29 மே, 2010

மு.க. ஸ்டாலின் - ஒரு பார்வை!


தமிழகத்தின்  துணை முதல்வராக மு.க.ஸ்டாலின்  பொறுப்பேற்று இன்று ஒரு வருடமாகிறது. இந்த நிறைவினையொட்டி இன்று காலை முதல்வர் கலைஞரைச் சந்தித்து, துணை முதல்வர் ஸ்டாலின் வாழ்த்துப் பெற்றார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
தமிழக அரசியலின் அடுத்த  தலைமுறையினர் மத்தியில் சற்று வித்தியாசமான தலைவராகத் தென்படுபவர்  மு.க. ஸ்டாலின். துணைமுதல்வராக அவர் பொறுப் பேற்றுக் கொண்ட இந்த ஒரு வருடகாலப் பகுதிகளில், நிர்வாகத் திறன்மிக்கத் தலைவராக அவர் தன்னை நிலைநிறுத்தி வருகின்றார் என்றே சொல்லப்படுகிறது.
அவர் குறித்த ஒரு பார்வையாக இக் கட்டுரை அமைகிறது.

1976.. கோவையில் திமுக மாநில மாநாடு பரபரப்பான சூழ்நிலையில் நடந்துகொண்டிருக்கிறது. பரபரப்புக்கு காரணம் மிசா, ஜனநாயகத்தின் கோரமான இன்னொரு முகம். இந்தியா முழுவதும் மக்களும், பத்திரிகைகளும் சுதந்திரக் காற்றை சுவாசிக்க அன்றைய கொடுங்கோல் பிரதமரால் தடை விதிக்கப்பட்டு அடக்குமுறை தாராளமாக கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த நேரம். திமுக ஆண்ட தமிழகத்திலும், காமராஜரின் பழைய காங்கிரஸ் ஆண்ட குஜராத்திலும் மட்டுமே மக்களுக்கும், பத்திரிகைகளுக்கும் அடக்குமுறை இல்லை. 

அம்மாநில மாநாட்டிலே இருபதுகளின் ஆரம்பத்தில் இருக்கும் ஒரு இளைஞர் இந்திரா அம்மையாரை தாக்கி தைரியமாக முழங்கிக் கொண்டிருக்கிறார். அவரது பேச்சு அவர் தந்தையின் பேச்சை போல மடைதிறந்த வெள்ளமாக கொட்டவில்லை. தமிழ்நடை படுமோசம். இருப்பினும் அவர் பேசிய விஷயங்கள் நேரடியாக மக்களின் நெஞ்சை தொட்டது. அவர் யார் என்று மாநாட்டுக்கு வந்த திமுக தொண்டர்கள் தங்களுக்கிடையே ஒருவருக்கொருவர் கிசுகிசுத்துக் கொள்கிறார்கள். அவர்தான் தற்போதைய தமிழகத்தின் துணைமுதல்வர்.
நான்கு முறை சட்டமன்ற உறுப்பினர், இரண்டு முறை சென்னை மாநகர மேயர், திமுகவின் நிரந்தர இளைஞர் அணிச் செயலாளர், திமுக துணைப் பொதுச்செயலாளர், எதிர்கால முதலமைச்சர் என்றும், தளபதி என்றும், சிலரால் மகிழ்ச்சியோடும், பலரால் எரிச்சலோடும் பார்க்கப் படுபவர், எல்லாவற்றிற்கும் மேலாக தமிழக முதல்வர் கலைஞரின் மகன் ஸ்டாலின்!

கலைஞர் தனது அரசியல் மற்றும் கலையுலக  வாரிசாக அடையாளம் காட்ட நினைத்தது தனது மூத்த தாரத்தின் மகன் மு.க. முத்துவையே. சிறந்த நடிகர், அருமையான குரல்வளம் மிக்க பாடகர். ஏனோ தனிப்பட்ட வாழ்க்கையிலும் வெற்றியின் சிகரத்தை அவரால் எட்டமுடியவில்லை. கலையுலக வாழ்க்கையிலும் பெரியதாக எதையும் சாதிக்கவில்லை. துவண்டுப் போயிருந்த கலைஞருக்கு கை கொடுத்தவர் இரண்டாம் தாரத்தின் இளைய மகன்   மு.க. ஸ்டாலின்.

