16 ஜனவரி, 2014

மிஸ்டர் பர்ஃபெக்ட்!

1995. இந்திய வருமானவரித் துறையில் இருபத்தேழு வயது அர்விந்த் கெஜ்ரிவால் பணிக்குச் சேர்ந்த முதல் நாள்...மூத்த அதிகாரி இவருக்கு சொன்ன முதல் ஆலோசனையே,‘எப்படி சம்பாதிக்கலாம்?’ என்பதுதான். லட்சியக் கனவுகளோடு சிவில் சர்வீஸ் பணிக்கு வந்த அர்விந்த் கெஜ்ரிவால் கடுமையாக அதிர்ச்சி அடைந்தார். ஊழலை ஒழிப்பதுதான் தன் முதல் பணி என்று அன்றே சபதம் எடுத்தார்.
கொல்கத்தா நகரில் அன்னை தெரசாவை சந்திக்க நீண்ட வரிசையில் காத்திருந்தார் அர்விந்த் கெஜ்ரிவால். இவருடைய முறை வந்தது.

‘அம்மா! நான் உங்களோடு சேர்ந்து சேவை செய்ய விரும்புகிறேன்’

கெஜ்ரிவாலின் கைகளைப் பிடித்துக்கொண்டு, புன்னகை தவழும் முகத்தோடு சொன்னார் அன்னை தெரசா: ‘காளிகாட் இல்லத்துக்குப் போய். வேலையைப் பார்’அன்னை தெரசாவின் இல்லத்தில் இரண்டு மாதங்கள் இருந்தார். இந்தியாவைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பு அவருக்கு அப்போதுதான் கிடைத்தது. முன்பாக போடோலேண்ட் உள்ளிட்ட கிழக்கிந்தியப் பகுதிகளில் இலக்கில்லாத பயணங்களை மேற்கொண்டிருந்தார். அன்னை தெரசாவின் ஆசி அவருக்கு மானிட குலத்துக்குச் செய்ய வேண்டிய சேவைகளுக்கு கண் திறப்பாக அமைந்தது. ராமகிருஷ்ண மடத்தில் சில நாள் இருந்தார். நேரு யுவகேந்திரா மூலமாக ஹரியானா முழுக்க சுற்றினார். இந்திய அரசு அவரை நேர்முகத் தேர்வுக்காக அழைத்தது. வீடு திரும்பினார். ஐ.ஆர்.எஸ். அதிகாரியாகப் பதவியேற்றுக் கொண்டார்.

அந்தக் காலகட்டம்தான் என் பார்வையை மாற்றியது. வாழ்க்கையைப் போதித்தது. எல்லாத் தரப்பு மக்களையும் புரிந்துகொள்ள உதவியது" என்கிறார் கெஜ்ரிவால்.

ஹரியானா மாநிலத்தில் ஷிவானி என்கிற ஊரில் ஜூன் 16, 1968-இல் பிறந்தார் அர்விந்த் கெஜ்ரிவால். அப்பா கோபிந்த்ராம் கெஜ்ரிவால் ஓர் எலெக்ட்ரிக்கல் என்ஜினீயர். அம்மா கீதா தேவி. ஒரு தம்பியும், தங்கையும் உண்டு. பள்ளிப் படிப்பில் படுசுட்டி. ஹிசார் நகரில் இருக்கும் பிரபலமான கேம்பஸ் பள்ளியில் படித்தார் (பேட்மிண்டன் சாம்பியன் சாய்னா நெஹ்வாலும் இதே பள்ளி மாணவிதான்).

முதல் முயற்சியிலேயே ஐ.ஐ.டி. கோரக்பூரில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 1985-இல் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் பட்டப்படிப்பில் சேர்ந்தார். கல்லூரிக் காலத்தில் அவருக்கு பெரிய சமூக உணர்வோ, அரசியல் சிந்தனைகளோ இருந்ததற்கான அடையாளங்கள் எதுவும் எங்களுக்குத் தெரியவில்லை என்று சகமாணவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

ஐ.ஐ.டி.யில் அவரோடு படித்தவர்களில் பெரும்பாலானோர் இன்று அமெரிக்காவில் வசிக்கிறார்கள். அரசுப் பணியை துறந்து சமூகப் பணிக்குத் தன்னை கெஜ்ரிவால் அர்ப்பணித்துக் கொண்டபோது, அவர்கள் எல்லோரும் சேர்ந்துதான் இவரை பொருளாதார ரீதியாக ஆதரித்தார்கள்.

அயல்நாட்டில் வேலை பார்க்கும் ஆசை கெஜ்ரிவாலுக்கு இருந்ததே இல்லை. பி.டெக். (மெக்கானிக்கல்) முடித்தபிறகு 1989-இல் ஜாம்ஷெட்பூர் நகரில் இருக்கும் டாடா ஸ்டீல்ஸ் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தார். ஒரு பெரிய கல்லூரியில் சேர்ந்து நிர்வாகம் படிக்க ஆசைப்பட்டார். அது முடியவில்லை. ஆனால் அதே நேரம் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் அவரால் மிக எளிதாக வெற்றிபெற முடிந்தது. முசோரி நகரின் லால் பகதூர் சாஸ்திரி தேசிய அகாதெமியில் நிர்வாகப் பயிற்சி பெற்றார். மற்றவர்களைக் காட்டிலும் கெஜ்ரிவால் அப்போது கொஞ்சம் வித்தியாசமான சிந்தனைகளோடு இருந்தார், எப்போதும் ஊழல் ஒழிப்பு குறித்தே அவரது அக்கறை இருந்தது என்று அவரது பயிற்சியாளர் ஹர்ஷ் மண்டேர் சொல்கிறார்.

1992-இல் தில்லியில் துணை வரி ஆணையராக பணி அமர்த்தப்பட்டார்.

தினமும் காலை அலுவலகம் வந்து, மாலை வீட்டுக்குத் திரும்புவது என்கிற வழக்கமான அலுவலக வாழ்க்கை கெஜ்ரிவாலுக்கு ஒத்துக்கொள்ளவில்லை. 1999-இல், ‘பரிவர்த்தன்’ என்றொரு அரசுசாரா சமூக சேவை அமைப்பை நண்பர்களோடு தொடங்கினார். அயல்நாடுகளில் இருந்தோ, பெரிய நிறுவனங்களிடமிருந்தோ நிதி பெறாமல் கைக்காசைப் போட்டு சமூகப் பணிகளை செய்ய ஆரம்பித்தார்கள்.

இந்தக் கட்டத்தில்தான் சேகர்சிங் என்கிற நண்பர் கெஜ்ரிவாலுக்கு அறிமுகம் ஆகிறார். மக்களின் தகவல் உரிமைக்கான தேசிய பிரச்சாரக் குழுவில் (NCPR) செயற்குழு உறுப்பினராக இருந்தவர் இவர். உச்ச நீதிமன்ற வழக்கறிஞரான பிரசாந்த் பூஷனெல்லாம் கெஜ்ரிவாலுக்கு நெருக்கம் ஆனது இந்தக் காலக் கட்டத்தில்தான்.

நாடு முழுக்க ஏராளமான சமூகப் போராளிகள் இருந்தாலும் கெஜ்ரிவால் இவர்களிடமிருந்து வேறுபட்டவர். இரண்டு அல்லது மூன்று பிரச்சினைகளை முன்வைத்தே மற்றவர்களின் போராட்டம் இருக்கும். கெஜ்ரிவாலோ போராட்டம் என்று இறங்கிவிட்டால், ஒட்டுமொத்தப் பிரச்சினைகளையும் பேசியாகவேண்டும் என்கிற எண்ணம் கொண்டவர்.

தகவல் உரிமைச் சட்டத்துக்காகப் போராட்டத்தில் குதித்தவர், ‘மக்கள் பிரச்சினைகள் ஆய்வு அமைப்பு’ (PCRF) என்கிற புதிய அமைப்பை தோற்றுவித்தார். வெளிப்படையான, நாணயமான, மக்களுக்குப் பதில் சொல்லும் பொறுப்புக் கொண்ட அரசாட்சியை இந்த அமைப்பு வலியுறுத்தியது. தகவல் உரிமை அறியும் சட்டம் வந்தால் இந்நிலையை ஏற்படுத்த முடியுமென்று கெஜ்ரிவால் உறுதியாக நம்பினார்.

தகவல் உரிமை குறித்த இவர்களது பிரச்சாரத்துக்கு ஆரம்பத்தில் பெரிய வரவேற்பில்லை. ஆனால் கெஜ்ரிவால் சோர்ந்துவிடாமல் தொடர்ச்சியாக இதற்காகப் போராடிக் கொண்டிருந்தார். 2006-இல் இந்தக் காரணத்துக்காகவே கெஜ்ரிவால் மற்றும் அவருடன் போராடிய நண்பர்களான மணிஷ் சிசோடியா, அபிநந்தன் சேக்ரி ஆகியோருக்கும் சர்வதேச உயர் விருதான, ‘ரமோன் மகசேசே’ அறிவிக்கப்பட்டது. விருதுப் பணம் மொத்தத்தையும் போராடிய தன்னுடைய அமைப்புக்கே தந்து விட்டார் கெஜ்ரிவால். சி.என்.என்-ஐ.பி.என். தொலைக்காட்சி நிறுவனம் அவ்வருடத்துக்கான இந்தியர் என்கிற விருதை வழங்கி கவுரவித்தது. இவ்விருதே நாடு முழுக்க கெஜ்ரிவாலை பிரபலப்படுத்தியது.

இடையில் அரசுப் பணியையும், சமூகப் பணியையும் மாற்றி மாற்றி செய்துக் கொண்டிருக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். 1999-இல் இரண்டு வருட விடுப்பு எடுத்துக்கொண்டே, ‘பரிவர்த்தன்’ அமைப்பைத் தொடங்கி, நடத்தினார். 2003-இல் மீண்டும் பணிக்குச் சேர்ந்து, சுமார் ஒன்றரை ஆண்டுகாலம் பணியாற்றினார்.

ஒரு கட்டத்தில் வழக்கமான வேலை வெறுத்துவிட... தன்னை முழுக்க சமூகத்துக்கு அர்ப்பணித்துக் கொண்டார். தகவல் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி வருமானவரித் துறை, தில்லி மாநகராட்சி, பொது விநியோக அமைப்பு, தில்லி மின்சாரத் துறை போன்ற துறை ஊழல்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தார். தகவல் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்துவது குறித்த பிரச்சாரத்தை நாடு முழுக்க நண்பர்களோடு சேர்ந்து செய்யத் தொடங்கினார்.

2011-இல் அன்னா ஹசாரே, ‘ஜன் லோக்பால்’ வேண்டுமென்கிற போராட்டங்களைத் தொடங்கியபோது, ‘ஊழலுக்கு எதிரான இந்தியா’ அமைப்பின் சார்பில் அன்னாவின் கரங்களை வலுப்படுத்தினார். தில்லியில் அன்னா உண்ணாவிரதம் இருக்க, அந்தப் போராட்டத்தை இந்திய நகரங்களில் விரிவுபடுத்தும் பணியை கெஜ்ரிவால் எடுத்துக் கொண்டார். இதற்கான பயணப்பட்டபோது, ஒரு ரயில்நிலையத்தில் மக்களோடு மக்களாக அவர் தரையில் படுத்து உறங்கிய புகைப்படம் ஊடகங்களில் வந்தபோது பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நாடு முழுக்க மக்கள் தன்னார்வமாக முன்வந்து இப்போராட்டங்களில் பங்குபெற, வேறு வழியில்லாமல் நாடாளுமன்றமே இவர்களுக்கு காது கொடுக்க வேண்டியிருந்தது. லோக்பால் மசோதாவைத் திருத்தும் குழுவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதியாக கெஜ்ரிவாலையும் மத்திய அரசு நியமித்தது.

ஒரு கட்டத்தில் அரசியல்வாதிகளை எதிர்கொள்ள அரசியலில் குதிக்க வேண்டும் என்று கெஜ்ரிவாலுக்குத் தோன்றியது. அன்னா ஹசாரே இக்கருத்தில் வேறுபட்டார். போராட்டங்களின் வாயிலாகவே அரசைப் பணியவைக்க முடியும் என்பது ஹசாரேவின் நம்பிக்கை. கெஜ்ரிவாலோ அரசியல் அதிகாரத்தை மக்களுக்கு பெற்றுத் தருவதின் மூலம், தாங்கள் விரும்பும் ஊழலற்ற நிர்வாகத்தை ஏற்படுத்த முடியுமென்று நினைத்தார்.கெஜ்ரிவால் சுயாட்சிக் கொள்கையை அடிநாதமாக முன்வைத்து (பெட்டிச் செய்தி காண்க), ‘ஆம் ஆத்மி’ கட்சியை 26 நவம்பர், 2012 அன்று துவக்கினார். முன்னதாக கட்சியை தொடங்கலாமா என்று, ‘ஊழலுக்கு எதிரான இந்தியா’ அமைப்பு மூலமாக மக்களிடையே கருத்துக்கணிப்பு நடத்தினார். மக்கள் ஆதரவின் அடிப்படையிலேயே, ‘ஆம் ஆத்மி’ உருவானது. ஆம் ஆத்மி என்கிற சொல்லுக்கு சாமானிய மனிதன் என்று பொருள்.

ஜன் லோக்பால், தாங்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகளைப் பிடிக்காவிட்டால் மக்களே நிராகரிக்கும் உரிமை, அரசியல் அதிகாரங்களை மக்களுக்கும் பரவலாக்குதல் என்கிற கோஷங்களை, ‘ஆம் ஆத்மி’ முன்வைத்தது. கட்சி தொடங்கப்பட்டு ஒரே ஆண்டில் தில்லியில் ஆட்சியைப் பிடித்திருக்கிறது. மெக்கானிக்கல் என்ஜினீயரான கெஜ்ரிவால் முதல்வர் ஆகியிருக்கிறார். இதற்கு முன்பெல்லாம் இருந்ததைக் காட்டிலும் கூடுதல் பொறுமையையும், சகிப்புத்தன்மையையும் பெற்றிருக்கிறேன்" என்கிறார் கெஜ்ரிவால்.

மற்ற அரசியல் தலைவர்களிடமிருந்து இவரை வேறுபடுத்திக் காட்டுவது, ஜனநாயகம் மீது இவர் கொண்டிருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கைதான். பேச்சில் மட்டுமல்ல, செயலிலும் அவர் மிகச்சிறந்த ஜனநாயகவாதியாகத் திகழ்கிறார். இந்திய இளைஞர்களின் குரலாக கெஜ்ரிவாலைக் காண்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். எனவேதான் தில்லியில் படித்த இளைஞர்களும், உழைக்கும் வாலிபர்களும் பெருந்திரளாகத் திரண்டுவந்து ஆம் ஆத்மியின், ‘துடைப்பம்’ சின்னத்துக்கு வாக்களித்தார்கள்.

இதற்கு முன்பாக இந்திய அரசியலில் காணாத காட்சிகளை இன்று தலைநகரம்தில்லி கண்டுகொண்டிருக்கிறது. சாமானியனின் சக்தி என்னவென்பதை அரசியல்வாதிகளுக்கும், அதிகார மேல்மட்டத்தினருக்கும் உணர்த்திக் காட்டியிருக்கிறார் அர்விந்த் கெஜ்ரிவால்.


