3 நவம்பர், 2014

பினாமி ஆட்சி

முந்தைய அதிமுக ஆட்சியின் போது ஜெயலலிதாவுக்கு ‘வாய்தா ராணி’ பட்டம் வழங்கிய ஸ்டாலின், இம்முறை ‘பினாமி ஆட்சி’ என்கிற சொல்லை பிரபலப்படுத்தி வருகிறார். அப்பாவின் சாமர்த்தியம் இவருக்கும் இருக்கிறது. வெகுஜன அரசியலில் இதுபோன்ற கவர்ச்சியான word coining ஒரு தலைவருக்கு எப்பவும் அவசியம். ஆனாலும் அதிமுக முன்வைக்கும் ‘மக்களின் முதல்வர்’ கான்செப்ட்தான் டாப்.

* * * * * * *
ஷோபாசக்தியின் ‘கண்டிவீரன்’ கடைக்கு வந்துவிட்டது. ஏற்கனவே வாசித்த கதைகள்தான் என்றாலும் தொகுப்பாக வாசிக்கும்போது ஷோபாவின் வீச்சு இன்னும் வலிமையாக மூளையை தாக்குகிறது. விடுதலைப்புலிகள் vs சிங்கள ராணுவம்; இருவருக்குமிடையே சாண்ட்விச்சாக மாட்டிக்கொண்ட மக்களின் மனவியல்தான் அவரது ஏரியா.

சோகம் பிழியப்பிழிய ‘துலாபாரம்’ மாதிரி சொல்லவேண்டிய கதைகளை, ‘தெனாலி’ மாதிரி காமெடியாக எழுதுகிறார். உற்றுநோக்கினால், ஷோபாவின் கதைகளுக்கு ஒரே டெம்ப்ளேட்தான். கதை மாந்தர்கள் பேசுவதைவிட கதைசொல்லியே தொணதொணவென்று (ஆனால் ரசிக்கும்படியாக) பேசிக்கொண்டு இருப்பார். நாம் பரிதாபப்பட்டு ‘உச்சு’ கொட்டவேண்டிய மனிதர்களை அபத்தமானவர்களாகதான் காட்டுவார். அதே நேரம் வில்லன்களான விடுதலைப்புலிகளையும், சிங்கள ராணுவத்தையும் டபுள் அபத்தமாய் முன்வைப்பார். முடிக்கும்போது கடைசி பாராவில் நீங்கள் அடையவேண்டிய மகிழ்ச்சி, நெகிழ்ச்சி, புரட்சி, எழுச்சி, புட்டு, பொடலங்காய் உள்ளிட்ட நவரச உணர்வுகளையும் ஏற்படுத்திவிடுவதில்தான் ஷோபாவின் வெற்றி அடங்கியிருக்கிறது. இருபத்தோராம் நூற்றாண்டின் இணையற்ற கதைசொல்லி ஷோபாசக்தி. கடந்த நான்கு ஆண்டுகளில் அவர் எழுதிய அபாரமான சிறுகதைகளின் தொகுப்பு கண்டிவீரன்.

ஏற்கனவே கலைஞரை தமிழின விரோதியாக தமிழ் தேசியர்கள் வசைபாடிக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் தமிழின துரோகியான ஷோபாசக்தி, இந்த நூலை கலைஞருக்கு வேறு சமர்ப்பணம் செய்துத் தொலைத்திருக்கிறார். ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு என்று தமிழ் ஜோசியர்களுக்கு தெரியாதா என்ன. இதற்கும் கலைஞரின் தலைதான் உருளப் போகிறது. அவருக்கு இருக்கும் ஆயிரத்தெட்டு பிரச்சினைகள் போதாதா?

நூல் : கண்டிவீரன்

பக்கங்கள் : 192

விலை : ரூ.160

வெளியீடு : கருப்புப் பிரதிகள்
மொபைல் போன் – 9444272500
மின்னஞ்சல் : karuppupradhigal@gmail.com

* * * * * * *

நடைபெறுவதற்கு சாத்தியமே இல்லாத சம்பவங்கள் எப்படிதான் நடைபெறுகின்றனவோ என்று செய்தித்தாளை வாசிக்கும்போது அயர்ச்சி ஏற்படுகிறது.

