24 மே, 2010

மொழி விவசாயி!

சனி, ஞாயிறு விடுமுறை கிடைத்தால் போதும். தமிழகத்தின் ஏதோ ஒரு நகருக்கு, ஏதோ ஒரு கிராமத்துக்கு அவர் பேருந்து ஏறிவிடுவார். இல்லையேல் புதுவைக்கு அருகிலிருக்கும் ஏதாவது பள்ளிக்கோ, கல்லூரிக்கோ சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பிவிடுவார். கையில் கொஞ்சம் புத்தகங்கள், லேப்டாப், சில சிடிக்கள்.

யார் இவர்?

எந்த அமைப்பின் பின்புலமுமின்றி தனிமனிதராக தமிழ் இணையம் குறித்த விழிப்புணர்ச்சி கூட்டங்களை தமிழகமெங்கும் நடத்தி வரும் முனைவர் மு.இளங்கோவன். புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் தமிழ்த்துறையில் பணிபுரிகிறார். நாற்பத்தி மூன்று வயது.

மாணவர்களை சந்தித்து இணையத்தில் தமிழை பரவலாக்குவதை தன்னார்வத்தோடு தனிநபர் இயக்கமாகவே செய்துவரும் இவரது பின்னணிக் கதையும் சுவாரஸ்யமானது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ராஜேந்திரசோழன் உருவாக்கிய வெற்றி நகரான கங்கை கொண்ட சோழபுரத்துக்கு அருகிலிருக்கும் இடைக்கட்டு கிராமத்தில் பிறந்தவர் இளங்கோவன். படிப்பறிவு இல்லாத குடும்பம். பெற்றோர் விவசாயிகள். வாழ்ந்து கெட்ட குடும்பம் என்று சொல்லலாம். இவரது முன்னோர் ஒரு காலத்தில் 2000 ஏக்கர் விவசாய நிலத்தை கட்டி ஆண்டவர்கள். வெள்ளையர் காலத்தில் அப்பகுதியில் பொன்னேரி என்ற பெயரில் செயற்கை ஏரி ஒன்று உருவாக்கப்பட்ட போது இவர்களது நிலங்களை அரசு எடுத்துக் கொண்டது.

மிச்சமிருந்த சொச்ச நிலங்களை வைத்து பிழைப்பு நடத்திக் கொண்டிருந்தார்கள் இளங்கோவன் குடும்பத்தினர். பரம்பரை பரம்பரையாக செல்வத்தில் கொழித்துக் கொண்டிருந்தவர்கள் என்பதால் கல்வியின் அவசியம் யாருக்கும் தெரியவில்லை. இளங்கோவனின் பெற்றோர் முதன்முதலாக தங்கள் மகனுக்கு கல்வி போதிக்க வேண்டியதின் அவசியத்தை உணர்ந்தார்கள்.

அருகிலிருந்த உள்கோட்டை கிராமப் பள்ளிக்கு இளங்கோவனை கல்விகற்க அனுப்பி வைத்தார்கள். பத்தாம் வகுப்பு வரை அங்கு படித்தவர் மேல்நிலைக் கல்விக்காக மீன்சுருட்டி கிராமத்துக்கு செல்ல வேண்டியிருந்தது. தினமும் 13 கிலோ மீட்டர் நடந்து சென்று பள்ளிக்கு செல்வார் இளங்கோவன். மாலையில் அம்மாவுக்கு உதவியாக வீட்டுவேலைகள்.

+2வில் ஆங்கிலப் பாடத்தில் தோல்வி. இருந்தாலும் தங்களது மகன் +2 வரை படித்ததே பெரிய விஷயம் என்று பெற்றோர் எண்ணினார்கள். அதுவே அவர்களுக்கு போதுமானதாகவும் இருந்தது. இரண்டு மாடு வாங்கி கொடுத்து, மகனை விவசாயம் செய்ய சொன்னார் தந்தை முருகேசன்.

மூன்று வருடங்கள் விவசாயமே எதிர்காலம் என்று உழைத்தார் இளங்கோவன். அவ்வப்போது அருகிலிருக்கும் நகருக்கு செல்வார். தீபாவளி, பொங்கல் போன்ற விடுமுறை சீசன்களில் நகரிலிருக்கும் துணிக்கடை ஒன்றில் தற்காலிகமாகப் பணிபுரிவார். தமிழார்வம் கொண்ட இளங்கோவன் ‘தென்மொழி’போன்ற இலக்கிய இதழ்களை தொடர்ச்சியாக வாசிக்கும் பழக்கம் கொண்டவர்.

ஒருமுறை துணிக்கடைக்கு வந்த தமிழாசிரியர் ஒருவர் இவரது கையில் இருந்த தென்மொழியை கண்டு ஆச்சரியப்பட்டிருக்கிறார். அவர் வாழ்நாளில் துணிக்கடையில் பணி செய்யும் ஒருவரின் கையில் தீவிர இலக்கிய இதழை கண்டதேயில்லை. ஆச்சரியப்பட்டு இளங்கோவனின் பின்னணியை விசாரித்திருக்கிறார்.

“தமிழார்வம் கொண்டவர்கள் தமிழ் கற்க வேண்டும். தமிழ் படித்தால் வாழ்க்கையில் நல்ல நிலைக்கும் வரலாம்” என்று அறிவுறுத்தி நெறிப்படுத்தினார். அவரது வழிகாட்டலில் திருப்பனந்தாள் காசி திருமடம் நடத்திய செந்தமிழ் கல்லூரியில் தமிழ் படிக்கச் சென்றார் இளங்கோவன்.

மகன் என்ன படிக்கிறான், அதை படித்தால் என்ன வேலை கிடைக்கும் என்றெல்லாம் அவரது பெற்றோருக்கு தெரியாது. பட்டம் படிக்கப் போகிறேன் என்று சொன்னதுமே வீட்டில் இருந்த எதையோ விற்று காசு கொடுத்து அனுப்பி வைத்தார் அப்பா.

அங்கே இளங்கலை படிக்கும்போது தீட்டப்பட்ட வைரமாக ஜொலிக்க ஆரம்பித்தார். கல்லூரி, பல்கலைக்கழக அளவில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளை அள்ள ஆரம்பித்தார். ஆய்வுக்கட்டுரைகளாக எழுதித்தள்ளி பல்வேறு ஆராய்ச்சிப் போட்டிகளில் தங்கப் பதக்கங்களாக வென்று குவித்தார். திருப்பனந்தாள் மட நிர்வாகம் இளங்கோவனை ஊக்கப்படுத்திக் கோண்டே இருந்தது. அங்கேயே முதுகலையையும் முடித்தார்.

முதுகலை முடித்த பின்னரும் கூட உயர்கல்வி பற்றியோ, வேலைவாய்ப்பு பற்றியோ இளங்கோவனுக்கு ஏதும் தெரியாது. மதுரை இளங்குமரன் என்ற தமிழறிஞரிடம் குருகுல வாசம் செய்து, தமிழ் கற்க முடிவெடுத்தார். பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் தமிழறிஞர்கள் குருகுலவாசம் மூலமாகவே தமிழ் கற்றார்கள். அந்த அடிப்படையில் மரபுத்தமிழில் பயிற்சிபெற குருகுல வாசமே சிறந்த்து என்று இளங்கோவன் எண்ணினார்.

இந்த காலக்கட்டத்தில் தூயதமிழில்தான் இளங்கோவன் பேசுவார். அவரது நடை உடை பாவனைகள் நூற்றாண்டுக் காலத்துக்கு முந்தைய தமிழறிஞர்களை ஒத்த்தாக இருக்கும். கேலி, கிண்டல்கள் பற்றி இளங்கோவன் கவலைப்படுவதேயில்லை.

அப்போது புதுவைப் பல்கலைக்கழகத்தில் இளம் முனைவர் பட்டம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஒரு நாளிதழில் கண்டு விண்ணப்பித்தார். பேராசிரியர் க.ப.அறவாணன் தலைமையிலான தமிழியல் துறையில் ‘மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்’எனும் தலைப்பில் ஆய்வுசெய்து இளம் முனைவர் பட்டம் பெற்றார். பின்னர் திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் பல்கலைக்கழக நிதியுதவியுடன் ‘பாரதிதாசன் பரம்பரை’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர்பட்ட ஆய்வினையும் நிறைவுசெய்தார்.

