20 ஏப்ரல், 2011

உன்னதம் உங்கள் இலக்கா?

நீங்கள் உன்னதங்களை நேசிப்பவரா? உன்னத நிலையை கனவு காண்பவரா? அடைய முயற்சித்துக் கொண்டிருப்பவரா? தயவுசெய்து நம்புங்கள். உங்கள் இலக்கான உன்னத நிலையை மனப்பயிற்சி மூலமே அடைந்துவிடலாம். எதிலும் உன்னதம் என்ற மகத்தான நிலையை அடைய உங்களை தயார்படுத்துகிறது ‘எக்ஸலண்ட்’ என்ற புத்தகம்.

நெய்வேலி நகரில் ஒரு பாடாவதி தியேட்டரில் அந்த பத்திரிகையாளர் ஒரு படம் பார்க்கிறார். படம் பார்த்து முடித்ததும் அவரிடம் நம் நூலாசிரியர் கேட்கிறார். “எப்படி இருந்தது படம்?”. வந்த பதில் வித்தியாசமானதாக இருந்தது. “இந்த வருஷத்துக்கு இதுதான் படம்!” அந்தப் படம் ‘சுப்பிரமணியபுரம்’. “இதுதான் படம்!” என்று தமிழகமே கொண்டாடியது உங்களுக்கும் தெரிந்திருக்கும்.

அந்தப் படம் இயக்குனர் சசிகுமாருக்கு முதல் படம். கிட்டத்தட்ட அந்தப் படத்தில் பங்கேற்ற பலருக்கும் அதுதான் முதல் படம். தமிழ் சினிமாவில் நிகழ்த்தப்பட்ட ‘முதல் முயற்சிகளில்’ தலைசிறந்ததாக இம்முயற்சி திரைப்பட வல்லுனர்களால் போற்றப்படுகிறது. எப்படி இது சசிகுமாருக்கு மட்டும் சாத்தியமானது?

ஏனெனில் அவர் உன்னதமானவற்றை மட்டுமே முயற்சித்தார். அதனால் அவரால் நல்ல ஒரு விஷயத்தை பெறவும், மக்களுக்கு தரவும் முடிந்தது. ஒரு ‘சுமாரான’ சரக்கை உத்தேசிக்கும்போது அது நீங்கள் உத்தேசித்த சுமாரான அல்லது மோசமான தரத்திலேயே உற்பத்தியாகும். எப்போதும் சிறந்தவற்றை மட்டுமே இலக்காக வைப்பது ஒரு மனப்பயிற்சி. அது ஒரு கட்டாயமும் கூட.

சிறந்தவற்றை மட்டுமே இலக்காக வைப்பது எப்படி?

கொலம்பியாவை சேர்ந்த எழுத்தாளர் காபிரியேல் கார்ஸியா மார்க்குவேஸை துணைக்கு அழைத்துக் கொள்கிறார் நூலாசிரியர். ரொம்ப நாளாக எழுத உத்தேசித்திருந்த ஒரு நாவலின் மொழி அந்த எழுத்தாளருக்கு பிடிபடவேயில்லை. குடும்பத்தோடு காரில் சுற்றுலாவுக்கு போய்க்கொண்டிருந்தபோது திடீரென தட்டுகிறது ஒரு பொறி. பாட்டி கதை சொல்லும் தொனிதான் அந்நாவலுக்கான மொழி.

காரை வீட்டுக்கு திருப்புகிறார். ஓர் அறைக்குள் புகுகிறார். எழுத ஆரம்பிக்கிறார். எப்போதாவது பசித்தால் சாப்பாடு. வீடு, மனைவி, குழந்தைகள் எல்லாமே மார்க்குவேஸுக்கு மறந்துபோகிறது. எத்தனை நாட்களுக்கு? கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு. குளிக்காமல், சாப்பிடாமல், தூங்காமல், சவரம் செய்யாமல், மனநிலை குன்றியவரைப் போல எழுதிக்கொண்டே இருப்பது அத்தனை அவசியமா என்ன? இந்த கேள்விக்கு 1967ல் வெளியான அந்த நாவல் பதில் கொடுத்தது.

நூற்றாண்டு கால தனிமை (One Hundred Years of Solitude) என்கிற அந்நாவல் இன்றுவரை விற்பனையில் சாதனை படைக்கும் மாபெரும் இலக்கியம். நவீன படைப்பிலக்கத்துறையில் இன்றுவரை தோன்றிய உன்னத படைப்புகளின் சிகரம். மார்க்குவேஸை படைப்பாளிகளும், வாசகர்களும் தலைமீது தூக்கிவைத்துக் கொண்டாடுகிறார்கள்.

உன்னத இலக்கை அடைய எளிய குறுக்குவழி உழைப்புதான் என்பதை இப்போது புரிந்துகொண்டிருப்பீர்கள். சரி. கடுமையான உழைப்பாளி உன்னதநிலையை அடைந்துவிட முடியுமென்றால் நாற்பது, ஐம்பது ஆண்டுகளாக மூட்டை தூக்கிக் கொண்டிருப்பவர்கள் இன்னமும் மூட்டை மட்டுமே தூக்கிக் கொண்டிருப்பார்களா என்றொரு கேள்வி உங்களுக்கு எழுமே?

உன்னதமான நிலையை அடைவதற்கு உழைப்பு மட்டுமே ஒரே ஒரு பாதையல்ல. ஏராளமான வழிகள் உண்டு. வழிகளை அறிய இப்புத்தகத்தை வாசிப்பதுதான் உங்களுக்கு நாம் சொல்லக்கூடிய எளியவழி. வழுக்கும் மொழி நடையில், வாழ்வியல் உதாரணங்களோடு, நேர்மறை எண்ணங்களோடு ஒவ்வொரு பக்கமும் சிலையை செதுக்கும் நேர்த்தியோடு எழுதப்பட்டிருக்கிறது.

இளையராஜா, கிராண்ட்மாஸ்டர் ஆனந்த், இசைக்கலைஞர் யானி, இயக்குனர் ஜி.வி.ஐயர், ஒசாமா பின்லேடன், பாரதிராஜா, மகாத்மா காந்தி என்று பலரும், இதுவரை நாம் கண்டிராத பல்வேறு பரிமாணங்களில் நமக்கு அறிமுகமாகிறார்கள்.

இந்த புத்தகம் உருவான பின்னணிக்கதை சுவாரஸ்யமானது. தன் மனதுக்கு உகந்த சிந்தனைகளை நண்பர்களுக்கும், அலுவலக சகாக்களுக்கும் மின்னஞ்சல் மூலமாக அவ்வப்போது எழுத்தாளர் பா.ராகவன் பகிர்ந்துகொள்வார். ஒரு சில ஆண்டுகளில் அவர் அனுப்பிய மின்னஞ்சல்களை, மீள்பார்வை செய்துபார்த்தபோது அவருக்கே அவை உன்னதமானவையாக தோன்றியிருக்கின்றன. உன்னதத்தை போதிக்கும் ஒரு உன்னதப் புத்தகம் தயாரான கதை இதுதான்.

நூல் வெளியீடு : கிழக்கு பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் சாலை, ஆழ்வார்ப்பேட்டை, சென்னை-600 018. விலை ரூ.70. நூலாசிரியர் : பா.ராகவன்.

இணையத்தில் நூலை வாங்க...

4 கருத்துகள்:

  1. தலைவா...

    விலை 85 ரூபாயாம்... சேஞ்ச் பண்ணிடுங்க

    பதிலளிநீக்கு
  2. அப்போ பா.ரா இனிமே "உன்னத தமிழ் எழுத்தாளர் " னு சொல்லுங்க :)

    பதிலளிநீக்கு
  3. 2012
    கிழக்கு வழங்கும் ஸ்டெல்லாபுருஸ் விருது
    சிறந்த வலைப்பூ - லக்கிலுக்

    Thanks

    பதிலளிநீக்கு
  4. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னமே நீங்கள் இந்த நூலை பரிந்துரை செய்தீர்கள்... நானும் பலருக்கு பரிசாக வழங்கியுள்ளேன்.... நன்றி..

    - சென்னைத்தமிழன்

    பதிலளிநீக்கு