13 ஏப்ரல், 2015

மதிப்பீடுகளுக்கு மரியாதை

காரமான கோங்குரா சட்னி தேசம். சாதி மதம் மட்டுமல்ல, வம்ச கவுரவமும் கோலோச்சும் பிற்போக்கு நிலவுடைமை சமூகம். மலையூர் மம்பட்டியான் பாணியில் கருப்பு போர்வை போத்திக்கொண்டு, கையில் லாந்தர் விளக்கோடு காட்டிலும் மேட்டிலும் அலையும் நக்சல்கள் என்றொரு சர்வதேச தோற்ற மயக்கம். ரத்தம் தெறிக்க சண்டை போடுவார்கள். கலர் கலராக டிரெஸ் போட பிடிக்கும். சர்வசாதாரணமாக வாயில் வந்து விழும் பாலியல் வசவுகள். கதறக் கதற கற்பழிப்பு. சொர்ணாக்கா பாணி பெண் ரவுடிகள். விஜயசாந்தி பாணியில் சிகப்புத் துண்டை தலையில் கட்டிய பெண் போராளிகள். புரட்சிப் பாடகர் கத்தார். புழுதி பறக்க சுமோவிலோ, டொயோட்டாவிலோ சேஸிங் சீன். வெடித்து தெறிக்கும் டிரான்ஸ்ஃபார்மர். துப்பாக்கியை தூக்கிக் கொண்டு ஓட்டு பெட்டியை கடத்தும் தாதாக்கள்.

சராசரித் தெலுங்கன் எப்படியிருப்பான், தெலுங்கு நிலம் எப்படியிருக்கும் என்று யோசிக்கவே தாவூ தீருகிறது. மூளையில் நான்லீனியராக வந்து விழும் இமேஜ்கள் கொஞ்சம் டெர்ரராகதான் இருக்கிறன. அதிலும் சித்தூரில் தமிழர்கள் மீது நடந்திருக்கும் சீமாந்திர அரசின் அநியாய கொலை வன்முறைக்கு பிறகு தெலுங்கர்களை நினைத்தாலே சிங்களவர்களின் ரத்தம் வழியும் பற்களோடு கூடிய அரக்கத் தோற்றம்தான் (நன்றி : நக்கீரன் அட்டைப்படங்கள், கார்ட்டூனிஸ்ட் பாலாக்கள்) நினைவுக்கு வருகிறது.

‘சன் ஆப் சத்யமூர்த்தி’ படம் பிடித்துக் காட்டும் தெலுங்கன் வேறு மாதிரியானவன்.

நவீனமானவன். ஆனால் பழைய மதிப்பீடுகள் மீது மரியாதை கொண்டவன். குடும்ப கவுரவம் காக்க வாழ்க்கையை பணயம் வைப்பவன். சுருக்கமாக சொன்னால் உள்ளுக்குள் கொல்டிதன்மை நிரம்பிய அல்ட்ரா மாடர்ன் காஸ்மோபோலிட்டன் இண்டியன்.

படத்தின் நாயகன் அல்லு அர்ஜூன். இவருடைய தாத்தாதான் சிரஞ்சீவியின் மாமனார். தெலுங்கின் செல்வாக்கான குடும்பத்து வாரிசுதான். பார்ன் வித் ப்ளாட்டினம் ஸ்பூன். எனவே குடும்பப் பெருமை பேசும் படத்தில் இவர் ஹீரோ என்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை. ஃபெவிக்விக் மாதிரி பச்சக்கென்று கேரக்டரில் ஸ்ட்ராங்காக ஒட்டிக் கொள்கிறார்.

அல்லு அர்ஜூன் ஏற்று நடித்திருக்கும் பாத்திரத்தின் பெயர் விராஜ் ஆனந்த். அப்பா சத்தியமூர்த்தி (பிரகாஷ்ராஜ்) கோடிஸ்வரர். தன்னை ஏமாற்றுகிறார்கள் என்று தெரிந்தாலும், அவர்களுக்கு உதவும் கோமான். திடீரென்று ஒரு விபத்தில் சத்தியமூர்த்தி மறைந்துவிடுகிறார்.

