8 பிப்ரவரி, 2010

கோட்டை விட்ட டோனி, சுனாமியாய் கில்லி!!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக ஐ.பி.எல் 20-20 போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்ட நேரம் அது. ஒரு கிரிக்கெட் அறிவிலியான என்னை ஐ.பி.எல். குறித்து ஏதாவது எழுதித் தரும்படி ஒரு தமிழ் இணையத்தளம் கேட்டுக் கொண்டது. கிரிக்கெட்டைப் பற்றி தொழில்நுட்பரீதியாக தெரியாது என்று மறுத்தும், நண்பரான இணையத்தள நிர்வாகி தொடர்ச்சியாக என்னை வற்புறுத்தினார். குமுதம் பாணியில் நான் அப்போதைக்கு அடித்துவிட்ட உட்டாலக்கடி சரக்கு இது. இரண்டு ஆண்டுகள் கழித்து வாசிக்கும்போதுதான் எனக்கே கொஞ்சம் சுவாரஸ்யமாக இருப்பதைப் போல படுகிறது!

ஐ.பி.எல். 20-20 போட்டிகள் பரபரப்பான கட்டத்தை அடைந்திருப்பதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் போட்டிகள் நடைபெறும் தினங்களில் தலைநகர் சென்னை ஈயடிக்கிறது. வெயிலுக்காக பல்லாயிரக்கணக்கானோர் கடற்கரைக்கு மாலை வேளைகளில் படையெடுப்பது வழக்கம். ஆனால் போட்டி நடைபெறும் தினங்களில் மொத்தக்கூட்டமும் சேப்பாக்கம் மைதானத்துக்கு படையெடுத்து விடுகிறது. திரையரங்குகளில் மாலைக்காட்சிகளில் கூட்டம் சேருவதில்லை. தசாவதாரம் படத்தின் வெளியீடு கூட 20-20 போட்டிகளால் தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள்.

போட்டி நாட்களில் படப்பிடிப்பு எதுவும் இல்லாத திரை நட்சத்திரங்கள் தவறாமல் சேப்பாக்கத்தில் ஆஜராகிவிடுகிறார்கள். இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாது சினிமா ரசிகர்களும் தங்கள் அபிமான நட்சத்திரங்களை காண மைதானத்துக்கு வந்துவிடுகிறார்கள். கிரிக்கெட் ரசிகர்களுக்கும், சினிமா நட்சத்திரங்களுக்கும் இடையே சிறுசிறு மோதல்களும், தள்ளுமுல்லுகளும் நடக்கிறது.

நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஹைதராபாத்தின் டெக்கான் சார்ஜர்ஸ் அணியோடு மோதியது. நேற்று மதியம் போட்டியைக் காண நமீதா வருகிறார் என்ற செய்தி நகரில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இச்செய்தியைக் கேள்விப்பட்ட பணியில் இருக்கும் அரசு மற்றும் தனியார் அலுவலர்கள் பலரும் அவசர அவசரமாக அலுவலங்களில் பொய்க்காரணம் சொல்லி பர்மிஷன் போட்டு சேப்பாக்கத்தை நோக்கி படையெடுத்தனர். நமீதா ரசிகர்கள் நூற்றுக்கணக்கானோர் சேப்பாக்கம் மைதானத்தின் முகப்பில் கூடி நமீதா வாழ்க என்று கோஷமிட்டுக் கொண்டிருந்தனர். துரதிருஷ்டவசமாக நமீதா ரசிகர்கள் பலருக்கும் மைதானத்துக்குள் செல்ல டிக்கெட் கிடைக்கவில்லை. இவர்களில் பலர் விரக்தி அடைந்து போட்டி முடியும் வரை மைதானத்தை சுற்றி சுற்றி வந்துகொண்டிருந்தார்கள்.

இதற்கிடையே ஜேம்ஸ்பாண்டு படநாயகி தோற்றத்தில் பெரும் ஆரவாரத்துக்கிடையே போட்டி தொடங்கும் நேரத்துக்கு சற்றுமுன்னர் நமீதா வந்தார். போட்டியை கவர் செய்ய வந்திருந்த கேமிராமேன்கள் சிலரும் நமீதா ரசிகர்கள் போலிருக்கிறது. போட்டியின் முக்கியமான கட்டங்களை கவர் செய்யாமல் அடிக்கடி நமீதாவை கவர் செய்துகொண்டிருந்தார்கள். நமீதாவின் அதிரடி ஆடையை கண்டு பயந்துவிட்டதாலோ என்னவோ சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனியும், அவரது குழுவினரும் நேற்று சொதப்பி விட்டார்கள். ரன் குவிக்க திணறிய அணி, பவுலிங் செய்யும்போது வள்ளல்களாக மாறி ரன்களை வாரி இறைத்தார்கள்.

டோனி குழுவினர் சோர்ந்துப்போனதை கண்ட டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் கேப்டன் கில்லி என்ற கில்கிறிஸ்ட் வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டார். அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன் ஆக களமிறங்கிய அவர் சிக்ஸர்களும், பவுண்டரிகளுமாக விளாசி சென்னை அணியை சேதாரத்துக்குள்ளாக்கினார். சென்னை அணியினர் ஓரிரு பவுண்டரிகள் அடித்தபோதும் கைத்தட்டி உற்சாகப்படுத்திய நமீதா, ஹைதராபாத் அணியினர் சிக்ஸர்கள் விளாசியபோதும் ஆரவாரம் செய்தார். இதனால் நமீதா எந்த அணியை ஆதரித்தார் என்பது தெரியாமல் ரசிகர்கள் குழம்பினர். இருப்பினும் நமீதா கைத்தட்டும் போதெல்லாம் தாங்களும் கைத்தட்டி, விசிலடித்து கொண்டாட்டமாக இருந்தனர். இறுதியில் கம்பீரமாக டெக்கான் சார்ஜர்ஸ் அணியினர் வெற்றி பெற்றனர்.

தொடர்ந்து நான்கு ஆட்டங்கள் வென்று முதலிடத்தில் இருந்த சென்னை அணி, அதன் பின்னர் ஆடிய மூன்று ஆட்டங்களில் தொடர்ந்து தோல்வியை தழுவியதால் சென்னை ரசிகர்கள் வெறுத்துப் போயிருக்கிறார்கள். சென்னை அணியின் விளம்பரத் தூதர்களாக இளைய தளபதி விஜய்யும், நயன்தாராவும் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பாக நியமிக்கப்பட்டனர். நயன்தாராவை இடையில் அப்பொறுப்பில் இருந்து நீக்கியதால் தான் சென்னை அணி தொடர்ந்து தோல்விகளை சந்திக்கிறது என்ற புதிய கண்டுபிடிப்பை நேற்று மைதானத்தில் போட்டியைப் பார்த்து தலையில் துண்டு போட்டுக்கொண்ட நயன்தாரா ரசிகர் ஒருவர் கண்டறிந்து எல்லோரிடமும் சத்தமாக சொல்லிக் கொண்டிருந்தார்.


இதற்கிடையே ஆரம்பத்தில் தோற்றுக் கொண்டிருந்த பஞ்சாப் கிங்ஸ் அணியினர் திடீரென எழுச்சிப்பெற்று தொடர்ந்து வெற்றிகளை குவித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு அந்த அணியின் உரிமையாளரான ப்ரீத்தி ஜிந்தாவே காரணம் என்கிறார்கள். பஞ்சாப் போட்டி நடக்கும் மைதானங்களுக்கு அந்த அணியின் சீருடையுடன் செல்லும் ப்ரீத்தி, போட்டி நேரம் முழுவதும் அணியினரை உற்சாகப்படுத்தி வருகிறாராம்.

தன் அணி போட்டியில் வெற்றி பெற்றால் அணியினரை மேற்கத்திய பாணியில் கட்டி அணைத்து வாழ்த்து தெரிவிக்கிறார் ப்ரீத்தி ஜிந்தா. இதனால் உத்வேகம் அடையும் பஞ்சாப் கேப்டன் யுவராஜ் மற்றும் அவரது அணியினர் ஆவேசமாக ஆடி இப்போது வெற்றிகளைத் தொடர்ந்து குவிக்கிறார்கள் என்று ஒரு கிரிக்கெட் ரசிகர் சொன்னார்.

இத்தொடரில் தொடர்வெற்றிகளை குவித்து முதலிடத்தில் இருந்தாலும் மற்ற அணிகளுக்கு இருப்பது போன்ற நட்சத்திர ஆதரவும், சலுகையும் தன் அணிக்கு இல்லாததால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளரும், கேப்டனுமான ஷேன்வார்னே நொந்துப் போய் இருக்கிறாராம்.

6 கருத்துகள்:

  1. தலைவா மேட்டரும் சூப்பர்...படமும் சூப்பர்

    பதிலளிநீக்கு
  2. ஹ்ம்ம்ம்.. நல்லா தான் இருக்கு...

    பதிலளிநீக்கு
  3. http://www.charuonline.com/Feb2010/meendumkalai2.html


    Karpavan kethare ?

    பதிலளிநீக்கு
  4. 'தொழில்நுட்ப'ரீதியாகத்தான் எழுதியிருக்கிறீர்கள்...

    பதிலளிநீக்கு
  5. சும்மா "நச்"ன்னு இருக்கு லக்கி.
    'நமிதாவா'ன்னு கேக்காதீங்க, நான் சொல்றது உங்க பதிவை!

    பதிலளிநீக்கு
  6. When did ignorance about something ever stop you from talking about it!?

    பதிலளிநீக்கு