17 நவம்பர், 2014

குடிவெறியர்களே ஜாக்கிரதை!

குடிகாரர்களை குறிவைக்கும் குற்றவாளிகள்

வழிபறிக்கொள்ளை!

குடிமகன்களே உஷார்

புறநகர் பகுதிகளில் தனியாக வசிக்கும் வயதான தம்பதியர்களை கொள்ளையர்கள் குறிவைத்து குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவதை அறிந்திருப்போம். எளிதான இலக்கு என்பதால் பெரிய எதிர்ப்பு இல்லாமல் குற்றவாளிகள் தங்கள் ‘வேலை’யை சுலபமாக முடித்துக் கொள்வார்கள். காவல்துறையின் ‘பீட் ஆபிஸர்கள்’ பைக்கில் ரோந்து வந்து இந்த குற்றங்களை ஓரளவுக்கு கட்டுப்படுத்தி இருக்கிறார்கள். சமீபமாக டாஸ்மாக்கில் மூக்கு முட்ட குடித்துவிட்டு, கடுமையான போதையில் வருபவர்களை மடக்கி பணம், நகை கொள்ளையடிக்கும் சம்பவம் சென்னை நகரில் பரவிவருகிறது.

குடிமகன் புலம்பல்

சில நாட்களுக்கு முன்பு இரவு பதினோரு மணியளவில் நமக்கு ஒரு போன்கால் வந்தது. குழறலான குரலில் ஒருவர் பேசினார். பெருங்குடியிலிருந்து குரோம்பேட்டைக்கு பைக்கில் போய்க் கொண்டிருந்தவராம் அவர். இடையில் ‘ரிலாக்ஸ்’ ஆக ஒரு டாஸ்மாக் வாசலில் வண்டியை நிறுத்தியிருக்கிறார். லேசான கிறுகிறுப்போடு பைக்கை கிளப்பி, ஈச்சாங்காடு தாண்டி போய்க்கொண்டிருந்தவரிடம் இடையில் யாரோ கை காட்டி லிஃப்ட் கேட்டிருக்கிறார்கள்.

போதையிலும் சமூகசேவை உணவு கொண்டவரான அவர், லிஃப்ட் கேட்ட வழிப்போக்கருக்கு உதவி இருக்கிறார். பல்லாவரம் வேல்ஸ் காலேஜ் அருகே பைபாஸ் ரோட்டில் தன்னை இறக்கிவிடும்படி வழிப்போக்கர் சொன்னாராம். அங்கே வண்டி ஸ்லோ ஆனதுமே, இருளில் மரங்களுக்கு பின்னால் இருந்து சிலர் ஓடிவந்து இவரை சூழ்ந்திருக்கிறார்கள். யாருக்கு இவர் லிஃப்ட் கொடுத்தாரோ, அவரும் அந்த கும்பலில் ஒருவர்.

அப்புறமென்ன? செயின், மோதிரம், செல்ஃபோன், பர்ஸிலிருந்த பணம் அத்தனையும் காலி. “நான் டிரிங்ஸ் சாப்பிட்டிருக்கிறதாலே போலிஸுக்கு போகவும் பயமாயிருக்கு சார்” என்று கிட்டத்தட்ட அழும் குரலில் நம்மிடம் சொன்னார்.

மயிலை சம்பவம்

போன வாரத்தில் ஒரு நாள் இரவு பத்து மணி இருக்கும். நல்ல மழை பெய்து முடித்திருந்தது. மயிலாப்பூர் ரயில் நிலையத்துக்கு வலது பக்கமாக இருந்த படிக்கட்டில் ஏறிக்கொண்டிருந்தவருக்கு ஐம்பது வயது இருக்கும். லேசான ‘தள்ளாட்டம்’ தெரிந்தது.

அவரை இருபத்தி மூன்று வயது மதிக்கத்தக்க இளைஞர்கள் இருவர் திடீரென எதிர்கொண்டார்கள். “தீப்பெட்டி இருக்கா?” என்று கேட்டார்கள்.

அவர் “இல்லை” என்று நாக்குழறி டாஸ்மாக் வாசனையோடு சொன்னதுமே, அவர்களுக்கு தெரிந்துவிட்டது இவர் நிதானத்தில் இல்லையென்று. சட்டென்று அவரது முகத்தில் ஒருவர் ‘குத்து’ விட்டார். நிலைகுலைந்து கீழே விழுந்தவரின் பையை ஒருவர் பறித்தார். இன்னொருவர் பாண்ட் பாக்கெட்டில் கையை விட்டு பர்ஸை எடுக்க முனைந்தார். நிறைய பேர் நடமாடிக் கொண்டிருந்த ரயில்நிலையத்தில் பப்ளிக்காக இந்த சம்பவம் நடந்ததை பார்த்த பயணிகள் பலரும் ஆவலாக வேடிக்கை பார்த்தார்களே ஒழிய, அந்த இரு குற்றவாளிகளையும் தட்டிக் கேட்கவோ, தடுக்கவோ முனையவில்லை.

தினகரன் ஆக்‌ஷன்

பணிமுடிந்து வீட்டுக்கு திரும்ப ரயில்நிலையத்துக்கு வந்திருந்த தினகரன் பத்திரிகையாளர்கள் சிலர் உடனே அடிபட்டவரை காப்பாற்ற விரைந்தனர். இவர்கள் வருவதை கண்டதுமே ரவுடிகள் இருவரும் தப்பி ஓடினர். அங்கிருந்த ரயில்வே போலிஸ்காரரிடம் போய் தினகரன் ஊழியர் உடனே நடவடிக்கை எடுக்கும்படி கோரினார். “நான் ரயில்வே போலிஸ். வெளியே ரோட்டுக்கு ஓடிப்போய் அவனுங்களை பிடிக்க முடியாது. அதுவுமில்லாமே, அடிபட்டவர் குடிச்சிருக்காரு. கொஞ்சநாளாவே இதுமாதிரி குடிச்சிட்டு வர்றவங்களை குறிவெச்சி இதுமாதிரி நிறைய சம்பவம் நடக்குது” என்று பார்வையாளர் மாதிரியே அவரும் பேசினார்.

அவசரத்துக்கு பிரயோசனமில்லை

தலையில் அடித்துக்கொண்ட நம் பத்திரிகையாளர் உடனே ‘அவசர எண் 100’க்கு போன் அடித்திருக்கிறார். ரொம்ப நேரம் கழித்து போன் எடுக்கப்பட்டது. முழு சம்பவத்தையும் கேட்டவர்கள், ‘அப்படியா?’ என்று எதிர்கேள்வி போட்டிருக்கிறார்கள். இதற்கிடையே குடிமகனுக்கு முகத்தில் காயம் பட்டு ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது. 108க்கு போன் செய்து அவருக்கு முதலுதவி செய்ய ஏற்பாடு செய்தார்கள் தினகரன் ஊழியர்கள்.

தொடர்கதை

ஓரளவுக்கு ‘ஸ்டெடி’யாக இருந்த அங்கிருந்த இன்னொரு குடிமகன் சொன்னார். “முன்னாடியெல்லாம் குடிகாரனாலேதான் எல்லாருக்கும் பிரச்சினை. இப்போ குடிகாரனுக்கே பிரச்சினை பண்ண ஆரம்பிச்சிட்டானுங்க. தப்பிச்சி ஓடினவனுங்க பக்கத்து ஏரியா பசங்கதான். குடிச்சிட்டு வர்றவனுங்க கிட்டே கொள்ளையடிச்சா, போதையிலே இருக்குறவன் போலிஸுக்கு போவமாட்டான் என்கிறதுதான் அவனுங்களோட லாஜிக்கு” என்றார்.

இதே மாதிரி சம்பவங்கள் அடிக்கடி மயிலாப்பூர் ரயில்நிலையத்தில் நடக்கிறது. ஆனால் குடித்திருக்கிறோமே என்கிற குற்றவுணர்வால், பாதிக்கப்பட்ட அப்பாவிகள் போலிஸுக்கு போவதில்லை என்று அங்கிருந்த பொதுமக்கள் சிலர் சொன்னார்கள்.

ரோந்து தேவை

பேருந்து நிலையங்களுக்கும், ரயில் நிலையங்களுக்கு அருகில் டாஸ்மாக் கடைகள் இருப்பதாலேயே இம்மாதிரி குற்றச்செயல்கள் அதிகம் நடைபெறுகின்றன. பேருந்தோ, ரயிலோ வர கொஞ்சம் நேரம் எடுத்தால், பக்கத்தில்தானே கடை இருக்கிறது. ‘கேப்’பில் போய் ஒரு ‘கட்டிங்’ போட்டுவிட்டு வந்துவிடலாம் என்று குடிமகன்கள் நினைக்கிறார்கள். அவர்களது இந்த அவசரபோதைதான் வழிபறிக்கொள்ளைக்கு ஆளாக்குகிறது. டாஸ்மாக் பாரிலிருந்தே அவர்களை கவனித்து பின் தொடர்பவர்கள்தான், பலகீனமான சந்தர்ப்பத்தில் செயலில் இறங்குகிறார்கள்.

டாஸ்மாக் கடை வாசல்களில் போலிஸின் ரோந்து வாகனங்கள் நிற்கும் பட்சத்தில் இந்த புதிய முறை கொள்ளையை தடுக்க முடியும். அதே நேரம் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களையும் ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்த முடியும்.

மாநகர காவல் மனசு வைக்குமா?

(நன்றி : தினகரன் சண்டே ஸ்பெஷல்)

4 கருத்துகள்:

  1. ரொம்ப நகைச்சுவையாக இருக்குதே
    பல பிரச்சனைகளுக்கு காரணமாகும் டாஸ்மார்க்குக்கு போலீஸ் காவல் தேவையென்பது :(

    பதிலளிநீக்கு
  2. இவ்வளவு எழுதிய கட்டுரையாரிசியர் - குடிக்காமல் இருந்து விட்டால் இம்மாதிரி நிகழ்வுகளை தவிர்த்து விடலாம் என ஒரு வரி (சம்பிரதாயத்திற்காவது ) எழுதி இருக்கலாம் .

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா9:40 AM, நவம்பர் 18, 2014

    இதனால தான் பாரு குடிப்பதை விட்டுட்டாரோ? ஒரு மாதம் முன்பு தான் நல்ல குடி (!) குடித்தால் உடம்புக்கு ஒன்னும் ஆகாதுன்னு உபதேசம் செய்தார், அவ்!

    பதிலளிநீக்கு