14 ஜனவரி, 2012

அழிக்கப் பிறந்தவன் - சில விமர்சனங்கள்

இளமை ததும்பும் சுவாரசியமான எழுத்து நடையால், இணையத்தில் வசீகரித்து வரும் இவரது 'அழிக்கப்பிறந்தவன்' என்ற நாவலை, புத்தகக் காட்சிக்கு சென்று திரும்பும் பதிவர்களிடம் பார்க்க முடிகிறது. 'திருட்டு விசிடி'யை மையமாகக் கொண்ட விறுவிறு கதை, 'படுவேகமான த்ரில்லர் வகையறா' நாவல் என சக பதிவர்கள் சான்று கொடுத்து வருகின்றனர்.


- விகடன்.காம்


--------------------------------------------------


புத்தகத்தை படிக்கும்போது என்னை மிகவும் ஈர்த்த விஷயம் பர்மாபஜாரைப் பற்றியும், அங்கு நிகழும் வியாபாரத்தைப் பற்றியும் விரவிக் கிடக்கும் தகவல்கள். க்ரே மார்க்கெட்டின் டான் வாப்பா, மீன் பிடித்தல், மருந்து வியாபாரம், போலிஸ் விசாரணை என்று சென்னையின் மறுபக்கத்தை நுணுக்கமாக விவரித்த விதம் மிக அருமை


- நல்லவன்



--------------------------------------------------


கதையின் நடை நம்மை உள்ளிழுத்துக்கொள்ள பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. விலைமாது வரும் காட்சிகளிலும் அத்துமீறாமல் அடுத்த காட்சிக்குத்தாவும் சந்தர்ப்பங்களில் கதையின் போக்கில் நம்மை கவனப்படுத்தி விளையாடுகிறார் யுவா. மிகச் சாதாரணமான வார்த்தைகள். சம்பவங்களின் அனாயாசமான வேகம்.! ஏதோ ஒரு இடத்தில் இது உண்மையிலேயே நடந்துகொண்டிருக்கிறதோ என்று எண்ணவைக்கும் காட்சிக்கோர்வைகள் என நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு ஜேம்ஸ் ஹார்ட்லி சேஸ் நாவலைப் படித்த உணர்வு எழுந்தது.


- சுரேகா


--------------------------------------------------

சுஜாதா நாவலின் போதுதான் இந்த அவஸ்தைகளை அனுபவித்திருக்கிறேன். அதன் பிறகு யுவகிருஷ்ணாவின் நாவலைப் படித்த பிறகுதான் அந்த அவஸ்தையை மீண்டும் அனுபவித்தேன். இந்த நாவலை திரைக்கதையாக அமைத்தால், "மங்காத்தா" போல் நல்ல வெற்றி படமாக அமையும் வாய்ப்பு இருக்கிறது.


--------------------------------------------------

விறுவிறுப்பான மசாலா படத்தைப் பார்த்த திருப்தி. பரபரவென போயிற்று.


--------------------------------------------------

ஹாலிவுட் இயக்குனர்களான மார்ட்டின் ஸ்கார்சீஸ், கை ரிட்சி, படங்களில் பார்ப்பது போல ஒரு இருள்/நிழல் உலகத்தை நம் கண் முன்னே மிகத் துல்லியமாகக கொண்டுவந்து நிறுத்தியிருக்கின்றார். ஒருவரின் நிழலில் இன்னொருவர் உருவாவதும்... வளர்ந்தபின் வளர்த்தவர் மேலேயே பாய்வதும் ஆகிய நிழல் உலகின் 'Survival of the Fittest ' கொள்கைகளை மிக சிறப்பாகவே சொல்லியிருக்கின்றார்.


--------------------------------------------------

பர்மா பஜாரின் திருட்டு VCD தொழிலுக்கு பின்னால் மறைந்திருக்கும் மர்ம முடிச்சுக்களை அவிழ்க்கும் இந்த கதை சிறந்த திரைக்கதையாகவும் இருப்பது தனி சிறப்பு. இயக்குனர் ஷங்கரையும் அவரது நண்பன் படத்தையும் மையமாக வைத்து கதை சொன்ன விதம் அருமை. ஷங்கரே கூட இதை படமாக எடுக்க களம் உள்ள நாவல்.


--------------------------------------------------

ஒரு ஒண்ணரை முதல் இரண்டு மணி நேரத்திரைப்படத்துக்கான களம் மற்றும் பாத்திரங்கள் கச்சிதமாய் இருக்கும் இந்நாவலை டீட்டெயிலிங்கில் பிராமதப்படுத்தும் ஒரு நல்ல இயக்குநரும் (கே.வி.ஆனந்த் போல), ஒரு நல்ல குழுவும் சேர்ந்தால் என்றேனும் ஒருநாள் முழுநீளத்திரைப்படமாக பட்டையைக் கிளப்பக்கூடும். 


--------------------------------------------------

சென்னை பர்மா பஜார் தான் கதைக்களம். அங்கே நடக்கும் தொழில், அங்கே நிகழும் சம்பவங்கள், தாதாக்கள், ஒருவரை ஒருவர் முந்தும் தன்மை, திருட்டு வி.சி.டி இவற்றை மையமாக கொண்டு கதை செல்கின்றது. விறுவிறுப்பிற்கு பஞ்சமே இல்லை. தொடர் கொலைகள் அதை யார் செய்தார்கள் என்ற கேள்வியுடன் பயணிக்கின்றது. படு வேகம். விவரணைகள் கதைக்குள் ஒன்ற செய்கின்றது. டீடெய்லிங் தான் ஆச்சரியப்பட வைக்கின்றது, எல்லா தகவல்களையும் விரல்நுனியில் வைத்துள்ளார். 


--------------------------------------------------

 Get the book ,you can not keep it down without completing. As reader I want to enhance the experience of the book. AZHIKKAP PIRANDHAVAN MAPIA : CLICK HERE!


- முத்துவேல் சிவராமன்
--------------------------------------------------

கொஞ்சமும் ஏமாற்றாத த்ரில்லர். நடை அமர்க்களம். விறுவிறுப்பான அக்மார்க் லோக்கல் மசாலா.

- நரேன்

--------------------------------------------------

செம விறுவிறுப்பான திரில்லர் நாவல்..! ஏக் தம்மில் இரவோடு இரவாகப் படித்து முடித்தேன். அவசியம் படியுங்கள். நிச்சயமாக உங்களுக்கும் பிடிக்கும்.

- உண்மைத் தமிழன்

--------------------------------------------------

 கதை விறுவிறுப்பாக இருக்கிறது.. ஃபில்டர் & டுபாக்கோ பர்ஃபெக்ட்லி மேட்சுடு சிகரெட்டைப்போல...

- மணிஜி

--------------------------------------------------

சினிமா பின்னணியில் அமைந்த தடதடக்கும் கிரைம் த்ரில்லர். காரம் கொஞ்சம் தூக்கலான அருமையான மசாலாப் படம் பார்த்த உணர்வு.


--------------------------------------------------

செம்ம சேஸிங் த்ரில்லர்.. கே.வி ஆனந்த் தோத்தாரு போங்க. சேஸிங் கண்ணுக்குள்ள விரியுது


--------------------------------------------------

ஜெட் வேகம். ஒரிரு லாஜிக் ஓட்டைகளும் படிக்கும் போது தெரியவில்லை, படித்து முடித்த பின்னர்தான் தோன்றுகிறது. அத்தனை வேகம்.


--------------------------------------------------

‘அழிக்கப் பிறந்தவன்’ - சென்னையில் டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் விற்பனைக்கு கிடைக்கும். தொடர்பு எண் : 9940446650.
விலை ரூ.50/- மட்டுமே. பக்கங்கள் : 96.
ஆன்லைனில் வாங்க...

13 ஜனவரி, 2012

டேபிள் டென்னிஸ்!


வயதுக்கும், மனதுக்கும் ஏற்ப ஒவ்வொருவரும் ஒவ்வொரு விளையாட்டை ஒவ்வொரு காலக்கட்டத்திலும் விளையாடிக் கொண்டேயிருக்கிறோம். சில நேரங்களில் கிரிக்கெட். பல நேரங்களில் ஓட்டப்பந்தயம். கேரம்போர்ட், செஸ், செக்ஸ்.. எந்த விளையாட்டு விளையாடினாலும் போங்கு ஆட்டம் ஆடுபவர்களும் இருக்கவே செய்வார்கள்.

