2 ஜூன், 2010

டாக்டர் பிரகாஷ்


டிசம்பர் 2001, அகமதாபாத்தில் நடந்து முடிந்த ஆர்த்தோபீடிக் கான்பரன்ஸில் கலந்துகொண்டு திரும்பி இருந்தேன். முந்தின நாள் இரவு அங்கு ஐந்து நட்சத்திர ஓட்டலில் தங்கினேன். இந்தப் பக்கம் என் மனைவி, அந்தப் பக்கம் நான், நடுவில் என் ஏழு வயது மகள்.

காலை 8.30 மணிக்கு என்னுடைய விமானம் சென்னையில் தரையிறங்கியது. முந்தின நாள் இரவு தான் நான் என் குடும்பத்தோடு கழிக்கும் கடைசி இரவு என்பது அப்போது எனக்கு தெரியாது.

ஆஸ்பத்திரியை நோக்கி காரை ஓட்டிக் கொண்டிருந்தேன். இன்று தான் என்னுடைய க்ளினிக்கில் கடைசியாக பேஷண்டுகளை பார்க்கப் போகிறேன் என்பதையும் உணரவில்லை. போன வாரம் செய்து முடித்த இடுப்பு எலும்பு மாற்று ஆபரேஷன் தான் நான் இறுதியாக ஆபரேஷன் தியேட்டரில் செய்த சிகிச்சை என்பதையும் அறியவில்லை. அதற்கு நான் எவ்வளவு பாடுபட்டு உரு கொடுத்திருந்தேன் தெரியுமா?

மொபைல் போனில் பேசிக்கொண்டிருந்தபோது இனிமேல் அதற்கு வாய்ப்பே வராது என்று கனவிலாவது நினைத்துப் பார்த்திருப்பேனா? அடுத்த சில வருடங்களுக்கு காரின் ஸ்டீயரிங் வீலை பிடிக்கப் போவதில்லை என்பது தெரியுமா?

போலிஸ் அவிழ்த்துவிட்ட கதைகளை கேட்ட என் மனைவி என்னோடு எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று முடிவெடுத்து விட்டார். விவாகரத்துக்கு விண்ணப்பித்தார். சம்மதித்தேன். கடந்த ஐந்தாண்டுகளில் என் மகளை ஒரு முறை கூட பார்க்கவே இல்லை. நீண்ட தலைமுடியோடு அழகான பெண்ணாக வளர்ந்து விட்டாள் என்று சொல்லக் கேள்வி.

எப்போதும் வேலை, வேலை என்று அலையும் என்னைப் போன்ற ஒருவனால் ஜெயிலில் எப்படிப் பொழுது போக்க முடியும்? கிடைத்த நேரத்தை எல்லாம் எழுதுவதில் செலவிட்டேன். 37 ஆயிரம் பக்கங்களில் 80 புத்தகங்களை எழுதிவிட்டேன்...

- டாக்டர் பிரகாஷ், 12.04.2006

* - * - * - * - * - * - * - *

டாக்டர் பிரகாஷை தெரியாதவர்கள் யாரும் தமிழ்நாட்டில் இருக்க முடியாது. உலகளவில் புகழ்பெற்ற முடநீக்கியல் (ஆர்த்தோபீடிக்) நிபுணர். தமிழ் பத்திரிகைகளுக்கோ செக்ஸ் டாக்டர். 2001 டிசம்பரில் இவர் தான் டாக் ஆஃப் தமிழ்நாடு. சென்னை அண்ணாநகரில் மருத்துவமனை வைத்திருந்த டாக்டர் பிரகாஷ் தன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த பெண்களை மயக்கி ஆபாச படம் எடுத்து இணையத்தளங்களுக்கு விற்றார் என்பது அவர் மீதான குற்றச்சாட்டு. அப்போது கூகிளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தையாக டாக்டர் பிரகாஷ் என்பது இருந்திருக்கும். இப்போதும் Dr. Prakash என்று டைப் செய்து தேடிப்பாருங்கள், அஜால் குஜால் படங்களாக வருகிறது. அவரது காலாஞ்சிக்குப்பம் கடற்கரை உல்லாச மாளிகை பற்றியெல்லாம் இஷ்டத்துக்கும் கட்டுக்கதைகள் அவிழ்த்துவிடப்பட்டன.

2001ல் கைதானவர் ஆறு ஆண்டுகள் சிறையில் இருந்தார். 2008 பிப்ரவரியில் அவர் வழக்கில் தீர்ப்பு வந்தது. டாக்டர் பிரகாஷுக்கு ஆயுள் தண்டனை கிடைத்தது. ஆறரை ஆண்டுகள் கைதியாக இருந்தவர் என்ன செய்தார்? புத்தகங்கள் எழுதினார். அவர் எழுதிய க்ரைம் நாவல் ஒன்று கோடம்பாக்கத்துக் காரர்களால் சுடப்பட்டு கமல் நடித்து படமாக வெளிவந்தது என்று கூட ஒரு முறை பகீர் பேட்டி கொடுத்தார்.

இவரது எழுத்துக்களை இப்போது 'பாக்கெட் நாவல்' ஜி.ஏ.அசோகன் தொடர்ந்து பாக்கெட் புக்ஸ் என்ற மாதமிருமுறை நாவலில் வெளியிட்டு வருகிறார். முதலில் ‘சிறையின் மறுபக்கம்' என்ற பெயரில் சிறுகதைத் தொகுதி ஒன்று வெளிவந்திருக்கிறது. அடுத்து ‘கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய்' என்ற பெயரில் 480 பக்க மெகாநாவல் ஒன்று வெளிவந்தது. தொடர்ந்து வேறு சில நாவல்களும் வெளிவந்து கொண்டிருக்கிறது.

‘க.பா.பொ, கா.கே.பொ' நாவலை 576 பக்கங்களில் டாக்டர் எழுதியிருந்தாராம். அனேகமாக தமிழில் மாத, வார நாவல் பார்மட்டில் வெளிவந்திருக்கும் நாவல்களிலேயே மிகப்பெரிய முதல் நாவலாக இது இருக்கலாம். அதை கஷ்டப்பட்டு எடிட் செய்து 480 பக்கங்களுக்கு சுருக்கியிருக்கிறார் அசோகன். ஒரு லட்சத்து நாற்பதாயிரம் வார்த்தைகள் இந்த நாவலில் இருக்கிறதாம், வாவ்..! இருபதாயிரம் வார்த்தைகள் எழுதுவதற்குள்ளாகவே என் டவுசர் கிழிந்தது. இத்தனைக்கும் இதையெல்லாம் எழுதுவதற்கு முன்பாக தமிழில் எதையுமே டாக்டர் படித்ததில்லையாம்.

மொத்தமாக 175 அத்தியாயங்கள். அத்தியாயங்களுக்கு டாக்டர் வைத்திருக்கும் தலைப்புகள் மட்டுமே மொக்கை. ஜெட் வேகத்தில் ஆரம்பிக்கும் நாவல் ஒளி வேகத்தில் தொடர்கிறது. ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் டாக்டர் வைக்கும் சஸ்பென்ஸில் 'நந்தினி 440 வோல்ட்ஸ்' காலத்து ராஜேஷ்குமார் தெரிகிறார். வெள்ளைச்சாமி என்ற பைனான்ஸியர் கொலை செய்யப்படுகிறார், முல்லை என்ற பெண்ணை காவல்துறை சந்தேகிக்கிறது. முல்லைக்கு ஆதரவாக அல்தாப் என்ற வக்கீல் நிஜம் பத்திரிகையின் உதவியை நாடுகிறார். நிஜம் பத்திரிகையின் ஆசிரியர் கணேஷ், துணையாசிரியர் சிவசங்கர், அல்தாப் மூவரும் இந்த கொலைவழக்கை புலனாய்வு செய்கிறார்கள். திடுக்கிடும் திருப்பங்களோடு நகரும் கதையில் எதிர்பாராத அதிரடி க்ளைமேக்ஸ்.

