9 மே, 2013

காயத்ரி

டைக்கண் பார்வை மட்டுமே காயத்ரி தினமும் எனக்கு தரும் பரிசு. ‘சாரதா இன்ஸ்டிட்யூட் ஆஃப் காமர்ஸில்இருவரும் டைப்பிங் பழகிக் கொண்டிருந்தோம் (இப்போதெல்லாம் டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட் எங்காவது இருக்கிறதா?). அவளை அசத்த வேண்டும் என்பதற்காகவே காட்டுத்தனமாக கைவலிக்க அசுரவேகத்தில் டைப் அடிப்பேன். அடிக்கடி கீ, ரிப்பனில் சிக்கிக்கொள்ளும். படபடவென்று வேகமாக எழும் சப்தத்தில் இன்ஸ்டிட்யூட்டே திரும்பிப் பார்க்கும். அவளும் பார்ப்பாள்.

கொஞ்சம் குண்டாக ஆனால் க்யூட்டாக இருப்பாள். நானோ அப்போது ஒரு முப்பத்தி ரெண்டு கிலோ இருந்திருப்பேன். அவளுக்கு தம்பி மாதிரி தோற்றம்தான். காதலுக்குதான் கண்ணில்லையே. தனுஷ் என்பவர் ஹீரோவாகி சோனியா அகர்வால், நயன்தாரா போன்ற சூப்பர் ஃபிகர்களோடும் சாயாசிங் போன்ற சுமார் ஃபிகர்களோடும் ஜோடியாக நடித்தபிறகுதான், என்னைப்போன்ற கொத்தவரங்காய்களுக்கு காதல் ஒன்றும் எட்டாக்கனி அல்ல என்கிற தன்னம்பிக்கையே ஏற்பட்டது. க்ளாஸ் முடிந்து கிளம்பும்போது சைக்கிளில் கொஞ்சம் நெருக்கமாகவே ஃபாலோவுவேன். அடிக்கடி ஓரக்கண்ணால் பார்த்து, லேசாக சிரிப்பாள். போதாதா? அப்போதெல்லாம் காலை ஒன்பது மணிக்கே மடிப்பாக்கம் ஜிலோவென்று இருக்கும். கட்டழகுக் கன்னி தனியாகப் போகிறாளே என்கிற பதைபதைப்பில் பாடிகார்டானேன். ஏதேனும் அசம்பாவிதம் நடந்திருந்தாலும் எதிர்கொள்ளக்கூடிய பாடி கண்டிஷன் இல்லையென்றாலும், ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கை. கிட்டத்தட்ட ஓராண்டு இப்படியேதான் முரளி டைப் லவ்வு.

சண்டே டெஸ்ட்டின் போது ஒவ்வொரு முறையும் ஸ்பீட் மற்றும் நில் மிஸ்டேக்கில் பேட்ச் பர்ஸ்ட் வருவது நான்தான். காயத்ரி எவ்வளவோ முயற்சித்தும் ஐந்து ஸ்பெல்லிங் மிஸ்டேக்காவது செய்துவிடுவாள். இன்ஸ்ட்ரக்டரிடம் என் காதுபடவே சொல்வாள். “கிருஷ்ணாவை ஒருவாட்டியாவது ஜெயிச்சிடுவேன்”

என்னுடைய அண்ணன்தான் அப்போது இன்ஸ்டிட்யூட்டில் எனக்கு இன்ஸ்ட்ரக்டர். காயத்ரிக்கும்தான். என்னுடைய வளர்சிதை மாற்றங்களை உணர்ந்துக் கொண்டவர், ஒரு நாள் நேரடியாக கேட்டுவிட்டார்.

“காயத்ரியை லவ் பண்ணுறியாடா?”

“இல்லை” என்று சொன்னால், அவர் ரோஜாப்பூவோடு கிளம்பிவிடுவாரோ என்கிற அச்சத்தில் “ஆமாம்” என்று சொல்லிவிட்டேன்.

“சித்தப்பா கிட்டே சொல்ல மாட்டேன். ஆனா பாரு. அந்தப் பொண்ணு +2 முடிச்சிட்டு பி.எஸ்.சி., படிக்கப் போவுதாம். டிகிரிக்கு அப்புறமா அமெரிக்காவெல்லாம் போயி படிக்கப் போவுதாம். உன்னோட கண்டிஷன் என்னான்னு யோசி...”


படிக்கிற பொண்ணுங்க, படிக்காத தேவாங்குங்க என்று சமூகம் இரண்டு வர்க்கங்களாக பிளவுப்பட்டிருந்த யதார்த்தம் நெஞ்சை சுட்டது. “உன்னோட இப்போதைய கண்டிஷன் என்னா?” என்கிற அண்ணனின் கேள்வி, பாரதிராஜாவின் படத்தில் வருவதைப் போல இரண்டு கன்னங்களிலும் மாறி மாறி அறைந்தது. ஏனெனில் +1ல் அரையாண்டுத் தேர்வு மேத்ஸ் பேப்பரில் 200க்கு 1 மார்க் எடுத்து, காஞ்சிபுர மாவட்ட அளவில் சாதனை புரிந்திருந்தேன். 0 போடுவது செண்டிமெண்டலாக தனக்குப் பிடிக்காது என்பதாலேயே 1 போட்டிருக்கிறேன் என்று தன்னுடைய பெருந்தன்மையை இருபத்தியெட்டு பேர் மத்தியில் பறைசாற்றியிருந்தார் மேத்ஸ் மாஸ்டர். நாம்தான் காதல்வசப்பட்டு விட்டோமே. ஃபிகரை கணக்கு பண்ணுவோமா. இல்லை ஸ்கூலில் கணக்கு போடுவோமா?

எனவே, பி.எஸ்.சி. படிக்கப் போகும் பெண்ணை கரெக்ட் செய்ய வேண்டுமானால், நான் அட்லீஸ்ட் பி.காம் பாஸ் செய்ய வேண்டும். அதற்கு முன்பாக +2 பாஸ் செய்தால்தான் காலேஜில் சீட்டு என்று முட்டாள்தனமான சம்பிரதாயம் இந்தியாவில் இருக்கிறது.

+2 பொதுத்தேர்வுக்கு முன்பாகவே அக்டோபரிலோ, செப்டம்பரிலோ டைப்ரைட்டிங் ஜூனியர் க்ரேட் தேர்வு நடந்தது. பல்லாவரம் ஸ்கூலில்தான் சென்டர். எங்கள் இன்ஸ்டிட்யூட் கேர்ள்ஸ் பர்ஸ்ட் பேட்ச். பாய்ஸ் செகண்ட் பேட்ச். தேர்வு முடிந்து வந்த காயத்ரி வாழ்க்கையில் முதன்முறையாக என்னிடம் வாய்திறந்துப் பேசினாள். “ஆல் த பெஸ்ட் கிருஷ்ணா”. கையை வேறு கொடுத்து ஷேக் ஹேண்ட் செய்தாள். மெத்துமெத்துவென்றிருந்தது அவளது விரல்கள். முதன்முறையாக ஒரு தேவதையோடு கைகுலுக்குகிறேன். ப்ரீஸரில் வைத்தது மாதிரி ஜில்லிட்டுப் போய்விட்டேன். கேஸ் பலூன் மாதிரி ஆகிவிட்டது உடம்பு. அடுத்த பத்து நிமிடத்தில் தேர்வு. எங்கிருந்து டைப்புவது. விரல்கள் நகரவேயில்லை. தட்டுத் தடுமாறி அடித்து முடித்தபோது, அசரீரியாக காயத்ரியின் குரல் கேட்டது. “கிருஷ்ணாவை ஒருவாட்டியாவது ஜெயிச்சிடுவேன்”

ரிசல்ட் வந்தபோது அதுதான் நடந்தது. காயத்ரி பர்ஸ்ட் க்ளாஸில் பாஸ் செய்திருந்தாள். வீக்லி டெஸ்ட்டுகளில் கூட தோல்வியே காணாத கிருஷ்ணா செகண்ட் க்ளாஸ். அதே இன்ஸ்ட்டிட்யூட்டில் சீனியர் க்ரேடுக்கு பழகத் தொடங்கினேன். படிப்பு பாழாகிவிடக் கூடாது என்று காயத்ரி நின்றுவிட்டாள். அடி மேல் அடியாக அடுத்து ப்ளஸ் டூவிலும் நமக்கு மேத்ஸ் ஊத்திக் கொண்டது. காயத்ரி எப்படியும் நல்ல மார்க்கில் பாஸ் செய்திருப்பாள். பி.எஸ்.சி சேர்ந்திருப்பாள். அமெரிக்காவுக்கோ, பிரிட்டனுக்கோ போயிருப்பாள். பி.எச்.டி. வாங்கியிருப்பாள். கல்யாணம் ஆகியிருக்கும். குழந்தை பிறந்திருக்கும். ஒருவேளை பையனுக்கு கிருஷ்ணா என்று பெயர் வைத்திருந்தாலும் வைத்திருக்கலாம்.


அதையெல்லாம் விடுங்க. ரிசல்ட் நேரத்தில் “பொண்ணுங்க. எப்படியெல்லாம் படிக்கிறாங்க. பசங்க வேஸ்ட்டு” என்று தமிழகத்தில் மாமாங்கம், மாமாங்கமாக மாமாக்கள் சொல்லி வருகிறார்கள். பசங்க ஏன் ஊத்திக்கிறாங்கன்னு பசங்களுக்குதானே தெரியும். தமிழக வரலாற்றில் ஆணினத்துக்கு நிரந்தரமாக படிந்துவிட்ட இந்த +2 கறையை, இம்முறை முற்றிலுமாக துடைத்தெறிந்திருக்கிறார்கள் நம் தம்பிகள். காயத்ரிகளை பழிவாங்கிவிட்ட மனநிறைவு ஏற்படுகிறது. இன்றிரவு நிம்மதியாக தூங்குவேன்.

14 கருத்துகள்:

  1. காதல், மோதல், கல்யாணம், என்று எதிர்பார்த்தேன். அது இல்லை எனக்கே மிக ஏமாற்றமாக இருந்தது.என்ன இருந்தாலும் இந்த அளவு தாழ்வு மனப்பான்மை கூடாது நண்பரே!

    பதிலளிநீக்கு
  2. //+1ல் அரையாண்டுத் தேர்வு மேத்ஸ் பேப்பரில் 200க்கு 1 மார்க் எடுத்து, காஞ்சிபுர மாவட்ட அளவில் சாதனை புரிந்திருந்தேன்// :)))) இவ்ளோ மக்கா நீங்க? அடடே... :))

    பதிலளிநீக்கு
  3. ஏ ஒன்.

    காலங்காலமாக மாணவர்கள் ஏன் பனிரெண்டாம் வகுப்புத் தேர்வுகளில் பின்வாங்குகிறார்கள் என்பதன் மர்ம முடிச்சை அவிழ்த்த நவீனயுக சங்கர்லாலே உமக்கு ஓ போடுகிறேன்.

    I am also praying for the first-rank holder boys to get a real life in their teen years.

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா10:13 AM, மே 10, 2013

    ///காயத்ரிகளை பழிவாங்கி விட்ட மனநிறைவு /// இந்த முறையும் ஒரு காயத்ரி தான் முதல் மார்க் வாங்கி இருக்கிறார் [1191] . better luck next time ! :))

    Long live Gayathris ..:)

    BanuGomes

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லா12:16 PM, மே 10, 2013

    இம்முறை முற்றிலுமாக துடைத்தெறிந்திருக்கிறார்கள் நம் தம்பிகள். காயத்ரிகளை பழிவாங்கிவிட்ட மனநிறைவு ஏற்படுகிறது. இன்றிரவு நிம்மதியாக தூங்குவேன். Madotica.

    பதிலளிநீக்கு
  6. +2 பாஸ் செய்தால்தான் காலேஜில் சீட்டு என்று முட்டாள்தனமான சம்பிரதாயம் இந்தியாவில் இருக்கிறது. YUVA SIR....KALAKITEENGA.....SUPEDR

    பதிலளிநீக்கு
  7. கையை வேறு கொடுத்து ஷேக் ஹேண்ட் செய்தாள். மெத்துமெத்துவென்றிருந்தது அவளது விரல்கள். /////

    பையன்களின் கையையே நாம் தொட்டு கொண்டிருந்துவிட்டு முதன்முதலில் ஒரு பெண்ணின் கையை தொடும்பொழுது அப்படிதான் மெத்து மெத்து என்று இருப்பதை உணர்வோம். ஏனென்றால் பெண்ணின் கையும் ஆணின் கையை போல இருக்கும் என்றுதான் நினைத்திருப்போம் . தொட்ட பிறகுதானே தெரியுது வித்தியாசம்

    பதிலளிநீக்கு
  8. boss.... attagasam.... looks like sujatha multiplied by sujatha .....

    பதிலளிநீக்கு
  9. பெயரில்லா6:50 PM, மே 10, 2013

    அண்ணா, சூப்பர் ....

    பதிலளிநீக்கு
  10. “காயத்ரியை லவ் பண்ணுறியாடா?”

    “இல்லை” என்று சொன்னால், அவர் ரோஜாப்பூவோடு கிளம்பிவிடுவாரோ என்கிற அச்சத்தில் “ஆமாம்” என்று சொல்லிவிட்டேன்.

    இந்த மாதிரியான முன் யோசனை முத்தண்ணாக்களும்

    ஆல் த பெஸ்ட் கிருஷ்ணா”. கையை வேறு கொடுத்து ஷேக் ஹேண்ட் செய்யும் போது

    எப்படி இ .வா ஆகிறார்கள் என்பதை அழகாக சொல்லியுள்ளிர்கள்

    பதிலளிநீக்கு
  11. I too had this kind of same experince in my life but not at type writting institue in tution centre. Same blood

    பதிலளிநீக்கு