உலகளவில் சினிமாவின் சொர்க்கமான ஹாலிவுட்டில் இரட்டைவேடப் படங்கள் மிகவும் அரிது. ஏனெனில் அங்கெல்லாம் கதையில் 'லாஜிக்' இல்லையென்றால் ரசிகர்கள் கடித்துக் குதறிவிடுவார்கள். நாம் தான் காலம் காலமாக காதில் பூ வைத்த, திரைரசிகப் பாரம்பரியத்தில் வந்தவர்களாயிற்றே? திரையில் எவ்வளவு டூப்பு அடிக்கப்பட்டாலும் கைவலிக்கத் தட்டுகிறோம். வாய்வலிக்க விசிலுகிறோம்.
ஹாலிவுட்டில் 70 வருடங்களுக்கு முன்பாக Man in the iron mask என்றொரு இரட்டைவேடப் படம் வந்து பெரும் வெற்றி பெற்றது. அந்தப் படத்தை அந்தக் காலத்து தமிழ் இயக்குனர் யாரோ தெரியாத்தனமாக பார்த்துத் தொலைத்திருக்க வேண்டும். தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்தது சனி.
தமிழின் முதல் இரட்டைவேடப் படமான 'உத்தம புத்திரன்' 1940ல், பி.யூ.சின்னப்பா கதாநாயகனாக நடித்து வெளிவந்து சக்கைப்போடு போட்டது. இதே படம் பிற்பாடு சிவாஜிகணேசனை நாயகனாக்கி, இதே கதையோடு வெளிவந்து மீண்டும் சக்கைப்போடு போட்டது. சக்கைப்போடு போடு ராஜாவென்று அதே உத்தமபுத்திரனின் கதையை மீண்டும் மீண்டும் உல்டா அடித்து தமிழில் வெளிவந்த திரைப்படங்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரட்டைச் செஞ்சுரி அடித்திருக்கும். நேற்றைய இம்சை அரசன் 23வது புலிகேசி கூட உத்தமபுத்திரனின் கதையை உருவியது தானென்பது உற்றுப் பார்க்காமலேயே தெரியும்.
எத்தனை தடவை ஒரே கதையை வேறு வேறு நடிகர்களை வைத்து எடுத்தாலும், திரும்ப திரும்ப பார்த்துக் கொண்டே இருக்குமளவுக்கு மூளைச்சலவை செய்யப்பட்ட ரசனை நம்முடையதாகிப் போனது. இரட்டையர்களாக பிறக்கும் அண்ணன் தம்பிகள் பிரிந்து விடுவார்கள். ஒருவன் நல்லவனாக வளர்வான். மற்றொருவன் கெட்டவனாக வளர்வான். இருவரும் மோதிக் கொள்வார்கள். கடைசியில் கெட்டவன் திருந்தி நல்லவனாகி, நல்லவனோடு சேர்ந்து இன்னொரு கெட்டவனை அழிப்பான். தமிழில் வெளிவரும் பெரும்பாலான டபுள் ஆக்ஷன் படங்களின் டெம்ப்ளேட் கதை இதுதான். இதே பூவைதான் இயக்குனர்கள், நடிகர்கள் என்று மாறி மாறி நம் காதுகளில் சொருகி வருகிறார்கள். சொருகிறதுதான் சொருகிறார்கள். ஒரு முறை ரோஜா, ஒரு முறை மல்லி என்று மாற்றி மாற்றியாவது சொருகித் தொலைக்கக்கூடாதா? எப்பவுமே சாமந்திப்பூதானா?
இந்த இரட்டைவேடப் படங்களில் 'வித்தியாசம்' என்ற பெயரில் அடிக்கப்படும் கூத்துகள் அளவில்லாதவை. குறிப்பாக அந்தக்கால எம்.ஜி.ஆர். படங்களிலும், இந்தக் காலத்து அர்ஜூன், சரத்குமார் படங்களிலும் இந்த வித்தியாசக் கொடுமையை நாம் உணரலாம். ஒரு நாயகனுக்கும், இன்னொரு நாயகனுக்கும் வித்தியாசப்படுத்திக் காட்ட மச்சம், குறுந்தாடி, கண்ணாடி என்று மொக்கையாகவே யோசிக்கிறார்கள் நம் இயக்குனர்கள். உதாரணத்துக்கு, உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் அண்ணன் எம்.ஜி.ஆருக்கு குறுந்தாடி இருக்கும். தம்பி நீட்டாக ஷேவ் செய்திருப்பார். ரசிகர்கள் யார் எந்த எம்.ஜி.ஆர். என்று குழம்பிப் போய்விடுவார்களாம். எனவே அப்படத்தின் இயக்குனரான எம்.ஜி.ஆர் வித்தியாசமாக சிந்தித்து இப்படியொரு மாறுவேட ஏற்பாட்டை ரசிகர்களின் வசதிக்காக செய்திருந்தார். அய்யோ. அய்யோ.
இரட்டை வேடம் என்பதை புத்திசாலித்தனமாக பயன்படுத்திக் கொண்டவர்களும் ஒரு சிலர் உண்டு என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். குறிப்பாக கமலஹாசனின் சில படங்களை சொல்லலாம். இவர் இருவேடம் என்பதை தாண்டி மூன்று, நான்கு என அதிகரித்துக் கொண்டே சென்று பத்து வேடங்கள் வரை நடித்தவர். உருவ ஒற்றுமையால் ஏற்படும் குழப்பங்கள் என்பது இம்மாதிரியான படங்களில் பெரும்பாலும் ஒன்லைனர். இதுபோன்ற படங்களில் இருவேடங்கள் என்பது தவிர்க்கவே இயலாதது. கரு. பழனியப்பன் இயக்கிய 'பார்த்திபன் கனவு' திரைப்படத்தில் ஸ்னேகா இரட்டை வேடத்தில் தோன்றுவதுதான் கதையின் அடிப்படையே.
ஆனால் சும்மா 'கெத்'துக்காகவும், செண்டிமெண்டுக்காகவும் இருவேடங்கள் என்பதுதான் அதிகம். தமிழ் சினிமாவின் வெற்றிகரமான கமர்சியல் இயக்குனரான கே.எஸ்.ரவிக்குமார் அடிக்கடி இரட்டைவேடப் படங்களை எடுப்பதுண்டு. இவர் இரட்டைவேட படத்தை தமக்காக இயக்கினால், அது நிச்சயம் ஹிட்டென்று சரத்குமார், அஜித்குமார் போன்ற நடிகர்கள் நம்புகிறார்கள்.
ரஜினி மாதிரியான மாஸ் ஹீரோக்களுக்கு வணிக அடிப்படையில் இரட்டைவேடம் அத்தியாவசியமாகிறது. ஒவ்வொரு படத்துக்கும் இடையே நீண்டகால இடைவெளி கொடுப்பதால், ரசிகர்களுக்கு ஒரே ஒரு தலைவர் திரையில் போதவில்லை என்பது இதற்கான அடிப்படைக் காரணம். படம் முழுவதுமே தலைவர் வந்தாகவேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறார்கள். வெளிவர இருக்கும் எந்திரன் திரைப்படத்தில் நூற்றுக்கணக்கான ரஜினிகள் வருகிறார்கள். கொண்டாட்டத்தின் அளவை சொல்லவும் வேண்டுமா?
மாஸ் ஹீரோக்கள் இரட்டை வேடத்தில் நடித்தால்தான் ஹிட் கொடுக்க முடியுமென்ற செண்டிமெண்டும் சிலர் விஷயத்தில் உடைந்ததுண்டு. கடந்த பத்தாண்டுக் காலத்தில் தமிழ் சினிமாவில் குறிப்பிடும்படி வளர்ந்து நிற்கும் விஜய் முதன்முதலாக இரட்டைவேடத்தில் (அதே கதைதான். ஒருவன் நல்லவன். மற்றொருவன் கெட்டவன்) நடித்த அழகிய தமிழ்மகன் தோல்வியடைந்தது. மீண்டும் இந்த விஷப்பரிட்சையை எழுதிப்பார்க்க விஜய் தயாராக இருப்பதாக தெரியவில்லை.
எப்படியோ கொஞ்சகாலமாக இரட்டைவேட மோகம் நடிகர்களிடமும், ரசிகர்களிடமும் குறைந்துவருவதாக தெரிகிறது. கடைசியாக நீங்கள் பார்த்த இரட்டைவேடப் படம் எதுவென்று யோசித்துப் பார்த்தால் இந்த ட்ரெண்ட் விளங்கும். ஆனால் அதற்குப் பதிலாக ஒன்றுக்கு மேற்பட்ட (பெரும்பாலும் இரட்டை) கெட்டப்புகளில் நடித்து, நம் நடிகர்கள் கொடுமைப்படுத்தி வருகிறார்கள். ஏதாவது லேட்டஸ்ட் ஹாலிவுட் படத்தைப் பார்த்துவிட்டால், அதுபோன்ற கெட்டப்புகளில் தங்களுக்கு வேடம் அமைக்குமாறு இயக்குனரை வற்புறுத்துகிறார்கள்.
சரி, விடுங்கள். நரி இடம் போனாலென்ன? வலம் போனாலென்ன? நம் மீது விழுந்து கடித்து குதறாதவரைக்கும் சரிதான். நீங்கள் உங்கள் வாழ்வில் பார்த்த அபத்தமான இரட்டைவேடப் படங்களை கொஞ்சம் கொசுவர்த்தி சுழற்றி (அதாவது ஃப்ளாஷ்பேக் ஓபனிங்) யோசித்துப் பாருங்கள். இன்றையப் பொழுது இனிமையாய் மலரும்.