7 ஜனவரி, 2014

அன்புள்ள ஆசிப் அண்ணாச்சிக்கு...

அன்புள்ள ஆசிப் அண்ணாச்சிக்கு...

நலம் நலமறிய ஆவல்.

உங்கள் நெக்குருக்கும் கடிதம் வாசித்தேன். இரத்தக் கண்ணீரை அடக்கிக்கொண்டு படித்தேன். நேரு தன் மகள் இந்திராவுக்கு எழுதிய கடிதங்களை காட்டிலும் மிகச்சிறந்த கடிதமாக மதிப்பிடுகிறேன். அழிந்து வரும் கடிதக்கலையை நீங்களும், கலைஞரும்தான் காக்க வேண்டும்.

//வேடியப்பன் என்ற நண்பருக்காக உரக்கக் குரல் கொடுத்தாக வேண்டுமென்ற உனது எண்ணத்தைப் பாராட்டுகிறேன்//

உங்கள் பாராட்டுக்கு நன்றி. எனக்கு சென்ஷி எதிரியல்ல. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே பழக்கமான நண்பர்தான். ஒன்றாக லஞ்ச் சாப்பிட்டிருக்கிறோம். கட்டிப் பிடித்து அன்பை பரிமாறிக் கொண்டிருக்கிறோம். போலவே உங்களுக்கும் வேடியப்பன் எதிரியல்ல என்று கருதுகிறேன்.

இந்த consipiracy theory எல்லாம் இணையத்தின் பிலக்கா பயல்கள் செய்துக் கொள்ளட்டும். உங்களுக்கு ஏன் அண்ணாச்சி. நீங்கள் நினைப்பது மாதிரி வேடியப்பனுக்கு நான் நெருக்கமான நண்பர் எல்லாம் அல்ல. சென்னையில் இருக்கும் உங்கள் இதர நண்பர்களிடம் நீங்கள் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ளலாம். வேடியப்பனுக்கு முன்பே எனக்கு அறிமுகமானவர் சென்ஷிதான்.

வளைகுடா நாடுகளில் வேலை செய்தார் என்பதற்காக வளைகுடா பதிவர்களும், விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தில் இருக்கிறார் என்பதற்காக அதன் தளபதிகளும், பண்புடன் குழுமத்தில் இருக்கிறார் என்பதற்காக அதன் உறுப்பினர்களும் கச்சை கட்டிக்கொண்டு வருவதைப் போன்ற எந்தப் பின்னணியும் இந்த விவகாரத்தில் கருத்து சொல்வதற்கு எனக்கில்லை.

மொத்தமாக கூட்டம் சேர்ந்து, அநியாயமாக அராஜகமாக ஒருவர் அடிக்கப்படுவதை எதிர்த்து, நடைமுறை யதார்த்த நியாயம் என்ன என்பதை மட்டும்தான் பேசியிருக்கிறேன்.

//கிட்டத்தட்ட நான்கரை ஆண்டுகள்.. யார் யாரிடமோ யாசகம் பெற்று, ஒளி வருடி, செல் பேசியில் படமெடுத்து அனுப்பி அதனை வரியாக வரியாகத் தட்டச்சு செய்து என்று பட்ட பாடு கொஞ்சம் நஞ்சமல்ல.. அதனால்தான் அந்த உழைப்பு சுரண்டப்படும்போது மயிர் பிளக்கும் விவாதத்திற்கு அது வழி வகுத்து விட்டது//

சென்ஷிக்கு இந்த வேலையை வேடியப்பனோ, எஸ்.ராமகிருஷ்ணனோ ‘அசைன்’ செய்து உழைப்பை சுரண்டியிருந்தால் நானும் உங்களோடு வந்து கொடிபிடிப்பதுதான் நியாயமான செயலாக இருக்கும்.

//பகிரல் நோக்கமில்லாமல் இருந்திருந்தால் சென்ஷி இணையத்தில் இதனைத் தொகுத்திருக்க அவசியமேயில்லை..//

இணையம் என்பது மின் ஊடகம். அச்சு ஊடகத்தோடு வேறுபட்டது. பகிரல்தான் நோக்கம் எனும்போது, அது அச்சுக்கு வரும்போது அதை எதிர்க்கவோ, கசமுசா செய்யவோ அவசியமில்லை என்பது என் தாழ்மையான கருத்து. அச்சில் வாசிக்கும் வாசகர்களும் பயனடைந்துவிட்டு போகட்டுமே. அதே நேரம் நான்கு வருடம் யாசகம் பெற்று, ஒளிவருடி, செல்பேசியில் படமெடுத்து, தட்டச்சியெல்லாம் தயார் செய்துவிட்டால் மட்டுமே ‘தொகுப்பாசிரியர்’ ஆகிவிட முடியாது என்கிற யதார்த்தத்தை எல்லாரும் உணரவேண்டும். தொகுப்புகளில் என்னென்ன இடம் பெற வேண்டும் என்று தீர்மானிக்கிறவர்தான் தொகுப்பாசிரியர் என்பது தமிழ்நாட்டில் மட்டுமல்ல. உலகம் முழுக்க அதுதான் நடைமுறை.