ஆம் ஆத்மியின் சாதனை

கட்சி தொடங்கி ஓராண்டிலேயே முதன்முதலாக தில்லி சட்டமன்றத் தேர்தலில் குதித்த, ‘ஆம் ஆத்மி’ கட்சி, இரு பெரும் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு கடும் சவாலை ஏற்படுத்தியது. எழுபது இடங்களில் இருபத்தெட்டு இடங்களை இக்கட்சி வென்றது. எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், காங்கிரஸ் ஆதரவோடு அரியணை ஏறியிருக்கிறது. ஆம் ஆத்மி. கட்சியின் சாதனையில் கெஜ்ரிவாலின் தனிப்பட்ட சாதனையும் அடங்கும். மூன்று முறை தொடர்ச்சியாக முதல்வராக இருந்த ஷீலா தீட்சித்தை அவரது தொகுதியிலேயே இருபத்தைந்தாயிரம் வாக்குகளுக்கும் அதிகமான வித்தியாசத்தில் தோற்கடித்தார் கெஜ்ரிவால்.

முதல்வர் என்று ஆனதுமே, தனக்கு சிறப்புப் பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் தேவையில்லை என்று மறுத்துவிட்டார். தானும், தன்னுடைய அமைச்சரவை சகாக்களும் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவோம், மக்களுக்குத் தேவையில்லாமல் தொல்லை கொடுக்கக்கூடிய, ‘சைரன் அணிவகுப்பு’ இருக்காது" என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறார்.


குடும்பம்

முசோரியில் தன்னுடன் சிவில் சர்வீஸ் பயிற்சி பெற்ற சுனிதாவை திருமணம் செய்துக் கொண்டார் கெஜ்ரிவால். சுனிதா இப்போதும் அரசுப் பணியில்தான் இருக்கிறார். மகள் ஹர்ஷிதா. மகன் புல்கிட். கெஜ்ரிவாலின் பிரபலம் அவரது வீட்டை எந்தவகையிலும் பாதிக்கவில்லை. சராசரி மேல் நடுத்தரக் குடும்பமாகவே தொடர்கிறார்கள்.



மிஸ்டர் பர்ஃபெக்ட்

வருமான வரித்துறை பணியில் இருந்தபோதே ‘மிஸ்டர் பர்ஃபெக்ட்’ என்று பெயரெடுத்தவர் கெஜ்ரிவால். அவருக்கு பியூன் வேண்டாம் என்று மறுத்துவிட்டார். அவரது டேபிளை அவரேதான் சுத்தம் செய்வார். குப்பைகளை அவரே அகற்றுவார். அலுவலகத்தின் அருகில் இருக்கும் டீக்கடையில் டீ சாப்பிடும்போது அவரைப் பார்க்கலாம் அல்லது எப்போதும் மேஜையில் அமர்ந்து வேலை பார்த்துக் கொண்டிருப்பார். கோப்புகளை ஒன்றுக்கு நாலுமுறை சரிபார்த்துக்கொண்டே இருப்பாராம். அவரை கோபமாகப் பார்த்ததே இல்லை என்று அவரது அலுவலக சகாக்கள் சொல்கிறார்கள். கட்டுப்படுத்த முடியாத கோபம் வந்தால், அதிகபட்சமாக டீ சாப்பிடப் போய்விடுவாராம். சொந்தமாக கார் இருந்தும் அலுவலகம் செல்ல மெட்ரோ ரயிலைத்தான் பயன்படுத்துவார். அலுவலகத்தில் பணியாற்றியபோது அவர் கடைபிடித்த எளிமையையும், அர்ப்பணிப்பையும் இன்றுவரை கைவிடவில்லை. ஜன் லோக்பால் மசோதாவை திருப்தி வரும்வரை திருத்திக்கொண்டே இருந்தார்.


ஐஸ் மேன்

கெஜ்ரிவால் ஜாலியாக இருந்தால் எல்லோருக்கும் ஐஸ்க்ரீம் வாங்கிக் கொடுப்பார். நண்பர்களோடு பேசிக்கொண்டிருக்கும்போது, ‘போன்’ வந்தால் சட்டையே செய்யமாட்டார். பேச்சுக்கு நடுவில் இடையூறு எதுவும் அவருக்கு இருக்கக்கூடாது. விழாக்கள் என்றால் அலர்ஜி. தன்னுடைய பிறந்த நாளையோ, குழந்தைகளின் பிறந்த நாளையோ விமரிசையாகக் கொண்டாடுவதில்லை. நேரம் கிடைத்தால் குடும்பத்தோடு சினிமாவுக்குப் போய்விடுவார். அமீர்கான் படங்கள் என்றால் கெஜ்ரிவாலுக்கு ரொம்பப் பிடிக்கும். முதல்வர் ஆகிவிட்டதால், நேரமின்மையின் காரணமாக இன்னமும் அமீர்கானின் லேட்டஸ்ட் ரிலீஸான, ‘தூம்-3’ படத்தைப் பார்க்கவில்லை.


பாக்கெட் மணி

கெஜ்ரிவால் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றதிலிருந்து, அவருடைய மாதச்செலவினை நண்பர்கள்தான் பார்த்துக் கொள்கிறார்கள். ஐ.ஐ.டி. காலத்திலிருந்தே கெஜ்ரிவாலோடு நெருக்கமாக இருக்கும் நண்பர்கள் ஒன்றுசேர்ந்து அவருக்கு மாதம் 25,000 ரூபாய் தருகிறார்கள். கூடுதல் செலவு ஏற்படும் பட்சத்தில் அதை தன்னுடைய மனைவி சுனிதா பார்த்துக் கொள்கிறார்" என்கிறார் கெஜ்ரிவால்.


கெஜ்ரிவாலின் சுயாட்சி

* கிராமங்களுக்கு அதிகாரம் என்கிற காந்திய சிந்தனை கொண்டவர் கெஜ்ரிவால். ஊழலை ஒழிக்க கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் சுயாட்சி அதிகாரம் தரவேண்டும் என்று வலியுறுத்துகிறார். சுயாட்சி குறித்த தன்னுடைய சிந்தனைகளை, ‘ஸ்வராஜ்’ எனும் நூலாக இந்தி/ஆங்கில மொழிகளில் எழுதி, கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியிட்டார். அந்நூலில் இருந்து சில பகுதிகள் :

* இந்தியாவின் சுதந்திரம் என்பது வெறும் அதிகாரபூர்வ அறிவிப்பு. நிர்வாகம்தான் மாறியிருக்கிறது. முன்பு வெள்ளையர்கள், இப்போது இந்தியர்கள். அப்போது லண்டனில் இருந்து ஆண்டார்கள். இப்போது தில்லியிருந்தும், மாநிலத் தலைநகரங்களில் இருந்தும் ஆள்கிறார்கள். நம்முடைய சுதந்திரப் போராட்டம் என்பது நம்மை வெள்ளையர்கள் ஆண்டார்கள் என்பதற்காக மட்டுமல்ல,. மக்களின் சுயாட்சிக்காகவும்தான். சுதந்திர இந்தியாவில் மக்கள்தான் ஆட்சியாளர்கள், மக்கள்தான் நிர்வாகிகள் என்று கனவு கண்டார்கள். துரதிர்ஷ்டவசமாக அது நடக்கவேயில்லை.

* நம்முடைய ஜனநாயகம் மாறவேண்டும். ஒரு முறை வாக்களித்துவிட்டால், அடுத்த ஐந்தாண்டுகளுக்கு வென்றவர்கள் என்னவேண்டுமானாலும் செய்துகொள்ளலாம் என்று இருக்கக்கூடாது.

* அரசாங்கத்தின் செயல்பாடு ஒவ்வொன்றும் மக்களைக் கலந்தாலோசித்து எடுக்கப்பட்டதாக அமைய வேண்டும். 120 கோடி மக்களின் கருத்துகளையும் கேட்கமுடியுமா என்று கேட்டால் நிச்சயமாக முடியும்.

* அறுபது ஆண்டுகளாக எல்லாக் கட்சிகளில் இருக்கும் அரசியல்வாதிகளுக்கும் வாய்ப்பு கொடுத்தாயிற்று. எந்த முன்னேற்றமும் தென்படவில்லை. கட்சிகளையோ, தலைவர்களையோ மாற்றிப் பார்ப்பதில் உபயோகம் எதுவுமில்லை என்பதுதான் இதிலிருந்து புரிகிறது. நாம் வேறு ஏதாவது புதியதாக செய்ய வேண்டும்.

* என்றைக்காவது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பக்கமாகப் போயிருக்கிறீர்களா? ஆட்சியரை சந்திக்க முயற்சி செய்திருக்கிறீர்களா? எப்போதுமே அவரை அங்கு பார்க்க முடியாது. மக்களின் ஊழியர்தானே அவர்? அப்படியிருக்க மக்களிடமே பந்தா காட்டுவது ஏன்? ஆட்சியரை விடுங்கள். ஆட்சியரின் பியூனே கூட எவ்வளவு பந்தா?

* தில்லியில் எந்த அடிப்படையுமற்ற ஒரு சேரிப்பகுதி. குடிக்க நீர் கூட இல்லை. அதற்காக நாங்கள் அரசாங்கத்தை அணுகும்போதெல்லாம் நிதி இல்லை என்பார்கள். ஆனால் அதே பகுதியில் அறுபது லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அலங்கார நீருற்று ஒன்றை அழகுக்காக அமைத்தார்கள். மக்களுக்கு குடிக்க நீரே இல்லை எனும்போது இந்த ஆடம்பரங்கள் அவசியமா? அரசாங்கத்திடம் பணம் இருக்கிறது. ஆனால் அது அவசியமான தேவைகளுக்கு செலவிடப்படுவதில்லை.

* ஊழல் அரசியல்வாதிகளிடமும், அதிகாரிகளிடமும் நம்முடைய இயற்கை வளங்கள் சிறைப்பட்டிருக்கின்றன. நாம் உடனடியாக ஏதாவது செய்யாவிட்டால், அவர்கள் கூட்டணி போட்டு நம் நாட்டையே விற்றுவிடுவார்கள். நீர், நிலம், காடுகள், கனிமவளங்கள் போன்ற இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் பொறுப்பும், அதிகாரமும் மக்களிடம் இருக்கவேண்டும். தங்கள் பகுதியில் இருக்கும் நீர்வளங்களை கிராம சபை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும். ஆறு போன்ற நீர்நிலைகள் குறித்த முடிவுகளை கிராம சபைகளைக் கலந்தாலோசிக்காமல் அரசு எடுக்கக்கூடாது.

* திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் குத்தம்பாக்கம் கிராமத்தில் சுமார் நூறு ஏக்கர் புல்வெளிகள் உண்டு. சென்னை நகரின் குப்பைகளை இங்கே கொட்டுவதற்கு அங்கிருந்த ஆட்சியர் முடிவு செய்தார். அங்கிருப்பவர்கள் எப்படி வசிக்க முடியும்? கிராம மக்களின் கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலம் என்னவாகும்? மக்களின் கவனத்துக்கு வராமலேயே அவர்களது பகுதி, ஏதோ ஒரு நகரின் கழிவுகளைக் கொட்ட எப்படி திட்டமிடப்பட்டது? நீதிமன்றத்தில் கூட குத்தம்பாக்கம் மக்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை.

* ஜனநாயகம் என்பது ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நாம் வாக்களிப்போன். வென்றவர்கள் நம்மை சுரண்டுவதை நாம் வேடிக்கை பார்ப்பது அல்ல. இது மாற வேண்டும். மக்கள் சொல்வதை அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் செயல்படுத்தும் முறைதான் நமக்குத் தேவை. இல்லையெனில் அவர்களை நீக்கும் அதிகாரம் நமக்கு வேண்டும். கிராம சபைகள் மூலமாக மக்களின் எதிர்பார்ப்பை, கருத்தை நம்மால் சேகரிக்க முடியும்.

* தில்லியில் ஒரு ரிக்ஷாக்காரர் மாதம் 5,000 ரூபாய் சம்பாதித்தாலும் சேரியில் குடும்பம் நடத்த முடியாமல் துன்பப்படுகிறார். ஆனால் இதே பணத்தை கிராமத்தில் சம்பாதித்தால் ஒரு குடும்பமே திருப்தியாக வாழ முடியும். எனவேதான் சொல்கிறேன்... தில்லியில் அமர்ந்துகொண்டு, ஒட்டுமொத்த தேசத்துக்கும் வறுமைக்கோட்டை வரையாதீர்கள்.

* மக்களுக்கு அதிகாரம் கிடைத்தால்தான் தீவிரவாதம் முழுமையாக ஒடுக்கப்படும்.

* சோப்பு கம்பெனி, அரிசி ஆலை, எண்ணெய் ஆலை மாதிரி தொழில்களை கிராம சபைகளே நடத்த வேண்டும். இதனால் வேலைவாய்ப்பும் பெருகும். கிராமங்களின் பொருளாதார நிலையும் உயரும்.

* இன்று மதுக்கடை தொடங்க உள்ளூர் அரசியல்வாதிகளோ, அதிகாரிகளோ ஒத்துழைத்தால் போதும். ஒரு குறிப்பிட்ட பகுதியில் தொடங்குவதற்கு கிராம சபை மற்றும் சமூக அமைப்புகளின் அனுமதி கிடைத்தால்தான் மதுக்கடை தொடங்க முடியும் என்கிற சட்டத் திருத்தம் வந்தால் இஷ்டத்துக்கும் கடைகள் திறக்க மாட்டார்கள். குறிப்பாக பெண்களின் அனுமதி வேண்டும். மதுப்பழக்கத்தை வேரறுக்க இம்மாதிரி விதிகள் உதவி செய்யும்.

* நல்ல மனிதர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பது நல்ல விஷயம்தான். ஆனால் அது மட்டுமே ஓர் அமைப்பை மொத்தமாக மாற்றி சீர் செய்துவிடாது. சீரழிவின் வேகம் கொஞ்சம் மட்டுப்படும். அவ்வளவுதான்.

* நம்மை ஆள்பவர்களிடம் நாம் உடனே ஒன்றை சொல்ல வேண்டும்: எங்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளை நாங்கள் பேசி சரிசெய்து கொள்கிறோம். எங்களுடைய தேவை அதிகாரம். 26 ஜனவரி 1950 அன்று உங்களுக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்தை நீங்கள் துஷ்பிரயோகம் செய்கிறீர்கள். தயவுசெய்து அதை எங்களிடம் திருப்பிக் கொடுத்துவிடுங்கள்."

(நன்றி : புதிய தலைமுறை)

5 கருத்துகள்:

  1. ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது...

    பதிலளிநீக்கு
  2. He spoke about the corruption of Sheila Dikshit for the past one year. He told in various television interviews that he has documentary proof over 300 pages. Today, he has NOT spoken even a single word on this. Vishuvarthan raised this issue in the assembly. AK did not reply to this question and in turn he asked BJP to give proof to take action against Sheila Dikshit.

    Last year, he listed 13 central ministers who are most corrupt and he even mentioned that 5 central ministers (including P Chidambaram) are having accounts in Swiss Banks. He is mum on this.

    AK breached his contract with the government and he quit the job and after notice issued by Government, he paid the dues of Rs.9 lacs. This is his honesty in repaying the dues to government.

    AAP is in power with the support of Congress. AAP or AK will NOT open their mouth on the corruption of Congress. AAP will help indirectly to Congress in the Lok Sabha elections by fielding candidates in the BJP stronghold states.

    AAP and AK - will get exposed soon.

    பதிலளிநீக்கு
  3. thala, mechanical or electrical engineer? there is a conflict, pls check!

    பதிலளிநீக்கு
  4. அருமை ...அருமை ...உங்களுக்கு mimicry தெரியும் என்றால் சாலமன் பாப்பையா குரலில் வாசிக்கவும்.......

    பதிலளிநீக்கு