தி.மு.க. ஆட்சி  கலைக்கப்பட்டு, 'மிசா' சட்டத்தில் திமுக முன்னணியினர் கைது செய்யப்படுகிறார்கள். கலைஞரின் மகன் என்பதால் ஸ்டாலினும் கைது செய்யப்படுகிறார். சிறைக்காவலர்களிடம் ஒரு ஹிட்லிஸ்ட் இருக்கிறது, யார் யாரை 'ஸ்பெஷலாக' கவனிக்க வேண்டுமென்று. அந்த ஹிட் லிஸ்டில் அவர் பெயரும் இருந்தது. இருட்டில் நிகழ்த்தப்பட்ட கண்மூடித்தனமான தாக்குதலில் ஸ்டாலின் துவண்டார். தலைவர் மகனின் உயிரை காக்க வேண்டுமென்று 'மிசா' சிட்டிபாபு குறுக்கே புகுந்து, அவர் மீது விழுந்த தடியடிகளை தாங்கினார். சிறைச்சாலை கொடுமைகளுக்கு சாட்சியாக தன் இன்னுயிரை நீத்தார். இன்றும் ஸ்டாலினும், கலைஞரும் 'மிசா' சிட்டிபாபுவை நன்றியோடு நினைவு கூர்வதை காணலாம்.
சிறைச்சாலை அனுபவங்கள் ஸ்டாலினை அரசியல் பொறுப்புக்கு நேரடியாக வந்தே தீரவேண்டுமென்ற நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியது. மிசா கைதியாக இருந்தவர் வெளிவந்ததும் , திமுகவின் மாநில இளைஞரணி உருவாக்கப்பட்டு அதன் செயலாளராக நியமிக்கப்பட்டார். கலைஞரின் அடுத்த அரசியல் வாரிசு என்று தொண்டர்களால் முடிவெடுக்கப்பட்டார்.

அரசியல் ஒரு  சதுரங்க களம். நல்லவர்கள் தோற்பதும், வல்லவர்கள் வெற்றி காண்பதும் இங்கே அதிசயமல்ல. ஒருவருடைய உண்மையான சுபாவத்துக்கும், அவர்களுக்கு மக்களின் மத்தியில் இருக்கும் தோற்றத்துக்கும் துளிகூட சம்பந்தம் இருக்காது. இதற்கு சரியான உதாரணங்களாக ஸ்டாலினையும், அதிமுகவின் ஜெயலலிதாவையும் சொல்லலாம்.

ஸ்டாலினோடு நெருங்கிப் பழகியவர்களுக்கு மட்டுமே  அவரது வெள்ளை மனம் தெரியும். அவரது அண்ணன் அழகிரி மாதிரி அடாவடியான ஆசாமி அல்ல இவர். இன்னொரு அண்ணன் முத்து போல  அப்பாவுக்கு அடங்காத பிள்ளையும் இல்லை. அவருடைய உண்மையான சுபாவத்துக்கு நேரெதிரான ஒரு தோற்றம் தான் மக்கள் மத்தியில் ஸடாலின்  குறித்து நிலவுகிறது. இந்த தோற்றத்தை மாற்ற ஸ்டாலினும், துளிகூட முயற்சி எடுத்ததில்லை என்பது தான் சோகம்.

ஸ்டாலினோடு ஒரு செய்தி வாசிப்பாளரை இணைத்து கிசுகிசு வந்தபோது அதை மறுத்து இவர் எதுவும் சொல்லாமல் மவுனம் காத்தார். இந்த வதந்தி ஊடகங்கள் மூலமாக பரப்பப்படாமல் வாய்மொழியாக மக்கள் மத்தியில் வேகமாக பரவி வந்தது. தொலைக்காட்சி தொடர் ஒன்றில் ஸ்டாலினோடு, அந்த செய்தி வாசிப்பாளர் இணைந்து நடித்துக் கொண்டிருந்ததே அதற்கு காரணம். அப்பொதெல்லாம் தொலைக்காட்சி நாடகங்களில் நடிப்பவர்கள் நாடகம் முடியும் வரை செய்தி வாசிக்கக் கூடாது என்பது விதி. உடனே ஸ்டாலின் செய்தி வாசிப்பாளரை ஏதோ செய்துவிட்டார் என்றொரு பொய்யான பரப்புரை மக்கள் மத்தியில் பரப்பப்பட்டது. ஒரு அறிக்கை மூலமாக கூட இதை பொய்யென்று அவர் சொல்லியிருக்கலாம். ஏனோ மவுனமாகவே இருந்துவிட்டார்.

ஸ்டாலினுக்கு ஊடகத் தொடர்பு என்று ஒன்று இருப்பதாகவே தெரியவில்லை. இன்று லைம்லைட்டில் இருந்தாலும் கூட பத்திரிகைகளில் இவரைப் பற்றிய பாசிட்டிவ்வான செய்திகளை காண்பது அரிது. ஸ்டாலின் தந்தை கலைஞர் எண்பதைக் கடந்த நிலையிலும் கூட தினமும் பத்திரிகையாளர்களை சந்தித்து அளவளாவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். ஊடகத் தொடர்பு விஷயத்தில் தந்தைக்கு நேர்மாறாக ஸ்டாலின்  இருப்பது அவரது வளர்ச்ச்சிக்கு பெரிய தடைக்கல் தான். துணை முதல்வராக பொறுப்பேற்றதற்குப் பிறகு இந்த ஊடகத் தொடர்பில் கொஞ்சம் பரவாயில்லை.

வாழைமரத்துக்கு  கீழே வளர்ந்த கன்றாக இருந்திருந்தால் ஸ்டாலின்  இன்னேரம் இன்னொரு  மரமாகியிருப்பார். இவரோ கலைஞர் என்ற ஆலமரத்தில் விழுதாக  கட்சியில் இன்னமும் பத்தோடு  பதினொன்றாக இருக்கிறார். கலைஞரை மீறி கலைஞரை தவிர்த்து யாராலும் திமுகவில் வளரமுடியாது  என்பதும் ஒரு காரணம். எதிர்க்கட்சிகளோடு, தன் கட்சியினரே கூட சில சமயம் பேசும் 'குடும்ப அரசியல்' குற்றச்சாட்டுக்கு பயந்து கலைஞரே ஸ்டாலினின் வளர்ச்சி வேகத்தை மட்டுப்படுத்தியிருக்கிறார் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

1989ல் திமுக ஆட்சிக்கு வந்தபோதும், 1996ல் திரும்ப ஆட்சிக்கு வந்தபோதும் ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி தராமல் பொறுமை காத்தார் கலைஞர். அப்போதே அமைச்சர் பதவி கொடுத்திருந்தால் இன்று திடீரென்று 'குடும்ப ஆட்சி' என்று யாரும் முணுமுணுத்துவிட முடியாது. அப்பா தான் தரவில்லை, நாமே கேட்டு வாங்கிவிடுவோம் என்று ஸ்டாலின் முயற்சிக்கவேயில்லை. வாய்ப்பு கிடைத்ததுமே அழகிரி, தயாநிதி போன்றோர் முண்டியடித்து தன்னை முன்னிலைப் படுத்திக் கொண்டதைப் போன்ற தந்திரங்கள், மென்மையான குணம் கொண்டஸ்டாலினுக்கு கைவரவில்லை.

ஆனால் நிர்வாகம்  என்பதில் ஸ்டாலின்  கில்லி. சென்னை மாநகர மேயராக பொறுப்பேற்ற  போதும் சரி. பின்னாளில் உள்ளாட்சித்துறை அமைச்சராக, துணைமுதல்வராகவும் எதிர்தரப்பினரும் பாராட்டும் வண்ணமே சிறந்த நிர்வாகியாக பெயரெடுத்திருக்கிறார். ஆட்சி நிர்வாகத்துக்கு வந்த பின்னர் ‘ஊழல்’ என்பதின் நிழல் படியாத, குற்றச்சாட்டுகள் கூட இல்லாத ஒரே இந்திய அரசியல் தலைவர் இவராக மட்டும்தான் இன்றைய தேதியில் இருக்க முடியும் என எதிரணியில் சிலரே சொல்கின்றனர்.
1989 மார்ச் மாதம் கலைஞர் சட்டமன்றத்திலே தாக்கப்பட்ட போதும் சரி, 2001 சட்டமன்றத் தொடரின் போது அவரை சட்டமன்றத்திலே கீழ்த்தரமாக விமர்சித்தபோதும் சரி.. ஒரு மூலையில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஒரே திமுக உறுப்பினர் ஸ்டாலின்  மட்டுமே. இதுபோன்ற நிதானமான இவரது அணுகுமுறை ஒரு எதிர்க்கால ஆட்சியாளருக்கு தேவையான அணுகுமுறையாக இருக்கலாம். ஆனால் இன்றைய அடாவடி அரசியல் சூழலுக்கு சரிபடுமா என்று தெரியவில்லை. 'ஜால்ரா' அடித்து நெருக்கமாகுபவர்களுக்கு உடனே கட்சிப் பதவியோ, தேர்தல் சீட்டோ வாங்கித் தந்துவிடுவது ஸ்டாலினின் இன்னொரு பலகீனம். இதனால் அனுபவசாலிகள் பலரை அவருக்கு தெரியாமலேயே அவர் ஓரம் கட்டி வருகிறார்.

கோபம், பழிவாங்கும் குணம், நம்ப வைத்து கழுத்தறுக்கும் வஞ்சம் - இந்த குணங்கள் எல்லாம் இல்லாத தற்போதைய தமிழகத்தின் ஒரே அரசியல்வாதி துணைமுதல்வர் ஸ்டாலின் .  தன்னை அவமானப்படுத்திய எதிரியை கூட மன்னித்து ஏற்றுக்கொள்ளும் சுபாவம் படைத்தவர் அவர். கராத்தே தியாகராஜன் மூலமாக கடுமையான அவமானங்களை சந்தித்த ஸ்டாலின், பின்னாளில் அவரையே நண்பராக ஏற்றுக் கொண்டார்.

எப்படியும்  வென்றாக வேண்டும் என்ற வெறி ஒரு வெற்றிகரமான அரசியல்வாதிக்கு தேவை. கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்களிடம் இந்த வெறி இருந்ததால் தான் அவர்கள் வெற்றிகாண முடிந்தது. இப்படிப்பட்ட உணர்வு எதுவும் ஸ்டாலினிடம் இன்று இருப்பதாக தெரியவில்லை. கலைஞருக்கு பிறகு ஸ்டாலினுக்கு அரசியல் களத்தில் எதிரிகளாக இருக்கப்போவதில் முக்கியமான இருவர் செல்வி ஜெயலலிதா, தேமுதிக தலைவர் விஜயகாந்த். வெற்றிக்காக எதையுமே ஏற்றுக்கொள்ளும் குணம் கொண்டவர்கள் இவர்கள் இருவரும். மென்மையான அரசியல் நடத்தும் ஸ்டாலின் இவர்களை எப்படி சமாளிப்பார் என்பது கேள்விக்குறியே.

ஸ்டாலின் இவ்வளவு  பலகீனமாக இருக்கிறாரே? கலைஞரைப் போல திறமையான தலைவராக இவரால் ஆக முடியாதா என்ற ஐயம் இதுவரை வாசித்தவர்களுக்கு தோன்றலாம். இதற்கு விடை காலத்தின் கையில் தானிருக்கிறது.

ஸ்டாலினையும், இந்திராவையும் பல வகைகளில் ஒப்பிட முடியும். இருவருமே ராஜா வீட்டு கன்னுக்குட்டிகள். மிசா சட்டத்தில் சிறைக்கு சென்றதை தவிர்த்து ஸ்டாலின் அடிமட்ட வாழ்க்கையை அனுபவித்ததில்லை. சந்தர்ப்பச் சூழ்நிலை எப்படி இந்திராவை அரசியலில் ஈடுபட வைத்ததோ, அதுபோலவே தான் ஸ்டாலின் திடீரென கட்சிப் பொறுப்புக்கு வரவேண்டியதாகியது. 1964ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேரு மறையும்போது இந்திரா காந்தி காங்கிரஸ் இயக்கத்தில் சாதாரணத் தொண்டராக தானிருந்தார். 1964 முதல் 1969 வரை லால்பகதூர் சாஸ்திரியின் அமைச்சரவையில் இருந்தபோதும் இன்றைய ஸ்டாலின் போல அரசியல் பதுங்கிதான் கிடந்தார். 1969ல் காங்கிரஸை பிளந்து அவர் எடுத்த விஸ்வரூபம் யாருமே எதிர்பாராதது. இந்திராவுக்குள் அப்படியொரு ஆளுமைத்திறன் இருந்ததை காமராஜர் கூட கணிக்கத் தவறி விட்டார்

ஒரு தலைவன் உருவாக அவனது திறமையும், அனுபவமும் மட்டுமே முக்கியமல்ல. சந்தர்ப்பமும், சூழ்நிலையும் தான் தலைவர்களை உருவாக்குகிறது. தமிழகத்தின் துணை முதல்வர் ஸ்டாலினுக்கும் அத்தகைய சந்தர்ப்பமும், சூழ்நிலையும் வாய்க்குமா..?
(நன்றி : 4tamilmedia.com)

8 கருத்துகள்:

  1. படிச்சாச்சு. வருங்கால முதல்வர் ஸ்டாலின் வாழ்க. வளர்க

    பதிலளிநீக்கு
  2. me the first..

    Very nice article. Really enjoyed your way of exploring stalins political activities.

    பதிலளிநீக்கு
  3. hello...

    are you sure about that news reader's issue???

    if yes, then how come no other journalist except yourself is maintaining silence...which obviously means something wrong???

    பதிலளிநீக்கு
  4. இதுதான் இதுதான் நம்ம லக்கிலுக் ! பல காலத்துக்கு அப்புறம் உங்க பிரத்யேக ஸ்டைல் திரும்ப வந்திருக்கு ! அருமையான பகிர்வு ! ஸ்டாலின் கடந்து வந்த பாதையையும் , இனி போக போற பாதையையும் ஒரு தொலைநோக்கு பார்வையோட எழுதிருக்கீங்க! வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
  5. வாழ்த்துக்கள் லக்கி,
    வெகு சீக்கிரம் முன்னுக்கு வந்துவிடுவீர்கள்! நன்கு அரசியலை கணித்து ஜால்ரா தட்டும் திறமை உங்களிடம் நிறையவே உள்ளது.
    அன்புடன்,
    புவனேஷ்.k

    buvaneshk.blogspot.com

    பதிலளிநீக்கு
  6. தளபதி நடிச்ச சீரியல் சன் டீவியில வந்துச்சா..... எப்போ தல... நா எப்டி பார்காம விட்டேன்னு தெறியல...

    அப்படியே மதுரகார பத்தியும் ஒரு பதிவு போடுங்களேன்...

    அருமையான பதிவு... ஸ்டாலின் இத படிச்சிட்டு ஒரு பின்னூட்டம். போட்டா கலக்கலா இருக்கும்...

    பதிலளிநீக்கு
  7. முத்தரசன்!

    தளபதி நடித்த குறிஞ்சிமலர் தூர்தர்ஷனில் வந்தது.

    பின்னர் சில காலம் கழித்து சன் டிவியில் ‘சூர்யா’ என்ற சீரியலிலும் நடித்தார்!

    எம்.ஜி.ஆர் தேர்தலில் நின்றபோது அவருக்காக நாடகமும் நடித்து கொடுத்திருக்கிறார்.

    பதிலளிநீக்கு