8 ஜூன், 2009

அரசியல்!


ந்தக் காலத்தில் அவர் அதிரடியான பெயர் பெற்ற அரசியல்வாதி. பருவமழை பொய்த்து அந்த ஆண்டில் ஏற்பட்ட தண்ணீர் பஞ்சம் வரலாற்றுப் பிரசித்திப் பெற்றது. அவர் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்ததால் அவர் தொகுதி மக்கள் தினமும் அவர் வீடு தேடி வந்து தண்ணீருக்காக தாங்கள் படும் பாட்டை புலம்பிவிட்டு செல்வார்கள்.

சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடம் பேசிப்பார்த்தார். முடிஞ்சவரைக்கும் தண்ணியை மக்களுக்கு கொடுக்கறோம். இதுக்கு மேல இருந்தாதானே தரமுடியும்? என்றார்கள். உடனே தன் சொந்தப் பணத்தை செலவு செய்து தொகுதி முழுக்க லாரிகளில் தினமும் சப்ளை செய்தார் அவர். ஒருநாள் இருநாள் அல்ல. அடுத்து மழைக்காலம் வந்து தண்ணீர் சப்ளை சீராகும் வரை கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு இந்தப் பணியை செய்துக் கொண்டிருந்தார்.

அரசாங்கத்தாலேயே முடியாத வேலையை தனிநபராக செய்த அவர் இன்றளவும் அப்பகுதி மக்களால் தெய்வமாக போற்றப்படுகிறார்.


முன்னாள் முதல்வர் அப்பகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது, அவரது முயற்சியில் கட்டப்பட்ட காய்கறி மார்க்கெட் அது. மார்க்கெட் வந்துவிட்டாலே அதைசார்ந்து நடைபாதை வியாபாரிகளும் உருவாகிவிடுவது வழக்கமான ஒன்று. அந்த மார்க்கெட்டை சுற்றிலும் நூற்றுக்கணக்கான நடைபாதை வியாபாரிகள் உருவாகிவிட மார்க்கெட்டில் கடை வைத்திருந்த கடை முதலாளிகள் பிரச்சினை செய்ய ஆரம்பித்தார்கள்.

மார்க்கெட்டை கட்டித் தந்த அந்த சட்டமன்ற உறுப்பினர் அப்போது முதல்வராக இருந்தார். நடைபாதை வியாபாரிகள் முழுக்க அவரது கட்சிக்காரர்கள் என்பதால் மார்க்கெட் முதலாளிகளால் இவர்களை அரசியல்ரீதியாக அசைக்க முடியவில்லை. அரசியல் செயலிழக்கும் நேரங்களில் அதிகாரிகளே முதலாளிகளுக்கு துணை. அப்பகுதி காவல்நிலைய அதிகாரிகளோடு பேசினார்கள். தரவேண்டியதை தந்தார்கள். இதைத் தொடர்ந்து தினமும் நடைபாதை வியாபாரிகள் மீது அதிகாரப்பூர்வமான வன்முறை தொடர ஆரம்பித்தது.

ஐந்துக்கும், பத்துக்கும் தினமும் நடைபாதைகளில் கூவிக்கூவி விற்பவர்கள் அனாதைகள் ஆனார்கள். முதல்வரோ அயல்நாட்டு சிகிச்சைக்கு சென்றிருந்தார். எதிர்பாராவிதமாக இவர்களுக்கு ஆதரவாக காவல்துறையை எதிர்த்து போராட்டம் நடத்த வந்தவர் அப்பகுதியில் இருந்த பிரபலமான எதிர்க்கட்சிக்காரர்.

பல பேரை சந்தித்தார். நடைபாதை வியாபாரிகளின் அவலத்தை கோட்டை வரை எதிரொலித்தார். காவல்துறை மேலதிகாரிகளை தினமும் பார்த்து பேசினார். ஒருவழியாக நடைபாதை வியாபாரிகளுக்கு நீதி கிடைத்தது. மார்க்கெட்டிற்குள் இருக்கும் கடைகளின் வியாபாரத்தை பாதிக்காதவாறு அவர்களுக்கு போதிய இடம் மார்க்கெட்டை சுற்றி வழங்கப்பட்டது.

கட்சி பாகுபாடு பார்க்காமல் தங்கள் வாழ்வாதாரத்துக்கு வகை செய்த அந்த எதிர்க்கட்சிக்காரருக்கு ஏதாவது செய்யவேண்டுமே என்ற ஆவலில் வியாபாரிகள் சிலர் அவரிடம் கேட்டார்கள். “அண்ணே உங்களுக்கு என்ன வேணுமோ சொல்லுங்க. செய்யுறோம்”. அவர் பதிலளித்தார். “ஃபில்டர் வைக்காத ஒரே ஒரு சிகரெட்டு மட்டும் வாங்கிக் கொடுங்கப்பா. ஒரு வாரமா பேசிப்பேசி தொண்டை வரளுது”.


ன்றைய துணைமுதல்வர் அவர். பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாக வேளச்சேரி பகுதி மக்களுக்கு அவர் பக்கத்து வீட்டுக்காரர். வேளச்சேரி செக்போஸ்ட் அம்மன் கோயிலை தாண்டி அவரது கார் வந்துகொண்டிருக்கிறது. கன்னிகாபுரம் பகுதியில் ஒரு வீட்டில் சாவு விழுந்திருக்கிறது. வாசலில் பிணத்தை வைத்து உறவினர்கள் கதறிக் கொண்டிருக்கிறார்கள். கார் கண்ணாடி வழியாக அவர் பார்க்கிறார். பால்மணம் மாறா குழந்தைகள் இருவரும் ஒரு இளம்பெண்ணும் கதறுவதை கண்டதுமே இறந்தவரின் மனைவியும், குழந்தைகளும் என்பதை உணர்கிறார். உடனே காரை நிறுத்தச் சொல்கிறார்.

அந்த சாவு வீட்டுக்குச் சென்று ஆறுதல் சொன்னவர் அந்த இளைஞரின் திடீர் மரணம் பற்றி கேட்டறிகிறார். விதவையான அப்பெண்ணுக்கு அவர் மேயராக இருந்த மாநகராட்சியில் பணி உறுதி கொடுக்கிறார். தன்னுடைய உதவியாளரிடம் சொல்லி உடனடி பண உதவியும் தன் சொந்த செலவில் ஏற்பாடு செய்கிறார். இறந்தவர் வீட்டு வாசலில் பறந்து கொண்டிருந்தது எதிர்க்கட்சிக் கொடி.


டந்த மாதம் செய்தித்தாள்களில் நீங்கள் வாசித்திருக்கலாம். ஐ.ஏ.எஸ். தேர்வில் தமிழகத்தில் இருந்து 96 பேர் தேர்வு பெற்றிருக்கிறார்கள். இவர்களில் 21 பேர் எஸ்.சி/எஸ்.டி வகுப்பை சேர்ந்தவர்கள். ஒட்டுமொத்தமாக இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக இத்தேர்வில் வெல்லுபவர்களில் அதிகமானவர்கள் தமிழர்கள். திடீரென எப்படி இது சாத்தியம்?

ஐ.ஏ.எஸ். தேர்வில் வெல்ல இலவசப் பயிற்சி மையம் ஒன்றினை ஒரு அரசியல்வாதி, கட்சி/சாதி/வர்க்க பாகுபாடு எதுவுமின்றி நடத்திவருவதே இதற்கு காரணம். இதே அரசியல்வாதி சென்னை வேளச்சேரி பகுதியில் தன் கட்சித்தலைவி பெயரில் ஒரு தரமான இலவச திருமண மண்டபத்தையும் மக்களுக்காக நடத்தி வருகிறார். இந்த திருமண மண்டபத்தில் நடைபெற்ற திருமணங்களில் பெரும்பாலும் அவருடைய எதிர்க்கட்சியை சார்ந்தவர்களுடையது. முதல் பத்தியில் நாம் சொன்ன அதே அரசியல்வாதி இவர்தான்.


ம் பதிவுகளில் மெசேஜ் இல்லை, மெசேஜ் இல்லையென்று நிறைய பேர் குறைபட்டுக் கொள்கிறார்கள். இந்தப் பதிவு சொல்லவரும் மெசேஜ் : அரசியல் உட்பட எதையுமே கட்டமைக்கப்பட்ட பொதுப்புத்தியின் ஒற்றைப் பார்வையில் மட்டுமே அணுகக் கூடாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக