2 ஜனவரி, 2015

கோணல் பக்கங்கள் வெர்ஷன் 2015

தினகரன் இணைப்பிதழ்கள் முதன்மை ஆசிரியர் கே.என்.சிவராமன் ஃபேஸ்புக்கில் எழுதிய பதிவு :

தலைப்பை பார்த்ததும் அதிகப்படியாக தோன்றலாம். கோபமும் வரலாம்.

ஏனெனில் 'கோணல் பக்கங்கள்' என்னும் தலைப்பு சாரு நிவேதிதாவுக்கு சொந்தமானது. அவரது தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் - பத்திகள் இந்த பொது தலைப்பின் கீழ்தான் மூன்று பாகங்களாக தொகுக்கப்பட்டிருக்கின்றன. மட்டுமல்ல, அவை விற்பனையிலும் இன்றுவரை சாதனை படைத்து வருகின்றன.

ஒருவகையில் இந்த 'கோ.ப'களை Trend Setter என்றும் குறிப்பிடலாம். காரணம், 2000க்கு பிறகான தமிழ் பத்தி / கட்டுரை எழுத்துக்களில் ஒரு மாற்றத்தை - பாய்ச்சலை ஏற்படுத்தியது இந்த மூன்று பாகங்கள்தான். எனவேதான் புது வாசகர்களின் ஆரம்பகால 'கைடாகவும்', அறிமுக எழுத்தாளர்களின் தமிழ் நடையை தீர்மானிக்கும் காரணியாகவும் இந்த மூன்று பாகங்களே விளங்குகின்றன.

அவ்வளவு ஏன், 'சாரு நிவேதிதா' என்று சொன்னதுமே நினைவுக்கு வருவது 'கோணல் பக்கங்கள்'தானே?

அப்படியிருக்க அந்த தலைப்பை யுவகிருஷ்ணாவின் புதிய கட்டுரை தொகுப்பான 'சரோஜாதேவி' குறித்த அறிமுகத்துக்கு பயன்படுத்துவது எந்த விதத்தில் நியாயம் என்று புருவத்தை உயர்த்துவம், சட்டையை பிடித்து கேள்வி கேட்க முற்படுவதும் இயல்புதான்.

இதற்கு ஒரே விடை, 45 கட்டுரைகள் அடங்கிய இந்த நூலை படித்துப் பாருங்கள் என்பதுதான்.

யெஸ்... 'கோணல் பக்கங்களை' வாசிக்கும்போது என்னவகையான வசீகரிப்பை உணர்ந்தீர்களோ அதை அப்படியே யுவகிருஷ்ணாவின் 'சரோஜாதேவி'யிலும் உணரலாம். அதே துள்ளல் நடை. நக்கல். நையாண்டி.

ஆனால் -

எந்த இடத்திலும் இவர் சாருவின் மொழியை, நடையை காப்பி அடிக்கவில்லை என்பது முக்கியம். அதாவது முழுக்க முழுக்க இது 'லக்கி' பாணி.

சாம்பிளுக்கு கேப்டன் டிவியில் ஒளிபரப்பாகும் 'சமையல் மந்திரம்' நிகழ்ச்சி தொடர்பான கட்டுரையை எடுத்து கொள்வோம். அதில் -

//சமையல் குறிப்பு முடிந்ததுமே ஆலோசனை நேரம். நேயர்கள் யாராவது சந்தேகம் கேட்கிறார்கள். அந்த கடிதத்தை நிகழ்ச்சி பார்க்கும் நாமே கூச்சப்படும் வகையிலான குரலில் கொஞ்சிக் கொஞ்சி தொகுப்பாளர் படிப்பார். டாக்டரும் அசால்டாக, சிவராஜ் சித்தவைத்தியரை மிஞ்சும் வகையில் பதில் சொல்வார். இம்மாதிரி நிகழ்ச்சிகளில் கேட்கப்படும் கேள்விகள் ஒரே மாதிரியாகதான் அலுப்பூட்டும். ‘இருபது வருட கைவேலை, ரொம்ப சிறுத்திடிச்சி’, ‘கல்யாணம் முடிஞ்சி எட்டு மாசமாவது, இதுவரைக்கும் ஒண்ணுமே முடியலை’ ரேஞ்சு சந்தேகங்கள்தான்.