மாணவப் பருவத்தில் இருந்தபோது இவர் எழுதிய மாணவராற்றுப்படை, பனசைக்குயில் கூவுகிறது, அச்சக ஆற்றுப்படை, மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும், விடுதலைப் போராட்ட வீர்ர் வெ.துரையனார் அடிகள் முதலான நூல்கள் வெளிவந்தன.

ஒருவழியாக கல்வி, முனைவர் பட்டம் எல்லாம் முடிந்தது. அடுத்து?

தமிழ்நாட்டின் எல்லா பட்டதாரி இளைஞர்களைப் போலவே இளங்கோவனும் சென்னைக்குப் படையெடுக்கிறார். சென்னையின் பிரம்மாண்டம் அவரை தன்னுள் விழுங்கிக் கொள்கிறது. திரைப்படங்களில் பாடல்கள் எழுதவேண்டும் என்று இளங்கோவனுக்கு ஆர்வம் அதிகம்.

ஏனெனில், நாட்டுப்புறப் பாடல்களில் நிறைய ஆராய்ச்சிகளை அவர் மேற்கொண்டிருந்தார். ஒப்பாரிப்பாடல், நடவுப்பாடல்கள் ஆகியவற்றை நூற்றுக்கணக்கில் சேகரித்து ஒலிப்பதிவு செய்து வைத்திருந்தார். நம் மண்ணின் வரிகளை வெள்ளித்திரையில் ஒலிக்கச் செய்யவேண்டுமென்பது இளங்கோவனின் ஆசை.

தமிழை மட்டுமே கையில் எடுத்துக்கொண்டு சென்னைக்கு வரும் இளைஞர்களுக்கு சரணாலயம் கவிஞர் அறிவுமதியின் அறை. இளங்கோவனும் அவரது அறையில்தான் தங்கியிருந்தார். அறிவுமதிக்கு இளங்கோவன் திரைத்துறைக்கு செல்வதில் விருப்பமில்லை. “தமிழில் ஆராய்ச்சி செய்பவர்கள் மிகக்குறைவு. தமிழறிஞர்களும் சினிமாவுக்குப் போய்விட்டால் யார்தான் ஆராய்ச்சிகளை மேற்கொள்வது?” என்று இளங்கோவனிடம் அக்கறையோடு கூடிய கண்டிப்பு காட்டினார்.

தமிழ் மட்டுமே தெரிந்த இளங்கோவனுக்கு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஆய்வு உதவியாளர் பணி கிடைத்தது. அதுவும் தற்காலிகப் பணியே. ‘தமிழியல் ஆவணம்’ என்ற திட்டப்பணியில் ஒரு ஆண்டு பணிபுரிந்தார். ஒப்பந்தம் முடிந்ததும் மறுபடியும் குருகுல வாசம். இம்முறை இசைமேதை வீ.ப.கா.சுந்தரம் அவர்களின் தமிழிசைக் கலைக்களஞ்சியம் நூல் வெளிவர அவரிடம் ஓராண்டு உதவியாளராகப் பணி.

பேச்சும், மூச்சும், வாழ்வும் தமிழாகவே கழிந்துகொண்டிருந்தது இளங்கோவனுக்கு. வருமானத்தை தவிர எல்லாமே கிடைத்தது அவருக்கு. என் தமிழ் என்னை கைவிடாது என்ற நம்பிக்கையோடு மட்டுமே வாழ்வை அணுகிக் கொண்டிருந்தார். இடையில் ஒரு கலை அறிவியல் கல்லூரியில் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் தமிழ் விரிவுரையாளராகப் பணிபுரிந்து கொண்டிருந்தார்.

2005ஆம் ஆண்டு மத்திய அரசின் யு.பி.எஸ்.சி. தேர்வில் வென்றதுமே வாழ்க்கை இவருக்கு வசப்பட்டது. இவர் கேட்டதை எல்லாம் தமிழ் வாரி வாரி கொடுத்தது. இன்று புதுவையின் புகழ்வாய்ந்த கல்லூரியான பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

2006ஆம் ஆண்டு வாக்கில் இணையம் இவருக்கு அறிமுகமானது. இணையம் உலகத் தமிழர்களை ஓர் புள்ளியில் திரட்டுகிறது என்பதை உணர்ந்தார். குறிப்பாக இளைஞர்களை இணையம் கட்டி வைத்திருக்கிறது. அன்றாட வாழ்வில் தமிழைப் புறக்கணிக்கும் இளைஞர்கள் கூட இணையத்தில் தமிழை கொண்டாடும் நிலையை கண்டார்.

நண்பர்களின் உதவியோடு வலைப்பூ ஒன்றினை உருவாக்கி (http://muelangovan.blogspot.com/) தமிழறிஞர்கள் குறித்த அறிமுகத்தினை தொடர்ச்சியாக பதிய ஆரம்பித்தார். கல்வெட்டுகள் வாயிலாக பழந்தமிழ் அறிஞர்களை குறித்து இன்று அறிகிறோம். இன்று நவீன கல்வெட்டாக செயல்படுவது இணையம்தான். எனவே தமிழுக்காக உழைப்பவர்களை, உழைத்தவர்களை ஆவணப்படுத்த வலைப்பூ இளங்கோவனுக்கு வசதியாக இருக்கிறது.

உலகின் எதிர்காலம் இணையத்தை பெருமளவில் சார்ந்திருக்கும் என்று சொல்லப்படும் இக்காலக்கட்டத்தில் இணையத்தில் தமிழின் பயன்பாட்டை பரவலாக்குவதன் மூலமாக மொழியை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்திச் செல்லமுடியும் என்று நம்பினார். ஊர் ஊராகச் சென்று இவர் இன்று இணையத்தமிழை பரப்பும் பணியை செய்துவருவதற்கு இதுவே காரணம்.

அந்தமானில் இருந்து ஒருவர் கூட தமிழில் இணையத்தில் இயங்காத நிலை இருந்தது. சமீபத்தில் அங்கு சென்றிருந்த இளங்கோவன், அங்கிருந்த தமிழர்களிடம் கணியில் எப்படி தமிழை உள்ளிடுவது, இணையத்தில் தமிழ் மூலமாக இயங்குவது போன்றவற்றை கற்றுத் தந்துவிட்டு திரும்பியிருக்கிறார். எல்லா தமிழர்களுக்கும் தமிழ் - இணையம் குறித்த தெளிவு வேண்டுமென்பதற்காக ‘இணையம் கற்போம்’ என்றொரு நூலையும் வெளியிட்டிருக்கிறார்.

நாம் விரும்பினாலும் சரி. விரும்பாவிட்டாலும் சரி. எத்துறையாக இருந்தாலும் உழைப்புக்கான அங்கீகாரம் கிடைக்கத்தானே செய்யும்?

பல்வேறு அமைப்புகளின் விருதுகளோடு முத்தாய்ப்பாக, இந்திய அரசின் செம்மொழி மத்திய உயராய்வு நிறுவனம் 2006-07 ஆண்டுக்கான ‘செம்மொழி இளம் அறிஞர் விருது’இவருக்கு வழங்கி கவுரவித்திருக்கிறது.

விருதுகளும், பாராட்டுகளும் வரவேற்பறையை அலங்கரிக்க, இன்னமும் திருப்பனந்தாள் மட கல்லூரியில் படித்தபோது இருந்த அதே எளிமையோடே இருக்கிறார் மு.இளங்கோவன். “சட்டையை கழட்டிட்டா இன்னும் நான் விவசாயி தாங்க” வெள்ளந்தியாக சிரிக்கிறார்.

புதுச்சேரியில் அவரை சந்தித்தபோது வருத்தம், மகிழ்ச்சி, வியப்பு, கோபம் என்று பல்வேறு உணர்வுகளில் ஆங்கிலம் கலக்காத அழகுத்தமிழில் பேசிக்கொண்டே போகிறார்.

“தமிழ் வளர நம்முடைய கல்விச்சூழலில் மாற்றம் தேவை. தமிழ்வழிக் கல்வியால் மட்டுமே தமிழின் இருப்பை அடுத்த பல நூற்றாண்டுகளுக்கும் உறுதி செய்யமுடியும். அதுபோலவே தமிழ் படிப்பவர்களுக்கு வேலைவாய்ப்பு நிச்சயம் என்ற நிலையையும் எடுத்துவரவேண்டும். இதையெல்லாம் அரசாங்கம் தான் செய்யமுடியும்.

தமிழ் என்பது இன்று பட்டிமன்றங்களில் நகைச்சுவை செய்ய பயன்படுகிறது. மக்களுக்கு தமிழ்ச்சுவையை சூடாக, சுவையாக கொடுத்த பட்டிமன்றங்கள் இன்று சில தமிழறிஞர்களாலேயே வணிகமயமாகி விட்டது எத்தகைய அவலம்?

அயல்நாடுகளுக்கு சென்றிருக்கும் நம் தமிழர்கள் எப்படி தமிழ் வளர்க்கிறார்கள் என்று பார்த்தோமானால், தமிழ் சினிமாக்காரர்களை வைத்து நிகழ்ச்சிகள் நடத்துகிறார்கள். அவற்றை பதிவு செய்து தொலைக்காட்சிகளுக்கு விற்கிறார்கள்.

தமிழர்களுக்கு தமிழில் நடத்தப்படும் அச்சு ஊடகங்களோ பிழைகளோடு வருகிறது. முழுக்க முழுக்க வேற்றுமொழிக் கலப்போடு தமிழ்க்கொலை செய்கிறது. வானொலி, தொலைக்காட்சி தமிழைப் பற்றி நான் சொல்லவே வேண்டியதில்லை”

”அப்படியானால் தமிழின் எதிர்காலம் குறித்து அச்சப்பட வேண்டியிருக்கிறது என்கிறீர்களா?”

“அப்படியெல்லாம் நாம் அச்சப்பட்டு விட வேண்டாம். இன்று இணையம் இருக்கிறது. இணையம் என்பது இளைஞர்களுக்கு இதயமாக இருக்கிறது. அவர்களுக்கு இது வெறும் பொழுதுபோக்கு ஊடகமாகவோ, கற்பிக்கும் ஊடகமாகவோ மட்டுமில்லை. எனவே இணையத்தில் தமிழை பரவலாக்கினோமானால் அது அடுத்த தலைமுறைக்கு தமிழை சரியாக கொண்டு சேர்க்கும் பணியாக இருக்கும். தமிழறிஞர்கள் தங்கள் எழுதுகோல்களை மூடிவைத்துவிட்டு கணினியை கற்றுக்கொண்டு, கணினியில் தமிழ் பரப்ப முன்வரவேண்டும். தமிழ் வளர்க்க என்னென்ன சாத்தியக்கூறுகள் தென்படுகின்றனவோ, எதையும் புறக்கணிக்காமல் அத்தனையையும் நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

எனவேதான் கணினியில் தமிழை எப்படி உள்ளிடுவது? இணையத்தில் தமிழை கொண்டுசெல்வது என்று ஊர் ஊராக போய் கற்பித்து வருகிறேன். வளர்ந்தவர்களுக்கு ஆலோசனைகளோ, வழிகாட்டுதல்களோ எரிச்சலைத் தரும் என்பதால் மாணவசமுதாயத்துக்கு சொல்லிக் கொடுக்கிறேன். அவர்கள் தமிழை வாழவைப்பார்கள்.

இணையம் இவ்வளவு இன்றியமையாதது என்பதால்தான் நடைபெறவிருக்கும் செம்மொழி மாநாட்டோடு இணையமாநாடும் நடத்தப்படுகிறது. இதனால் இணையத்தமிழ் பயன்பாடு தமிழர்களுக்கு நல்லமுறையில் அறிமுகப்படுத்தப்படும் என்று நம்புகிறேன்!”

அரியலூருக்கு செல்லும் அவசரத்தில் இருந்தவர் நம்மிடம் கைகுலுக்கி விடைபெறுகிறார். கையில் கொஞ்சம் புத்தகங்கள், லேப்டாப், சில சிடிக்கள். பேருந்தை பிடிக்கும் அவசரம். எந்தப் பயணமாக இருந்தாலும் தமிழ் அவருக்கு வழிதுணையாக இருக்கும்.

(நன்றி : புதிய தலைமுறை)

26 கருத்துகள்:

  1. நல்ல கட்டுரை / தலைப்பு. பகிர்விற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா1:27 PM, மே 24, 2010

    avarathu email mugavariyinai pirasurithirukalame.. Maaya.. Colombo

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா3:26 PM, மே 24, 2010

    கற்றது தமிழ்- இவரை வைத்து புணையப் பட்டதா ?

    பதிலளிநீக்கு
  4. அண்மையில் முனைவர் மு.இளங்கோவன் சிங்கை வந்திருந்து சிறப்பாக பேசினார். நேரிலும் சந்தித்து பேசினேன். பழகுவதற்கும் இனியர்

    பதிலளிநீக்கு
  5. அருமையான பகிர்வு. நன்றி!

    பதிலளிநீக்கு
  6. பூமிநாதனை(http://my.opera.com/thamileelam/blog/show.dml/5543751) பெற்றெடுத்த தமிழ்த்தாய் தான் இளங்கோவனையும்
    பெற்றேடுத்திருகிறாள். வாழிய தமிழ்மொழி. வாழிய தமிழகம்.வாழ வைப்பாள் தமிழ்த்தாய்.

    பதிலளிநீக்கு
  7. தற்செயலாக உங்களின் வலைப்பூவை படித்த பின் தான் மற்ற வலை பூக்களை படிக்க தொடங்கினேன். படிக்கும் ஆர்வம் உள்ள தமிழர் அனைவருக்கும் இந்த வலை பூ ஒரு வர பிரசாதமாக இருக்கிறது. தமிழ் வலையை பற்றி ஒரு மனிதர் தன்னம்தணியாக மற்றவர்களுக்கு எடுத்துகூருகிறார் என்றால் நிச்சயம் அவர் பாராட்டப்பட கூடியவரே. மேலும் வெளி உலகுக்கு தெரியாமல் இருந்த அந்த முகத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தமைக்கு பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  8. \\இணையத்தில் தமிழை பரவலாக்கினோமானால் அது அடுத்த தலைமுறைக்கு தமிழை சரியாக கொண்டு சேர்க்கும் பணியாக இருக்கும்.//

    உண்மையான வரிகள் .. கட்டுரை நன்றாக இருக்கிறது .

    பதிலளிநீக்கு
  9. அருமை லக்கி, பகிர்வுக்கு நன்றி.
    இதுபோன்ற சாதனையாளர்களை உங்க பக்கத்தின் மூலம் உலகறியச்செய்யும் முயற்சிக்குப் பாராட்டுக்கள்.

    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    பதிலளிநீக்கு
  10. அருமையான கட்டுரை லக்கி.

    லெனின்

    பதிலளிநீக்கு
  11. அறிமுக கட்டுரை ரொம்ப நல்லா எழுதப்பட்டு இருக்கு. மிக்க நன்றி சார்

    பதிலளிநீக்கு
  12. நல்ல பதிவு. நன்றி லக்கி.

    பதிலளிநீக்கு
  13. நல்ல விசயங்களை பகிர்ந்தமைக்கு நன்றி..
    இவரை போன்றவர்களை மென்மேலும் உங்களை போன்றவர்கள் ஊக்குவித்து வெளிகொணர வேண்டுகிறோம்..

    www.narumugai.com
    நமக்கான ஓரிடம்

    பதிலளிநீக்கு
  14. I am a former student from Adhi parasakthi college of science, where Dr.Elangoven worked as a lecturer. He was the best tamil lectureer the college ever had, but the college was not the good place for him to show his real talent.Luckly he left the college. I am happy to see him now doing lot of activites to create awarness. I appreciate his work.
    ALL THE BEST Sir,
    Murugan.

    பதிலளிநீக்கு
  15. நண்பர் இளங்கோவனுக்கு நல்வாழ்த்துகள். இணைய நுட்பத்தைத் தமிழில் எடுத்துரைக்கும் அவரின் முயற்சி சிறப்பானது. தமிழால் முடியும் என்பதற்கு இவர் ஓர் எடுத்துக்காட்டு.

    பதிலளிநீக்கு
  16. நல்ல கட்டுரை. இவரைப் போன்றவர்களை ஊடகம் மூலமாக அறிமுகப்படுத்தும் உங்களுக்கும் புதிய தலைமுறைக்கும் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  17. நற்பணியாற்றும் முனைவர் இளங்கோவனுக்கும், அவரை
    அறிந்து போற்றிய புதிய தலைமுறை இதழுக்கும் நல்வாழ்த்துகள்!
    நல்ல தமிழில் பேசி
    எழுதும் இப்படியான தமிழர்களை மற்றவர்களும்
    பின்பற்ற வேண்டும்.

    செல்வா
    வாட்டர்லூ, கனடா

    பதிலளிநீக்கு
  18. இளங்கோவன் அவர்களது சேவை தொடர வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  19. இப்படி ஒரு மனிதரை இதுகாரும் அறிந்திராமல் இருந்ததுகண்டு வருந்துகிறேன். அங்ஙனமே இப்போதாவது அறிந்தகொன்டத்தில் மனமுவக்கிறேன். தமிழ் கூறும் நல்லுலகிற்கு பெருமை சேர்த்தவரை அறிமுகஞ்செய்த யுவகிருரிட்டிணாவுக்கு உளங்கனிந்த நன்றிகள் பல.

    அன்பன்,
    உதயகுமார்

    பதிலளிநீக்கு
  20. நல்ல பதிவு !

    unmaivrumbi.
    Mumbai.

    பதிலளிநீக்கு
  21. அருமை நண்பர் மு.இள்்கோவன் அவர்கள் பற்றிய ்்்களின் பகிர்வு மிக அருமை. கால்்்ின் அருமை கரு்ி வெளியிடப்பட்ட ப்ிவே இ்ு எனலாம்.
    இ்த் நேர்ட்ில் அவர் வெளிப்படவில்லையானால் வேறு எந்த நேர்்்ில் வெளிப்படுவ்ு.
    வாழ்க அவர் ்மிழ்ப் பணி.

    பதிலளிநீக்கு
  22. நல்ல பதிவு. முனைவர் அவர்களின் தமிழ் உழைப்பு போற்றுதலுக்கு உரியது.

    இணையத் தொடர்பிலேயே அவரோடு மிகுந்த அன்போடு பழகி இருந்தேன். அண்மையில் எமது மலேசிய திருநாட்டிற்கு வந்திருந்தார். அவரோடு இருந்த மணித்துளிகள் மகிழ்ச்சியானவை மட்டுமல்ல; மறக்கவியலாததும் கூட.

    http://thirutamil.blogspot.com/2010/05/blog-post_23.html

    அவரிடமிருந்து தமிழ்க்கூறு நல்லுலகம் பெற வேண்டியவை இன்னும் நிறைய உள்ளன.

    பதிலளிநீக்கு
  23. மு.இளங்கோவனைப்பற்றுய பதிவை வாசித்தேன். நன்றி. சமீபத்தில் மலேசியாவுக்கு வந்திருந்தார்.மின்னஞ்சலிலும் தன்னுடைய வருகையைப்பற்றி எனக்குத்தெரிவித்திருந்தார்.`அவரை ராஜேந்திர சோழன் ஆண்ட கடாரம் கண்ட சோழபுரத்திற்கு அழைத்துச்சென்றேன்.மிகுந்த ஆர்வத்தோடு சுற்றிப்பார்த்துவிட்டு தன் வலைப்பூவில் பதிவையும் செய்தார். அதன் பின், எங்கள் ஊரில் 150 பேர் கூடிய சபையில் நாட்டுப்புறப்பாடல் தலைப்பில் 2 1/4 மணிநேரம் உரையாற்றி தமிழ் நெஞ்சர்களை வெகுவாகக் கவர்ந்தார். இதுபோன்ற சிறந்த உரை நடந்ததது இதுதான் முதல் முறை.அவர் மலேசியாவுக்கு இன்னொரு முறை வரவேண்டும் என எதிர்பார்க்கிறோம்.நன்றி
    கோ.புண்ணியவான்.(kopunnivan.blogspot.com)

    பதிலளிநீக்கு
  24. டாக்டர் பிரகாஷ் பற்றிய பதிவு சுவாரஸ்யமாக இருந்ததது.நாவல் எங்கே கிடைக்கும்?http://kopunniavan.blogspot.com

    பதிலளிநீக்கு
  25. தமிழ் பேராசிரியராக இருந்து கொண்டு சிறப்பான கணினி குறித்த விழிப்புணர்வை கல்வி நிறுவனங்களில் பரவலாக்கிக் கொண்டிருக்கும் நான்காம் தமிழின் தொண்டாளனை செம்மொழி மாநாட்டில் சந்தித்தேன்.உரையாடினேன்.வாழ்த்தினேன்.இந்த பதிவிற்கு நன்றி.

    பதிலளிநீக்கு