19 அக்டோபர், 2011

யானையை காக்கும் வானம்பாடி!

அம்மா வாழ்க!

அம்மா என்றால் அதிரடி. அதிரடி என்றால் அம்மா. திரும்ப திரும்ப எத்தனை முறைதான் ‘அம்மா வாழ்க’ என்று கோஷம் போட்டுக் கொண்டே இருப்பதோ தெரியவில்லை. வாய்தான் வலிக்கிறது. பேசாமல் ‘தங்கத்தாரகை புரட்சித்தலைவி ஆதிபராசக்தி டாக்டர் அம்மா வாழ்க’ என்று நூற்றியெட்டு முறை சொல்லி, அதை ஒலிப்பதிவுச் செய்து, ஒரு டேப்ரிக்கார்டரை கழுத்தில் மாட்டி, தொடர்ச்சியாக ஒலிக்க வைக்கச் செய்துக்கொண்டே இருக்கலாமோ என்று யோசிக்கிறோம். இன்று காலை ஒரு நாளிதழின் சுவரொட்டியைக் கண்டதிலிருந்தே இந்த சிந்தனை நமக்குள் வலுபெற்று வருகிறது.

“கோயில் யானைகளுக்கு லாரி ஏற பயிற்சி!”

உலகத்திலேயே எந்த அரசியல் தலைவருக்காவது இப்படி ஒரு ஜீவகாருண்ய சிந்தனை தோன்றியிருக்குமா என்பது சந்தேகமே. தலைவர்களுக்கு மனிதாபிமானம்தான் இருக்குமே தவிர, யானாபிமானம் யாருக்கும் இருந்ததில்லை. மகாத்மா தொடங்கி அன்னாஹசாரே வரை கூட இதற்கு உதாரணமாக எடுத்துச் சொல்லலாம். தலைவர்களை விடுங்கள். சிந்தனையாளர்கள் சாக்ரடிஸில் தொடங்கி, நம்மூர் பெரியார் வரை யாருக்குமே தோன்றாதவை புரட்சித்தலைவி அம்மாவுக்கு மட்டும் எப்படித்தான் தோன்றுகிறதோ என்று தெரியவில்லை. இப்படியெல்லாம் சிந்தித்தால் அம்மா பயணிக்கும் வேனின் டயர் தடத்தைக்கூட தரையில் குப்புற விழுந்து ஓ.பி.எஸ். கும்பிடுவதில் ஆச்சரியமென்ன இருக்க முடியும்?

‘யானை டாக்டர்’ என்று ஜெயமோகனால் கதைதான் எழுத முடிந்தது. யானைகளை பாதுகாப்பது குறித்து ஊடகங்கள் அட்டைப்படக் கட்டுரைதான் எழுத முடிந்தது. நடிகர் ஜெயராமால் ஒரு யானையை வாங்கி வளர்க்கத்தான் முடிந்தது. ஜெமினி சர்க்கஸ் ஓனரால் யானையை வைத்து வித்தைதான் காட்ட முடிந்தது. தேவரால் யானையை வைத்து படம்தான் எடுக்க முடிந்தது. புரட்சித்தலைவரால் யானையோடு பாட்டுபாடி நடிக்கத்தான் முடிந்தது. ப்ளூகிராஸால் ‘யானைகளை பாதுகாப்போம்’ என்று பிரச்சாரம்தான் செய்ய முடிந்தது. ஆனால் யாராலுமே செய்ய முடியாததை செய்பவர்தான் நம் முதல்வர் அம்மா என்பது மேற்கண்ட பத்திரிகைச் செய்தியில் நாம் அறிந்துகொள்ள முடிகிறது.

‘அம்மாவும், யானைகளும்’ என்கிற தலைப்பில் முனைவர் பட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம் என்கிற அளவில் அம்மா ஆட்சியின் போதெல்லாம் யானைகளுக்கு சலுகைகளும், பயிற்சிகளும், திட்டங்களும் ஏராளமாக வழங்கப்பட்டு வருகிறது. அம்மாவே தனிப்பட்ட முறையிலும் கூட குருவாயூர் கோயிலுக்கு யானை வாங்கிக் கொடுத்ததை இங்கே நினைவுகூர வேண்டியிருக்கிறது. தமிழகத்தில் நடைமுறைக்கு வந்திருக்கும் யானைகளுக்கு புத்துணர்ச்சி முகாம் நடத்தும் திட்டமெல்லாம் இதுவரை உலகம் காணாதது.

