16 மார்ச், 2015

கால் கிலோ காதல், அரை கிலோ கனவு!

ஒன்பதாவது படிக்கும்போது யாரை காதலித்துக் கொண்டிருந்தேன்?

அனுராதா – இல்லை. பத்தாவது கோட்டர்லி லீவில்தான் ‘லவ்வு’ பச்சக்கென்று வந்தது.

குணசுந்தரி – பார்த்திபன் ஜூட் விட்டுக் கொண்டிருந்தான். நண்பனின் காதலியை காதலிக்குமளவுக்கு நான் நாகரிகமற்றவன் இல்லை.

ஸ்ரீவித்யா – நோ சான்ஸ். வாழைக்காய் விஜய்யின் ஆளு.

எழிலரசி – வெள்ளைக்காரி மாதிரி இருப்பாள். வெள்ளை என்றாலே அலர்ஜி.

சபிதா – மூன்றாவது படிக்கும்போது லவ் பண்ணிய பொண்ணு. நாலாவதிலேயே புட்டிக்கிச்சி.

கவிதா – பர்ஸ்ட் ஸ்டேண்டர்டுன்னு நெனைக்கிறேன். சபிதாவுக்கு முன்னாடி.

ஸ்ரீதேவி, கவுதமி, குஷ்பூ - இவர்களையெல்லாம் லவ் செய்தேன். ஒப்புக் கொள்கிறேன். ஆனால் ஒன்பதாவது படிக்கும்போதா என்று குறிப்பாக நினைவில்லை.

கோவிலம்பாக்கம் குமுதா – யெஸ். இவளாகதான் இருக்கவேண்டும். கொஞ்சம் குள்ளச்சி. அதனால் என்ன. அப்போது நானும் கொஞ்சம் குள்ளம்தான்.

கேளம்பாக்கம் அரசினர் உயர்நிலைப்பள்ளியில் ஒன்பதாவது வகுப்பு ‘பி’ பிரிவில் படித்த பா.ராகவன்.. மன்னிக்கவும்.. பத்மநாபன் என்கிற குடுமிநாதன் வளர்மதியை லவ் செய்கிறான்.

நாவலின் முதல் சாப்டரே, பவித்ரனின் ‘இந்து’ படத்தில் வாலி எழுதியதாக டைட்டிலில் பெயர் போடப்பட்டு -ஆனால் உண்மையில் ஷங்கர் எழுதிய- பாடலின் சமாச்சாரம்தான். ‘எப்படி எப்படி? பொண்ணு (ப்பீப்.. பீப் சவுண்டு) எப்படி?’

ஏற்கனவே வளர்மதி என்கிற குட்டச்சியை கிளாஸில் நான்கு பேர் லவ் செய்கிறார்கள். குடுமிநாதனுக்கு செம காம்பெடிஷன். போதாக்குறைக்கு அவள் வயசுக்கு வந்துவிட்டாள் என்கிற ப்ளாஷ் நியூஸ் வந்தபிறகு, மிச்ச சொச்சப் பயல்களுக்கும் அவள் மீது தெய்வீகக் காதல் வந்துத் தொலைக்கிறது.

சகப் போட்டியாளர்களை சமாளித்து, முப்பாட்டன் திருப்போரூர் முருகன் திருவருளால் வளர்மதியின் கடைக்கண் பார்வை, குடுமிநாதன் மீது விழுந்ததா என்பதே நாவல்.

ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒரு பள்ளிக்கூட காதல் படம் ஹிட் ஆகும். அலைகள் ஓய்வதில்லை, வைகாசி பொறந்தாச்சி, துள்ளுவதோ இளமை, காதல் என்று பெரிய பட்டியல். பா.ராகவன் எழுதியிருக்கும் ‘கால் கிலோ காதல், அரை கிலோ கனவு’ அந்த ஜானர். முன்னெப்போதோ கல்கியில் எழுதிய இந்த தொடர்கதையை சினிமாவுக்கு கொடுக்காமல், ஏன் நாவலாக இப்போது அச்சில் கொண்டு வந்திருக்கிறாரோ தெரியவில்லை. இப்போதும் கெட்டுப்போய்விடவில்லை. படமாக எடுத்தால் பட்டையைக் கிளப்பலாம்.

பத்மநாபன் என்கிற இளைஞனின் (!) ஓராண்டு வாழ்க்கைப் பயணம். படிக்கச் சொல்லி வன்முறையில் ஈடுபடும் தீவிரவாத ஆசிரியர்கள். மகன் உருப்படுவான் என்கிற நம்பிக்கையே இல்லாத தறுதலை அப்பா. பத்து மாதம் சுமந்து பெற்றுவிட்டோமே என்பதற்காக கடனே என்று சோறு போட்டு வளர்க்கும் அம்மா. எங்கே இவனுக்கெல்லாம் லவ்வு செட் ஆகிவிடுமோ என்கிற பதட்டத்தில் அலையும் பொறாமைக்கார நண்பர்கள். குறிப்பாக பர்ஸ்ட் ரேங்க் பன்னீர்செல்வம். இப்படிப்பட்ட வாழத்தகுதியற்ற கொடூரமான உலகில், கண்ணுக்கு தெரிந்தமட்டும் பாலைவனமாய் நீண்டிருக்கும் துலாபார சோக வாழ்க்கையில் கானல்நீராய், பசுஞ்சோலையாய் வளர்மதி மட்டுமே.

கதை நடைபெறும் காலக்கட்டம் எண்பதுகளின் கரெக்ட்டான மத்தி. ஏனெனில் நாயகி வளர்மதி 1971ல் பிறந்தவள் என்கிற குறிப்பு கிடைக்கிறது. அவள் ஒன்பதாவது படிக்கிறாள் என்றால் 14 வயசு (வயசுக்கு வந்தது கொஞ்சம் லேட்டுதான்). எனவே, கதை நடக்கும் காலக்கட்டம் 1985 என்று எடுத்துக் கொள்ளலாம்.

இந்த கட்டுரையை வாசிக்கும்போது நாவல் கொஞ்சம் ‘அப்படி, இப்படி’ இருக்குமோவென்று உங்களுக்கு டவுட்டு வரலாம். பா.ராகவன் சுத்த சைவம். ஒரு இடத்தில் கூட அவரது பேனா வரம்பு மீறவில்லை. அதுவும் கல்கியில் தொடராக வந்த கதை. ஆனால் வாசிக்கும் வாசகரான நாம், ‘ப்ளெஷர் ஆஃப் டெக்ஸ்ட்’டுக்காக, ஆங்காங்கே லைட்டாக கூட்டிக் குறைத்து, ‘அப்படி, இப்படி’ கற்பனை செய்துக்கொள்ளக்கூடிய ஏராளமான வாய்ப்புகளை கதையின் சம்பவங்கள் அனுமதிக்கிறது. அவ்வகையில் இந்நாவலுக்கு ஒரு பின்நவீனத்துவத் தன்மை இருப்பதை ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும்.

முப்பது ஆண்டுகளுக்கு முந்தைய ‘ராஜீவ்காந்தி சாலை’ (ஓ.எம்.ஆர் என்றழைக்கப்படும் ஓல்டு மகாபலிபுரம் ரோடு) எப்படியிருந்தது என்கிற வர்ணனை மிகத்துல்லியமாக இந்நாவலில் பதிந்திருக்கிறது. நாவலாசிரியர் வளர்ந்த பகுதி அது என்பதாலும் இருக்கலாம். புவியியல்ரீதியான வர்ணனை மட்டுமின்றி, அத்தலைமுறையின் கலாச்சாரம், மரபு, இத்யாதி லொட்டு லொசுக்குகளை எல்லாம் மலரும் நினைவுகளாக ரீவைண்ட் செய்து ஃபிலிம் ஓட்டுகிறார் பாரா. இந்த கதை குடுமிநாதனுடையது அல்ல. நம் அனைவருடையதும் கூட. மாங்காய் அடிப்பது, கிணற்றில் குதிப்பது, சினிமா, கிரிக்கெட் என்று அக்கால இளைய தலைமுறையினரின் அசலான வாழ்க்கைப் பதிவு. வாட்ஸப் யூத்துகள் தங்களுடைய சித்தப்பாக்களும், மாமாக்களும் எப்படிப்பட்ட உயர்வான இலட்சிய வாழ்வினை வாழ்ந்தார்கள் என்பதை அறிய அரிய வாய்ப்பு.

சிறுவனை நாயகனாகவும், சிறுமியை நாயகியாகவும் கொண்டு எழுதப்பட்ட நாவல் என்பதால் இதை சிறுவர் இலக்கியம் என்று வகைப்படுத்தலாமா என்கிற குழப்பமும் இடையிடையே வருகிறது. ஆனால், இதற்கு எவ்வித இலக்கிய அந்தஸ்து மயிரும் வேண்டாம் என்று அட்டையிலேயே முத்திரை போட்டு முகத்தில் அறைந்திருக்கிறார் பா.ராகவன். ‘கத புஸ்தகம்’ என்று சிகப்பு முத்திரையிட்டு கழுதைப் படம் போட்ட முகப்பு அட்டை. கமர்சியல் ரைட்டர்களின் வழக்கமான கொணஷ்டை.

உண்மையை சொல்லப் போனால் தீவிர இலக்கியம் என்று சமகாலத்தில் முன்வைக்கப்படும் தீவிர த்ராபைகளை விடவும், அக்கால இளைஞர்களின் பிரச்சினைகளை தீவிரமாகவே அலசியிருக்கக்கூடிய நூல் இது. ஆனால், இதை எழுதியவர் ‘இதெல்லாம் இலக்கியமா?’ என்கிற பாணியில் அசால்டாக இருக்கிறார். சுவாரஸ்யமாக எழுதினால் அது நிச்சயமாக இலக்கியமல்ல என்று அதை எழுதக்கூடிய எழுத்தாளர்களே நம்பக்கூடிய அளவுக்கு தமிழிலக்கியத்தின் நிலைமை இப்படி அபாயகரமாக போகுமென்று டால்ஸ்டாயும், தஸ்தாவேஸ்கியும் கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.

வாசிப்பும் இன்பம் தரும் என்பதற்கு இந்நாவல் நல்ல எடுத்துக்காட்டு. இது த்ரில்லர் அல்ல. ஆனால், த்ரில்லருக்கு இணையான வேகம் ஆரம்பம் முதல் இறுதிவரை இருக்கிறது. பத்திக்கு பத்தி சுவாரஸ்யத்துக்கு குறைவேயில்லை. வாசிப்பின் வழியாக ஒரு ரோலர் கோஸ்டர் ரைடுக்கு தயாராக இருப்பவர்கள் ‘மிஸ்’ பண்ணாதீங்க.
நூல் : கால் கிலோ காதல் அரை கிலோ கனவு
எழுதியவர் : பா.ராகவன்
பக்கங்கள் : 160
விலை : ரூ.80
வெளியீடு : மதி நிலையம்
எண் 2/3, 4வது தெரு, கோபாலபுரம்,
சென்னை – 600 086.
போன் : 28111506
மின்னஞ்சல் : mathinilayambook@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக