15 பிப்ரவரி, 2016

விசாரணையின் மறுபக்கம்!

‘விசாரணை’ திரைப்படம் வெளியான அன்று ஒரு தொலைக்காட்சியில் இயக்குநர் வெற்றிமாறனிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது.

“இந்தப் படம் போலிஸ்காரர்களை ரொம்ப மோசமாக சித்தரிக்கிறதே? ‘விசாரணை’யை பார்ப்பவர்கள் போலிஸ் என்றாலே இப்படிதான் என்று நினைத்துவிட மாட்டார்களா?”

வெற்றிமாறன் இதற்கு புத்திசாலித்தனமான பதில் ஒன்றினை சொன்னார்.

“போலிஸ்னாலே இப்படிதான்னு நான் சொல்லலை. பூ அல்லது தலைன்னு எந்த விஷயத்துக்குமே ரெண்டு பக்கம் இருக்கும். நான் ஒரு பக்கத்தை மட்டும்தான் இந்தப் படத்துலே காட்டியிருக்கேன். இன்னொரு பக்கத்தை வேற யாராவது காட்டுவாங்க”
தெரிந்தேதான் இந்த பதிலை சொன்னாரா என்று தெரியவில்லை. ‘விசாரணை’ வெளியான அதே நாளில்தான் மலையாளத்தில் ‘ஆக்‌ஷன் ஹீரோ பிஜூ’ வெளியானது. போலிஸ் விசாரணையால் பாதிக்கப்படுபவர்களின் பார்வையில் நம் ‘விசாரணை’ விரிந்தது என்றால், மலையாளத்தில் போலிஸ் பார்வையில் விரிந்திருக்கிறது. இரண்டு படங்களையும் ஒப்பிட்டுப் பேச ஏராளமான விஷயங்கள் இருக்கிறது.

நம்மூரில் வெற்றிமாறன் எப்படியோ, அதுபோலதான் கேரளாவில் இயக்குநர் ஆப்ரிட் ஷைன். அவரது பெயரை சொன்னால் இங்கே யாருக்கும் உடனே தெரியாது. ஆனால், அவர் எடுத்த படம் ரொம்ப பிரபலம். ‘1983’. ‘பொல்லாதவன்’ நமக்கு எப்படி ஒரு ப்ரெஷ்ஷான ஜானரை கொடுத்ததோ, அதுபோலவே ‘1983’ மலையாளத்தில் நிகழ்ந்த புதிய முயற்சி. அதே இயக்குநரின் இரண்டாவது படம்தான் ‘ஆக்‌ஷன் ஹீரோ பிஜூ’. முதல்பட ஹீரோவையே இரண்டாம் படத்துக்கும் புத்திசாலித்தனமாக வளைத்துப் போட்டுவிட்டார். ‘1983’ பெற்ற அபாரமான வணிக வெற்றி, நிவீன்பாலியை படம் தயாரிக்கவும் உந்தித் தள்ளியது. ‘ஆக்‌ஷன் ஹீரோ பிஜூ’வின் ஹீரோவும், தயாரிப்பாளரும் அவர்தான்.

‘விசாரணையை’ பற்றி இங்கே ஏகப்பட்ட விசாரணை நடந்துவிட்டது. எனவே, நேராக ‘ஆக்‌ஷன் ஹீரோ’வுக்கு போய்விடலாம்.

பி.எச்.டி முடித்து ஏதோ காலேஜில் லெக்சரராக வேலை பார்த்துக் கொண்டிருந்த பிஜூவுக்கு போலிஸ் வேலை மீது காதல். எஸ்.ஐ. எக்ஸாம் எழுதி தேர்வாகி, எர்ணாகுளம் டவுன் ஸ்டேஷனுக்கு பணிபுரிய வருகிறார்.

பிஜூவின் ஒரு மாதகால போலிஸ் ஸ்டேஷன் வாழ்க்கைதான் ஒட்டுமொத்த படமுமே. இந்தப் படத்தில் கதை கிடையாது. வில்லன் கிடையாது. காட்சிகள் மட்டும்தான். அந்த காட்சிகளை ஒன்றுக்கு ஒன்று தொடர்பு படுத்தும் சுவாரஸ்யமான திரைக்கதை, வசனங்கள் மூலமாக இல்லாத கதையை இருப்பதாக பார்வையாளனை நம்பவைக்கிறார் இயக்குநர்.

போலிஸ் படம் என்றாலே ஹீரோ தீர்க்கவேண்டிய பிரதான பிரச்சினை ஒன்று இருக்கும். அந்த பிரச்சினையை தீர்க்கவிடாமல் தடுக்கும் வில்லனை அழித்து ஒழித்து சுபம் என்பதுதான் உலகம் முழுக்கவே இருக்கும் டெம்ப்ளேட். மசாலாத்தனமாக ‘ஆக்‌ஷன் ஹீரோ பிஜூ’ என்று டைட்டில் வைத்துவிட்டு, ஆப்ரிட் ஷைன் நமக்கு காட்டியிருப்பது மாற்றுப்படம். ஒரு சாதாரண எஸ்.ஐ.யின் கேரியரில் அவன் சந்திக்கக்கூடிய வழக்குகளை எப்படி சமாளிக்கிறான் என்பதுதான் படத்தின் ஒருவரி. தன்னுடைய காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சட்டம் ஒழுங்கை ஒருவரும் மீறக்கூடாது என்பதில் அக்கறையாக இருக்கிறான்.

குடித்துவிட்டு பொது இடத்தில் எல்லோருக்கும் ‘தரிசனம்’ காட்டும் குடிகாரனில் தொடங்கி, மாநிலமே வலைவீசி தேடிக்கொண்டிருக்கும் கிரிமினல் வரை பிஜூ டீல் செய்கிறான். அவன் விசாரணை செய்யும் ஒவ்வொரு வழக்குமே ஒரு சிறுகதை. ‘சடக்’கென்று தொடங்கி ‘படக்’கென்று முடிகிறது. சில கதைகளின் உருக்கம் நெஞ்சை தொடுகிறது. லாக்கப்பில் ஒருபுறம் கிரிமினல்களை போட்டு மிதித்துக்கொண்டே போனில் மறுபுறம் தனக்கு நிச்சயமான பெண்ணோடு காதல் கடலை போடுகிறான் பிஜூ. படத்தில் அட்மாஸ்பியருக்கு வரும் பாத்திரங்களை கூட அவ்வளவு சிறப்பாக எப்படி நடிக்க வைக்க முடிந்தது இயக்குநருக்கு என்கிற ஆச்சரியம் இன்னும் தீர்ந்தபாடில்லை.

‘ஆக்‌ஷன் ஹீரோ’ என்கிற அதிரடியாக டைட்டில் வைத்து இருந்தாலும், ‘சிங்கம்’ ரேஞ்சுக்கு ரவுண்டுகட்டி விளையாட அவ்வளவு வாய்ப்புகள் இருந்தும், வழக்கமான ஆக்‌ஷன் காட்சிகள் படத்தில் இல்லை. க்ளைமேக்ஸில் இதற்கு சமாதானம் சொல்லுகிறார் இயக்குநர். “பிஜூ ஒன்றும் சூப்பர் ஹ்யூமன் இல்லை. நம்மை மாதிரி வெறும் மனுஷன்தான்”

‘நேரம்’, ‘தட்டத்தின் மறையத்து’, ‘1983’, ‘ஓம் சாந்தி ஓசண்ணா’, ‘பெங்களூர் டேஸ்’, ‘ஒரு வடக்கன் செல்ஃபீ’, ‘பிரேமம்’ என்று சகட்டுமேனிக்கு ஹிட்டுகள் கொடுத்துவரும் நிவின்பாலி ஒரு மோகன் என்றுதான் இத்தனை நாட்களும் நினைத்திருந்தேன். இந்தப் படத்துக்குப் பிறகு அவர் இன்னொரு கமல் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறார்.

2 கருத்துகள்:

  1. நிவின் பாலி ஒரு நல்ல நடிகன். எதுக்கு கமல், மோகனுடன் தேவையற்ற ஒப்பீடு?

    பதிலளிநீக்கு
  2. perhaps you could have avoided comparing Nivin with Mohan or Kamal?

    பதிலளிநீக்கு