1 ஜூன், 2016

On that ground, I can divorce you!

எண்பத்தைந்து வயதில் தமிழில் முதல் நூலை எழுதுவதில் ஒரு சவுகரியம் இருக்கிறது. கதை விடுவதற்கு சம்பவங்களுக்கு பஞ்சமே இருக்காது. எண்பது ஆண்டு அனுபவம் கை கொடுக்கும். இரண்டாவதாக நாம் சொல்லும் கதைகளை வாசகர்கள் நம்பிதான் ஆகவேண்டும். சர்ச்சைகளை மறுத்துப் பேச நினைப்பவர்கள் ஏற்கனவே மரணித்து இருப்பார்கள்.

இதனால்தான் சாருஹாசன் இத்தனை ஆண்டுகளாக நூல்வெளியிடாமல் காத்துக் கொண்டிருந்தாரா என்று தெரியவில்லை. ஆனால் அவருடைய ஆட்டோ பயோகிராபியான ‘அழியாத கோலங்கள்’ அதகளமென்றுதான் சொல்ல வேண்டும். யாரையுமே விட்டுவைக்கவில்லை. போட்டுத் தாக்கி விட்டு போய்க்கொண்டே இருக்கிறார். தமிழின் முக்கியமான தன்வரலாற்று நூல்களில் இதையும் ஒன்றாக தாராளமாக சேர்த்துக் கொள்ளலாம்.

எண்பது ஆண்டுகளுக்கு முந்தைய ராமநாதபுரம் ஜில்லாவை எப்படி இவ்வளவு தத்ரூபமாக நம் கண் முன்பாக அவரால் நிறுத்த முடிகிறது என்று தெரியவில்லை. சாருஹாசனின் ஞாபகசக்தி அத்தனை துல்லியமாக ஆச்சரியப்படுத்துகிறது. அறுபது, எழுபது ஆண்டுகளுக்கு முன்பு அவர் பார்த்த ஆங்கில, மவுனப் படங்களின் காட்சிளையும், வசனங்களையும் அப்படியே இப்போதும் நினைவுகூர்கிறார்.

பரமக்குடியின் பிரபல வக்கீல் சீனிவாசனின் மகன். அவருடைய அப்பாவுக்கு காமராஜரும் நெருக்கம், ராமநாதபுரம் ராஜாவும் நெருக்கம். எம்.எஸ்.சுப்புலட்சுமி, தியாகராஜ பாகவதர் போன்றவர்கள் உலகநாயகன் பிறப்பதற்கு பதினைந்து, இருபது ஆண்டுகளுக்கு முன்பாகவே உலகநாயகன் வீட்டில்தான் தங்குவார்கள்.

உலகநாயகனுக்கு அண்ணன், மணிரத்னத்துக்கு மாமனார், சுஹாசினிக்கு அப்பா... அதெல்லாம் சரிதான். ஆனால், ஒன்பது வயது வரை ஸ்கூலுக்கே போகாதவர் சாருஹாசன். பள்ளியிலும் கொஞ்சம் மந்தமான மாணவர்தான். அடித்துப் பிடித்து எப்படியோ வக்கீல் ஆகிறார். மேல்படிப்பு படித்து அயல்நாட்டுக்கெல்லாம் போய் நன்கு சம்பாதித்து வாழலாம் என்று ஆசைப்படுகிறார். ஆனால், வாழ்க்கை அது பாட்டுக்கும் அடித்துச் செல்ல, எதிர்நீச்சல் போடாமல் அதன் போக்கிலேயே வாழ்கிறார். கடந்த காலம் குறித்து கசப்போ, நிகழ்காலம் குறித்து இனிப்போ, எதிர்காலம் குறித்து எதிர்ப்பார்ப்போ எதுவுமில்லை. பெரிதும் சவால்கள் இல்லாத சராசரி வாழ்க்கைதான். எனினும், அதையே ரசித்து ருசித்து வாழ்ந்திருப்பதால்தான் சாருஹாசன் குறித்து வாசிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது.

இவரை வாசிக்கும்போது ஒரு மாதிரி எடக்குமடக்கான ஆள் என்கிற எண்ணம் வருவதை தவிர்க்கவே முடியவில்லை. ‘கமலின் போர்க்கால மனைவிகளின் தாக்குதல்’ என்பது மாதிரி அவர் உபயோகப்படுத்தும் அதிரடி சொற்பிரயோகங்களை சமாளிப்பதற்குள் போதும் போதுமென்று ஆகிவிடுகிறது.

சாருஹாசனுக்கு அப்போது வயது இருபத்து ஐந்தை கூட எட்டவில்லை.

“நீ ஸ்மோக் பண்ணுறேன்னு தெரியும். குடிப்பியான்னு சந்தேகப்படறேன். வேற என்ன என்ன செய்வேன்னு எனக்கு தெரியாது. உனக்கு குடும்பப் பொறுப்பு வரணும்” என்கிறார் அப்பா சீனிவாசன்.

“எனக்கு கல்யாணம், குடும்பம் இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை” விட்டேத்தியாக பதில் சொல்கிறார் இவர்.

“You need sex. You are born, because your parents had sex…”

“If you worried about my sex, I know where to find it and when to find it”

“நீயா தேடினா அதுக்குப் பேர் தேவடியாதனம். நாங்க பண்ணிவெச்சாதான் அதுக்குப் பேர் கல்யாணம்”

அப்பாவுக்கும், மகனுக்கும் இதுபோன்ற வாதப்போர் நடப்பது அதிசயமில்லை. ஆனால், இந்த விவாதம் நடந்த ஆண்டு 1954 என்பதுதான் ஆச்சரியம்.

அப்போது சாருவின் அம்மா முழுகாமல் இருக்கிறார். “டெலிவரிக்கு அப்புறம் இருப்பேனோ, இருக்க மாட்டேனோ தெரியலை. இப்பவே உன் கல்யாணத்தை பார்க்கணும்”

மறுநாளே பெண் பார்க்கிறார்கள். சில நாட்களில் கல்யாணம். சாருஹாசனுக்கு கல்யாணம் ஆகி சரியாக அறுபத்தைந்தாவது நாளில்தான் உலகநாயகன் பிறந்தார்.

(நான் உலகநாயகனுக்கு உயிர் கொடுக்குமளவுக்கு ரசிகன்தான் என்றாலும், இந்த கட்டுரையில் கமல் என்பதற்குப் பதில் உலகநாயகன் என்று அடிக்கடி சொல்லுமளவுக்கு மறைகழன்ற ரசிகனல்ல. இருப்பினும், சாருவே கமலை குறிப்பிடும்போதெல்லாம் பெரும்பாலும் ‘உலகநாயகன்’ என்றே குறிப்பிடுவதால் நானும் அப்படியே குறிப்பிட்டுத் தொலைக்கிறேன்).

சாருவின் மனைவி அந்த காலத்திலேயே சர்ச்பார்க் காண்வென்டில் படித்தவர். கொஞ்சம் தூரத்து உறவுதான் போலிருக்கிறது. அவரது அம்மா உறவுமுறை சொல்லியிருக்கிறார். “என் மாமன் மகன் சக்கரவர்த்தி அய்யங்காரோட மனைவியின் சகோதரி மகள்”. இந்த இடத்தில் ஓபன் பிராக்கெட்டுக்கும், குளோசிங் பிராக்கெட்டுக்கும் இடையில் சாருவின் கமெண்ட். “உலகநாயகனின் சொந்தக்காரர்களில் ஒருவர் பேசுவதை போல இருக்கிறதா? இது உலகநாயகனின் சொந்த தாய் அய்யா!”

கல்யாணம் ஆன கொஞ்சநாளில் மனைவிக்கு ஆங்கிலத்தில் ஒரு காதல் கடிதம் எழுதியிருக்கிறார். அதற்கு எந்த பதிலுமே இல்லை. ஒருமுறை ஆதங்கமாக அதைப் பற்றி கேட்டபோது, அந்த லெட்டரில் இருந்த கிராம்மர், ஸ்பெல்லிங் மிஸ்டேக்கையெல்லாம் சரிசெய்து - அதாவது ப்ரூஃப் ரீடிங் - கொடுத்து, இப்படியெல்லாம் செய்தால் எப்படி பதிலுக்கு லவ்வு வரும் என்று கேட்டிருக்கிறார். சாருஹாசன் அதற்கு பிறகு அறுபது ஆண்டுகளாக காதல் கடிதமே எழுதியதில்லை.

---

தொழில் வக்கீல்தான் என்றாலும் அப்பா அளவுக்கு பெருசாக சம்பாதித்தவர் இல்லை. திமுக உருவாகி வளர்ந்துக் கொண்டிருந்த காலத்தில் நிறைய கேஸ் எடுத்திருக்கிறார். அவர் ஃபேமஸான கேஸ் ஒன்று முக்கியமானது.

மதுரையில் கல்லூரியில் சேர்ந்து மேற்படிப்பு படித்துக் கொண்டிருக்கிறார். பார்ட்டைமாக கோர்ட்டுக்கும் போய் கேஸ் பார்க்கிறார். அப்படிப்பட்ட சூழலில் ஒருநாள் இவர் ரோட்டில் நடந்துக் கொண்டிருக்கும்போது, இவருக்கு முன்பாக திடீரென்று ஒரு போலிஸ் ஜீப் வந்து நிற்கிறது. அந்த ஜீப்பில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் இருக்கிறார்.

“என்னை இமானுவேல் கேசுலே கைது பண்ணிட்டாங்க. அப்பா கிட்டே சொல்லி ஜாமீன் போடச் சொல்லு. நீயும் ஆஜராகணும்”

உடனே அடுத்த பஸ் பிடித்து ஊருக்குப் போய் அப்பாவிடம் விவரம் சொல்கிறார். “நான் காங்கிரஸ்காரன். கட்சிக்கு விரோதமா தேவருக்கு ஆஜராக மாட்டேன்” என்கிறார் அப்பா.

வீம்பாக இவரே மதுரைக்கு போய் மனுதாக்கல் செய்கிறார். தேவருக்கு ஜாமீன் கேட்டதால், சடாரென புகழ் பெற்று வெற்றிகரமான வக்கீல் ஆகிவிட்டார்.

---

சாருஹாசன் வெற்றிகரமான வக்கீலோ இல்லையோ, ஐம்பது வயதுக்கு மேல் நடிக்க வந்து தேசியவிருதெல்லாம் வாங்கிய நடிகர்.

நூலின் இரண்டாம் பாகம் முழுக்க சினிமாத்துறை நண்பர்கள், அவரை பாதித்த கலைஞர்களை பற்றி எழுதுகிறார். ஒரு மாதிரி மாற்று சினிமா ஆளாக அறியப்படும் சாருஹாசன் பாக்யராஜ், டி.ராஜேந்தர், சிலுக்கு, மணிவண்ணன் போன்றோரைப் பற்றியும் அவர்களுடனான தன்னுடைய அனுபவங்களையும் நறுக்காக குறிப்பிடுகிறார்.

டி.ஆருடன் ‘ஒரு தாயின் சபதம்’ படத்தில் சாருஹாசன் நடித்திருக்கிறார். ஒரே ஒரு துண்டு பேப்பர் கூட கையில் இல்லாமல் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் எல்லாவற்றையும் தலைக்குள் வைத்துக் கொண்டிருக்கும் சினிமாக்காரர் உலகிலேயே இவர் ஒருவர்தான் என்கிறார்.

டி.ஆர் குறித்து சாருஹாசன் குறிப்பிடும் ஒரு சம்பவம் சுவாரஸ்யமானது.

கிரேனில் மேலே அமர்ந்து கேமிரா கோணம் பார்த்துக் கொண்டிருக்கிறார் டி.ஆர்.

சட்டென்று, “யாருடா அவன் ஃபீல்டுலே செருப்பைப் போட்டவன். கிரேனை இறக்குடா. அந்த செருப்பாலேயே அவனை நான் அடிக்கப்போறேன்” என்று சொல்லி கீழே இறங்குகிறார்.

கீழே வந்ததும்தான் தெரிகிறது. அந்த செருப்பு டி.ஆருடையதுதான். ஆனால், சொன்ன சொல்லை காப்பாற்ற அந்த செருப்பையெடுத்து தன்னைதானே மூன்று முறை தலையில் அடித்துக் கொள்கிறார்.

---

கமல் பற்றி சாரு எழுதியிருப்பதெல்லாம் அவுட் ஆப் த ஸ்டேடியம் சிக்ஸர்ஸ். குறிப்பாக வாணியோடு வாழ்ந்து கொண்டிருந்தபோது சரிகாவையும் கமல் மெயிண்டெயின் செய்ய பட்ட கஷ்டங்கள், அதற்கு இவரது உதவிகள் என்று ரொம்ப பர்சனலான விஷயங்களை ஜஸ்ட் லைக் தட் போட்டு உடைக்கிறார்.
ஆயினும், கமலை மிக நல்ல மனிதனாகவே மதிக்கிறார். திருமணம் குறித்த கமலின் சிந்தனைகளை, அதன் நியாயங்களின் அடிப்படையில் இவர் ஏற்றுக் கொள்கிறார்.

ஒருமுறை வீட்டில் நடந்த பஞ்சாயத்து ஒன்றை அப்படியே எழுதுகிறார் சாரு.