வர்ணனைகளில் டாக்டர் அசத்துகிறார். அடிக்கடி சோஃபியா லாரனையும், கேட் வின்ஸ்லட்டையும் துணைக்கு சேர்த்துக் கொள்கிறார். செக்ஸ் வர்ணனைகள் அருமை, டாக்டருக்கு சொல்லியா கொடுக்க வேண்டும்? கிட்டத்தட்ட நாவலில் வரும் எல்லா பெண் கேரக்டர்களின் மார்பகங்களையும் டாக்டர் மறக்காமல் வர்ணிக்கிறார். லைட்டான செக்ஸ் வர்ணனைகள் ‘ஙே' புகழ் ராஜேந்திரகுமாரை நினைவூட்டுகிறது. ஒரு ஐரனி தெரியுமா? தமிழில் அதிகமாக செக்ஸ் எழுதிய ‘ஙே' ராஜேந்திரகுமாரும், புஷ்பாதங்கதுரையும் கட்டை பிரம்மச்சாரிகள்.

நாவலில் ஆச்சரியப்படுத்தும் விஷயம் இயல்பான நகைச்சுவை. திணிக்கப்படாத தரமான நகைச்சுவையை, கதையை கெடுக்காமல் புகுத்துவது அவ்வளவு சுலபமான விஷயமல்ல. நகைச்சுவை அத்தியாயங்களில் பட்டுக்கோட்டை பிரபாகரின் ‘பிருந்தாவனமும், நொந்தகுமாரனும்' நினைவுக்கு வருகிறது (அந்த புத்தகத்தை தொலைத்துவிட்டேன், யாரிடமாவது இருந்தால் கொடுங்கள். ப்ரீமியம் ரேட்டில் வாங்கிக் கொள்கிறேன்)

ஒவ்வொரு கதாபாத்திரத்தையும், பாத்திரங்களுக்கான தன்மைகளையும் மிக விரிவாக சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறார். கணேஷ் பாத்திரம் சுஜாதாவின் கணேஷை நினைவுபடுத்துகிறது என்று முன்னுரையில் எடிட்டர் ஜி.ஏ. அசோகன் சொல்கிறார். எனக்கோ தசாவதாரம் பல்ராம் நாயுடுவை நினைவுறுத்துகிறது. சிவசங்கர் பாத்திரம் செம கலாட்டா, அவன் ஒரு டமாரு குமாரு. அல்தாப் ரொம்ப சீரியஸ். ஒரு கெட்ட போலிஸ் கேரக்டரும் உண்டு. முல்லை, பச்சை சேலை பாலியல் தொழிலாளி, புஷ்பா, பிபாஷா என்று பெண் கதாபாத்திரங்களை விவரிப்பதில் டாக்டரின் கற்பனை விண்ணைத் தொட்டிருக்கிறது.

மிக மிக சுவாரஸ்யமான நாவல், டாக்டரின் மற்ற எழுத்துக்களை மவுண்ட்ரோட் பிளாட்பாரங்களில் தேடிக்கண்டுபிடித்து வாசிக்க வேண்டும்.

14 கருத்துகள்:

  1. எந்த பதிப்பகம் !!! எங்கே கிடைக்கும் என்று போடவில்லையே..

    பதிலளிநீக்கு
  2. ஜீ.ஏ.பப்ளிகேஷன்ஸ் ரோமியோ. திருவல்லிக்கேணியில் அலுவலகம் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  3. ஒன்னு பண்ண சொல்லனும்...
    அவர வேறு ஏதாவது புனை பெயரில் எழுத சொல்லணும் ...
    அப்பத்தான் வாங்கி படிக்கவே செய்யுவாங்க...
    இல்லனா ...என்னதான் எழுதுனாலும் ..."இவன் எல்லாம் ஒரு ஆளுன்னு " இவருடைய பழைய நாவல வாசிக்க ஆரம்பிச்சுடுவாங்க .......

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா3:54 PM, ஜூன் 02, 2010

    கதையபார் கவிதைய பார்.

    கத எழுதறவணைப் பார்க்கதேன்னு பூச்சொ பேராசிரியர் சொல்லக் கேட்டதில்லையா

    பதிலளிநீக்கு
  5. டாக்டர் எழுதின "100 Minutes that I'll change the way you live" மிகவும் அருமை. படித்துப் பாருங்களேன்.

    கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் - இது உங்களுக்கில்லை; டாக்டருக்கு

    அன்புடன்
    சூப்பர் சூப்பு

    பதிலளிநீக்கு
  6. // நீண்ட தலைமுடியோடு அழகான பெண்ணாக வளர்ந்து விட்டாள் //

    மகளையே இவ்வாறு வர்நிப்பவன் நிச்சயமாக ரொம்ப நல்லவனா தான் இருப்பான்

    பதிலளிநீக்கு
  7. " பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்" அதே தலைப்பில் பி.கே.பி. அவர்களின் பதிப்பகம் மூலமாகவே புத்தகமாக வெளிவந்துள்ளது. அவர் எழுதிய மூன்று நகைச்சுவை நாவல்களின் தொகுப்பாக. (மற்ற இரண்டு: ஒரு நிஜமான பொய், மற்றும் இன்னொரு நாவல் பெயர் நினைவில்லை). லேண்ட்மார்க்-கில் கிடைக்க வாய்ப்புண்டு.

    பதிலளிநீக்கு
  8. டாக்டர் காமிக்ஸ் கூட படைத்திருக்கிறார்
    http://tamilcomic.blogspot.com/2009/09/blog-post.html

    பதிலளிநீக்கு
  9. லக்கி இதனை வாசிக்க ஆவலாக உள்ளேன் இங்கே மாத நாவல் கிடைக்கோ தெரியவில்லை தேடிப்பார்க்கின்றேன்.

    கலைஞரில் ராஜேஸ்குமாரின் விசாரணை தொடர்பார்ப்பதா? அழுகைச் சீரியல்களுக்கிடையில் அருமையான தொடர்.

    பதிலளிநீக்கு
  10. நண்பர்களே ஒரு மகிழ்ச்சியான செய்தி. நீண்டநாட்களாக தேடி அலைந்துகொண்டிருந்த பிருந்தாவனமும், நொந்தகுமாரனும் கிட்டத்தட்ட கிடைத்துவிட்டது.

    பழம்புத்தக ஆர்வலரான தோழர் கிங் விஸ்வா கோவையில் ஒரு அரதப்பழசான கடையில் தேடிப்பிடித்துவிட்டார் :-)

    பதிலளிநீக்கு
  11. லக்கி, கூழாங்கல்லுல மின்சாரம் கண்டுபிக்கற கதையா ? செம ஜாலியா இருக்குமே அது ! எனக்கு ரொம்ப பிடிச்ச புக்.

    பதிலளிநீக்கு
  12. பெயரில்லா10:37 AM, ஜூன் 04, 2010

    உடனே தேடி கண்டுபிடித்து வாங்கி படித்து விடுகிறேன். பகிர்தலுக்கு நன்றி. ஏன் இவரின் புத்தகங்கள் சரியாக promote செய்ய படவில்லை? ஏற்கனவே அவருக்கு இருக்கும் "புகழ்" புத்தகம் விற்பதற்கு உதவும் அல்லவா?

    பதிலளிநீக்கு
  13. என்கிட்ட டாக்டரோட இருட்டு உலகம் இருக்கு வேணுமா லக்கி..?


    www.narumugai.com

    பதிலளிநீக்கு
  14. செக்ஸ் டாக்டருக்குல் ஒரு நல்ல கதாசிரியர் இருந்து இருக்கிறார். அது ஜெயிலில் தான் வெளியாகிருக்கிறது வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு