15 பிப்ரவரி, 2010

தேவதைகள் மீதான வன்முறை!

பட்டர்ஃபிளை எஃபெக்ட்

எனக்கு இரண்டு நண்பிகள் உண்டு. அண்ணன் மகள்கள் மீரா, மேகா. இருவருமே தேவதைகள். மீரா ஏழாம் வகுப்பு. மேகா நான்காம் வகுப்பு. முன்னவள் கொஞ்சம் மூடி டைப். அளந்து அளந்து அறிவுபூர்வமாகப் பேசுவாள். அம்மா சாடை. பின்னவள் வாயாடி. லொடலொடவென்று சுவாரஸ்ய எக்ஸ்பிரஸ். அப்பா மாதிரி.

இருவரும் படிப்பில் சுட்டி. பத்து ரேங்குக்குள் கேரண்டி. மீராவை அம்மா அடிப்பதுண்டு. மேகா, ராஜேந்திரகுமாரின் வால்களுக்கு இணையான வால். இருந்தாலும் அம்மாவிடம் சாலாக்கு. அதனால் அடிவாங்காமல் அவ்வப்போது எஸ்கேப். அப்பா-அம்மா இருவருமே வேலைக்கு போவதால் மீரா வீட்டுவேலைகளில் அக்கறையாக பொறுப்பு எடுத்துக் கொள்கிறாள். அம்மா-அப்பா எதிரில் மட்டும் அக்காவுக்கு உதவுவதாக மேகா ’ஆக்டிங்’ கொடுப்பாள்.

இருவரோடும் ஐந்து நிமிடங்கள் விளையாடினால் போதும். இவர்களது உலகுக்குள் நுழைந்துவிடலாம். குழந்தைகளின் உலகத்தில் அன்புக்கு மட்டுமே இடம் உண்டு. அதுவும் அராஜகமான அன்பு. கண்களால் சாடைகாட்டி மேகா பேசும் ஒலியில்லாத மொழியின் இனிப்புக்கு எல்லையே இல்லை.

இந்த விஸ்தாரமான அறிமுகத்துக்கு காரணம் உண்டு. இவர்கள் இருவரும்தான் ’டைரிக்குறிப்பும், காதல் மறுப்பும்’ தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் ’பட்டர்ஃப்ளை எஃபெக்ட்’ சிறுகதையின் நாயகிகள். இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் பதினேழு கதைகளில் ஆகச்சிறந்த படைப்பாக இதை மதிப்பிடுகிறேன். வாழ்வின் சுவாரஸ்ய தருணங்கள் பெரும்பாலானவை சுவாரஸ்யமற்ற பொழுதிலேயே நடந்தேறுகிறது. ஒரு டயரியில் குறித்து வைத்து விட்டு, சிலகாலம் கழித்து அசைபோடும்போது கிடைக்கும் சுவாரஸ்ய அனுபவம் வரம். அத்தகைய வரம் பரிசல்கிருஷ்ணாவுக்கும், அவரது திருமதிக்கும் இக்கதை மூலமாக சாத்தியமாகியிருக்கிறது.

இனி மீராவோ, மேகாவோ அம்மாவால் திட்டப்படவோ, அடிக்கப்படவோ கூடாது. அப்படி நிகழ்ந்தால் அப்பாவின் மொபைலில் இருந்து சித்தப்பாவுக்கு மெசேஜ் அனுப்பலாம். அண்ணி மீது தேவதைகள் மீதான வன்முறை தடுப்புச் சட்டத்தின் படி வழக்கு போடுவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை.


Writer's block

தொடர்ச்சியாக எழுதிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் ஏற்படும் நோய் இது. அதிலும் புனைவு, கட்டுரை, விமர்சனம் என்று கலந்துகட்டி எழுதுபவர்கள் அடிக்கடி சந்திக்க வேண்டிய விஷயம். தொடர்ச்சியாக நான்கு அபுனைவில்லாத எழுத்தை எழுதிவிட்டு, புனைவுக்கு திரும்பினால் தாவூ தீர்ந்துவிடுவதை தவிர்க்கவே இயலாது.

ரைட்டர்ஸ் பிலாக்கெல்லாம் அண்டவே முடியாத எழுத்தாளர்களும் அரிதாக உண்டு. புனைவின் உச்சத்தை தொட்டவர்கள் அவர்கள். தினமும் தூங்குவதைப் போல, தினமும் எதை வேண்டுமானாலும், எவ்வளவு பக்கங்க்ள் வேண்டுமானாலும் எழுதித் தள்ளுவது அவர்களுக்கு இயல்பிலேயே அமைந்துவிடும். இவர்களது மூளைகளில் ஏதேனும் விசேஷ செல்கள் இருக்கக்கூடும். நமக்கு தெரிந்த நல்ல உதாரணம் : ஜெயமோகன்.

அடிக்கடி வரும் இந்தப் பிரச்சினை குறித்து, என் ரோல்மாடல்களில் ஒருவரான ஒரு எழுத்தாளருக்கு மடல் இட்டிருந்தேன். அவர் எனக்கு கொடுத்த அட்வைஸ் : இதுமாதிரி நேரங்களில் பயோ-பிக்‌ஷன் முயற்சியுங்கள். பரிசல்கிருஷ்ணாவின் புனைவுகள் தொண்ணூறு சதவிகிதம் பயோ-பிக்‌ஷன் முறையிலேயே அமைந்திருக்கிறது. இவருக்கு எழுத்து Block விபத்து நேர வாய்ப்பேயில்லை.


சுஜாதா

எழுத்தாளர் சுஜாதாவின் பாதிப்பின்றி எழுதுபவர்கள் இந்த தலைமுறையில் குறைவு. அவரது அத்தகைய வெற்றிக்கு என்னென்னவோ காரணங்களை பட்டியலிடுகிறார்கள். என் வாசிப்பின் வாயிலாக நான் உணர்வது என்னவென்றால், சுஜாதாவின் எழுத்துகளில் தேவையற்ற வர்ணனைகள் இருக்காது. சொல்லவேண்டிய விஷயங்களை கதைமாந்தர்களின் உரையாடல்களிலேயே ‘நறுக்’கென்று சொல்லிவிடுவார்.

பரிசலின் பாணியும் இதுதான். இத்தொகுப்பு முழுக்க இடம்பெற்றிருக்கும் எல்லா கதைகளுமே நச்சென்று உரையாடுகின்றன. உரையாடல்கள் குறைவாக இருக்கும் கதைகளிலும் கூட எழுத்தாளரின் தன்னிலை உரையாடலாகவே அமைந்துவிடுகிறது. இதனுடைய பயன் என்னவென்றால் ஒவ்வொரு வாக்கியத்தையும், வார்த்தையையும் வாசிப்பவனுக்கு சுவாரஸ்யமாக்கி தரமுடியும்.

உள்ளடக்க அடர்த்தி குறைவான சில கதைகளிலும்கூட சுவாரஸ்யத்துக்கு பஞ்சம் வைக்கவில்லை பரிசல். கடைசிவாக்கிய திருப்புமுனை பாணி சுஜாதா காலத்திலேயே காலாவதி ஆகிவிட்டது. கடைசிக்காலத்தில் அவரேகூட அவரது பாணியை மாற்றிக் கொண்டார். சிறுகதைக்கு சாத்தியமான மற்ற வடிவங்களையும் முயற்சித்துப் பார்த்தார்.

இடையில் சிறுகதைகளுக்கான வெளி வெகுஜன இதழ்களில் குறைந்துவிட்டதையும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரேமாதிரியான நடையில், கடைசி பஞ்ச்லைன் வாசகத்தோடு முடியும் கதைகளை மக்கள் நிராகரிக்க முன்வந்ததாகதான் முடிவுக்கு வரமுடிகிறது.

இது நூலாசிரியருக்கு முதல் புத்தகம். பரிசலின் அடுத்த புத்தகத்தில் ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு வடிவில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கலாம்.


கிண்டல்

இசையோடு கூடிய வாழ்த்து அட்டைகளை நீங்கள் பார்த்திருக்கலாம். ‘நான் உன்னை காதலிக்கிறேன்’ என்று பேசக்கூடிய அட்டையை உங்கள் காதலிக்கு பரிசாக கூட கொடுத்திருக்கலாம். பரிசலிடம் இதே பேஜாராகப் போகிறது. முன்னட்டையை புரட்டியவுடனேயே காதில் ரீங்காரமடிக்கிறது எஸ்.ஏ.ராஜ்குமார் - விக்கிரமன் கூட்டணியின் பிரபலமான ‘லால்லா’ மியூசிக். பின்னட்டையை மூடிவைத்தவுடன்தான் ரீங்காரம் நிற்கிறது.

கதைகளை எழுதிய எழுத்தாளர் நல்லவரென்று நான் தனிப்பட்ட முறையிலேயே அறிவேன். அதற்காக நல்லவர் ‘நல்ல’ மாதிரியான விஷயங்களை, ’நல்ல’ மாதிரியான நடையிலேயேதான் எழுதவேண்டும் என்றெல்லாம் அவசியமில்லை. கொஞ்சம் ஜில்பான்ஸ் விஷயங்களையும் தொடலாம், தவறில்லை. பரிசலின் ஆதர்சம் சுஜாதாகூட தொட்டிருக்கிறார்.


பாராட்டு

புத்தகத்தின் கடைசி கதை சமூகக்கடமை. இடஒதுக்கீட்டுக்காக ஊடகங்களிலும், இணையத்திலும், இப்போது சினிமாவிலும் மார்வலிக்க கத்திக் கொண்டிருக்கிறோம். ‘இடஒதுக்கீடு’ என்ற பிராண்டிங் இல்லாமல், அந்தச் சொல்லை பயன்படுத்தாமலேயே, ஜனரஞ்சகமான நடையில் அதன் அவசியத்தை எடுத்துச் சொல்லியிருக்கிறார் பரிசல். எதிர்ப்பாளர்களை கூட ‘அட, ஆமாம்லே!’ என்று ஒத்துக்கொள்ள வைக்கும் லாவகம்.


குட்டு

பரிசலுக்கு அல்ல. பதிப்பாளருக்கு. அதாவது குகனுக்கு. ஒல்லியான எழுபத்தியிரண்டு பக்க நூலுக்கு ஐம்பது ரூபாய் விலை என்பது அநியாயமில்லையா? இன்றைய விலைவாசி நிலையில் ஒரு பக்கத்துக்கு ஐம்பது பைசாவை தருவதே கஷ்டம். இந்தப் புத்தகத்துக்கான நியாயமான விலை முப்பத்தைந்து ரூபாய். நாற்பது என்று நிர்ணயித்திருந்தால்கூட மோசமில்லை.

அடுத்ததாக லே-அவுட். எழுத்துரு வாசிக்க வாகாக இல்லை. சில இடங்களில் தேவையில்லாமல் ஐட்டலிக் டைப். பாயிண்ட் சைஸும் கூட பக்கத்துக்கு பக்கம் சீராக இருப்பதாக தெரியவில்லை. வரிகளுக்கு இடையேயான இடைவெளி எல்லாப் பக்கங்களிலும் ஒரேமாதிரியாக இல்லை. சில கதைகளில் இந்த இடைவெளி மிக அதிகமாக இருக்கிறது. ஆயினும் முன்னட்டை என்னை கவர்ந்திருந்தது. பின்னட்டையில் எழுத்துகளின் அளவு மிகப்பெரியது.

அடுத்தடுத்த வெளியீடுகளில் இக்குறைகளை நாகரத்னா பதிப்பகம் களையும் என்று எதிர்ப்பார்க்கிறேன்.


கொஞ்சம் ஜால்ரா

இந்நூலாசிரியருக்கும், எனக்கும் ஏதோ ஸ்நானபிராப்தி இருக்கவேண்டும். எங்களை அண்ணன் - தம்பி என்று சொன்னால், கேள்வி கேட்காமல் யாரும் ஒப்புக்கொள்ளும் தோற்ற ஒற்றுமை. ரசனைகளில் பெரிய மாறுபாடு இருவருக்குள்ளும் இல்லை. எனக்குப் பிடித்த சினிமா அவருக்கும் பிடிக்கிறது. அவருக்கு பிடிக்காத எழுத்தாளரை எனக்கும் பிடிப்பதில்லை. இருவரின் இயற்பெயரும் கூட ஒன்றேதான் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இப்படியே பெரிய பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். ஆயினும், அது புத்தக விமர்சனத்துக்கான நியாயமில்லை என்பதால் டப்பென்று ஊசிப்பட்டாசு வெடித்து முடித்துக் கொள்கிறேன்.



நூல் : டைரிக்குறிப்பும், காதல்மறுப்பும்

ஆசிரியர் : பரிசல் கிருஷ்ணா

விலை : ரூ.50/-

பக்கங்கள் : 72

வெளியீடு : நாகரத்னா பதிப்பகம்,
3ஏ, டாக்டர் ராம் தெரு, நெல்வயல் நகர்,
பெரம்பூர், சென்னை - 600 011.

இணையத்தில் நூலினை வாங்க : http://ezeebookshop.com/eshop/product_info.php?products_id=121

17 கருத்துகள்:

  1. Good reviewe lucky. Congrats Parisal.

    பதிலளிநீக்கு
  2. அஜால் குஜால் அய்வு விமர்சனம் வரும் என்று எதிர்பார்த்தேன்.

    வந்தது (விமர்சன)வடிவத்தில் புதுசு.

    பரிசலுக்கு வாழ்த்துக்கள்

    பயனம் தொடங்கியதர்க்கு

    பதிலளிநீக்கு
  3. பொதுவாக புத்தக விமர்சனங்களை படித்தவுடன் ஒரு அயர்ச்சி ஏற்படும். அப்படி ஏற்படாதது இன்ப அதிர்ச்சி.

    பதிலளிநீக்கு
  4. யுவா,

    அருமையான விமர்சனம். இதன் மூலம் உங்கள் நட்பின் ஆழமும் உணர்ந்து கொண்டேன்.

    வாழ்த்துக்கள் பரிசல்.

    பதிலளிநீக்கு
  5. ஒரு எழுத்தாளரின் முதல் தொகுப்புக்கு ஏற்ற விமர்சனம் யுவ கிருஷ்ணா.

    எழுத்துலகில் பரிசல் கிருஷ்ணா பல சாதனைகள் புரிய வாழ்த்துகள்.

    தோழமையுடன்
    பைத்தியக்காரன்

    பதிலளிநீக்கு
  6. அறிமுக எழுத்தாளரின் புத்தகம் குறித்து பிரபல எழுத்தாளரின் விமர்சனம் போல இல்லாமல் (ஹி..ஹி..) ஒரு நண்பனின் விமர்சனம் போல் அருமை லக்கி..

    ஆனாலும் சைடு கேப்பில் அவரை அண்ணனாக்கி உங்க வயசை குறைச்சிகிட்டது டாப்பு :)))

    பதிலளிநீக்கு
  7. முதல் ரெண்டு பின்னூட்டங்களுக்கு...

    ஏம்பா, நல்ல விசயத்தைதானு சொல்லியிருக்கீங்க, அதுகூட அனானியா வந்துதான் சொல்லணுமா?? :)

    பதிலளிநீக்கு
  8. வாசித்தேன்.

    ஆமோதிக்கிறேன்..

    நன்றி...

    பதிலளிநீக்கு
  9. விமரிசனம் வெகு இதம். முதல் 2 பாராக்கள் மிக அருமை. butterfly எபக்ட் பரிசலின் மாஸ்டர் பீஸ்.

    பதிலளிநீக்கு
  10. Very Very Nice (Review)

    Well done Lucky and Parisal

    I love you both :)

    பதிலளிநீக்கு
  11. //இருவரோடும் ஐந்து நிமிடங்கள் விளையாடினால் போதும். இவர்களது உலகுக்குள் நுழைந்துவிடலாம். குழந்தைகளின் உலகத்தில் அன்புக்கு மட்டுமே இடம் உண்டு. அதுவும் அராஜகமான அன்பு. கண்களால் சாடைகாட்டி மேகா பேசும் ஒலியில்லாத மொழியின் இனிப்புக்கு எல்லையே இல்லை//
    நாங்களும் திகட்டத் திகட்ட உணர்ந்திருக்கிறோம்.
    :-)

    பதிலளிநீக்கு
  12. வாழ்த்துக்கள் பரிசல்

    பதிலளிநீக்கு
  13. நூலின் உட்பொருட்கள் மீதான அலசல் பிரதானமானதாக இருந்திருக்கலாம். என்றாலும், விமரிசனத்தில் பளிச்சிடுகிறது உங்கள் முத்திரை!

    பதிலளிநீக்கு
  14. புத்தகத்தின் விலையை குறைத்து விட்டார்கள் என்று நினைக்கிறேன். ஆன்லைனில் வாங்கினால் Rs.45/- மட்டுமே !!!!

    பதிலளிநீக்கு