“என் வீடு, என் நாய், என் தோட்டம், என் டிவி, என் கேமிரான்னு சொல்லிக்கிட்டே போறாளே. காலையிலேருந்து சாயங்காலம் வரை ஷூட்டிங்கில் உடல் ஒடிஞ்சு சம்பாதிக்கறவன் நான். என்னோடதுன்னு எதுவுமில்லையா?” - கமல்.

“நேத்து ஈவ்னிங் இவர் ரெண்டு மணி நேரம் நடிகை சரிகாவோட அறையில் இருந்திருக்கார். ஆன் தட் கிரவுண்ட், ஐ கேன் டிவர்ஸ் யூ” - கமலை நோக்கி அவர் மனைவி வாணி.

எப்படியோ இருவரையும் சமாதானம் செய்து அப்போதைக்கு அனுப்பி வைக்கிறார்கள்.

சாரு, பாட்டிலை ஓப்பன் செய்கிறார். வேலையிலிருந்து திரும்பாத தன் மூத்தமகளின் நினைவு திடீரென வருகிறது. மனைவியிடம் கேட்கிறார்.

“ஒய் மை டாட்டர் ஈஸ் நாட் பேக் ஃப்ரம் ஹாஸ்பிடல்?”

“மிஸ்டர், அன்லெஸ் ஐ டெல் யூ. ஷீ காண்ட் பீ யுவர் டாட்டர்” மனைவியின் சுருக் பதில்.

“தட் வாஸ் குட் ஒன்” அடுத்த ரவுண்டுக்கு பாட்டிலை கவிழ்க்கிறார்.

“மிஸ்டர், யூ ஆர் கோயிங் ஃபோர்த் ரவுண்ட். ஆன் தட் கிரவுண்ட், ஐ கேன் டைவோர்ஸ் யூ”

“மேடம், ஐ வொர்ஷிப் தி கிரவுண்ட் ஆன் விச் யூ டிவோர்ஸ் மீ”

“குட் ஒன்! வாங்க சாப்பிடலாம்”

இப்போதும் இப்படிதான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார் சாருஹாசன்.

‘குங்குமம்’ இதழில் ‘அழியாத கோலங்கள்’ என்கிற தலைப்பில் சாருஹாசன் எழுதிய சுயவரலாற்றுத் தொடர் நூலாகவும் வெளிவந்திருக்கிறது. ராவான ஒரு மனுஷனை பிடித்து படிக்க விரும்பும் வாசிப்பு சாகஸ அனுபவத்துக்காக இந்நூலை வாசிக்கலாம்.
நூல் : அழியாத கோலங்கள்
எழுதியவர் : சாருஹாசன்
பக்கங்கள் : 208
விலை : ரூ.150
வெளியீடு : சூரியன் பதிப்பகம்,
229, கச்சேரி ரோடு, மயிலாப்பூர்,
சென்னை – 600 004.
போன் : 42209191 extn : 21125. மொபைல் : 7299027361

4 கருத்துகள்:

  1. அருமையான பதிவு /புத்தகம் வாங்க வேண்டும்

    ஜீப்பில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் இருக்கிறார்.

    “என்னை இமானுவேல் கேசுலே கைது பண்ணிட்டாங்க. அப்பா கிட்டே சொல்லி ஜாமீன் போடச் சொல்லு. நீயும் ஆஜராகணும்”

    உடனே அடுத்த பஸ் பிடித்து ஊருக்குப் போய் அப்பாவிடம் விவரம் சொல்கிறார். “நான் காங்கிரஸ்காரன். கட்சிக்கு விரோதமா தேவருக்கு ஆஜராக மாட்டேன்” என்கிறார் அப்பா.

    வீம்பாக இவரே மதுரைக்கு போய் மனுதாக்கல் செய்கிறார். தேவருக்கு ஜாமீன் கேட்டதால், சடாரென புகழ் பெற்று வெற்றிகரமான வக்கீல் ஆகிவிட்டார்.

    பதிலளிநீக்கு
  2. ஓகே!
    படிப்போம்...

    ஜன்னல் இதழில்கூட இப்பொழுது எழுதுகிறார்போல?

    பதிலளிநீக்கு
  3. படிக்கத்தூண்டும் விமர்சனம். வாங்கிடுவோம். படிச்சிடுவோம்.

    பதிலளிநீக்கு
  4. கண்டிப்பாகப் புத்தகத்தைப் படிக்கத் தூண்டும் நூலாய்வு. வாங்கிப் படிக்க வேண்டிய லிஸ்டில் சேர்த்துக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு