3 ஜனவரி, 2014

உய்யாலா ஜம்பாலா

டோலிவுட்டுக்கு இது பொற்காலம். அவர்கள் எதை எடுத்தாலும் ஒர்க்கவுட் ஆகிவிடுகிறது. கடந்த ஆண்டின் தொடக்கத்தில் ‘சீத்தம்மா வாக்கிட்லோ சிறிமல்லி செட்டு’ என்கிற கிராமத்துப் பின்னணியை கொண்ட ப்ளாக் பஸ்டரில் துவங்கிய பயணம், அதே வில்லேஜ் ஜானரில் வெளிவந்திருக்கும் ‘உய்யாலா ஜம்பாலா’வின் சூப்பர்ஹிட்டில் முடிந்திருக்கிறது.

ஒரு காலத்தில் இளையராஜாக்களும், பாரதிராஜாக்களும் கொடிகட்டிப் பறந்த ஏரியா. இன்றோ தமிழில் பருத்திவீரன்களும், சுப்பிரமணியபுரங்களும், மதயானைக்கூட்டங்களும்தான் கிராமம் என்றாகிவிட்டது.

உய்யாலா ஜம்பாலாவின் ஒருவரி ரொம்ப பழசு. ‘ஒரு ஊரிலே அழகான ஒரு பையன், அவனுக்கு சூப்பரா ஒரு மாமா பொண்ணு’. அவ்ளோதான். உங்களுக்கு மாமாப்பொண்ணு இருந்திருந்தால் இந்த ஒன்லைனரின் கவர்ச்சியை உணர்ந்துகொள்ள முடியும் (நயன்தாரா ரேஞ்சுக்கு ஒரு மாமாப்பொண்ணு எனக்கு வாய்த்தும் ஜஸ்ட் மிஸ்). பரபரவென த்ரில்லருக்கு நிகரான பரபரப்பில் இந்த லைனை திரைக்கதை அமைத்திருப்பதில்தான் வெற்றி கண்டிருக்கிறார்கள்.

படத்தின் ஆரம்பத்தில் வரும் மாண்டேஜ் காட்சிகள் அநியாயத்துக்கு கலக்கல். பிறந்ததிலிருந்தே அழுதுக் கொண்டிருக்கும் ஒரு குழந்தை, அவனுக்கு மாமன் மகள் பிறந்தபிறகு – அதை அடிக்கடி விளையாட்டுக்கு சீண்டி – சிரிக்க ஆரம்பிக்கிறான். வளர்ந்ததும் கூட இருவரும் கீரியும் பாம்பும்தான். அவளை வெறுப்பேற்றுவதற்காகவே வேறு ஒரு பெண்ணோடு நெருக்கமாக இருக்குமாறு இவன் பழிப்பு காட்டுகிறான். அவளோ இவனை வெறுப்பேற்ற, ஒரு டுபாக்கூரை காதலிக்கவே தொடங்கி விடுகிறாள். கதையை கேட்க கொஞ்சம் சீரியஸாக இருந்தாலும் காட்சிக்கு காட்சி சிரிப்பு வெடிதான். அத்தை பையனும், மாமன் பொண்ணும் எப்படி இணைந்தார்கள் என்பதுதான் க்ளைமேக்ஸ் என்பது போகோ டிவி பார்க்கும் குழந்தைக்கு கூட தெரிந்திருக்கும்.

படத்தில் காட்டும் கிராமத்தின் சித்தரிப்பு ரொம்ப முக்கியமானது. பொதுவாக தெலுங்கு கிராமங்களில் வேட்டியை ஒரு மாதிரி கீப்பாச்சி மாதிரி கட்டிக்கொண்டு அலையும் பெருசுகள், எப்பவுமே கோழி அடித்து குழம்பு வைக்கும் பெண்கள், தாராளமாக மாராப்பை காட்டிக்கொண்டு அலையும் ஹீரோயின், டூயட்டில் கூட கத்தியும் ரத்தமுமாகவே காணப்படும் ஹீரோவென்று இல்லாமல் சமகால கிராமத்தை எந்த சினிமாத்தனமும் இல்லாமல் சித்தரிக்க இயக்குனர் ரொம்பவும் மெனக்கெட்டிருக்கிறார்.

முழுக்க புதுமுகங்கள் இடம்பெற்று இவர்கள் பெற்றிருக்கும் வெற்றி, பஞ்ச் அடித்தே காலம் தள்ளும் சூப்பர் ஸ்டார்களை அசைத்துப் பார்க்கும் என்பது உறுதி. சினிமாவில் content is the king என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறது உய்யாலா ஜம்பாலா.

ஹீரோவாக நடித்திருக்கும் ராஜ் தருண், ஒரு என்ஜினியரிங் மாணவர். இருபத்தோரு வயதாகிறது. டைரக்டர் ஆகவேண்டும் என்பது லட்சியம். ஐம்பதுக்கும் மேற்பட்ட குறும்படங்களில் பங்கேற்றிருக்கிறார். தயாரிப்பாளரிடம் கதை சொல்ல போனபோது, எங்களுக்கு டைரக்டர் எல்லாம் இருக்காங்க. நீ வேணும்னா படத்துலே நடி என்றிருக்கிறார். நடிப்பில் ஆர்வம் இல்லை, டைரக்‌ஷன்தான் லட்சியம் என்று இவர் மறுத்ததுமே, சரி எங்க படத்திலே அசிஸ்டெண்டா வேலை பாரு என்று சொல்லியிருக்கிறார்கள். யாருக்கோ நடிப்பு சொல்லித்தர சொல்லி சில சீன்களை இவரிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். உண்மையில் அது இவர் நடிக்க வேண்டிய சீன்கள். அசிஸ்டெண்ட் டைரக்டர் என்று அல்வா கொடுத்து, கதற கதற இவரையே ஹீரோவாக்கி விட்டார்கள். நடித்தது மட்டுமின்றி திரைக்கதை, வசனம், இயக்கம் என்று இப்படத்தில் எல்லா துறைகளிலும் வேலை பார்த்திருக்கிறார் ராஜ் தருண்.

ஹீரோயின் அவிகாவுக்கு பதினாறு வயது. இந்தியில் டிவி நிகழ்ச்சிகளில் குழந்தை நட்சத்திரமாக சக்கைப்போடு போட்டவர். தகுந்த வயசு வந்ததும் திரைத்துறை வாய்ப்புகளுக்கு கதவைத் தட்டியிருக்கிறார். கிடைத்ததெல்லாம் துண்டு துக்கடா வேடம்தான். லோபட்ஜெட் படத்துக்கு மினிமம் சம்பளத்தில் ஹீரோயின் தேவை என்பதால் இவரை ஒப்பந்தம் செய்தார்கள். ஆஸ்கருக்கு தகுதி பெறுமளவுக்கு பின்னி பெடல் எடுத்துவிட்டார். க்ளாமர் அப்பீலே சுத்தமாக இல்லை. ஆனால் ஒவ்வொரு இளைஞனும் கல்யாணம் செய்துக்கொண்டால் இப்படியான ‘லட்சணமான’ பெண்ணைதான் செய்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்குமளவுக்கு ட்ரீம் கேர்ள். கீழ்நெற்றியில் பிளவுபடாமல் ஒட்டிய புருவங்கள் முகத்துக்கு கூடுதல் பொலிவு.

தமிழில் தனுஷ், நஸ்ரியாவை வைத்து படமெடுத்தால் ப்ளாக் பஸ்டர் உறுதி. ஆனால் ஹீரோவுக்கும், ஹீரோயினுக்கும் தயாரிப்பாளர் கொட்டியழ வேண்டிய சம்பளத்தால், படம் ஐநூறு நாள் ஓடினாலும் லாபம் நிற்காது. முன்பெல்லாம் சப்ஜெக்ட்டுக்கும், தயாரிப்பாளருக்கும் ஏற்றமாதிரி நடிகர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் சம்பளம் அட்ஜஸ்ட் செய்துக்கொண்டு நடிப்பார்கள் என்பார்கள். இப்போதெல்லாம் வரிசையாக நாலு ப்ளாப் படம் கொடுத்த ஹீரோ கூட, புதியதாக ஒப்பந்தம் ஆகும் படத்துக்கு முந்தையப் படத்தை விட செம பர்சண்டேஜ் சம்பளம் ஏற்றிவிடுகிறார்.

நான்ஸ்டாப் எண்டெர்டெயின்மெண்டுக்கு தயாராக இருப்பவர்கள் ‘உய்யாலா ஜம்பாலா’வை மிஸ் செய்துவிட வேண்டாம். ஏனெனில் இது தெலுங்கு சினிமாவின் ட்ரெண்ட் செட்டர் மூவியும் கூட.

1 கருத்து: