30 அக்டோபர், 2013

சுட்ட கதை

மன்னர் பீமா, அழகி பிந்து, இன்ஸ்பெக்டர் ஆசாத், சம்பல் பள்ளத்தாக்கு, மார்ஷல், ஷெரீப், செவ்விந்தியர், ‘வோ’, டால்டன் பிரதர்ஸ், இரவுக்கழுகு, பழிவாங்கும் பாவை, முத்து காமிக்ஸ், லயன் காமிக்ஸ், ராணி காமிக்ஸ்... இதெல்லாம் உங்களுக்கு பரிச்சயமானவையாக இருக்கிறதா? முதலில் கையைக் கொடுங்கள். உங்களுக்கு ‘சுட்ட கதை’ ரொம்பவும் பிடிக்கும்.

ஜெய்சங்கர் – கர்ணன் காம்பினேஷனில் சில படங்கள் காமிக்ஸ் கதைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கின்றன. ஹீரோ, வில்லன், துணைபாத்திரங்கள் எல்லாருமே பதினெட்டாம் நூற்றாண்டின் அமெரிக்கப் பாணியில் இருப்பார்கள். இசையும் கூட மேற்கத்திய ஸ்டைல்தான். ‘பழிக்குப் பழி’ என்கிற கவுபாய் காமிக்ஸ்களின் ஆதாரமான ஒன்லைனரையும், ஒட்டுமொத்த ‘லுக்’கையும் தவிர்த்து, இப்படங்களில் பெரிய காமிக்ஸ் தாக்கம் இல்லை. ஒருமாதிரியாக தமிழர் கலாச்சாரத்துக்கு விசுவாசமான படங்களே அவை.
முல்லை தங்கராசன் என்றொருவர் ஒரு காலத்தில் இருந்தார். 1972ல் முத்து காமிக்ஸ் தொடங்கப்பட்டபோது பதிப்பாசிரியராக இருந்தவர். பின்னர் முத்து காமிக்ஸில் இருந்து விலகி தனியாக நிறைய காமிக்ஸ் இதழ்களை உருவாக்கினார். குழந்தைகளுக்காக இதழியல் துறையில் இரவும் பகலுமாக உழைத்தார். தமிழ் சித்திரக்கதை உலகின் தவிர்க்க முடியாத மனிதரான அவருக்கு ஓர் ஆசை இருந்தது. காமிக்ஸ் பாணியில் ஒரு சினிமா. எழுபதுகளின் இறுதியில் பக்காவாக ஸ்க்ரிப்ட் ரெடி செய்துவிட்டு கோடம்பாக்கத்தின் தெருக்களில் அலைந்தார். ஒரு தயாரிப்பாளரும் அவரை சீண்டவில்லை. மும்பைக்கு டிரெயின் ஏறினார். கடுமையான அலைச்சலுக்குப் பிறகு அவருக்கு இந்தியில் வாய்ப்பு கிடைத்தது. அவரது வாழ்நாள் கனவு நிறைவேறப் போகிறது என்கிற குஷியில் இருந்தபோது, அன்றிரவே ஒரு விபத்தில் அகாலமாக மரணம் அடைந்தார்.

அதன்பிறகு இந்தியாவில் யாருக்கும் காமிக்ஸில் சினிமா இருப்பதாக தோன்றவில்லை. எண்பதுகளில் இறுதியிலும், தொண்ணூறுகளின் தொடக்கத்திலும் டோலிவுட்டில் மெகாஸ்டார் ஆகிவிட்ட சிரஞ்சீவியை பில்டப் செய்ய இந்திய புராண மரபுக்கதைகள் போதவில்லை. எனவே இயக்குனர்களின் பார்வை ஐரோப்பிய, அமெரிக்க காமிக்ஸ்கள் மீது பாய்ந்தது. ஸோரோ, ராபின்ஹூட், டெக்ஸ்வில்லர் என்று காமிக்ஸ் ஹீரோக்களின் கலவையாக சிரஞ்சீவியின் பாத்திரங்கள் உருவாக்கப்பட்டன. கவுபாய் தொப்பி அணிந்திருப்பார். ஸோரோவின் உடை. ராபின்ஹூட்டின் குணநலன்கள் என்று மிக்சராக சில படங்களில் சிரஞ்சீவி தோன்றினார்.
1990ல் வெளியான ‘கொண்டவீட்டி தொங்கா’ தெலுங்கில் உருவான இந்த காமிக்ஸ் தாக்கத்தின் உச்சம். தெலுங்கின் ஆல்டைம் ப்ளாக் பஸ்டரான இத்திரைப்படத்தில் இளையராஜாவின் இசையில் அமைந்த பாடல்கள் எவர்க்ரீன் ஹிட். ‘சுபலேகா ராசுக்குன்னா’வை யூட்யூப்பில் தேடி கேட்டுப் பாருங்கள். ஐஸாக உருகிவிடுவீர்கள். தமிழிலும் இது ‘தங்கமலை திருடன்’ என்று டப்பப்பட்டு, பி & சி தியேட்டர்களில் நல்ல டப்பு பார்த்தது. அதன்பிறகு டோலிவுட் ஹீரோக்களுக்கு இந்த கவுபாய் கெட்டப் மீது பயங்கர மோகம். ஆனாலும் யாரும் சிரஞ்சீவி சாதித்ததில் பாதியை கூட எட்டமுடியவில்லை. 2009ல் ராஜேந்திரபிரசாத் ஹீரோவாக நடித்து வெளிவந்த ‘குயிக் கன் முருகன்’ ஓரளவுக்கு நல்ல முயற்சி.

தொடர்ச்சியாக 2010ல் தமிழில் வெளிவந்த ‘இரும்புக்கோட்டை முரட்டுசிங்கம்’ பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் சரமாரியாக சக்கைப்போடு போட்டது. தீவிரமான காமிக்ஸ் ரசிகரும், சில சிறப்பான காமிக்ஸ் கதைகளை வரைந்து, எழுதி உருவாக்கியவருமான சிம்புதேவன், முல்லை தங்கராசனின் கனவை நிஜமாக்கினார். கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் வெளிவந்த கவுபாய் திரைப்படம் இதுதான். ஜெய்சங்கர்புரம், அசோகபுரம் என்று அவர் உருவாக்கிய பதினெட்டாம் நூற்றாண்டு அமெரிக்க கிராமங்களை, மில்லெனியம் தமிழர்கள் ஏற்றுக்கொண்டார்கள். காமிக்ஸ் ரூட்டை கரெக்ட்டாக பிடித்து, வெற்றி கண்டு சிம்புதேவன் நிரூபித்துவிட்ட பிறகும் கூட நம் இயக்குனர்களுக்கு ஏனோ காமிக்ஸில் ‘கதை’ இருப்பதாக தோன்றவில்லை.

காமிக்ஸ் வெறியரான மிஷ்கின், தன் பால்யகாலத்து ஹீரோவுக்கு மரியாதை செய்யும் வகையில் ‘முகமூடி’ என்று தன் படத்துக்கு டைட்டில் வைத்தார். இப்படத்தின் ஆரம்பத்தில் ‘முத்து காமிக்ஸ்’ வழங்கும் ‘முகமூடி’ என கிரெடிட் கொடுக்கப் போகிறார் என்றுகூட கோடம்பாக்கத்தில் பேசப்பட்டது. ஆனால் அப்படம் ஹாலிவுட், சைனீஸ் படங்களின் தாக்கத்தில் இருந்ததே தவிர, காமிக்ஸ் வாசனையற்றதாகவே வந்தது. இத்தனைக்கும் மிஷ்கினின் மற்ற படத்தின் ஷாட்கள், உற்றுப்பார்த்தால் காமிக்ஸ் கட்டங்களின் கோணத்தில்தான் படமாக்கப்படுகிறது என்பதை உணரலாம். இதையெல்லாம் தவிர்த்துப் பார்த்தால் இந்தியில் சைப்அலிகானின் ‘ஏஜெண்ட் வினோத்’ போன்ற படங்களில் 007 காமிக்ஸ் எஃபெக்ட்டை ஓரளவுக்கு உணரலாம் (அந்தப் படமே கூட காமிக்ஸ் வடிவில் புத்தகமாக வந்தது).
‘சுட்ட கதை’ இந்த வரலாற்றில் முற்றிலும் மாறுபாடான தன்மை கொண்ட திரைப்படம். இதுவரை வந்த படங்களுக்கு காமிக்ஸின் பாதிப்பு இருந்திருக்கிறதே தவிர, இப்படம்தான் முற்றிலும் காமிக்ஸாக உருவாக்கப்பட்டிருக்கிறது. காமிக்ஸ்களில் வரும் டயலாக் கட்டங்களுக்கும், ப்ளர்ப்புகளுக்கும் பழகியவர்கள் சுட்டகதையில் சுலபமாக நுழையலாம்.

டைட்டிலே ‘சில் அவுட்’ 2டி அனிமேஷனில் கட்டம் கட்டமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. சிலந்தி என்கிற பெண் இசைக்கருவியை வாசிக்கும் டைட்டிலின் இறுதிக் கட்டம் 2டியிலேயே ரவுண்ட் ட்ராலி எஃபெக்ட்டில் அனிமேஷன் செய்யப்பட்டிருக்கிறது (அனிமேட்டர் யாரையாவது விசாரித்துப் பாருங்கள் இந்த காட்சியின் சிறப்பை). சராசரி திரைப்பார்வையாளனுக்கு இது எந்த வித்தியாசத்தையும் தராது. ஆனால் நீங்கள் காமிக்ஸ் ஆர்வலராக இருக்கும் பட்சத்தில் இதைக் கண்ட நொடியிலேயே விசில் அடிப்பது உறுதி. ஒவ்வொரு காட்சியுமே காமிக்ஸ் கட்டங்களாகதான் மாறுகிறது. இதுவரை நாம் சினிமாவென்று எதையெல்லாம் நம்பிக் கொண்டிருந்தோமோ அதையெல்லாம் சுக்குநூறாக உடைத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் சுபு. தமிழுக்கு முக்கியமான வரவு இவர்.

கோரமலை என்றொரு கற்பனை கிராமம். இங்கே ஆறுவித மக்கள் இருக்கிறார்கள். முதலாம் வகை சோம்பேறி. இரண்டாம் வகை சோம்பேறி. மூன்றாம் வகை சோம்பேறி. நான்காம் வகை சோம்பேறி. ஐந்தாம் வகை சோம்பேறி. ஆறாம் வகை?
அதுவும் சோம்பேறிதான். ரொம்பவும் மொக்கையான காமெடிதான். வெடிச்சிரிப்பெல்லாம் உடனடியாக சாத்தியமில்லை. ஆனால் இந்தரக காமெடிகளுக்கு sustainable ஆன லைஃப் உண்டு. போதுமான காட்சித் தொடர்ச்சியோ, தர்க்கமோ, குறைந்தபட்ச பொதுப்புத்தியோடு ஒத்துப்போகும் காரணங்களோ இல்லாத இவ்வகை காமெடியை absurd comedy என்பார்கள். சுட்டகதை படம் முழுக்கவே இவ்வகை நகைச்சுவையில்தான் உருவாக்கப்பட்டிருக்கிறது. திரையில் தோன்றும் காட்சிகள் உங்களை உடனடியாக சிரிக்கவைக்காது. அக்காட்சிகளை உங்கள் சொந்த அனுபவத்தில் கண்ட, கேட்ட காட்சிகளோடு ஹைப்பர்லிங்க் செய்துப் பார்த்தால்தான் சிரிக்க முடியும். இந்த ஞானப்பார்வை வந்துவிட்டால் absurd comedy ரக ஜோக்குகளையோ, காட்சிகளையோ பத்திரிகையிலோ, டிவியிலோ, சினிமாவிலோ பார்க்கும்போது அது கொடுக்கக்கூடிய அனுபவம் அலாதியானது. இதைதான் இலக்கியவாதிகள் ‘சர்ரியலிஸம்’ என்றெல்லாம் ஜல்லியடிக்கிறார்கள்.

உதாரணத்துக்கு இப்படத்தில் சித்தரிக்கப்பட்டிருக்கும் ‘தொங்காபுரம் ஜமீன்’. ஜமீனின் பெயருக்கு கீழே ‘ஆண்மை தவறேல்’ என்று எழுதியிருக்கும். சட்டென்று பார்த்தால் இதுவெறும் நேம் போர்ட்தான். உங்களுக்கு ‘அமலாபுரம்’ தெரிந்திருக்க வேண்டும். அதன் சிறப்புகளை அறிந்திருக்கும் பட்சத்தில் ‘ஆண்மை தவறேல்’ ஏன் இடம்பெற்றிருக்கிறது என்பது புரிந்து புன்னகைப்பீர்கள். தொங்காபுரத்தை எப்படி அமலாபுரத்தோடு ஹைப்பர்லிங்க் செய்யவேண்டுமென்றால் ‘தொங்கா’ என்கிற தெலுங்குவார்த்தைதான் க்ளூ. ஜமீன்களைப் பற்றி நாம் ஏற்கனவே அறிந்திருக்கும் பிம்பங்களோடு (காமவெறியர்கள் மாதிரி) இதைப் பொருத்திப் பார்க்கவேண்டும். பாரடைஸ் டீ ஸ்டால், ஆங்கிலத்தில் PARADESI TEA STALL என்று ஏன் எழுதியிருக்கிறது என்று யோசிக்க வேண்டும். இதையெல்லாம் வசனத்தில் இயக்குனர் சுட்டிக் காட்டமாட்டார். இப்படியெல்லாம் மூளைக்கு வேலை தர தயாராக இருக்கும் பட்சத்தில் ‘சுட்ட கதை’ பார்க்கலாம். இப்படத்தில் சீரியஸாக ஏதோ கதை இருக்குமென்று நம்பிப் பார்த்தால், படத்தில் வரும் மொக்கை கேரக்டர்களில் நீங்களும் ஒரு மொக்கையாக மாறிவிடுவீர்கள். கேரக்டர் எஸ்டாப்ளிஷ்மெண்டுக்காக படத்துக்கு தொடர்பேயில்லாமல் செருகப்படும் டாக்குமெண்டரி, டிவி நிகழ்ச்சி பாணியிலான காட்சிகளையெல்லாம் என்னவென்று சொல்வது? அபாரம்.

ஹீரோக்களுக்கு ரஞ்சன் காலத்து மீசை. தபாங் ஸ்டைல் கூலிங் க்ளாஸ். உ.பி. போலிஸார் பாணி உடை. ஊரில் இருக்கும் சோம்பேறிகள் எப்பவும் வீட்டில் அடைந்து ‘மெட்டி ஒலி’ பார்க்கிறார்கள். டீ போடுபவனை தவிர்த்து ஒரு உழைப்பாளியையும் பார்க்க முடியாது. ஒட்டகம், சிலந்தி என்று மலைவாழ் பாத்திரங்களுக்கு விசித்திரமான பெயர்கள், பழக்கவழக்கங்கள். எல்லாவற்றையும் விட மேலாக சாம்பசிவம் க்ரைம் காமிக்ஸ்.
‘சுட்டகதை’ ஒட்டுமொத்தமாகவே எனக்கு வசீகரமாக தெரிந்தது. வாசிப்பின்பம் மாதிரி காட்சியின்பத்தை தந்தது. இதே வசீகர அனுபவத்தை முன்பொருமுறை பெற்றிருக்கிறேன். ஒரு நாவலை வாசிக்கும்போது. அது ‘கதிரேசன் செட்டியாரின் காதல்’

26 அக்டோபர், 2013

செவ்வாய்க்கு போகலாமா?

பூமியின் இயற்கைவளங்களை சுரண்டி தீர்த்துக் கொண்டிருக்கும்
மனித இனம் அடுத்து செவ்வாய் மீது கண் வைத்திருக்கிறது.
செவ்வாயில் மனிதன் வசிக்க முடியுமா?


ஊர் சுற்றி பார்த்துக்கொண்டிருந்தவர்கள் அலுத்துப்போய் உலகத்தையும் சுற்றிப் பார்த்துவிட்டார்கள். இனி ஆர்வமூட்டக்கூடிய விஷயம் எதையும் புதுசாய் உலகத்தில் கண்டுவிடமுடியாது என்று சோர்ந்துப் போனார்கள். இப்போது உலகத்தை விட்டு வெளியே போய், வேறு கிரகங்களை பார்க்க முடியுமா என்று யோசிக்கிறார்கள். எனவேதான் ‘செவ்வாய்க்குப் போகலாம் வாங்க’ என்று ஒரு திட்டத்தை ‘மார்ஸ் ஒன்’ என்கிற நிறுவனம் அறிமுகப்படுத்தியதுமே லட்சக்கணக்கானோர் பயணம் செய்ய விண்ணப்பித்திருக்கிறார்கள். பூமி தவிர்த்த வேறொரு கோளில் மனிதன் குடியேற வேண்டுமானால், அது பெரும்பாலும் செவ்வாயாகதான் இருக்க முடியும் என்று நம்பப்படுகிறது.

சந்திரனுக்கு ‘சந்திராயன்’ அனுப்பி வென்ற இந்தியா, அடுத்து செவ்வாய் கிரகத்துக்கும் வரும் நவம்பர் மாதம் ‘மங்கல்யான்’ என்கிற விண்கலத்தை அனுப்ப திட்டமிட்டிருக்கிறது (புதிய தலைமுறை ஜனவரி 03, 2013 இதழில் ‘செவ்வாயிலும் பாரதக்கொடி’ என்கிற விரிவான கட்டுரையை வெளியிட்டிருக்கிறோம்). மங்கல்யான் செவ்வாய் கிரகத்தில் நேரடியாக இறங்காது. சுற்றுப்பாதையில் சுற்றிக் கொண்டிருக்கும். செவ்வாயில் கால் பதிக்க வேண்டுமானால், இதிலிருந்து ஓர் ஊர்தியை அனுப்பிதான் செவ்வாய் நேரடியாக தரையிறங்க முடியும்.

செவ்வாயில் கால் பதிக்க நினைக்கும் மனிதனின் கனவு நிறைவேறுமா?

“வாய்ப்பிருக்கிறது” என்கிறார் அறிவியல் கட்டுரைகளை எழுதிருவரும் எழுத்தாளரான பத்ரி.

“சூரிய மண்டலத்தில் எதிர்காலத்தில் வியாழன் வரை மனிதன் போகமுடியலாம். புதன் கிரகத்தில் வெப்பம் அதிகம் என்பதால் வாய்ப்பில்லை. செவ்வாய், வெள்ளி கிரகங்களில் தரை கெட்டியாக இருக்கும் என்பதால் இந்த இரு கிரகங்களுக்கும் மனிதன் போக வாய்ப்பிருக்கிறது. அதிலும் செவ்வாய் கிட்டத்தட்ட பூமியின் அளவுள்ள கிரகம், புவியீர்ப்பு விசையும் ஓரளவுக்கு ஒத்துப்போகும் என்பதால் நாம் சந்திரனை அடுத்து, செவ்வாயிலும் கால் பதிக்க வாய்ப்பிருக்கிறது. காற்றுதான் அடிப்படையான பிரச்சினையாக இருக்கக்கூடும். செயற்கைக் கருவிகளின் துணையோடு சுவாசிக்க வேண்டும். அங்கே கட்டிடங்கள் முதலான கட்டமைப்புகளை உருவாக்கி, பூமியின் சூழலை செயற்கையாக செய்ய முடியும் பட்சத்தில் சில நாட்கள் செவ்வாயில் மனிதன் ‘பிக்னிக்’ மாதிரி தங்கிவர முடியும்” என்று விளக்குகிறார் பத்ரி. ஆனாலும் உலகில் இயங்குவதைப் போல மனிதன் அங்கே இயங்குவதற்கான சாத்தியங்கள் குறைவு என்றும் சுட்டிக் காட்டுகிறார்.

செவ்வாய்க்கு போக வேண்டுமானால் தோராயமாக ஐந்தரை கோடி கி.மீ பயணிக்க வேண்டும். பூமிக்கும் செவ்வாய்க்கும் இடையேயான தூரம் மாறிக்கொண்டே இருக்கும். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நெருங்கும். அதை கணக்கு செய்து பயணத்திட்டத்தை அமைக்க வேண்டும். செவ்வாயின் தரையில் சோலார் மற்றும் காஸ்மிக் கதிர்வீச்சு பரவலாக இருக்கலாம். டாக்ஸிக் ரசாயனம் தோய்ந்த தூசுப்புயல் சுழன்றுக் கொண்டிருக்கலாம். உறைந்துப் போகவும் வாய்ப்பிருக்கிறது. சர்வநிச்சயமாக ஆக்சிஜன் கிடைக்கப் போவதில்லை. நாம் வாழ்வதற்கு என்று அல்ல, வெறுமனே தரையிறங்கக் கூட கோடிமுறை யோசித்தாக வேண்டும். ஏனெனில் அங்கே நீர் இருந்ததற்கான தடயங்கள்தான் கிடைத்திருக்கிறது. கடைசியாக கிடைத்த தகவலின்படி அங்கே மிக மிகக்குறைவான அளவு தண்ணீர் இருக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் கணித்திருக்கிறார்கள். ஆனால் பாக்டீரியாக்கள் மாதிரியான நுண்ணுயிரிகள் கூட அங்கே வசிக்க வாய்ப்பிருக்கிறதா என்று தெரியவில்லை. புவிச்சூழலில் மண் என்பது வெறும் மண் அல்ல. நுண்ணுயிரிகளும் கலந்தது. செவ்வாய்க் கிரகத்தில் மண் இப்படியான தன்மையில் இருக்காது.

“இதெல்லாம் கூட சமாளித்துவிடலாம். ஆனால் செவ்வாய்ப் பயணம் என்பது ஒன்-வே டிராஃபிக்தான். போகிறவர்கள் திரும்பவே முடியாது” என்றுகூறி அதிரவைக்கிறார் அறிவியல் எழுத்தாளரான என்.ராமதுரை.

“நமக்கிருக்கும் தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டு செவ்வாய்க்கு பயணம் செய்தால் போய் சேருவதற்கே எட்டு மாதங்கள் ஆகும். பஸ்ஸிலோ, விமானத்திலோ, ரயிலிலோ செய்யும் பயணம் போல இது இருக்காது. பயணிப்பவர்கள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்படலாம். குறிப்பாக அசாத்தியமான மனவலிமை அவர்களுக்கு இருக்க வேண்டும்.

அங்கு தரையிறங்கும்போது கதிரியக்கப் பாதிப்புகள் ஏற்படலாம். அதையும் கூட சமாளித்து விடலாம். தங்குவதற்கு குடியிருப்புகளை கூட ஏற்படுத்தி விடலாம். ஆனால் தரையிறங்கதான் வசதி இருக்கிறதே தவிர, மீண்டும் திரும்புவதற்கான தொழில்நுட்ப சாத்தியங்கள் நம்மிடையே இல்லை. அங்கேயே ராக்கெட் உருவாக்கி, எரிபொருள் நிரப்பிதான் திரும்ப வேண்டும். செவ்வாயில் எரிபொருள் கிடைக்குமா தெரியாது. எரிபொருளை கூட நாம் இங்கிருந்து அனுப்பிவிடலாம். ஆனால் செவ்வாயில் தரையிறங்க நாம் பயன்படுத்திய ராக்கெட்டை அப்படியே மீண்டும் கிளப்பிக் கொண்டு வரமுடியாது. சந்திரனுக்கு போனதையும், செவ்வாய்க்கு போவதையும் ஒன்றாக கருதக்கூடாது. இரண்டும் வேறு, வேறு. இந்த தொழில்நுட்ப சாத்தியத்தை நாம் அடைய ஐந்து ஆண்டுகள் ஆகலாம், பத்து ஆண்டுகள் கூட ஆகலாம். அதுவரை போனால் வரமுடியாது என்பதை தெரிந்துக்கொண்டு யாராவது பயணிப்பார்களா?” என்று கேள்வி எழுப்புகிறார் ராமதுரை.

செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்கு உருவான திட்டங்கள் பலவும் தோல்வியிலேயே முடிந்தது. சில திட்டங்கள் மட்டுமே வெற்றி கண்டிருக்கின்றன. இப்போது இந்தியாவின் ‘மங்கல்யான்’ வெற்றிபெறும் பட்சத்தில், விண்வெளித் தொழில்நுட்பத்தில் நாமும் குறிப்பிடத்தக்க உயரத்தை எட்டக்கூடிய வாய்ப்பிருக்கிறது. ஆனால் மனிதனை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பும் முயற்சி அவ்வளவு சீக்கிரமாக நடந்துவிடாது. தொழில்நுட்பரீதியாக அதற்கு நாம் இன்னும் கடக்கவேண்டிய தூரங்கள் நிறைய இருக்கிறது.


எக்ஸ்ட்ரா மேட்டர் 1 :

வெறும் கண்ணால் பார்க்கலாம்!

புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி ஆகிய ஐந்து கிரகங்களை நாம் வெறுங்கண்களாலேயே பார்க்கலாம். பலரும் விடியற்காலை வேளைகளில் ‘விடிவெள்ளி’ எனப்படும் வெள்ளி கிரகத்தை பார்த்திருப்பீர்கள். கிரகங்களும் நட்சத்திரம் மாதிரியேதான் இருக்கும். ஆனால் நட்சத்திரங்கள் மின்னும். கிரகங்களில் அந்த சலனம் தெரியாது. கிரகங்கள் ஒரே நேர்க்கோட்டில்தான் இருக்கும். இரவுகளில் உற்றுப் பார்த்தால் சிகப்பாக வெள்ளியைவிட கொஞ்சம் சிறியளவில் ஒரு கிரகத்தை நீங்கள் காணலாம். அதுதான் செவ்வாய்.


எக்ஸ்ட்ரா மேட்டர் 2 :

இந்தியா ரெடி!

தேதி குறித்தாகி விட்டது. அக்டோபர் 28, மாலை 4.15 மணி. எல்லாம் சரியாக அமைந்தால் இந்த நேரத்தில் செவ்வாய்க்கு இந்தியாவின் பயணம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து தொடங்கிவிடும். 1350 கிலோ எடையுள்ள விண்கலத்தை, 110 கோடி ரூபாய் செலவில் உருவான பி.எஸ்.எல்.வி. (சி-25) செவ்வாயின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தும். சாட்டிலைட்டில் சுமார் 15 கிலோ எடையுள்ள அறிவியல் ஆய்வு சாதனங்கள் இருக்கும். இவை செவ்வாயின் நிலப்பரப்பு, சுற்றுச்சூழல் மற்றும் கனிமவளங்களை ஆராயும்.

பூமியின் சுற்றுப்பாதையை விட்டு விலகியதும் சுமார் பத்து மாதங்கள் பயணித்து செப்டம்பர் 2014ல் செவ்வாயின் சுற்றுப்பாதையை இந்த விண்கலம் சென்றடையும். செவ்வாயில் ‘மீத்தேன்’ எவ்வளவு இருக்கிறது என்பதை அறிவது மங்கல்யான் திட்டத்தின் பிரதான நோக்கங்களில் ஒன்று. ஆனால் நாம் முன்பே எதிர்ப்பார்த்த அளவுக்கு மீத்தேன் அங்கு இல்லை என்று சமீபத்தில் நாசா ஆராய்ந்து சொல்லியிருக்கிறது.


எக்ஸ்ட்ரா மேட்டர் 4 :

செவ்வாய் குறித்த டிட்பிட்ஸ்

· சூரியனிலிருந்து நான்காவதாக இருக்கும் கிரகம் செவ்வாய். சூரியனுக்கும் செவ்வாய்க்கும் இடையே 141 மில்லியன் மைல் தூரம்.

· ஓரளவுக்கு செவ்வாயின் சூழல் பூமியை ஒத்திருக்கிறது என்று கணிக்கப்பட்டாலும் வெப்பநிலை அங்கே -225 முதல் +60 டிகிரி ஃபாரன்ஹீட்டாக இருக்கலாம். சராசரி வெப்பநிலையே -67 டிகிரியாக இருக்கக்கூடும் என்று பயமுறுத்துகிறார்கள்.

· சூரிய மண்டலத்திலேயே பெரிய தூசுப்புயல் அடிக்கும் கிரகம் செவ்வாய். இந்தப் புயலின் அளவு சில நேரங்களில் நம் தெரு அளவுக்கு சிறிதாகவும் இருக்கலாம். சில நேரங்களில் கிரகம் மொத்தத்தையுமே அசைத்துப் பார்க்கும் அளவுக்கு பெரியதாகவும் அடிக்கலாம்.

· செவ்வாயில் ‘உயிர்’ இருக்கிறதா எனும் கேள்விக்குப் பதில் சொல்வதே, விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கு உயிர் போகும் வேலையாக இருக்கிறது. ஐரோப்பாவில் விண்வெளி தொடர்பாக சில ஆண்டுகளுக்கு முன்பாக நடந்த நிகழ்வு ஒன்றில் கலந்துக்கொண்ட எழுபத்தைந்து சதவிகித விஞ்ஞானிகள் ஒரு காலத்தி உயிர் இருந்திருக்கலாம் என்றும், மீதி இருபத்தைந்து சதவிகிதம் பேர் இப்போதும் செவ்வாயில் உயிர்கள் வாழலாம் என்றும் நம்புவதாக சொன்னார்கள்.

· டச்சு நாட்டைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று ‘மார்ஸ் ஒன்’ என்கிற பெயரில் ஒரு திட்டத்தை அறிவித்திருக்கிறது. செவ்வாயில் மனிதர்களை குடியேற்றும் திட்டம் இது. இதன்படி 40 பேர் செவ்வாயில் குடியேற தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் நால்வர் (இரண்டு ஆண்கள், இரண்டு பெண்கள்) செப்டம்பர் 2022ல் பயணத்தைத் துவக்கி செப்டம்பர் 2023ல் செவ்வாயில் குடியேறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. செவ்வாய்க்குப் போகிறவர்கள் திரும்பமுடியாது என்று தெரிந்தும் லட்சக்கணக்கானோர் பயணம் செய்ய ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள்.

· ‘தி இன்ஸ்பிரேஷன் மார்ஸ் ஃபவுண்டேஷன்’ என்கிற நிறுவனம் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்காமல் விண்கலத்தில் ஒரு ஆணும், பெண்ணும் சுற்றிவிட்டு (501 நாட்கள் டூர்) திரும்புமாறு ஒரு திட்டத்தை முன்வைத்திருக்கிறது.

· ஈமுக்கோழி திட்டம் மாதிரி ‘செவ்வாய்க்கு ஆள் அனுப்புகிறோம்’ என்று பல்வேறு நிறுவனங்களும் ஆளாளுக்கு கிளம்பிவிட்டதால் ‘நாசா’ கடுமையாக எரிச்சலடைந்திருக்கிறது. கதிர்வீச்சு அபாயம் இருக்கும் என்று சந்தேகப்படும் பட்சத்தில் விண்வெளி வீரர்களையே அப்பகுதிக்கு அனுப்புவதில்லை என்கிற கொள்கையை நாசா கடைப்பிடிக்கிறது.

(நன்றி : புதிய தலைமுறை)

24 அக்டோபர், 2013

புவியீர்ப்பு

இந்தியா, செவ்வாய் கிரகத்துக்கு ‘மங்கல்யான்’ அனுப்பும் காலத்தில் வந்திருப்பதால் ‘கிராவிட்டி’ நமக்கும் முக்கியமான ஒரு படமாகிறது. விண்வெளியில் மனிதர்கள் குறித்த நிறைய படங்கள் வந்திருந்தாலும் யதார்த்தத்துக்கு மிகவும் நெருக்கமாக ‘கிராவிட்டி’ இருப்பதாக விண்வெளிக்கு சென்று வந்த அனுபவஸ்தர்கள் சிலிர்க்கிறார்கள்.

ஒரு விண்நிலையத்தில் ஏற்பட்டிருக்கும் பழுதினை சரிபார்க்க ஒரு குழு செல்கிறது. எதிர்பாராவிதமாக ஏற்படும் விபத்தால், குழுவினரில் பலர் உயிரிழக்கிறார்கள். கடைசியாக மிஞ்சிய பெண்ணால் மீண்டும் பூமிக்கு வரமுடிகிறதா என்பதை பரபரப்பான த்ரில்லராக உருவாக்கியிருக்கிறார்கள்.

காற்றோ, ஒலியோ இல்லாத சூனியவெளியில் நெக்குருகச் செய்யும் கதை என்பதுதான் படத்தின் ஐடியா. இருள், சூரியன், விண்கலங்கள், மிகக்குறைவான மனிதர்கள். பத்துக்கும் குறைவானவர்கள். படம் தொடங்கியதுமே எல்லோரும் காலி. மீதியிருக்கும் இருவரில் ஒருவரும் இடைவேளைக்கு முன்பே டிக்கெட் வாங்கிவிடுகிறார். இதை வைத்துக்கொண்டு சுவாரஸ்யமாக ஒன்றரை மணி நேரத்துக்கு படமெடுக்கும் சவாலை வெற்றிகரமாக எதிர்கொண்டிருக்கிறார் இயக்குனர்.
ஹாலிவுட்டின் அஜீத் என்பதால் ஜார்ஜ் க்ளூனியின் பெயரை போஸ்டர்களில் பார்த்ததிலிருந்தே கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்ய தயாராக இருந்தனர் ரசிகர்கள். ஆனால் படம் முழுக்க சாண்ட்ரா புல்லாக்கின் ஷோ. ஹாலிவுட் இண்டிபெண்டண்ட் படங்களின் அரசி. அடுத்த வருடம் வந்தால் அம்மணிக்கு வயது ஐம்பதாம். ஸ்பீடில் கீனுரீவ்ஸோடு பஸ் ஓட்டிய அந்த கத்தி மூக்குப்பெண், கிராவிட்டியில் விண்கலத்தை ஓட்டுகிறார். புவியீர்ப்பைவிட இவரது விழியீர்ப்புதான் நம்மை ரொம்பவும் டிஸ்டர்ப் செய்கிறது. இருபது ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு பெண் பேரழகியாகவே இருக்கமுடியுமா என்பது இயற்கையின் இயல்பையே கேள்விக்குள்ளாக்கும் சமாச்சாரம். முன்பு ஒல்லிப்பிச்சானாக இருந்தவர் இப்போது செம்ம கட்டையாக ஃபார்ம் ஆகியிருக்கிறார். விண்வெளி உடைகளை கலைந்துவிட்டு, விண்கலத்துக்குள் சின்ன ஜட்டி, டைட்டான மேலாடையோடு அவர் நீந்துகிற காட்சிக்கு விடலைகள் காட்டுமிராண்டித்தனமாக விசில் அடிக்கிறார்கள். தமிழ் சமூகத்தின் இளைஞர்கள், ஐம்பது வயது ஆண்ட்டியைப் பார்த்து கிளர்ச்சியுறுகிய அபாக்கியமான அவலநிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். சமகால தமிழ்ச்சூழலில் நிலவும் பாலியல் பாலைவன வறட்சியே இதற்கு காரணமாக இருக்கக்கூடும் என்கிற கோட்பாட்டு முடிவுக்கு கடைசியாக நாம் வரவேண்டியிருக்கிறது.

படத்தின் இறுதிக்காட்சி பிரசவத்துக்கு ஒப்பானது. சாண்ட்ரா தப்பித்து வரும் ‘கேப்ஸ்யூல்’ தாயின் கர்ப்பக்கிரகத்தை நினைவூட்டுகிறது. ஒரு ஏரியில் விழும் அந்த கேப்ஸ்யூலுக்குள் தண்ணீர்புகுந்து அவர் மூச்சுக்காக சிரமப்படுவது பனிக்குடம் உடைதலுக்கான ஒப்பீடு. ஏரிக்குள் நீந்தி தலையை வெளியே காட்டுவது முதன்முதலாக குழந்தை தலையை உலகத்துக்கு காட்டும் காட்சிக்கு இணையானது. தரைக்கு வந்ததுமே சாண்ட்ராவால் நடக்க முடியவில்லை. புவியீர்ப்பில்லாத விண்வெளியில் நீந்தி பழகியவர், முதல் அடியை எடுத்துவைக்கவே சிரமப்படுகிறார். குழந்தை முதன்முதலாக நடைபழகும் காட்சியோடு இதை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளலாம்.

இப்படியெல்லாம் கூட ஒப்பிடுதல்கள் அவசியமில்லை. இதையெல்லாம் புறந்தள்ளிவிட்டும் கூட படத்தைப் பார்த்தால் க்ளியரான ஸ்பேஸ் எண்டெர்டெயினர். மொழிப்பிரச்சினைக்கு வாய்ப்பேயில்லை. முழுக்க ஆங்கில சப்டைட்டிலோடுதான் படம் உருவாகியிருக்கிறது. இல்லாவிட்டால் ராக்கெட் சயின்ஸ் படித்த விஞ்ஞானிகள் மட்டுமே புரிந்துகொண்டிருக்க முடியும். 3டி உதவியோடு ஒன்றரைமணி நேர அசலான விண்வெளி அனுபவத்தை படம் பார்க்கும் ஒவ்வொரு பார்வையாளரும் அனுபவிக்கிறார்கள். தயாரித்து, இயக்கி, எடிட்டிய அல்போன்ஸோவின் பாக்கெட்டில் இப்போதே ஒரு சில ஆஸ்கர்கள் விழுந்துவிட்டதாக எண்ணிக்கொள்ளலாம்.

12 அக்டோபர், 2013

தரிசனமும், மன எழுச்சியும்!

டிவி வந்த புதுசில் அதை யாரோ ஐரோப்பிய புண்ணியவான் ‘இடியட் பாக்ஸ்’ என்று விமர்சித்தாராம். நல்லவேளை அவர் இண்டர்நெட்டை பார்க்காமலேயே இறைவனடி போய் சேர்ந்துவிட்டார். அபத்தங்களும், முட்டாள்தனங்களும், அற்பவாதிகளும் நிறைந்த இடமாக இணையத்தை சமூக வலைத்தளங்கள் மாற்றி அமைத்திருக்கிறன. கட்டற்ற சுதந்திரம், வெளிப்படையான ஜனநாயகம் போன்ற உன்னதமான உருவாக்கங்களுக்கு வேறொரு முகமும் உண்டு. அதைதான் இப்போது எல்லோரும் ‘தரிசித்து’க் கொண்டிருக்கிறோம். லைக்குக்காக, ரீட்விட்டுக்காக, கமெண்டுக்காக கொலையும் செய்வார்களோ இவர்கள் என்று அஞ்சும் வண்ணம் இணையக் கலாச்சாரம் பரிணாமம் பெற்றுக் கொண்டிருக்கிறது.

வம்புக்கு இழுப்பது, வசைபாடுவது என்பதையெல்லாம் தாண்டி மல்ட்டிப்பிள் பர்சனாலிட்டியாக இமேஜ் பில்டப் செய்து, ஒரு திருட்டு வாழ்க்கையை ஒருவன் வாழ்வதற்கு சமூகவலைத்தளங்கள் வாய்ப்பளிக்கின்றன. போகிற போக்கில் டிராஃபிக் சிக்னலில் குழந்தை பிச்சையெடுப்பதை பார்த்த ஒரு காட்சியில் ‘படிமம்’ உருவாக்குகிறார்கள். மழை பொழியும் இரவில் ‘மனவெழுச்சி’ கொள்கிறார்கள். யாரோ ஒரு மூன்றாம்தர எழுத்தாளர் எழுதிய ஏதோ ஒரு பிட்டுக்கதையை வாசித்துவிட்டு ‘தரிசனம்’ அடைகிறார்கள். ஆண்மை எழுச்சிக்கு வழிகாட்டும் போஸ்டரை லேம்ப் போஸ்டில் ஒட்டுவது மாதிரி ஆகிவிட்டது ஃபேஸ்புக்கும், ட்விட்டரும், கூகிள்ப்ளஸ்ஸும்.

‘தரிசனம்’, ‘மனவெழுச்சி’ மாதிரி வார்த்தைகளுக்கு எத்தனை சக்தி உண்டு. போகிற போக்கில் சப்பை மேட்டருக்கெல்லாம் இதை பயன்படுத்துகிறோமே என்று எந்த குற்றவுணர்ச்சியுமில்லை. ஒவ்வொருவருக்கும் தினமும் ஒரு மனவெழுச்சியும், ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை வாழ்க்கைத் தரிசனமும் கிடைத்துவிடுகிறது. லட்சக்கணக்கானவர்களுக்கு சகட்டுமேனிக்கு இதெல்லாம் கிடைத்துக்கொண்டே இருக்கிற இந்த போக்குக்காக ஜெமோக்களையும், எஸ்ராக்களையும்தான் சுட்டுத் தள்ள வேண்டும். எழுச்சியோ அல்லது தரிசனமோ கிடைக்க நமக்கு போதிமரம் கூட தேவையில்லாமல் போய்விட்டது. அப்படியாப்பட்ட கவுதம புத்தருக்கே வாழ்க்கையில் ஒரே ஒரு முறைதான் இந்த தரிசனமும், எழுச்சியும் கிடைத்தது. நம் வாழ்க்கையை புரட்டிப் போட்ட ஒரு சம்பவத்தின் போது எழுச்சியோ, தரிசனமோ கிடைத்தால் பரவாயில்லை. தினம் தினமா அமாவசை சோறு கிடைத்துக் கொண்டே இருக்கும்?

சாதாரணப் பேச்சுவழக்கில் பயன்படுத்தப்படாத இம்மாதிரி வார்த்தைகளை வைத்து, இப்போது நீங்கள் வாசித்துக்கொண்டிருக்கும் இந்த கட்டுரையை மாதிரி சப்பைக் கட்டுரையில் ஆங்காங்கே மானே, தேனே போட்டு தூவிவிட்டால் அதற்கொரு இலக்கிய அந்தஸ்து கிடைத்துவிடுவதாக எழுதிக் கொண்டிருக்கும் மொக்கைக்கு ஒரு காட்சிப்பிழை மூளையில் படிமமாகிவிடுகிறது. வாசிக்கும் மொக்கைகளும் அச்சொற்களின் உண்மையானப் பொருளுக்கான மதிப்பை உணராமல் அனிச்சையாக லைக் போட்டுவிட்டு, ‘அபாரமான எழுத்தாற்றல்’ என்று கமெண்டுபோட்டு உசுப்பேற்றி விடுகிறார்கள். எழுதுபவனும் மொக்கை, வாசிப்பவனும் மொக்கை எனும்போது கொஞ்சமாவது சூடு சொரணையோ, மனிதனுக்கு இருக்க வேண்டிய அடிப்படையான அறிவோ, நாகரிகமோ பின்னுக்கு தள்ளப்பட்டு மலடான ஒரு அறிவுக்குருடு சமூகத்தை நம்மையறியாமலேயே உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.

பள்ளியில் படிக்கும்போது பாடம் புரியவில்லை என்றால் சந்தேகம் கேட்போம். இணையத்தில் எவனாவது எதையாவது சந்தேகமாக கேட்டு பார்த்திருக்கிறீர்களா? அவனவனுக்கு தெரிந்ததை பீற்றிக் கொள்ளவும், எவனாவது இளிச்சவாயன் மாட்டினால் முழம், முழமாக உபதேசிக்கவும்தான் தயாராக இருக்கிறோம். புரியாமல் பேசுபவனை சமூகத்தில் உளறுவாயன் என்போம். மெய்நிகர் உலகமான இணையத்திலோ அவ்வாறு உளறிவைப்பவனை அறிவுஜீவி என்கிறோம். அவன் பேசுவது நமக்கு புரிகிறதா புரியவில்லையா என்பதெல்லாம் அடுத்தப் பிரச்சினை. ஏதோ ஒன்றினை புரியவில்லை என்று ஒப்புக்கொள்வதே நமக்கு பெரிய கவுரவ இழப்பாக தோன்றுகிறது. இப்படிப்பட்ட சூழலில் அறிவுப் பகிரல் எப்படி சாத்தியமாகும்?

பாவனைகளால் நிறைந்திருக்கிறது இணைய உலகம். நான் இதையெல்லாம் படிக்கிறேன். நான் இதையெல்லாம் பார்க்கிறேன் என்று உட்டாலக்கடியாக நம் இமேஜை ஏற்றிக் கொள்வதிலேயே நமக்கிருக்கும் கொஞ்ச நஞ்ச அறிவையும் செலவிடுகிறோம். ஸ்டான்லி க்யூப்ரிக்கின் ஒரு படத்தைக்கூட பார்க்காதவன் என்ன முட்டாளா. ஒரான் பாமுக்கை படிக்காதவன் எல்லாம் தற்குறியா. இம்மாதிரி டப்பென்று ‘நேம் டிராப்பிங்’ செய்துவிட்டால் போதும். பெரிய இண்டெலெக்சுவல் போலிருக்கே என்று இணையம் மூக்கின் மேல் விரல்வைக்கும். நியாயமாகப் பார்த்தால் இந்த போக்குக்காக சுஜாதாவையும், சாருநிவேதிதாவையும் தூக்கில் போடவேண்டும்.

பாவனைகளாலேயே வாழ்பவன் முதலில் மற்றவர்களை ஈர்க்க கஷ்டப்பட்டு இம்மாதிரி பாவனை செய்யத் தொடங்குகிறான். மற்றவர்களாகவே சேர்ந்து அவனை பெரிய வாசிப்பாளி, அறிவாளி என்று இமேஜை உருவாக்கிக் கொள்கிறார்கள். பொய்யான அந்த தோற்றத்தை சுமந்தவன், ஒரு கட்டத்தில் தனக்கு எல்லாம் தெரியும் என்று நிஜமாகவே நம்ப ஆரம்பித்துவிடுகிறான். உண்மையாகவே விஷயம் தெரிந்த ஒருவனிடம் அவன் உரையாடும்போது, வெறும் ஐந்து நிமிடத்திலேயே அவன் கஷ்டப்பட்டு கட்டி உருவாக்கிய கோட்டை பொடிப்பொடியாய் உதிர்கிறது. அப்போது உளவியல்பூர்வமாக தற்கொலை செய்துக் கொள்கிறான். வாழ்க்கை குறித்த நிஜமான ‘தரிசனம்’ ஒருவேளை அப்போது அவனுக்கு கிடைக்கலாம். தான் ஒரு முட்டாள் என்பதை ஒரு முட்டாள் உணரும் தருணம்தான் அவனுக்கு கிடைக்கக்கூடிய அதிகபட்ச ‘மனவெழுச்சி’யாக இருக்கக்கூடும்.

புத்திசாலியாக நடிப்பது ரொம்ப ஈஸி. ஆனால் நாம் நிஜமான நாமாகவே இருப்பதில் இருக்கும் சவுகர்யத்துக்கு இணையாக உலகில் வேறெதுவும் இல்லை.

maintaing innocence throughout the journey is the toughest task of the life

8 அக்டோபர், 2013

அத்தை வீட்டுக்கு என்ன வழி?

பட்டாசான மாஸ் ஹீரோவின் படத்துக்கு இப்படியா டைட்டில் வைப்பார்கள்.. தெலுங்கில் வைக்கிறார்களே? இந்த வருடத் தொடக்கத்தில் மகேஷ்பாபுவுக்கு ‘சீத்தம்மா வீட்டு வாசலில் சிறுமல்லி செடி’. இப்போது பவன் கல்யாணின் முறை. ‘அத்தை வீட்டுக்கு என்ன வழி?’

விசு, டி.பி.கஜேந்திரன், வி.சேகர் மாதிரி இயக்குனர்களின் இயக்கத்தில் ரஜினி, கமல் போன்ற மாஸ் ஹீரோக்கள் நடித்திருந்தால் எப்படியிருக்கும்? சிலருக்கு குமட்டலாம். ஹீரோவின் மாஸ், சப்ஜெக்டின் க்ளாஸ் என்று டோலிவுட் இந்த ட்ரெண்டில் அடுத்தடுத்து ப்ளாக்பஸ்டர் அடித்துக் கொண்டிருக்கிறது.

கப்பார் சிங்கில் தொடங்கியது பவன் கல்யாணுக்கு வசூல் மழை. அடுத்து ‘கேமிராமேன் கங்காதோ ராம்பாபு’. ஏழெட்டு ஆண்டுகளாக ஏற்றத்தாழ்வுகளோடு மல்லுக்கட்டிக் கொண்டிருந்த பவர்ஸ்டாருக்கு ‘ஹாட்ரிக் ஹிட்’ கொடுத்தே ஆகவேண்டிய கட்டாயம். பொறுப்பை ஒட்டுமொத்தமாக இயக்குனர் த்ரிவிக்ரத்திடம் ஒப்படைத்துவிட்டார்.
த்ரிவிக்ரம் லேசுப்பட்ட ஆளில்லை. சிறந்த வசனகர்த்தாவுக்கான ஆந்திர அரசின் நந்தி விருதை ஐந்து முறை வாங்கியவர். அணு இயற்பியலில் தங்கமெடல் வாங்கியவர் என்றாலும் சினிமாத்துறையில்தான் ஈடுபட விருப்பம் கொண்டிருந்தார். ஆந்திராவின் காமெடிப் புயலான சுனிலின் கல்லூரித் தோழர் (அவருக்கும் இவருக்கும் கல்யாணம் கூட ஒரே நாளில்தான் நடந்தது). சுனில் மூலமாக டோலிவுட்டில் தொடர்புகள் ஏற்பட உதவி இயக்குனராக ஆனார். இவரது எழுத்துத் திறமையை கண்டுகொண்ட இயக்குனர் விஜயபாஸ்கர் வசனம் எழுதும் பொறுப்பை கொடுத்தார். இவர் வசனம் எழுதிய படங்கள் அடுத்தடுத்து வெற்றிபெற, இயக்குனர் வாய்ப்பு கதவைத் தட்டியது. முதல் படமான ‘நுவ்வே நுவ்வே’ மீடியம் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ஹிட். படம் பார்த்த மகேஷ்பாபுவுக்கு இவரோடு பணியாற்ற ஆசை. மகேஷ்பாபு – த்ரிவிக்ரம் காம்பினேஷனில் வந்த ‘அத்தடு’ டோலிவுட்டின் எவர்க்ரீன் மூவி. தமிழ், மலையாளம், இந்தியில் எல்லாம் டப் ஆகி ‘டப்பு’ பார்த்தது போக, போலிஷ் மொழியிலும் போலந்தில் வெளியானது. இப்படத்தின் காட்சி ஒன்று பிற்பாடு அப்படியே சுடப்பட்டு, ஹாலிவுட் படமான ‘தி இண்டர்நேஷனலில்’ வந்தது. பொதுவாக ஹாலிவுட் படங்களைதான் நம்மாட்கள் சுடுவார்கள். மாறாக த்ரிவிக்ரம் உருவாக்கிய காட்சியை ஹாலிவுட்காரர்கள் சுட்டிருக்கிறார்கள் என்றால் இவரது திறமையை உணர்ந்துக் கொள்ளலாம். டோலிவுட்டை ஹாலிவுட் ஸ்டைலுக்கு மாற்றவேண்டும் என்கிற கனவோடு உழைக்கும் மகேஷ்பாபுவுக்கு த்ரிவிக்ரத்தை பிடித்துப் போனதில் ஆச்சரியமில்லை. மகேஷ்பாபு நடித்த ’தம்ஸ் அப்’ டெலிவிஷன் கமர்சியலை இயக்கியதும் கூட இவர்தான். ராம்சரண் தேஜா மற்றும் தோனி தோன்றும் பெப்ஸி விளம்பரம், விராத்கோலி மற்றும் தமன்னாவின் செல்கான் விளம்பரம் எல்லாம் இவரது கைவண்ணம்தான்.

அடுத்து பவன் கல்யாணுக்கு ‘ஜல்சா’. ஹிட்டே இல்லாமல் ஈயடித்துக் கொண்டிருந்த பவனுக்கு பம்பர்ஹிட்டாக அமைந்த படம். போக்கிரிக்கு பிறகு அதை மிஞ்சும் வகையில் ஒரு படம் எடுக்க வேண்டுமென்று மகேஷ்பாபுவுக்கு ஆசை வந்ததும், த்ரிவிக்ரத்தைதான் அணுகினார். ‘கலேஜா’, இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக எடுக்கப்பட்ட படம் ஓபனிங்கில் பின்னி பெடல் எடுத்தாலும், மட்டமான படமென்று விமர்சிக்கப்பட்டு சீக்கிரமே பெட்டிக்குள் முடங்கியது. “கொஞ்சம் அசட்டையா இருந்தாலும் ஊத்திக்கும் போலிருக்கே?” என்று சட்டென்று ஃபார்முக்கு வந்து ‘ஜுலாயி’ என்கிற சூப்பர் டூப்பர் ஹிட்டை கொடுத்தார். ‘அத்தாரிண்டிக்கி தாரேதி’ இயக்குனராக த்ரிவிக்ரமுக்கு ஆறாவது படம்.

கப்பார் சிங்கின் ஃபீலிங்கை அப்படியே ரசிகர்களுக்கு தக்க வைக்க வேண்டும். அதே நேரத்தில் ‘சீத்தம்மா’ மாதிரியான குடும்பக்கதையிலும் பவர் ஸ்டாரை நிலைநிறுத்த வேண்டும். இம்முறை ஒவ்வொரு காட்சியை எழுதும்போதும் த்ரிவிக்ரத்தின் பேனா ஒன்றுக்கு பத்துமுறை யோசித்தது. கப்பார்சிங்கில் ரசிகர்களை சிலிர்க்கவைத்த, சிந்திக்கவைத்த, சிரிக்கவைத்த காட்சிகளுக்கு மாற்றுக்காட்சிகளை அதே உணர்வுகளோடு எழுதினார். மனசுக்குள் நெடுநாட்களாக புதைத்து வைத்திருந்த உருகவைக்கும், கண்களை குளமாக்கும் குடும்பக் கதைக்குள் கச்சிதமான இடங்களில் அதை செருகினார். அவ்வளவுதான். இப்போது தெலுங்கானாவும், சீமாந்திராவும் தங்கள் அரசியல் மாச்சரியங்களை மறந்து ஒன்றுசேர்ந்து த்ரிவிக்ரத்தை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆந்திரப் பிரிவினையை எதிர்த்து நடக்கும் போராட்டங்களால் திருப்பதி பிரம்மோற்சவத்துக்கே கூட்டமில்லை என்று ஊடகங்கள் அலறினாலும் தியேட்டர்களில் மட்டும் திருவிழாக்கோலம்.

‘அத்தாரிண்டிக்கி’ கதை ரொம்ப சிம்பிள்.

எண்பதைத் தொட்ட தாத்தா. காதல் கல்யாணம் செய்துகொண்டதால் மகளை துரத்தியடித்தவர். பின்னர் மனம் வருந்தி கடைசிக் காலத்திலாவது மகளோடு சேரவேண்டும் என்பதற்காகவே உயிரை கையில் பிடித்துக் கொண்டிருக்கிறார். பேரனின் உதவியை இதற்காக நாடுகிறார். தன்னுடைய அத்தையை எப்படி தாத்தாவோடு மீண்டும் பேரன் இணையவைக்கிறார் என்பதுதான் கதை. யூகித்திருப்பீர்களே.. அதேதான். செம சூப்பர் ஃபிகராக இருக்கும் அத்தை மகள் சமந்தாவை பவன் சைட் டிஷ்ஷாக வளைத்துப் போடுகிறார். சமந்தா பார்வைக்கு சின்னதாக இருந்தாலும் சிலுக்கென்றிருக்கிறார். சுபம்.

கதையை கேட்டால் நான்கு, ஐந்து கோடிகளில் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியிலேயே முடித்திருக்கலாமே என்றுதான் தோன்றும். ஆனால் வாங்கியிருப்பது பவன் கல்யாணின் கால்ஷீட் ஆயிற்றே. எனவே கிளாஸோடு மாஸ்ஸையும் மிக்ஸ் பண்ணி காக்டெயிலாக கலந்துக் கொடுத்து போதையாக்குகிறார்கள். “புல்லட் அரை அங்குலம்தான். அதுவே ஆறடி உசர மனுஷனை சாய்ச்சிடும். அந்த புல்லட்டே ஆறடி உசரத்துலே இருந்தா...” என்று தாத்தா (பொம்மன் இரானி) ‘இண்ட்ரோ’ கொடுக்க, பேரன் பவன் கல்யாண் ஸ்விட்சர்லாந்தில் அறிமுகமாகும் ஆக்‌ஷன் காட்சிக்கு மட்டும் இரண்டு கோடி ரூபாய் செலவாம்.
பவனுக்கு அழகான அத்தை. நதியா. அத்தைக்கு அழகான இரண்டு பெண்கள் பிரணிதா, சமந்தா. பிரணிதா ஜோடியில்லை என்றாலும் ஒரு ஜில்பான்ஸான டூயட் பாடுகிறார் பவன். தெலுங்கு சம்பிரதாயத்தின் படி சமந்தாவுடன் ஒரு டூயட், குத்து என்று கும்மாளம்தான். ‘ஆறடி புல்லட்’ ஓபனிங் சாங்கில் தொடங்கி படம் நெடுக தேவிஸ்ரீபிரசாத்தின் இசைவெள்ளம் தாறுமாறாய் ஓடுகிறது. குறிப்பாக கப்பார்சிங்கின் ஃபேபுலஸ் ஹிட்டான ‘கேவ்வூ கேக்கா’ ஐட்டம் சாங்கை, அட்டகாசமான பஜனையாக ரீமேக்கியிருக்கிறார். அதற்கு பவன் போடும் குத்தாட்டமெல்லாம் அநியாயத்துக்கு ஆடம்பரம். ஒரு கிளப் டேன்ஸில் செம ஜில்பான்ஸான ஆண்ட்டியான மும்தாஜ், பவனை பார்த்து கேட்கிறார். “நாம இதுக்கு முன்னாடி எப்பவாவது பார்த்திருக்கோமா?” தியேட்டரே ‘குஷி, குஷி’ என்று ஆர்ப்பரிக்கிறது.

இரண்டாம் பாதியில் கதையை எல்லாம் மூட்டை கட்டிவிட்டு பிரும்மானந்தத்தை வைத்து நான்கைந்து வெர்ஷனில் ‘அகலிகை’ நாடகம் நடத்துகிறார்கள். வயிற்றைப் பிடித்துக்கொண்டு முன்சீட்டில் தலையை இடித்துக்கொண்டு இடியென விழுந்து, விழுந்து சிரிக்கிறார்கள் ரசிகர்கள். படத்தின் ஒரே ஒரு ஃப்ரேம் கூட போர் அடிக்காதவகையில் பர்ஃபெக்டான செய்நேர்த்தி.

மாஸ் மகாராஜா ரவிதேஜாவின் ‘பலுபு’ புதுசாக ஒரு ட்ரெண்டை உருவாக்கியிருக்கிறது. இனிமேல் இது தமிழ், இந்தி என்று தேசியமயமாக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம். கொடூரமான இரத்த வெறியாட்டம் நடத்திக்கொண்டிருந்த இந்திய ஆக்‌ஷன் சினிமா இனி க்ளைமேக்ஸில் காமெடிப் பந்துகளை உருட்டியே ஆகவேண்டும் என்பதுதான் அந்த ட்ரெண்ட். ‘அத்தாரிக்கி’ அதை அப்படியே கேட்ச் செய்துக்கொண்டது. பவர்ஸ்டாரை அடிக்க இறுதிக்காட்சியில் ஒரு ஊரே கிளம்பி வருகிறது. அவர் ஒரே ஒருவனைதான் போட்டு நையப்புடைக்கிறார். அவன் வாங்கும் அடியைக் கண்டு, அடிக்க வந்தவர்கள் ‘டர்’ராகி அப்படி, அப்படியே செட்டில் ஆகிறார்கள். பீட்டர்ஹெய்ன் அமைத்திருக்கும் இந்த சண்டைக்காட்சி ஆக்‌ஷன் காட்சிகளின் எண்டெர்டெயின்மெண்ட் லெவலை பலபடிகள் முன்னேற்றியிருக்கிறது.

கடைசியில் ஒரே ஒரு ட்விஸ்ட் ஒட்டுமொத்தப் படத்தையும் அஸ்திவாரமாக தாங்கி நிற்கிறது. ‘அத்தாரிண்டிக்கி’ நூறுகோடி எல்லையை அனாயசமாக தாண்ட, இந்த ‘ட்விஸ்ட்’தான் அடிப்படையான காரணம். த்ரிவிக்ரம் எவ்வளவு சிறப்பான சினிமா எழுத்தாளர் என்பதற்கும் இதுதான் சிறந்த உதாரணம்.

அத்தாரிண்டிக்கி தாரேதி - அன்லிமிட்டெட் மீல்ஸ்

5 அக்டோபர், 2013

பசைவாளி தூக்கும் படைப்பாளி!

‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ வெளியான அன்று சாந்தி தியேட்டரில் மாலைக்காட்சியை நண்பர்களோடு பார்த்தோம். திருப்தி தருமளவுக்கு ஓரளவு சுமாரான கூட்டம்தான். படம் முடிந்ததும் டைட்டில் ஓட தொடங்குகிறது. அரங்கில் அப்படியொரு நிசப்தம். அவசரமாக 23-சி பஸ்ஸை பிடிக்க வேண்டியவர்கள் எல்லாம் மவுனமாக அதே நேரம் நிதானமாக கிளம்புகிறார்கள். ஆனால் ஒரு ஐம்பது பேர் அப்படியே திரையைப் பார்த்துக்கொண்டு சிலையாக நிற்கிறார்கள்.

நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களின் பெயர்கள் மெதுவாக ஓடுகிறது. இரண்டரை மூன்று நிமிடம் கழித்து ‘இணை இயக்கம் : புவனேஷ்’, ‘எழுத்து இயக்கம் : மிஷ்கின்’ என்று திரையில் ஒளிர்ந்ததும் ஐம்பது பேரும் கைத்தட்டி, ஆரவாரம் செய்கிறார்கள். படம் முடிந்ததுமே அடித்துப் பிடித்து ஓடும் தமிழ் பாரம்பரிய பழக்க வழக்கத்தினை கைவிட்டு, ஓர் இயக்குனரின் பெயரை பார்ப்பதற்காக கூட்டம் அப்படியே மூன்று நிமிடங்களுக்கு நின்றுகொண்டிருக்கும் காட்சியை என் வாழ்நாளில் இப்போதுதான் பார்க்கிறேன்.

பொதுவாக கமல்ஹாசன் ஒரு கறாரான விமர்சகர். அவ்வளவு சுலபமாக ஒரு இயக்குனரையோ, படத்தையோ பாராட்டிவிட மாட்டார். அப்படிப்பட்டவரே மனந்திறந்து ‘ஓநாயும், ஆட்டுக்குட்டியும்’ படத்தை பாராட்டியதோடு, மிஷ்கினின் இயக்கத்தில் ஒரு படமாவது நடித்துவிட வேண்டுமென்று ஆசைப்படுவதாக சொல்கிறார். மகத்தான நடிகனான கமலை இயக்க முடியுமாவென்று இந்தியாவின் தலைசிறந்த இயக்குனர்கள் எல்லாம் கனவு கண்டுகொண்டிருக்கும்போது, அந்த நடிகரே ஓர் இயக்குனரின் இயக்கத்தில் நடிக்க விரும்புகிறேன் என்று சொல்லுவது எவ்வளவு சிறப்பான விஷயம்?

ஹீரோக்களின் ஓன் பிட்ச்சான தமிழ் சினிமாவில் ஸ்ரீதர், பாலச்சந்தர், பாரதிராஜா, பாக்யராஜ், மணிரத்னம் போன்றவர்கள் இயக்கத்துக்கான மரியாதையை ஏற்படுத்தினார்கள். நம் காலத்தில் மிஷ்கின் அந்தப் பணியை தொடர்கிறார்.

மிஷ்கினின் சித்திரம் பேசுதடி எனக்கு பிடிக்கவில்லை. அஞ்சாதே அவ்வளவாக அசத்தவில்லை. ஏனெனில் அவரது திரைமொழி தமிழுக்கு புதிது. அந்த மொழியை புரிந்துக்கொள்ள இரண்டு படங்கள் தேவைப்பட்டது. ‘யுத்தம் செய்’ வந்தபோது அசந்துப் போனேன். ‘நந்தலாலா’ பிரமிப்பில் ஆழ்த்தியது. ‘முகமூடி’ அவ்வளவு மோசமான படமில்லை என்பது என் அபிப்ராயம். ஒரு சூப்பர் ஹீரோவை தமிழுக்கு உருவாக்கும் கனவு இன்னமும் முழுமை பெறவில்லை (யதேச்சையாக துரைசிங்கம் அமைந்திருக்கிறார்). முகமூடி மூலமாக அந்த டிரெண்டை முயற்சித்தார் மிஷ்கின்.

மிஷ்கினுக்கு காமிக்ஸ் வாசிப்பு உண்டு. அதன் தாக்கம்தான் அவர் வைக்கும் ஃப்ரேம்கள். கொரிய/ஜப்பானிய படங்களில் சாயல் மிஷ்கினின் படங்களில் இருக்கிறது என்பது தொடர்ச்சியாக அவர் மீது விமர்சனமாகவே வைக்கப்படுகிறது. கொரிய/ஜப்பானிய இயக்குனர்கள் முழுக்கவே காமிக்ஸ் தாக்கம் கொண்டவர்கள். தமிழில் அரிதாக மிஸ்கின், சிம்புதேவன், பிரதாப் போத்தன், கமல்ஹாசன் என்று விரல் விட்டு எண்ணக்கூடிய இயக்குனர்களுக்கே காமிக்ஸ் அறிமுகம் இருப்பதால், இவர்களது படங்களின் காட்சிகள் மட்டும் கொஞ்சம் வித்தியாசமாக நம்முடைய வழக்கத்தை மீறியதாக இருக்கிறது. மிஷ்கினுக்கு காமிக்ஸின் பாதிப்பு மற்றவர்களை விட கொஞ்சம் அதிகம்.

மற்ற இயக்குனர்களின் படங்களில் ஒரு காட்சி இப்படி ஆரம்பிக்கும். தெருவை ஒரு லாங்ஷாட் காட்டுவார்கள். வீட்டை ஒரு குளோசப் அடிப்பார்கள். வரவேற்பரையில் கணவனும், மனைவி அமர்ந்திருப்பதை மிட்ஷாட்டில் காட்டி குளோசப்புக்கு போவார்கள். மிஷ்கினின் படத்தில் நேரடியாகவே வரவேற்பறைதான். பொது இடங்களில் சர்வைலென்ஸ் கேமிராக்கள் நம்மை எந்த ஆங்கிளில் பார்க்கிறதோ, அதே ஆங்கிளைதான் மிஷ்கின் படங்களில் பெரும்பாலான காட்சிகளில் காணமுடிகிறது. இது காமிக்ஸ் வாசிப்பு தரக்கூடிய தாக்கம். ஏ/4 அளவுள்ள தாளில், ஒரு பக்கத்துக்கு ஆறு அல்லது எட்டு கட்டங்களில் கதையை நகர்த்திச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் காமிக்ஸ் ஓவியர்கள், இப்படித்தான் ஆங்கிள் வைப்பார்கள்.

ஓநாயும், ஆட்டுக்குட்டியும் என்னென்ன சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறது என்பதை இணைய விமர்சனங்களிலும் (99% பாஸிட்டிவ் ரிவ்யூ என்பதே சாதனைதான்), ஊடகங்களின் விமர்சனங்களிலும் நாம் அறிந்துகொள்ள முடிகிறது.

ஒரு இண்டெலெக்ச்சுவல் இயக்குனருக்கு எப்போதுமே தன்னுடைய ரசிகன் மீது நம்பிக்கை இருக்காது. ‘அவனுக்கு புரியுமோ, புரியாதோ தெரியலை’ என்று நினைத்துக்கொண்டு அபாரமான காட்சிகளை எல்லாம் மீண்டும் வசனத்தில் டிரான்ஸ்லேட் செய்து, ஸ்ஃபூன் ஃபீடிங் செய்வார்கள். குறிப்பாக கமலஹாசன் இதில் கில்லாடி. முப்பது வருடங்களாக எதையாவது முயற்சித்துக் கொண்டிருந்தாலும், இன்னமும் அவருக்கு ரசிகர்களின் ரசனைத்தரத்தின் மீது நம்பிக்கையே வரவில்லை.

மிஷ்கின் ரசிகர்களின் தலையில் மொத்த பாரத்தையும் போட்டு விடுகிறார். படம் எடுக்கற நமக்கே புரியுது, ரசிகனுக்கு புரியாதா என்று சுலபமாக இப்பிரச்சினையை கடந்து செல்கிறார். குறிப்பாக தமிழ் சினிமாவின் ஃப்ளாஷ்பேக் கதை சொல்லும் மரபை ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ அட்டகாசமாக அடித்து உடைத்திருக்கிறது.

கொசுவர்த்தி சுருளை சுற்றி ஃப்ளாஷ்பேக் சொன்னது ஒரு காலம். பின்னர் டைட்டிலுக்கு முன்பாக மாண்டேஜ் காட்சிகளாக ஹீரோவின் சின்ன வயசு கதையை சொல்வார்கள், சைக்கிள் வீல் சுற்றிக் கொண்டிருக்கும்போதே ஹீரோ பெரியவனாகி விடுவார். ஏதோ ஒரு பாத்திரம், இன்னொரு பாத்திரத்திடம், இன்னொரு பாத்திரத்தின் கதையை ஃப்ளாஷ்பேக்காக பக்கத்தில் நின்று பார்த்தது மாதிரி சொல்லும். கவுதம் மேனனின் ‘காக்க காக்க’ சிங்குலர் நரேஷனில் ஃப்ளாஷ்பேக் சொன்னது. ஓநாய் சொல்லும் ஃப்ளாஷ்பேக் ரொம்பப் புதுசு. ஃப்ளாஷ்பேக்கில் நடந்ததை காட்டாமல், அதே நேரம் கதை கேட்கும் குழந்தைக்கும் புரியும் வண்ணம் (படம் பார்க்கும் ரசிகனுக்கு புரியாதா?) மூன்று, மூன்றரை நிமிடத்தில் கிட்டத்தட்ட பாதிப்படத்துக்கான நேரத்தை எடுத்துக்கொள்ள வேண்டிய காட்சிகளை சொல்கிறார்.
மாற்றுப்படமென்றெல்லாம் பம்மாத்து காட்டாமல் க்ளீன் த்ரில்லர் எண்டெர்டெயினராகதான் மகத்தான ஒரு படைப்பை வழங்கியிருக்கிறார் மிஷ்கின். பார்த்த எல்லோருமே நல்ல படம் என்று பாராட்டினாலும், போதுமான திரையரங்குகளில் வெளியாகவில்லை.. வெளியான திரையரங்கங்களிலும் அரங்கு நிறைந்து ஓடவில்லையென்று நிலைமை. பிட்டு படமெடுத்தவனெல்லாம் கூட படைப்பாளி என்று மார்தட்டிக் கொள்கிற சூழலில், நிஜமாகவே நல்ல படைப்பைக் கொடுத்த படைப்பாளியான மிஷ்கின், தன் படைப்புக்காக ஊர் ஊராகப் போய் பசைவாளி ஏந்தி போஸ்டர் ஒட்டிக் கொண்டிருக்கிறார். போஸ்டர் ஒட்டுவதால் மிஷ்கின் கேவலமாகி விடவில்லை. ஆனால் ஒரு நல்ல படைப்பாளியை போஸ்டர் ஒட்டவைத்த நம் சமூகம்தான் கேவலப்பட்டு நிற்கிறது. மிஷ்கின் போஸ்டர் ஒட்டுவது ஸ்டண்ட் என்றெல்லாம் கூட விமர்சிக்கிறார்கள். இருந்துவிட்டுப் போகட்டுமே? அதுவும் ஓர் கவன ஈர்ப்புதான். பிளாட்ஃபாரக் கடையில் கூவிக்கூவி வியாபாரம் செய்யும் வியாபாரியின் நிலைமைக்கு ஒரு கிரியேட்டரை தள்ளிவிட்ட நாம்தான் வேதனைப்பட வேண்டும்.

பாவத்துக்கு பிராயச்சித்தமாக சினிமா ரசிகர்கள் சிலர் இணைந்து, சென்னையில் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்துக்கு ஒரு கலந்துரையாடல் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இது மிஷ்கினுக்கு பாராட்டு விழாவோ அல்லது படத்துக்கு வெற்றிவிழா(!)வோ அல்ல. பேசப்பட வேண்டிய ஒரு படத்தைப் பற்றி பேசுவதற்கான ஏற்பாடு.
படம் பார்த்திருக்க வேண்டுமென்று கூட அவசியமில்லை. நிகழ்வில் என்ன பேசுகிறார்கள் என்பதை பார்த்துவிட்டுக் கூட படத்தைப் பார்த்துக் கொள்ளலாம். அனைவரும் வரலாம்.

3 அக்டோபர், 2013

எங்கே போகிறது தமிழ் சினிமா?

அண்மைக்காலமாக வெளிவருகிற திரைப்படங்களில் கதாநாயகனாகத் தோன்றும் இளைஞன் எப்படிச் சித்தரிக்கப்படுகிறான்?

பொழுது விடிந்ததுமே குடிப்பவனாக (சூது கவ்வும்)

கும்பலாக உட்கார்ந்து குடிப்பவனாக (மூடர் கூடம்)

வேலை வெட்டி இல்லாமல், அதைத் தேடும் முயற்சி கூட இல்லாமல், பெண்களைத் துரத்திக்கொண்டு அலைபவனாக (கேடி ரங்கா கில்லாடி பில்லா, வருத்தப்படாத வாலிபர் சங்கம்)

சாஃப்ட்வேர் வேலையை விட்டுவிட்டு ஆள் கடத்துபவனாக (மங்காத்தா, ‘சூது கவ்வும்)

தன் தீய வழக்கங்களைத் திருத்த முயலும் பெற்றோர்களை ஒருமையில் பேசி அவமதிப்பவனாக (தீயா வேலை செய்யணும் குமாரு)

இப்படித்தான் நம் தமிழக இளைஞர்கள் குடிகாரர்களாக, பொறுக்கிகளாக, பொறுப்பில்லாதவர்களாக, பெண்கள் பின்னால் அலைபவர்களாக, அதற்காக எந்த அவமானத்தையும் பொறுத்துக் கொள்ளும் சோரணையற்றவர்களாக இருக்கிறார்களா? உங்கள் நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்?

பாத்திரங்கள் மட்டுமல்ல, அண்மைக்கால சினிமாக்களின் கதைக் கருக்கள் என்ன?

விநாயகர் சதுர்த்தி விடுமுறைக்கு முன்பாக திரைக்கு வந்தது, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’. தமிழகத்தின் சமகால தீவிரப் பிரச்சினை ஒன்றை நகைச்சுவை என்கிற பெயரில் நீர்த்துச்செய்யும் வேலையை, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ செய்திருக்கிறது.

தர்மபுரியில் தொடங்கி மரக்காணம் வரை என்னென்ன நடந்தன என்பது நாடறிந்த செய்தி. கௌரவக் கொலைகள் எனும் காட்டுமிராண்டிக் கலாச்சாரம் சமீபமாக தமிழகத்தில் அதிகரித்து வருகிறது என்று தினமும் செய்தித்தாள் வாசித்து அச்சப்பட்டுக் கொண்டிருக்கிறோம். கவலைக்குரிய இந்த விஷயத்தை பகடி செய்து பார்க்கிறது படம்.

வருத்தமில்லா வாலிபர் சங்கத்தின் ஹீரோயின் அந்த ஊர் முக்கியஸ்தரான சத்யராஜின் பெண். பள்ளி மாணவி. வேலைவெட்டியில்லாமல் சுற்றும் ஹீரோவுக்கு ஆரம்பத்தில் ஹீரோயின் மீது காதல் எதுவும் இல்லை. ஹீரோயினின் டீச்சர் மீதுதான் அவருக்கு காதல். அந்த டீச்சருக்கு கல்யாணம் நிச்சயமாகி விடுவதாலும், ஒரு காட்சியில் ஹீரோயினை புடவை கட்டி பார்த்துவிடுவதாலும் மட்டுமே, வேறு வழியின்றி ஹீரோவுக்கு அவர் மீது காதல் பிறக்கிறது. காதல்வசப்பட்ட ஹீரோ, ஹீரோயினை வசப்படுத்த ஒரு காட்சியில் சினிமா ஹீரோ பாணியில் உடையணிந்து, கூலிங் கிளாஸ் அணிந்து அசத்துகிறார். பள்ளிப்படிப்பைக் கூட முடிக்காத ஹீரோயினும் (முன்பு மாப்பிள்ளை பார்த்தபோது படிக்க வேண்டும் என்று சொல்லி கல்யாணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது) ஹீரோவை காதலிப்பதை உணர்ந்த அவரது அப்பா, வேறொரு இடத்தில் கல்யாணம் நிச்சயிக்கிறார். ஹீரோ, ஹீரோயினை அழைத்துக்கொண்டு ஓடிப்போகிறார். தேடிப்போய் தன் பெண்ணை ஹீரோயினியின் அப்பா சுட்டுக் கொன்றுவிட்டார் என்று ஊரில் பேச்சு.

படத்தின் ஆரம்பக் காட்சிகளிலேயே கௌரவத்துக்காக தன் பெண்ணைக் கொலை செய்த மானஸ்தர் என்பதாக சத்யராஜின் பாத்திரம் அறிமுகப்படுத்தப் படுகிறது. ஊரிலும் அப்படியொரு பேச்சு இருப்பதை அவர் கௌரவமாகக் கருதுகிறார்.

படத்தில் சத்யராஜ் ஏற்றுள்ள பாத்திரம் என்ன ஜாதியாக சுட்டப்படுகிறார் என்பதை யூகிப்பது அவ்வளவு கடினமல்ல. பெரிய மீசை. நெற்றியில் பொட்டு. திண்டுக்கல் - பழனி வட்டாரக் கிராமம் என்றெல்லாம் நிறைய க்ளூ இருக்கிறது. ஹீரோவின் ஜாதி என்னவாக இருக்கும் என்பதற்கும் க்ளு இருக்கிறது. அவரது வீடு ஊருக்கு ஒதுக்குப்புறமாக - குடிசையாக இருக்கிறது. நெற்றியில் பட்டை, மீசை மாதிரியான அடையாளங்கள் இல்லை.

இப்படத்தில் காட்டப்படுவதுதான் தமிழ்நாடா? காதல் திருமணங்கள் குறித்து பிரச்சினை எழுப்பும் சில அரசியல் கட்சி சொல்லிவரும் குற்றச் சாட்டுக்களில் சில...

பணக்கார / பெரிய இடத்துப் பெண்களாகப் பார்த்துக் காதலிக்கிறார்கள். பிற்பாடு,பஞ்சாயத்து வந்தால் பணம் பறிக்க வசதியாக இருக்கும் என்பதற்காக. இது நிஜமான காதல் அல்ல. நாடகக் காதல்.

ஜீன்ஸ் பேண்ட்டும், கூலிங் கிளாஸும் அணிந்து அப்பாவி கிராமத்து இளம்பெண்களை ஏமாற்றுகிறார்கள்.

மைனர் பெண்களைக் காதலித்து கர்ப்பமாக்குகிறார்கள்.

இப்போது மேலே சொல்லப்பட்ட படத்தின் பின்னணியோடு இதை ஒப்பிட்டுப் பாருங்கள் புரியும்.

தர்மபுரி காதல் கலவரம் சமீபத்தில் நிகழ்ந்து இன்னமும் ரத்தக்கறை கூட காயாத நிலையில் காதலையும், கௌரவக் கொலைகளையும் பகடியாகப் பார்த்திருக்கிறது, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’.
வேண்டுமென்றேதான் பகடி செய்தேன். காதலுக்கு ஜாதி/வர்க்கத்தால் எதிர்ப்பு, அதன் காரணமாக கௌரவக் கொலை என்பதெல்லாம் படுமோசமான முட்டாள்தனம். அதைப் பகடி செய்து படமெடுத்திருப்பதும், அத்தீமையை எதிர்ப்பதன் ஒரு வடிவம்தான்" என்கிறார், வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் இயக்குநரான பொன்ராம்.

‘சூது கவ்வும்’ படத்தில் ஓர் அரசியல்வாதி நேர்மையாக இருப்பது தவறு என்பதைப் போல ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது. மாட்டிக் கொள்ளாமல் ஆள் கடத்துவது எப்படி என்று இளைஞர்களுக்கு வகுப்பெடுக்கப்படுகிறது.

‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’வில் சித்தரிக்கப்பட்ட இளைஞர்களைப் பாருங்கள். பள்ளிப் பெண்ணைக் கூட துரத்தித் துரத்தி, ‘ஈவ் டீஸிங்’ செய்யும் இளைஞராக பவர் ஸ்டார் சீனிவாசன் நடித்திருந்தார். வேலை வெட்டி இல்லாத மூன்று இளைஞர்கள் ஒரு பெண்ணை ஈர்ப்பதற்காக, ‘தில்லாலங்கடி’ வேலைகள் செய்கிறார்கள். பல் விளக்குவதைப்போல இயல்பாக தண்ணி அடிக்கிறார்கள். கலாட்டா செய்கிறார்கள். தொடர்ச்சியாக, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, நேற்றைய, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ என்று இந்த போதை இளைஞர்கள்தான் இன்று ஹீரோக்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். இந்தப் போக்கு தொடர்ந்து நீடித்தால் இப்படி போதை இளைஞனாக, பொறுக்கியாக இருப்பதுதான் ஹீரோவின் அடையாளம் என இளைஞர்கள் மனதில் பதிந்து போகாதா?
எல்லா ஊரிலும் இருப்பதைப் போல இளைஞர்களில் ரவுடிகளும், பொறுக்கிகளும் நம்மூரிலும் இருக்கிறார்கள். ஆனால் அதுவே பெரும்பான்மை குணம் கிடையாது. பெரும்பான்மையை பிரதிநிதித்துவப்படுத்தி தமிழில் மிகக் குறைந்த படங்களே வருகின்றன. கற்பனை வறட்சி, புதியவற்றை முயற்சிக்கத் தயங்கும் வணிக அழுத்தம் காரணமாக மசாலாப் படங்களில் மட்டுமல்ல, கலைப்படங்களிலும் கூட மிகையாக சித்தரிக்கப்படும் பாத்திரங்களும், காட்சிகளும் இடம்பெறுகின்றன" என்கிறார், திரையார்வலரும், கவிஞருமான சரவண கார்த்திகேயன்.

மது அருந்துவது, புகை பிடிப்பது, சைட் அடிப்பது, அடாவடியாகக் காதலிப்பது, துரத்தித் துரத்தி யாரையோ அடிப்பது, உதைப்பது, வெட்டுவது... இப்படியாகத்தான் சமீபகாலமாக தமிழ் சினிமாவின் இளைஞன் சித்தரிக்கப்படுகிறான் அல்லது அரசியல்வாதியாக ஆசைப்படுபவன் வாக்காளர் பட்டியலில் தன் பெயரைப் பதிந்து கொள்ள வேண்டும் என்ற பொது அறிவு கூட இல்லாத படுமுட்டாளாக இருக்கிறான்.

சினிமாவில் சித்தரிக்கப்படும் இதே இளைஞன்தான் சமூகத்திலும் இருக்கிறானா? அநேகமாக அரசியல் கட்சிகள் கைவிட்டுவிட்ட நேரத்தில் ஈழப் பிரச்சினைகாகத் தெருவில் இறங்கித் தமிழக மாணவர்கள் போராடியது நெடுங்காலத்திற்கு முன் அல்ல. ஊழல் குறித்து அன்னா ஹசாரேவின் அழைப்பைத் தொடர்ந்து எழுந்த அலையில் இளைஞர்களின் பங்கு கணிசமானது. பாலியல் வன்முறைகளை எதிர்த்து அவர்கள் தொடர்ந்து குரலெழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். குடும்பப் பொறுப்புக்களைச் சுமந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத் தங்கள் கனவுகளைக் கைவிட்டு வேலைக்குப் போனவர்கள் இருக்கிறார்கள். உடன் பிறந்த சகோதரிகளது திருமணத்திற்காக கூடுதல் வேலைகள் செய்கிறவர்கள் இருக்கிறார்கள்.கடன் வாங்கியாவது படித்து முன்னேற வேண்டும் என்று வங்கியில் கடன் வாங்கிப் படிப்பவர்களில் இந்தியாவிலேயே தமிழ் நாட்டு மாணவர்கள்தான் முதலிடம். யதார்த்தம் இப்படி இருக்க... டாஸ்மாக் பாரில் மது போதையில் முடங்கிப் போனவனாக இளைஞர்களைச் சித்தரிப்பது ஏன்? இதற்குப் பின்னுள்ள நுண் அரசியல் என்ன?
இந்தப் போக்குக்கு படைப்பாளிகளை மட்டும் குறை சொல்லாதீர்கள்" என்கிறார் இயக்குநர் ராம். ‘கற்றது தமிழ்’, ‘தங்க மீன்கள் என்று வித்தியாசமான கதைகளைச் சொல்ல முற்பட்ட இவர் கூட தமிழ் சினிமாவின் இந்த லேட்டஸ்ட் டிரெண்ட்டை நியாயப்படுத்திதான் பேசுகிறார்.

அரசு டாஸ்மாக்கை நடத்துகிறது எனும்போது, மது அருந்துவது சட்டப்பூர்வமாக சரி என்கிற மனநிலை நம் இளைஞனுக்கு ஏற்பட்டு விட்டது. சினிமா மட்டும் மாறவில்லை. டாஸ்மாக் கலாச்சாரத்தால் தமிழ் சமூகத்தின், ‘லைஃப் ஸ்டைல்’ மாறியிருக்கிறது. இதைக் கவனத்தில் கொண்டே தமிழ் சினிமா இயக்குநர்கள் காட்சிகளை அமைக்கிறார்கள். அத்துடன், தான் எடுக்கும் சினிமா, தயாரிப்பாளருக்கு வணிகரீதியான வலுவையும் தரவேண்டும் என்றே ஒவ்வொரு இயக்குநருக்கும் நிர்ப்பந்தம் இருக்கிறது" என்கிறார் ராம்.

திரைப்படத்தின் உள்ளடக்கத்தை நெறிப்படுத்த வேண்டிய பொறுப்பு தணிக்கைக் குழுவிற்கு உண்டு. ஆனால் சில படங்களைப் பார்க்கும்போது தணிக்கைக் குழு என்ற ஒன்று இருக்கிறதா என்பதே சந்தேகமாக இருக்கிறது. தீய பழக்கங்களைப் பெருமையாகச் சொல்லும் படங்களுக்கும், ஆபாசமான இரட்டை அர்த்தப் பொருள் பதிந்த வசனங்கள் நிறைந்த படங்களுக்கும் ‘யூ’சான்றிதழ் வழங்கப்படுகிறது, சமீபத்தில் திரைக்கு வந்த, ‘ஆர்யா சூர்யா’ அப்படிப்பட்ட படம்தான்.
இது திரைப்படத்தின் வீழ்ச்சி மட்டுமல்ல, சமுதாயத்தின் வீழ்ச்சி. வலிமைமிக்க ஊடகமான சினிமாவை இன்றைக்கு எங்கே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறோம்? கதாநாயகன் அணியும் கோட், கையில் கட்டியிருக்கும் வாட்ச், முகத்தில் அணிந்திருக்கும் கண்ணாடி மாதிரி கதாநாயகியையும், நாயகனின் விளையாட்டு பொம்மையாக சித்தரிக்கிறார்கள். எப்படியெல்லாம் இருக்கக் கூடாதோ, அந்த நிலைக்கு இந்த சினிமா ஊடகம் வந்திருக்கிறதே... இந்திய சினிமா குறிப்பாக தமிழ் சினிமா என்கிற வருத்தமும் கோபமும் என்னைப்போல பலருக்கும் உண்டு" என்கிறார் வழக்கறிஞர் அருள்மொழி.

ஆனால் இந்த அறிவுஜீவிகளின் கோபம் கையாலாகாத மலட்டுக் கோபம். பெரியார், ராஜாஜி, காந்தி போன்றவர்கள் வெளிப்படையாக சினிமாவை தீமை என விமர்சித்துப் பேசியதுண்டு. எம்.ஜி. ஆர். தன் படங்களில் புகை பிடிப்பது போன்ற காட்சிகளிலோ, மது அருந்துவது போன்ற காட்சிகளிலோ நடித்தது இல்லை. ஆனால் இன்றைய அரசியல்வாதிகளோ, அறிவுஜீவிகளோ ஏன் ஊடகங்களோ கூட இந்தச் சீரழிவைக் கண்டிப்பதில்லை. குறைந்தபட்சம் ஒரு விவாதத்தைக்கூட முன்னெடுப்பதில்லை. இவர்களில் பலர் சினிமாவால் ஆதாயம் பெறுகிறார்கள் என்பது கூட காரணமாக இருக்கலாம்.

அதனால் மக்கள், குறிப்பாக படித்த இளைஞர்கள், இந்தப் படங்கள் நம்மை இழிவுபடுத்துகின்றன என்பதைக்கூட உணர்ந்துகொள்ள இயலாதவர்களாக இந்தப் படங்களை விழுந்தடித்துக் கொண்டு போய்ப் பார்க்கிறார்கள்.சோஷியல் நெட்ஒர்க் புரட்சியாளர்கள், ‘நல்லாயிருக்கு. நாலு வாட்டி பார்க்கலாம்’ என்று ஃபேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் ஸ்டேட்டஸ் போடுகிறார்கள். இப்பிரச்சினைகளை இணையங்களில் விவாதிக்கும்போது தீக்குளிக்குமளவுக்கு தீவிரவமாக எழுதியவர்கள் இவர்கள். இளவசரனின் காதலுக்காக தொண்டைத் தண்ணி வறண்டு போகுமளவுக்கு டீக்கடைகளிலும், பஸ்ஸிலும், ரயிலிலும் உரத்துப் பேசியவர்கள், இன்று அச்சூழலை பகடி செய்து வந்திருக்கும் படைப்பை, ‘சூப்பர்’ என்று நீட்டும் மைக் முன்பாக வாய்கொள்ளாத சிரிப்போடு சொல்லிக்கொண்டே செல்கிறார்கள்.

தெரியாமல்தான் கேட்கிறேன். தமிழன் என்கிற மண்ணாந்தைக்கு சொரணை என்று ஒன்று நிஜமாகவே இருக்கிறதா?

(நன்றி : புதிய தலைமுறை)