12 மே, 2016

யமுடிக்கு மொகுடு டூ சுப்ரீம்

எனக்கு ஒரு பெரியப்பா இருக்கிறார். குட்டியும், புட்டியுமாக குஜாலாக இருந்தவர் என்பதால் கல்யாணம் காட்சியில் எல்லாம் ஆர்வமில்லாமல் மைனர் குஞ்சாக மடிப்பாக்கத்தில் சுற்றிக் கொண்டிருந்தார். நடுத்தர வயதை எட்டும் பருவத்தில் திடீரென ஞானோதயம் வந்து நெல்லூருக்கு போய் ஏதோ கம்பெனியில் செட்டில் ஆகி வடுக வந்தேறியாக மாறிவிட்டார். அங்கேயே கல்யாணம் செய்து (வடுக கலாச்சாரத்தின் படி ரெண்டு ஒய்ஃப் என்று கேள்வி) பிள்ளைகள் பெற்று சவுக்கியமாக வாழ்ந்து வந்தார்.

வருடத்துக்கு ஒருமுறை குடும்பத்தோடு சென்னைக்கு வருவார். விஜிபி கோல்டன் பீச், கிண்டி பார்க், மெரீனா பீச், சுற்றுலாப் பொருட்காட்சி, எம்.ஜி.ஆர் - அண்ணா சமாதியை எல்லாம் சடங்கு மாதிரி சுற்றிப் பார்த்துவிட்டு கிளம்புவார். வரும்போது கையோடு ஏகத்துக்கும் ஆடியோ கேசட்டுகளை அள்ளிக் கொண்டு வருவார். பெரும்பாலும் சிரஞ்சீவி படப்பாடல்கள்தான். பெரியப்பாவின் குழந்தைகள் இருவரும் புத்தி தெரியும்வரையை சிரஞ்சீவியை தங்கள் தாய்மாமன் என்றே நம்பிக் கொண்டிருந்தார்கள்.

‘தொங்க மொகுடு’, ‘த்ரினேத்ருடு’, ‘கைதி நம்பர் 786’, ‘யமுடிக்கி மொகுடு’, ‘அத்தக்கி யமுடு அம்மாய்க்கி மொகுடு’, ‘கேங்க் லீடர்’, ‘முட்டா மேஸ்திரி’, ‘ஜெகதீக வீருடு அதிலோக சுந்தரி’, ‘கர்ணா மொகுடு’, ‘கொண்டவீட்டி தொங்கா’ என்று தெலுங்குப் படங்களின் அறிமுகம் அப்போதுதான் கிடைத்தது. மொழி புரிகிறதோ இல்லையோ. துள்ளலான பாடல்களை கேட்டுக்கொண்டே இருக்கலாம். ஒவ்வொரு படத்தின் கதையையும் அவர்கள் திரைக்கதை, வசனத்தோடு இரண்டரை மணி நேரத்துக்கு ஒரு ஃப்ரேமை கூட மிஸ் செய்யாமல் சொல்வார்கள். சிரஞ்சீவிப் படமென்றால் ஒன்றுக்கு மூன்று முறை பார்ப்பார்களாம். ‘கேங் லீடர்’, ஆந்திராவில் தினசரி ஏழு காட்சிகளாக (விடியற்காலை காட்சி மட்டும் கிடையாது) நூறு நாள் ஓடிய தியேட்டர்கள் ஏராளம்.

டிவியில் போடும் தெலுங்குப் படங்கள் பெரும்பாலும் அழுது வடிந்துக் கொண்டிருந்தது அல்லது என்.டி.ஆர்., நாகேஸ்வரராவ் டைப் கிழட்டுப் படங்கள். பெரும் சிறப்புகள் வாய்ந்த சமகால சிரஞ்சீவியின் தெலுங்குப் படங்களை நம்மால் பார்த்து ரசிக்க முடியவில்லையே என்கிற என்னுடைய ஏக்கத்தை ரங்கா தியேட்டர் தீர்த்து வைத்தது. சனி, ஞாயிறு காலை காட்சிகளாக வாரந்தோறும் ஏதேனும் புதுப்படங்களை போட்டு குஷிப்படுத்த ஆரம்பித்தார்கள்.

