19 ஜூலை, 2013

துரத்தும் துயரம்

ரோம். 1960. ஒலிம்பிக். 400 மீட்டர். ஓட்டப்பந்தயம். மில்காசிங். ஆரம்பித்த சில நொடிகளிலேயே முடிவு தெரிந்துவிடுகிறது. “தங்கம் மில்காசிங்கின் பாக்கெட்டில்” என்று வர்ணனையாளர்கள் அலறுகிறார்கள். வெற்றிக்கோட்டுக்கு இன்னும் சில தம்படி தூரம்தான். அப்போதுதான் பன்னிரெண்டு வயதிலிருந்து சாத்தானாய் மில்காவை துரத்தும் துயரம், மீண்டும் அவரை துரத்துகிறது. கண்கள் இருள்கிறது. கால்கள் ஓடமறுக்கிறது. ஒலிம்பிக், தங்கம் எல்லாமே மறந்துவிட கடைசியில் கிடைத்தது நான்காவது இடம்தான். மயிரிழையில் வெண்கலம் நழுவினாலும் ஒலிம்பிக் போட்டிகளில் தடகளத்தில் இன்றுவரை ஒரு தனிநபர் இந்தியரின் சாதனை இதுதான். 45.73 நொடிகளில் முடிந்த அவரது ஓட்டம் இந்திய தேசிய சாதனையாக நாற்பது ஆண்டுகளுக்கு வீழ்த்த முடியாததாகவும் இருந்தது.

இந்த காட்சியில் இருந்துதான் விரிகிறது ‘பாக் மில்கா பாக்’. அதாவது ‘ஓடு மில்கா ஓடு’. மில்காசிங்கின் வாழ்க்கை வரலாற்றில் இருந்து எடுக்கப்பட்ட கதையென்றாலும் சினிமாவுக்காக கொஞ்சம் லேசாக டிங்கரிங் பார்த்திருக்கிறார்கள். முன்பின்னாக நான்லீனியர் வடிவம்தானென்றாலும், அது எவ்விதத்திலும் பார்வையாளனை குழப்பாத அளவில் சீரான இடங்களில் காட்சிமாற்றத்தை சிறப்பாக செருகியிருக்கிறார்கள்.

மில்காவுக்கு பன்னிரெண்டு வயதாக இருக்கும்போது இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை நடக்கிறது. அவர் பிறந்த குக்கிராமமான கோவிந்த்புரா, பாகிஸ்தானில் அமைகிறது. அங்கிருக்கும் சீக்கியர்களுக்கு இரண்டே இரண்டு வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஒன்று; இஸ்லாமியனாக மாறிவிடு. இரண்டு; குழந்தை குட்டிகளை தூக்கிக்கொண்டு இந்தியாவுக்கு ஓடிவிடு. ஒரு லட்சம் பேர் கொண்ட மாபெரும் சைனியத்தை, நாற்பதே பேர் கொண்ட படையோடு குரு கோவிந்த் சந்தித்தார். அந்தப் பரம்பரையில் வந்தவர்கள் பயந்து ஓடுவதா என்று அங்கிருப்பவர்கள் போராடி பார்த்துவிட முடிவெடுக்கிறார்கள். எதிரிகள் வெல்கிறார்கள். கழுத்தை கூரிய வாள் வெட்டுவதற்கு சில நொடிகள் முன்பாக மில்காவின் அப்பா சொல்கிறார். “ஓடு மில்கா ஓடு”. திரும்பிப் பார்க்காமல் ஓடச்சொல்லிய அப்பாவின் அறிவுரையை மில்கா மீறுகிறார். திரும்பிப் பார்த்ததால்தான் கடைசிவரை அவரை அத்துயரம் துரத்திக்கொண்டே இருந்தது.

உயிர்வாழ்வதைத் தவிர்த்து வேறெந்த குறிப்பிட்ட லட்சியமும் இல்லாமல் இந்தியாவுக்கு அகதியாய் வந்தது. இங்கு பிற்பாடு உயிர்பிழைத்து வந்த அவரது அக்காவோடு சேர்ந்தது. சிறு அளவிலான திருடனாய் பொறுப்பற்று திரிந்தது. ராணுவத்தில் சேர்ந்தது. யதேச்சையாய் அவருக்குள்ளிருந்த ஓட்டத்திறமையை இராணுவ அதிகாரிகள் கண்டுகொண்டது. சிறுசிறு தடைகளை வென்று சரித்திரம் படைத்தது என்று படம் மில்காவின் எல்லா கோணங்களையும் இண்டு, இடுக்கு விடாமல் படம் பிடித்திருக்கிறது.

இது மில்கா சிங்கின் கதை மட்டுமல்ல. சீக்கிய இனத்தின் கதையும் கூடத்தான். இஸ்லாமிய ஆட்சியாளர்களின் அடக்குமுறைகளுக்கு எதிராக கிளர்த்தெழுந்து உருவான இயக்கம் அது. பிற்பாடு வெள்ளையர்களோடு சண்டை. சுதந்திரத்துக்குப் பிறகு பிரிவினை காரணமாக தாய்மண்ணில் இருந்து பல்லாயிரம் பேர் விரட்டப்பட்டார்கள். இந்துவாகவோ, முஸ்லிமாகவோ இல்லாமல் சீக்கியனாக அவர்கள் இருந்ததுதான் பிரச்சினை. அந்த அடையாளத்தை துறந்துவிடச்சொல்லி வன்முறையால் வலியுறுத்தப்பட்டார்கள். சர்தார்ஜி ஜோக்குகளை உருவாக்கி அவர்களை கேவலப்படுத்தினோம். தனிநாடு உரிமை கோரியவர்களை கொன்றுக் குவித்தோம். அவர்களது உயிரினும் மேலான பொற்கோயிலுக்குள் இராணுவத்தின் பூட்ஸ்கால்கள் நுழைந்தன. ஆனாலும் இன்று அயல்நாடுகளில் எல்லாம் கிளைபரப்பி இந்தியர்கள் என்றாலே சீக்கியர்கள் என்று சொல்லுமளவுக்கு எல்லாத்துறையிலும் உயர்ந்திருக்கிறார்கள். எந்த டெல்லியில் மூவாயிரம் சீக்கியர்கள் கொல்லப்பட்டு, அந்நகரின் சாலைகளில் இரத்தவெள்ளம் ஓடியதோ.. இன்று அதே டெல்லியின் செங்கோட்டையை ஆளுபவர் ஒரு சீக்கியர்.

ஒரு சுயசரிதையை எப்படி திரைப்படம் ஆக்க வேண்டும் என்று எதிர்கால சினிமா மாணவர்களுக்கு ‘பாக் மில்கா பாக்’ பாடமாக கற்பிக்கப்படலாம். படம் பார்க்கும் பார்வையாளனும் மூன்று மணி நேரம் மில்காவோடே ஓடிக்கொண்டிருப்பதைப் போன்ற உணர்வினை ஏற்படுத்தும் துல்லியமான இயக்கம். இயக்குனர் ஓம் பிரகாஷ் மெஹரா, இசையமைப்பாளர்கள் ஷங்கர் எஷான்லாய், ஸ்க்ரிப்ட் எழுதிய ப்ரசூன் ஜோஸி என்று வெயிட்டான டீம். கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங்கின் அப்பா யோக்ராஜ்சிங் கோச்சாக நடித்திருக்கிறார். பிரகாஷ்ராஜுக்கும் முக்கியமான வேடம்.

ஐம்பது கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படம் பெரும் மனித உழைப்பை கோரியிருக்கிறது. இரண்டரை ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்த படம். மில்காவாக நடித்திருக்கும் ஃபரான் அக்தர் கிட்டத்தட்ட ஓர் ஓட்டப்பந்தய வீரனுக்குரிய எல்லா பயிற்சிகளையும் எடுக்க வேண்டியிருந்தது. இப்படத்தில் நடிப்பதே பெரும் கவுரம் என்றுகூறி சம்பளமாக வெறும் பதினோரு ரூபாயை மட்டுமே பெற்றுக்கொண்டு நடித்தார் சோனம் கபூர். “நாங்கள் எல்லோருமே மில்காசிங்கின் வாழ்வோடு இரண்டறக் கலந்து விட்டோம். எந்தக் கட்டத்திலும் எங்களுக்கு எதுவுமே கடினமாக தோன்றவில்லை” என்று ஃபரான் அக்தர் ஒரு பேட்டியில் குறிப்பிடுகிறார். பட்ட சிரமங்களுக்கு பலன் இருக்கிறது. முதல் நான்கு நாட்களிலேயே நாற்பது கோடி ரூபாய் வசூலை அள்ளித்தந்து, ‘ஓடு மில்கா ஓடு’ என்று படத்துக்கு மாபெரும் வரவேற்பை தந்து ஓடவைத்துக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.

ரோம் ஒலிம்பிக்கில் நான்காவது இடம் கிடைத்த மனச்சோர்வில் மில்கா இருந்தபோது, இந்திய-பாக் நட்புறவு விளையாட்டுப் போட்டிகளுக்கு அவர் தலைமை தாங்க வேண்டும் என்று இந்தியப் பிரதமர் நேரு விரும்புகிறார். ஏற்கனவே தன்னை துரத்திக் கொண்டிருக்கும் துயரத்திடமிருந்து தப்பித்து ஓடமுடியாமல் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் மில்கா பாகிஸ்தான் செல்ல விரும்பவில்லை. நேருவின் வற்புறுத்தலில் பாகிஸ்தானுக்கு சென்று, அவர்கள் மண்ணிலேயே அந்நாட்டின் தலைசிறந்த தடகளவீரரான அப்துல்காலித்தை வெல்வதுதான் க்ளைமேக்ஸ். இம்முறை ஓடத்துவங்கும் போதும் ரோமில் துரத்தியதைப் போலவே துயரம் மில்காவை துரத்துகிறது. முடிந்தவரை வேகமாக ஓடி சாதிப்பதின் மூலமாக மட்டுமே இத்துயரத்தை விட்டு விலகி நீண்டதூரம் ஓடமுடியும் என்கிற நிர்ப்பந்தத்தில் மில்கா ஓடுகிறார். அதுவரை அவர் ஓடிய ஓட்டங்களிலேயே சிறந்த ஓட்டம் அது. நானூறு மீட்டர் தொலைவை ஒரு மின்னல் கடப்பதைப் போல கடக்கிறார். போட்டியை நேரில் கண்டுக் கொண்டிருந்த பாகிஸ்தான் ஜெனரல் அயூப்கான் மில்காவை ‘பறக்கும் சீக்கியர்’ என்று பாராட்டுப் பத்திரம் வாசிக்கிறார். வெற்றிக் கோட்டை தாண்டி வெற்றி பெற்ற மிதப்பில் மெதுவாக ஓடுகிறார் மில்கா. அவருடன் கூடவே பன்னிரெண்டு வயதில் பாகிஸ்தானை விட்டு உயிர்பிழைக்க ஓடிய சிறுவன் மில்காவும் ஓடுகிறான். இம்முறை அவனது முகத்தில் அச்சமோ, துயரமோ இல்லை. மாறாக வெற்றிக்களிப்பு தரும் மந்தகாச சிரிப்பு மட்டுமே உதட்டில் மிஞ்சுகிறது.

9 கருத்துகள்:

  1. no words yuva....ur review gives me the feel of watching the movie.........

    பதிலளிநீக்கு
  2. சிறந்த விமர்சனம். படம் பார்க்காமலேயே பார்த்த உணர்வை ஏற்படுத்துகிறது. காட்சிகளை பற்றியும் அதன் பின்னனி குறித்து எடுத்து சொல்லும் விதம் அருமை. சிறப்பான எழுத்து நடை.

    பதிலளிநீக்கு
  3. Sikhs never fought against Britishers. Its for that loyalty:
    1. Sikh Royal families were ruling during British time.
    2. Punjab was irrigated by diverting the Indus river
    3. Sikhs got citizenship in UK, Canada

    Sikh temple massacre was a result of infighting between two groups and Indra used one group for her benefit who finally killed her and paid the price in Delhi riot.

    The excesses of Sikh royal family during their rule is continued by our politicians today.

    Punjab has the worst sex ratio in India - what a brave community that kills its own female babies.

    Ethics and morals of this community is reflected in the way they do business in Delhi.

    High price for farm lands has turned 30% of Sikh youths into drug addicts this issue is even recognized by Punjab Govt.

    பதிலளிநீக்கு
  4. உண்மையில் படம் பார்த்த உணர்வு ஏற்பட்டது. பார்த்தாலும் இந்த அளவுக்கு புரியுமா தெரியவில்லை உங்கள் இந்த முயற்சிக்கு பாராட்டுகள் தொடர்க உங்கள் சேவை

    பதிலளிநீக்கு
  5. @Aru - what you said is true ? sikhs are unnecessarily given an ideal image, have you heard about cut-throat dowry collection habits of the sikhs

    பதிலளிநீக்கு
  6. @Aru - what you said is true ? sikhs are unnecessarily given an ideal image, have you heard about cut-throat dowry collection habits of the sikhs

    பதிலளிநீக்கு
  7. Sikhs never fought against Britishers. Its for that loyalty:

    What about Bagath Singh ?

    பதிலளிநீக்கு