48 வயது. உடல் ஒத்துழைத்திருந்தால் டென்னிஸ் விளையாடியிருப்பார் கோபிகிருஷ்ணன். அதிவேகமாக மனம் ஒத்துழைத்ததால் டேபிள் டென்னிஸ் ஆடியிருக்கிறார். டென்னிஸை விட டேபிள் டென்னிஸுக்கு வேகமாக இயங்க வேண்டும். ஆனால் டென்னிஸ் போல இங்கும் அங்குமாக ஓடியாடி உழைப்பை பெருமளவில் கொட்ட வேண்டியதில்லை. பெண்ணாக பிறந்திருந்தால் கோபிகிருஷ்ணனை காதலித்திருக்கலாம். இரண்டு நாட்களாக சிந்தையெல்லாம் விஸ்வரூபமெடுத்து கொன்று கொண்டிருக்கிறார். காதலும், காமமுமாக பொழுது இப்போதெல்லாம் பரவசமாயிருக்கிறது.

அத்தியாயத் தலைப்புகளாக கேம் பாயிண்டுகள். ஒவ்வொரு அத்தியாயமும் இவ்வளவு நீளம், இவ்வளவு அகலம் என்றெல்லாம் எந்த வரையறையும் இல்லை. போன அத்தியாயத்துக்கும் அடுத்த அத்தியாயத்துக்குமான தொடர்ச்சிகள் எதுவுமில்லை. புத்தகத்தில் எந்தப் பக்கத்தை வேண்டுமானாலும் புரட்டி எந்த அத்தியாயத்தை வேண்டுமானாலும் முன்பின்னாக நகர்ந்து வாசித்துக் கொள்ளலாம். குறுநாவல் என்று சொல்லப்பட்டாலும் நாவல், குறுநாவல், சிறுகதைத் தொகுப்பு, சுயசரிதை என்றெல்லாம் எப்படியுமே வகைப்படுத்த இயலாத வினோத வடிவம். சாருநிவேதிதாவின் ராஸலீலாவுக்கு இந்நூலை முன்னோடியாக எடுத்துக் கொள்ளலாம், சாரு ஒத்துக்கொள்ளா விட்டாலும் கூட.

என்னுரையிலேயே தெளிவாக சொல்லிவிடுகிறார். படைப்பில் இருக்கும் (கவனிக்கவும் நாவலில் அல்ல, படைப்பில்) சம்பவங்கள் அனைத்துமே மனப்பதிவுகளாகக் கொள்ளப்பட வேண்டும் என்பது அவரது வேண்டுகோள். டேபிள் டென்னிஸ் ஒரு உளவியல் ஆவணமென்பதாலேயே பிரசுரிக்கப்பட வேண்டியதற்கான நியாயத்தைப் பெறுகிறது என்று justify செய்கிறார்.

சரி. டேபிள் டென்னிஸின் கதைதான் என்ன?

கோபிகிருஷ்ணனுக்கே இந்தக் கேள்விக்கு விடை தெரியாது. நாற்பத்தெட்டு பக்க (எழுதும்போது அவர் வயசும் 48) நோட்டுப் புத்தக அளவில் இருக்கும் புத்தகத்தில் எழுத்துக்கு எழுத்து, வரிக்கு வரி, பக்கத்துக்குப் பக்கம் காதலும், காமமும், இவற்றால் விளையும் பரவசமும். பண்பாடு, கலாச்சார கந்தாயங்களால் காயடிக்கப்பட்டவர்களுக்கு - பாலியல் வாய்ப்புகள் தாராளமாக கிடைத்தாலும் பாலியல் வறட்சியில் வாடுபவர்களுக்கு - டேபிள் டென்னிஸின் Erotica கிளர்ச்சியை ஏற்படுத்தலாம் என்று அனுமானித்திருக்கிறார். ’...ச்சீ’ என்று வெட்கப்படுபவர்களோ அல்லது பாலுறவைப் பாவம் என்று நம்பும் மனநோயாளிகளோ இந்தப் பக்கமே வராதீர்கள் என்று ஆரம்பத்திலேயே துரத்தியடித்தும் விடுகிறார்.

“நடுவில் உருவி விட்டுக்கொண்டு வர இயலாது தோழரே” - முதல் ஷாட்டிலேயே பாயிண்ட் அடித்துவிட்டு பிறகு ஆற அமர செட்டில் ஆகிவிட்டு விளையாடுகிறார். வாசகனையும் விளையாட்டுக்கு சேர்த்துக் கொள்கிறார். இங்கே ஆசிரியனுக்கும், வாசகனுக்கும் பாயிண்ட் ட்யூஸ். நூல் முழுக்க விரவியிருக்கும் ஆங்கில வார்த்தைகளுக்கு அர்த்தம் தேட பக்கத்தில் டிக்‌ஷனரியை வைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

”என்ன கடினமான உழைப்பானாலும் அழகியின் கேசமும் மார்பகங்களும் ஒரு இதம்தான்” இதுபோல அழகியல் வர்ணனைகள் வாசிக்கும்போதே மனதுக்கு இதம். வாசகனின் கற்பனை ரெக்கை கட்டி ஜெட்விமான வேகத்தில் வானுக்கு பறக்க அவகாசமும் கிடைக்கிறது. “இடுப்புக்கு கீழே நீ ஒரு புரட்சிக்காரிதான்” பாலுணர்வை நயமாக, அலுங்காமல், குலுங்காமல் பகிர்ந்து கொள்கிறார்.

“இழவுச் சாமியார் ஒரு கொழுத்த பன்றி. ருத்திராசக் கொட்டைகள் அவரது கொட்டைகளைவிட மிகச் சிறியவை. முருகர் வியாபாரம். நல்ல லாபம். வேல் வேல் வெற்றி வேல்” - நகைக்கவும் சில தருணங்கள். “ஐயங்கார் : மனைவியுடன் படுப்பது சிற்றின்பம். பிற பெண்களுடன் படுப்பது பேரின்பம்”

“ஆயுத பூசை. குங்குமம் இடப்பட்ட குறி அவசரகதியில் நுழைந்தது உள்ளே. உச்சக்கட்ட சிலிர்ப்பின் போது கற்பூரம் ஏற்றி வழிகாட்டினாள் எங்க பேட்டை அம்மன். அம்மனுக்குத்தான் எத்தனை வாளிப்பான உடம்பு! ஓரிரவு படுக்கைத் தோழியாக இருக்க இசை. குறி கேட்கிறது. அவிழ்த்துவிடு. இறுக்கம் தாளமுடியவில்லை. திருக்கரங்களைப் படரவிடு” - இவ்வளவு இயல்பாக, அசூயை கொல்லும் வார்த்தைகள் இல்லாமல் காமத்தை எழுதமுடியுமா என்று ஆச்சரியப்பட புத்தகம் நெடுகிலும் காமம் குலுக்கப்பட்ட ஷாம்பெயின் பாட்டிலாக பொங்கி வழிகிறது. இன்னொரு சின்ன உதாரணம். “அவளுக்கு என்ன ஆகிவிட்டது இன்றிரவு? தலையில் இருந்த பூச்சரத்தை எடுத்துக் குறிக்குச் சுற்றிவிட்டாள். மணம் பிரமாதம்”.

”Black Knight அரை போத்தலில் அருமையான போதை”. சூழலை எப்போதும் கொண்டாட்டமாக வைத்திருப்பவர்கள் தான் இதுமாதிரி வரிகளை எழுதமுடியும். “தங்கள் Panties சாம்பல் நிறம்தானே என்றேன் தணிந்த குரலில். இடது கன்னத்தில் உள்ளங்கையை வைத்து முகத்தை தள்ளினார். வலது கன்னத்திலும் கையை வையுங்கள்; பிரான் அப்படித்தானே உபதேசித்திருக்கிறார் என்றேன்” கிறிஸ்தவ தேவதை ஒருவருடனான கிருஷ்ணனின் அனுபவம். காமமும், காதலும் ஒரு கொடியில் பூத்த இருமலர்களே.

“என் காதலிகூடக் காலையில் கக்கூஸுக்குத்தான் போகிறாள்” - புனிதமயமாக்கப்பட்டு தேவதைகளால் ஆசீர்வதிக்கப்பட்ட காதலை இதைவிட அழகாக கட்டுடைக்கமுடியுமா?

”ஒரு schic எப்படிக் கவிதைகள் எழுதமுடியும் என்று கேட்டார். என்னைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள், நானே ஒரு paranoid schic என்றேன். இல்லை, நீங்கள் விளையாடுகிறீர்கள், ஒரு மனநோயாளியால் இவ்வளவு தெளிவாக விவாதிக்க முடியாது என்றார். 1974ல் 45 நாட்களும் 1980-ல் 10 நாட்களும் மனநலக் காப்பக நரகத்தில் சிகிச்சை பெற்றேன் என்று சொன்னேன்” - ஒரு மனநோயாளியாக் இருப்பது எவ்வளவு பெரிய பேறு. கோபிகிருஷ்ணனுக்கு வாய்த்திருக்கிறது. வாய்க்கப்படாதவர்கள் பூமியில் வாழும்போதே வாழ்நாள் முழுக்க நரகத்தில் உழல்கிறார்கள். நூலை வாசித்த கணத்தில் இருந்து பருத்த முலைகளும், சிகப்பு யோனிகளும் மனசெல்லாம் நிறைகிறது.


நூல் : டேபிள் டென்னிஸ்
பக்கங்கள் : 48
விலை : ரூ.15
பதிப்பகம் : தமிழினி, 342, டி.டி.கே சாலை, ராயப்பேட்டை, சென்னை-14.

12 ஜனவரி, 2012

தமிழ் சினிமாவில் என்னதான் பிரச்சினை?

“பிழைப்போமா, அழிவோமா தெரியாது. வாழ்ந்தோம் என மட்டுமாவது பதிவு செய்ய விரும்புகிறோம்” – ‘பாலை’ என்கிற திரைப்படத்தை இயக்கிய செந்தமிழன், சில நாட்களுக்கு முன்பாக ஃபேஸ்புக்கில் இதை சொன்னார்.

“தமிழகத்தின் சரிபாதி பகுதிகளில் எங்கள் படத்தைத் திரையிட ஒரு அரங்கு கூட கிடைக்கவில்லை. இன்றைக்கு தமிழகத்தில் உள்ள ஆயிரத்து இருநூறு திரையரங்குகளில் பாதிக்கு மேற்பட்டவையை ஒரு சில படங்கள் மட்டுமே ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு அரங்கத்துக்கும் இலட்சக் கணக்கில் பணம் கொடுக்கப்பட்டு, அந்த அரங்களில் வேறு படங்கள் திரையிடப் படாமல் பார்த்துக் கொள்கின்றன” என்றும் செந்தமிழன் ஃபேஸ்புக்கில் குற்றம் சாட்டுகிறார்.

என்னதான் நடக்கிறது?

ஒரு திரைப்படம் தயாரிப்பு, விநியோகம், வெளியீடு என்ற மூன்று கட்டங்களை தாண்டி ரசிகர்களின் பார்வைக்கு வருகிறது. பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாக இந்த மூன்று கட்டங்களும் வெவ்வேறு நிறுவனங்களால், மனிதர்களால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. தயாரிப்பாளர்கள் படங்களை தயாரிப்பார்கள். விநியோகஸ்தர்கள் அப்படங்களை வாங்குவார்கள். திரையரங்குகள் விநியோகஸ்தர்களிடமிருந்து படங்களை வாங்கி திரையிடும். சமீபகாலமாக சினிமாவில் அசுரத்தனமாக வளர்ந்துவரும் ‘கார்ப்பரேட் கலாச்சாரம்’ இந்த நடைமுறையை முற்றிலுமாக மாற்றி வருகிறது. மூன்று துறைகளையுமே ஒருங்கிணைத்து, ஒரே குடையின் கீழ் செயல்பாட்டுக்குக் கொண்டு வருவதால், பெரிய நிறுவனங்கள் தயாரிக்கும் படங்கள் அல்லது பெரிய நட்சத்திரங்கள் நடிக்கும் படங்கள் மட்டுமே ரசிகர்களை சென்றடையும் நிலை ஏற்பட்டிருக்கிறது என்று சினிமா வட்டாரங்களில் வருத்தத்தோடு பேசிக் கொள்கிறார்கள்.

முன்பெல்லாம் தீபாவளிக்கு பத்து, பதினைந்து படங்கள் வெளியாகும் அவற்றில் நான்கைந்து படங்களாவது பெரும் வெற்றி பெறும். தீபாவளியைப் போலவே பொங்கல், கோடைவிடுமுறையை குறிவைத்தும் ஏராளமான படங்கள் வெளிவரும். ஒரு படத்தைத் தயாரித்தாலேயே, அதன் தகுதிக்கேற்ப விலை கிடைக்கும். வெளியிட்ட பின்பு, ரசிகர்களின் ஆதரவைப் பொறுத்து விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்குகளுக்கும் லாபம் கிடைக்கும். திரைப்படத்துறையில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வருடம் முழுக்க வேலை கிடைத்தே கொண்டு இருக்கும்.

ஆனால் கடந்த தீபாவளிக்கு வெளியானது இரண்டே இரண்டு படங்கள்தான். அவையும் பெரிய நிறுவனங்கள் தயாரித்து, வெளியிட்டவை என்று இந்தப் போக்குக்கு உதாரணமும் காட்டுகிறார்கள். இதற்கேற்ப தணிக்கை செய்யப்பட்டு, தியேட்டர் கிடைக்காததால் திரையிடப்பட முடியாமல் சுமார் முப்பது தமிழ் திரைப்படங்கள் பெட்டிக்குள் முடங்கிக் கிடக்கின்றன. தமிழ்த் திரையுலகில் முன்னெப்போதும் இதுபோன்ற ஒரு நிலை இருந்ததே இல்லை.

பெரிய நிறுவனங்கள் பெரிய நடிகர்களையும், பெரிய இயக்குனர்களையும் வைத்து மட்டுமே படம் தயாரிக்க முனைகின்றன. புதுமுக நடிகர்களையோ, இயக்குனர்களையோ. புதிய கதைக்கருக்களையோ அறிமுகப்படுத்தி ‘ரிஸ்க்’ எடுப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் புதிய திறமைகள் வெளிச்சத்துக்கு வருவதில் கடுமையான சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இதே நிலை தொடருமானால் புதிய திறமைகள், இன்னும் அப்பட்டமாகச் சொன்னால் இளைஞர்கள் தமிழ் திரையுலகில் நுழைய இயலாமல் அதன் இரும்புக் கதவுகள் பூட்டப்பட்டுவிடும்.

சில மாதங்களுக்கு முன்பாக வெளியிடப்பட்ட திரைப்படம் ‘வெங்காயம்’. பகுத்தறிவுக் கருத்துகளை மிகத் தைரியமாக, சமரசமின்றி முன்வைத்த திரைப்படம் சங்ககிரி ராஜ்குமார் என்கிற இளைஞர் இயக்கிய இப்படத்தை, தமிழ் திரைப்படவுலகின் பெரிய இயக்குனர்கள் மனதாரப் பாராட்டியிருந்தார்கள்.

மிகக்குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் என்பதால் வெளியிட மிகவும் சிரமப்பட வேண்டியதாயிற்று. சொற்ப அரங்குகளில் போதிய விளம்பரச் செலவுகள் செய்யப்பட முடியாமல் ‘வெங்காயம்’ வெளியானது. திரைப்படத்தைப் பார்த்த ரசிகர்களின் விமர்சனத்தைக் கேட்ட மக்கள் இப்படத்தைக் காண ஆர்வம் காட்டினார்கள். துரதிருஷ்டவசமாக இதற்குள் ஒருவாரம் முடிந்து, பெரிய படம் ஒன்று வெளியாக ஏதுவாக எல்லா தியேட்டர்களிலும் ‘வெங்காயம்’ எடுக்கப்பட்டு விட்டது. நல்ல படம் என்பதால் இப்படத்தை மறுவெளியீடு செய்ய, இயக்குனர் சேரன் தாமாகவே முன்வந்து முயற்சிகள் எடுத்தும், இன்னும் வெங்காயத்துக்கு விடிவு கிடைக்கவில்லை.

“படம் எடுப்பது பெரிய விஷயமல்ல. அதை மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதுதான் முக்கியம். சிறு பட்ஜெட் படங்கள் போதிய விளம்பரம் இல்லாமல் போய்தான் மக்களைச் சென்று சேரமுடியவில்லை” என்று இந்த நிலைக்கு சமீபத்தில் ஒரு ஆடியோ வெளியீடு விழாவில் விளக்கம் சொன்னார் நடிகரும், இயக்குனரும், தயாரிப்பாளருமான அர்ஜூன்.

‘சினிமா வியாபாரம்’ என்கிற புத்தகத்தை எழுதியவரும், சினிமாத் துறையில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி வருபவருமான சங்கர் நாராயண், “கலை என்று சொல்லுவதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். இங்கே சினிமாவும் ஒரு வியாபாரம் என்பதை முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டும். நஷ்டப்பட்டு கலை வளர்க்க இங்கு யாரும் தயாரில்லை” என்கிறார்.

“காலத்துக்கேற்ப எல்லாத் தொழிலுமே தத்தம் வடிவத்தை மாற்றிக் கொள்கின்றன. சினிமாவும் அவ்வாறு மாறுவது இயல்பானதுதான். படத்துக்கு பட்ஜெட் ஒரு கோடி ரூபாய் என்றால், விளம்பரத்துக்கு ஐம்பது லட்சமாவது செலவு செய்தாக வேண்டும். நல்ல படமெடுத்திருக்கிறோம், நிச்சயம் ஓடும் என்கிற குருட்டு நம்பிக்கையில், விளம்பரத்தில் சிக்கனம் காட்டிவிட்டால் தியேட்டர்கள் நஷ்டத்துக்கு ‘நல்ல படத்தை’ ஓட்ட முடியாது.

குப்பைப் படத்துக்கு நல்ல பப்ளிசிட்டி கொடுத்தாலும், அது ஓடாது. சமீபத்தில் பெரிய நடிகர்கள், இயக்குனர்கள் பங்கேற்று வெளிவந்த சில தோல்விப்படங்களையே இதற்கு உதாரணம். நல்ல படம், நல்ல பப்ளிசிட்டி என்பதுதான் இனி வெற்றிப்படத்துக்கான சூத்திரம். படத்துக்கு பட்ஜெட் போடும்போதே, விளம்பரத்துக்கும் பெரும் பங்கு ஒதுக்க வேண்டும்” என்று படமெடுப்பவர்களுக்கு ‘ஐடியா’ கொடுக்கிறார் சங்கர் நாராயண். இவர் தியேட்டர் நடத்தியிருக்கிறார். விநியோகம் செய்திருக்கிறார். இணை இயக்குனராகவும் பணியாற்றியிருக்கிறார். நடிகரும் கூட.

“விளம்பரம், பிரம்மாண்ட தயாரிப்பு என்றெல்லாம் இருந்தாலும் கூட பெரிய படங்களுக்கும் சில நேரங்களில் சிக்கல் ஏற்படுவதுண்டு. தொடர்ச்சியாக தோல்விப் படங்களைத் தந்தவர்களுக்கு தியேட்டர் கிடைப்பதில் சிரமம் ஏற்படும். நடிகர் விஜய்யின் காவலன் திரைப்படத்துக்கு இம்மாதிரி சிக்கல் ஏற்பட்டது. இப்போது சிம்புவின் ‘ஒஸ்தி’ படத்துக்கும் இதே பிரச்சினை ஏற்பட்டது. சிறுபடங்களுக்கு மட்டும் தியேட்டர் ஆதரவு இல்லை என்று சொல்வது நிஜமல்ல. தியேட்டர் நடத்துவதின் சிரமம் தியேட்டரை நடத்துபவர்களுக்குதான் தெரியும். எத்தனை திரையரங்கு உரிமையாளர்கள் தியேட்டரை இடித்துவிட்டு கல்யாண மண்டபமோ, ஷாப்பிங் காம்ப்ளக்ஸோ கட்டுகிறார்கள் என்று உங்களுக்கெல்லாம் தெரியும்தானே?” என்கிறார் பெயர் வெளியிட விரும்பாத திரையரங்கு நிர்வாகி ஒருவர்.

இந்தப் பிரச்சினையை அலசும்போது ஒருமாதிரியாக தமிழ் திரையுலகை இருள் கவிழ்ந்திருப்பதைப் போன்ற தோற்றம்தான் தெரிகிறது. ஆனாலும் ஒரு சில வெளிச்சக் கீற்றுகளும் இல்லாமல் இல்லை.

ஓராண்டுக்கு முன்பு இயக்குனர் பிரபு சாலமன் இயக்கிய ‘மைனா’ பெரும் வணிக வெற்றி கண்ட சிறு முதலீட்டுப் படம். தரமான படமாக எடுத்ததால், பெரிய நிறுவனம் ஒன்று தானே முன்வந்து இப்படத்தை நன்கு விளம்பரப்படுத்தி, நிறைய திரையரங்குகளில் திரையிட்டு பிரம்மாண்டமான வெற்றியை கண்டது. நல்ல படம் எடுத்தால் மட்டும் போதாது, அதை நல்ல முறையில் வியாபாரமும் செய்தால் வெற்றி நிச்சயம் என்பதற்கு ‘மைனா’ ஓர் எடுத்துக்காட்டு.

