5 ஜனவரி, 2015

சுதந்திரக்கலவி தமிழகக்கலையா?

நம்முடைய முந்தையப் பதிவான ‘ஓவர் முற்போக்கு ஒடம்புக்கு நல்லதல்ல’ கட்டுரைக்கு நண்பர் ராஜன்குறை ஃபேஸ்புக்கில் எதிர்வினை ஆற்றி இருக்கிறார். அவருக்கு கிடைத்த அதிர்ச்சி நமக்கு கிடைக்கவில்லை.

ஏனெனில் முழுக்க மேற்கத்திய வாழ்க்கைமுறைக்கும், சிந்தனைகளுக்கும் முழுக்க ஆட்பட்டுவிட்ட ராஜன்குறைக்கு ‘சுதந்திரக் கலவி’ (நன்றி : பெருந்தேவி) மாதிரியான கலாச்சாரம் சாதாரணமானதாகவும், கேளிக்கைக்கு உரியதாகவும் தெரிவதில் ஆச்சரியம் ஏதுமில்லை. தமிழகத்தில் வாழும் சராசரி நடுத்தரனான நாம் இன்னும் அந்தளவுக்கு பக்குவப்படவில்லை.

நாம் மிகவும் மதிக்கும் மானுடவியல் அறிஞர் பேராசிரியர் ராஜன்குறை. போலவே பெருமாள் முருகனும் நமக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்தான். எனவே இந்தப் பதிவையோ, முந்தையப் பதிவையோ இவர்களுக்கு எதிரான விரோதமான மனநிலையில் எழுதியதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. இந்த இரு பதிவுகளுமே ‘மாதொரு பாகன்’ குறித்த சர்ச்சைக்கு மட்டுமே உரித்தானது.

ராஜன்குறையின் அதே ஃபேஸ்புக் திரியில் நண்பரும் அறிவுஜீவி என்று அவரை அவரே நம்பிக் கொண்டிருப்பவருமான ரோஸாவசந்த் எழுதியிருக்கும் பின்னூட்டமும் ஆச்சரியப்படுத்தவில்லை. ஏனெனில் உலகில் தனக்கு மட்டுமே அறிவு என்கிற ஆற்றல் இருப்பதாக நம்பிக் கொண்டிருப்பவர் இப்படிதான் பின்னூட்டமிட முடியும். ‘ஸ்டேண்ட்’ என்பதை நண்பர் ரோஸாவஸந்த் ‘பஸ் ஸ்டேண்ட்’ என்பதாக புரிந்துக் கொண்டிருக்கிறார். சூழல்தான் ஒருவனது நிலைப்பாட்டை தீர்மானிக்கும். நிலைப்பாடு அவ்வப்போது மாற்றத்துக்குறிய ஒன்று என்பதை பெரியாரை வாசித்தாலே புரிந்துக்கொள்ள முடியும். மாற்றிக்கொள்ளும் நிலைப்பாட்டுக்கு ஒருவன் தரும் ஜஸ்டிஃபிகேஷன்தான் அதை ஏற்றுக்கொள்ள வேண்டுமா நிராகரிக்க வேண்டுமா என்பதை முடிவு செய்யும். இளையராஜாவின் இசையை கேட்டு ரசித்து ட்விட்டு போடுவதுதான் தமிழ் அறிவியக்க செயல்பாட்டின் உச்சக்கட்டமான நடவடிக்கை என்று நம்பிக்கொண்டிருக்கும், லிங்கா கட்டவுட்டுக்கு பால் ஊற்றும் ரஜினிரசிக மனப்பான்மைக்கு இணையான மனோபாவம் கொண்ட ரோசாவிடம் இதையெல்லாம் விவாதிக்க முடியாது. பிழைப்புக்கு போராளியாகவும், சந்தர்ப்பவசத்தால் இலக்கியவாதியாகவும் ஆகிவிட்ட சிலர் ரோசாவுக்கு ‘லைக்’ போட்டிருக்கிறார்கள். அவர்களுடைய நிர்ப்பந்தத்தையும் புரிந்துக்கொள்ள முடிகிறது.

ஓக்கே. பேராசிரியர் ராஜன்குறைக்கு வருவோம்.

“வாய்மொழி வரலாறு என்பதை அங்கீகரிக்கப்பட்ட அறிவுத்துறை என்று யுவகிருஷ்ணா ஒப்புக்கொள்ள வேண்டும்” என்று அன்புடன் அறிவுறுத்துகிறார்.

மானுடவியல் அறிஞர் ஒருவர் இவ்வாறு பேசுவதைவிட அபத்தமான விஷயம் வேறில்லை. எந்தெந்த வாய்மொழி தகவல்கள் வரலாறாக அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன என்பதற்கான சான்றுகளை ராஜன்குறை தரவேண்டும். இன்று செய்திகளுக்கே ஆதாரம் கேட்கப்படும் சூழலில், வரலாற்றுக்கு மறுக்கமுடியாத ஆதாரங்கள் தேவை. ஆவணரீதியிலான தரவுகள் நிறைந்திருக்கும் வரலாற்றுத் தகவல்களையே கேள்விக்குள்ளாக்கக்கூடிய இன்றைய சூழலில் இப்படிப்பட்ட கருத்தை ஒரு பேராசிரியர் முன்வைப்பது துரதிருஷ்டவசமானது. நிறைய தரவுகள் நிறைந்த ‘திராவிட இனம்’ என்கிற கருத்தாக்கத்தையே வரலாற்றின் மாறுபட்ட வேறு தகவல்கள் மற்றும் அறிவியல் அடிப்படையில் இன்று மறுப்பவர்களோடு நாம் உரையாடிக் கொண்டிருக்கிறோம். நரசிம்ம பல்லவன் வாதாபியை கொளுத்தினானா, சாளுக்கியனை வென்றானா என்பதற்கே இருவேறு வரலாறு இருக்கிறது. இரண்டுக்குமே அசைக்கமுடியாத கல்வெட்டு ஆதாரங்களும் இருக்கின்றன.

நிலைமை இப்படியிருக்கையில்-

‘மாதொருபாகன்’ நூலில் சித்தரிக்கப்பட்டிருப்பதைப் போன்ற வாய்மொழி வரலாற்றினை எப்படி ஒப்புக்கொள்ள முடியும்?

‘ரஜினிக்கும் கமலுக்கும் சண்டை… அதனாலே’ என்று ராகத்தோடு பாடப்படும் (இப்போது விஜய்க்கும் அஜித்துக்கும் சண்டை என்று பரிணாமம் பெற்றுவிட்டது) வாய்மொழித் தகவல்களையும் வரலாற்றாக்கி விடலாமா. கிசுகிசு வரலாறு ஆகுமா. லட்சுமிகாந்தனும், கயிலைமன்னனும் பரப்பியதெல்லாம் வரலாறா?

தமிழ்நாட்டிலும் carnival உண்டு. ராஜன்குறை மொழியில் ‘வரம்பு மீறுவது’ ஆங்காங்கே ஒருசில மனிதர்களிடம் நடைபெற்றிருக்கலாம். நடைபெறுகிறது. இது individual ஆன விஷயம். ஆனால், ஒட்டுமொத்த திருச்செங்கோடுவாழ் சமூகமே ‘சுதந்திர கலவி’ திருவிழாவில் கலந்துக் கொண்டார்களா. நடந்திருந்தால் அது பிள்ளைப்பேறு இல்லாத மகளிருக்காக நடத்தப்பட்டதா என்பதுதான் இங்கே சர்ச்சைக்குரிய விஷயம். அப்படி இதற்கு ஆதாரமில்லாத பட்சத்தில் அவ்வாறு சித்தரிக்கப்பட்டிருப்பது திருச்செங்கோட்டுக்காரர்களை புண்படுத்தும் என்பது இயல்பானதுதான்.

எழுபதுகளின் துவக்கம் வரை சகஜமாக ‘சுதந்திர கலவி’ நடைபெற்றிருப்பதாக ராஜன்குறை அறிந்திருப்பதாக சொல்கிறார். ராஜன்குறை மட்டுமல்ல. நிறைய பேர் இப்படிப்பட்ட திருவிழாக்களை கண்களில் கனவு மின்ன ஆர்வத்தோடு சொல்கிறார்கள். இவர்களில் யாரேனும் அப்படிப்பட்ட திருவிழாக்களில் கலந்துக்கொண்டது உண்டா என்று கேட்டால், ‘கேள்விப்பட்டேன்’, ‘நண்பர் சொன்னார்’ ரீதியில்தான் சொல்கிறார்கள். கடந்த நூறாண்டுகளில் தமிழகத்தில் நடந்த பெரும்பாலான சம்பவங்கள் அனைத்தையும் ஊடகங்கள் பதிவு செய்திருக்கின்றன. இப்படிப்பட்ட திருவிழா ஒன்றினை ஏதேனும் ஊடகம் ‘லைவ் ரிப்போர்ட்டாக’ பதிவு செய்திருக்கிறதா என்று அறியவிரும்புகிறேன். ஏனெனில் ஊடகங்களுக்கு ‘ஹாட்கேக்’ ஆன மேட்டர் இதுவென்பதை, ஊடகத்தில் பணிபுரிபவனாக உணருகிறேன்.

அடுத்து,

“புனைவு என்பதை உண்மை என்பதாக புரிந்துகொண்டுவிடுவார்கள் என்பதற்காக புனைவுகளில் எல்லோருக்கும் மகிழ்ச்சியளிக்கும் விதமாகத்தான் எழுதவேண்டும் என்றெல்லாம் நிர்ப்பந்திக்கமுடியாது. இதையெல்லாம் விட முக்கியமான பிரச்சினை அப்படி என்ன கொலைகுற்றத்தையா பெருமாள் முருகன் எழுதிவிட்டார்?” என்கிற அதிமுக்கியமான கேள்வியை எழுப்பியிருக்கிறார் ராஜன்குறை.

புனைவுகளில் மகிழ்ச்சியளிக்கக்கூடிய விதத்தில் எல்லா நேரத்திலும் எழுதமுடியாதுதான். அப்படி யாரும் யாரையும் நிர்ப்பந்திக்கவும் முடியாதுதான். ஆனால் ராஜன்குறையின் இந்த ஸ்டேட்டஸுக்கு ‘லைக்’ போட்ட 100+ பேர்களை குறிப்பாக தொடர்புபடுத்தி, இம்மாதிரி புனைவு எழுதினால் அவர்கள் நூலை எரிப்பார்களா அல்லது கட்டிப்பிடித்து கொஞ்சி கருத்து சுதந்திரம் பேசுவார்களா?

யார் வேண்டுமானாலும் எதைப்பற்றி வேண்டுமானாலும் யாரைப்பற்றி வேண்டுமானாலும் எழுதிவிட்டு போகலாம் என்பதையெல்லாம் கருத்துச் சுதந்திரம் என்று பார்க்கமுடியாது. என்னுடைய கருத்துச் சுதந்திரத்தின் வரம்பளவு உங்களுடைய மூக்கின் அரை இஞ்சுக்கு முன்னால் முடிந்துவிடுகிறது அல்லவா. அப்படியில்லை. கருத்துவேறுபாடு கொண்டவரின் மூக்கை உடைப்பேன் என்றெல்லாம் விதண்டாவாதம் பேசினால் எந்த விவாதத்தையுமே நாம் நடத்த முடியாது.

ஒரு சமூகம் நல்லிணக்கத்தோடு சமதர்ம சமூகமாய் செயல்பட வேண்டியதின் அவசியத்தை உணர்ந்திருப்பது எவரையும் விட ஒரு படைப்பாளிக்கு அவசியமான அம்சமாகும். ஏனெனில் கலை என்பது மக்களை கரைசேர்க்கக்கூடிய கலங்கரை விளக்கம் என்கிற நம்பிக்கை மனித சமுதாயத்துக்கு இருக்கிறது. அவசியமற்ற கலகத்தை உருவாக்குவது படைப்பாளியின் பணியா?

புனைவு என்கிற கருத்துச் சுதந்திரம் பெருமாள் முருகனுக்கு மட்டுமா இருக்கிறது. இதே சுதந்திரத்தை ராஜன்குறை கனவிலும் எதிர்க்கும் இந்துத்துவர்களோ அல்லது வேறேதேனும் பிற்போக்குச் சக்திகளோ பயன்படுத்தினால் அதையும் அனுமதித்துவிடலாமா. மனு எதையோ எழுதிவிட்டு போய்விட்டான். அவனுடைய கருத்துச் சுதந்திரத்துக்கு நம்மால் அப்படியே மதிப்பளிக்க முடிகிறதா. கொளுத்துகிறோம் இல்லையா. நாளை ராஜன்குறையை சித்தரித்து அவதூறான புனைவு எழுதப்படுமேயானால் அதையும் அப்படியே அனுமதித்துவிடலாமா? அறிஞர் அண்ணா எழுதிய ‘தீ பரவட்டும்’ நூலை இங்கே பேராசிரியருக்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன்.

ராஜன்குறைக்கு புரிகிறமாதிரி ஒரு சம்பவத்தை இங்கே எடுத்துச் சொல்கிறேன்.

அடிக்கடி சாருநிவேதிதா எழுதுவார். ‘ரெண்டாம் ஆட்டம்’ என்கிற அவருடைய மகத்தான நாடகத்தை நடத்தவிடாமல் மதுரையில் வன்முறை செய்தார்கள் என்று. புதிதாக அதை வாசிக்கும் வாசகர்களுக்கு கருத்துச் சுதந்திர உணர்வு பீறிட்டு எழும். ஆனால், தடுத்தவர்களும் முற்போக்காளர்களே, கருத்துச் சுதந்திரம் பேசுபவர்களே என்கிற உண்மை அப்படியே ‘வரலாற்றில்’ அமுங்கிவிட்டது. அவர்கள் ஏன் தடுத்தார்கள் என்பதற்கான நியாயமும், காரணமும் யாராலும் பரிசீலிக்க முடியாவண்ணம் மறைக்கப்பட்டு விட்டது.

வேறொன்றுமில்லை. எல்லாவற்றுக்கும் ‘இடம், பொருள், ஏவல்’ உண்டு என்பதுதான் emphasis செய்து இங்கே குறிப்பிட வேண்டிய விஷயம்.

பெருமாள் முருகன் வெறும் புனைவாக மட்டுமே இதை முன்வைக்கிறார் என்கிற வாதத்தை நிறையபேர் பேசுகிறார்கள். திருச்செங்கோடு என்பதை திருச்செங்காடு என்றும் அவர் புனைந்துவிட்டிருந்தால் பிரச்சினை எழ என்ன வாய்ப்பு இருந்திருக்கும்?

ஆனால் அவரால் அப்படி செய்திருக்க முடியாது. ஏனெனில் பெங்களூரைச் சேர்ந்த ‘கலைகளுக்கான இந்திய மையம்’ – IFA (ரத்தன் டாட்டா அறக்கட்டளையின் ஓர் அங்கம்) நிறுவனத்துக்கு விண்ணப்பித்து, அவர்களது உதவியோடு (வேறென்ன பண உதவிதான்) ‘கள ஆய்வு’ மேற்கொண்டு, அதன் அடிப்படையில் இந்த நூலை பெருமாள் முருகன் எழுதியிருக்கிறார். எனவே ‘சுதந்திரக் கலவி’ என்பது ‘தமிழகக்கலைகள்’ என்றுதான் டாட்டா அறக்கட்டளையின் ஆவணங்களில் வரலாறாக –அதுவும் திருச்செங்கோட்டின் கலையாக- பதிவாகப் போகிறது. அப்படியிருக்க இதை வெறுமனே புனைவு, கருத்துச்சுதந்திரம் அளவுகளுக்குள் எப்படி அறிவுஜீவிகளும் சுருக்குகிறார்கள் என்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது. சுதந்திரக் கலவியை தமிழகக்கலை என்று ஏற்றுக்கொள்ள ராஜன்குறைக்கும், அவருடைய திரியில் பின்னூட்டமிட்டிருக்கும் பெருந்தேவிக்கும் மனத்தடங்கல் இருக்காது என்று அவர்களது கருத்துகளில் தெரிகிறது. ஆனால் ‘லைக்’ போட்ட, ‘கமெண்ட்’ போட்ட மற்ற தமிழர்களும் இதை ஒப்புக்கொள்கிறார்களா என்பதைதான் அறிய விரும்புகிறேன்.

“இதை எதற்காக பெண்ணியவாதிகள் எதிர்க்கவேண்டும் என்று நினைக்கிறார் என்றும் புரியவில்லை” என்று பேராசிரியர் ஐயம் எழுப்புகிறார்.

இதுதொடர்பான என்னுடைய பதிவிலேயே திருச்செங்கோட்டை சேர்ந்த பெண் ஒருவர் பின்னூட்டம் இட்டிருக்கிறார். ராஜன் அதை வாசிக்கும்போது ஓரளவுக்கு அவருக்கு நிலவரம் புரிபடலாம்.

அந்தப் பின்னூட்டம் இதுதான் :

“இந்த நாவலை படித்தேன், ஒரு சில பக்கங்களை படித்தவுடன் மிகவும் அபத்தமாக தோன்றியது, நானும் திருச்செங்கோட்டில் பிறந்தவள் என்பதால் அல்ல ஒரு பெண் என்பதால் அதுவும் (being a late child of my parents), என் அம்மா சொல்லி கேட்டிருக்கிறேன் குழந்தை பிறக்காதவர்களை இந்த சமூகம் எவ்வளவு மோசமக நடத்தும் என்று. ஒரு மாசம் முன்னாடி தான் எனக்கு கல்யாணம் முடிவு செய்தார்கள், இந்த எதிர்ப்பு பக்கத்தை பர்த்துவிட்டு அவர் கேட்டார் நீ கூட Late child தானே என்று கேட்டார் (because he is from chennai and he have no idea about my native, just see how much impact its creating for the people who didnt have idea of that place, may be author just taken this place to tell somthing but its affecting the people who are living there), விளையாட்டாக தான் கேட்டார் என்றாலும் எவ்வளவு அபத்தாமான கருத்தை இந்த எழுத்தாளார் மனதில் பதிக்கிறார் அவருடைய பொண்ன இப்படி யாரவது கேட்டிருந்தால் அவருக்கு எப்படி இருந்திருக்கும்.
என் பாட்டி சொன்னாங்க அந்த ஊர் அப்படி பட்ட ஊர் என்றால் எப்படி என் மகளை கல்யாணம் கட்டி கொடுத்திருப்பேன் என்று (சிந்திக்கபட வேண்டிய ஒன்று தான் இவர் சொல்வது போல இப்படி ஒன்று வழக்கத்தில் இருந்திருந்தால் எப்படி பெண் கொடுத்திருப்பார்கள்).

எழுத்து சுதந்திரம் மதிக்கபடவேண்டிய ஒன்று தான் ஆனால் அது அடுத்தவர்களைக் காயப்படுத்தாதவரை.

திரு பெருமாள் முருகன் அவர்களுக்கு ஒருவேளை குழந்தை இல்லாமலோ அல்லது ரொம்ப நாள் கழித்து குழந்தை பிறந்திருந்தால் இப்படி எழுதியிருக்க தோன்றியிருக்காது காரணம் இவர் மனைவியயும் இழிவு படுத்தபட்டிருப்பார் அல்லவா.

இதுக்கு எதிர்ப்பு இப்ப வருவதர்க்கு என்ன காரணம் என்று தெரியவில்லை ரொம்ப முன்னாடியே எதிர்க்கபட்டிருக்க வேண்டிய புத்தகம். என்ன மாதிரி ஒவ்வொருவரையும் ரொம்ப கஷ்டபடுத்திய புத்தகம்.

என் ப்ளாக்ல கூட என்னால இத எழுத முடியல, சில வக்கிர மனங்கள் எப்படி இத யோசிக்கும் என்று தெரிந்ததால். பெயர கூட சொல்லாமால் இதை இங்கு பகிர்கிறேன். இந்த புத்தகத்துக்கு support பண்றவங்க எங்க மன நிலையை யோசித்து பாருங்க.”


தாமதமான பிள்ளைப்பேறு அல்லது பிள்ளைப்பேறு இன்மை போன்ற சமூகப் பிரச்சினைகளில் தமிழகப் பெண்கள் எதிர்கொள்ள நேரிடும் கேள்விகளைக் குறித்து மானுடவியல் அறிஞரான ராஜன்குறை களஆய்வு செய்யவேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.

பின்னூட்டமிட்ட சகோதரியின் உணர்வை என்னாலோ, ராஜன்குறையாலோ முழுமையாக உள்வாங்கிக் கொள்ள முடியாது. ஏனெனில் நாங்கள் இருவரும் ஜஸ்ட் ஆண்கள். அதிலும் ராஜன் அறிவுஜீவி வேறு. பெண்ணாகவோ அல்லது குறைந்தபட்சம் அர்த்தநாரீஸ்வரராக இருந்தாலாவது அந்த பெண்ணின் வலியை உணரமுடியும்.

ராஜனின் பதிவில் பிரச்சினைக்கு தொடர்பில்லாமல் ஒரு வரி துருத்திக்கொண்டு நிற்கிறது.

“நவீன கால காம இயந்திரங்களில் மாட்டிக்கொண்டு சரோஜோ தேவி எழுதிக்கொண்டிருக்கும் இந்த இளைஞருக்கு கடந்த காலம் புரியாமல் போவதில் வியப்பில்லை”

ஒன்றுமில்லை. பேராசிரியர் நம்மை இடுப்புக்குக் கீழே அடிக்கிறாராம். ஒரு பெண்ணோட வலி இன்னொரு பெண்ணுக்குதான் தெரியும் என்பதைப் போல, ஒரு பேராசிரியரின் வலி இன்னொரு பேராசிரியருக்கு தெரிகிறது. ‘எங்களையெல்லாம் நோண்டுனா என்னாகும் தெரியுமில்லே?’ என்கிற அறிவுஜீவித்தனமான மிரட்டல் இது.

ஒண்ணும் ஆகாது சார்.
‘சரோஜாதேவி’ என்பது செய்திகள், சம்பவங்கள், கட்டுரைகள், கதைகள் வழியாக சுவாரஸ்யமான பாலியல் வெகுஜன வாசிப்பைக் கோரும் நூல். அதனுடைய target audienceஐ அது சரியாகவே திருப்திபடுத்துகிறது. எல்லாரும் சரோஜாதேவி எழுத்துகளை எழுதிவிட்டு உன்னத இலக்கிய அந்தஸ்து கோருகிறார்கள். நான் மிக சாதாரணமாக எழுதிய எழுத்துகளையே ‘சரோஜாதேவி’ என்று டைட்டிலிட்டிருக்கிறேன். அவ்வளவுதான்.

சுவாரஸ்யத்துக்கும் உங்களுக்கும் சற்றும் சம்பந்தமில்லை என்பதால், இது நிச்சயமாக உங்களோட cup of tea கிடையாது. எனவே நான் எழுதியிருக்கிறேன் என்கிற ஒரே காரணத்துக்காக உங்களிடம் கொடுத்து படிக்கச் சொல்லி சித்திரவதை எல்லாம் செய்யமாட்டேன். ஆனால் என்ன, ஏதுவென்று தெரியாத ஒரு விஷயத்துக்கு, நீங்கள் படிக்காத ஒரு புத்தகத்தை, உங்களுடைய குறிப்பிட்ட ஒரு கருத்துக்கு மாறுபாடாக இருப்பவனை இழிவுசெய்ய பயன்படுத்தும் ஆயுதமாக பயன்படுத்துகிறீர்கள். நீங்கள்தான் இதுபோன்ற விஷயங்களில் ஜெயமோகனை கண்டிக்கிறீர்கள். ஜெயமோகனை கண்டிப்பவர்களிடம் ஜெயமோகனைவிட பன்மடங்கு ஜெயமோகத்தனம் இருக்கிறது என்பதற்கு நீங்களே நல்ல உதாரணமாகி விட்டீர்கள். நன்றி. Intellectuals என்று அறியப்படுபவர்கள் தேவை ஏற்படும்போது, சாதாரணர்கள் என்று அவர்கள் கருதக்கூடியவர்களை எப்படி அறிவுத்தீண்டாமையோடு நடத்துவார்கள் என்பதை ஏற்கனவே அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன். சாதி, மதத்தின் பெயரால் நடப்பது பார்ப்பனீயம் என்றால்.. அறிவின் பெயரால் நடக்கும் இந்த கருத்து வன்முறைக்கு என்ன பெயர் வைப்பது?

கடைசியாக…

என்னுடைய பதிவில் பேசப்பட்ட மாதொருபாகனுக்கான ‘விளம்பர அரசியலை’ கவனமாக தவிர்த்தே பேராசிரியர் பேசியிருக்கிறார்.

ஏனெனில்…

அவருக்கே தெரியும். நடந்தது நல்ல நாடகம். ‘ஆலவாயன்’, ‘அர்த்தநாரீஸ்வரர்’ வெளியான நாளில் ஹிந்து, தினமலர் பத்திரிகைகள் கொடுத்த முன்னோட்ட விளம்பரங்கள் இதற்கு நல்ல ஆதாரம்.

இந்த நாடகத்தில் கருத்துரிமைப் போராளிகள் அத்தனை பேரும் கோமாளிகளாகி விட்டார்கள். நாடகத்தை நடத்தியவர் அடக்கமாட்டாமல் சிரித்துக் கொண்டிருப்பார். அதை மறைக்க அல்லது திசைதிருப்ப இப்படிதான் ஏதாவது புள்ளைப்பூச்சியை போட்டு அடித்துக் கொண்டிருப்பார்கள். அல்லது சரக்கடித்துதான் இந்த அவலத்தை மறந்தாக வேண்டும்.

தட்ஸ் ஆல்.

15 கருத்துகள்:

  1. நல்லா அலசியிருக்கீங்க....!

    பதிலளிநீக்கு
  2. பெருமாள் முருகன் ஒரு நல்ல எழுத்தாளர் என்ற எண்ணம் எனக்குண்டு. பழங்கால திரைபடங்களில் க்ளாமருக்காக வைக்கப்பெரும் துண்டுக்காட்சிகளைப்போல் எழுத்துக்கிடையே தண்ணீரில் விட்ட குசு என்று அவர் எழுதிய போதே நீங்கள் ஒரு கல்லூரி ஆசிரியன் என்பதை நினைவில் கொண்டு எழுதுங்கள் என்று பின்னூட்டம் இட்டேன்..
    சாருவை நல்ல எழுத்தாளர்களோடு இணைத்து பேசுவதை இதனாலேயே தவிர்ப்பவன் நான். தான்பிறந்த இனத்தையே அடையாளமிட்டு ( தெரு ஊர் பெயர் சொல்லி ) இத்தனை இழிவாக பேசுகின்ற ஒரு எழுத்தை எப்படி இத்தனைபேர் தூக்கிப்பிடிக்கிறார்கள் இவர்கள் ஆராதிக்கும் நாபாவோ அகிலனோ ஜெயகாந்தனோ இப்படியா எழுதினார்கள்.
    ப்போமே எழுத்தாளன் ஒரு புனைவை எழுதும் முன் தன்னையும் மையப்படுத்திப்பார்த்துக்கொண்டால் இப்படியெல்லாம் எழுத மனம் வருமா. மிகப்பெரிய ஒரு புனைவில் இதுபோன்ற ச்ச்சரவுகள் இல்லாமற் போனால் அந்த எழுத்துக்குவியலே சரிந்தாபோய்விடும்.
    உங்கள் பதிவு நல்ல பதிவு..
    அடுத்து ..
    ஒருகாலத்தில் மஞ்சள் எழுத்துகளாக பேசப்பட்ட சரோஜாதேவி என்ற இந்த்த் தலைப்பு உங்களுக்கு தேவைதானா. இது உங்களை எங்கு கொண்டு சேர்க்கும். யோசித்தீர்களா யுவா.
    வில்லவன் கோதை

    பதிலளிநீக்கு
  3. Meanwhile in comments section

    Rajayogan Perumal: உங்கள் தாய் அல்லது மனைவி வசிக்கும் தெரு பெயரை குறிப்பிட்டு அது போல் எழுதியிருந்தார் என்றால் ?

    Rajan Kurai Krishnan: எழுதினால் என்ன பிரச்சினை? ஒருவனுக்கு ஒருத்தி போன்ற காட்டுமிராண்டி சிந்தனைகளை வைத்து பண்பாடுகளை அளக்காதீர்கள். பக்குவமற்ற, முதிர்ச்சியற்ற, பண்பாடற்ற ஆண்மனமே பெண்களுக்கு கற்பை போதிக்கிறது.

    Rajayogan Perumal: ஹா ஹா எது காட்டுமிராண்டித்தனம்? காடுகளில் வாழ்ந்தபோது மனிதன் பயன்படுத்திய வாழ்க்கை முறை தான் காட்டுமிராண்டித்தனம், காடுகளில் வாழும், வாழ்ந்த மிருகங்களும், மனிதர்களும் ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்ந்தார்களா? இல்லை நீங்கள் கூறுகிறபடி வாழ்ந்தார்களா? என்று அறிவை உபயோகபடுத்தி சிந்தித்தால் உண்மை புரியும்.

    Rajan Kurai Krishnan: ?????

    பதிலளிநீக்கு
  4. யுவா மிக சரியான வாதம் , இவர்கள் எல்லோருக்கும் இலக்கியவாதி அல்லது எழுத்தாளர் என்ற அடையாளமும் அதன் மூலம் கிடைக்கும் பலன்கள் (பணம்,அடிவருட பெரிய ஆட்கள் ...) மட்டுமே முக்கியம் . நாளை யாரோ ஒருவர் திருசெங்கோடில் இருந்து இவர்கள் பெயரை உபயோகித்து ஒரு பொய்யான அசிங்கமான விசயத்தை புத்தகமாக போட்டால் மட்டுமே இதன் வலி புரியும்

    பதிலளிநீக்கு
  5. கருப்பு,மாநிறம்,சிவப்பு,வ்வேல்லை,கூர் மூக்கு,சப்பை மூக்கு,தட்டை மூக்கு.வித விதமான உயரங்கள் என ஒவ்வொரு குடும்பமுமே பண்டைய கால பாலியல் பற்றிய ஆதாரங்கள் தான்.

