29 மே, 2013

எழுத்து புரம்

அன்புள்ள யுகி,

தற்போது சமூகத்தில் எழுத்தாளனின் இடமென்ன. எழுத்தாளனை சாதாமக்கள் இழிவுபடுத்தும் நிலை இருப்பதாக இணையத்தில் எழுத்தாளர்கள் குற்றம் சாட்டுகிறார்களே. சாதா தோசைக்கும், மசாலா தோசைக்கும் இந்த சாதாமக்களுக்கு வித்தியாசம் தெரியாதா. உங்களுடைய நேர் அல்லது எதிர்வினை என்ன?

அன்புடன்
சரவணர்
அன்புள்ள சரவணர்,

1. இணையத்தில் நான் ஏதேனும் கில்மா படங்களை போட்டு ஒப்பேற்றி நூற்றி சொச்சம் லைக்குகளையும், முப்பது நாப்பது கமெண்டுகளையும் வாங்குவதைத் தவிர்த்து வேறெதுவும் செய்வதில்லை. அதற்கான நேரமும் எனக்கு இல்லை. தலா ஒரு ஆபாசத் தொடரும், ஆபாச நாவலும் எழுதிவிட்டதாலேயே என்னை எழுத்தாளன் என்று இந்த சமூகம் நம்புகிறது. மற்றவர்கள் அரசுப் பேருந்துகளோடும், டிவிஎஸ் எக்ஸெல்லோடும், சைக்கிளோடும் மாரடித்துக் கொண்டிருக்கையில் நான் ஒன் பிஃப்டி சிசி பைக்கில் உல்லாசமாக உலாவருகிறேன். என்னுடைய அலுவலகத்தில் ஏசி இருக்கிறது. எனக்கு தனி கேபின் அளித்திருக்கிறார்கள். சன்னலை திறந்தால் மாமரத்தில் காய்கள் காய்த்துத் தொங்குகின்றன. அணில்கள் ஓடி விளையாடுகின்றன. பேருந்து நிறுத்தத்தில் சுடிதார் அணிந்த பெண்கள் நிற்கிறார்கள். டிராஃபிக்கில் வாகனங்கள் சிக்னலுக்காக காத்திருக்கின்றன. பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடுகிறார்கள். சினிமா தியேட்டரில் படம் ஓட்டுகிறார்கள். என்னுடைய வாழ்க்கை இன்பங்களால் ஆனது. காலையில் இட்லி சாப்பிட்டுவிட்டு ஜீரணம் ஆகாமல் ‘ஜெலுசில்’ வாங்க மருந்துக்கடைக்கு போகும் வாழ்க்கை அல்ல.

2. எழுத்தாளன் என்பதால் எனக்கு எல்லோரும் தரும் மரியாதையை மற்ற எழுத்தாளர்களுக்கும் தருகிறார்கள் என்று பொதுமைப்படுத்த விரும்பவில்லை. கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் ஜெயித்ததுமே அங்கிருக்கும் எழுத்தாளர்களை போய் முதலில் சந்தித்தார் சித்தராமையா. ஆனால் இங்கோ ஜெயலலிதா ஆளுநரை போய்தான் பார்த்தார். நீங்களே கூட சிறுவயதில் சரவணனாக இருந்தீர்கள். வளர்ந்ததும் சரவணர் ஆகிவிட்டீர்கள். ஆனால் எழுத்தாளனோ பிறந்ததில் இருந்தே எழுத்தாளனாகதான் இருக்கிறான். அவனை எழுத்தாளர் என்று சொல்வதிலோ, எழுதுவதிலோ கூட இச்சமூகத்துக்கு தயக்கம் இருக்கிறது. புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், மாலன், பாலகுமாரன், மனுஷ்யபுத்திரன், நாஞ்சில்நாடன், ஜெயமோகன், விஜயமகேந்திரன் என்று எழுத்தாளர்களை ‘ன்’ விகுதியிலேயே பதிப்பாளர்கள் பதிப்பிக்கிறார்கள். வாசகர்கள் வாசிக்கிறார்கள். ‘ர்’ போட்டால் குறைந்தாபோய் விடுவார்கள். ஆனால் ஐரோப்பாவில் பாருங்கள். டால்ஸ்டாய், தாஸ்தாயேவ்ஸ்கி, சார்த்தர், சாக்ரடிஸ், காரல்மார்க்ஸ் என்று மரியாதையோடு விளிக்கிறார்கள். அங்கேயெல்லாம் ‘ன்’ விகுதியில் ஒரு எழுத்தாளனைகூட நீங்கள் பார்த்திருக்க முடியாது. இந்த அற்பத்தனத்தை, அராஜகத்தை எதிர்க்காவிட்டால் நான் எழுத்தாளனே அல்ல.

3. இரக்கமற்ற இந்த இழிநிலையை புறக்கணிப்பதோடு எதிர்க்கவும் செய்கிறேன். இணையத்தில் கொட்டப்படுவதெல்லாம் குப்பை என்பதாலேயே என்னுடைய குப்பையையும் அங்கேதான் கொட்டவேண்டியிருக்கிறது. இதை நீங்கள் சமரசம் என்று பார்க்கக்கூடாது. நிர்ப்பந்தம் என்றும் பார்க்கலாம். வேறு வழியில்லை என்றும் நினைக்கலாம். எனக்கும் மின்னஞ்சலில் வாசகர் கடிதங்கள் வரவேண்டாமா. என்னுடைய ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ்களுக்கும் ‘லைக்’ ‘கமெண்ட்’ வேண்டாமா. நான் எழுத்தாளன் என்பதாலேயே வெகுசாதாரணர்களுக்கு கிடைக்கும் இச்சலுகைகளை இழக்க வேண்டுமா?

4. பாண்டிச்சேரி பெரியவர் பற்றி நிறையபேர் பேசுவதையும், எழுதுவதையும் இணையத்தில் காண்கிறேன். இதையெல்லாம் காண எனக்கு நேரமில்லை என்றாலும் கூட காண்கிறேன். பாண்டிச்சேரி மதுவுக்கு பெயர் பெற்றது. அவ்வப்போது நானும் அங்கு சென்று மது அருந்துவதுண்டு. எனக்கு அங்கே கிடைக்கும் மதுவகையும், சாதாரணரான பாண்டிச்சேரி பெரியவருக்கு கிடைக்கக்கூடிய மதுவகையும் ஒரே வகை என்பதை அறிவுலகம் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். குறைந்தபட்சம் சைட் டிஷ்ஷிலாவது வித்தியாசம் வேண்டாமா. நான் எழுத்தாளனாக இருந்து எனக்கு என்ன பிரயோசனம்?

5. யாரோ ஒருவர் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நம்மிடம் எலக்ட்ரிஷியன் என்று அறிமுகப்படுத்திக் கொள்ளும்போது, எங்கள் வீட்டிலும் கொஞ்சம் எலக்ட்ரிக்கல் வேலை இருக்கிறது என்று கூறி அவரது உதவியை நாடலாம். பிளம்பருக்கும் இதுவே பொருந்தும். கொஞ்சம் விரிவாக சிந்தித்தோமானால் டிவி மெக்கானிக், கொத்தனார், மேஸ்திரி ஆகியோரை சந்திக்கும்போதும் கூட இதே சாத்தியம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஆனால் ஒரு எழுத்தாளனை நீங்கள் சந்திக்கும்போது கற்பூர ஆரத்தி காட்டி, மணி அடித்து, பூஜை செய்ய வேண்டாமா. கிரேக்கத்தில் சாக்ரடிஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில் ஆகியோருக்கு அதைதானே செய்தார்கள். ஆனால் அதையெல்லாம் மறந்துவிட்டு சாக்ரடிஸுக்கு கடைசியில் விஷக்கோப்பை கொடுத்ததை மட்டும் இன்னும் தமிழர்கள் மறக்காமல் இருப்பது ஏன்? ஓர் ஈழத்தமிழரோ, மலேசியத்தமிழரோ, தென்னாப்பிரிக்கத் தமிழரோ, சீனத்தமிழரோ, ரஷ்யத்தமிழரோ, செவ்வாய்க்கிரகத் தமிழரோ இம்மாதிரி நடந்துகொண்டு நான் பார்த்ததில்லை. தமிழகத் தமிழர்தான் இப்படி நடந்துக் கொள்கிறார்கள். இவர்கள் பூமியில்தான் இருக்கிறார்களா. அல்லது பூலோகத்தில் இருக்கிறார்களா என்று எனக்கு ஐயம் ஏற்படுகிறது.

6. நான் எழுதுவதால்தான் என்னை எழுத்தாளன் என்கிறார்கள். நீங்கள் வாசிப்பதால்தான் உங்களை வாசகன் என்கிறார்கள். மகத்தான விஷயங்கள் எழுத்தாளனுக்கு சொந்தமானது. அதை மற்றவர்கள் பட்டா போட்டுக்கொண்டு கொண்டாட ஆசைப்படக்கூடாது.

யு

24 மே, 2013

அட்லீஸ்ட் வெறும் ஆண்

எப்போதோ படித்த பாலகுமாரனின் சிறுகதை ஒன்று. ஒரு சினிமா பத்திரிகையாளன். ஒரு சூப்பர் ஸ்டார் நடிகரைப் பற்றி எப்பவுமே மோசமாக கிசுகிசு எழுதுவான். குறிப்பாக சகநடிகைகளோடு அவரை இணைத்து வக்கிரமாக கற்பனையிலேயே கதைகளாக எழுதித்தள்ளுவான். ஊரிலிருந்து பத்திரிகையாளனின் டீனேஜ் மச்சினிச்சி லீவுக்கு வந்திருப்பாள். மாமா பெரிய சினிமா பத்திரிகையாளர் என்பதால் ஷூட்டிங் பார்க்கவேண்டுமென்று அடம்பிடிப்பாள். ஸ்கூட்டரில் இவன் ஸ்டுடியோவுக்கு அழைத்துச் செல்வான்.

படப்பிடிப்புத் தளத்தில் திடீரென்று மச்சினிச்சி வயிற்றைப் பிடித்துக்கொண்டு ஓரமாக உட்கார்ந்து அழ ஆரம்பித்துவிடுவாள். என்ன ஏதுவென்று புரியாமல் இவன் குழம்பிப்போய் கிடப்பான். அது அந்த சூப்பர் ஸ்டார் நடிக்கும் படப்பிடிப்பு. உடனடியாக நிலைமையை உணர்ந்த நடிகர் தன் மனைவியை அழைத்து, அந்தப் பெண்ணை கவனிக்கச் சொல்லி, பத்திரமாக காரில் அனுப்பி வைப்பார். இவரைப் பற்றிப் போய் இப்படியெல்லாம் கிசுகிசு எழுதினோமே என்று பத்திரிகையாளன் நொந்துப்போவதாக கதை முடியும்.

திடீரென்று வயிற்றைப் பிடித்துக்கொண்டு அழ ஆரம்பிக்கும் மச்சினிச்சியைப் பார்த்து கை, கால் உதற பத்திரிகையாளன் திணறி முழிக்கும் கட்டத்தை பாலா அவருக்கேயுரிய வர்ணனைகளோடு அசத்தியிருப்பார்.

அக்கம் பக்கம் வீடுகளிலோ, உறவினர் வீடுகளிலோ நாம் தூக்கி கொஞ்சி வளர்த்த குழந்தைகள் திடீரென்று ‘பெரிய மனுஷி’ ஆகிவிட்டதென்று தகவல் வரும். பாலகுமாரனின் கதையில் வரும் நாயகனை மாதிரி பதட்டம் அடைவோம். “அது குழந்தைதானே. பண்ணெண்டு, பதிமூணு வயசிருக்குமா. அதைப்போயி இப்படி சொல்றாங்களே?” என்று குழம்பிவிடுவோம். நீ தூக்கி வளர்த்த குழந்தையே பெரிய மனுஷின்னா, உனக்கு ஏழு கழுதை வயசாவுதுடா தடிமாடு என்று சப்கான்சியஸாக நம்முடைய மூளை சிந்திக்கத் தொடங்கிவிடுவதால்தான் இந்த பதட்டம்.

அடுத்த முறை அந்த குழந்தையை பார்க்கும்போது ஒருமாதிரி மருண்ட பார்வையோடு நம்மை வெறிப்பாள். பொருள் புரிபடமுடியாத பார்வை அது. அப்பார்வையில் தெரிவது அச்சமா, நாணமா, பாசமா ஒன்றுமே புரியாது. நாமெல்லாம் அட்லீஸ்ட் வெறும் ஆண்கள்தானே. ஆண்களின் ஜீன்களிலேயே இவன் அசட்டு அம்மாஞ்சி என்று விதியை அறிவியல் எழுதிவிடுகிறது. மயிலாக வளரும் பெண்குழந்தை பருவமடைதலின் மூலம் மானாக பரிணமிக்கிறாள். மாறாக தேவாங்கு மாதிரி வளரும் ஆண்குழந்தையோ பருவத்தில் குரங்காக மாறுகிறான்.

‘தோனி’ திரைப்படத்தில் ஒரு காட்சி. குழந்தை என்று நினைத்துக் கொண்டிருக்கும் தன்னுடைய மகள் திடீரென்று பெரிய மனுஷியாகிவிடுவாள். பிரகாஷ்ராஜ் தடதடத்துவிடுவார். அவருக்கு மனைவி இல்லை. அக்கம் பக்கம் பெண்கள் சேர்ந்து சடங்கு செய்வார்கள். புடவை கட்டிய தன் குழந்தையைப் பார்த்து நெகிழ்ச்சியான மனநிலையில் இருப்பார். இவரைப் பார்த்து குழந்தை வெட்கப்படும். முட்டைக் கண்களை உருட்டி, உருட்டி முழிப்பார்.

சமீபத்தில் இதேமாதிரியான மனநிலையோடு நண்பர் ஒருவரை சந்தித்தோம். பொதுவாக நண்பரது முகத்தில் எந்த உணர்ச்சியையும் நாம் அடையாளம் கண்டுகொள்ள முடியாது. எப்போதுமே ஒரேமாதிரி முகபாவம்தான். அன்று ஒருமாதிரியான சோர்வான பூரிப்பை அவர் முகத்தில் காணமுடிந்தது. “தங்கச்சி பொண்ணு வயசுக்கு வந்துட்டா பாஸ். செம்ம செலவு” வெயிட்டாக தாய்மாமன் சீர் செய்துவிட்டு வந்திருந்தவர், செலவைப்பற்றி கவலைப்பட்டதைப் போல கொஞ்சம் சோகமாக சொல்லும் தொனியில் பேசினாலும், குரலின் ஊடாக மறைந்துத் தொக்கி நின்றது ஓர் உற்சாகம், பெருமை. பிறந்ததிலிருந்து ஒவ்வொரு நாளும் அவர் பார்த்து பார்த்து வளர்த்த குழந்தை அது. அன்று அவரது கண்களில் ஒரு தாய் தெரிந்தாள். ‘தாய்’மாமன் என்று இந்த உறவுக்கு சும்மாவா பெயர் வைத்திருக்கிறார்கள். ஆயிரத்தெட்டு விமர்சனங்கள் இருந்தாலும் இந்தியக் குடும்ப வாழ்க்கைமுறை இதுபோன்ற சில சுவாரஸ்யங்களால்தான் இனிக்கிறது.

23 மே, 2013

5000 கோடி - கொடி கட்டிப் பறக்கிறது தண்ணீர் வியாபாரம்!

“மக்கள் பிளாஸ்டிக் பாட்டில்களில் உள்ள தண்ணீரை காசு கொடுத்து வாங்கி குடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது. தண்ணீரை பாட்டிலில் அடைத்து விற்கும் தொழில் பத்தாயிரம் கோடி ரூபாய் வருமானம் தரும் தொழில் எனக் கேள்விப்படுகிறேன். பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் இதில் ஈடுபட்டு பணம் சம்பாதிக்கின்றன, தண்ணீர் சேமிப்புதான் நாம் உடனடியாக கவனத்தில் கொள்ள வேண்டிய பிரச்சினை. 2025ம் ஆண்டில் தண்ணீரை பாட்டிலில் அடைத்து விற்கும் தொழில் பெட்ரோலிய நிறுவனங்களைப் போல (கோடிகளில் புரளும்) ஆகிவிட்டால் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை ” 

- இளைஞர்களிடம் உரையாற்றும் போது டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் (ஜூலை 17, 2010)
“வாரத்துக்கு சராசரியாக ஐந்து கேன் வாங்குகிறோம். குடிப்பதற்கும், சமைப்பதற்கும் கேன் தண்ணீர்தான்” என்கிறார் சென்னையைச் சேர்ந்த குடும்பத்தலைவி தேவிகண்ணன். இரண்டு குழந்தைகள், கணவன், மனைவி என்று நாலு பேர் கொண்ட குடும்பம். ஒரு கேன் தண்ணீர் இருபத்தி ஐந்து ரூபாயிலிருந்து, முப்பத்தி ஐந்து ரூபாய் வரை சென்னையில் விற்கிறது. எனவே ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தின் பட்ஜெட்டில் வாரத்துக்கு குறைந்தபட்சம் நூற்றி இருபத்தைந்து ரூபாயாவது குடிநீருக்காக மட்டுமே செலவழிக்கப்படுகிறது. மாதத்துக்கு ஐநூறு ரூபாய். வருடத்துக்கு ஆறாயிரம் ரூபாய்.

வேகமாக வளர்கிறது 

’பாக் செய்யப்பட்ட குடி தண்ணீர் இன்று இந்தியாவில் வளர்ந்துவரும் மிகப்பெரிய தொழில் கடந்தாண்டு இந்தியாவில்,அதன் விற்பனை 30 ஆயிரம் கோடி ரூபாய். தமிழகத்தில் மட்டும், 5,000 கோடி. ஆண்டுக்கு 40 முதல் 50 சதவிகிதம் வரை இத்தொழில் வளர்ந்துக்கொண்டே செல்கிறது. 1999ல் ஆண்டொன்றுக்கு 1,5 பில்லியன் லிட்டர் பாட்டிலில் அடைக்கப்பட்ட தண்ணீர் பருகப்பட்டு வந்தது. 2004ல் அது மூன்று மடங்கிற்கும் மேலாக, அதாவது 5 பில்லியன் லிட்டருக்கும் மேலாக உயர்ந்துள்ளது.

முன்பு வெளிநாட்டிலிருந்து சுற்றுலா வரும் பயணிகள் மட்டும் இந்த தண்ணீர் பாட்டில்களை வாங்கிப் பருகி வந்தார்கள். பின் நகர்ப்புற மேல்தட்டு வர்க்கம் அவர்களைப் பின்பற்ற ஆரம்பித்தது. இன்று கிராமப்புற மக்கள் கூட தண்ணீர் பாட்டிலுக்கோ, கேனுக்கோ மாறிவிட்டார்கள். ஏழை அடித்தள மக்களின் பர்சைக் குறி வைத்து பிளாஸ்டிக் பைகளில் தண்ணீர் வருகிறது.

பெட்டிக்கடைகளில் கூட கையடக்கமான பிளாஸ்டிக் சாஷே, 100மிலி பாட்டில் 330 மிலி பாட்டில், 500 மிலி பாட்டில், ஒரு லிட்டர், இரண்டு லிட்டர், 20 லிட்டர், 50 லிட்டர் கேன்கள் எனப் பல அளவுகளில், பல வடிவங்களில், தண்ணீர் சந்தைக்கு வருகின்றன. (இது தவிர டாங்கர் லாரிகளில் மொத்தமாக விற்கப்படும் தண்ணீரைப் பற்றி நாம் இங்கு பேசவில்லை) பெட்டிக்கடை, பான் ஷாப்பிலிருந்து, பஸ் ஸ்டாண்டு, ரயில் நிலையம், உணவுவிடுதி, பலசரக்குக்கடை, பெரிய மால் என அங்கிங்கிங்கெனாதபடி, எங்கும் கொடி கட்டிப் பறக்கிறது இந்த வியாபாரம். உலகில் பாட்டில் தண்ணீரை அதிகம் பயன்படுத்தும் முதல் பத்து நாடுகளில் இந்தியாவும் ஒன்று

வியாபாரம் இப்படிச் சக்கை போடு போடுவதால், இந்தத் தண்ணீரை பாட்டில்களில் அடைத்து விற்கும் தொழிற்சாலைகளும் அசுர வேகத்தில் அதிகரித்து வருகின்றன. பெய்லி என்ற பிராண்டில் தண்ணீர் விற்கும் பார்லே அக்ரோ நிறுவனம் 29 தொழிலகங்களை நடத்தி வந்தது. அண்மையில் அதை இரட்டிப்பாக, அதாவது அறுபது தொழிலகங்களாக அதிகரித்துள்ளது. தண்ணீரை பாட்டிலில் அடைத்து விற்கும் தொழிலகங்கள் அதிகம் தென் மாநிலங்களில் அமைக்கப்பட்டுள்ளன. தென் மாநிலங்களிலும் தமிழ்நாட்டில்தான் அதிகம். இந்தியாவில் உள்ள 1200 தொழிலகங்களில் தமிழ்நாட்டில் மட்டும் 600 தொழிலகங்கள் இயங்கி வருகின்றன.

கொள்ளை லாபம் 


இத்தனை பெரிய அளவில் பலர் இந்தத் தொழிலில் இறங்கியிருப்பதற்குக் காரணம் தேவை மாத்திரம் அல்ல. லாபமும் ஒரு காரணம். உதாரணத்திற்கு ஜெய்பூர் அருகில் உள்ள காலாதாரா என்ற இடத்தில் கோகோ கோலா நடத்திவரும் தொழிலகத்தை எடுத்துக் கொள்வோம். நாளொன்றுக்கு 5 லட்சம் லிட்டர் தண்ணீரைப் பயன்படுத்துகிறது. அது 2000-02ம் ஆண்டில் தண்ணீருக்கு செலவிட்ட தொகை வெறும் 5000ரூபாய். 2003ம் ஆண்டில் செலுத்திய தொகை 24,246 ரூபாய். இந்தத் தொகையும் அது சுத்தப்படுத்தும் போது மீந்துவிடும் கழிவுகளை வெளியேற்றியதற்காக மாசுக் கட்டுப்பாரியத்திற்குச் செலுத்திய கட்டணம். தண்ணீருக்கு அது ஏதும் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.அதனால் பதினைந்து ரூபாய் விற்கும் ஒரு கின்லே பாட்டிலில் உள்ள தண்ணீருக்கு அதற்காகும் செலவு 0.02-0.03 பைசாக்கள் மட்டுமே.

காசு கொழிக்கிறது என்று மூக்கில் வேர்த்ததுமே களமிறங்கிவிட்டன பன்னாட்டு நிறுவனங்கள் . கோகோ கோலா, பெப்சி, நெஸ்லே போன்ற பன்னாட்டு நிறுவனங்கள், டாடா, பார்லே கிங் ஃபிஷர் போன்ற பெரிய இந்தியக் கார்ப்பரேட்கள், சிறிய அளவில் இயங்கும் உள்ளூர் நிறுவனக்கள் என மூன்று வகையான நிறுவனங்கள் இந்த வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளன. இருநூறுக்கும் மேற்பட்ட பெரிய ‘பிராண்ட்’கள் இப்போது சந்தையில் இருக்கின்றன.

ஏன் இந்த நிலைமை? 

சுத்தமான குடிநீர் என்பது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை என்று உச்ச நீதி மன்றம் 2000ம் ஆண்டு டிசம்பர் முதல்வாரம் தீர்ப்பளித்திருக்கிறது. இது நம்முடைய உரிமை மட்டுமல்ல, தன்னுடைய குடிமக்களுக்கு பாதுகாப்பான குடிநீரை வழங்குவது அரசின் கடமை. ஆனால் அந்தக் கடமையில் நம் அரசுகள் தவறிவிட்டன. தினமும் 1600 இந்தியர்கள் குடிநீர் தொடர்பான நோய்களால் மரணமடைகிறார்கள். குடிநீரால் நோய் பரவும் என்கிற மக்களின் அச்சம்தான் தண்ணீர் வர்த்தகமயமாகிக் கொண்டிருப்பதற்கு முதன்மையான காரணம்.

“ஒருமுறை என்னுடைய இரண்டு குழந்தைகளும் காய்ச்சலால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தபோது மருத்துவர், குடிநீரால்தான் பிரச்சினை என்றார். எனவேதான் குழாய்த்தண்ணீரை பயன்படுத்துவதை தவிர்த்து கேன் வாட்டர் வாங்க ஆரம்பித்தோம்” என்கிறார் தேவிகண்ணன். இவரைப்போலதான் அனைவருமே பாக்கெட், பாட்டில் மற்றும் கேனில் அடைக்கப்பட்டு வரும் தண்ணீர் பாதுகாப்பானது என்று கருதுகிறார்கள்.

ஆனால் அது உண்மைதானா? அகமதாபாத்தில் உள்ள Consumer Education and Research Society (CERS), என்ற ஒரு நுகர்வோர் அமைப்பு சந்தையில் உள்ள 13 முன்னணி நிறுவனங்களின் தயாரிப்புகளை எடுத்து வேதியில் மற்றும் நுண்ணுயிர் ஆய்வுக்கு உட்படுத்தியது. 13 பிராண்டுகளில் 10 பிராண்டுகள் தரமானவை அல்ல எனத் தெரியவந்தது . சென்னையில் உள்ள மருத்துவர்களின் கருத்தும் பாதுகாப்பானவை அல்ல என்பதாகத்தான் இருக்கிறது.

தரத்துக்கு உத்திரவாதமா

குடிநீரைப் பாட்டிலில் அடைக்கும் தொழில் குறித்த சட்டங்கள் இந்தியாவில் தெளிவாக இல்லை. தண்ணீர் எந்த முறையில் சுத்தப்படுத்தப்படுகிறது, சுத்தப்படுத்துவதற்கு என்னென்ன வேதிப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன, என்ன அளவில் பயன்படுத்தப்படுகின்றன போன்ற தகவல்களை அறிந்து கொள்ள நுகர்வோருக்கு உரிமை உண்டு. ஆனால் பல பிராண்ட்களில் அது தெளிவாகக் குறிப்பிடப்படுவதில்லை. பாக் செய்து விற்கப்படும் தண்ணீருக்கு இந்திய தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தின் ஐ.எஸ்.ஐ. முத்திரை அத்தியாவசியமானது. தொழிற்சாலையை தரக்கட்டுப்பாட்டு ஆய்வாளர்கள் ஆராய்ந்து, தயார் செய்யும் தண்ணீரை சாம்பிள் எடுத்து ஆராய்வார்கள். அரசின் தரக்கட்டுப்பாட்டுகளுக்கு உட்பட்டு இருந்தால் மட்டுமே ஐ.எஸ்.ஐ. வழங்கப்படும்.

தண்ணீர் பேக்கேஜிங் செய்யும் ஒவ்வொரு தொழிற்சாலையில் ஓர் ஆய்வுக்கூடம் கட்டாயம் இருக்க வேண்டும். ஒரு வேதியியல் நிபுணராலோ அல்லது மைக்ரோ பயாலஜிஸ்ட்டாலோ அது நடத்தப்பட வேண்டும். தயாராகும் தண்ணீரின் தரம் அங்கே சோதிக்கப்பட வேண்டும். தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் அங்கே திடீர் விசிட் அடித்து சோதிப்பார்கள். தர அளவுகளில் ஏதேனும் குறைபாடு இருப்பது தெரியவந்தால் ஐ.எஸ்.ஐ. முத்திரை திரும்பப் பெற்றுக்கொள்ளப்படும். ஆலையை மூடுவதற்கும் கூட அரசுக்கு அதிகாரம் உண்டு.

“இம்மாதிரியான கட்டுப்பாடுகள் அவசியம்தான்” என்கிறார் இத்தொழிலில் ஈடுபட்டுள்ள, அம்பத்தூர் எச்2ஓ ஏஜென்ஸி நிறுவனத்தின் உரிமையாளர் ஜெயப்பிரகாஷ்.

“நல்ல தண்ணீர் குடிக்க வேண்டும் என்கிற விழிப்புணர்வின் பேரில் தரம் குறித்த நம்பிக்கையோடுதான் மக்கள் எங்களிடம் தண்ணீர் வாங்குகிறார்கள். அது சுத்தமான முறையில் தயாரிக்கப்படுகிறதா, நம் அரசின் தர அளவுகோல்களை எட்டியிருக்கிறதா என்பதெல்லாம் மக்களுக்கு தெரியப்போவதில்லை. ஆனால் அவர்களது நம்பிக்கையை மெய்ப்பிக்கும் கடமை எங்களுக்கு இருக்கிறது” என்கிறார்.

புற்றீசலாய் வளர்ந்துவரும் சிறு சிறு தண்ணீர் தயாரிப்பு தொழிற்கூடங்கள் அரசின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு இஷ்டத்துக்கும் தண்ணீரை விற்று வருகிறார்கள். நிலத்தடி நீரை வரைமுறையின்றி உறிஞ்சி போதுமான நெறிமுறைகளை பின்பற்றாமல் அப்படியே விற்று வருகிறார்கள்.

தீர்வு? 

முதலில் அரசு இப்பிரச்சினையை தீவிரமாக அணுகவேண்டும் பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்கவேண்டியது அரசின் கடமை. தண்ணீரில் குளோரின் கலந்து குழாய் வழியாக சப்ளை செய்வது என்ற வழக்கமான நடைமுறைக்கு வெளியேயும் அது சிந்திக்க வேண்டும்

மெட்ரோ வாட்டர், குடிநீர் வடிகால் வாரியம் போன்ற அமைப்புக்கள் தண்ணீரைப் பாக் செய்து குறைந்த விலையில் விற்பதைப் பற்றி யோசிக்கலாம். வெளி மார்க்கெட்டில் இருபத்தைந்து ரூபாய்க்கு வாங்கும் தண்ணீரை அரசு பத்து, பனிரெண்டு ரூபாய்க்கு தருமேயானால் மக்கள் அதை வரவேற்கவே செய்வார்கள் ஆவின் பால் போல, அரசு வீடுதோறும் இந்த பாக்கேஜ்ட் வாட்டரை விற்க முன்வந்தால் அது மக்களுக்குப் பேருதவியாக இருக்கும் என்பது மட்டுமல்ல, பன்னாட்டு நிறுவனங்களை, கார்ப்ரேட் அரசர்களை, ஒரு கட்டுப்பாட்டில் வைக்கும்.

முடிச்சூர் கிராம ஊராட்சி தானே ஒரு சுத்திகரிப்பு ஆலையை நிறுவி, நீரை சுத்திகரித்து தன் ஊர் மக்களுக்கு மிகக்குறைந்த விலையில் வழங்குகிறது. தமிழ்நாடு அரசே ஒவ்வொரு ஊராட்சிக்கும் நிதி ஒதுக்கி மற்ற ஊராட்சிகளிலும் இதை மிகச்சுலபமாக செய்ய முடியும்.

தடையின்றிச் சாராயம் கிடைக்கச் செய்ய முடியும் போது தரமான தண்ணீர் தரமுடியாதா?


எக்ஸ்ட்ரா மேட்டர்  1 :

ஒரு லிட்டர் வாட்டர் பாட்டிலின் உள்ளடக்கச் செலவு...
மூடி : 25 பைசா
பாட்டில் : ரூ 1.50 முதல் ரூ. 2.50
நீர் சுத்திகரிப்பு : 10 பைசா முதல் 25 பைசா
லேபிள் : 15 பைசா முதல் 50 பைசா
அட்டைப்பெட்டி : 50 பைசா
போக்குவரத்து : 10 பைசா முதல் 25 பைசா
மற்றவை : 25 பைசா

மொத்தச் செலவு : ரூ.2.85 முதல் 4.25 வரை
(லேபர், மார்க்கெட்டிங் செலவுகள் மற்றும் வரி தவிர்த்து)

சந்தையில் நாம் வாங்குவது : ரூ. 10 முதல்

(Source : Centre for Science and Environment தரும் தகவல்களிலிருந்து பல்வேறு இடங்களில் திரட்டியது. இது தோராயமான தொகை. இடத்துக்கு இடம் பல்வேறு காரணங்களால் ஓரளவுக்கு கூடுதலாகவோ, குறைவாகவோ வேறுபடலாம்)


எக்ஸ்ட்ரா மேட்டர் 2 :

சுத்திகரிக்கப்பட்ட கேன் தண்ணீர் பாதுகாப்பானதா? பொதுநல மருத்துவர் டாக்டர் ஜே.பாரத்

சில நிறுவனங்கள் நீரை சுத்தப்படுத்துவதற்கு கெமிக்கல்களை பயன்படுத்துகிறார்கள். நீரை சுத்திகரித்த பிறகு இவற்றை முறையாக நீக்குவதில்லை. இதுபோன்ற நீரை தொடர்ந்து பயன்படுத்தினால் இந்த வேதிப் பொருட்கள் உடலிலேயே படிந்து சிறுநீரக மற்றும் நரம்புகள் தொடர்பான பிரச்னைகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். தவிர, வைரஸ், பாக்டீரியா, ஸ்போர்ஸ் ( நுண்ணுயிரிகள் அவற்றிற்கு பாதுகாப்பு இல்லாத சூழலில் தங்களைச் சுற்றி ஒரு ஒரு கூட்டை (spores) ஏற்படுத்தி அதனுள் இருந்து கொள்ளும். சாதகமான சூழ்ல் இருந்தால் அதை உடைத்துக் கொண்டு வெளியில் வரும்). போன்ற நுண்ணுயிரிகள் முறையாக நீக்கப்பட்டுள்ளதா என்பதற்கு எந்த உத்திரவாதமும் கிடையாது. இதனால் தொற்று நோய்கள் பாதிப்பும் வரலாம்.

ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ் செய்து வரப்படும் தரமான நிறுவனங்கள் விற்பனை செய்யும் நீரை பயன்படுத்தலாம். 100 சதவீதம் பாதுகாப்பான நீர் என்றால் அது பாதுகாப்பான நிலையில் இருக்கும் போர்வெல் நீர்தான். மழை நீர் பூமிக்கடியில் செல்ல செல்ல அதில் உள்ள எல்லா கிருமிகளும் அழிந்து சுத்தமான நீராகிவிடும். நிலத்தடி நீர் மாசடையாமல் இருந்தால அதைவிட பாதுகாப்பான நீர் நாம் பயன்படுத்த வேறு எதுவும் இல்லை. கேன் தண்ணீரை கொதி வைத்து பயன்படுத்தினால் நல்லதா டாக்டர் என்று கேட்பார்கள். நாம் அதிகபட்சமாக 100 டிகிரிதான் கொதிக்க வைக்க முடியும். 150 டிகிரி கொதிநிலையிலும் உயிர் வாழும் நுண்ணுயிரிகள் நீரில் உண்டு.

(நன்றி : புதிய தலைமுறை)

20 மே, 2013

யார் அந்த முகேஷ்?


உலக சுகாதார நிறுவனத்தின் கணக்கீடு ஒன்று. இந்தியாவில் தயாரிக்கப்படும் திரைப்படங்களில் நூற்றுக்கு எழுபத்தாறு படங்களில் புகையிலை பயன்பாடு இடம்பெறுகிறது. நம் நாட்டில் புகைப்பழக்கத்துக்கு பலியாகும் குழந்தைகளில் ஐம்பத்தி இரண்டு சதவிகிதம் பேர், திரைப்படங்களின் தாக்கத்தாலேயே அதை பழக்கப்படுத்திக் கொள்கிறார்கள். இந்திய சுகாதார அமைச்சகத்துக்கு பெரும் தலைவலியாகி விட்ட பிரச்சினை இது.

2005ஆம் ஆண்டு தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர் அன்புமணி ராமதாஸ் இந்தியாவின் சுகாதாரத்துறை அமைச்சராக பணியாற்றினார். நடிக, நடிகையர் திரைப்படங்களில் புகைபிடிக்கும் காட்சிகளுக்கு தடை விதிக்க வேண்டுமென்று, அமைச்சரவைக் கூட்டங்களில் போராடத் தொடங்கினார். “ஒரு நாளைக்கு சுமார் ஒன்றரை கோடி பேர், இந்திப் படங்களை மட்டும் பார்க்கிறார்கள். புகைப்பிடிக்கும் காட்சிகளுக்கு தடை விதிக்கும் பட்சத்தில், பல லட்சம் பேர் இப்பாழும் பழக்கத்துக்கு அடிமையாவதை தடுக்க முடியும்” என்று வலியுறுத்தினார். புகைக்காட்சிகளுக்கு அரசு தடை விதிக்க முடிவெடுத்ததை அடுத்து, திரையுலகம் பொங்கியெழுந்தது. ஒரு பாத்திரம் புகை பிடிப்பதையோ, குடிப்பதையோ காட்டுவது காட்சிகளின் நம்பகத்தன்மைக்காகதானே தவிர, அப்பழக்கத்தை பார்வையாளர்களுக்கு ‘ஃபேண்டஸி’ ஆக்கிக்காட்டும் நோக்கத்துடன் அல்ல என்று வாதாடினார்கள். வேண்டுமானால் அம்மாதிரி காட்சிகள் வரும்போது எச்சரிக்கையாக ‘புகைப்பிடிக்கும் பழக்கம் உடல்நலத்துக்கு தீங்கானது’ என்கிற பிரச்சார வாசகத்தை இடம்பெறச் செய்கிறோம். படத்தின் ஆரம்பத்திலும், இறுதியிலும் புகைக்கு எதிரான வாசகங்களை ‘ஸ்லைட்’ ஆக காட்டுகிறோம் என்று பேச்சுவார்த்தை நடத்த தொடங்கினார்கள்.
                                                 end
சுகாதாரத்துறை அமைச்சகம் தடை விதித்தாலும் கூட படங்களில் புகை பிடிக்கும், குடிக்கும் காட்சிகள் வராமலில்லை. புகையிலை தயாரிப்பு நிறுவனங்களின் பின்னணி லாபி அத்தகைய செல்வாக்கு கொண்டதாக இருக்கிறது. தடை என்று அறிவித்து விட்டார்களே தவிர, அதை முழுமையாக கண்காணிக்க ஓர் ஏற்பாட்டை அரசு செய்யவில்லை. ஊழல்மயப்பட்ட நம் அரசு சாதனங்களுடைய மெகா சைஸ் ஓட்டைகளை அடைக்காமல், உருப்படியாக கொலை கூட செய்ய முடியாது என்பதுதான் யதார்த்தம்.

சில சினிமாக்காரர்களும், புகை நிறுவனங்களும் கடுமையாக எதிர்த்தாலும் கூட எதிர்பாராவிதமாக நம் மக்களிடையே, இந்த தடை பெரும் வரவேற்பைப் பெற்றது. விவேக் ஓபராய், ஊர்மிளா மடோண்ட்கர் போன்ற கலைஞர்கள் புகைப்பழக்கத்துக்கு எதிரான பிரச்சாரங்களை தாங்கள் நடிக்கும் படங்கள் வாயிலாக செய்ய முன்வந்தார்கள். இதுகுறித்த விழிப்புணர்வு துண்டுப்படங்களிலும் நடித்தார்கள் (சமீபத்தில் வெளியாகிய கோ, கோவா, கான் திரைப்படத்தில் சாயிஃப் அலிகான் படம் தொடங்குவதற்கு முன்பாக புகைப்பழக்கத்தின் தீமைகளை இரண்டு நிமிடங்களுக்கு உரையாற்றுகிறார்).

sabanaazmi
சபனா ஆஸ்மி போன்ற முற்போக்கு இயக்குனர்கள் இத்தடை கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானது என்று வாதிட்டார்கள். “சினிமா என்பது வாழ்வை பிரதிபலிப்பது. நிஜவாழ்க்கையில் புகைப்பழக்கம் கொண்டவர்கள் இருக்கும் பட்சத்தில், அவர்கள் சினிமாவிலும் இடம்பெறுவதுதானே நியாயம். புகைப்பிடிப்பவரோ, குடிப்பவரோதான் கதைக்கு தேவையென்றால், அக்காட்சிகளை வேறு எப்படி எடுக்க முடியும்” என்று கேட்டார்கள். இவ்வளவு அக்கறை இருக்கும் அரசாங்கம், நாடு முழுக்க புகைப்பொருட்கள் தயாரிக்கவோ, விற்கவோ தடை விதிக்க வேண்டும். அதைவிட்டு சினிமாக்காரர்களை நோண்டிக்கொண்டிருக்கக் கூடாது என்கிற சினிமாக்காரர்களின் வாதத்திலும், நியாயம் இருக்கவே செய்கிறது. அரசின் தடையை எதிர்த்து சிலர் நீதிமன்றங்களுக்கும் சென்றார்கள்.  ஒரு வழக்கின் தீர்ப்பில் இத்தடை கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானது என்பதுமாதிரி டெல்லி உயர்நீதிமன்றமும் கருத்து தெரிவித்தது. இவ்வாறாக, நாளாக நாளாக நாட்டுமக்களின் நலன் அடிப்படையில் அன்புமணி ராமதாஸ் முயற்சித்த முயற்சிகள் வலுவிழந்து விழலுக்கு இறைத்த நீரானது.


ஆனால் உலக சுகாதார நிறுவனம் வளரும் நாடுகளை தொடர்ச்சியாக வலியுறுத்திக் கொண்டே இருந்தது. இந்தியாவில் ஒரு நாளைக்கு இரண்டாயிரத்து ஐநூறு பேர் புகையிலைப் பழக்கத்தால் மட்டுமே மரணமடைகிறார்கள். இருபத்தைந்து கோடி பேர் இந்தியாவில் புகையிலைப் பழக்கத்துக்கு அடிமையானவர்கள் என்று அலாரம் அடித்துக்கொண்டே இருந்தது. தர்மசங்கடத்துக்கு உள்ளான அரசாங்கம் இம்முறை தடை என்றெல்லாம் முயற்சிக்காமல், சினிமாக்காரர்களுக்கு கொஞ்சம் தொந்தரவாவது கொடுக்கலாமா என்று யோசித்தது.
                               530x230 copy                                  
போன முறை போல இல்லாமல் இம்முறை சென்சார் போர்ட் வாயிலாக பிரச்சினையை அணுகியது. படத்தில் ஏதேனும் புகைப்பிடிக்கும், குடிக்கும் காட்சிகள் வரும் பட்சத்தில், அக்காட்சி ஏன் முக்கியம் என்று தயாரிப்பாளரோ, இயக்குனரோ விளக்கம் அளித்தாக வேண்டும் என்று கெடுபிடி விதிக்கப்பட்டது. சம்பந்தமேயில்லாமல் இம்மாதிரி காட்சிகள் இடம்பெற்றால் ‘யூ’ சான்றிதழ் வழங்கமுடியாது என்றும் தணிக்கைத்துறை எகிற, இம்முறை சினிமாக்காரர்கள் கொஞ்சம் அடக்கியே வாசிக்க ஆரம்பித்தார்கள். புகைபிடிக்கும் காட்சி இருந்தால், அதை சமப்படுத்தும் வகையில் படத்தின் தொடக்கத்திலும், இடைவேளையிலும் புகைக்கு எதிரான பிரச்சாரத்தை நுழைத்துவிடுகிறோம் என்று சென்சார் போர்டை தாஜா செய்தார்கள்.
                                              
இப்போது திரையரங்குகளில் படம் தொடங்கும்போதும், இடைவேளையின் போதும் ‘முகேஷ்’ தோன்றுவதன் வரலாறு இதுதான். இன்று பாரதப் பிரதமர் மன்மோகன்சிங்கை விட முகேஷ் இந்தியாவில் பிரபலம். ஏதேனும் சினிமா தியேட்டர்களில் இந்த விழிப்புணர்வு விளம்பரங்களை வெட்டி விட்டு படம் திரையிட்டால், அத்திரையரங்கின் ‘லைசென்ஸ்’ கூட திரும்பப்பெறப்படும்.

lungs
‘புகைப்பழக்கம் உடல்நலத்திற்கு தீங்கானது’ என்று கட்டைக்குரலில் தொடங்கும் தொடர் விளம்பரங்கள் தொந்தரவாக இருக்கிறது என்று ரசிகர்கள் பலர் கருதினாலும், நாடு முழுக்க இந்த முயற்சிக்கு நல்ல பலன் இருப்பதாகவே தகவல். இந்தியாவில் பதினாறு மொழிகளில் ‘டப்’ செய்யப்பட்டு, அந்தந்த மொழிப்படங்களின் தொடக்கத்திலும், இடைவேளையும் இவை ஒளிபரப்பப்படுகின்றன. சமீபத்தில் எடுக்கப்பட்ட சர்வே ஒன்றில் புகையிலைப் பழக்கம் கொண்டிருப்பவர்களில் அறுபத்தி மூன்று சதவிகிதம் பேர் இந்த விளம்பரங்களை முழுமையாக நினைவுபடுத்தி சொல்லும் அளவுக்கு பார்த்திருக்கிறார்கள். அவர்களில் எழுபத்தைந்து சதவிகிதம் பேர், இந்த விளம்பரத்தின் தாக்கத்தால் குற்றவுணர்வு கொண்டிருக்கிறார்கள். இப்பழக்கத்திலிருந்து விரைவில் விடுபடவேண்டுமென்று விரும்புவதாகவும் தெரிவிக்கிறார்கள். இந்தியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட புகையிலை எதிர்ப்பு விளம்பரத் தொடர்களில், அதிக தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக இது அமைந்திருக்கிறது.


இந்த விளம்பரப் படத்தின் நாயகன் முகேஷ் ஹரானே, மகாராஷ்டிராவின் புசாவல் என்கிற ஊரைச் சேர்ந்தவர். குட்கா பழக்கத்தால் இளம் வயதிலேயே வாய்புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். ஓராண்டுக்கும் மேலாக மும்பை டாடா மெமோரியல் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. விழிப்புணர்வு விளம்பரப் படங்களுக்கு முழுமனதோடு ஒப்புதல் அளித்து நடித்தார் முகேஷ். படம் எடுக்கப்பட்டு சில ஆண்டுகளிலேயே சிகிச்சை பலனின்றி, அநியாயமாக இருபத்திநான்கே வயதில் மரணமும் அடைந்துவிட்டார்.

tobacco
பத்திரிகை, ரேடியோ, விளம்பரப் பலகைகள், டிவி என்று பல்வேறு வடிவங்களில் பல ஆண்டுகளாக வந்துக்கொண்டிருக்கும் முகேஷின் விளம்பரம் சமீபமாகதான் திரைப்படங்களிலும் இடம்பெறுகிறது. “மும்பை சாலை ஹோர்டிங்குகளில் முகேஷை பார்ப்பது கடுமையான மனவலியை ஏற்படுத்துகிறது” என்கிறார் அவரது தம்பி மங்கேஷ். ஆனாலும் இது முகேஷின் முடிவு என்பதால், அதை ஆட்சேபிக்க குடும்பத்தினர் விரும்பவில்லை. விளம்பரங்களில் முகேஷை பயன்படுத்துவதற்கு அவர்களுக்கு எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை. மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்தாலும், இதற்காக காசு எதையும்கூட கோரவில்லை. “முகேஷின் நிலைமை வேறு யாருக்கும் வராமல் இருந்தாலே போதும்” என்கிறார் கூலித்தொழிலாளியான அவரது அப்பா சங்கர்ராவ்.


தன்னுடைய தம்பி மங்கேஷை அவுரங்காபாத்துக்கு அனுப்பி படிக்க வைத்தது முகேஷ்தான். தம்பியின் படிப்புக்காகவே கடுமையாக வேலை பார்த்து, காசு சம்பாதிக்க தொடங்கியிருந்தார். முகேஷின் இழப்பு பொருளாதாரரீதியாகவும், அந்த குடும்பத்தை கடுமையாக பாதித்திருக்கிறது. இறந்தும்கூட மற்றவர்களுக்கு பயன்படும் வாழ்க்கையைதான் வாழ்ந்திருக்கிறார் முகேஷ். ஆனால், அவரது குடும்பம்தான் பாவம்.
                                     end1
(நன்றி : cinemobita.com)

17 மே, 2013

பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா?

தொடக்கப் பள்ளிகளில் ஆங்கிலவழிக்கல்வி என்கிற அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து மீண்டும் மொழிப்பிரச்சினை தமிழகத்தில் பலத்த விவாதத்துக்கு அடிகோலியிருக்கிறது. சில தமிழர்கள் கீழ்க்கண்ட கேள்வியை பஸ் ஸ்டேண்டில் பஸ்ஸுக்கு காத்திருக்கும் நேரத்தில் சகப்பயணிகளிடம், ஆபிஸுக்கு போனதுமே ஃபேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் எழுப்பிவிட்டு யாரையோ மடக்கிவிட்டதாக தங்களுடைய காலரை உயர்த்திக் கொள்கிறார்கள்.

இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடத்திய தமிழினக் காவலர்களின் பேரப்பிள்ளைகள் மட்டும் ஆங்கிலம், இந்தியெல்லாம் படிக்கிறார்களே? அப்பாவி மக்கள் மட்டும் இந்தியும், இங்கிலீஷும் படிக்காமல் டப்பிங் படங்களை பார்த்து வாழ்க்கையைத் தொலைக்க வேண்டுமா? 

ஐம்பது ஆண்டுகளாக பலரும் பலமுறை இதற்கெல்லாம் விளக்கமாகப் பதில் அளித்தும் புதுசு புதுசாக, தினுசு தினுசாக மொழிப்போராளிகள் கிளம்பி வந்துக்கொண்டே இருக்கிறார்கள்.

‘இந்தி எதிர்ப்பு’ என்கிற சொல்லே தவறு. ‘இந்தித்திணிப்பு எதிர்ப்பு’ என்பதுதான் சரி. ஏன் இந்தித்திணிப்பை எதிர்க்க வேண்டும். ஏனெனில் நம்மூர் முனுசாமியின் பிள்ளைகளுக்கு தமிழ் தவிர்த்து ஆங்கிலம் என்கிற ஒரே ஒரு மொழியை கூடுதலாக கற்கவே ‘ததிங்கிணத்தோம்’ போட வேண்டியிருக்கிறது. பத்தாங்கிளாஸில் இங்கிலீஷில் பார்டரில் பாஸ் செய்பவர்கள்தான் நம்மூரில் அதிகம். அப்படியிருக்க கூடுதல் சுமையாக இந்தியும் கட்டாயமெனில் பொதுத்தேர்வுகளில் தோல்வியைத் தழுவுபவர்களின் சதவிகிதம் கூடுதலாகும். பட்டம் படிக்கும் கூட்டம் சுத்தமாக குறையும்.

வட இந்தியாவில் பெரும்பான்மையானோருக்கு தாய்மொழி இந்தி என்பதால் அவர்கள் இந்தி படிக்கிறார்கள். எதிர்காலத்தில் நீங்கள் தமிழகத்தில் பணியாற்ற வேண்டியிருக்கும். எனவே நீங்கள் தமிழும் படித்து பாஸ் செய்யவேண்டும் என்று கட்டாயப்படுத்தினால் அவர்கள் ஒத்துக்கொள்வார்களா?

கோடைவிடுமுறையைக் கூட விட்டு வைக்காமல் கோச்சிங் சென்டர்களுக்குப் போகும் நகர்ப்புற குழந்தைகள் வேறு. சத்துணவு கிடைக்கிறதே என்று பள்ளிகளுக்கு அனுப்பப்படும் கிராமப்புற பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த குழந்தைகள் வேறு. கூலிவேலை செய்யும் பெற்றோரின் குழந்தைகளும், வங்கியில் பணிபுரியும் பெற்றோரின் குழந்தைகளும் வேறு வேறு. இந்த வர்க்க வேறுபாட்டின் இடைவெளி அவ்வளவு சீக்கிரமாக சுருங்கிடப்போவதில்லை. கல்வி மட்டுமே கரைசேர்க்கும் கலங்கரை விளக்கம். இரு வர்க்கத்தினரின் குடும்பச்சூழலுக்கும் மலைக்கும், மடுவுக்குமான வித்தியாசமுண்டு. இந்த அடிப்படையை புரிந்துக்கொள்ள முடிந்தால், “ஸ்கூல்லே இந்தி கத்துக் கொடுத்திருந்தா நான் டெல்லி போயி புடுங்கியிருப்பேன்” என்று யாரும் பேசமாட்டார்கள்.

மொழி என்பது அறிவல்ல. தகவல் பரிமாற்றத்துக்கான ஊடகம். அறிவுச்செல்வத்தை கைபற்றியவன் இந்தியென்ன, சிந்தியைக்கூட தேவை ஏற்பட்டால் சுலபமாக கற்றுக்கொள்வான். அறிவு வளர தாய்மொழிக்கல்விதான் சிறந்தது என்று கல்வியாளர்கள் பலகாலமாக கூவிக்கொண்டிருக்கிறார்கள். இதற்கு சமகால உதாரணமாக தாய்மொழி கல்வி வழக்கத்தில் இருக்கும் நாடுகள் தொழில்ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும் முன்னேறியிருப்பதை கைகாட்டுகிறார்கள். ஆங்கிலமே அறியாத சீனர்கள் கணினித்துறையில் கண்ணில் விரலைவிட்டு ஆட்டுகிறார்கள்.

இந்தியை பிரைவேட்டாக படிப்பதை யாரும் தடுக்கவில்லை. மாணவர்கள் பொதுத்தேர்வுகளில் தன்னுடைய தனிப்பட்ட தேர்வாக மொழிப்பாடமாக இந்தியையோ, சமஸ்கிருதத்தையோ, பிரெஞ்சையோ எடுத்துக்கொள்வதற்கும் யாரும் தடைவிதிக்கவில்லை. எனவே இங்கு வேறு மொழிக்குத் தடை என்பதைப்போல யாரும் பாசிஸ்ட்டுகளாக செயல்படவில்லை.

‘மொழித்திணிப்பு’ என்பதைதான் ஏற்க மறுக்கிறார்கள். நூற்றி பத்து டிகிரி வெயில் அடிக்கிறது. தொடர் மின்வெட்டு வேறு. ஏ.சி.யுமில்லை. ஃபேனுமில்லை. நீங்கள் கட்டாயமாக கம்பளி போர்த்துக்கொண்டுதான் தூங்கவேண்டும் என்று மத்திய அரசு வற்புறுத்தினால் ஏற்றுக்கொள்ள முடியுமா? இல்லை. பரவாயில்லை. நான் கம்பளி போட்டுக்கொண்டுதான் தூங்குவேன் என்று நீங்கள் விருப்பப்பட்டால் அதை யாரும் இங்கே தடுக்கவில்லை.

மொழிப்போர் புரிந்து இந்தியைத் தடுத்த தமிழினத் தலைவர்களின் சந்ததியினர் மட்டும் இந்தி கற்றுக் கொள்கிறார்களே என்று தங்களுடைய அறிவுமந்தத்தை அடிக்கடி காட்டுகிறார்கள் சிலர். தமிழினத் தலைவர்கள் பத்து தலைமுறைக்கு சொத்து சேர்த்து வைத்திருக்கிறார்கள். அவர்களுடைய குழந்தைகள் பள்ளிக்கூடத்துக்கே போகவில்லையென்றால் கூட அவர்களுக்குப் பிரச்சினையில்லை. நமக்கெல்லாம் அப்படியா. பட்டம் பெற்றால் மட்டும் போதாது. மேற்பட்டம் பெறவேண்டும். தொழில்தொடர்பான குறுங்கால பயிற்சிகளை பெறவேண்டும் என்று வேலைச்சந்தையில் எத்தனை எத்தனை எதிர்ப்பார்ப்புகள். குறைந்தபட்ச கல்வியறிவினை பெறவேண்டிய நிலையில் இருக்கும் சமூகம் மொழித்திணிப்பால், போதிய அறிவினைப் பெறமுடியாமல் போனால் யாருக்கு இழப்பு. பணக்கொழுப்பால் தனியார் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கும் நகர்ப்புற பெற்றோரான நாம், நம் அறிவீனத்தால் கிராமப்புறங்களில் கல்விக்கு அரசையே சார்ந்திருக்கும் குழந்தைகளின் எதிர்காலத்தோடு விளையாடுவது தவறு. அவர்களுக்காக சிந்திக்கும் சிந்தனையாளர்களின், செயற்பாட்டாளர்களின், கல்வியாளர்களின் கருத்துகளை போகிற போக்கில் கேலி பேசிவிட்டுச் செல்வது என்பது முட்டாள்த்தனம்.

இப்போது தமிழக அரசு தொடக்கப்பள்ளிகளில் ஆங்கில மீடியம் கொண்டுவருவதையும் இதே அடிப்படையில்தான் கல்வியாளர்கள் எதிர்க்கிறார்கள். அறிவில் வர்க்க வேறுபாடு கூடாது என்று சமச்சீர்க்கல்வி கொண்டுவரச்சொல்லி போராடிய கல்வியாளர்களின் முதல் கோரிக்கை தாய்மொழிக்கல்வியாகதான் இருந்தது. அரையும் குறையுமாக திமுக அரசால் கொண்டுவரப்பட்ட சமச்சீர்க்கல்வியே கூட அவர்களை முழுமையாக திருப்திபடுத்தவில்லை. ஆறாம் வகுப்பிலிருந்து ஆங்கில மீடியத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வசதி அரசுப்பள்ளிகள் பலவற்றிலும், அரசு உதவியோடு நடத்தப்படும் பள்ளிகளிலும் சமச்சீர்க்கல்வி முறையிலும் கூட இருக்கிறது.

விவரம் தெரியாத நம் மக்களுக்கு ஆங்கிலமோகம் அதிகம். ஆங்கிலத்தை அறிவாக நினைக்கிறார்கள். ஆங்கிலம் பேசுபவன் விவரமானவன் என்று நம்புகிறார்கள். பத்தாவதில் ஒழுங்காகப் படித்து நல்ல மதிப்பெண் பெற்ற மாணவனை கூட ப்ளஸ் ஒன் சேர்க்கும்போது ஆங்கில மீடியத்தில் சேர்த்து உருப்படாமல் போகவைக்கும் சாதனையை தொடர்ச்சியாக செய்துவருபவர்கள் நம் பெற்றோர். தொடக்கக்கல்வியிலேயே ஆங்கில மீடியம்தான் என்றால், விவரம் தெரியாத குழந்தைகளை அதில் சேர்த்து அவர்களது எதிர்காலத்தை தங்கள் அறியாமையால் நாசப்படுத்ததான் செய்வார்கள். வீட்டில் பேசும் மொழி தமிழாக இருக்க, பள்ளியில் ஆங்கிலத்தில் போதிக்கப்படும் கணிதத்தையும் அறிவியலையும் புரிந்துகொள்ள முடியாமல் சிரமப்படுவார்கள். ஆங்கிலத்தின் அடிப்படைகளை பள்ளியில் ஒரு மாணவன் அறிந்துக்கொள்வதற்கான வாய்ப்பாக ஏற்கனவே ஆங்கிலம் மொழிப்பாடமாக இருப்பதே போதுமானது இல்லையா?

தாய்மொழிக்கல்வி என்பது தாய்ப்பால் மாதிரி. வேற்றுமொழிக்கல்வி புட்டிப்பால் மாதிரி. வேற்றுமொழிக்கல்வியில் படிக்கும் குழந்தைகள் தங்கள் பாடங்களை புரிந்துகொள்கிறார்களா என்பது கவனமாக கண்காணிக்கப்பட வேண்டும். நகர்ப்புற பெற்றோருக்கு இது சாத்தியமே. போதுமான படிப்பறிவில்லாத பெற்றோருக்கு பிறந்த ஊரகப்பகுதி குழந்தைகளுக்கு இந்த கண்காணிப்புக்கான வாய்ப்பு கிட்டத்தட்ட இல்லை. எனவே அவர்களுக்கு தங்கள் பாடங்களின் அடிப்படையையே புரிந்துகொள்ள முடியாமல் படிப்பு கசக்க ஆரம்பித்துவிடும்.

நர்சரி கான்வெண்டுகளுக்கும், மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கும் அரசுப்பள்ளிகள் போட்டியை ஏற்படுத்தவேண்டும் என்கிற அதிமுக அரசின் ஆதங்கம் நியாயமானது. ஆனால் தனியார் பள்ளிகளின் அடிப்படை நோக்கம் பணமாக இருக்கிறது. அரசு பள்ளிகளை நடத்துவது மக்களுக்கான சேவை. வியாபாரிகளிடம் போய் உயரிய நோக்கத்தோடு சேவை செய்யும் அரசாங்கம் ஏன் போட்டியிட வேண்டும். வேண்டுமானால் தனியார் பள்ளிகளை விட சிறப்பான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளையும், சிறப்பான கல்விச்சூழலையும் குழந்தைகளுக்கு தந்து தனியாரின் ஆதிக்கத்தை மட்டுப்படுத்தலாம். அடம்பிடித்து ஆங்கில மீடியத்தை அதிமுக அரசு கொண்டுவருமேயானால், அது எதிர்கால தலைமுறையின் அறிவுவேரில் வெந்நீரை ஊற்றும் செயலாகவே முடியும்.

16 மே, 2013

கலைஞரின் காதல்

‘‘கடவுளைப் போலத்தான் காதலும்! உண்டா இல்லையா என்பதை எந்த தர்க்கமும் முடிவு செய்ய முடியாது’’ என்று என் மகள் கனிமொழி, ஜூனியர் விகடனில் எழுதியதைப் படித்துப் பார்த்துக் கொண்டும், என் பேரன்களும் பேத்திகளும் சாதி பேதச் சுழல்களைத் தாண்டி நின்று காதல் திருமணங்கள் செய்து கொண்டதை வாழ்த்திக் கொண்டும் கொள்ளுப்பேரன், கொள்ளுப் பேத்திகளைக் கொஞ்சிக் கொண்டும் இருக்கின்ற இந்த வயதில் நீயும் கொஞ்சம் காதல் படிக்கட்டுகளில் ஏறிடுக என்றால் இது ஒரு வேடிக்கைதானே! ‘இதில் என்னய்யா வேடிக்கை இருக்கிறது?’ என்று புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் ‘முதியோர் காதல்’ புத்தகம் வீட்டு நூலகத்திலிருந்து எட்டிப்பார்த்துச் சிரிக்கிறது. அதுவும் ஓர் அழகின் சிரிப்புதானே!

வயது எண்பதை நெருங்கிக் கொண்டிருக்கிற நெல்சன் மண்டேலா, ஒரு நடுத்தர வயது மங்கையைக் காதலித்துக் கட்டித்தழுவும் படங்கள் ஏடுகளை அலங்கரிக்கும் இந்தக் காலத்தில், நான் காதலைப் பற்றி ஒரு கட்டுரைதானே எழுதுகிறேன். எனவே, என் கொள்ளுப் பேரர்களும் பேத்திகளும் கோபித்துக் கொள்ளமாட்டார்கள்.

‘‘காதல் வர்ணனைகளைக் காட்டாற்று வெள்ளமெனப் பொழிந்து தள்ளிய இந்தப் பேனா, இப்போது மிகச் சாதாரண நடையில் சில செய்திகளைச் சொல்லப் போகிறது.’’

இப்படிச் சுருக்கமாக என் காதல் (தோல்வியுற்ற) கதை ‘நெஞ்சுக்கு நீதி’ சுயசரிதையில் முதல் பாகம் 74-வது பக்கத்தில் சுட்டிக்காட்டப்படுகிறது.அந்தக் காதல் நடந்த நாட்களையும் அது தோல்வியுற்ற காரணத்தையும் நினைத்துச் சுவைக்கும் வயது இப்போது எனக்கு! அதனால் அந்தக் காதல் படிக்கட்டுகளில் என் நினைவுக் கால்களால் சற்று நடந்து திரும்புகிறேன். ஆம்; அன்று எழுதாததை அல்லது எழுத விட்டுப் போனதை, இன்று எழுதுகிறேன். எழுதக்கூச்சப் படும் இளமைப்பருவம் பறந்துவிட்டதால் இந்த முதுமைக்கு ஏற்பட்ட துணிச்சல். வெட்கம் மறந்து விட்ட நிலையில் எழுதிடத் தூண்டுகிறது என்னை; அதனால் எழுதுகிறேன்.

கொடி ஊர்வலங்கள், கூட்டங்களில் முழக்கங்கள், கொள்கை பரப்பிட நாடகங்கள் என்று கோடை வெப்பத்தில் தகித்துக் கொண்டிருந்த நான், இடையிடையே திருவாரூர் உயர்நிலைப் பள்ளியின் வகுப்பறைகளுக்கும் சென்று திரும்பிக் கொண்டி ருந்த பள்ளிப்பருவ காலமது. அப்போதுதான் அவளிடம் நானும், என்னிடம் அவளும் மனத்தை பறி கொடுத்த நிகழ்ச்சி நடந்தது. அவள் பெயர்... அவள் பெயர்... உண்மைப் பெயரைச் சொல்ல வேண்டாம்... ஏனென்றால் அவள் இன்னும் உயிரோடு இருக்கிறாள். குறிப்பாக, சாந்தா என்று ஓர் அடையாளப் பெயர் வைத்துக் கொள்வோமே! சாந்தா என்பதில் ஓர் எழுத்து மாறினால் அவள் உண்மைப் பெயர். கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் என்று பரிசுப் போட்டி வைக்க விரும்பவில்லை. அந்த சாந்தா என்னுடன் அதே பள்ளியில் தான் படித்துக் கொண்டிருந்தாள். ஒரு வகையில் தூரத்து உறவும்கூட! நல்ல உறவில்தானே பொல்லாத பகையும் முளைத்துத் தொலைக்கும். எங்கள் இரு வீட்டாருக்கும் பேச்சுவார்த்தைகள் கூட இல்லாத அளவுக்கு செமப்பகை! அந்தப் பகை நடுவே, எங்களுக்குள் பனிப்புகை நடுவே புகுந்த கதிர்போல காதல் தோன்றிவிட்டது. அவள் பள்ளிக்குப் புறப்படும் நேரம் பார்த்து நானும் புறப்படுவேன். ஆரூரின் அகன்ற சாலைகளில் அவள் ஒரு பக்கம் போவாள். நான் இன்னொரு பக்கமாகத் தொடர்ந்து நடப்பேன். அவள் திரும்பிப் பார்க்கிறாளா என்று நான் அவள் பின்னால் நடப்பதும் உண்டு. நான் திரும்பிப் பார்ப்பதை அவள் கடைக்கண்ணால் கண்டிட அவள் என் பின்னால் நடப்பதும் உண்டு.

மாலையில் பள்ளி முடிந்ததும் அவள், தட்டச்சு கற்றுக் கொள்ள கமலாலயக் குளக்கரையில் இருந்த ஒரு ‘டைப் ரைட்டிங்’ நிலையத்துக்குச் செல்வாள். நானும் தட்டச்சு கற்றுக் கொள்வதில் ஆர்வம் கொண்டிருப்பதாக என் வீட்டில் பொய்யுரைத்து மாதம் இரண்டு ரூபாய் சம்பளத்தை அந்த நிலையத்தில் வீணாக்கிக் கொண்டிருந்தேன். அவள் தட்டச்சு பயிற்சி முடித்துப் புறப்பட்டவுடன் நானும் புறப்பட்டு விடுவேன். என் தட்டச்சுப் பயிற்சியில் ஆங்கில எழுத்துக்களான ‘எல்-ஓ-வி-இ’ என்பதைத் தவிர வேறு எதையும் நான் கற்றுக் கொள்ளவில்லை. அந்த எழுத்துக்களை மட்டுமே தட்டச்சுப் பொறிக்குப் பதிலாக என் இதயத்தில் அடித்துப் பழகி, பதிய வைத்துக் கொண்டு சில நாட்கள் பைத்தியமாகத் திரிந்தேன்.

‘கண்ணொடு கண் நோக்கும் காதல்’ பிறகு கடிதக்காதலாக மாறியது. திருவாரூரில் நான் தங்கிப் படித்துக் கொண்டிருந்த வீட்டில் ஒரு சிறுவனும் சிறுமியும் என் அன்புக்குப் பாத்திரமானவர்கள். காலை எழுந்தவுடன் அவர்களுக்குப் படிப்பு சொல்லிக் கொடுப்பேன். சரியாகப் படிக்கச் சொல்லி அவர்களைக் கண்டிப்பதும் உண்டு. அந்தச் சிறுவனை மட்டும் காதைத் திருகித் தண்டிப்பதும் உண்டு. நான் தங்கிப் படித்த அந்த வீட்டுக்கு அருகில் அதே தெருவில்தான் என் சாந்தாவின் வீடும் இருந்தது. அவள் வீட்டுக் கொல்லைப்புறமும் என் பள்ளி நண்பன் ஒருவன் வீட்டுத் தெருவாசல் பகுதிகளும் எங்கள் விழிக்கணைகள் பாயும் காதல் களங்களாக இருந்தன. சில நாட்களில் என்னிடம் பாடம் பயின்று கொண்டிருந்த அந்தச் சிறுமி எங்களுக்கிடையே ‘தூதி’ ஆகி விட்டாள். ஒரு நாள் சந்தித்தே தீருவது என்று எங்கள் கடிதங்கள் உறுதிமுழக்கமிட்டன. அதன்படி அந்தி மாலை நேரத்தில் அவள் அம்மன் கோயிலுக்குப்போய் அர்ச்சனை செய்துவிட்டு, தட்டுடன் திரும்பும்போது அந்தக் குறுகலான சந்தில் உள்ள ‘வீரனார் கோயில்’ முன்பு, அரைகுறை இருட்டில் அருகருகே சந்தித்துவிட்டோம். அந்த ‘வீரனார்’ அறிய மறக்கமாட்டேன் என்று கையடித்துச் சத்தியம் செய்தாள். மனசாட்சி அறையக் கைவிடமாட்டேன் என்று நானும் உறுதி அளித்தேன். உடனே பிரிந்து விட்டோம்; அச்சம் எங்களை ஓங்கி ஓங்கி உதைத்ததால்!

சாந்தாவுக்கு மாப்பிள்ளை தேட அவசரத் திட்டம் வகுக்கப் பெற்றது. அவளோ கடைசிவரை போராடி இருக்கிறாள் எனக்காக. அதற்குள் அந்த வீட்டில் நடக்கும் அமளி என் வீட்டுக்கதவுகளைத் தட்டிவிட்டது. என்னிடம் கேட்டார்கள். ஆமாம் என்றேன். பகையை மறந்து சாந்தாவையே எனக்குப் பெண்கேட்க என் தந்தையும் தாயும் முதற்கட்டமாக என் உறவினர்களை அனுப்பினார்கள். அதற்குக் கிடைத்த பதில் என்ன?

‘‘அவன் கட்சி கட்சி என்று உருப்படாமல் அலைந்து கொண்டிருக்கிறான். அவனுக்கா பெண் கொடுக்க முடியும்? அப்படியே கொடுப்பதாக இருந்தாலும், அவன் சுயமரியாதைக் கல்யாணமல்லவா செய்து கொள்ள வேண்டுமென்பான். சரி, பெண் கொடுக்கிறோம். புரோகிதத் திருமணம் செய்து கொள்ளச் சம்மதிப்பானா?’’

பதில், பயங்கரமான கேள்விகளாக வெடித்தெழுந்தன. அந்தக் கேள்விகள் வடிவத்து நிபந்தனைகளை என்னால் ஏற்றுக்கொள்ள முடியுமா? எத்தனை எத்தனை சுயமரியாதைத் திருமணங்களை நான் முன்னின்றும் நானே சென்று வாழ்த்தியும் நடத்தி வைத்திருக்கிறேன். புரோகிதத் திருமணமென்றால் முடியாது என்று மறுத்தேன். அதற்கிடையே அவள் கடிதம் வந்தது கண்ணீரால் எழுதப்பட்டு! ‘‘காதலா? கொள்கையா?’’ இதுதான் அந்தக் கடிதத்தின் கருப்பொருள்.

‘‘ஊருக்குத்தான் உபதேசம்.

உனக்கும் எனக்கும்

இல்லையடியென்று கூறுவது

எத்தனின் செயல் அல்லவா?’’

என்ற கருத்தமைந்த பதிலை கண்டிப்பான பதிலை அவளுக்கு எழுதினேன். அவள் தனது பிடிவாதத்தினால் பெற்றோரை இணங்க வைப்பாள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அவளே இணங்கி விட்டாள் - அவர்கள் பார்த்த மாப்பிள்ளைக்குக் கழுத்தை நீட்ட!

ஏன். அவள்தான் அந்தக் கொள்கையை விட்டுக் கொடுத்திருக்கக் கூடாதா? இல்லை, நான்தான் என் கொள்கையை விட்டுக் கொடுத்திருக்கக்கூடாதா? அவளுக்குத்தான் ‘வீரனார்’ கோயில் சத்தியம் என்ன ஆயிற்று? எனக்குத்தான் நான் மனசாட்சிப்படி வழங்கிய உறுதி எங்கே யோயிற்று? எப்படியோ இங்கே காதல் ஒரு பின்னடைவை எதிர்கொள்ள நேரிட்டு விட்டது.

அதன் பின்னர் சில நாட்களில் ஒரு திகில் செய்தி& என்னை அதிர்ச்சியில் ஆழ்த்திய செய்தி. எனை விடுத்து வேறொருவனை மணந்த சாந்தா விதவையாகி விட்டாள்! அவள் வீட்டுக்கும் என் வீட்டுக்கும் தொடர்ந்து இருந்துவந்த பகை, அவளுக்கு ஏற்பட்ட அந்தச் சோகத்திற்குப் பிறகு மெல்ல மெல்ல அகன்று & இருவீட்டார் உறவிலும் ஒரு மறுமலர்ச்சி தோன்றியது. அந்த நேரத்தில் என் வேண்டுகோள் ஏற்கப்பட்டு, சாந்தாவின் மறுமணத்திற்கு அவளது வீட்டார் சம்மதம் தெரிவித்தார்கள். அவளுக்கு மறுவாழ்வு அளிக்க வந்தவனுக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவித்தேன். அவனையும் வாழ்த்தினேன். அன்று என் விருப்பப்படி சீர்திருத்தத் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளாமல் எங்களைப் பிரித்த அவளது பெற்றோர், சீர்திருத்தத்திலும் தீவிர சீர்திருத்தமான விதவைத் திருமணத்திற்கே ஒப்புதல் அளித்தார்கள் என்பது ஒரு விந்தையே!

அவள் இப்போது எங்கேயோ இருக்கிறாள் - எப்போதோ பார்த்த ஞாபகம் - எழுபதை நெருங்கிக் கொண்டிருக்கும் வயதுடையாள். ஆனாலும், இளமையில் நான் ரசித்த அந்தக் குண்டு குண்டான கெண்டை விழிகள் இன்றும் என் நினைவை விட்டு அகலுவதில்லை. அந்தக் கண்கள் மீது நான் கொண்ட காதல் அப்படியே மாறாமல் இருக்க வேண்டும் என்பதற்காக; இப்போது நான் அவளைப் பார்க்க விரும்பவில்லை.

(நன்றி : கலைஞரின் காதல் படிக்கட்டுகள், ஜூனியர் விகடன், 15-01-1997 இதழ்)

13 மே, 2013

'பாம்பே டாக்கீஸ்' : வயசு நூறு!


மே 3, 1913. பாம்பேவின் காரனேஷன் சினிமாட்டோகிராப் அரங்கில் ‘ராஜா ஹரிச்சந்திரா’ திரையிடப்படுகிறது. தாதாசாகேப் பால்கே தயாரித்து இயக்கியிருந்தார். மராத்தி படம் என்று விளம்பரப்படுத்தப்பட்டாலும், மவுனப்படத்துக்கு மொழி ஏது. பொய்யே அறியாத அரிச்சந்திரனின் கதை இந்தியர்கள் யாவருக்கும் மனப்பாடம் என்பதால் திரையில் நகர்ந்த காட்சிகளோடு ஒன்றிப் போனார்கள். படம் முடிந்ததும் அழுகை, ஆனந்தம் என்று வரையறையில்லாத உணர்வுகளோடு திரும்பினார்கள். ஒரே ஒரு பிரிண்டு போடப்பட்டு திரையிடப்பட்ட ‘ஹரிச்சந்திரா’ வெறும் சினிமா அல்ல. இந்திய சினிமா வரலாற்றின் தொடக்கம்.

1895ல் லூமியர் சகோதரர்களால் ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப்பட்ட சினிமா அடுத்த ஆண்டே இந்தியாவுக்கும் வந்துவிட்டது. தொடர்ந்து ஹீராலால் சென் இயக்கிய குறும்படமான ‘பாரசீக மலர்’ 1898ல் வெளியானது. தாதாசாகேப் டார்னேவின் ‘ஸ்ரீ புண்டாலிக்’ மே 18, 1912லேயே அதே பாம்பே காரனேஷன் சினிமாட்டோகிராப் அரங்கில் திரையிடப்பட்டது. ஆனால் இந்தியாவின் முதல் சினிமா என்கிற கவுரவம் அதற்கு மறுக்கப்பட்டது. ஏனெனில் பிரபலமான ஒரு மராத்திய நாடகத்தை கேமிராவில் பதிவு செய்து, அப்படியே திரையிட்டிருந்தார்கள். எனவேதான் சினிமாவுக்கென்றே திட்டமிடப்பட்டு, படமாக்கப்பட்ட ‘ஹரிச்சந்திரா’, இந்தியாவின் முதல் சினிமா என்கிற பெருமையை பெறுகிறது. சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், பெண்கள் யாரும் அப்போது சினிமாவில் நடிக்கத் தயாராக இல்லை. எனவே ஹரிச்சந்திராவின் மனைவியாக கூட ஒரு ஆணே, பெண் வேடம் போட்டு நடிக்க வேண்டியிருந்தது.
                                                   raja
ஆரம்பத்தில் சினிமாவை ஒரு பொருட்டாக மேல்தட்டு வர்க்கம் நினைக்கவில்லை. நாடகம்தான் கலை. சினிமா வெறும் பொழுதுபோக்கு என்று நிராகரித்தார்கள். பணம் செலவழித்து நாடகம் பார்க்க முடியாத, அந்த கலைவடிவை முழுமையாக உள்வாங்கிக் கொள்ள முடியாத பாட்டாளி வர்க்கம்தான் சினிமாவின் எளிமையிலும், கவர்ச்சியிலும் மயங்கிப்போய் அதற்கு கை கொடுத்தது.

ஆனால் காலச்சக்கரத்தின் சுழற்சி சினிமாவுக்கு ஆதரவாகவே அமைந்தது. சினிமா பேச ஆரம்பித்த பிறகு நாடகங்களுக்கு மவுசு குறைந்தது. சினிமா வெறும் கலையாக மட்டும் வளராமல் மக்களிடையே பிரச்சாரம் செய்யக்கூடிய ஊடகமாகவும் வளர்ந்துவிட்டதால், ஆரம்பத்தில் அதை புறக்கணித்தவர்களும் கட்சிமாறி வந்து சினிமாவை ஆக்கிரமிக்கத் தொடங்கினார்கள். குறிப்பாக 1940ல் தொடங்கி 1960 வரை இந்தியாவில் கோலோச்சிய நெம்பர் ஒன் துறையாக சினிமா பரிணமித்தது. இன்று இந்திய சினிமாவில் ஹிந்தி, மராத்தி, பெங்காலி, போஜ்புரி, அஸ்ஸாமி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், கொங்கணி, ஒரியா, சிந்தி, பஞ்சாபி, துளு, படுகா, நேபாளி என்று எண்ணற்ற மொழிகளில் வருடத்துக்கு ஆயிரக்கணக்கான திரைப்படங்கள் வெளிவருகின்றன. உலகளவில் சினிமாவை தங்கள் வாழ்வின் அங்கமாக கொண்டாடும் சமூகத்தை வேறெங்கும் காணமுடியாது.

alamara
இப்படிப்பட்ட இந்திய சினிமாவுக்கு கடந்துப்போன மே 3 அன்றுதான் நூற்றாண்டு நிறைவு. சினிமாவின் நூற்றாண்டை எப்படிக் கொண்டாடுவது. கொண்டாட்டம் என்றாலே, நமக்கு திருவிழாதான். சினிமாக்காரனுக்கு சினிமா எடுப்பதுதானே திருவிழா. எனவே இந்திய சினிமா நூற்றாண்டை கவுரவிக்கும் முகமாக ‘பாம்பே டாக்கீஸ்’ திரைப்படம் வெளியானது.


நம்மூர் சினிமா மீது அயல்நாட்டு விமர்சகர்கள் சில கடுமையான விமர்சனங்களை முன்வைக்கிறார்கள். டவுன்லோடு சிந்தனை கொண்ட நம்மூர் விமர்சகர்களும், அறிவுஜீவிகளும் அவற்றின் மீது எவ்வித ஆராய்ச்சியோ, அலசலோ செய்யாமல் அதே விமர்சனங்களை தாங்கள் கண்டுபிடித்தது மாதிரி அப்படியே வழிமொழிகிறார்கள்.

அவற்றில் சில முக்கியமான விமர்சனங்கள் :

காலாவதி ஆகிப்போன ஆதிகால புராணங்களையே, இந்தியர்கள் இன்னமும் வேறு வேறு வடிவங்களில் சினிமா ஆக்கிக்கொண்டு இருக்கிறார்கள். புதிய சமகால கதைகளை உருவாக்கும் திறன் இந்திய படைப்பாளிகளுக்கு இல்லை.

இந்திய சினிமாவில் பெண்களுக்கு தரப்படும் இடம் மோசமானது. காட்டு மிராண்டித்தனமானது. மார்புகளை குலுக்கி, தொடைகளை ஆட்டி, தொப்புளைக் காட்டும் கவர்ச்சிப் பதுமைகளாக மட்டுமே, இந்திய சினிமாக்களில் பெண்கள் இடம் பெறுகிறார்கள்.

இவர்களுக்கு சினிமாவின் வடிவமே தெரியாது. காட்சிகளால் சொல்ல வேண்டியவற்றை வசனங்களில் பக்கம் பக்கமாக ஒப்பிக்கிறார்கள். சினிமா என்பது காட்சி வடிவம் என்பதே, இந்திய சினிமா இயக்குனர்களுக்கு தெரியாது.

ஒரு ஹீரோ. ஒரு ஹீரோயின். ஒரு வில்லன். அம்மா. தங்கை. அப்பா. நாலு சண்டை. ஆறு பாட்டு. இவ்வளவுதான் இந்திய சினிமா. அரைத்த மாவையே நூறு ஆண்டுகளாக திருப்பித் திருப்பி அரைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்களே நட்சத்திரங்களை உருவாக்கி அவர்களுக்கு கோயில் கட்டி தீபாரதனை காட்டுகிறார்கள். சினிமாவுக்காக கதை என்பது போய், நட்சத்திரங்களுக்காக கதை விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தப் பட்டியலை நீட்டித்துக்கொண்டே போகலாம். குறைந்தபட்சம் நூறு பாயிண்டுகளாகவது தேறும். நூறு ஆண்டு சினிமா அல்லவா.

bombaytalkies8
நூற்றாண்டை கொண்டாடுவதோடு இல்லாமல், இந்த விமர்சனங்களுக்கும் பதில் தரவேண்டுமென்ற வெறி பாம்பே டாக்கீஸாருக்கு இருக்கிறது. எனவேதான் எதுவெல்லாம் இந்திய சினிமா என்று பொதுப்புத்தியில் பதிந்துப் போயிருக்கிறதோ, அதுவெல்லாம் இல்லாமல் ‘பாம்பே டாக்கீஸ்’ எடுத்திருக்கிறார்கள். இந்திய சினிமாவின் தற்காலப் போக்கினை தீர்மானிக்கக்குடிய நடிகர்களும், கலைஞர்களும் பங்களித்திருக்கிறார்கள்.


முக்கியமாக ‘பாம்பே டாக்கீஸ்’ வழக்கமான வடிவிலான ஒரே முழுநீளக்கதை அல்ல. நான்கு இயக்குனர்கள் தனித்தனியாக எடுத்துள்ள நான்கு சிறுகதைகள். கரண் ஜோஹர், திபாகர் பானர்ஜி, ஸோயா அக்தர், அனுராக் காஷ்யப் என்று இந்தியாவின் டாப் இயக்குனர்கள் தலா அரைமணி நேர குறும்படமாக எடுத்த நாலு படங்கள்தான் ஒட்டுமொத்தமாக ‘பாம்பே டாக்கீஸ்’

bombaytalkies6
கரண் ஜோஹரின் படம் ஓரினச்சேர்க்கை உறவை பற்றி எந்த நெருடலும் இல்லாமல் இயல்பாகப் பேசுகிறது. கோவலன் கண்ணகி கதைதான். மாதவியோடு குஜால் செய்த கோவலனை கண்ணகி ஏற்றுக் கொண்டாளா, இல்லையா? இந்தப் படத்தில் கோவலன் இன்னொரு ஆணோடு, கொஞ்சம் ‘லவ்’ ஆகிவிடுகிறான். உடனடியாக அருவருப்பாக உணர்ந்தாலும், உலகப் போக்கை உணர்ந்த நாயகி, “இதெல்லாம் இந்தக் காலத்தில் சகஜம்தான்” என்று இயல்பாகிறாள். ஓரினச் சேர்க்கையாளர்களை சைக்கோக்கள் மாதிரியும், காமவெறி மிருகங்களாகவும் இதுவரை சித்தரித்த இந்திய சினிமா, இந்த அரைமணி நேர குறும்படத்தில் அவர்களும் இயல்பானவர்களே. சொல்லப்போனால் வாழ்க்கையை ரசித்து வாழ்பவர்கள் என்கிற பிம்பத்தை அழுத்தமாக பதிவு செய்கிறது. இரண்டு ஆண்களுக்கு இடையே அமர்க்களமான, அழுத்தமான லிப்-டூ-லிப் முத்தக்காட்சியும் உண்டு.


திபாகர் பானர்ஜியின் படம் தோல்வியடைந்த ஒரு நடிகனின் ஒரு நாள் வாழ்வை சித்தரிக்கிறது. அவனது குழந்தைக்கு தினமும் ஒரு கதை சொல்ல வேண்டும். முந்தைய நாள் சொல்வதற்கு அவனிடம் கதை எதுவுமில்லை. அன்று அவனுக்கு ஒரு சினிமாவில் ஒரே ஒரு காட்சியில் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது. வசனமற்ற பாத்திரம். ஓரிரு நொடி ஃப்ரேமில் வந்துப்போகும் பாத்திரம். ஆனாலும் சினிமாவில் நடித்துவிட்டான். அன்று இரவு அவன் குழந்தையிடம் சொல்ல கதை கிடைத்துவிட்டது. தான் சினிமாவில் நடித்த கதையை திரைக்கதை வசனத்தோடு மிகைப்படுத்தி சிறப்பாக சொல்லி அசத்துகிறான். திரையில் பாத்திரங்கள் பேசும் வசனங்களில், ஒரு கதை நேரடியாக சொல்லப்படுகிறது. பின்னணிக் காட்சிகளில் நிறைய ஹைக்கூ கதைகள் மறைமுகமாக சொல்லப்படுகின்றன. பார்வையாளனே தனக்கேற்றாற் வகையில் அக்கதைகளை உருவாக்கிக்கொள்ளலாம் என்பது இப்படத்தின் சிறப்பம்சம்.

bombaytalkies4
ஸோயா அக்தரின் படம் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த சிறுவனின் ஆசையை காட்சிப்படுத்துகிறது. மகன் என்னவோ ஆகி, நிறைய சம்பாதிக்க வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு நடுத்தர வர்க்கத்து அப்பாவின் கனவும். குழந்தைக்கு என்று ஆசையோ, கனவோ இருக்கக்கூடுமென்பது கூட, அவர்களுக்குத் தெரியாது. இந்திய நடுத்தர வர்க்கத்தை மறைமுகமாக கேலி செய்வதோடு, சுடும் யதார்த்தத்தை, சூப் போட்டு கொடுக்கிறார்கள். பையனுக்கு நடனக்கலையில்தான் ஆசை. அப்பாவோ அவனை வலுக்கட்டாயமாக விளையாட்டுகளில் ஈடுபடுத்தி, உடல் வலிமை இருந்தால்தான் பைலட் ஆக முடியும் என்கிறார். தன்னுடைய கனவை ரகசியமாக பையன் எப்படி தற்காலிகமாக நனவாக்கிக் கொள்கிறான் என்பதோடு படம் முடிகிறது.


bombaytalkies3
அனுராக் காஷ்யப் இயக்கிய படம் தான், இந்திய சினிமா நூற்றாண்டுக்கு நிஜமான ட்ரிப்யூட். நம் சினிமாவின் ஸ்டார் வேல்யூ என்னவென்பதை மிகைப்படுத்தாமல், யதார்த்தமாக காட்சிப்படுத்துகிறார். வாரணாசியில் வசிக்கும் பெருசு ஒருவருக்கு ஓர் ஆசை. குலாப் ஜாமூன் மாதிரி ஒரு ஸ்வீட்டை ஜாடியில் அடைத்து வைத்திருக்கிறார். இதில் பாதியை அமிதாப் பச்சன் கடிக்க வேண்டும். மீதியை தான் சாப்பிட வேண்டும் என்கிற உயரிய 2020 இந்திய வல்லரசுக் கனவு. இப்பவோ, அப்பவோ என்றிருக்கும் அப்பாவின் இந்த ஆசையை நிறைவேற்றினால், இன்னும் சில ஆண்டுகள் கூடுதலாக வாழ்வார் என்று மகனுக்கு நம்பிக்கை. குலாப் ஜாமூன் ஜாடியோடு, மும்பைக்கு ரயில் ஏறுகிறான். அமிதாப்பை பார்த்தானா. குலாப் ஜாமூனை கடித்தாரா என்பதை லேசான நகைச்சுவை மற்றும் அழுத்தமான உணர்வுகளாக காட்சிப்படுத்துகிறார் காஷ்யப்.


தனித்தனி இயக்குனர்கள், தனித்தனி நடிகர்கள், தனித்தனி தொழில்நுட்பக் கலைஞர்கள் தனித் தனியாக நான்கு படங்களை இயக்கியிருந்தாலும், ஒட்டுமொத்தமாகப் பார்க்கப்போனால், தொழில்நுட்பத் தரத்தில், ஒரே மாதிரியாக, சர்வதேசத் தரத்தோடே படங்கள் அமைந்திருக்கிறது. நான்குக்கும் இசையமைப்பாளர் மட்டும் பொதுவானவர். அமித் திரிவேதி. மேலை நாட்டு இசையும், சாஸ்திரிய சங்கீதமாக சரிபாதியாக பங்குபோட்டு, தமிழ் திரையிசையில் கோலோச்சிய காலத்தில், நம்மூர் தெம்மாங்கையும், தாலாட்டையும், ஒப்பாரியையும் திரையிசை வடிவத்துக்கு கொண்டு வந்து, ஒப்பற்ற சாதனை செய்தவர் இசைஞானி இளையராஜா. கிட்டத்தட்ட அதே மாதிரி சாதனையை அமித் திரிவேதி இந்தியில் செய்துக் கொண்டிருக்கிறார். வடஇந்திய நாட்டுப்புற இசைக்கலைக்கு திரையில் உயிரூட்டிக் கொண்டிருக்கிறார்.
                                               bombaytalkies2
உள்ளடக்கம், தொழில்நுட்பத் தரத்தில் உலகின் எந்தவொரு சினிமாத்துறைக்கும், எங்களால் சவால் விட முடியுமென்று ‘பாம்பே டாக்கீஸ்’ மூலமாக இந்திய சினிமா அறைகூவல் விட்டிருக்கிறது.

ஆனால் நாங்கள் ஏன் அச்சுபிச்சுவென்று படமெடுக்கிறோம் என்கிற கேள்விக்கும் படத்துக்கு ‘எண்ட்’ கார்ட் போட்டுவிட்டு போனஸாக விடையளிக்கிறார்கள். இந்திய சினிமா நூற்றாண்டை கொண்டாட ஒரு ரசிகனுக்கு அழைப்பு வருகிறது. பாம்பே டாக்கீஸ் என்கிற அரங்குக்கு போகிறான். ஆயிரம் இருக்கைகள் இருக்கும் அரங்கில் அவன் மட்டும் படம் பார்க்கிறான். இந்திய சினிமாவின் மைல் கற்களாக அமைந்த படங்களின் காட்சிகள் ஒரே பாடலில் மாண்டேஜ் காட்சிகளாக ஒளிபரப்பாகிறது. மேலும் பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரில் தொடங்கி, நண்டு சிண்டு நட்சத்திரங்கள் வரை அவன் ஒருவனுக்காகவே, ஒட்டுமொத்தமாக விண்ணிலிருந்து மண்ணிறங்கி நடனம் ஆடுகிறார்கள். இந்த பாடலுக்கு வட இந்திய அரங்குகளில் எழுந்து நின்று தலைக்கு மேல் கையை தூக்கி தட்டுகிறார்கள் ரசிகர்கள். விசில் சத்தம் விண்ணைப் பிளக்கிறது. தங்கள் அபிமான நட்சத்திரம் தோன்றும்போது, ஒவ்வொரு ரசிகனும் கண்களில் நீர்க்கசிய ஓவென்று கத்துகிறான். “இதுதான் இந்திய சினிமா”வென்று கண்ணடிக்கிறார்கள் பாம்பே டாக்கீஸார்.

             end
 (நன்றி : cinemobita.com)

9 மே, 2013

காயத்ரி

டைக்கண் பார்வை மட்டுமே காயத்ரி தினமும் எனக்கு தரும் பரிசு. ‘சாரதா இன்ஸ்டிட்யூட் ஆஃப் காமர்ஸில்இருவரும் டைப்பிங் பழகிக் கொண்டிருந்தோம் (இப்போதெல்லாம் டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட் எங்காவது இருக்கிறதா?). அவளை அசத்த வேண்டும் என்பதற்காகவே காட்டுத்தனமாக கைவலிக்க அசுரவேகத்தில் டைப் அடிப்பேன். அடிக்கடி கீ, ரிப்பனில் சிக்கிக்கொள்ளும். படபடவென்று வேகமாக எழும் சப்தத்தில் இன்ஸ்டிட்யூட்டே திரும்பிப் பார்க்கும். அவளும் பார்ப்பாள்.

கொஞ்சம் குண்டாக ஆனால் க்யூட்டாக இருப்பாள். நானோ அப்போது ஒரு முப்பத்தி ரெண்டு கிலோ இருந்திருப்பேன். அவளுக்கு தம்பி மாதிரி தோற்றம்தான். காதலுக்குதான் கண்ணில்லையே. தனுஷ் என்பவர் ஹீரோவாகி சோனியா அகர்வால், நயன்தாரா போன்ற சூப்பர் ஃபிகர்களோடும் சாயாசிங் போன்ற சுமார் ஃபிகர்களோடும் ஜோடியாக நடித்தபிறகுதான், என்னைப்போன்ற கொத்தவரங்காய்களுக்கு காதல் ஒன்றும் எட்டாக்கனி அல்ல என்கிற தன்னம்பிக்கையே ஏற்பட்டது. க்ளாஸ் முடிந்து கிளம்பும்போது சைக்கிளில் கொஞ்சம் நெருக்கமாகவே ஃபாலோவுவேன். அடிக்கடி ஓரக்கண்ணால் பார்த்து, லேசாக சிரிப்பாள். போதாதா? அப்போதெல்லாம் காலை ஒன்பது மணிக்கே மடிப்பாக்கம் ஜிலோவென்று இருக்கும். கட்டழகுக் கன்னி தனியாகப் போகிறாளே என்கிற பதைபதைப்பில் பாடிகார்டானேன். ஏதேனும் அசம்பாவிதம் நடந்திருந்தாலும் எதிர்கொள்ளக்கூடிய பாடி கண்டிஷன் இல்லையென்றாலும், ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கை. கிட்டத்தட்ட ஓராண்டு இப்படியேதான் முரளி டைப் லவ்வு.

சண்டே டெஸ்ட்டின் போது ஒவ்வொரு முறையும் ஸ்பீட் மற்றும் நில் மிஸ்டேக்கில் பேட்ச் பர்ஸ்ட் வருவது நான்தான். காயத்ரி எவ்வளவோ முயற்சித்தும் ஐந்து ஸ்பெல்லிங் மிஸ்டேக்காவது செய்துவிடுவாள். இன்ஸ்ட்ரக்டரிடம் என் காதுபடவே சொல்வாள். “கிருஷ்ணாவை ஒருவாட்டியாவது ஜெயிச்சிடுவேன்”

என்னுடைய அண்ணன்தான் அப்போது இன்ஸ்டிட்யூட்டில் எனக்கு இன்ஸ்ட்ரக்டர். காயத்ரிக்கும்தான். என்னுடைய வளர்சிதை மாற்றங்களை உணர்ந்துக் கொண்டவர், ஒரு நாள் நேரடியாக கேட்டுவிட்டார்.

“காயத்ரியை லவ் பண்ணுறியாடா?”

“இல்லை” என்று சொன்னால், அவர் ரோஜாப்பூவோடு கிளம்பிவிடுவாரோ என்கிற அச்சத்தில் “ஆமாம்” என்று சொல்லிவிட்டேன்.

“சித்தப்பா கிட்டே சொல்ல மாட்டேன். ஆனா பாரு. அந்தப் பொண்ணு +2 முடிச்சிட்டு பி.எஸ்.சி., படிக்கப் போவுதாம். டிகிரிக்கு அப்புறமா அமெரிக்காவெல்லாம் போயி படிக்கப் போவுதாம். உன்னோட கண்டிஷன் என்னான்னு யோசி...”


படிக்கிற பொண்ணுங்க, படிக்காத தேவாங்குங்க என்று சமூகம் இரண்டு வர்க்கங்களாக பிளவுப்பட்டிருந்த யதார்த்தம் நெஞ்சை சுட்டது. “உன்னோட இப்போதைய கண்டிஷன் என்னா?” என்கிற அண்ணனின் கேள்வி, பாரதிராஜாவின் படத்தில் வருவதைப் போல இரண்டு கன்னங்களிலும் மாறி மாறி அறைந்தது. ஏனெனில் +1ல் அரையாண்டுத் தேர்வு மேத்ஸ் பேப்பரில் 200க்கு 1 மார்க் எடுத்து, காஞ்சிபுர மாவட்ட அளவில் சாதனை புரிந்திருந்தேன். 0 போடுவது செண்டிமெண்டலாக தனக்குப் பிடிக்காது என்பதாலேயே 1 போட்டிருக்கிறேன் என்று தன்னுடைய பெருந்தன்மையை இருபத்தியெட்டு பேர் மத்தியில் பறைசாற்றியிருந்தார் மேத்ஸ் மாஸ்டர். நாம்தான் காதல்வசப்பட்டு விட்டோமே. ஃபிகரை கணக்கு பண்ணுவோமா. இல்லை ஸ்கூலில் கணக்கு போடுவோமா?

எனவே, பி.எஸ்.சி. படிக்கப் போகும் பெண்ணை கரெக்ட் செய்ய வேண்டுமானால், நான் அட்லீஸ்ட் பி.காம் பாஸ் செய்ய வேண்டும். அதற்கு முன்பாக +2 பாஸ் செய்தால்தான் காலேஜில் சீட்டு என்று முட்டாள்தனமான சம்பிரதாயம் இந்தியாவில் இருக்கிறது.

+2 பொதுத்தேர்வுக்கு முன்பாகவே அக்டோபரிலோ, செப்டம்பரிலோ டைப்ரைட்டிங் ஜூனியர் க்ரேட் தேர்வு நடந்தது. பல்லாவரம் ஸ்கூலில்தான் சென்டர். எங்கள் இன்ஸ்டிட்யூட் கேர்ள்ஸ் பர்ஸ்ட் பேட்ச். பாய்ஸ் செகண்ட் பேட்ச். தேர்வு முடிந்து வந்த காயத்ரி வாழ்க்கையில் முதன்முறையாக என்னிடம் வாய்திறந்துப் பேசினாள். “ஆல் த பெஸ்ட் கிருஷ்ணா”. கையை வேறு கொடுத்து ஷேக் ஹேண்ட் செய்தாள். மெத்துமெத்துவென்றிருந்தது அவளது விரல்கள். முதன்முறையாக ஒரு தேவதையோடு கைகுலுக்குகிறேன். ப்ரீஸரில் வைத்தது மாதிரி ஜில்லிட்டுப் போய்விட்டேன். கேஸ் பலூன் மாதிரி ஆகிவிட்டது உடம்பு. அடுத்த பத்து நிமிடத்தில் தேர்வு. எங்கிருந்து டைப்புவது. விரல்கள் நகரவேயில்லை. தட்டுத் தடுமாறி அடித்து முடித்தபோது, அசரீரியாக காயத்ரியின் குரல் கேட்டது. “கிருஷ்ணாவை ஒருவாட்டியாவது ஜெயிச்சிடுவேன்”

ரிசல்ட் வந்தபோது அதுதான் நடந்தது. காயத்ரி பர்ஸ்ட் க்ளாஸில் பாஸ் செய்திருந்தாள். வீக்லி டெஸ்ட்டுகளில் கூட தோல்வியே காணாத கிருஷ்ணா செகண்ட் க்ளாஸ். அதே இன்ஸ்ட்டிட்யூட்டில் சீனியர் க்ரேடுக்கு பழகத் தொடங்கினேன். படிப்பு பாழாகிவிடக் கூடாது என்று காயத்ரி நின்றுவிட்டாள். அடி மேல் அடியாக அடுத்து ப்ளஸ் டூவிலும் நமக்கு மேத்ஸ் ஊத்திக் கொண்டது. காயத்ரி எப்படியும் நல்ல மார்க்கில் பாஸ் செய்திருப்பாள். பி.எஸ்.சி சேர்ந்திருப்பாள். அமெரிக்காவுக்கோ, பிரிட்டனுக்கோ போயிருப்பாள். பி.எச்.டி. வாங்கியிருப்பாள். கல்யாணம் ஆகியிருக்கும். குழந்தை பிறந்திருக்கும். ஒருவேளை பையனுக்கு கிருஷ்ணா என்று பெயர் வைத்திருந்தாலும் வைத்திருக்கலாம்.


அதையெல்லாம் விடுங்க. ரிசல்ட் நேரத்தில் “பொண்ணுங்க. எப்படியெல்லாம் படிக்கிறாங்க. பசங்க வேஸ்ட்டு” என்று தமிழகத்தில் மாமாங்கம், மாமாங்கமாக மாமாக்கள் சொல்லி வருகிறார்கள். பசங்க ஏன் ஊத்திக்கிறாங்கன்னு பசங்களுக்குதானே தெரியும். தமிழக வரலாற்றில் ஆணினத்துக்கு நிரந்தரமாக படிந்துவிட்ட இந்த +2 கறையை, இம்முறை முற்றிலுமாக துடைத்தெறிந்திருக்கிறார்கள் நம் தம்பிகள். காயத்ரிகளை பழிவாங்கிவிட்ட மனநிறைவு ஏற்படுகிறது. இன்றிரவு நிம்மதியாக தூங்குவேன்.

7 மே, 2013

வாழ்த்துகள் தலைவரே


2006 வாக்கில் வலைப்பூவில் எழுத ஆரம்பித்து, அதன் மூலம் முதன்முதலாக தொலைபேசியில் பேசியவர் அவர்தான். முன்பாக மெயிலில் உரையாடியிருந்தோம்.

உங்க எழுத்துலே சுஜாதா வாசனை இருக்கு

சரிங்க. மாத்திக்கறேன்

எதுக்கு மாத்திக்கணும்.. அப்படியே இருக்கட்டுமே?

சுஜாதா வாசனை இருக்கிறதாவென்று தெரியாது. ஆனாலும் அவர் சொன்னதால் அப்படியே இருத்திக் கொண்டேன். தன்னை குறும்பட இயக்குனர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். குறும்படங்களுக்காக தனியாக ஒரு வெப்சைட் நடத்துகிறேன் என்றார். ‘நாளைய இயக்குனருக்குவெகுகாலம் முந்திய காலம் என்பதால், இதற்கெல்லாம் தனியாக வெப்சைட்டா என்று ஆச்சரியப்பட்டேன். அந்த வெப்சைட்டில் அவர் இயக்கியஆக்ஸிடெண்ட்டோடு வேறு சிலரின் படங்களும் ஏற்றப்பட்டிருந்தது.

கதை சொல்லிக்கிட்டிருக்கேன் தலைவரே. புரொட்யூஸர் கிடைச்சதுமே படம்தான்அடிக்கடி சொல்வார். “பாம்புகூட படம் எடுத்துடிச்சி. நீங்க சீக்கிரமா எடுங்க தலைவரேஎன்று சிலமுறை கலாய்த்திருக்கிறேன். அப்போது ஒரு கார்ப்பரேட் சினிமா நிறுவனத்தில் சீனியர் கண்டெண்ட் எக்ஸிக்யூடிவ்வாக இருந்தேன். “எங்க ஆபிஸ்லே மொத்தமா பத்து படம் எடுக்கப் போறாங்க. நீங்களும் ட்ரை பண்ணலாமில்லே?” என்றேன். “எங்க சித்தப்பாதான் உங்க சேர்மேன். தெரியுமா?” என்று ஆச்சரியப்படுத்தினார். அங்கே கதை சொன்னாரா என்று தெரியவில்லை.

சில நாட்களில் அவரும் வலைப்பூ எழுத வந்தார். சிறுகதை, சினிமாவென்று மசாலாதான். சக போட்டியாளர் என்பதால் நண்பர் என்றும் பார்க்காமல் பின்னூட்டங்களில் பின்னி பெடல் எடுத்துவிடுவேன். பயங்கர சண்டை நடக்கும். சில பேர் விலக்கிவிட முயற்சிப்பார்கள். பல பேர் தூண்டிவிட்டு குளிர் காய்வார்கள். யாருக்குமே தெரியாது. அவரும் நானும் ஏற்கனவே நண்பர்கள் என்று. அவருடைய கருத்துகளை நானோ, என்னுடைய கருத்துகளை அவரோ அப்படியே ஏற்றுக் கொள்வதில்லை. நண்பர்களாக இருக்க ஒத்த கருத்து இருந்தே ஆகவேண்டுமா என்ன?

பதிவுகளில் எழுதியதையெல்லாம் தொகுத்து வரிசையாக புத்தகங்களாக வெளியிட ஆரம்பித்தார். அவர் புத்தகங்களை வெளியிடவே புதியதாக பதிப்பகங்களும் தொடங்கப்பட்டன. அவரது சிறுகதைத் தொகுப்புக்கு விமர்சனக்கூட்டம் நடத்தினார்.

நீங்க பேசணும் தலைவரே

இதுமாதிரி புக்கு பத்தியெல்லாம் இதுவரைக்கும் பேசினதில்லை தலைவரே

அதனாலே என்ன.. எனக்கு நீங்க பேசுனா சந்தோஷமா இருக்கும்

முதன்முதலாக புத்தக விமர்சனத்தை மேடையில் செய்தது அவருக்காகதான். அதற்குப் பிறகு நான்கைந்து சான்ஸ் கிடைத்துவிட்டது. நல்ல ராசியான ஆள் அவர்.

அழிக்கப் பிறந்தவன்தொடர்கதையாக என்னுடைய வலைத்தளத்தில் வெளியிட்டு வந்தேன். அதை படித்தவர் உலகநாதனிடம் பேசியிருக்கிறார். உலகநாதனும், அவரும் இணைந்துதான் அதை புத்தகமாக கொண்டுவந்தார்கள். முன்பே வேறு சில நண்பர்களுக்கும் இதேமாதிரி உதவியிருக்கிறார். பொதுவாக நட்பு வட்டத்தில் இருக்கும் எல்லோருடைய சுக துக்கங்களுக்கும் முன்வரிசையில் வந்து நிற்கும் குணம் கொண்டவர். எவ்வளவு யோசித்துப் பார்த்தாலும் அவரை வெறுப்பதற்கு ஒரு காரணம் யாருக்கும் கிடைக்கவே கிடைக்காது. அவர் மீது எதற்காகவாவது கோபம் வந்தாலும், நேரில் அவர் முகத்தை பார்த்ததுமே சிரிப்பு வந்துவிடும். ஒருமாதிரி காமெடியான முகம் கொண்டவர். எப்போதும் புன்னகையோடே “வாங்க தலைவரே” என்று எதிர்கொண்டு கட்டிக் கொள்வார் (தொப்பைதான் கொஞ்சம் இடிக்கும்).

சாண் ஏறினால் முழம் சறுக்குவது சினிமாத் தொழிலின் பண்பு. ஆனால் சோர்வில்லாமல் பல்லாண்டுகளாக சறுக்கி, ஏறி, சறுக்கி, ஏறி இன்று ஒருவழியாக சிகரத்தை எட்டிவிட்டார். நண்பர்களின் வெற்றி, நம்முடைய வெற்றி. ‘தொட்டால் தொடரும்’ வெள்ளிவிழா காண வாழ்த்துகள் தலைவரே. ஆனா, படம் மொக்கையா வந்தா எந்த தயவுதாட்சண்யமும் பார்க்க மாட்டோம்.