2 ஜூலை, 2013

தீ குளிக்கும் பச்சை மரம்

சமீபமாக தமிழ்த் திரையுலகம் காமெடியை நம்பி இயங்கிக் கொண்டிருக்கிறது. சமகால சமூக நிகழ்வுகள் சீரியஸாகவும், அவநம்பிக்கை படரச் செய்வதாகவும் இருப்பதால், பார்க்கும் படமாவாவது காமெடியாக இருக்கட்டுமே, என்று தமிழர்கள் நினைக்கிறார்கள் போலிருக்கிறது.

சில காலம் முன்பாக கேரளாவில் அலைகளை கிளப்பிய குறும்படம் ஒன்றை இயக்கியவர்கள், சகோதரர்களான வினீஷ்-பிரபீஷ். பிணவறையில் வேலை பார்த்த ஒரு இளைஞனின் நிஜக்கதை அது. பரவலான கவனத்தையும், ஏராளமான விருதுகளையும் இந்த குறும்படத்துக்காக அவர்கள் பெற்றார்கள். நம்மூரில் இருந்து அடிக்கடி கேரளாவுக்கு ஷார்ட்-ட்ரிப் அடிக்கும் இயக்குனர் சமுத்திரக்கனியும், இப்படத்தை பார்த்தார். இயக்குனர்களை அழைத்து பாராட்டியதோடு மட்டுமில்லாமல், இதை ஏன் சினிமாவாக எடுக்கக்கூடாது என்று ஐடியாவும் கொடுத்தார். இப்படித்தான் ‘தீ குளித்தது பச்சை மரம்’.

படத்தை தமிழில் எடுத்தால், நிறைய பேரை போய்ச்சேரும் என்று இயக்குனர்கள் நினைத்தார்கள். பழம்பெரும் கேமிராமேனான மதுஅம்பாட்டை தங்களுக்கு பணிபுரிய கேட்டார்கள். ஏகப்பட்ட தேசிய விருதுகளை குவித்தவர். நாற்பது ஆண்டுகளாக உழைத்துக் கொண்டிருப்பவர் (அஞ்சலியை மறக்கமுடியுமா?) இப்போது மிகக்குறைவான படங்களையே செலக்டிவ்வாக ஒப்புக்கொள்கிறார். உடல்நலமும் முன்பு போல ஒத்துக்கொள்வதில்லை. வினீஷும், பிரபீஷும் தாங்கள் எடுத்த குறும்படத்தை அவருக்கு போட்டுக் காட்டினார்கள். “இதைத்தான் முழுநீளப்படமாக எடுக்கவிருக்கிறோம், நீங்கள் செய்துக் கொடுக்கிறீர்களா?” மறுபேச்சு பேசாமல், சம்பளம் பற்றியெல்லாம் விசாரிக்காமல் கதைக்காக மட்டுமே மது ஒப்புக்கொண்டார்.

லோ பட்ஜெட் படங்களே எள்ளி நகையாடக்கூடிய அளவுக்கு, லோ லோ பட்ஜெட். இது படமாக வந்தால் எப்படியும் காசு தேறாது என்று தெரிந்தும் கலைத்தொண்டாக நினைத்து தைரியமாக படமாக்கியிருக்கிறார்கள். இதே கதையை மிகச்சுலபமாக மசாலா எண்டெர்டெயிண்ட்மெண்ட் த்ரில்லராகவும் எடுத்திருக்கலாம். ஆனால் எவ்வித வணிகசமரசத்துக்கும் இயக்குனர்கள் இடம் கொடுக்கவில்லை. கறாரான கலைத்தன்மையோடே வெளிவந்திருக்கிறது தீக்குளிக்கும் பச்சை மரம்.

ms
புதுமுக நடிகரான பிரஜன் தான் அறிமுகமாக இப்படத்தை தேர்ந்தெடுத்தது துணிச்சலான முயற்சி. டிவி காம்பியரராக புகழ்பெற்ற பிரஜனுக்கு முயற்சித்தால் லவ்வர் பாயாகவோ, கல்லூரி மாணவனாகவோ பாத்திரங்கள் தாராளமாக கிடைத்திருக்கும். இயல்பிலேயே அழகான பிரஜன் இப்படத்துக்காக கறுத்து, இளைத்து (சேது விக்ரம் மாதிரி) பாண்டியாகவே கிட்டத்தட்ட மாறியிருக்கிறார். பாண்டி என்கிற ஒரு மனிதன் ஏன் பிணவறைக்கு வேலை பார்க்கவேண்டும், அதற்குக் காரணமான அவனுடைய சமூகப் பொருளாதார பின்னணி என்னவென்பதுதான் படத்தின் ஒருவரிக்கதை. இதை முழுமையாக உணர்ந்து ஏற்று நடித்து, தன்னுடைய திரைப்பட வருகையையே மாற்று முயற்சியாக தொடங்கியிருக்கிறார் பிரஜன்.


பாண்டி, சார்லி, துரை மூவரும் சீர்த்திருத்தப் பள்ளியிலிருந்து ஆறாண்டு தண்டனையை முடித்து வெளிவருகிறார்கள். சார்லியும், துரையும் குற்றப்பாதைக்கு திரும்ப முடிவெடுக்கிறார்கள். தன்னுடைய அப்பாவைப் போலவே அறம் சார்ந்த மதிப்பீடுகளோடு வாழ விரும்பும் பாண்டி தன்னுடைய சொந்தக் கிராமத்துக்கே போய் சேருகிறான். இவர்கள் சீர்த்திருத்தப் பள்ளிக்கு ஏன் வந்தார்கள் என்பது ப்ளாஷ்பேக்.

ஊருக்கு வந்த பாண்டிக்கு சரியான வேலை கிடைக்கவில்லை. சாராயம் குடித்துவிட்டு, கிடைத்த கூலிவேலைகளை செய்துக்கொண்டு கடனுக்கே என்று வாழுகிறான். எதிர்பாராவிதமாக அவனையும் ஒருத்தி காதலிக்கிறாள். இவனுக்கும் அவளை திருமணம் செய்துக்கொள்ளத் தோன்றுகிறது. செய்துக் கொள்கிறார்கள். திருமணத்துக்குப் பிறகான வாழ்க்கை நெருக்குதல்களை சமாளிக்க வேறு வழியின்றி, அரசு மருத்துவமனையின் பிணவறையில் பணத்துக்காக வேலைக்கு சேருகிறான். வேலையே பிணங்களோடுதான் என்பதை சுலபமாக ஒருவரியில் சொல்லிவிடலாம். ஆனால் நினைத்துப் பார்ப்பதே கொஞ்சம் கொடூரமான திகிலை கொடுக்கிறது. உடலை அறுப்பது, மண்டையைப் பிளப்பது என்று ரத்தமயமான பணி. ஆரம்பத்தில் தடுமாறும் பாண்டி போகப்போக இந்தப் பணியில் சகஜமாகிவிடுகிறான்.
                           3
சில நாட்களிலேயே பிணவறையின் அதிர்ச்சியான மறுபக்கம் அவனுக்கு தெரியவருகிறது. உடல் உறுப்புகள் வியாபாரம், பிணங்களோடு உடலுறவு என்று கற்பனைக்கும் எட்டாத ‘பகீர்’களை நேரடியாக பார்க்கிறான். இறந்தவர்களை கூட நிம்மதியாக இருக்கவிடாமல் கொடுமைப்படுத்தும், இந்த அநியாயங்களை அவனால் ஜீரணிக்க முடியவில்லை. தட்டிக்கேட்டு சில எதிரிகளை சம்பாதிக்கிறான். இப்படியாகப் போகும் கதையில் கொடூரமான, எதிர்பாராத பயங்கர க்ளைமேக்ஸ்.

prajan
கதையை கேட்கும்போது வக்கிரமான, ஆபாசமான, அருவருக்கத்தக்க காட்சிகள் நிறைய இருக்கலாம் என்று நீங்கள் யூகிக்கலாம். இயக்குனர்களும், கேமிராமேனும் மிக கவனமாக இக்கதையை கையாண்டிருக்கிறார்கள். முடிந்தவரை ரத்தத்தை காட்டாமல் இருப்பது, லேசாக காட்சியைத் தொடக்கி மீதி என்ன நடந்திருக்கும் என்பதை ரசிகனின் கற்பனைக்கே விட்டுவிடுவது என்று லாகவமாக படமெடுத்திருக்கிறார்கள். டி.பி.கஜேந்திரன், எம்.எஸ்.பாஸ்கர் என்று காமெடி நடிகர்கள் இருந்தும்கூட எவ்வித எண்டெர்டெயின்மெண்ட் வேல்யூவையும் சேர்க்காமல், சொல்ல வந்த படத்தின் கதை பாதையில் இருந்து சற்றும் விலகவே இல்லை.


வெளியாகி ஒருவாரம் கழிந்த நிலையில் வெளியான தியேட்டர்கள் எதிலும் இன்று தீக்குளிக்கும் பச்சை மரம் ஓடுவதாக தெரியவில்லை. மாற்று சினிமாவின் இடம் இதுதான். மாற்று சினிமாக்கள் வெகுஜனங்களின் ஆதரவைப் பெற்று ஓடுவதெல்லாம் ஆடிக்கு ஒருமுறை, அமாவசைக்கு ஒருமுறை நடக்கும் அதிசயம்தான். அதில் பிரச்சினையில்லை. ஆனால் தமிழில் மாற்று சினிமாவுக்காக வாய் கிழியப் பேசும் மாற்று சினிமா ஆர்வலர்கள் ஏன் இன்னமும் இப்படத்தை கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஒருவேளை இது தமிழில் வெளிவந்திருப்பது குற்றமாக இருக்கலாம். கேரளாவிலோ, வங்கத்திலோ, ஈரானிலோ, லத்தீன் அமெரிக்க நாடுகளிலோ மட்டுமே மாற்று சினிமா சாத்தியம் என்று நினைக்கிறார்களோ என்னமோ?
              prajan2
போஸ்ட்மார்ட்டம், பிணங்களோடு உறவு மாதிரி காட்சிகளை சினிமாவில் காட்டவேண்டுமா என்று இப்படம் பார்த்த சில தோழர்கள் இணையத்தளங்களில் கடுமையான அதிர்ச்சியோடும், எதிர்ப்போடும் எழுதி வருகிறார்கள். பொழுதுபோக்கு சினிமாவுக்கு இதெல்லாம் அவசியமில்லைதான். ஆனால் சினிமா என்பது வெறும் பொழுதுபோக்குக்கு அல்ல, ஆவணப்படுத்தவும்தான் என்கிற கோணத்தில் பார்க்கும்போது இதுவும் தேவைதான். ஆவணப்படுத்துதல் கலைக்கு முக்கியமான ஒரு அம்சம் இல்லையா. பிணவறைக்குள் என்னதான் நடக்கிறது என்பதை மக்களும் தெரிந்துகொண்டால், குடியா முழுகிவிடப் போகிறது. தமிழில் மதுபானக்கடைக்குப் பிறகு வந்திருக்கும் மிக முக்கியமான முயற்சி தீ குளிக்கும் பச்சை மரம். அசாத்திய துணிச்சலோடு களமிறங்கியிருக்கும் இப்படக் குழுவினர் சர்வதேச விருதுகளுக்கு தகுதியானவர்கள். ஆனால் அடுத்த பட வாய்ப்பு கிடைக்குமா என்பதுதான் சந்தேகம்.
end
 
(நன்றி : cinemobita.com)

3 கருத்துகள்:

  1. பெயரில்லா12:55 PM, ஜூலை 02, 2013

    பகிர்வுக்கு நன்றி லக்கி.
    Madotica.

    பதிலளிநீக்கு
  2. முதன்முறையாக வெள்ளிக்கிழமையன்று குவைத்தில் ஒரு பிணவறைக்குள் சென்று பார்த்தேன். அது விபத்தில் அடிப்பட்டு இறந்தவர்களை வைத்திருக்கும் அறை. ஐம்பதுக்கும் மேல் உடல்கள் இருந்தன. அனைத்தும் முழுவதுமாக மூடப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. சுமார் 3 நிமிடங்களே அங்கு இருந்தோம். அங்கு வேலை செய்பவர்களுக்கு பழகிவிடுவதால் ஒன்றும் தெரிவதில்லை. ஆனால் புதிதாக பார்ப்பவர்களுக்கு மிகவும் கஸ்டமே.

    பதிலளிநீக்கு
  3. இதை கொஞ்சம் பாருங்கள் லக்கி - அழகிரி
    Express Avenue http://www.youtube.com/watch?v=D2cyHg11758

    பதிலளிநீக்கு