இதையெல்லாம் புரட்சித்தலைவி அம்மா ஓட்டுக்காக செய்கிறார் என்று யாராவது நாக்குமேல் ஓட்டைப்பல்லைப் போட்டு பேசிவிட முடியாது. ஏனென்றால் யானைகளுக்குதான் ஓட்டே இல்லையே?

அம்மாவைத் தொழுவோம். யானைகளைக் காப்போம்.

17 கருத்துகள்:

  1. சூப்பர் பதிவு.

    என்னுடைய பதிவையும் படித்து கருத்துகளை பகிரவேண்டும் என அன்போடு உளமார இருகரம் கூப்பி வரவேற்கிறேன்.வருக நிறைய சுவையோடு பசியாறுக..கொஞ்சம் இளைப்பாறுக

    www.athishaonline.com

    பதிலளிநீக்கு
  2. ம்ம் என்றால் சிறைவாசம் ,ஏன் என்றால் வனவாசம். பார்த்து எழுதுங்க.

    பதிலளிநீக்கு
  3. //அம்மாவைத் தொழுவோம். யானைகளைக் காப்போம்.
    //
    லக்கிலுக் மேல கஞ்சா கேஸ் போடப்போறாங்களாமே?

    பதிலளிநீக்கு
  4. இந்த பதிவுக்கு இது வரைக்கும் கமெண்ட் போட்டவங்களில் எத்தனை பேர் ஒரிஜினல் எத்தனை பேர் செட்அப் சொல்லுங்க ;)

    பதிலளிநீக்கு
  5. ammaavai yaanaingareenga.athanaalathaan avangalukku aanai mela pasam athikamaaka ullathunnum solreenga.bangalore trip mudiyattum.appuramthan irukku.

    பதிலளிநீக்கு
  6. //
    இதையெல்லாம் புரட்சித்தலைவி அம்மா ஓட்டுக்காக செய்கிறார் என்று யாராவது நாக்குமேல் ஓட்டைப்பல்லைப் போட்டு பேசிவிட முடியாது. ஏனென்றால் யானைகளுக்குதான் ஓட்டே இல்லையே?

    //

    நக்கல்

    பதிலளிநீக்கு
  7. அம்மா இதெல்லாம் செய்வது ஏதேனும் தோஷத்தை நிவர்த்தி செய்வதற்காக இருக்கும் (சொத்து குவிப்பு வழக்கில் இருந்து தப்புவதற்காக இருக்கும், இப்படி வழக்குகளிருந்து தப்ப எடியூரப்பா கோவில் கோவிலாக சுற்றி கடைசியில் களியை பிரசாதமாக வாங்கியது நாடறியும்).கோவில் அன்னதான திட்டம், யானைகள் காப்பகம் திட்டம் போன்றவற்றை செய்தால் நீண்ட ஆயுளுடன் வாழலாம் (திருடலாம்,பேரம் பேசலாம்) என்று யாரேனும் சொல்லி இருப்பார்கள். ஏற்கனவே ,கேரள சோதிடர் ஒருவர் பேச்சைக் கேட்டு பழனி முருகன் மூலவர் சிலை முன்னால் பழைய உற்சவரை அகற்றி விட்டு புதிய சிலையை நிறுவினார் ,எதற்கு அப்படி திடீரென்று செய்தார் என்று விளங்கவில்லை. நாளை கோவில்களில் எல்லாம் வாழைப்பழத்திற்கு பதில் பலாப்பழத்தை படைக்க வேண்டும் என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதர்க்கில்லை. இவர் நல்லா இருக்கணும்னு அரசு பணத்தை செலவழிக்கிறது கேணத்தனமான செயல்..

    பதிலளிநீக்கு
  8. மலை கிராமங்களில்.. யானைகள் ஊருக்குள் வருவது தடுத்தால் சரிதான்..

    யாவரும் அறிந்த அம்மா கோஷங்களை எத்தனை முறை போட்டாலும் போதும்னு சொல்ல மாட்டாங்க ஆனால்.. புள்ளபூச்சி தே.மு.தி.க ச.ம.உக்கள்.. மேட்டூர் ல அணை இருக்கு.. அதுக்கு நலத்திட்டங்கள் வேணும்.. திருத்தணியில் அறுபடை முருகன் ஆலையம் உள்ளதால்.. நல்ல சாலைகள் வேணும் சொன்னாக்க.. புதுசா வந்தவங்க நமக்கு பால பாடம் நடத்துறாங்கன்னு சொல்லி உக்கார வச்சிடுவாங்க.... பாவம் அந்த ச.ம.உக்கள்.. தங்கள் தொகுதிக்கு ஏதாவது செய்து, அதுல கொஞ்சம் ஆட்டய போடலாம்ன்னு நெனச்சிருப்பாங்க.. அசிங்க படுத்தி உக்கார வச்சிட்டாங்க...

    பதிலளிநீக்கு
  9. கிருஷ்ணா,
    இதில் விஞ்ஞான திருடு ஒன்றும் வித்திட படவில்லையே. யானைகளுக்கு மதம் பிடிக்காமல் இருக்க யானைகளுக்கு புத்துணர்ச்சி முகாம் ஏதேனும் தவறு இருகிறதா? வளர்ப்பு யானைகள் மதம் பிடித்து கொன்ற உயிர்கள் எத்தனையோ?

    பதிலளிநீக்கு
  10. //தங்கத்தாரகை புரட்சித்தலைவி ஆதிபராசக்தி டாக்டர் அம்மா வாழ்க’ என்று நூற்றியெட்டு முறை சொல்லி, அதை ஒலிப்பதிவுச் செய்து, ஒரு டேப்ரிக்கார்டரை கழுத்தில் மாட்டி, தொடர்ச்சியாக ஒலிக்க வைக்கச் செய்துக்கொண்டே இருக்கலாமோ என்று யோசிக்கிறோம்//
    ஏன் இதை ரிங்டோன் ஆக செல்லில் போடலாமே??? காதுகள் இனிக்க, கண்கள் பனிக்க.....

    பதிலளிநீக்கு
  11. ச்சே அம்மா எது செஞ்சாலும் அதிலே ஒரு நொட்டை சொல்லி நக்கல் அடிப்பதே இந்த திமுககாரர்களுக்கு ஒரு பிழைப்பா போயிடுச்சு :-(

    பதிலளிநீக்கு
  12. ஒரு நாள் உன்னா விரதம்.. ஊப்ஸ்.. ஒரு வேளை உன்னா விரதத்தோடு ஒப்பிட்டு பார்த்தால் இது ஒன்றும் பெரிய காமெடி இல்லை.. என்ன தான் சொல்லுங்க.. ஒங்க தலைவர் காமெடிய அம்மாவால பிரேக் பண்ண முடியாது.. :)

    பதிலளிநீக்கு
  13. கேள்விபட்டது1: நூத்திஎட்டோ ஆயிரத்தி எட்டோ யானைகளை வைத்து கொண்டு நடத்தப்படும் யாகங்கள் குதிரைகளை வைத்து நடத்தப்படும் அஸ்வமேத யாகத்தை விட பலன் அளிக்கும்.

    கேள்விபட்டது2: நூத்தி எட்டு உயர் ஜாதி குதிரைகளை வாங்கி அஸ்வமேத யாகம் நடத்திவிட்டு பின் அதை ராணுவத்திடம் ஜெயலலிதா விற்றுவிட்டார்.

    ஞாபகத்திற்கு வருவது : ஒரு பொது கூட்டத்தில் பேசும்பொழுது மணி சங்கர் அய்யர் பேசியது 'யானையும் மனிதனை போல ஒரு உயிரினம் தானே, அதை வாங்கி எப்படி கோவிலுக்கு தானமாக கொடுக்குலாம். நான் ஜெயலலிதாவை குருவாயூருக்கு தானமாக கொடுக்கலாமென்று நினைக்கிறேன்'.

    பதிலளிநீக்கு
  14. ஜெயமோகனின் யானை டாக்டர் சிறுகதையில் ஒரு பகுதி..

    அதுவரை இன்னொரு பிளான் வச்சிருக்கேன்…’என்றார் டாக்டர் கே. ‘வருஷத்துக்கு ஒருமுறை கோயில்யானைகளை பக்கத்துல இருக்கிற காடுகளுக்கு கொண்டுபோயி ஒரு மாசம் வச்சிருக்கிறது. ஒருமாசம் காட்டுக்குள்ள விட்டாலே போதும் யானை பயங்கரமா ரிக்கவர் ஆயிடும். அது வனமிருகம். காட்டுக்காக எது உள்ளுக்குள்ள ஏங்கிண்டிருக்கு. மரங்களையும் செடிகளையும் தண்ணியையும் பாத்தாலே அது உற்சாகமாயிடும்… ரிப்போர்ட்டைப் பாத்தேல்ல? கோயில் யானைகள் எப்பவுமே டென்ஷனா இருக்கு. பெரும்பாலான கோயில்யானைகளுக்கு கடுமையான டயபடிஸ் இருக்கு. அதுகளோட காலிலே புண்ணு வந்தா ஆறுறதே இல்லை’

    பதிலளிநீக்கு