// ஒரு பைத்தியக்காரன் மொத்த கதையையும் தொகுத்து இணையத்துல அதிகப் பிழையேதுமில்லாமல் சேர்த்து வச்சிருக்கான். அப்படியே ’லபக்’கிட்டா எவன் கேக்கப் போறான்னு தெரிஞ்சதும் அனுமதி கேட்டிருப்பாரா இருக்கும். ஏற்கெனவே 50 கதைகள் மின்நூலா கிடைத்து விட்ட மகிழ்ச்சியில் தொகுப்பாசிரியரும் சம்மதம் சொல்லியிருப்பாராக இருக்கும் //

நீங்களெல்லாம் இப்படி குற்றம் சாட்டுகிறீர்கள். சென்ஷி டைப்படித்த கதைகளை வேடியப்பன், Ctrl C + Ctrl V செய்துக்கொண்டார் என்று. தமிழ் இணையத்தில் மின்னல்வரிகள் பாலகணேஷ் என்றொருவர் பிரபலமானவர். டிசைனிங், டி.டி.பி. பணிகள் செய்கிறார். நிறைய பதிவர்களின் புத்தகங்களுக்கு ப்ரீப்ரொடக்‌ஷன் பணிகளை செய்துக் கொடுத்திருப்பவர். வேடியப்பன் கொண்டுவரும் தொகுப்புக்காக டைப்பிங் வேலை மும்முரமாக நடந்துக் கொண்டிருக்கிறது என்று அவர் சொல்கிறார். நானறிந்தவரை கணேஷ் பொய் சொல்லக்கூடிய நபர் அல்ல. இதற்கு என்ன சொல்கிறீர்கள்? கணேஷ் டைப் செய்துக்கொண்டிருப்பது வேறு ஏதோ எஸ்.ரா புத்தகம் எனப் போகிறீர்களா?

// அச்சிலேயே இல்லாத கதைகளைக் கூட பணம் கொடுத்து சென்ஷி வாங்கினான். நான் தான் அதை ஒன்றல்ல, இரண்டல்ல.. ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கி வந்தேன் என்பதெல்லாம் உனக்குத் தெரியுமா? //

உண்மையிலேயே இப்படியான சூழல் இருப்பின், சென்ஷிக்கு இதுவரை இதற்காக ஆன செலவுகளுக்கு வேடியப்பனிடம் நிவாரணம் கேட்கலாம். தவறேயில்லை. இந்த விஷயத்தில் ஐ ஆல்சோ சப்போர்ட் சென்ஷி.

// நிச்சயம் அவர் படித்து தேர்வு செய்ததால்தான் சென்ஷி அதனைத் தொகுக்கவே தொடங்கினான். எனவே அந்த மரியாதை என்றுமே எஸ்.ராவுக்கு இருக்கும். ஆனால்.. அந்தக் கதைகளைத் தேடித் தொகுக்க நான்கரை ஆண்டுகள் உழைத்தவனுக்குண்டான அங்கீகாரத்தை ஒற்றை வரியில் நன்றி சொல்லி முடித்துக் கொள்வது முறையில்லை//

எஸ்.ரா படித்து தேர்வு செய்ததால்தான் அவர் தொகுப்பாசிரியர். இதுதான் என்னுடைய பாயிண்ட். சென்ஷிக்கு என்ன அங்கீகாரம் கொடுக்க வேண்டுமென்று எதிர்ப்பார்க்கிறீர்கள்? தொகுப்பாசிரியர் என்று அவரை டெக்னிக்கலாக சொல்லிக் கொள்ள முடியாது.

வேண்டுமென்றால் நம்முடைய ஈ-புக்கில் நாமே அப்படி போட்டுக்கொள்ள வேண்டியதுதான். யார் கேட்கப் போகிறார்கள். கதைகளை எழுதிய எழுத்தாளர்களிடம் கூட முறையான அனுமதி கேட்காமல்தானே நாலரை ஆண்டுகளாக உழைத்து சென்ஷி இணையத்தில் ஏற்றியிருக்கிறார்.

// ஒட்டுமொத்தமாக இப்படிச் சொல்வது ஏற்புடையதன்று. நியாயமாகப் பட்டதால் சென்ஷியை ஆதரிக்கிறார்கள் நீ எப்படி உன் தரப்பு நியாயத்துக்காக வேடியப்பனுக்காக வேட்டியை வரிந்து கட்டுகிறாயோ அதைப் போல..//

வேடியப்பனுக்காக வேட்டியை வரிந்து கட்டினேன் என்கிற உங்கள் அனுமானம் நியாயமானதல்ல. கடந்த ஞாயிறு அன்று எஸ்.ரா.வின் ‘நிமித்தம்’ நாவல் வெளியீடு நடந்தது. அந்த விழா முடிந்ததுமே ரஷ்ய கலாச்சார மையத்தின் வெளியே வைத்து ஒரு போலிஸ்காரன், திருடனை விசாரிப்பது மாதிரிதான் வேடியப்பனை விசாரித்தேன். “போடா மயிரு. நீ யாரு இதையெல்லாம் கேட்க” என்று வேடியப்பன் திருப்பிக் கேட்டிருந்தால் என்னால் ஒன்றும் செய்திருக்க முடியாது. மாறாக வேடியப்பன் இந்த நூலை கொண்டுவர என்னவெல்லாம் செய்திருக்கிறார் என்று பொறுமையாக விளக்கினார். இது நடந்தது என்பதற்கு அங்கிருந்த இணைய நண்பர்கள் செ.சரவணக்குமார், விநாயகமுருகன், சிவராமன், ரமேஷ் போன்ற நண்பர்களே சாட்சி.

வேடியப்பனிடம் பேசியபோது அவர் சொன்னது. “புத்தகத்தில் சென்ஷிக்கு மட்டுமல்ல. எங்களுக்கு இந்த கதைகள் யாரிடமிருந்து, எங்கிருந்தெல்லாம் கிடைத்ததோ அத்தனை பேரின் பெயரையும் குறிப்பிட்டிருக்கிறோம்” என்றார்.

ஓக்கே, உங்கள் கடிதத்துக்கு இவ்வளவுதான் பதில். மீதி, பொதுவான நண்பர்களுக்காக.

ஒரு புத்தகம் தொகுப்பாக வருவதற்கு முன்பு பதிப்பாளர் என்னென்ன வேலையெல்லாம் செய்யவேண்டும் என்பது பொதுவான ஆட்களுக்கு தெரியாது. தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமும் இல்லை.

தொகுப்பு என்றால் அதில் இடம்பெறும் எழுத்தாளர்களிடம் அனுமதி பெறவேண்டும் என்பது முக்கியமான விதி. பி.டி.எஃப். என்பதால் அந்த விதியை சென்ஷி பின்பற்றவில்லையோ அல்லது சென்ஷிக்கு அது தெரியாதோ.. அதையெல்லாம் விட்டு விடுவோம். நாளைக்கு அவருக்கு இதனால் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், ‘ஐ சப்போர்ட் சென்ஷி’ என்பவர்கள் வெடிச்சத்தம் கேட்டதுமே பறக்கும் காக்காய்களாக பறந்துவிடுவார்கள். அல்லது சென்ஷியை குறிவைத்து குதறியெடுத்து விடுவார்கள். இணையத்தில் இதெல்லாம் சகஜம். நர்சிம் விஷயத்தில் எல்லாம் நாம் பார்க்காததா என்ன.

எழுத்தாளர் மாலனின் சிறுகதை ஒன்றும் இந்த தொகுப்பில் இடம்பெறுகிறது. இதற்காக வேடியப்பன் அவரிடம் தொலைபேசியில் பேசி அனுமதி வாங்கினார். வாங்கியதோடு இல்லாமல் ஒருமுறை நேரிலும் சந்தித்து ஒரு ஒப்புதல் கடிதமும் வாங்கிக் கொண்டார். கதை எழுதியவர்களுக்கு ராயல்டி தரமுடியாது. பதிலுக்கு புத்தகத்தின் ஒரு பிரதியை (விலை ரூ.650) கொடுத்துவிடுகிறேன் என்பது வேடியப்பனின் டீலிங்.

இதைப் போலவே ஐம்பதுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்களிடம் வேடியப்பன் அனுமதி வாங்க வேண்டியிருந்தது. லேசாக ஒரு வரியில் இதை கடந்து போய்விடலாம். அது எவ்வளவு பெரிய வேலையென்றால், நான்கு வருடம் யாசகம் பெற்று, ஒளிவருடி, செல்பேசியில் படமெடுத்து, தட்டச்சுவதை விட மிகப்பெரிய வேலை. பதிப்பகங்களுக்கும், நூல்களை தொகுத்தவர்களுக்கும்தான் இந்த வேலையை பற்றி தெரியும்.

நான் மேலே சொன்னது ஒரு தொகுப்பு உருவாகும் பெரிய பிராசஸிங்கில் இருக்கும் மிகச்சிறிய ஆரம்பக்கட்ட பணி. இதையடுத்து இன்னும் நிறைய பணிகள் இருக்கின்றன. அப்படியே டைப் செய்து இணையத்தில் ஏற்றுவது மாதிரி இது சுலபமான பணி அல்ல. ஏனெனில் இதில் நிறைய பணமும் சம்பந்தப்பட்டிருக்கிறது. ஒருவரியில் சொன்னால் கொஞ்சமென்ன, நிறையவே ரிஸ்க்கான வேலைதான்.

பதிப்பாளரின் பணி மட்டுமல்ல. தொகுப்பாசிரியரின் பணியும் கடினம்தான். இணையத்தில் எழுதும்போது நூறு சிறந்த சிறுகதைகள் என்று ஜாலியாக லிஸ்ட் போட்டுவிடலாம். நாமெல்லாம் புது வருஷம் வந்ததுமே டாப் 10 தமிழ் மூவிஸ் என்று லிஸ்ட்டு போடுகிறோமே அதுபோல. ஆனால் ஒரு பட்டியல் முழுத்தொகுப்பாக புத்தகமாக வரும்போது, அந்த கதைகளை ஏன் தேர்ந்தெடுத்தேன் என்று விலாவரியாக, விளக்கமாக ஜஸ்டிஃபை செய்ய வேண்டும். இந்த தேர்வுகளில் ஏதேனும் தவறு என்று இருந்தால் தொகுத்தவரின் டப்பாவை மற்ற இலக்கியவாதிகள் ஒன்று சேர்ந்து டேன்ஸ் ஆட வைத்து விடுவார்கள்.

ஆகவே தோழர்களே! என்னுடைய இறுதி கருத்துகள் இவைதான்.

என்னைக் கேட்டால் ‘ஈகோ’வை விட்டு விட்டு வேடியப்பன் ஒருமுறை சென்ஷிக்கு போன் செய்து பேசிவிடலாம். அல்லது எஸ்.ரா.வே கூட சென்ஷியிடம் பேசிவிடலாம். இதில் யாருக்கும் கவுரவக் குறைச்சல் ஏற்பட்டு விடாது.

தொகுப்பு வெளியான பிறகு, ஒருமுறை எஸ்.ரா. தலைமையில் சென்ஷிக்கு வேடியப்பன் பாராட்டுவிழா நடத்தலாம். அவ்வாறு ஒரு விழா நடந்தால்கூட இணையத்தில் ‘ஐ சப்போர்ட் சென்ஷி’ என்று tag போட்டு எழுதுபவர்கள் நேரில் வந்தெல்லாம் பாராட்ட மாட்டார்கள். அவர்களால் லைக்கும், கமெண்டும்தான் போடமுடியும். இவர்களை நம்பி தேவையில்லாமல் தோழர் சென்ஷி எதிலும் ஏடாகூடமாக ஈடுபட்டுவிட வேண்டாமென்று அனுபவஸ்தன் என்கிற அடிப்படையில் கேட்டுக் கொள்கிறேன். இப்படியே ஏத்திவிட்டு, ஏத்திவிட்டுதான் உடம்பை ரணகளமாக்கி அனுப்புவார்கள். அம்மாதிரி ரணகளமாக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் என்பது சென்ஷிக்கும் தெரியும்தானே?

5 கருத்துகள்:

  1. உங்களின் இறுதிக் கருத்துக்கள் என்று நீங்கள் தெரிவித்திருக்கும் வரிகளுடன் நான் நூறு சதம் ஒத்துப் போகிறேன் யுவா! இந்த விவாதம் வளர்வதாலும், ஒருவரையொருவர் பரஸ்பரம் குற்றம் சாட்டிக் கொள்வதாலும் எந்தப் பயனுமில்லை என்பதே என் கருத்தும்.

    பதிலளிநீக்கு
  2. இந்த நூறு கதைகளில் சிலவற்றை வேடியப்பன் டைப் செய்த ஃபைல்களாகத் தந்திருந்தார். விடுபட்டவற்றை நான் தட்டச்சியிருக்கிறேன் என்பதை இங்கு குறிப்பிட்டுச் சொல்லக் கடமைப்பட்டவனாகிறேன் யுவா!

    பதிலளிநீக்கு
  3. //என்னைக் கேட்டால் ‘ஈகோ’வை விட்டு விட்டு வேடியப்பன் ஒருமுறை சென்ஷிக்கு போன் செய்து பேசிவிடலாம். அல்லது எஸ்.ரா.வே கூட சென்ஷியிடம் பேசிவிடலாம். இதில் யாருக்கும் கவுரவக் குறைச்சல் ஏற்பட்டு விடாது.//

    அனைத்து தரப்பும் பேசி சுமுகமான முடிவு எடுக்கவேண்டும் என்பதே என் விருப்பம்.

    பதிலளிநீக்கு
  4. மிக அருமையான ஏற்றுக் கொள்ளத்தக்க விளக்கம்

    பதிலளிநீக்கு