அம்மாதிரி ஒருமுறை பார்த்த படம்தான் ‘யமுடிக்கு மொகுடு’. ‘எமனுக்கே புருஷன்’ என்பது மாதிரி ஏடாகூடமான மீனிங். நம்மூர் ‘அதிசயப்பிறவி’தான் அங்கே ‘யமுடிக்கு மொகுடு’. இதை பார்ப்பதற்கு முன்பே ‘அதிசயப்பிறவி’யை பார்த்துவிட்டேன் என்றாலும், ‘யமுடிக்கு மொகுடு’ ரொம்பவே கவர்ந்தது. காரணம், பாடல்களும், சிரஞ்சீவியின் அதிரடியான நடனமும். குறிப்பாக ராதாவோடு அவர் ஆடும் இந்த ஆட்டம் அபாரம். ‘அந்தம் இந்தோளம் ஆதாரம் தாம்பூலம்’ என்கிற இந்தப் பாட்டு முழுக்க சுப்ரீம் ஸ்டார் சிரஞ்சீவிக்கு செம பில்டப்பு. ‘அதிசயப்பிறவி’யிலும் இந்த சிச்சுவேஷனுக்கு ‘சிங்காரி பியாரி பியாரி’ என்று செம சாங்க். ‘அந்தநிதி அந்தாலநிதி அந்தகினி சந்தேலகதி’ என்கிற வரிகள் வரும்போது தியேட்டரே அலறும் (இந்த வரிகளின் மீனிங் ஏதாவது டபுளா?)
ராஜ் - கோட்டி என்று இரட்டை இசையமைப்பாளர்கள்தான் அப்போது நிறைய தெலுங்குப் படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருந்தார்கள். இளையராஜா அவர்களுக்கு கொஞ்சம் காஸ்ட்லியாக இருந்திருக்க வேண்டும். ஏ.ஆர்.ரகுமான் நீண்டகாலம் ராஜ் - கோட்டிகளிடம்தான் கீபோர்ட் வாசித்துக் கொண்டிருந்தார். ‘யமுடிக்கு மொகுடு’, ராஜ்-கோட்டி கைவண்ணம்தான்.

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாகியும் ‘யமுடிக்கு மொகுடு’ பாடல்கள் தெலுங்கு பேசும் ஊர்களில் எல்லாம் தொடர்ச்சியாக ஒலித்துக்கொண்டே இருக்கிறது. கடந்த வாரம் வெளியான ‘சுப்ரீம்’ படத்தில் மீண்டும் ரீமிக்ஸில் ஒலிக்கும்போதும், ‘அந்தம் இந்தோளம்’ பாட்டுக்கு அந்த காலத்தில் கிடைத்த அதே வரவேற்பு இப்போதும் தியேட்டரில் கிடைக்கிறது. ‘சுப்ரீம்’ படத்தின் ஹீரோ சாய்தரம்தேஜ். சிரஞ்சீவியின் தங்கை மகன். இவரது முந்தையப் படமான ‘சுப்ரமணியம் ஃபார் சேல்’ படத்திலும் ‘குவ்வா கோரிங் கதோ’ என்று ‘கைதி நம்பர் 786’ படத்தின் பாடலை ரீமிக்ஸ் அடித்து ஆடியிருந்தார். தான் நடிக்கும் எல்லாப் படத்திலும் தாய்மாமன் சிரஞ்சீவியின் பாடல் ஒன்றை ரீமிக்ஸ் செய்து ஆடியே தீருவேன் என்று அடம் பிடிக்கிறாராம் சாய்.
‘சுப்ரீம்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் திரையில் இந்தப் பாடலை போட்டுக் காட்ட விழாவுக்கு வந்திருந்த சினிமாக்காரர்களே விசிலடித்து டான்ஸ் ஆட ஆரம்பித்து விட்டார்களாம். படம் சூப்பர் டூப்பர்ஹிட் என்பதை தனியாக சொல்ல வேண்டியதே இல்லை.

3 கருத்துகள்:

  1. சிரிப்பைக் கட்டுப் படுத்த பிரம்ம பிரயத்தனப் பட்டுக்கொண்டிருக்கிறேன். வீடியோ லிங்க்ஸ் வேலை செய்யவில்லை. செக் பண்ணவும்

    பதிலளிநீக்கு
  2. இங்கே வருகை தந்தால் சிரிக்கலாம் போலையே...!

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா10:18 AM, ஜூலை 06, 2016

    //பெரியப்பாவின் குழந்தைகள் இருவரும் புத்தி தெரியும்வரையை சிரஞ்சீவியை தங்கள் தாய்மாமன் என்றே நம்பிக் கொண்டிருந்தார்கள்.//
    தெறி

    பதிலளிநீக்கு