22 ஏப்ரல், 2016

நிறைந்த ஒளியில்

 சினிமாவுக்கு மட்டுமல்ல. நூல்களுக்கும் நெகட்டிவ்வாக ‘டைட்டில்’ வைக்கக்கூடாது. நிறைவான சமாச்சாரங்கள் அடங்கிய இந்த நூலுக்கு போய் ஏன் ‘குறைந்த’ டைட்டில் என்று தெரியவில்லை. இலக்கியம் என்பது மாதிரியெல்லாம் பம்மாத்து செய்யாமல், வெகுசுவாரஸ்யமாக - அதேநேரம் சிந்தனையைத் தூண்டும் வகையிலான நேர்மையான பத்தி எழுத்து பிரபுகாளிதாஸ் எழுதியிருக்கும் ‘குறைந்த ஒளியில்’.

சாருவின் சிஷ்யன். ஆனால், குருவே சந்தோஷப்படக்கூடிய அளவுக்கு எழுத்து நுட்பத்தில் அவரையும் தாண்டிச் செல்கிறார். 2000ங்களின் தொடக்கத்தில் விகடன் டாட் காமில் சாரு எழுதிய ‘கோணல் பக்கங்கள்’ பகுதியின் லேட்டஸ்ட் வெர்ஷன் மாதிரியிருக்கிறது. நூல் முழுக்கவே எந்த வகைப்பாட்டிலும் அடங்காத deconstructionதான்.

தூங்குவதற்கு முன்பு ஒரு நாற்பது, ஐம்பது பக்கங்கள் வாசிக்க வேண்டும் என்று விரதம். நேற்று இரவு இந்த நூலை வாசிக்கத் தொடங்கியவுடன் தூக்கத்தையே மறந்துவிட்டு, முழுக்க வாசித்த பின்புதான் வைத்தேன். ப்ரீத்திக்கு நான் கேரண்டி என்பது மாதிரி ‘குறைந்த ஒளியில்’ தரக்கூடிய வாசிப்பின்பத்துக்கு நான் கேரண்டி.

நூலில் என்ன என்னவெல்லாம் இருக்கிறது என்று பட்டியல் போட்டு, நீங்கள் படம் பார்க்கும் முன்பாகவே, நாம் பார்த்துவிட்ட படத்தின் கதையை காட்சிவாரியாக சொல்ல வரவில்லை.  ஒரே ஒரு சாம்பிள் மட்டும்.

பிரபு, ஒரு அப்பார்ட்மெண்டில் தங்கியிருக்கிறார். பக்கத்தில் ஒரு வீடு. மாடியில் ஆள் அரவமே இல்லை. ஆனால், இரவுகளில் தொடர்ந்து இளையராஜா பாட்டு கேட்டுக்கொண்டே இருக்கிறது. ஒரு சந்தர்ப்பத்தில் நிஜமாகவே பாட்டுதான் கேட்கிறதா அல்லது அது தன்னுடைய மனப்பிராந்தியா என்று குழம்புகிறார்.

ஒருநாள் பிரபுவின் மகன் அமைதியாக உட்கார்ந்திருக்கிறான். என்னடா என்று இவர் கேட்கிறார். பக்கத்துலேருந்து பாட்டு கேட்குதுப்பா என்கிறான் அவன். எந்த சத்தமுமில்லாமல் அமைதியாக இருந்தது என்கிறார் இவர்.

உலகத்தரமான சிறுகதையாக வந்திருக்க வேண்டிய விஷயத்தை, ஒரு ஃபேஸ்புக் ஸ்டேட்டஸாக முடித்துக் கொண்டிருக்கிறாரே என்று பிரபு மீது கோபம்தான் வருகிறது.

இப்படிதான் நூல் முழுக்கவே பிரபுவின் ரகளையான அனுபவங்களும், அபிப்ராயங்களும். Pulp என்பதை ஓரிடத்தில் குப்பை என்கிறார் பிரபு. ஆனால், இந்த நூலையும் pulp வகையில்தான் சேர்க்க வேண்டியிருக்கிறது. Pulpதான் எழுத்தில் மிகச்சிறந்தது, எழுதுவதற்கும் கடினமானது, ஆனால் வாசிப்பதற்கு இலகுவானது என்பது நம் அபிப்ராயம்.

பொதுவாக இதுபோல இணையத் தளங்களில் எழுதியவற்றை தொகுக்கும்போது பக்கத்துக்கு பக்கம் ஒருமாதிரியான தொடர்ச்சியில்லாத தன்மை வெளிப்படும். ஆனால், இந்நூல் முழுக்க திட்டமிட்டு ஒரே அமர்வில் எழுதியதைப் போன்ற கச்சிதமான எடிட்டிங்.

நூல் விமர்சனம் எனும்போது ஏதேனும் குறையை சொல்லியே ஆகவேண்டும். ‘குறைந்த ஒளியின்’ புத்தகத்துடைய பெரிய குறையே ‘நான்’தான். நூல் முழுக்க எத்தனை ‘நான்’கள் என்று கேட்டு வாசகர்களுக்கு போட்டிவைத்து, பரிசு கொடுக்கலாம். முன்பு ஒரு சினிமாவில் எத்தனை முறை ரகுவரன் ‘ஐ நோ’ சொல்லுகிறார் என்று இப்படிதான் போட்டி வைத்தார்கள்.

வெகுஜன எழுத்தில் இந்த தன்னிலைப் பிரச்சினையை சுலபமாக கடப்பார்கள். “வண்ணத்திரை சார்பாக ‘நாம்’ நமீதாவை சந்தித்தபோது, ‘வா மச்சான், இப்போதான் வழி தெரிஞ்சுதா?’ என்று பிரும்மாண்டமான தன் நெஞ்சை நிமிர்த்தி அமர்க்களமான வரவேற்பைக் கொடுத்தார்” என்று தன்னிலையை பன்மையாக்கி, ‘நான்’ என்கிற அகங்காரத்தின் காரத்தை குறைப்பார்கள். சில வாரங்கள் கட்டுரைகளை ‘நான்’ அடிப்படையில் வடிவமைத்து, ரொம்ப மொக்கையாக இருக்கிறது என்று ஆனந்தவிகடனே யூ டர்ன் அடித்த சம்பவம்கூட நடந்தது. ஒன்றுமில்லை. ‘நான்’ என்பதை வாசிக்கும்போது எழுதியவனுக்கு கொம்பு முளைத்திருக்கிறதோ என்கிற எண்ணத்தை வாசகனுக்கு ஏற்படுத்தும். அதுதான் பிரச்சினை. இவர் Made in Charu Vasagar Vattam என்பதால் ‘நான்’ ‘நான்’ என்று ஏலம் போட்டிருக்கிறார். அடுத்தடுத்த நூல்களில் கொஞ்சம் தவிர்க்கலாம்.

முதல் நூல் என்பது ஓர் ஆசிட் டெஸ்ட். தன்னுடைய இலகுவான மொழிவன்மையாலும், அனுபவங்கள் தந்த content பலத்தாலும் அதை அசால்டாக கடந்திருக்கிறார் பிரபு காளிதாஸ்.
நூல் : குறைந்த ஒளியில்
எழுதியவர் : பிரபு காளிதாஸ்
விலை : ரூ.120
வெளியீடு : உயிர்மை பதிப்பகம்

4 கருத்துகள்:

  1. விமர்சனம் அருமை. நூலை இணையத்தில் வாங்க...
    http://www.wecanshopping.com/products/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D.html

    பதிலளிநீக்கு
  2. Sir, waiting for some political articles regarding election

    பதிலளிநீக்கு