அவர் தலைமையேற்று நடத்தும் நிறுவனங்களின் பங்கு, மார்க்கெட்டில் சடசடவென்று சரிகிறது. முதலீட்டாளர்களுக்கு பயங்கர நஷ்டம். தன்னுடைய அப்பாவை நம்பி முதலீடு செய்தவர்கள் நஷ்டமடையக் கூடாது என்று, சொந்த சொத்தை விற்று அந்த பங்குகளை தானே வாங்குகிறான் விராஜ்.

வெறும் பேப்பர்களாகிவிட்ட பங்குகளை முன்னூறு கோடி ரூபாயை கொட்டி வாங்கும் அவனது முடிவை பார்த்தவர்கள் பிழைக்கத் தெரியாதவன் என்கிறார்கள். சொத்துகளை காத்துக்கொள்ள சால்வன்ஸி கொடுத்துவிட்டு போகலாம், கார்ப்பரேட் யுகத்தில் இதெல்லாம் சகஜம்தான் என்றெல்லாம் யோசனை சொல்கிறார்கள். ஒரே ஒருவன்கூட தன்னுடைய அப்பாவால் நஷ்டமடைந்ததாக சொல்லக்கூடாது என்று மறுக்கிறான். அப்பாவே இல்லை, அவருடைய பெயரை காப்பாற்றி என்ன செய்யப் போகிறாய் என்று கேட்பவர்களிடம் ‘வேல்யூஸின் வேல்யூ’ குறித்து பேசுகிறான் விராஜ்.

பில்லியனர் குடும்பம் ஒரே நாளில் கீழ்நடுத்தர நிலைக்கு வருகிறது. பங்களா இல்லை. கார் இல்லை. கணவனே உலகம் என்றிருந்த அம்மாவுக்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. அப்பா இறந்ததில் இருந்து லேசான மனநிலைக்கு ஆளாகிவிட்ட அண்ணன். இந்த நிலையில் இந்த குடும்பத்தை விட்டு விலகமுடியாது என்று கஷ்டங்களை ஏற்றுக் கொள்ள தயாராகும் கோடிஸ்வர அண்ணி. பச்சைக் குழந்தையான அண்ணன் மகளுக்கு நிலைமையை புரியவைக்க முடியவில்லை. விராஜ், இழந்ததை மீட்டானா என்பதுதான் மீதி கதை. இடையில் ‘உன் அப்பாவால் எனக்கு நஷ்டம்’ என்று சொன்னவரின் பிரச்சினையை உயிரை பணயம் வைத்து தீர்க்கிறான்.

அண்ணாமலை, படையப்பா மாதிரி ஃபேண்டஸியாக எடுக்கப்பட வேண்டிய படத்தை முடிந்தவரை ரியலிஸ்டிக்காக அமைத்திருக்கிறார் இயக்குனர் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ். சுயநலத்துக்கும், மதிப்பீடுகளுக்கும் இடையேயான விவாதம் படம் முழுக்க ராஜேந்திர பிரசாத் பாத்திரத்துக்கும், அல்லு அர்ஜூன் பாத்திரத்துக்கும் இடையில் நிகழ்ந்தபடியே இருக்கிறது. மனித உணர்வுகளுக்கு மதிப்பு தரும் விராஜ், தன்னுடைய எதிரிகளையும் தன்னை கேலி பேசியவர்களையும் கத்தியின்றி ரத்தமின்றி அகிம்சை முறையில் வெல்கிறான். இறுதியில் காற்று அவன் பக்கம் அடிக்கிறது. நல்லது செய்தவனுக்கு நல்லதே நடக்கும் என்கிற ஃபீல்குட் மெசேஜ்தான்.

இளம் வயதிலேயே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் ஹீரோயின் சமந்தாவை எந்தவித நெருடலுமின்றி ஹீரோ ஏற்றுக் கொள்வதாக ஒரு போர்ஷன். கமல்ஹாசன், வாசிம் அக்ரம் போன்றோர் இளமையிலேயே அந்நோயை எதிர்கொண்டு அவரவர் ஈடுபட்ட துறையில் உச்சத்தை எட்டியதே இந்த கேரக்டருக்கு இன்ஸ்பிரேஷன் என்று இயக்குனர் சொல்கிறார். த்ரிவிக்ரம் சீனிவாசை புதிய தலைமுறைக்கோ அல்லது பாலம் பத்திரிகைக்கோ கட்டுரை எழுத சொல்லவேண்டும். அந்தளவுக்கு அநியாயத்துக்கு நல்லவர்.

இம்மாதிரி படம் முழுக்கவே ‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு’ ‘நான்தான் முகேஷ்’ பாணியில் ஒவ்வொரு கேரக்டரிலும் ஒவ்வொரு சீனிலும் ஏதோ ஒரு மெசேஜ் அதுவாக ஆட்டோமேடிக்காக வந்து விழுந்துக் கொண்டே இருக்கிறது. 165 நிமிஷத்தில் எப்படிப்பட்ட வில்லனையும் உத்தமனாக்கிவிடும் அகிம்சைவெறியோடு உழைத்திருக்கிறார்கள்.

படம் தொடங்கி பத்தே நிமிடத்தில் இறந்துவிடும் பிரகாஷ்ராஜ் பாத்திரம், க்ளைமேக்ஸ் வரை காட்சிக்கு காட்சி முக்கியத்துவம் பெற்றுக்கொண்டே இருப்பதைப் போன்ற புத்திசாலித்தனமான திரைக்கதை. படம் நெடுக ஏராளமான நட்சத்திரப் பட்டாளம். ஆனால், எல்லாமே பாசிட்டிவ்வான கேரக்டர்கள்தான். தமிழில் இருபது ஆண்டுகளுக்கு முன்பே ஓட்டி தேய்ந்த அப்பாவின் கவுரவத்தை மகன் காப்பது என்கிற அரதப்பழசான ரீல்தான். ஆனால் அதையே ஒழுங்காக ஸ்க்ரிப்ட் ஆக்கி, இன்றைய தலைமுறைக்கு ஏற்ற E வடிவத்துக்கு மாற்றி இருப்பதில்தான் தெலுங்கர்களின் சாமர்த்தியம் வெற்றியை எட்டியிருக்கிறது. தொண்ணூறுகளின் விக்ரமன் காலத்துக்கேற்ப அப்டேட் ஆகிக்கொண்டே வந்திருந்தால் இன்னேரம் சன் ஆஃப் சத்யமூர்த்தி மாதிரி அதிரடி வெற்றியை ருசித்துக் கொண்டிருப்பார்.

சன் ஆஃப் சத்யமூர்த்தி : ஃபேமிலி பிக்னிக்!

5 கருத்துகள்:

  1. பெயரில்லா1:39 AM, ஏப்ரல் 14, 2015

    இது சினிமா கதை. நிஜத்தில், சத்யம் ராமலிங்கராஜுவின் மகன், தந்தை சொத்தை வைத்து சூதாடி (Maytas), தந்தைக்கு 7 வருஷம் ஜெயில்.

    பதிலளிநீக்கு
  2. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  3. இனி இதை தமிழில் விஜய்/தனுஷ் /சிவகார்த்திகேயன் வைத்து எடுப்பார்கள். படம் வெளியான 3வது நாளில் சக்சஸ் மீட் போட்டு ஆகா, ஓகோ என்று புகழ்ந்து தள்ளுவார்கள். தமிழ் சினிமாவில் இதெல்லாம்தானே சகஜமப்பா?

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா1:43 AM, ஏப்ரல் 16, 2015

    You have explained a very good and clean story but the still image shows that Tollywood will never change!! And you too :-)

    பதிலளிநீக்கு
  5. //165 நிமிஷத்தில் எப்படிப்பட்ட வில்லனையும் உத்தமனாக்கிவிடும் அகிம்சைவெறியோடு உழைத்திருக்கிறார்கள்.//
    adrasaka adrasaka

    பதிலளிநீக்கு