30 ஜூலை, 2015

கனவை நனவாக்குதல்!

அறிவியலாளர்களை கவுரவிக்க இந்திய தேசம் எப்போதுமே தவறியதில்லை. அறிவியல் அறிஞர் ஒருவர் இந்தியாவின் ஜனாதிபதி என்றபோது உலகமே ஆச்சரியத்தில் மூழ்கியது. அப்துல்கலாமின் வாழ்க்கை நாட்டின் கடைக்கோடி குடிமகனுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் பாதை. தமிழ்நாட்டின் சிறிய ஊரில், ஓர் எளிய குடும்பத்தில் பிறந்தவர் ராஷ்டிரபதி பவனில் அமர்ந்து நாட்டையே வழிநடத்த முடியும் என்கிற இந்த வாய்ப்பு வேறு நாடுகளில் அமைவது கடினம்.

இந்த வாய்ப்புக்குப் பின்னால் இருந்த டாக்டர் கலாமின் கடின உழைப்பும், கனவும் அவரை எப்படி சரியான வழியில் நடத்தியது என்பதை ‘எனது பயணம்’ நூலில் விரிவாக எழுதியிருக்கிறார். எண்பது வயதைக் கடந்தவர் தன்னுடைய தனித்துவ அனுபவங்களை பகிர்ந்துக் கொள்வது என்பது இன்றைய இளைய தலைமுறைக்கு அரிதாகக் கிடைக்கக்கூடிய பொக்கிஷம். ஏராளமான சம்பவங்கள் நிறைந்த நீண்டகால வாழ்வின் அனுபவங்களை நம் மனதுக்கு அப்படியே கடத்தும் நெருக்கமான மொழியமைப்பில் இந்நூல் எழுதப்பட்டிருக்கிறது. கூடு விட்டு கூடு பாய்ந்ததைபோல புத்தகத்தை படித்து முடிக்கும்போது, வாசித்த ஒவ்வொருவருமே நம்மை கலாமாக உணர்கிறோம்.

தன் வாழ்வில் கண்டடைந்த மிகப்பெரிய பாடமாக கனவினை சொல்கிறார் கலாம். “ஒருவர் தன் வாழ்வின் பல்வேறு நிலைகளிலும் தொடர்ந்து கனவு கண்டு கொண்டே இருக்க வேண்டும். பிறகு அந்த கனவுகளை நனவாக்குவதற்கு கடினமாக உழைக்க வேண்டும்” என்று தன் வாழ்வின் வெற்றி ரகசியத்தை சொல்லிக் கொடுக்கிறார்.

இந்தியர் ஒவ்வொருவரும் பெருமிதம் கொள்ளும் மகத்தான சாதனைகளை படைத்து பெருவாழ்வு வாழ்ந்துக் கொண்டிருக்கும் கலாம், கடைசியாக நூலை முடிக்கும்போது என்ன சொல்கிறார் தெரியுமா?

“கடக்க வேண்டிய தூரம் இன்னும் கணிசமாக இருக்கிறது”

நூல் : எனது பயணம்
எழுதியவர் : ஏ.பி.ஜே. அப்துல்கலாம்
தமிழில் : நாகலட்சுமி சண்முகம்
விலை : ரூ. 150/-
பக்கங்கள் : 172
வெளியீடு : மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ்,
7/32, தரைத்தளம், அன்சாரி சாலை, தார்யாகஞ்ச்,
புதுடெல்லி-110002.
E-mail : sales@manjulindia.com
 Website : www.manjulindia.com



நூலிலிருந்து...

“1998ஆம் ஆண்டில் பொக்ரானில் இந்தியா தனது இரண்டாவது அணுவெடிப் பரிசோதனையை நடத்தியபிறகு, அதன் உருவாக்கத்தில் பங்காற்றியிருந்த எனக்குப் பல்வேறு பட்டப் பெயர்கள் வழங்கப்பட்டன. அதற்குப் பல வருடங்களுக்குப் பிறகும், ஜனாதிபதியாக எனது பதவிக்காலம் முடிந்து பல வருடங்களுக்குப் பிறகும் என்னோடு எப்போதும் தங்கி வந்துள்ள ஓர் அடைமொழி ‘ஏவுகணை மனிதன்’ என்பதுதான். நான் அவ்வாறு அழைக்கப்படும்போது அது எனக்குப் பெரும் சுவாரசியத்தை ஏற்படுத்துகிறது. ஏனெனில், ஓர் அறிவியல் மனிதனாக என்னை நான் கருதிக் கொண்டிருக்கையில், அப்பெயர் ஒரு குழந்தையின் சாகசக் கதாநாயகனின் பெயரைப் போல ஒலிக்கிறது”

1 கருத்து: