13 நவம்பர், 2013

பாட்ஷா

எண்பதுகளில் ஆட்டோ இளைஞர்களின் கனவு வாகனமாக இருந்தது. படித்துவிட்டோ அல்லது படிப்பில் கோட்டை விட்டோ திரிந்துக் கொண்டிருந்த இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு வரப்பிரசாதமாக ஆட்டோக்கள் அமைந்தன.

அப்போதெல்லாம் சாதாரணமாக காணக்கூடிய காட்சி இது.

“என்ன பண்ணுறே?”

“ஆட்டோ ஓட்டுறேன்” பதில் சொல்லும்போதே பெருமிதம் தென்படும். கேள்வி கேட்டவரும் பையன் பொறுப்பாதான் இருக்கான் என்று திருப்திப்படுவார்.

ஆட்டோ ஓட்டுபவர்களுக்கு நல்ல வருமானமும் கிடைத்து வந்தது. எங்கள் தெருமுக்கில் இருந்த ஒரு குடும்பம் காலம் காலமாக செயிண்ட் தாமஸ் மவுண்ட் ஸ்டேண்டில் குதிரைவண்டி வைத்திருந்தார்கள். மவுண்ட் டூ மடிப்பாக்கம் ட்ரிப்புக்கு நாற்பத்தி ஐந்து காசு கொடுத்து நானேகூட பயணித்திருக்கிறேன். அந்த குதிரைவண்டி குடும்பத்தில் வந்த இளைஞர் எண்பதுகளின் மத்தியில் ஆட்டோ ஓட்டத் தொடங்கினார். கொஞ்ச நாளிலேயே சொந்த ஆட்டோ. இன்னும் சில காலம் கழித்து ரெண்டு ஆட்டோ கூடுதலாக வாங்கி வாடகைக்கு விட்டார். வீடு கட்டினார். கல்யாணம் முடித்து செட்டில் ஆனார். இப்போது வேறெங்கோ இடம்பெயர்ந்து டிராவல்ஸ் நடத்தி, பங்களா கட்டி பக்காவாக செட்டில் ஆகிவிட்டதாக கேள்வி.

அப்போதைய ஆட்டோக்காரர்கள் பெரும்பாலும் சி.ஐ.டி.யூ தொழிற்சங்கத்தில் இருப்பார்கள். அவர்களது தம்பிகள் வேலையில்லாமல் இருந்தால் டி.ஒய்.எஃப்.ஐ.யாகவோ அல்லது படித்துக் கொண்டிருந்தால் எஸ்.எஃப்.ஐ.யாகவோ இருப்பார்கள். சென்னையில் எம்.எம்.டி.ஏ.காலனி மற்றும் புழுதிவாக்கம் மா.கம்யூ அலுவலகங்கள் (அதாவது கொஞ்சம் பெரிய சைஸ் அறை) நமக்கு பரிச்சயமானது இதுபோன்ற தோழர்களால்தான். பொதுவாகவே அந்த காலத்தில் நாம் பார்த்தவர்களில் நான்கில் ஒருவராவது கட்சி வேறுபாடுகளை தாண்டி இடதுசாரி சிந்தனை கொண்டவர்களாக இருந்தார்கள். எண்பத்தி ஒன்பது தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு தமிழகத்தின் இந்த பொதுவுடைமை போக்கும் முக்கியமான காரணமாக இருந்தது.

சி.ஐ.டி.யூ-வுக்கு அடுத்தபடியாக ஆட்டோக்காரர்களில் பெரும்பாலானோர் திமுகவின் தொ.மு.ச.காரர்களாக இருந்தார்கள். சி.ஐ.டி.யூ தோழர்களாக இருந்தவர்களும் கூட தீக்கதிர் படிப்பதற்குப் பதிலாக தினகரன் படிப்பார்கள். ‘யார்’ படத்தில் ரஜினிகாந்த் தினகரன் வாசித்ததுதான் இதற்கு காரணமாக இருந்திருக்கிறது. அக்காலக்கட்டத்து சினிமாக்களில் வரும் நாளிதழாக பெரும்பாலும் தினகரன் இருக்கும் அல்லது மக்கள்குரல் இருக்கும்.

அந்நாளைய ஆட்டோக்காரர்கள் தீவிரமான ஈழ ஆதரவாளர்கள். மத்திய அரசின் போக்குக்கு பெரும்பாலும் எதிரானவர்கள். எனவேதான் ஈழ ஆதரவுப் போராட்டங்களோ, பொதுப் பிரச்சினைகளுக்காக பாரத் பந்த் மாதிரி பெரிய வேலைநிறுத்தங்கள் நடந்தபோதோ நகரத்தை மொத்தமாக ஸ்தம்பிக்க வைத்தார்கள்.

அருமையாக கானா பாடுவார்கள். இளையராஜா ரசிகர்கள். பிரபு, ராம்கி மாதிரி அந்த காலத்து இளைய ஹீரோக்களின் தாக்கம் கொண்டவர்கள். எனவேதான் ஸ்டைலுக்காக கோடையிலும்கூட கழுத்தில் மஃப்ளர் சுற்றிக்கொண்டு ஆட்டோ ஓட்டினார்கள். காக்கி பேண்டும், கலர்ச்சட்டையுமாக டீக்கடைகளில் அரசியல் பேசிக்கொண்டிருப்பார்கள். சவாரி வந்துவிட்டால் வண்டியில் மாட்டி வைத்திருக்கும் காக்கிச்சட்டையை மாட்டிக் கொள்வார்கள். அச்சட்டைக்கு பட்டன் போடமாட்டார்கள். கண்டிப்பாக ‘பேட்ஜ்’ விசிபிள் செய்துக் காட்டுவார்கள்.

ஏரியாவில் ஸ்டேண்ட்காரர்கள் ஹீரோவாக மதிக்கப்பட்டார்கள். ஏதாவது வம்பு, தும்பு என்றால் முதலில் வந்து நின்று நியாயம் கேட்பார்கள். குறிப்பாக பெண்களிடம் வம்பு செய்யும் ரோமியோக்களுக்கு இவர்கள்தான் வில்லன். ஏரியா பெண்களை (கிழவியிலிருந்து குமரிவரை – வயசு பாகுபாடில்லாமல்) பாதுகாக்கும் எல்லைச்சாமிகள். யாராவது மருந்து குடித்துவிட்டாலோ, தீக்குளித்துவிட்டாலோ முதலுதவிக்கு முதலில் வந்துக் கொண்டிருந்தவர்கள்.

அந்தகால ஆட்டோக்காரர்களை நினைத்தால் ‘ஆயுத பூஜை’யும் இயல்பாகவே நினைவுக்கு வரும். அதகளமான காலம். லைட் மியூசிக் கச்சேரியெல்லாம் வைத்து ஏரியாவையே எண்டெர்டெயின் செய்வார்கள்.

‘பாட்ஷா’ வெளிவந்த தொண்ணூறுகளின் மத்திய காலக்கட்டம்தான் ஆட்டோக்காரர்கள் உச்சத்திலிருந்த காலமென்று தோன்றுகிறது. இந்த சமூகநிலையை அழகாக கமர்சியல் ஆக்கியது ரஜினி-சுரேஷ்கிருஷ்ணா கூட்டணி. சூப்பர்ஸ்டார், நக்மாவை ‘உஷார்’ பண்ணியதைக் கண்டு கவரப்பட்டதாலோ, என்னவோ அதன்பிறகு நிறைய ஆட்டோக்காரர்கள் ரோமியோக்களாக மாறிவிட்டார்கள். பெண்களை கேலி செய்தவர்களை இவர்கள் தட்டிக்கேட்ட காலம் போய், இவர்களில் நிறைய பேரே ‘ஈவ் டீசிங்’ சம்பவங்களில் ஈடுபட ஆரம்பித்து விட்டார்கள். தொண்ணூறுகளின் இறுதியிலும், ரெண்டாயிரங்களின் தொடக்கத்திலும் நிறையமுறை கேட்டவார்த்தை “ஆட்டோக்காரனோடு ஓடிப்போயிட்டா”

சமூக அநீதிகளை எதிர்க்கும் பொறுப்பான சிகப்பு மனிதர்கள் எப்போதிலிருந்து சமூகவிரோதிகளாய் அடையாளம் காணப்பட்டார்கள் என்பதை சரியாக கணிக்கமுடியவில்லை. லோக்கல் அரசியல்வாதிகளுக்கு அடியாட்களாக எப்போதிலிருந்து பணியாற்றத் தொடங்கினார்கள் என்பதையும் கவனிக்கத் தவறிவிட்டேன். இன்று ஆட்டோக்காரர்களுக்கு சமூகத்தில் கவுரவமான இடம் இருப்பதாக தெரியவில்லை. குடிகாரர்களாகவும், பெண்பித்தர்களாகவும், ரவுடிகளாகவும், அடாவடிக்காரர்களாகவுமே பொதுப்புத்தியில் உறைந்துப் போயிருக்கிறார்கள்.

ஒரு காலத்தில் நம்மால் ஹீரோக்களாக மதிப்பீடு செய்யப்பட்டவர்கள், அம்மதிப்பீட்டிலிருந்து வீழ்ந்துக்கொண்டே போவதை தாங்கிக்கொள்ள முடியவில்லை.

7 கருத்துகள்:

  1. பெயரில்லா2:21 PM, நவம்பர் 13, 2013

    மிக அருமையான கட்டுரை.. ஆட்டோக்காரர் யாராவது இதைப்படிக்க நேர்ந்தால் கண்டிப்பாக சுய பரிசோதனை செய்து கொள்வார். ஹீரோக்களாக இருந்தவர்கள் ஹீரோக்களாக மதிப்பீடு செய்யப்பட்டனர்... இப்போது ஆட்டோக்காரர்களில் ஹீரோக்களாக இருப்பவர்கள் விதிவிலக்காகத் தான் இருக்கிறார்கள்... எல்லாத்துறை மனிதர்களிடமும் ஏற்படும் வீழ்ச்சிக்கு ஆட்டோக்காரர்கள் மட்டும் விதிவிலக்கா என்ன? .

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா5:34 PM, நவம்பர் 13, 2013

    விலைவாசி உயர்வு சரி. அவங்களும் பொழைக்கணும் சரி.
    நாலு கிமீ. இதற்கு எதுக்கு 200 ரூபா ? போகவர ரெண்டும் சேர்த்தாலே 100 ரூபா தாண்டாது. இன்னும் மீட்டர் வைக்காமல் ஓட்டுறாங்க. மழை பெஞ்சுதாம். மீட்டர் பேட்டரி டவுனாம். அதுனால மீட்டர் போட்டு ஓட்டமாட்டாங்களாம். இவங்க கொட்டத்த அடக்கணும். கால் டாக்சி வந்தும் அடங்கல. மினி பஸ் வந்தாச்சு. இப்பவும் அடங்க மாட்டாங்க. ஆட்டோவ பாத்தாலே கடுப்புதான் வருது.

    பதிலளிநீக்கு
  3. ஆட்டோ சங்கரை ஒருசோற்று பதமாய் கொள்ளலாம் அவர்கள் மேல் விழுந்துவிட்ட ஒரு பெர்சப்ஷனுக்கு..

    பதிலளிநீக்கு
  4. Good observation.
    You can extrapolate this scenario to school teachers, VAO, indian muslims as well.

    பதிலளிநீக்கு
  5. this article it feel of good people slowly migrated to bad,
    The main reason for increase auto for unemployed is -there is a loan scheme by central government. i will appreciate one major , when there is accident the first person for helping is auto drivers.

    பதிலளிநீக்கு
  6. neenga baatsha padam potu post poteenga. After 18 years Kochadaiiyaan releasing on Pongal. Just saying.

    பதிலளிநீக்கு
  7. தமிழில் வழக்கில் இல்லாத வார்த்தைகளுக்கு புது வார்த்தை உருவாக்காமல் தங்க்லிஷில் எழுதுவது சரி. ஆனால் ரொம்ப முயற்சி செய்து எதோ ஒருவித கவர்ச்சி ஏற்படுத்தவோ எதற்கோ அநியாயத்துக்கு இப்படி தங்க்லீஷ் பயன்படுத்தரீங்களே யுவா! தமிழினி நாசமாக போகும்.

    பதிலளிநீக்கு