3 மார்ச், 2016

மிஸ்டர் ராங்!

தமிழக அரசியல் வரலாற்றில் சரியான சந்தர்ப்பத்தில் தவறான முடிவுகளை மட்டுமே எடுக்கக் கூடியவர் என்று மற்ற கட்சியினரால் தொடர்ச்சியாக கிண்டலடிக்கப்படுபவர் மதிமுக பொதுச்செயலர் வைகோ.

1993ல் திமுகவில் இருந்து பிரிந்து மதிமுக என்கிற கட்சியை உருவாக்கினார். 1996ல் மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் ஜனதாதளம் கட்சிகளோடு இணைந்து தேர்தலை சந்தித்தது. வைகோவே கூட விளாத்திகுளம் தொகுதியில் தோல்வி அடைந்தார். சிவகாசி பாராளுமன்றத் தொகுதியிலும் போட்டியிட்ட அவர் அங்கும் மூன்றாவது இடம் பெற்று படுதோல்வி அடைந்தார். 177 சட்டசபை தொகுதிகளில் போட்டியிட்ட மதிமுகவால் ஒரே ஒரு இடத்தில் கூட வெல்ல முடியவில்லை. “காட்டாற்று வெள்ளத்தில் சந்தனமரங்களும் அடித்துச் செல்வது இயல்புதான்” என்று தன்னுடைய படுதோல்வியை இலக்கியத்தரமாக விமர்சித்து ஆறுதலடைந்தார்.

96 தேர்தலில் மிகக்கடுமையாக அதிமுகவையும், ஜெயலலிதாவையும் விமர்சித்த வைகோ, அடுத்த இரண்டே ஆண்டுகளில் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் அதிமுகவோடு கூட்டணி கண்டார். 1998 பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, “அதிமுகவும், மதிமுகவும் ஒரு கொடியில் பூத்த இரு மலர்கள்” என்று அவர் உருகியதை கண்டு மதிமுக தொண்டர்களே முகம் சுளித்தார்கள்.

ஜெயலலிதாவால் ஓராண்டிலேயே வாஜ்பாய் அரசு கவிழ்ந்துவிட 1999ல் மீண்டும் ஒரு பாராளுமன்றத் தேர்தல். இம்முறை, எந்த கட்சியிலிருந்து பிரிந்தாரோ அதே திமுகவுடன் மதிமுக கூட்டணி. இந்த முடிவு கட்சிசாரா வாக்காளர்கள் மத்தியில் மதிமுகவின் நம்பகத்தன்மையை முற்றிலுமாக குலைத்தது. கட்சி ஆரம்பிக்கப்பட்டபோது திமுக, அதிமுகவுக்கு மாற்று என்று முழங்கிய வைகோ அடுத்தடுத்து அதே கட்சிகளோடு வெற்றிக்காக கூட்டணி அமைத்தது அவரது தலைமைப் பண்பையே கேலிக்குரியதாகவும் ஆக்கியது.

அடுத்து வந்த 2001 சட்டமன்றத் தேர்தலில் வைகோ எடுத்த முடிவு அவரது அரசியல் தற்கொலை முயற்சியாக பார்க்கப்படுகிறது. இரண்டு சீட்டுக்காக சண்டை போட்டு திமுக கூட்டணியிலிருந்து விலகிப்போய் தனித்து நின்றது மதிமுக. மீண்டும் திமுக, அதிமுக இரு கட்சிகளையும் மிக கடுமையாக விமர்சித்த வைகோ, இனி எந்த காலத்திலும் இந்த கட்சிகளோடு கூட்டணி கிடையாது என்றார். 211 தொகுதிகளில் போட்டியிட்ட அக்கட்சி, டெபாசிட்டையே விரல்விட்டு எண்ணக்கூடிய தொகுதிகளில்தான் திரும்பப் பெற்றது.

1998ல் தேசியளவில் பாஜகவோடு மதிமுகவுக்கு ஏற்பட்ட கூட்டணிக்கு வைகோ மிகவும் விசுவாசமாக இருந்தார். பாஜக அரசு பொடா சட்டம் கொண்டுவந்தபோது அதை ஆதரிக்கவும் செய்தார். 2001ல் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த அதிமுக, பாஜகவுக்காக வைகோ ஆதரித்த அதே பொடா சட்டத்தை பயன்படுத்தி அவரையே சிறையில் தள்ளியது. அந்த சந்தர்ப்பத்தில் வைகோவை விடுதலை செய்ய வேண்டும் என்று திமுக கோரியது. அக்கட்சியின் தலைவர் கருணாநிதியே, வேலூர் சிறையில் இருந்த வைகோவை நேரில் இருமுறை பார்த்து ஆறுதலும் சொன்னார்.

இதையடுத்து பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறி, திமுக இடம்பெற்றிருந்த காங்கிரஸ் கூட்டணிக்கு 2004 பாராளுமன்றத் தேர்தலுக்கு வந்தது மதிமுக. “தந்தையைப் பிரிந்து தனிக்குடித்தனம் போன தனயன் திரும்பி வந்திருக்கிறேன்” என்று உணர்ச்சிகரமாகப் பேசினார் வைகோ. ஒரு வார இதழுக்கு அவர் கொடுத்த பேட்டியில், “என் வாழ்வில் நான் தலைவராக ஏற்றுக்கொண்ட ஒரே மனிதர் கலைஞர்தான். அவரால்தான் வார்க்கப்பட்டேன். வளர்க்கப்பட்டேன். காலம் எங்களை காயப்படுத்தியது. அதே காலம்தான் எங்கள் காயங்களுக்கு களிம்பும் தடவியது. சிறையிலிருந்த என்னைப் பார்க்க அன்பு மேலோங்க வந்தார் தலைவர் கலைஞர். அவர் என்னை வந்துப் பார்த்ததால் என் மனச்சுமை குறைந்துப் போனது. அரசியலில் எதுவும் நேரலாம். ஆனால் இனி என் வாழ்நாளில் கலைஞரை எதிர்க்க மாட்டேன். காலம் எனக்குக் கற்றுக் கொடுத்த பக்குவம் இது” என்று நெகிழ்ச்சியோடு சொன்னார்.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் சட்டமன்றத் தேர்தல் வந்தபோது வைகோவின் வழக்கப்படி அப்படியே ‘யூ டர்ன்’ அடித்தார். கேட்ட தொகுதிகளை திமுக தரவில்லை என்றுகூறி, அதிமுக கூட்டணிக்கு தாவினார். சிறையில் இருந்து வெளியே வந்தபோது, “பாசிச வெறி பிடித்த ஜெயலலிதா ஆட்சியை தூக்கியெறிவோம்” என்று அவர் முழங்கிய கோஷத்துக்கு மாறாக, மீண்டும் அதிமுக ஆட்சி அமைய அவர் அமைத்த கூட்டணி, அரசியலில் வைகோ மீதான நம்பகத்தன்மையை ஒட்டுமொத்தமாகவே குலைத்தது. அவரை பொடாவில் உள்ளே வைத்து சித்திரவதை செய்த ஜெயலலிதாவை, ‘அன்பு சகோதரி’ என்று விளித்ததை, வைகோவின் தாயாரே எதிர்த்தார் என்று அப்போது பத்திரிகைகள் எழுதின. 2006ல் வைகோ இடம்பெற்றிருந்த அதிமுக கூட்டணி தோல்வியடைந்து, திமுக ஆட்சிக்கு வந்தது.

2009 நாடாளுமன்றத் தேர்தலில்தான் முதன்முறையாக தான் இடம்பெற்ற கூட்டணியிலேயே இரண்டாம் முறையாகவும் வைகோ தொடர்ந்தார். ஆனால், விருதுநகர் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட வைகோவே அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அடுத்து வந்த 2011 சட்டமன்றத் தேர்தலில் கேட்ட தொகுதிகளை அதிமுக கொடுக்கவில்லை என்றுகூறி வித்தியாசமான ஒரு முடிவுக்கு வந்தார் வைகோ. “ஜெயலலிதா துரோகம் செய்துவிட்டார்” என்று கூறிய அவர், தேர்தலிலும் போட்டியிடாமல், அதிமுகவுக்கு எதிர்க்கட்சியான திமுகவுக்கு ஆதரவளிக்காமல் தேர்தலையே ஒட்டுமொத்தமாக புறக்கணித்தார்.

அடுத்துவந்த 2014 பாராளுமன்றத் தேர்தலில் பத்தாண்டுகள் கழித்து மீண்டும் பாஜகவோடு சேர்ந்தார். நாடு முழுக்க மோடி அலை வீசியபோதும் கூட, ஏழு இடங்களில் போட்டியிட்ட மதிமுகவால் ஒரு இடம் கூட வெல்ல முடியவில்லை. வழக்கம்போல விருதுநகரில் வைகோவே தோல்வியை தழுவினார்.

இப்போது 2016 தேர்தலில் இதுவரை தான் கூட்டணி கண்ட திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக அத்தனை கட்சிகளும் மாற்று இயக்கம் என்றுகூறி ‘மக்கள் நல கூட்டணி’யில் இணைந்திருக்கிறார். பெரிய கட்சிகளின் கூட்டணி சுனாமியில் மக்கள் நல கூட்டணி தேர்தல் வரை தாங்குமா என்கிற சந்தேகத்தை அரசியல் ஆய்வாளர்கள் எழுப்பி வருகிறார்கள். ஒருவேளை மக்கள் நல கூட்டணி சிதையுமேயானால், வழக்கம்போல தனித்துவிடப் படுவது வைகோவாகதான் இருப்பார்.

கடந்தகால வைகோவின் செயல்பாடுகளால் வெறுத்துப்போய் மதிமுகவில் இருந்து மீண்டும் தாய்க்கழகமான திமுகவுக்கே அவரோடு வந்தவர்கள் போய்விட்டார்கள். என்ன செய்வது? வைகோ உப்பு விற்க போனால் மழை அடிக்கிறது, மாவு விற்க போனால் காற்றடிக்கிறது. இந்த அளவுக்கு அதிர்ஷ்டமே கொஞ்சமும் இல்லாத தலைவர் இந்திய அரசியலிலேயே வேறு யாரும் இல்லை என்று கிண்டலாக சமூகவலைத் தளங்களில் இவரை விமர்சிக்கிறார்கள் நெட்டிஸன்கள்.

(நன்றி : தினகரன் தேர்தல் களம்)

3 கருத்துகள்:

  1. பெயரில்லா1:04 PM, மார்ச் 03, 2016

    I feel so many people are changed as efucationlists (?) he still continue as politician full of emotions

    பதிலளிநீக்கு
  2. நல்ல பேச்சாளர் அவ்வளவே
    நாம் தான் அவரை தலைவராகக் கொண்டாடி
    சீரழித்துவிட்டோமோ எனத் தோன்றுகிறது
    இந்தக் கட்டுரையப் படித்தால்
    அவருக்கே கூட அவர் மீது வெறுப்பு வரலாம்

    பதிலளிநீக்கு
  3. வைகோதான் காற்று காலத்தில் மாவையும்,மழை காலத்தில் உப்பையும் விற்கும் முடிவுகளை எடுத்து கெடுகிறாரே தவிர இயற்கை கெடுக்கவில்லை.தவறான முடிவுகளுக்கான"மங்குன்னி அமைச்சர்"பட்டத்தை வேண்டுமானால் அவருக்கு கொடுக்கலாமே ஒழிய முதலமைச்சர் பதவியை கொடுக்க முடியாது.செம்பரம் பாக்கத்தை திறந்து விட்டது போன்ற தவறான முடிவுகளை இனி தமிழகம் தாங்காது.

    பதிலளிநீக்கு