    கடந்த பல நூறு வருடங்களாக குறிப்பிட்ட நான்கு கிராமங்களை தவிர்த்து வேறு எங்கும் மண உறவு கொள்ளாத,பணிக்காக வெளியில் சென்று வாழ்ந்து திரும்பி வந்தவர் இல்லாத மக்களிடம் இருந்து எடுக்கப்பட்ட மரபணுக்கள் கூட தனி தன்மையோடு இல்லை எனபது தான் முகத்தில் அறையும் உண்மை.

    பல தார மனம்,தொடுப்பு,கள்ள தொடர்புகள் ஆணுக்கு உண்டு என்பதை எளிதாக ஏற்று கொள்ளும் மனம் பெண்களுக்கு திருமணதிற்கு வெளியில் தொடர்பு கொள்ளும் வழக்கங்கள் இருந்தன என்பதை வெறித்தனமாக எதிர்ப்பது விந்தை தான்

    இன்று விஞ்ஞான வளர்ச்சியில் செயற்கை கருத்தரிப்பில் பல வகை கருத்தரிப்புகள் உண்டு. எங்களுக்கு குழந்தை வேண்டும் என்று பல லட்சங்கள் செலவு செய்து மாநிலம் மாநிலமாக ,பல்வேறு நாடுகளுக்கு சென்று சிகிச்சை எடுத்து கொள்பவர்களை(அவர்கள் எண்ணிக்கை குறைவு கிடையாது) பார்த்தால் குழந்தை பேற்றிற்காக எந்த அளவிற்கு போவார்கள் என்பதை அறியலாம்.

    கணவனின் விந்துகளில் குறைபாடுகள் இருந்தால் ,ஒப்புக்கு கணவனின் விந்துக்களோடு தானமாக விந்து வங்கியில் உள்ள விந்துகளை கலந்து செயர்க்கை கருத்தரிப்பு முயற்சிகள் நடப்பது இன்றுள்ள நடைமுறை.

    வடஇந்தியாவில் சாட்,பிஷ்னோய் மற்றும் பல சாதிகளில் வீரர்கள் உருவாக வேண்டும் என்று மன்னன் உத்தரவின் பேரில் வித்தியாசமான செருப்பு அணிந்த வலிமையான ஆண்களுக்கு எந்த பெண்ணோடும் கூடும் அனுமதி வழங்கப்பட்டது.வீட்டின் வெளியில் அந்த செருப்பை பார்த்தால் யாரும் உள்ளே போக கூடாது எனும் வழக்கம் இருந்தது. வலிமை குன்றும் நிலையில் சிறப்பு செருப்பு ஆண்கள் கொல்லப்பட்டு விடுவார்கள்.இன்று இதை பற்றி எழுதினால் குறிப்பிட்ட சாதியினர் போராடுவதால் அந்த நிகழ்வுகள் பொய்யாகி விடுமா

    நாயர்களில் உள்ள நம்பூதிரிகளின் உதவியோடு குழந்தை பேறு பெறும் வழக்கம் பல புத்தகங்களாக வந்துள்ளது.wife stealing வழக்கம் உள்ள சாதிகளும் இந்தியா முழுக்க உண்டு. ஆண்ட சாதி என்று குதிக்கும் க்ஷற்றியர்களில் தான் அது அதிகம்.

    ஆதாரங்களை தேடி பார்த்தால் அவை கொட்டி கிடக்கின்றன

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைகளை எடுத்துச் சொன்னதற்கு நன்றி பூவண்ணன் கணபதி !

      நீக்கு
  6. சரோஜா தேவி என்ற தலைப்பை படித்ததும் உள்ளடக்கம் பற்றிய கருத்து வேறாகத்தான் இருந்து. கட்டுரைகளின் தொகுப்பு என்பதை பிரபரகரனின் பதிவு மூலம் அறிந்தேன்.

    மாதொருபாகன்- வரலாறு எப்படி இருந்தாலும் தற்போது வசிப்பவருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்துவதால் கிடைக்கும் பயன் என்ன?அந்த வழக்கங்கள் உண்மையாகவே இருந்தாலும் அதைப் பதிவு செய்து என்ன ஆகப் போகிறது. மனக் கசப்பை வளர்ப்பதைத் தவிர

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெயரில்லா12:11 AM, ஜனவரி 25, 2015

      கள ஆய்வு பணம் வாங்கிட்டு, பிரச்னை இல்லாம எழுத முடியாது.

      நீக்கு
  7. பெயரில்லா1:05 PM, ஜனவரி 07, 2015

    யுவா, கொஞ்சம் மனசாட்சியோடு எழுதுங்க. பெருமாள் முருகன் எழுதியது புனைவா, நிஜமா வேறு விஷயம். ஆனா பொருந்தா காமமும்,கள்ள உறவில் பிள்ளைகளும் எல்லா இடங்களிலும், எல்லா காலத்திலும், எல்லா சமுதாயத்திலும் உள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. நம்ம நாட்டில் செய்யலாம்,ஆனா வெளிய தெரிய கூடாது. யுவா, கொஞ்சம் மனசாட்சியோடு எழுதுங்க. பெருமாள் முருகன் எழுதியது புனைவா, நிஜமா வேறு விஷயம். ஆனா பொருந்தா காமமும்,கள்ள உறவில் பிள்ளைகளும் எல்லா இடங்களிலும், எல்லா காலத்திலும், எல்லா சமுதாயத்திலும் உள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. நம்ம நாட்டில் செய்யலாம்,ஆனா வெளிய தெரிய கூடாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது புனைவு என்றிருந்தால் பிரட்சினையே இல்லையே.

      நீக்கு
  8. பெயரில்லா3:07 PM, ஜனவரி 07, 2015

    ஜயமோகன், சாருவின் பிடிவாத குணம் இவருக்கு வந்து தொற்றிக்கொண்டது.

    அவர்கள் ஒரு கருத்தை முன்வைத்தால், அதை எவர் திருத்தினாலும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். பலசமயங்களில் அப்படி திருத்தவருபவர்களை ஆபாசச்சொற்களினால் பேசி அனுப்பிவிடுவார்கள்.

    இது ஒரு தேர்ந்த பத்திரிக்கையாளனுக்கோ, சிந்தனையாளனுக்கோ அழகன்று யுவா கிருஸ்ணா!

    வில்லவன் கோதைக்கும் உங்களுக்கும் யாதொரு வேறுபாடும் இல்லை. அவர் எதையும் மாற்றக்கூடாதென்கிறார். நீங்கள் எவர் மனமும் புண்படாதபடிதான் இலக்கியம் எழதப்படவேண்டும். இலக்கியக்கொலைகாரர்கள்.

    பதிலளிநீக்கு
  9. பெயரில்லா10:53 AM, ஜனவரி 13, 2015

    if anybody wants to degrade a community, they can degrade paappanars easily. then they can get the stamp as "forward thinking people". intellectual yuva krishna also will support it vehemently.
    why people should degrade other communities. it is wrong.

    பதிலளிநீக்கு
  10. பெயரில்லா2:48 PM, ஜனவரி 18, 2015

    பார்க்க...

    //இது போன்ற விசயங்களைப் பேசிக் கொண்டு வரும் போது, என்னுடன் பயணித்த நண்பர்கள் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஒரு குக்கிராமத்தை தம் சொந்த ஊராகக் கொண்டவர்கள். தம் ஊரில் முன்னர் நடந்து கொண்டிருந்த இருந்த ஒரு விஷயத்தைப் பற்றிச் சொன்னார்கள்.
    முன்பெல்லாம், அவர்களுடைய கிராமத்தில் மைனர் கவுண்டர் என்று ஒருவர் இருப்பார். வாரிசு இல்லாத பெருந்தனக்காரர்கள், தமது சொத்துக்களை அனுபவிப்பதற்காவது, ஒரு குழந்தை வேண்டுமென்பதற்காக, மைனர் கவுண்டரை வீட்டுக்கு விருந்துக்கு அழைப்பார்கள்.

    படத்துக்கு நன்றி – Arunachala Grace
    முன்கூட்டி முடிவு செய்த நாளில், இரவு நேரத்தில் குறிப்பிட்ட வீட்டிற்கு வில்லு வண்டியில் வருவார். சிறப்பு அசைவ விருந்து முடிந்ததும், தனியறையில் பால், பழவகைகள், முந்திரி, பிஸ்தா பருப்புகளுடன் முதலிரவு போல அலங்கரித்த படுக்கையில் அந்த வீட்டின் பெண்மணி காத்திருப்பார். அப்பெண்மணியுடன் கலவி முடித்து விடியும் முன் சென்று விடுவார்.
    கரு உருவாகும் வரை மைனர் கவுண்டர் அந்த வீட்டிற்கு குறிப்பிட்ட இடைவெளியில் வந்து சென்று கொண்டே இருப்பார். எந்த வீட்டிற்கு சென்று வந்தோம் என்பதை வெளியிலும் சொல்ல மாட்டார். பொலிகாளைகளாக மைனர்கள் முன்னர் இருந்தாலும், கருத்தரித்தலுக்கு விந்தணுக் கொடை அளித்திருக்கிறார்கள். இப்போது மைனர்களும் இல்லை. இந்த வழக்கமும் இல்லை.//

    பதிலளிநீக்கு
  11. பெயரில்லா12:10 AM, ஜனவரி 25, 2015

    அதே ஊர்ல இருந்து கொண்டு, ஆசிரியர் வேலை பாத்துட்டு எழுதற்கு எதுக்கு Tata,Ford கிட்டவும் பணம் வாங்கறார்.

    முற்போக்கு எழுத்தாளர்கள், சில விடயம் மட்டும் கருத்து சுதந்திரம் போனது போல பேசறாங்க. எல்லா விசயத்துக்கும் ஒரே மாதிரி ஆதரவு தெரிவிப்பது இல்லை. சமீபத்திய பாரிஸ் விடயம் உட்பட.

    பதிலளிநீக்கு
  12. சுதந்திரக் கலவி தமிழகப் பண்பாடு தான் : கள வொழுக்கம் சங்க இலக்கியங்களில் பேசப் பட்டது தானே. இந்த ஆரியர்கள் வந்த பின் தான் கற்பொழுக்கம் மட்டுமே நிலைத்தது என்று பதிவுகள் கண்டிருக்கிறேன். இதை குஷ்பூ சொன்னால் ஆட்டோ மற்றும் வழக்குகள் வரும். ஆகவே அனாமதேயமாகவே பின்னூட்டம் இருக்கட்டும்.

    பதிலளிநீக்கு