25 அக்டோபர், 2009

துப்பாக்கிக் குழாயில் அரசியல் அதிகாரம்!


ரஷ்யாவில் 1917 அக்டோபரில் வெடித்த புரட்சி உலகளாவிய பொதுவுடைமை சிந்தனையாளர்களுக்கு ஊக்க மருந்தாக அமைந்தது. உடனடியான பாதிப்பு மற்ற நாடுகளைப் போலவே இந்தியாவிலும் இருந்தது. விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் துயர்நீக்க மார்க்சியப் பாதை தான் சிறந்தது என்று எண்ண தலைப்பட்ட சிந்தனையாளர்கள் கம்யூனிஸக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டு கம்யூனிஸ்டு அமைப்புகளை 1920கள் வாக்கில் அமைக்கத் தொடங்கினார்கள். அப்போது இந்தியாவில் வெள்ளையர்களின் ஆட்சி நடந்து கொண்டிருந்தது.

லெனினின் சிந்தனைகள் அடிப்படையிலான கம்யூனிஸ்டு கட்சி அமைப்பு முறை போல்ஷ்விஸம் என்று அழைக்கப்படும். போல்ஷ்விஸம் ஏற்படுத்தக்கூடிய ஆபத்துக்களை அன்றைய ஆட்சியாளர்களும் உணர்ந்திருந்தனர். கம்யூனிஸ்டு என்று தங்களை சொல்லிக் கொண்டவர்கள் வேட்டையாடப் பட்டனர். பொய் வழக்குகள் போடப்பட்டு சிறைகளில் தள்ளப்பட்டனர். பல நெருக்கடிகளை தாண்டியே பல்வேறு பொதுவுடைமை சிந்தனைக் குழுக்கள் இணைந்து கம்யூனிஸ்டு கட்சி ஏற்படுத்தப்பட்டது.

நாட்டில் அப்போதிருந்த முக்கியப் பிரச்சினை ஏகாதிபத்தியம். காங்கிரஸ் கட்சியோ ஏகாதிபத்திய எதிர்ப்பை முன்னிறுத்தி மும்முரமாக போராடிக் கொண்டிருக்க, கம்யூனிஸ்டு இயக்கங்கள் வர்க்க விடுதலைக்கு தீவிரமாக போராடின. ஏகாதிபத்திய எதிர்ப்புக்கு முன்னால் வர்க்க விடுதலை மக்களுக்கு பெரியதாக தோன்றவில்லை. விவசாய தொழிலாளர்களின் உரிமையை ஒருபுறம் வலியுறுத்தி, இன்னொரு புறம் தேசவிடுதலைக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்குமேயானால் காங்கிரஸ் இயக்கத்துக்கு கிடைத்த செல்வாக்கு ஒருவேளை அப்போதே கம்யூனிஸ்டுகளுக்கும் கிடைத்திருக்கக் கூடும். ஆங்கிலேய ஆட்சியாளர்களையும் முதலாளி வர்க்க எதிரிகள் என்ற அடிப்படையில் தான் கம்யூனிஸ்டுகள் எதிர்த்தார்களே தவிர அவர்கள் அந்நியர்கள் என்ற அடிப்படையில் தீவிரமாக எதிர்க்கவில்லை. எனவே தேச விடுதலையில் காங்கிரஸ் அளவுக்கான பங்கினை, செல்வாக்கினை கம்யூனிஸ்டுகள் பெற இயலாமல் போனது.

இரண்டாம் உலகப்போர் நடந்த நேரத்திலேயே கம்யூனிஸ்டு இயக்கத்தில் உள்ளியக்க கருத்து வேறுபாடுகள் தோன்றின. போர் எதிர்ப்பு நிலையை கம்யூனிஸ்டு இயக்கங்கள் மேற்கொண்டதால் பல தலைவர்கள் சிறைக்கு செல்ல வேண்டியதாகியது. ஹிட்லர் ரஷ்யா மீது போர் தொடுத்தபோது சிறைபடாமல் தலைமறைவாகியிருந்த கட்சியினர் சோவியத் யூனியனுக்கு உதவி செய்ய ஒரே வழி, தேசிய விடுதலைக்கு தீவிரமாக போராடுவதே என்றனர். ஏகாதிபத்தியத்துக்கு எதிரான தேசிய விடுதலைப் போரால் ஆங்கிலேயே ஏகாதிபத்தியம் பலவீனமடையும், அது சோசலிஷ ரஷ்யாவுக்கு பிற்பாடு வலிமை சேர்க்கும் என்பது அவர்களது கணிப்பு.

ஆனால் சிறையிலிருந்த கம்யூனிஸ்டு தலைவர்களின் சிந்தனையோட்டம் வேறுமாதிரியாக இருந்தது. ஆங்கிலேயர்களின் போர் தயாரிப்புகளுக்கு முழுமூச்சான ஆதரவு தரவேண்டும் என்றும், வேலை நிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களை நிறுத்திவிட வேண்டும் என்றும் சொன்னார்கள். இதற்கு பிரதியுபகாரமாக இவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். உலகப்போரில் ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக பிரச்சாரமும் செய்தார்கள்.

இரண்டாம் உலகப்போரின் முடிவு உலக வரைப்படத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்தியது. ஆங்கிலேயர் போர் முடிவில் பலவீனமாக காட்சியளித்தனர். இந்நேரத்தை பயன்படுத்திக் கொண்ட மக்கள் ஆயுதம் மூலமாக ஆங்காங்கே கலகம் செய்தனர். இச்சந்தர்ப்பத்தையும் இந்திய கம்யூனிஸ்டு இயக்கங்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. கலகக்காரர்களை ஆங்கிலேயர்கள் காங்கிரசோடு கூட்டு அமைத்து காலி செய்தார்கள். திடீரென்று விழித்துக் கொண்ட கம்யூனிஸ்டுகள் தங்கள் தரப்பு தொழிலாளர்களை திரட்டி வேலை நிறுத்தம் செய்தது. மாணவர்களும், தொழிலாளர்களும் போராட்டத்தில் குதித்தனர்.

தந்திரத்தில் கரைகண்ட வெள்ளையர்கள் காங்கிரஸிடம், முஸ்லீம் லீக்கிடமும் சரணடைந்தனர். விவகாரமான சுதந்திரமும், ஆங்கிலேயர்களை கொண்ட அரசியல் நிர்ணயசபையும் இந்தியர்கள் மீது திணிக்கப்பட்டது. ஏகாதிபத்திய நாடுக்களுக்கான பின்வாசல் எப்போதும் திறந்தே வைத்திருக்கும்படியான சுதந்திரம் இந்தியாவுக்கு கிடைத்தது. இப்போதும் கூட கம்யூனிஸ்டு இயக்கங்கள் காங்கிரஸை நம்பின. நேரு, காந்தி போன்ற காங்கிரஸின் முற்போக்கு சிந்தனை கொண்ட தலைவர்களின் கரத்தை வலுப்படுத்துவோம் என்று கோஷமிட்டனர். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபின்னும் தொடர்ந்த தொழிலாளர் துயரத்தை மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் அவதிப்பட்டனர்.

பி.டி.ரணவேதி என்ற கம்யூனிஸ்டு தலைவர் கலகக்காரரானார். தன்னைப் போன்ற தீவிர ஒத்த சிந்தனை கொண்டவர்களின் துணையோடு கட்சியின் தலைமையை கைப்பற்றினார். நேருவின் அரசு ஆங்கிலேயர்களின் கைப்பாவை அரசு என்று இந்த கலகக்கார கம்யூனிஸ்டுகள் அறிவித்தனர். வர்க்க சமரசத்திற்கு எதிரான புரட்சியை நடத்த வன்முறைப்பாதையையும் மேற்கொள்ள தயாராயினர். தொழிலாளர்களின் பொது வேலை நிறுத்தமும், மக்களின் கிளர்ச்சியும் தான் தங்கள் பாதை என்றனர்.

இதே நேரத்தில் ஆந்திரப் பிரதேசம் தெலுங்கானாவில் வன்முறைப் போராட்டம் ஒன்று நடந்து கொண்டிருந்தது. நிலமுதலாளிகளுக்கும் அவர்களது வன்கொடுமைகளுக்கும் எதிரான போராட்டம் தெலுங்கானா என்று சொல்லக்கூடிய பகுதிகளில் அங்கிருந்த பிரதேச கம்யூனிஸ்டுகளின் தலைமையில் நடந்து கொண்டிருந்தது. இங்கே போராடிக்கொண்டிருந்த கம்யூனிஸ்டுகள் சீனாவின் புரட்சியாளர் மாவோவின் கொள்கைகளை அடிப்படையாக கொண்டிருந்தவர்கள். எனவே இவர்கள் பி.டி.ரணவேதியின் போராட்டத்தை மாவோ கோட்பாடுகளின் அடிப்படையில் எதிர்த்தார்கள்.

நிலமுதலாளித்துவத்துக்கும், நகர்ப்புற முதலாளி வர்க்கத்துக்கும் எதிரான போராட்டங்கள் ஒரே சமயத்தில் நடந்தால், போராட்டங்களின் வீரியம் நீர்த்துப் போகும் என்பது தெலுங்கானா புரட்சியாளர்களின் கணிப்பு. அவர்களது மொழியில் சொல்வதானால் ஜனநாயகப் புரட்சியையும், சோஷலிசப் புரட்சியையும் ஒரே நேரத்தில் நடத்த இயலாது. கிராமப்புற ஆயுதந்தாங்கிய போராட்டங்கள் முறையான விவசாயத் திட்டத்தோடு இணைந்திருந்தால் மட்டுமே புரட்சியை வெடிக்கச் செய்யமுடியும் என்பது அவர்களது நிலைபாடாக இருந்தது. கிராமப்புறங்களில் ஏற்படும் புரட்சி நகரத்தை சுற்றி வளைத்து இறுதியில் கைப்பற்றும். ரஷ்யாவில் ஏற்பட்ட புரட்சியைக் காட்டிலும் சீனப்புரட்சியைப் போன்ற செயல்பாடு தான் இந்தியச்சூழலுக்கு தகுந்ததாக இருக்கும் என்றும் தெலுங்கானா போராளிகள் நினைத்தனர். இன்றைய நக்சல்பாரி புரட்சியாளர்களுக்கு முன்னோடிகளாக தெலுங்கானா போராளிகளை குறிப்பிடலாம்.

பி.டி.ரணதிவே இந்த சிந்தனைகளை முற்றிலுமாக நிராகரித்தார். மாவோவை ஒரு போலி மருத்துவர் என்று காரமாக குற்றம் சாட்டினார். ஆயினும் 1950களின் ஆரம்பத்தில் தெலுங்கானா கிளர்ச்சியாளர்கள் ஆந்திராவில் மிகுந்த செல்வாக்கோடு காணப்பட்டனர். ஐதராபாத் இந்தியாவுக்குள் இணைந்தபோது அங்கே முற்றுகையிட்டிருந்த இந்திய ராணுவத்தின் மூலமாக தெலுங்கானா போராளிகளின் புரட்சி நசுக்கப்பட்டது.

கம்யூனிஸ்டு இயக்கங்களில் இன்று பிரபலமாக இருக்கும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியும் சரி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியும் சரி.. தெலுங்கானா போராட்டத்தை அரசியல் அதிகாரத்துக்கான போராட்டமாக ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள். நிலமுதலாளிகளிடமிருந்து நிலங்களை கைப்பற்றி தக்கவைத்துக் கொள்ள நடந்த போராட்டம் தான் அது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சொல்கிறது. தெலுங்கானாவில் நடந்தது முழுக்க முழுக்க அராஜகம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சொல்கிறது. ஆனால் தெலுங்கானா போராட்டத்தை ஆதரித்துப் பேசுபவர்களோ அப்போராட்டம் ‘ஆந்திராவில் மக்கள் ஆட்சி’ என்பதை முன்னிறுத்தி நடந்தப் போராட்டம் என்கிறார்கள்.

ரஷ்யாவிலும் ஸ்டாலினுக்குப் பின்னால் ஆட்சிக்கு வந்தவர்களால் கம்யூனிஸ்டு சித்தாந்தங்கள் அவரவர் வசதிக்கேற்ப மாற்றியமைக்கப்பட்டிருந்த நேரமது. “ஏற்கனவே இருக்கும் அரசமைப்பை புரட்சி மூலமாக தூக்கியெறிய வேண்டியதில்லை. முதலாளிகளோடு தொழிலாளி வர்க்கம் சமரசமாகி அதிகாரத்தை பங்கிடுவதின் மூலமாகவே தேசிய ஜனநாயக அரசை ஏற்படுத்த முடியும்” என்று ரஷ்யாவில் ஆட்சிபுரிந்த குருசேவ் தலைமையிலான கம்யூனிஸ்டுகள் கூறிவந்தனர். இது லெனின் – மாவோ உள்ளிட்டோரின் கோட்பாடுகளுக்கு நேரிடையானதாக இருந்தது.

இந்தியாவிலிருந்த கம்யூனிஸ்டு இயக்கமோ ‘ரஷ்யா சொன்னா சரி’ என்று தலையாட்டியது. இந்திய - சீன எல்லைப்போர் தொடங்கிய நேரமது. கட்சித்தலைமையோ சீனாவை ஆதரித்தால் தேசவிரோதிகள் என்று முத்திரை குத்தப்படுவோமோ என்ற அச்சத்தில் சீன எதிர்ப்புத் தீர்மானத்தை நிறைவேற்றியது. கட்சியில் இருந்த தீவிர இடதுசாரி சிந்தனையாளர்கள் உட்கட்சி கிளர்ச்சி செய்து கட்சியை உடைத்தார்கள். இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட்) உருவானது.

கிளர்ச்சி செய்து புதுக்கட்சியை உருவாக்கியிருந்தாலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கூட சமரச வழியிலான சோஷலிஸத்தை நோக்கிதான் பயணம் செய்தது. சரியாக சொல்ல வேண்டுமானால் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல் வெற்றி என்பதை நோக்கிய பயணமாக இருந்தது. மேற்கு வங்காளம், கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பலமானது. விவசாயிகள் - தொழிலாளர் போராட்டங்கள் நாடாளுமன்ற, சட்டமன்ற நடவடிக்கையோடு சேர்த்தே திட்டமிடப்பட்டது.

மார்க்சிஸ்டுகளின் திட்டங்களுக்கு நல்ல பலன் இருந்தது. 1967ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் இடதுசாரி முன்னணி மேற்குவங்கத்தில் ஆட்சியை கைப்பற்றியது. ஆனால் அதே கட்சியிலிருந்து தேர்தல் பாதைக்கு எதிரான மனோபாவம் கொண்ட புரட்சியாளர்களின் தலைமையில் நக்சல்பாரி புரட்சி ஆயுதமேந்தி நடந்தது. தங்கள் இயக்கத்தில் இதுநாள் இருந்தவர்களையே போலிஸை விட்டு கண்மூடித்தனமாக தாக்கி புரட்சியை நசுக்கியது மார்க்சிஸ்ட் கூட்டணி அரசு. இதன் மூலமாக பாட்டாளிகள் தலைமையிலான மக்கள் ஆட்சியை விட்டு விலகி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிற்பதாக நக்சல்பாரிகள் குற்றம் சாட்டுகிறார்கள்.

நக்சல்பாரிகளுக்கு இன்னொரு வேடிக்கையான பெயரும் தமிழகத்தில் உண்டு. தீ.கம்யூனிஸ்டுகள் என்று அவர்களை செய்தித்தாள்களில் எழுதுவார்கள். அதாவது தீவிர(வாதி) கம்யூனிஸ்டுகளாம். இந்த தீ.கம்யூனிஸ்டுகள் ‘நாடாளுமன்ற அரசியல் மூலமாகவோ, சமரச அரசியல் மூலமாகவோ அதிகாரத்தை கைப்பற்ற முடியாது’ என்று பிரகடனப்படுத்தி இயங்கி வருகிறார்கள்.

நக்சல்பாரி புரட்சியாளர்கள் இந்திய உழைக்கும் மக்களுக்கு எதிரிகளாக நான்கு விஷயங்களை குறிப்பிடுகிறார்கள். நிலமுதலாளித்துவம், தரகு அதிகாரவர்க்க முதலாளித்துவம், அமெரிக்க ஏகாதிபத்தியம், குருசேவ் காலத்துக்கு பின்னரான ரஷ்ய சமூக ஏகாதிபத்தியம் - இவை நான்குக்கும் எதிரான போராட்டங்களே உழைக்கும் மக்களுக்கான அரசியல் அதிகாரத்தை ஏற்படுத்தும் என்பது நக்சல்பாரிகளின் நிலைப்பாடு.

சீனா மற்றும் வியட்நாமில் தோன்றிய மக்கள் போர் மூலமாகவே இந்திய உழைக்கும் மக்களுக்கான விடுதலையை ஏற்படுத்த இயலும். துப்பாக்கிக் குழாயில் இருந்தே அரசியல் அதிகாரம் பிறக்கிறது என்று முழக்கமிட்டார்கள். கிராமப்புறங்களில் நிலமுதலாளிகளை பலவீனமாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். நிலப்பிரபுக்களை கொன்று குவிப்பதை ‘அழித்தொழிப்பு’ என்ற பெயரிலான கிளர்ச்சியாக குறிப்பிட்டார்கள். நகர்ப்புற இளைஞர்கள் கிராமப்புறங்களுக்கு சென்று விவசாயிகளை ‘அழித்தொழிப்பு’ பணிகளுக்கு தயார்படுத்தினார்கள்.

(புரட்சி மலரும்)

4 கருத்துகள்:

  1. //காங்கிரஸ் கட்சியோ ஏகாதிபத்திய எதிர்ப்பை முன்னிறுத்தி மும்முரமாக போராடிக் கொண்டிருக்க//

    enna kodumai lucky??

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா11:29 AM, நவம்பர் 02, 2009

    அரைவேக்காடு,
    http://consenttobenothing.blogspot.com/2009/10/blog-post_6823.html

    பதிலளிநீக்கு
  3. அரசாங்கம் தனது மக்களுக்காக எதும் செய்யாத சூழலில் மக்கள் தங்களுக்கான தேவைகளைனத் தாங்களே தேடிக் கொள்ளும் நிலை ஏற்படுகிறது. இப்படியான சூழலில் ஆயுதம் ஏந்துவதும் தவிர்க்க இயலாததாகி விடுகிறது. வர்க்கப் போராட்டத்தை எதிர்கொள்ள இயலாத ஆட்சியாளர்கள், மக்களின் கோபங்களை தீவிரவாதமாகச் சித்தரித்து விடுகிறார்கள். கடந் அறுபதாண்டு காலத்தில் நமது ஆட்சியாளர்களால் இதைத்தான் செய்ய முடிந்திருக்கிறது.
    -இரா. தங்கப்பாண்டியன்
    vaigai.wordpress.com

    பதிலளிநீக்கு