கோவையில் ஏதோ ஆயத்த ஆடை தயாரிப்பு தொழிற்சாலையில் பணிபுரியும் பத்தொன்பது வயது பெண் அவர். ஆந்திராவைச் சேர்ந்தவர். ஊருக்கு ஏதோ திருவிழாவென்று சொந்தக்காரர்கள் சிலரோடு ஆந்திரா நோக்கி ரயிலில் சென்றுக் கொண்டிருந்தார். சேலத்துக்கு அருகில் ஒரு ஆற்றுப் பாலத்தை கடக்க ரயில் நிற்கிறது. திடீரென அந்தப் பெண்ணுக்கு தலைசுற்ற, கதவுக்கு அருகில் வந்து குனிந்து வாந்தியெடுக்கிறார். கையில் இருந்த பர்ஸ் கீழே விழுந்துவிடுகிறது. அதை எடுக்க இறங்குகிறார். ரயில் கிளம்பிவிடுகிறது.

இவரைப் போலவே அதே ரயிலில் ஓர் இருபத்துநான்கு வயது இளைஞர். ரயிலில் ஏறும்போதே நன்கு ‘ஸ்ருதி’ ஏற்றிக் கொண்டிருக்கிறார். வாந்தி பிரச்சினையால், போதையில் ரயிலில் இருந்து இறங்கிவிட்டிருக்கிறார்.

அந்த அதிகாலையில் ஆளரவமற்ற அந்தப் பகுதியில் இவர்கள் இருவர் மட்டும். போதையில் இருக்கும் இளைஞர் அந்தப் பெண்ணை மிரட்டி, புதர்பக்கமாக அழைத்துச் சென்று…

அதிகாலையில் டிராக் வழியாக இருவரும் நடந்து அருகிலிருக்கும் ரயில்நிலையத்துக்கு சென்றிருக்கிறார்கள். அங்கிருந்த ஸ்டேஷன் மாஸ்டரிடம் இந்தப் பெண் அழுதுகொண்டே அத்தனையையும் சொல்லியிருக்கிறார். போலிஸை அழைத்து அந்த இளைஞரை கைது செய்யவைத்தார் ஸ்டேஷன் மாஸ்டர். அப்போதுதான் போதை தெளிந்த இளைஞன் சொல்லியிருக்கிறான். “போதையிலே என்ன நடந்துச்சின்னே தெரியல்லைங்க. அப்படி ஏதாவது தப்புதண்டா நடந்திருந்தா நானே அந்தப் பொண்ணை கட்டிக்கறேன்”

* * * * * * *

மரம் நடுவது குறித்த மானமுள்ள கவிஞர் நண்பர் வா.மணிகண்டன் அவர்களுடைய பதிவினைப் பார்த்தேன். அனேகமாக இன்னும் இரண்டு மாதத்தில், சென்னை புத்தகக் காட்சி அரங்கில், ’கத்தி’ ஜீவானந்தத்துக்கு ரோட்டரி க்ளப் பாராட்டு விழா நடத்தியதைப் போன்ற ஒரு பாராட்டுவிழாவை இவருக்கு நாம் நடத்த வேண்டியிருக்கும் என்று தோன்றுகிறது. மரம் நடுவிழா நடத்துகிறோமோ இல்லையோ, குறைந்தபட்சம் இதையாவது நடத்தலாமே. என்ன சொல்லுகிறாய் தமிழ் அன்னையே?

கென்யாவைச் சேர்ந்த வாங்காரி மாத்தாய் இப்படிதான் சுற்றுச்சூழலுக்காக போராடி நோபல் பரிசெல்லாம் வென்றார். நம் இணைய, இலக்கிய உலகில் இருந்து அப்படியொருவர் நோபல் பெற்றால் நமக்கெல்லாம் பெருமைதானே?

நிசப்தமாக இருக்க வேண்டாம். அசப்தமாக இருப்போம். nobel causeக்கு கை கொடுக்கலாம் தோழர்களே!

* * * * * * *
‘நெருங்கி வா முத்தமிடாதே’ பார்த்தேன். லோபட்ஜெட் குறைகளையும் தாண்டி, இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணனின் intelligent படத்தை சுவாரஸ்யப்படுத்துகிறது. ஏற்கனவே ஓரிரு ரோட் ட்ரிப் ஸ்டோரி தமிழில் வந்திருக்கிறது. ஆனாலும் மசாலா கலக்காத அசலான ‘ரோட் ட்ரிப்’பாக இதை சொல்லலாம். ‘ஹைவே’ எல்லாம் வரும்போது வரட்டும்.

‘திடீரென்று இரண்டு மூன்று நாட்களுக்கு தொடர்ச்சியாக எங்குமே பெட்ரோல் டீசல் கிடைக்கவில்லை என்றால் என்னவாகும்’ என்று தடாலடியாக படம் ஆரம்பிக்கிறது. நாட்டுக்கு ஏதோ பெரிய ஆபத்து என்கிற பில்டப்போடு. இரண்டாம் பாதியில் அந்த பில்டப் படுமோசமாக பிசுபிசுத்துப் போகிறது என்று வைத்துக் கொள்ளுங்களேன். ஆனால் இடையில் லாரி ஓட்டத்தின்போது செருகிய காட்சிகளும், பாத்திரங்களும் அபாரம். குறிப்பாக விஜிசந்திரசேகரின் கதை அட்டகாசம். நைசாக திவ்யா-இளவரசன் கதையை எடுத்துக் கொண்டிருக்கிறார். ஆனாலும் கடைசியில் “விளைவுகளைப் பற்றி யோசிக்காம நீங்க பாட்டுக்கும் காதலிச்சிடறீங்க” என்கிற கீறல்விழுந்த அட்வைஸ்தான்.

நாடு ஸ்தம்பித்துவிட்டால் நாம் மட்டுமல்ல. ரோட்டோரத்தில் லாரிக்கு கைகாட்டும் பாலியல் தொழிலாளர்களுக்கும் கூட வாழ்வாதாரம் ஸ்தம்பித்துவிடும் என்றெல்லாம் யோசித்த லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு ஷேக் ஹேண்ட். முதல் பாதிக்கு சீன் யோசித்த அளவுக்கு, இரண்டாம் பாதிக்கு யோசிக்க முடியாத அவரது சோம்பேறித்தனத்துக்கு தலையில் குட்டு. தம்பி ராமையா மாதிரி பிஸி ஆர்ட்டிஸ்ட் கால்ஷீட் கொடுத்திருக்கிறார் என்பதற்காக, அவருடைய மொக்கை காமெடியை எல்லாம் அப்படியே வைக்காமல் எடிட்டித் தள்ளியிருக்கலாம்.

இதைவிட நூறு மடங்கு அதிக பொருட்செலவில் தயாரிக்கப்படும் படங்கள் அட்டக்கத்தியாக இருக்கும்போது, ‘நெருங்கிவா முத்தமிடாதே’ கொஞ்சம் ஷார்ப்பாகதான் இருக்கிறது. ஒருமுறை நெருங்கி முத்தமிடலாம் (படத்தை).

3 கருத்துகள்:

  1. சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா11:18 AM, நவம்பர் 04, 2014

    I guess, Vaidha Rani was coined by Azhagiri's daughter Kayalvizhi.

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா3:39 PM, நவம்பர் 04, 2014

    இதற்கும் கலைஞரின் தலைதான் உருளப் போகிறது. why? EXCEPT 3% PAAPPAANS, 97% PEOPLE SUPPORT DMK, 97% PEOPLE BELIEVE THERE IS NO 2G SCAM AND ALL ARE INNOCENT; 97% PEOPLE BELIVE KALAIGNAR IS "CORRUPTION FREE".

    பதிலளிநீக்கு