கேள்வியைப் படித்துக் கொண்டிருக்கும்போதே டாக்டர் குறுக்கிட்டு ஏதாவது கமெண்டு சொல்வார். “மெட்ரோ வாட்டர் பைப் மாதிரி யூஸ் பண்ணுவார் போலிருக்கே?” என்று டாக்டர் ஒரு போடு போட, கிரிஜா ஸ்ரீயோ ஒரு படி மேலே போய் “ஆமாம். அப்படித்தான் நானும் நினைக்கிறேன்” என்று புகுந்து விளையாடுகிறார். “இவருக்கு இன்னேரம் கைரேகையெல்லாம் அழிஞ்சிட்டிருக்கும்னு நெனைக்கிறேன்” என்று டாக்டர் சீரியஸாக கமெண்ட் செய்ய, “பின்னே.. கொஞ்ச நஞ்ச உழைப்பா” என்று டாக்டரையே காலி செய்கிறார் கிரிஜா.//

என்று நக்கல் அடித்துவிட்டு இப்படி முடித்திருக்கிறார்... //நிகழ்ச்சிக்கு பிரமாதமான வரவேற்பு இருப்பதால், நிகழ்ச்சி நேரத்தை கொஞ்சம் ‘நீட்டிக்க’ சொல்லி நிறைய நேயர்கள் கேட்கிறார்கள். கேப்டன்தான் மனசு வைக்கணும்//

இணையதளத்தில் சக்கை போடு போட்ட 'சவிதா பாபி' காமிக்ஸ் மற்றும் 'நேஹா ஆண்ட்டி' ஆகிய இரு 'ஏ'டாகூடமான கதைகள் / தளங்கள் குறித்தும் தனித்தனி கட்டுரை எழுதியவர் -

பெரிதும் வாசிக்கப்பட்ட 'மாலதி டீச்சர்' குறித்து எழுதாதது வருத்தமளிக்கிறது

'விர்ச்சுவல் விபச்சாரம்' கட்டுரை இணையத்தில் நடக்கும் மோசடி தொடர்பானது. சபலப் பேர்வழிகளை குறி வைத்து எப்படி சாட்டிங் மூலம் பணம் பறிக்கிறார்கள் என்று விவரித்திருக்கிறார்.

'Undie Party', ஐரோப்பிய நாடுகளில் நடக்கும் கூத்தை சிரிக்க சிரிக்க சொல்கிறது. எப்படி என்கிறீர்களா?

//Undie Party என்பது என்ன?

இந்த பார்ட்டியில் கலந்துகொள்ளும் முதல் நூறு பேருக்கு தேசிகுவல் இலவசமாக ஆடைகளை அளிக்கும். அவர்கள் அறிவிக்கும் தேதியில், அறிவிக்கும் கடைக்கு வந்து திருப்பதி க்யூ மாதிரி வரிசையாக நிற்கவேண்டும். First come, First gift அடிப்படையில் பார்ட்டி நடக்கும். பார்ட்டியில் கலந்துகொள்ள ஒரே ஒரு நிபந்தனை உண்டு. ஆணாக இருப்பின் ஜட்டியோ அல்லது ட்ரவுசரோ மட்டுமே அணிந்து வரவேண்டும். பெண்களுக்கு கொஞ்சம் கூடுதல் சலுகை உண்டு. கீழாடையோடு, மார்க்கச்சையும் அணிந்து வரலாம்.

100 பேருக்குதான் இலவச ஆடை தரமுடியுமென்றாலும் தங்களுக்கும் 'டோக்கன்' (நம்மூர் இலவச டிவிக்கு கொடுப்பது மாதிரி கொடுக்கிறார்கள்) கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்று ஆயிரக்கணக்கில் மக்கள் 'ஆய் டிரெஸ்' போட்டுக்கொண்டு குவிந்துவிட Undie party நடந்த நகரங்களில் எல்லாம் திருவிழாக்கோலம் தானாம். பற்களை கிடுகிடுக்க வைக்கும் ஐரோப்பா குளிரிலும் அனல் பறக்கிறதாம். பார்ட்டியில் பங்குபெற ஐநூறு பேர் வந்தால்.. பார்வையாளர்கள் பத்தாயிரக் கணக்கில் குவிகிறார்களாம். ஆபிஸுக்கு லீவ் போட்டுவிட்டெல்லாம் நிறைய பேர் வந்து விடுவதால், விரைவில் அரசு பொதுவிடுமுறையாக Undie party தினம் அறிவிக்கப்படலாம்.//

இதே அதகளம்தான் -

'சரோஜாதேவி', 'போட்டுத் தாக்கு', 'சன்னி லியோன்', 'பிட்டு பார்த்தது ஒரு குற்றமா?', 'இந்தக் காதலுக்கு எத்தனை கோணம்?', 'பிரதி ஞாயிறு 9.00 மணி முதல் 10.30 வரை', 'தன்வி வியாஸ்', 'No Bra day', 'உலகின் முதல் அஜால் குஜால் 3டி படம்', 'ஹோல்டன்', 'அமலாபால்', 'நடுநிசி அழகிகள்', 'The Dirty Picture', 'இரண்டு முக்கிய செய்திகள்', 'தோழர் ஷகீலா', 'irony', 'பெண் ஏன் அழகாக இருக்கிறாள்?', 'அநாகரிகம்', 'நமீதா இட்லி ரெடி', 'சிலுக்கலூர்பேட்டை!', 'Hisss', 'என் கூட விளையாடேன்!', 'நிக்கி லீ!', 'அஜால் குஜால் டிவி', 'அடிக்கடி தொலையும் 'அந்த' மேட்டர்!', 'நல்லசிவம் செத்துட்டான் சதாசிவம் பொழைச்சிட்டான்!', 'முதல் பாவம்', 'மீசை!', 'ஷகீரா!', 'காண்டம்... காண்டம்...', 'ஒன்பது - ஒன்பது - ஒன்பது', 'ஆன்மீகம்', 'மிஸ் கிளாமர் வேர்ல்டு', 'வாணிகபூர்', 'எங்க சின்ன ராசா', 'கிராவிட்டி', 'தியேட்டர்லோ நல்குரு (தெலுங்கு)', 'கலகலப்பு', 'ஒரு கல் ஒரு கண்ணாடி', 'காஜல் அகர்வால்'

ஆகிய கட்டுரைகளிலும்.

மொத்தத்தில் பாலியல் சார்ந்த விவகாரங்களை அங்கதத்துடன் அனைத்து கட்டுரைகளிலும் யுவ கிருஷ்ணா பதிவு செய்திருக்கிறார். ஒருவகையில் இது நம் மரபின் நீட்சிதான். எப்படி கூத்துக்கலையில் கட்டியங்காரன் தீடீரென்று தோன்றி ஒரு சொல் அல்லது வாக்கியம் வழியாக ஆதிக்கத்தை கேள்வி கேட்டு நக்கல் செய்வானோ -

அப்படித்தான் இந்த நூல் முழுவதும் நையாண்டியுடன் இன்றைய உலகை எதிர்கொண்டிருக்கிறார்.

அதாவது, இந்தியாவில் உலகமயமாக்கல் அறிமுப்படுத்தப்பட்ட பிறகு பிறந்தவர்களின் உலகப் பார்வையை புரிந்து கொள்ள உதவியிருக்கிறார்.

சொல்வதற்கில்லை நாளை எழுத வரும் எழுத்தாளனுக்கு கோனார் நோட்ஸாக இந்த நூல் அமையலாம். அதனாலேயே இந்த பதிவுக்கு தலைப்பாக 'கோணல் பக்கங்கள் வெர்ஷன் 2015' என பெயர் வைத்திருக்கிறேன்.

வாழ்த்துகள் யுவ கிருஷ்ணா, நாளைய வாசகர்களையும், எழுத்தாளர்களையும் உருவாக்கப் போவதற்கு.

நூல் : சரோஜா தேவி,
வெளியீடு : உயிர்மை பதிப்பகம்
விலை : ரூ.100 / -

ஜனவரி 3, 2015 அன்று மாலை 5.30 மணிக்கு இந்த நூல் வெளியிடப்படுகிறது. இடம் : சென்னை புக்பாயிண்ட் அரங்கம்.



ஆன்லைன் மூலமாக நூலினை வாங்க...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக