திருந்தேன். வரவில்லை. கிச்சனை துப்புரவு செய்கிறாள் போல.

ஐந்து நிமிடங்களுக்கு பின் வந்தாள். என் பார்வையில் அவள் வாளிப்பு படும்படி சேலையிலிருந்து நைட்டிக்கு மாறினாள். கோபத்தின் அளவு குறையாமல் மனதை ஒருமுகப்படுத்த முயற்சித்தேன்.

நெருங்கினாள். மல்லிகை மணமும், இளவரசிக்கே உரிய பிரத்யேக வியர்வை நெடியும் என்னை சூழ்ந்தது. இரு கைகளால் என் முகத்தை ஏந்தினாள். காலையில் பிளேடு வெட்டு விழுந்த இடத்தில் பஞ்சு மாதிரியான தன் இதழை சில்லென்று வைத்தாள்.

“ஏங்க...’’

(நன்றி : குங்குமம்)

6 ஆகஸ்ட், 2015

மோட்டிவ்


“போட்டா இவளைதான் போடணும்” கதையின் முதல்வரியிலேயே முடிவெடுத்து விட்டான் நரேந்திரன்.

ஏன் போடணும்?

கிரிமினாலஜி படிக்கும் மாணவனான அவனுக்கு அன்று காலைதான் திடீரென்று இந்த எண்ணம் தோன்றியது.

வகுப்பில் புரொபெஸர் திரும்பத் திரும்ப வலியுறுத்தி சொல்லிக் கொண்டிருந்தார்.

“எந்த ஒரு குற்றச் செயலுக்கும் ‘மோட்டிவ்’ நிச்சயமிருக்கும். மோட்டிவ் எந்தவொரு குற்றச் சம்பவமும் நடைபெற வாய்ப்பே இல்லை”

அவளைப் பார்த்து சிரித்தான்.

லேசாக குழம்பினாள். தனக்குப் பின்னால் வேறு யாரையாவது பார்த்து சிரிக்கிறானோ என்று திரும்பிப் பார்த்தாள். யாருமே இல்லை. அங்கே யாருமே இல்லை.

“ரேப்புக்கு மோட்டிவ் கிடையாதே சார்?” நரேன்தான் சந்தேகம் கேட்டான்.

“ரேப்புதான்டா மோட்டிவ்” புரொபஸர் கிண்டலாக சொன்னார்.
வகுப்பே கொல்லென்று சிரித்தது. அவமானத்தை உணர்ந்தான். கொல்லென்ற சிரிப்பு நிற்காமல் தொடர, அவமானம் கோபமானது. கைவிரல்கள் உதறின. கண்கள் சிவந்தன.

‘யாரென்று தெரியாத ஒருவன் தன்னைப் பார்த்து ஏன் சிரிக்கிறான்?’ அவள் கலவரமானாள்.

இவன் அவளை நோக்கி புன்னகைப்பதை நிறுத்தவே இல்லை.

பளீரென மஞ்சள்புடவை அணிந்திருந்தாள்.

தொப்புளில் இருந்து ஒன்றரை சாண் இறக்கி கொசுவம் வைத்திருந்தாள். எப்படி இது சாத்தியம்?

என்ன அனாடமியோ. ஒன்றும் புரியவில்லை.

“இல்லைங்க சார். பல சம்பவங்களுக்கு மோட்டிவ்வே இருக்குறதில்லை” இவன்தான் மறுத்தான்.

“இருவது வருஷமா நான் எவ்வளவு கேஸ் ஸ்டடி படிச்சிருப்பேன். மோட்டிவ் இல்லாத ஒரே ஒரு கிரிமினல் ரெக்கார்ட் கூட இந்தியாவிலேயே இல்லை. அப்படி இருக்கிறதா இருந்தா அது முடிவுபெறாத கேஸா இருக்கும்” புரொபஸர் மறுத்தார்.

அவளை நோக்கி இவன் நடக்கத் தொடங்கினான்.

இவன் அவளை நெருங்க நெருங்க அவளது முகத்தில் அப்பட்டமாய் அச்சம் தெரிந்தது. சுற்றும் முற்றும் மலங்க மலங்க பார்த்தாள்.

கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஈ, காக்காய் இல்லை.

“எனவேதான், போலிசும் டிடெக்டிவ்வும் எந்த கேசை எடுத்தாலும் முதலில் மோட்டிவ் என்னன்னு கெஸ் பண்ணிப்பாங்க. அந்த ரூட்டுலே கிரிமினலை தேட ஆரம்பிக்கிறதுதான் ஈஸி”

சட்டென்று அவளது முகத்தில் மந்தகாசமான புன்னகை ஒன்று விரிந்தது. உதடு திறந்து சிரிக்க ஆரம்பித்தாள். டார்க் ரெட் லிப்ஸ்டிக். இப்போது நரேந்திரன் ஜெர்க் ஆனான். ஒருவேளை அயிட்டமோ?

“கையும் களவுமா ஸ்பாட்டுலேயே கிரிமினல் மாட்டிக்கிட்டா?”

“மாட்டிக்கிட்டவனை பிடிச்சி ‘மோட்டிவ்’ என்னன்னு விசாரிச்சி கண்டுபிடிப்பாங்க. கோர்ட்டுலே குறிப்பிட்ட குற்றத்தை செய்ய குற்றவாளிக்கு என்ன மோட்டிவ்வுன்னு ஆதாரப்பூர்வமா நிரூபிச்சாதான் பிராசிக்யூசன் வின் பண்ணதா அர்த்தம்”

பரந்து விரிந்திருந்த அவளது மெகாசைஸ் மார்பைத் தொட்டு இடப்புறமாக சுட்டிக் காட்டினாள். கைவிடப்பட்ட ஒரு வீடு தெரிந்தது. சந்தேகமேயில்லை.

இவள் அப்படிதான்.

“எனக்கு சரியா படலை சார். மோட்டிவ் இல்லாத க்ரைம் சாத்தியம்தான்னு நினைக்கிறேன். காம்யூவோட நாவல்ல கூட...”

புரொபஸர் இம்முறை கோபப்பட்டார். “கிரிமினல்ஸையும், கேஸையும் கரைச்சுக் குடிச்சி இவ்வளவு புக்ஸ் எழுதினவனுங்க முட்டாளு. அதையெல்லாம் படிச்சி உங்களுக்கு கத்துக்கொடுக்கிற நான் கேணையன். எடக்குமடக்கா கேள்வி கேட்குற நீ மட்டும்தான் புத்திசாலியாடா?”

மறுபடியும் கொல்லென்ற சிரிப்பு. கொலைவெறி வந்தது நரேனுக்கு. ஆட்டு மந்தைகள். என்ன பாடம் சொல்லிக் கொடுக்கிறார்களோ அதை அப்படியே மனப்பாடம் செய்து, தேர்வில் வாந்தி எடுக்கும் மந்திகள். என்னைப் பார்த்து சிரிக்க இவனுங்களுக்கு என்ன யோக்கியதை?

அவளோடு சேர்ந்து அவனும் நடந்தான். இதுவரை இருவரும் ஒரு வார்த்தைகூட பேசிக்கொள்ளவில்லை. இவனுக்கு எந்த மோட்டிவ்வும் இல்லை. அவளுக்கு?

‘கொல்’லென்ற சிரித்த மந்திகளில் ஒருவனையாவது ‘கொல்’ என்று உள்மனம் ஆணையிட்டது. கொன்றுவிட்டால் ‘கொல்’லென சிரித்ததால்தான் கொன்றான் என்பது மோட்டிவ் ஆகிவிடும்.

மோட்டிவ்வே இல்லாமல் ஒருவனையோ/ஒருவளையோ போட்டால் என்ன?

அந்த மஞ்சள் புடவையோடு சேர்ந்து நடந்துக் கொண்டிருக்கிறானே நரேன். அதற்கு மோட்டிவ், வகுப்பறையில் அவனுக்கு நடந்த அவமானம்தான். அரை அடி நீளத்துக்கு பளபளக்கும் பொருளை உடைக்குள் மறைத்து வைத்திருந்தான்.

அந்த கட்டிடம் இருளடைந்து போயிருந்தது. அடிக்கடி இங்கே வந்து செல்பவள் என்பது அவளது இயல்பான நடவடிக்கைகளில் தெரிந்தது. சொந்த வீட்டுக்குள் பிரவேசிப்பவளைபோல விறுவிறுவென நடந்தாள். லேசான படபடப்போடு இவனும் பின் தொடர்ந்தான்.

வீட்டுக்குள் நுழைவதற்கு முன்பாய் சுற்றும் முற்றும் பார்த்தாள். ஒரு ஈ, காக்காய் கூட...

அந்த பழையவீட்டின் வரவேற்பரை முழுக்க செடிகொடிகளால் நிறைந்திருந்தது. நேராகப் போய் ஓர் அறையை திறந்தாள். பூட்டியிருந்த அந்த அறைக்கதவுக்கான சாவி, அவளிடம் இருந்தது என்பதுதான் ஆச்சரியம்.

திரும்பிப் பார்த்து இவனை வரும்படி சைகை செய்தாள். கொஞ்சம் தயக்கமாக உள்ளே நுழைந்தான். ‘பொருள்’ இருக்கிறதா என்று தொட்டுப் பார்த்துக் கொண்டான்.

அந்த அறை முதலிரவு அறையை போல அலங்கரிக்கப்பட்டிருந்தது. மெழுகுவர்த்தி ஒன்று பாதி எரிந்த நிலையில் மங்கிய மஞ்சள் வெளிச்சத்தை உமிழ்ந்துக் கொண்டிருந்தது.

தயக்கத்தை விட்டான். அறைக்குள் நுழைந்தவன் கட்டிலை எட்டி அமர்ந்தான்.

ஒருவிரலை உயர்த்திக் காட்டி ‘ஒரு நிமிஷம்’ என்பதாக சைகை செய்தவள், பாத்ரூமுக்குள் நுழைந்தாள்.

அவசரமாக உடைக்குள் மறைத்திருந்த ஆயுதத்தை எடுத்து தலையணைக்கு கீழே வைத்தான். அவள் வந்ததுமே கட்டியணைத்து, மெதுவாக கத்தியை எடுத்து, வெண்ணெய் கட்டி மாதிரி இருக்கும் இடுப்பில் ஒரு சொருகு சொருகி, திருகி....

மோட்டிவ்வே இல்லாத பச்சை படுகொலை.

ஆனால்-

மோட்டிவ்வே இல்லாமல் ஒரு கொலை செய்யவேண்டும் என்கிற சிந்தனைதான் இதற்கு மோட்டிவ். அப்படியெனில் அது எப்படி மோட்டிவ் இல்லாத கொலையாகும்?

லாஜிக் இடிக்கிறதே?

திடீர் குழப்பம் அவனைச் சூழ, அவள் கதவைத் திறக்கும் சப்தம் கேட்டது.

தட்.

மண்டைக்குள் பூச்சி தாறுமாறாய் பறந்தது. அனிச்சையாய் தலையை தொட்டான். கெட்டியாய் ரத்தம் கொழகொழத்தது. முகத்தில் அடர்சிகப்பு வழிய அதிர்ச்சியாய் திரும்பினான்.

அவளது முகத்தில் அடையாளம் காணமுடியாத கோபம். கண்கள் சிவந்திருந்தாள். கையில் நீளமான சுத்தியல். மீண்டும் சுத்தியலை தலைக்கு மேலே தூக்கி, இன்னொரு தட்.

மூளை சிதறுவதற்கு முன்பாக சிந்தித்தான். “என்னை கொல்ல இவளுக்கு என்ன மோட்டிவ்?”

7 ஏப்ரல், 2015

நீலவேணி

சையே துன்பத்துக்கு காரணம் என்கிற தத்துவத்தை எல்லாம் விடுங்கள். ஏனோ தெரியவில்லை. என்னைப் பார்த்ததுமே அடைந்துவிட வேண்டும் என்றுதான் எல்லா பாவிகளும் ஆசைப்படுகிறார்கள். இது என் பிறப்பின் வரமா சாபமா?

“பரிகாரி”

பரிவு காட்டுவதைப் போன்ற நாடகத்தொனியில் அவன் அழைத்தது நன்றாகவே கேட்டது. ஆனாலும் கேளாதது போல வாளாவிருந்தேன். நானென்ன அவன் மனைவியா. அழைத்ததுமே போக.

மீண்டும் குரலுயத்தி அழைத்தான். “பரிகாரீஈஈஈஈஈஈஈஈ”

ஜனநடமாட்டம் அதிகரித்திருந்த முன்மாலைப் பொழுது. சந்தையே திரும்பிப் பார்த்தது. நான் திரும்பவில்லை.

அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்தான். பைஜாமாவை தட்டி மணலை உதறினான். கையில் சவுக்கை எடுத்தவாறே என்னைப் பார்த்தான். இந்த அதட்டல், மிரட்டல், உருட்டல்களுக்கு நானா அஞ்சுவேன். அவனுடன் நின்றுகொண்டிருந்த தடியனை கண்டதுமே எனக்கு பிடிக்கவில்லை. குறிப்பாக அவன் அணிந்திருந்த கரும்பச்சை நிற குல்லா.

‘ப்பட்..’ என் முதுகை சவுக்கு முத்தமிட்ட சப்தம். அடிக்கடி வாங்கி பழக்கப்பட்டு விட்டாலும் ‘களுக்’கென்று ஒரு துளி நீர் கண்களில் கோர்த்துக் கொள்வது வழக்கமாகி விட்டது. ஆரம்பத்தில் அழுது அரற்றிக் கொண்டிருந்தேன். இப்போது பழகிவிட்டது. சுற்றிலும் இருந்தவர்கள் என்னை பரிதாபமாக பார்த்தார்கள். இந்த ஊடுருவும் பார்வைதான் எனக்கு பிரச்சினை. உடல் கூசுகிறது.

“திமிர் பிடித்தவள். யாருக்கும் அடங்கமாட்டாள். ஆனால் அட்டகாசமானவள். ஆசைப்பட்டுதான் நல்ல விலைக்கு பிடித்தேன். நீயும் ஆசைப்பட்டு கேட்கிறாய். இருமடங்கு கூடுதல் விலைக்கு தருவதில் எனக்கு என்ன ஆட்சேபணை இருக்க முடியும்?”, குல்லாக்காரனிடம் இவன் கறைபடிந்த பற்கள் பளிச்சென்று தெரிய, அசிங்கமாக இளித்துக்கொண்டே சொன்னான்.

புரிந்திருக்குமே? வணிகம். நான் மீண்டும் ஒரு முறை விலைக்கு விற்கப்பட்டுக் கொண்டிருக்கிறேன். என்னுடைய விலை என்னவென்று எனக்குத் தெரியாது. ஆனால் பாரசீக நாட்டின் விலையுயர்ந்த பண்டங்களில் ஒன்றாக நான் மாறிக்கொண்டிருக்கிறேன் என்பது மட்டும் புரிகிறது. எத்தனைமுறை கை மாற்றப்பட்டேன் என்று எனக்கே நினைவில்லை. ஆனால் என்னை வாங்கிய எவனுக்கும் நான் அடங்கிப் போனதில்லை. அது மட்டும்தான் என்னுடைய பெருமை. ‘அடங்கா குதிரைக்கு விலை அதிகம்’ என்று எங்கள் ஊர்பக்கம் ஒரு பழமொழி உண்டு. எனக்கு அது அப்பட்டமாய் பொருந்தும்.

நான் பிறந்த ஊரில் மருந்துக்கு கூட பசுமை கிடையாது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரைக்கும் பாலைதான். எக்காலத்திலோ வறண்டுப்போன ஏரி ஒன்றுதான் எங்கள் ஊரின் அடையாளம். பாதங்கள் புதையுமளவுக்கு மென்மையான செம்மணல் ஏரிப்பரப்பு முழுக்க வியாபித்திருக்கும். இக்கரைக்கும் அக்கரைக்குமாக இலக்கில்லாமல் ஓடுவேன். மந்திரவாதி ஏவிவிட்ட பிசாசு துரத்துவதைப் போல அசுரவேகத்தில் ஓடுவேன். அதே வேகத்தில் திரும்ப வருவேன். செந்தூசி பறக்கும்.

தூரத்தில் இருந்து யாரேனும் அக்காட்சியை காண நேர்ந்திருந்தால் அமானுஷ்யமான ஓர் அனுபவத்தை உணர்வார்கள். எந்த சவாலையும் எதிர்கொள்ளும் திண்மை என் நெஞ்சுக்கு கிடைத்தது அந்த இலக்கற்ற ஓட்டங்களால்தான். ஓடி ஓடி வலுவானது என் கால்கள். உரமேறியது உடம்பு. உறுதியோடு உபவிளைவாக வனப்பும் கூடியது. நானே சொல்லக்கூடாது. எங்கள் ஊரிலேயே அழகி நான்தான். என் அழகோடு போட்டிபோட யாருக்குமே அருகதை இல்லை. பேரெழில் என்கிற வார்த்தைக்கு உருவம் கொடுத்தால் நிச்சயமாக அது நான்தான். என் அழகை வருணிக்க பாரசீக மொழியில் வார்த்தைகளின்றி கவிஞர்கள் தடுமாறுவார்கள். அழகுதான் ஆபத்து. அழகின் விளைவு இரண்டு. ஒன்று அழகுக்கு மற்றவர்கள் அடிமை ஆவார்கள். அல்லது அழகு மற்றவர்களுக்கு அடிமை ஆகவேண்டும். துரதிருஷ்டவசமாக என் விஷயத்தில் இரண்டாவது நடந்தது.

சிறுவயதில் அடிக்கடி ஒரு கனவு வரும். அந்த ஏரி முழுக்க நீலநீர் நிறைந்திருக்கும். அதில் நானும் என்னுடைய தோழிகளும் நேரம் காலம் இல்லாமல் விளையாடி களித்திருப்போம். கனவு. வெறும் பகற்கனவு. நிஜத்தில் எனக்கு தோழிகளே இருந்ததில்லை. தனிமை மட்டுமே நிழலுக்கு நிகரான என்னுடைய துணைவன். நான் அந்த ஊரில் இருந்தவரை ஒரு சொட்டு கூட மழை பொழிந்ததாக நினைவேயில்லை. மழைகூட கருணை காட்ட வக்கில்லாத ஓர் ஊரில் உயிரினங்கள் எத்தனை காலத்துக்கு ஜீவித்திருக்க முடியும். எல்லோரும் வேறு வேறு ஊர்களுக்கு இடம்பெயரும்போது நானும் இடம்பெயர்ந்தேன். பிடித்தது பீடை.

என்னை முதன்முதலாக பிடித்தவன் கொஞ்சம் நல்லவன்தான். இப்ராஹிம். கோதுமை விவசாயி. தானுண்டு தன் பிழைப்புண்டு என்று வாழ்பவன். முதன்முதலாக பச்சை நிறத்தை கண்ணில் கண்டதே இப்ராஹிமின் பரந்து வளர்ந்த வயலில்தான். எனது அழகை பற்றி அவனுக்கு அக்கறை எதுவுமில்லை. எனக்கு பரிகாரி என்று பெயர் சூட்டியவனே அவன்தான். வீட்டிலும், வயற்காட்டிலும் கொஞ்சம் ஒத்தாசை செய்யவேண்டுமென்று எதிர்பார்த்தான். காட்டுகுதிரையாய் திரிந்த எனக்கு வீட்டுவேலை என்ன தெரியும். அவனுடைய அன்புக்கு கட்டுப்பட்டு இருப்பதே எனக்கு அவஸ்தையாக இருந்தது. நல்ல மதுமயக்கத்தில் அவன் உறங்கிக் கொண்டிருந்த ஓரிரவில் தப்பித்து ஓடினேன். ஓடப்பிறந்தவள் ஆயிற்றே நான். ஓரிடத்தில் தேங்க முடியுமா.

நான் எங்கெல்லாம் ஓடுகிறேனோ, அங்கெல்லாம் என்னை பிடிக்க எவனோ ஒருவன் தயாராக இருந்தான். எல்லாருமே பெண்ணாசை, பொன்னாசை, மண்ணாசை பிடித்த பேராசைக்காரன்கள். மனிதர்களைவிட அபாயகரமான ஜந்துகள் காட்டில்கூட கிடையாது. என்னை பார்த்ததுமே ஆசைபட்டு உடைமை ஆக்கிக்கொள்ள முயற்சிப்பார்கள். எவனுக்குமே நான் அடங்கியதில்லை. இதனாலேயேதான் அடிக்கடி கைமாறி கொண்டிருந்தேன்.

“பரிகாரி நம்மிடம் இருக்கவேண்டியவளே அல்ல. பாரசீக மன்னரின் அரண்மனையை அலங்கரிக்க வேண்டியவள்” என் காதுபடவே நாலு பேர் பேசுவார்கள். பெருமையாகதான் இருக்கும். என்றோ ஒருநாள் காபூலுக்கும் வாழ்க்கைப்பட்டு தொலைக்கப் போகிறோம் என்று நினைத்துக்கொள்வேன்.

அந்த பச்சை குல்லாகாரன் என்னை காபூலுக்கு அழைத்துச்செல்லதான் வாங்கியிருக்கிறான். காபூல் சுல்தானின் அந்தரங்க ஆலோசகனாம் இவன்.

முட்டாள்களே! சுல்தான் என்ன பெரிய இவனா? நான் அவனுக்கும் அடங்கப் போவதில்லை. என்னுடைய இலட்சியம் இந்துஸ்தான். டெல்லி அரண்மனையை அலங்கரிக்கப் பிறந்தவள் நான். காபூல் எனக்கு சுண்டைக்காய்.

பச்சை குல்லா என்னை பட்டாடைகளால் அலங்கரித்தான். உடல் முழுக்க வாசனைத் திரவியங்களை தெளித்தான். இதுவரை எனக்கு யாருமே செய்யாத அலங்காரமாக, என்னுடைய வாலில் மல்லிகைச் சரத்தை சுற்றினான். ஆம், வாலில்தான்.

அன்பான வாசகரே! ஏன் குழப்பமடைகிறீர். நீங்கள் என்னை யாரென்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? நானொரு குதிரை. மேலேயே இரண்டு முறை என்னை நான் குதிரை என்றுதான் சொல்லியிருக்கிறேன். மீண்டும் கவனமாக வாசித்துப் பாருங்கள். மனிதர்கள்தான் கதை சொல்ல வேண்டுமா. குதிரை சொல்லக்கூடாதா. சொல்லுகிறேன். கேளுங்கள்.
“இதுதானா காபூலில் இருந்து எனக்கு வந்து சேர்ந்திருக்கும் பிறந்தநாள் பரிசு?” டெல்லி பாதுஷா என்னை பார்த்ததுமே திருப்தி அடைந்தார் என்றுதான் அவரது இறுக்கம் தளர்ந்த சிரிப்பை பார்த்ததுமே எனக்கு தோன்றியது. 

முதுகுவளைந்து பாதுஷாவுக்கு தொடர்ந்து சலாம் போட்டுக்கொண்டே இருந்த காபூல் மன்னரின் தூதன், என்னைப்பற்றி விளக்க ஆரம்பித்தான்.

“உயர்ஜாதி குதிரை பாதுஷா. புயல்வேகத்தில் பறக்கும். ஓராண்டு காலத்துக்கும் மேலாக கடுமையான பயிற்சிகளை கற்றுக் கொடுத்திருக்கிறோம். போர்க்களத்தில் தன் உயிர்கொடுத்து நம்முயிர் காக்கும். காபூல் மன்னர் பெரும் பொருள் கொடுத்து வாங்கினார். இந்துஸ்தானின் பேரரசர்தான் இதில் ஆரோகணித்து பயணிக்க வேண்டும் என்று எங்கள் மன்னர் ஆணையிட்டுவிட்டதால், இதுவரை இந்த குதிரையின் மீது யாருமே ஏறியதில்லை. இது உங்களது பிரத்யேக சொத்து”

“அச்சா” என்று அவனை ஆமோதித்த ஆலம் ஷா, என்னை சுற்றி வந்து பார்க்கத் தொடங்கினார். உயர்ரக மஸ்லின் ஆடையை அணிந்திருந்தார். வழக்கமாக அரசர்கள் அணியும் தலைப்பாகை அன்று அவர் தலையில் இல்லை. ஏனோ ஒரு எளிமையான கதர் குல்லா அணிந்திருந்தார். அத்தர் நெடி அளவுக்கதிகமாய் வீசியது.

“அபாரம். ஆலம்ஷா அகமகிழ்ந்துவிட்டான் என்று போய் உன் மன்னனிடம் சொல். நினைவில் வாழும் என்னுடைய தந்தையார் பாதுஷா அவுரங்கசீப் இதே மாதிரி தோற்றம் கொண்ட குதிரையில்தான் கம்பீரமாக டெல்லியை வலம் வருவார். அவரது மகனான எனக்கும் அந்த பாக்கியம் அமைந்திருக்கிறது”

மன்னரை சுற்றி நின்றிருந்தவர்கள், அவர் சொன்னதை ஆமோதிக்கும் விதமாக தலையசைத்தார்கள். லாயத்தில் திடீரென தீனமான, பரிதாபமான, எந்த விலங்கின் ஒலி என்று அடையாளம் காண இயலாத சப்தம் கேட்டது. இந்த சப்தம் காதில் விழுந்ததுமே மன்னர் எரிச்சலடைந்தார். லாயத்துக்கு பொறுப்பானவனை அழைத்தார்.

“இன்னும் அந்த சனியனை வெட்டிப் போட்டு புதைக்கவில்லையா? என்னுடைய ராஜாங்கத்தில் தகுதியற்றவர்களுக்கு இடம் இல்லை. இன்னும் அரை மணி நேரம்தான் உனக்கு அவகாசம். இதே சப்தத்தை மீண்டும் ஒருமுறை கேட்டால் என்னுடைய வாள் உன் கழுத்தில் இருக்கும்” மன்னரின் முகத்தில் தவழ்ந்த சிரிப்பு மறைந்தது. கடுகடுவென மாறியது அவர் முகம்.

“இதோ பாதுஷா. பத்து நிமிடங்களில் முடித்துவிடுகிறேன்” லாயக்காரன் மன்னரின் ஆணையை கேட்டதுமே அரக்க பரக்க ஓடினான்.

“என்ன விஷயம் அரசரே?” நறுவிசாக உடையணிந்திருந்த இளைஞன் ஒருவன் கேட்டான். அவனுடைய தோரணையைப் பார்த்தால் அரச குடும்பத்தைச் சேர்ந்தவனாக இருக்கும் என்று யூகித்துக் கொண்டேன்.

“சென்ற வாரம் வேட்டைக்கு போனபோது, ஒரு மானை துரத்த முயன்றேன். பாழாய்ப்போன குதிரை எங்கோ பள்ளத்தில் தெரியாத்தனமாக பாதம் பதித்து, காலை உடைத்துக் கொண்டது. இனி பழைய மாதிரி நலம் பெறாது என்று சொல்லிவிட்டார்கள். எதற்கு வீணாக அதையும் வைத்து அரண்மனை லாயத்தில் பராமரிக்க வேண்டுமென்று கொன்றுவிடச் சொன்னேன். மடையன், இன்னும் செய்யவில்லை” மன்னரின் குரலில் தெரிந்த அரக்கத்தனம் எனக்கு அருவருப்பு ஊட்டியது.

எந்த டெல்லியை என் கனவுதேசமாக நினைத்தேனோ, அதை ஆளுபவர்கள் இரக்கமற்றவர்கள் என்று தெரிந்ததும் மனக்கசப்படைந்தேன். திமிர் பிடித்த இந்த பேரரசன் மட்டுமல்ல. மொகலாய சாம்ராஜ்யத்தின் எடுபிடி எவனும் கூட என் மீது ஏறி அமர்ந்துவிடக்கூடாது என்று உடனடியாக ஒரு சபதம் மேற்கொண்டேன். கோபத்தில் முன்னங்கால் இரண்டையும் ஒன்றரை அடி தூரத்துக்கு தரைக்கு மேலாக தூக்கி பலமாக கனைத்தேன்.

மன்னன் என் அருகே வந்தான். இனி வந்தான்தான். வந்தார் அல்ல. உயிரின் அருமை தெரியாத, இரக்கம் என்கிற குணத்துக்கு சற்றும் சம்பந்தமில்லாத இவனுக்கு எதற்கு மரியாதை?

“இரும்மா செல்லம். இதோ வந்துவிட்டேன். நகர் முழுக்க ஓர் உலா போகலாம். தங்கள் பாதுஷாவின் புதிய பட்டத்துக் குதிரையை டெல்லிவாசிகள் தரிசிக்கட்டும்” பட்டத்தரசியை கொஞ்சுவது மாதிரி என்னையும் கொஞ்சினான். எரிச்சலாக இருந்தது. முதுகை தடவிக் கொடுத்தான். பூச்சி ஊர்வதைப் போல அருவருப்பாக உணர்ந்தேன்.

“அடேய்! தயாரா?” மன்னன் யாருக்கோ குரல் கொடுத்தான்.

ஒருவன் ஓடி வந்தான். நீரெடுத்து வந்து என் உடல் துடைத்தான். இன்னொருவன் கையில் நிறைய பட்டுத்துணி. எனக்கு அணிவிக்க தொடங்கினான். ஒருவன் வாசனைத்திரவியங்களை என் உடல் முழுக்க பூசினான். முகத்தில் நான்கைந்து வண்ணங்கள் பூசி என்னை அலங்கரித்தார்கள். டெல்லி பாதுஷாவின் குதிரையாம். எல்லோரும் பார்த்ததுமே மூக்கில் விரல்வைக்க வேண்டுமாம்.

அமைதியாக எல்லா கூத்துகளுக்கும் ஒத்துழைப்பு கொடுத்து வந்தேன். மன்னன் ஓரமாக நின்று, முதலிரவு புதுப்பெண்ணை மாப்பிள்ளை ரசிப்பது மாதிரி என்னை ரசித்துக் கொண்டிருந்தான்.

முல்லா ஒருவர் வந்து ஏதேதோ மந்திரங்களை ஓதினார். என்னுள் ஏதேனும் சைத்தான் ஒளிந்திருந்தால், அதை அவரது மந்திரம் துரத்திவிடுமாம். சாம்பிராணி புகையெழுப்பி என் உடலை கதகதப்பாக்கினார்கள்.

எல்லாம் தயார்.

என் மீது ஆரோகணிக்க, கம்பீரநடை நடந்து வந்தான் மன்னன். என் கழுத்துக்கு கீழாக காலுக்கு அருகில் நீண்டிருந்த பட்டையில் அவன் கால் வைத்து, ஒரு எக்கு எக்கி, இன்னொரு காலை தூக்க முயற்சித்ததுமே ஒரு குலுக்கு குலுக்கி, முன்னங்கால்களை தூக்கி அப்படியே ஒரு சுற்று சுற்றினேன். பாதுஷா தூரமாக போய்விழுந்தான். நீ இந்த வெறும் மண்ணுக்குதான் மன்னன். நானோ உலகக் குதிரைகளுக்கெல்லாம் பேரரசி. உன் திமிர் உனக்கென்றால், என் திமிர் எனக்கு.

சுற்றி நின்ற மொத்த கூட்டமும் அதிர்ச்சியடைந்தது. பேரரசன் அவமானப்பட்டு எழுந்து நின்றான். அவனுக்கு அழுகையே வந்திருக்கும்.

“என்ன செய்வீர்களோ தெரியாது. இன்னும் பத்து நாளில் இந்த குதிரை எனக்கு அடங்க வேண்டும். தயார் செய்யுங்கள்” கரகரவென கத்திவிட்டு, திரும்பிப்பாராமல் நடந்தான்.

பிரதம அமைச்சர் என்னை கவலையோடு பார்த்துக்கொண்டே சொன்னார். “தளபதி! உடனடியாக செங்கிரிக்கு ஆளனுப்பி ஸ்வரூப் சிங்கை கையோடு அழைத்துவர ஆவன செய்யுங்கள். அடங்காத குதிரையெல்லாம் அவனுக்குதான் அடங்கும்”

“அப்படியே ஆகட்டும் அமைச்சரே. ஸ்வரூப்சிங்கின் மகன் தேஜ்சிங்கையும் உடன் அழைத்துவர ஏற்பாடு செய்துவிடுகிறேன். அவன் அப்பனை மிஞ்சிய கெட்டிக்காரனாக வளர்ந்துவிட்டான் என்று கேள்விப்பட்டேன்” என்றான் தளபதி. கட்டி வா என்றால் வெட்டி வருவான் போலிருக்கிறது. ஆர்வக்கோளாறு. அவசரக் குடுக்கை.

எவன் அவன் தேஜ்சிங்? வரட்டும். எப்படிப்பட்ட கொம்பனாக இருந்தாலும், நான் அனுமதிக்காமல் என் மீது எவனும் ஏற முடியாது. அப்பனையும், மகனையும் ஒரு வழி பண்ணாமல் அனுப்பமாட்டேன்.
“பரிகாரி, இதுதான் டெல்லி” அரண்மனை லாயத்துக்கு பொறுப்பான அமர்சிங் எனக்கு டெல்லியை சுற்றி காட்டிக் கொண்டிருந்தான். கடந்த பத்து நாட்களில் இந்நகரில் எனக்கு கிடைத்த பிரபலம் அளப்பரியது. பாதுஷாவையே ஏற்க மறுத்த குதிரையென்று முதலில் கோட்டையில் வசிப்பவர்கள் அசந்தார்கள். விஷயம் மெதுவாக நகர்வாசிகளுக்கும் பரவியிருந்தது. அமர்சிங்குக்கு ஏனோ என்னை ரொம்பவும் பிடித்துப் போயிற்று. என்னிடம் அன்பாக நடந்து கொண்டான். நிரம்பவும் பரிவாக நடத்தினான். கவனமாக பராமரித்தான். என்னை குதிரையாக நடத்தாமல், அவனுடைய நண்பன் மாதிரி பழகினான். சக மனிதர்களோடு பேசுவது மாதிரி, என்னோடும் பேசினான். அவன் பேசியது எனக்கு நன்றாகவே புரிந்தது. 

லாயத்திலேயே அடைந்து கிடந்த என்னை இரண்டு நாட்களாக டெல்லியை சுற்றிக்காட்ட நடத்திக் கொண்டிருக்கிறான். நான் செல்லும் தெருவெங்கும் டெல்லிவாசிகள் என்னை ஆச்சரியமாக பார்த்தார்கள். தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு என்னை காட்டி, “அதுதான் பரிகாரி. இந்துஸ்தானத்திலேயே தலைசிறந்த குதிரை” என்று காட்டிக் கொண்டிருந்தார்கள்.

அன்று பதேபூர் சிக்ரி அருகே நானும், அமர்சிங்கும் நடந்துக் கொண்டிருந்தோம். கூட்டம் கூட்டமாக ஆங்காங்கே இருந்த மக்களிடையே திடீர் பரபரப்பு. ஏதோ ஒரு இந்து கோயிலுக்கு உரிமையான கோயில்மாடு ஒன்று வெறிபிடித்தாற்போல ஓடிக்கொண்டிருந்தது. வெள்ளைநிற காளை மாடு. நெற்றியில் நிறைய குங்குமம் அப்பிடப்பட்டிருந்தது. கண்களில் கொலைவெறி தாண்டவமாடியது. வீரர்கள் சிலர் அதை அடக்குவதற்காக, தங்களது ஈட்டியை கையில் ஏந்தியவாறு அதை பின் தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தார்கள். சிலர் அதை கொன்று அடக்கும் வண்ணம், அதை நோக்கி ஈட்டியை எறிந்தார்கள். காளையோ லாகவமாக அதை தவிர்த்து, அதிவேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது. காளைமாட்டின் கூரிய கொம்புகளால், நான்கைந்து பேரின் குடல் உருவப்பட்டு விட்டது. தெருவெங்கும் ரத்தக்களரி.

என்னைவிட பெரிய அடங்காப்பிடாரியை அன்றுதான் கண்டேன். காளை என்னையும், அமர்சிங்கையும் நோக்கிதான் அதிவேகமாக வந்துகொண்டிருக்கிறது. பதட்டத்தில் அமர்சிங் என் மீது ஏறி தப்பிக்க முயற்சித்தான். போயும் போயும் ஒரு லாயக்காரன் என் மீது ஏறுவதா. வறட்டுக் கவுரவம் தலைக்கேறியது. அவனை ஏறவிடாமல் தள்ளிவிட்டுக் கொண்டிருந்தேன். காளை நெருங்கிக் கொண்டிருக்கிறது. உயிர் தப்பினால் போதுமென்று என்னை விட்டு விட்டு அமர்சிங் தெறித்து ஓடினான். பட்டாடைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த நான், அந்த காளைக்கு வித்தியாசமாக தெரிந்திருக்க வேண்டும். என்னை குத்தி கிழிக்கும் ஆவேசத்தோடு நெருங்கிக் கொண்டிருந்தது. என்ன செய்வதென்றே தெரியவில்லை. மோதி பார்த்துவிடலாமா. வெறிகொண்ட ஒரு காளையை, ஒரு குதிரையால் மோதி வென்றுவிட முடியுமா?

அப்போதுதான் அந்த அதிசயம் நடந்தது. காற்றை கிழித்துக்கொண்டு ஒரு கருநிற குதிரை, எனக்கும் காளைக்கும் இடையில் வந்து நின்றது. அதன் மீது நெட்டையாய் ஒருவன் ஆரோகணித்திருந்தான். ஒரு கையில் வாளும், மறு கையில் வேலுமாக கம்பீரமாக காட்சியளித்தான். நான் இருந்த இடத்திலிருந்து அவனுடைய பின்புறத்தைதான் காணமுடிந்தது. ஆவேசமாக வந்த காளை அவனை கண்டதும் தயங்கி நின்றது. குதிரையிலிருந்து வழக்கமான பாணியில் இறங்காமல், அப்படியே எகிறிக் குதித்தான். அச்சம் சிறிதுமின்றி காளையை நெருங்கினான். தன்னைப் பார்த்து பயப்படாமல் நெருங்கி வரும் வீரனை கண்ட காளைக்கு ஆவேசம் பன்மடங்கானது. முன்கால்கள் இரண்டையும் மண்ணில் தேய்த்து, கொடூரமாக உறுமியது. புழுதி பறந்தது.

“இந்துஸ்தான் பேரரசரின் விசுவாசி, செங்கிரி கோட்டையை ஆளும் மாவீரன் ஸ்வரூப்சிங்கின் திருமகன் இளவரசன் தேஜ்சிங் ஆணையிடுகிறேன். அறிவுகெட்ட காளையே அடங்கிப்போ” என்று உரத்த குரலில் ஆணையிட்டான். அவன் மொழி காளைக்கு எப்படி தெரியும்? அவனை ஒரு வழியாக்கும் முடிவோடு ஆவேசத்தோடு நெருங்கி பாய்ந்தது. கூட்டம் ஓடுவதை நிறுத்திவிட்டு வேடிக்கை காண முனைந்தது.

முதல் மோதலில் அவனுடைய வாளும், வேலும் தூரமாகப் போய் விழுந்தது. காளையின் இரண்டு கால்களுக்கிடையே நுழைந்து உயிர் தப்பினான். வேகமாக விலகி வாலைப்பிடித்து இழுத்து, பட்டென்று காளை மீதேறி, அதன் திமிலை வலுவாகப் பிடித்து, அவனுடைய கால்களை காளையின் உடலில் பின்னி அடக்க முனைந்தான். இப்படியும் அப்படியுமாக திமிறி காளை அவனை தூக்கியெறிந்தது. ஓரமாக விழுந்தவன் உடனே எழுந்தான். காளையே எதிர்ப்பார்க்காத கணத்தில் அதன் முன் நிறு இருகைகளாலும் கொம்பினை பிடித்தான். கால்களை தரையில் நன்றாக ஊன்றி, காளையின் தலையை அசையாதவாறு ஒரு நிமிடத்துக்கு அப்படியே நிறுத்தினான். கனத்த சரீரத்தை இடமும், வலமுமாக அசைத்துக்கொண்டிருந்த காளை கொஞ்சம் கொஞ்சமாக அடங்கியது. அதன் கண்களில் மின்னிய கொலைவெறி அப்படியே மறைந்தது.

மக்கள் வாழ்த்தொலி முழங்க தொடங்கினார்கள். “இந்துஸ்தான் பாதுஷா ஆலம்ஷா நீடூழி வாழ்க. செங்கிரி இளவரசர் தேஜ்சிங் பல்லாண்டு வாழ்க”

சில நிமிடங்களுக்கு முன்னராக காட்டுமிருகமாக காட்சியளித்த காளை இப்போது பூனையாய் தேஜ்சிங்கின் கைகளுக்கு அடங்கியது. அதை தட்டி, தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தான். கோயிலில் இருந்து வந்த ஒருவர், அதன் கழுத்தில் கயிறு மாட்டினார். தேஜ்சிங்குக்கு நன்றி சொல்லிவிட்டு காளையை நடத்திச் சென்றார்.

ஆஹா இவனல்லவோ வீரன். இப்படியொரு வீரன் அல்லவா என்மீது ஏறி சவாரி செய்ய வேண்டும். முதல் பார்வையிலேயே எனக்கு தேஜ்சிங்கை பிடித்துவிட்டது. எங்கிருந்தோ அமர்சிங் ஓடிவந்தான். தேஜ்சிங்குக்கு வணங்கி வணக்கம் தெரிவித்தான். “இளவரசரே! இதோ நிற்கிறதே இதுதான் பரிகாரி. இதை அடக்கத்தான் பேரரசர் உங்களை இங்கே வரவழைத்திருக்கிறார்”

தேஜ்சிங் என்னை பார்த்தான். தீர்க்கமான பார்வை. அவனுக்கு பதினெட்டு, பத்தொன்பது வயதுதான் இருக்கும். தோள்கள் வலுவாக உரமேறி இருந்தது. கால்களும், கைகளும் நல்ல பருமனில் தூண்கள் மாதிரி இருந்தது. நெற்றியில் நீளவாக்கில் செந்தூரம் இட்டிருந்தான். பின்னங்கழுத்தில் முடி பரவலாக அடங்காமல் காற்றில் பறந்துக் கொண்டிருந்தது.

என்னிடம் வந்தவன் பரவசமாக என் முதுகை தொட்டான். தடவிக் கொடுத்தான். சிலிர்த்தது. வார்பட்டையில் கால்வைத்து, ஒரே மூச்சில் என் மீதேறினான். அமைதியாக, மகிழ்ச்சியாக அவனை அனுமதித்தேன். கடிவாளம் பிடித்து என்னை செலுத்த ஆரம்பித்தான். எதிர்காற்று முகத்தில் மோத, என்றுமில்லாத வேகத்தில் கோட்டையை நோக்கி பறக்க ஆரம்பித்தேன்.
“ஆண்டவா, நான் வெல்லவேண்டும் என்று உன்னிடம் பிரார்த்திக்கவில்லை. அதர்மம் வென்றுவிடக்கூடாது. எனவே தர்மத்தின் பக்கமாக நிற்கும் செஞ்சிப்படைகள், ஆற்காடுப்படைகளை வெல்ல நீ உத்தரவிட வேண்டும்” சிங்கவரம் அருள்மிகு அரங்கநாத சுவாமிகள் சன்னதியில் நின்று மனமுருக வேண்டினான் ராஜா தேசிங்கு. 

தேசிங்கு வேறு யாருமல்ல. யாராலும் அடக்க முடியாத என்னை அடக்கிய தேஜ் சிங்தான். செங்கிரியை இங்கே எல்லோரும் செஞ்சி என்கிறார்கள். அந்த செஞ்சி கோட்டையின் ராஜா தேஜ்சிங்கை, சுருக்கமாக தேசிங்கு என்று அழைக்கிறார்கள். பரிவாதினி என்கிற என்னுடைய இயற்பெயரை மாற்றி, என்னை எல்லோரும் இங்கே ‘நீலவேணி’ என்று அழைக்கிறார்கள்.

எந்த காரியமாக இருந்தாலும் அரங்கநாத சுவாமிகளின் உத்தரவு கிடைத்தபிறகே தேஜ்சிங் செய்வது வழக்கம். அதையொட்டிதான் போருக்கு தன் இஷ்டதெய்வத்திடம் அனுமதி வாங்க சிங்கவரம் வந்திருந்தான். அன்று இறைவன் என்ன நினைத்தானோ. தேஜ்சிங் இவ்வாறு பிரார்த்தித்ததுமே அவரது தலை பின்புறமாக திரும்பிக் கொண்டது.

அர்ச்சகர் பதறிவிட்டார். “மன்னரே! இந்த போரில் இறைவனுக்கு நாட்டமில்லை போலும். தன்னுடைய சிரசை திருப்பிக் கொண்டார். இம்முடிவு குறித்து நீங்கள் மறுபரிசீலனை செய்யவேண்டும்”

அரசியும் கூட போர்வேண்டாம் என்று ராஜாவை வற்புறுத்தினாள்.

“முன்வைத்த காலை பின்வைக்க முடியாது ராணி. ஆற்காடு நவாப் சாதத் உல்லா கான், செஞ்சி மீது அநீதியாக போர் தொடுத்திருக்கிறார். எண்பத்தைந்தாயிரம் குதிரை வீரர்கள் நம்மை முற்றுகையிட்டிருக்கிறார்கள். நம் பக்கம் இருப்பதோ முன்னூற்றி ஐம்பது பேர்தான். நாம் வெல்லுவது நிச்சயமல்ல. நவாப் என்னை போரில் கொல்லலாம். ஆனாலும் வரலாறு நிரந்தரமாக வாழவைக்கும். திலகமிட்டு சிரித்த முகத்தோடு என்னை வழியனுப்பி வை தேவி” என்று கேட்டுக் கொண்டான்.

“மன்னர் மன்னா. இந்துஸ்தானின் பேரரசரின் அமைச்சருக்கு மகளாக டெல்லியில் பிறந்தவள் நான். உங்கள் வீரத்துக்கு பரிசாக என் தந்தை, எம்மை உமக்கு மணமுடித்து வைத்தார். விதியின் பயனாக இணைந்தோம். ஓரிரண்டு ஆண்டுகள் வாழ்ந்தாலும், மணமொத்த தம்பதியராய் வாழ்ந்தோம். இந்த குறுகிய மணவாழ்க்கையில் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் உயிராய் மாறினோம். போர்க்களத்தில் உங்கள் உயிர் பிரிந்தது என்று சேதி கேட்டால் அடுத்த நொடியே என் உயிரும் பிரியும். இது சத்தியம்!” என்று ஆரத்தித் தட்டில் எரிந்துக்கொண்டிருந்த கற்பூரம் மீது ராணிபாய் சத்தியம் செய்தாள். குங்குமம் எடுத்து தன் தாலியில் ஒற்றிக் கொண்டாள். அதே குங்குமத்தை கணவன் தேஜ்சிங் நெற்றியிலும் இட்டாள்.

“வீரவேல்! வெற்றிவேல்!” என்று முழங்கிக்கொண்டே உருவிய வாளோடு, ஓடிவந்து என் மீதமர்ந்தான் தேஜ்சிங். பாரசீகத்தில் பிறந்து, காபூலில் வாழ்ந்து, டெல்லிக்கு வந்து, கடைசியாக செஞ்சியில் பட்டத்து குதிரையாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இடைப்பட்ட காலத்தில் என் மீதமர்ந்து ஏகப்பட்ட போர்களில் வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறான் தேசிங்கு. இம்முறை வெற்றி சாத்தியமல்ல என்று அவனுக்கும் தெரியும், எனக்கும் தெரிகிறது. போரில் வெற்றியா முக்கியம். வீரம்தானே பிரதானம்? தேசிங்குவின் பெயர் வரலாற்றில் வாழ்ந்தால், இந்த நீலவேணியின் பெயரும் கூடவே வாழாதா?

கண்ணுக்கு தெரிந்த தூரம் மட்டும் நவாப்பின் வீரர்கள். கருநிற ஆடை அணிந்திருந்தார்கள். சமுத்திரமாய் விரிந்திருந்த நவாப்பின் படைகளுக்கு முன்பு சிறுகுட்டையாய் தேசிங்குவின் படைகள்.

“வீரர்களே! முன்னேறுங்கள். உங்கள் ஒவ்வொருவரின் வாளுக்கும் குறைந்தது பத்து ஆற்காடு தலைகள் மண்ணில் உருளட்டும். அடக்குமுறைக்கும், அதிகாரத்துக்கும் செஞ்சி அடங்காது என்று ஆற்காடு நவாப்பு உணரட்டும்” வீரர்களை உரத்தக்குரலில் உற்சாகப்படுத்தினான் தேசிங்கு. அவனது உற்சாகம் வீரர்களுக்கும் தொற்றிகொள்ள போர் தொடங்கியது.

மனிதசுவர்களால் உறுதியாய் நின்றிருந்த நவாப்பின் சிப்பாய்களை ஊடறுத்து உள்ளே புகுந்தேன். எங்களை சுற்றி வளைத்த வீரர்களின் தலைகளை மண்ணுக்கு உரமாக்கினான் தேசிங்கு. அவனுடைய மனம் என்ன நினைக்கிறதோ, அதை செயல்படுத்தும் வேகத்தோடு நான் இயங்கினேன்.

போர் தொடங்கி ஒரு மணி நேரம் ஆகியும், தேசிங்குவின் வீரப்படை சலிப்பில்லாமல் மோதிக்கொண்டே இருந்தது. இன்னும் எத்தனை தலைகளை மண்ணில் உருட்டினாலும், போர் முடியவே முடியாது என்று தெரிந்திருந்தும் செஞ்சி வீரர்கள் மன உறுதியோடு போராடினார்கள். உயிரை இழந்தார்கள். தேசிங்கு மட்டுமே நானூறு, ஐநூறு பேரை வீழ்த்தியிருப்பான். ‘சுண்டக்காய் நாடு, நசுக்கி விடுகிறேன்’ என்று நவாப்பிடம் கிண்டலடித்துவிட்டு வந்த, ஆற்காடு தளபதி அசந்துப் போனான். தன்னுடைய வீரர்கள் தொடர்ந்து வீரமரணம் எய்திக்கொண்டே இருந்தபோதும், தனிமனிதனாக தேசிங்கு போராடினான். தானே நேரடியாக தேசிங்குவை எதிர்கொள்ள, பொறுக்கியெடுத்த இருபத்தைந்து பாதுகாவலர்களோடு களத்துக்கு வந்தான்.

சக்கரமாய் வட்டமாக நின்ற ஆற்காடு வீரர்களுக்கு நடுவிலே தேசிங்குவும், நானும் மட்டும்தான்.

“செஞ்சி மன்னரே! வீரத்தின் விளைநிலமே. உங்கள் வீரத்துக்கு முன்பாக நாங்களெல்லாம் ஒன்றுமில்லை. உம்மை வீரத்தால் வெல்ல எங்களில் தனியொருவர் எவராலும் முடியாது. ஆனால் நாங்கள் நிறைய பேர். இப்போது நீங்களோ ஒருவர் மட்டும்தான். தயவுசெய்து ஆற்காடு நவாப்புக்கு அரசியல்ரீதியாக அடிபணிந்து விடுங்கள்” என்று கேட்டுக்கொண்டார் தளபதி.

“அச்சமா தளபதி? உயிரைவிடும் முடிவோடுதான் போர்க்களத்துக்கு வந்திருக்கிறேன். அநீதிக்கு அடிபணிந்தான் தேசிங்கு என்று யாரும் பேசிவிடமுடியாது. அதுதான் எனக்கு கிடைக்கப்போகும் வெற்றி. போரில் நீங்கள் வெல்லலாம். ஆனால் மக்கள் மனதில் தோற்கப்போகிறீர்கள். தயவுசெய்து உங்கள் ஆயுதங்கள் என் நெஞ்சில் பாய்ச்சுங்கள்” என்று சொல்லியவாறே தன்னை சுற்றி நின்றவர்களை எதிர்கொள்ள தயார் ஆனான் தேசிங்கு.

ஆற்காடு வீரர்களின் சக்கர வட்டம் சுருங்கியது. நான் உங்களுக்கு சொல்லிக்கொண்டிருக்கும் என் கதையும் இந்த வரியோடு முடிந்தது.

பின்குறிப்பு :

* தேசிங்கு மறைந்த செய்தியை கேட்டதும் ராணிபாய் தீக்குளித்து மாய்ந்தாள். அவளுடைய நினைவாக ஒரு ஊருக்கு ‘ராணிப்பேட்டை’ என்று பெயர்வைத்தார் ஆற்காடு நவாப்.

* தேசிங்குவோடு வீரமரணம் எய்திய எனக்கும் தனியாக சமாதி வைத்து கவுரவித்தார்கள் ஆற்காடு வீரர்கள்.

* தேசிங்குவின் வீரத்தை போற்றும் வகையில் தமிழக நாட்டுப்புறக் கலைஞர்கள், அவன் கதையை வில்லுப்பாட்டாக தெருக்கூத்தாக இன்றும் தமிழகமெங்கும் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

* பொய்க்கால் குதிரை என்று புதியதோர் கலை தமிழர்களுக்கு கிடைத்தது. பொய்க்கால் குதிரையில் வீற்றிருக்கும் ராஜா வேறு யார்? தேசிங்குதான். குதிரை? நீலவேணி என்கிற நான்தான்.
(தினகரன் வசந்தம் இதழில் நான்குவார தொடர்கதையாக வெளியான கதை)

30 ஜனவரி, 2015

கிணற்றுத் தவளைகள்

காலைப்பொழுது விடிய இரண்டு நாழிகை இருக்கும்போது லாந்தாரோடு ஸ்வாமி தெரிசனத்துக்காக கிளம்பினான் கிருஷ்ணமூர்த்தி. தலையில் வெள்ளைப் பாகை. நெற்றியில் ஸ்ரீசூர்ணம்.
முழந்தாள் வரை நீண்ட வடநாட்டுப்பாணி நாகரிக உடுப்பு. மகா சப்தமெழுப்பிய பாதக் குறடு. அப்பாவின் காசு இவன் அலங்காரத்துக்காகவே தண்ணீரால் செலவாய் கொண்டிருந்தது. தெருமுனையில் ஸ்நேகிதன் நாராயணனும் இணைந்து கொண்டான். சில்வண்டுகளின் ரீங்காரம் தவிர்த்த ஸப்தம் ஏதுமில்லா ஏகாந்த விடிகாலை.
நெஜமாவே பிரேமிக்கிறீயா அவளை நாராயணின் ஸப்தம் அமைதியையும் இருளையும் ஒலிபாய்ச்சிக் கிழித்தது.
அப்படித்தான் நினைக்கிறேன். அவளையே விவாஹம் செய்யவேணுமாய் ஆசைப்படுகிறேன். பூர்வீக சொத்திருக்கு. என் பங்கே ஏழு தலைமுறையைக் காக்கும். மூனுவேளை போஜனம் எந்த கஷ்டமுமில்லாம நடக்கும். அப்பாவிடம் சொல்லி அனுமதி கேட்டு அவளோட பந்துக்களோட பேசவைக்கணும்.
பேசிக்கொண்டே நடக்கையில் கிருஷ்ணமூர்த்தியின் முகத்தை மாதிரியே கிழக்கும் வெளுத்தது. கால்மணிநேர நடைதூரத்தில் கோபுர தரிசனம். கையெடுத்து நமஸ்கரித்தார்கள்.
எம்மை மட்டுமல்ல இந்தப் பூமண்டலத்தையே எந்தப் பாதகமுமில்லாமல் காக்கணும் நாராயணா வாய்விட்டு ஸப்தம் எழுப்பிப் பிரார்த்தித்தான் நாராயணன்.
எந்த பிரச்சினையுமில்லாமல் சக்குபாயை மணம் முடிக்கணும் நாராயணா கிருஷ்ணமூர்த்தி மனசுக்குள் கிசுகிசுத்தான்.
சக்குபாயை கிருஷ்ணமூர்த்தி முதலில் கண்டது ஊர்ப் பொது கேணி பக்கத்தில். ஊரிலிருந்த ஒரே கேணியும் அதுதான். உடல் குளிக்க, சமையல் செய்ய, பாத்திரம் துலக்க எல்லாவற்றுக்கும் அந்தக் கேணியை ஊர் சார்ந்திருந்தது. நீர்மொள்ள பித்தளைத் தவலையை இடுப்பில் இடுக்கிக் கொண்டு வந்திருந்தாள். ஒடிந்திடும் போல இருந்தது அவள் இடை. புடவை கட்டியிருந்த அழகை வைத்துப் பார்த்தால், புதுசாகக் கட்டுகிறாள் என தெரிந்தது. வடநாட்டில் பம்பாயில் அவளது பால்யம் பாட்டனார் வீட்டில் நடந்ததாம். புஷ்பவதியாய் ஆனபின் வரன் பார்க்க சொந்தத்தில் ஊருக்கு அழைத்துக்கொண்டார் அவளது தகப்பனார். முதலாய் அவள் கேணிக்கு வந்ததும் அன்றுதான்.
வாலிபனான கிருஷ்ணமூர்த்தி அப்பாவுக்குத் தெரியாமல் சுருட்டுப் பிடிக்க கேணிக்குப் பின்னாலிருந்த பழைய வீட்டுக்கு ஸ்நேகிதர்-களோடு வருவான். அவ்வாறான ஒரு பொழுதில்தான் அவளைக் கண்டான்.
ஸ்ரீமான் இராமபிரானுக்கு சீதைப்-பிராட்டியைக் கண்டதும் வந்ததே காதல். அதுபோலவே மருண்டவிழி மானாம் சக்குபாயைக் கண்டதுமே கிருஷ்ணமூர்த்தியின் இதயம் அவன் வசமிழந்தது. இவளோடு விவாகம் செய்துதான் வம்சம் பெருக்குவேன் என்று சபதமிட்டான். அவள் வேறு ஸமூகம், இவன் வேறு ஸமூகமென்பதெல்லாம் அப்போது அவனுக்கு உள்ளத்தில் தோன்ற-வில்லை.
அடுத்தடுத்த நாட்களில் கிருஷ்ணமூர்த்தி கேணி பக்கமாக வந்தானென்றால், சுருட்டுப் பிடிக்க அல்ல. சக்குபாயைப் பார்க்க. அவளருகே நடந்து மெலிதாக உதடு பிரித்து ஸ்ருதி சேர்த்துப் பாடுவான். நின்னைச் சில வரங்கள் கேட்பேன்! அவை நேரே இன்றெனக்குத் தருவாய். அவன் உள்ளக்கிடக்கையை உணர்ந்தவளாய் சினேகமாய்ச் சிரிப்பாள். அவளுக்கும் அவன் மீது பிரேமம் உண்டென்று தெரியும் வண்ணமாய் பார்ப்பாள்.
கிருஷ்ணமூர்த்தியின் தகப்பனார் ரங்கபாஷ்யத்துக்கு பாதக்குறடு கொண்டு பளாரென முகத்தில் அடித்தது போலிருந்தது.
ஓய் நீரென்ன ஸமூகம், நாங்களென்ன ஸமூகம்? பெண்கேட்டு வெட்கம் கெட்டு வர்றீரே. ஆசைப்பட்டு சிறுபிள்ளையான உம் பிள்ளை அறிவுகெட்டுக் கேட்டானென்றால், வயசான உமக்கும் அறிவில்லையா?
ஸிங்கம் மானை விவாகிக்குமா? யோஸிக்க மாட்டீரா? சக்குபாயின் தகப்பன் பெருங்குரலெடுத்துக் கத்திப் பேசப் பேச தெரு கூடியது. திண்ணையில் அமர்ந்திருந்த ரங்கபாஷ்யத்துக்கு உடல் கூசியது. கையில் வைத்திருந்த வெத்தலச்செல்லத்தை இறுகப் பற்றினார். பதில் பேச நாகுழறியது. தெரு கூடியது. விஷயமறிந்து அவர் முகத்தில் காறி உமிழ்ந்தது. ஊரெதிரில் மானமிழந்த அவர் அன்று இரவே ஊருக்குத் தெற்கு எல்லையில் ஆலமரத்தில் கழுத்தில் கயிறு மாட்டிக் கொண்டு உயிரை மரித்தார்.
சிலநாள் கிரஹத்திலேயே அடைந்துகிடந்த கிருஷ்ணமூர்த்தி, மகாத்மா அழைப்பு விடுத்திருந்த வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் இணைந்து போராட வெளியூர் போனான். என்ன ஆனான் என்பது இன்றுவரை யாருக்கும் தெரியாது.
* * *
ண்ணீர் எடுக்க தன் வீட்டுப் பெண்கள் வாசல்தாண்டி குடத்துடன் ஆற்றுக்குச் செல்வது கோவிந்தராஜூக்கு சங்கடமாக இருந்தது. கொலுசு குலுங்க குடத்துடன் குதித்துக் கிளம்பும் பூரணியைப் பார்த்தார். வருஷம்தான் எப்படி ஓடுகிறது. காலம்தான் எப்படி மாறுகிறது. மரப்பாச்சிப் பொம்மைக்கு அலங்காரம் செய்து, அப்பா! என்னோட மீரா பாப்பா அழகாயிருக்காளா? என்று மழலை பேசிக் கொஞ்சியவள், எப்படி பூத்துக் குலுங்கிப் பேரழகுப் பெண்ணாய் ஆகிவிட்டாள். அழகான பெண்ணைப் பெற்ற அம்மாக்களுக்குதான் அடிவயிற்றில் நெருப்பு என்பார்கள். கோவிந்தராஜூ தன்னுடைய அடிவயிற்றில் அந்த வெம்மையை உணர்ந்தார்.
சீக்கிரமா நம்மோட கொல்லைப்புறத்தில் ஒரு கிணறு வெட்டலாம் பூர்ணிம்மா. அதுக்கப்புறம் நீ குடத்தோட இப்படி அல்லாட வேண்டியதில்லே.
அடுத்த வாரமே கிணறு வெட்ட வந்தான் ஒப்பந்தக்காரன் மதியழகன். சுண்டி விட்டால் இரத்தம் தெரியும் சிகப்பு. தும்பைப்பூ நிறத்தில் வேட்டி, சட்டை. நெஞ்சில் தொங்கும் மைனர் செயின் வெளியே தெரிவதற்காக சட்டையின் முதல் பொத்தானை அவிழ்த்திருந்தான். லாம்பெரட்டா ஸ்கூட்டர் வைத்திருந்தான்.
பட்டமெல்லாம் படிச்சி முடிச்சிட்டேன். ஆனாலும் கட்சி, கிட்சின்னு அலைஞ்சுக்-கிட்டிருந்தேங்க. அப்பாதான் ஏதாவது தொழிலைப் பாரு. இருக்குற சொத்தை அழிக்கா-தேன்னு திட்டினாரு. நம்ம சுத்துவட்டாரத்துலே இப்போ கிணறு வெட்டதான் ஏகத்துக்கும் கிராக்கி. அதனாலே இந்தத் தொழிலில் இறங்கிட்டேன் படபடவெனப் பேசினான். கோவிந்தராஜூ வெத்தலைப் பாக்கோடு தட்டில் வைத்துக் கொடுத்த முன்பணத்தைப் பவ்யமாக வாங்கினான்.
கிணறு தோண்ட நாலு பேரை அழைத்து வந்திருந்தான். ஜோசியக்காரர் ஒருவர் சொன்ன இடத்தில் கோலமாவு கொண்டு வட்டம் போட்டான். சம்பிரதாயத்துக்குக் கடப்பாரை கொண்டு முதலில் கோவிந்தராஜூ தோண்ட, வேலை மும்முரமாக வளர்ந்தது. காலை, மதியம், மாலை என்று ஒருநாளைக்கு மூன்று முறை வந்து வேலை சுத்தமாக நடக்கிறதா என்று பார்ப்பான் மதியழகன்.
பஞ்சுவைத்த சிகரெட்டைப் பற்றவைத்துக் கொண்டே ஒருநாள் பாதிவரை தோண்டிய கிணற்றைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தான். கொலுசுச் சத்தமும், வளையல் சத்தமும் இணைந்து புதுவிதமான இனிமையான சப்தம் கேட்டது. மதியழகன் இதுவரை கேட்டறியா சப்தமிது. சட்டென்று சிகரெட்டைக் காலில் போட்டு நசுக்கி, திரும்பிப் பார்த்தான்.
அம்மா மோர் கொடுக்கச் சொன்னாங்க தலைகுனிந்து காலில் வட்டம் போட்டுக் கொண்டு நின்றிருந்தாள் பூரணி.
நன்றிங்க டம்ளரை வாங்கிக் கொண்டே அவளது வட்டமான முகத்தைப் பார்த்தான். குறுகுறுப்பும் மகிழ்ச்சியும் துள்ளி விளையாடும் கண்கள். சிவந்த அளவான நாசி. இதழ்களில் குறும்பான புன்னகை. அவளும் அவனை ஓரக்கண்ணால் பார்த்தாள். கிராப் வெட்டி எம்.ஜி.ஆர் மாதிரியிருந்தான். நெற்றியில் குங்குமம் இட்டு களையான முகம். அருகே எங்கோ வானொலியில் புதுப்பாடல் ஒலித்தது. தொட்டால் பூ மலரும்.... தொடாமல் நான் மலர்வேன்
கிணற்றில் ஊற்று வருவதற்கு முன்பாகவே அவர்களுக்குள் காதல் ஊற்றெடுத்துவிட்டது.
ஜாதியெல்லாம் இந்தக் காலத்துலே பிரச்சினை இல்லை பூரணி. கலப்புத் திருமணத்துக்கு அரசாங்கமே சட்டம் போட்டிருக்கு தெரியுமில்லே?
நீங்க நல்லமாதிரிதான் பேசறீங்க. ஆனா எங்காளுங்க வேறமாதிரி ஆளுங்க. சொந்த ஜாதியா இருந்தாக்கூட பொண்ணு கொடுக்க ஆயிரம் முறை யோசிப்பாங்க.
ஒரே வழிதான். ஓடிப்போயிடலாம். குழந்தை குட்டின்னு பொறந்தப்புறம் ஊருக்கு வரலாம். அதுக்கப்புறம் அவங்க நினைச்சாலும் நம்மைப் பிரிக்க முடியாது.
எங்காளுங்க மானத்துக்குக் கட்டுப்-பட்டவங்க. செத்துடுவாங்க. இல்லைன்னா நம்பளைத் தேடிச் சாகடிப்பாங்க.
அதெல்லாம் ஒன்னும் கிடையாது. நாலு நாளைக்கித் தேடிட்டு அப்படியே விட்டுடு-வாங்க. நாம ஒரு வாரம் கழிச்சி கடிதாசி போட்டு நமக்குக் கல்யாணம் ஆயிடிச்சின்னு சொல்லிக்கலாம். இன்னைக்கு ராத்திரி பன்னெண்டு மணிக்கு தெருமுக்குலே வேப்பமரத்துக்குக் கீழே நிக்கறேன். துணிமணி-யோடு வந்துடு.
ம்ம்ம்... அரைகுறை மனதோடு சம்மதித்தாள்.
மறுநாள் காலை மதியழகன் வெட்டிய அதே கிணற்றில் பூரணி மிதந்து கொண்டிருந்தாள்.
* * *
ல்.. ஓ.. வி.. ஈ..
திரும்பச் சொல்லு லவ்

ஏய் நித்யா. குழந்தைக்கு என்னடி சொல்லிக் கொடுக்கறே? அண்ணி சமையலறையில் இருந்து குரல் கொடுத்தாள்.
ம்.. உம்பொண்ணுக்கு லவ் பண்ணச் சொல்லிக் கொடுக்கறேன் அண்ணி.

உங்கண்ணன் காதுலே விழுந்ததுன்னா செருப்புப் பிஞ்சிடும்.
வெவ்வேவ்வ்வே அண்ணிக்குப் பழிப்புக் காட்டிவிட்டு தெருவுக்கு ஓடினாள் நித்யா. பத்தொன்பது வயது. பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு. வழக்கம்போல எல்லா கதாநாயகி-களையும் மாதிரி கொள்ளை அழகு.
தெருவில் ஒரு லாரி நின்றிருந்தது. விர்ர்ரென்று இரைச்சல் சத்தம்.
எல்.. ஓ... வீ.. ஈ... லவ்வு.. சொல்லு எல்.. ஓ.. வீ.. ஈ லவ் தன்னுடைய டயலாக்கையே யார் சொல்லிக் கொண்டிருப்பது என்று ஆச்சரியமாகப் பார்த்தாள். கூலிங் க்ளாஸ், டீஷர்ட், ஜீன்ஸ் பேண்ட் என்று கதாநாயக லட்சணங்களோடு தெருப்பையன்களோடு விளையாடிக் கொண்டிருந்தான் அவன்.
பேரு ஷரண். பக்கத்து ஊர் காலனிங்க. கஷ்டப்பட்டு இன்ஜினியரிங் படிச்சேன். கவர்மெண்ட் வேலையே கிடைச்சிடிச்சி. நம்ம சுத்துப்பட்டுலே கிணறெல்லாம் வத்திப் போச்சில்லையா.. அதுக்காகதான் அரசாங்கம் போர்வெல் போடுது. இந்த வேலையைக் கண்காணிக்கிற வேலை என்னோடதுதான் என விவரம் கேட்ட ஊர்ப்பெருசு ஒருவரிடம் விலாவரியாகச் சொல்லிக் கொண்டிருந்தான்.
யூகித்திருப்பீர்கள். ஒருவருக்கொருவர் புன்னகைத்திருப்பார்கள். லேசாக வெட்கப்பட்டு அறிமுகப்படுத்திப் பேசிக்கொண்டிருப்பார்கள். செல்பேசி எண்கள் பரஸ்பரம் பரிமாறிக்-கொள்ளப்பட்டிருக்கும். இறுதியில் ஷரணுக்கும், நித்யாவுக்கும் அமரக்காதல் மலர்ந்திருக்கும் என்பதைத் தனியாக சொல்லவே வேண்டியதில்லை. வேறு வேறு ஜாதி. வீட்டுக்குத் தெரிந்து பிரச்சினை. ஷரணைக் கண்டதும் வெட்டுவேன் என்று நித்யாவின் அண்ணன் அருவாளைத் தூக்கிக்கொண்டு யமஹாவில் சுற்றிக் கொண்டிருந்தான்.
ஒரு சுபயோக சுபமுகூர்த்த தினத்தில் ரெஜிஸ்டர் ஆபிஸில் பதிந்து தம்பதியாய் ஆனார்கள். உயிர்பிழைக்க ஊரைவிட்டு பெங்களூருக்கு ஓடினார்கள். அங்கும் நித்யாவின் அண்ணனும், அவனுடைய நண்பர்களும் தேடிவந்தது தெரியவர மும்பைக்கு ரயில் ஏறினார்கள்.
மும்பையில் இறங்கியதுமே ஷரணுக்கு ஏதோ தப்பாகப்பட்டது. அப்பாவுக்கு போன் அடித்தான். ரிங் போய்க்கொண்டே இருந்தது. தம்பியின் போன் நாட் ரீச்சபிள். நண்பனுக்கு போன் அடித்தான். எதிர்முனையில் போனை கட் செய்த நண்பன் எஸ்.எம்.எஸ். அனுப்பினான். விஷயமே தெரியாதாடா உனக்கு.. உடனே பேப்பரைப் பாரு.
நியூஸ் பேப்பர் கடையில் தினத்தந்தி வாங்கினான். தலைப்புச் செய்தியே அவர்கள்-தான். காதல் திருமண தகராறு. இரு சமூகங்களுக்குள் வன்முறை. தர்மபுரி அருகே மூன்று கிராமங்கள் சூறை.

(நன்றி : உண்மை - தமிழ்ப் புத்தாண்டு சிறப்பிதழ், 2014)