சாட்டிலைட் டிவிக்களை நிர்வகிக்கும் நிறுவனங்களே சினிமா நிறுவனங்களாகவும் உருவெடுத்து வருவது சமகாலப் போக்கு. இப்போது விமர்சனத்துக்குள்ளாகும் ‘பெரிய நிறுவனங்கள்’ பெரும்பாலும் இவைதான். இவர்களது டிவிக்களுக்கு புதிய படங்களைப் பெறுவதில் ஏற்பட்ட பிரச்சினைகளைத் தொடர்ந்தே, இந்த தொழிலுக்குள் இவர்களும் நுழைய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இந்நிறுவனங்களே தமிழகத்தின் பெரும்பாலான திரையரங்குகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து வைத்திருக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால், தரமற்ற படங்களை இந்நிறுவனங்கள் நினைத்தாலும் ஓடவைக்க முடியாது என்பதுதான் உண்மை.

பெரிய நிறுவனங்களுக்கான பிரச்சினைகளே வேறு. பட்ஜெட்டில் பாதியை பெரிய ஹீரோவுக்கோ, பெரிய இயக்குனருக்கோ ஒதுக்கியாக வேண்டியிருக்கிறது. ஹீரோக்களுக்கே பதினைந்து கோடி, இருபது கோடி கொட்டியழுதுவிட்டு, படத்துக்கும் பிரம்மாண்டமாக செலவிட்டுவிட்டு, நிறைய திரையரங்குகளில் வெளியிட்டால்தான் கையைக் கடிக்காமலாவது பார்த்துக்கொள்ள முடியும்.
பிழைப்புக்கே வழியில்லை என்று பட்ஜெட் பட இயக்குனர்கள் புலம்பிக் கொண்டிருக்கும் இதே தமிழ் சினிமாவில்தான், இன்று இந்தியாவிலேயே அதிக வசூலை ஈட்டிய எந்திரனும் வெளிவந்திருக்கிறது. நன்கு திட்டமிடப்பட்ட சினிமா, வசூலை வாரிக்குவிக்கும் என்பதுதான் எளிய சூத்திரம். இது எந்திரனுக்கும் பொருந்தும், மைனாவுக்கும் பொருந்தும்

சிறிய படங்களுக்கு அரங்குகள் கிடைக்காத பிரச்சினை என்பதற்கு பெரிய பட்ஜெட் படங்கள் மட்டுமே காரணம் என்றில்லை. அதுவும் ஒரு காரணம் மட்டுமே. சினிமாத் தொழில் மாறிக் கொண்டிருக்கிறது என்கிற யதார்த்தத்தை சிறு முதலீட்டில் படமெடுக்கும் தயாரிப்பாளர்கள் முதலில் உணரவேண்டும்.

(நன்றி : புதிய தலைமுறை)

10 ஜனவரி, 2012

வால்கள்!


குறும்பு குத்தாட்டம் போடும் கும்மிகளை ஏன் ‘வாலு’ என்று அழைக்கிறார்கள் என்ற சந்தேகம் சிறுவயதில் இருந்தது. குரங்கு என்று நாகரீகமாக அழைக்கக் கூடாது என்ற நல்லெண்ணத்திலேயே ‘வாலு’ வந்தது என்று பிற்பாடுதான் தெரியவந்தது. நரிக்கும் வாலுண்டு, ஓநாய்க்கும் வாலுண்டு. ஏனோ தந்திரவாதிகளை வாலு என்று அழைக்காமல் ஓநாய் என்கிறார்கள். குரங்கு நல்ல விலங்கு என்பதாலோ?

ராஜேந்திரகுமார் என்றால் என்ன நினைவுக்கு வரும்? முதலில் நினைவுக்கு வருவது தொப்பி. அடுத்தது ‘ஙே’. இந்த ‘ஙே’ என்ற எழுத்தை தமிழில் எனக்குத் தெரிந்து பயன்படுத்தியவர் இவர் மட்டும்தான். ஒருவேளை சங்க இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம். ’ஙே’-வுக்கு அடுத்தது பேய்க்கதைகள். சிறுவயதில் அவரது நிறைய பேய்க்கதைகளை படித்து பயந்திருக்கிறேன். அப்புறமாக பேய்களோடு வசதியாக சம்மணம் போட்டு உட்கார்ந்துகொண்டு டிஃபன் சாப்பிடும் லெவலுக்கு பழகிப்போனது.

ராஜேந்திரகுமாரின் பேய்கள் பொதுவாக நல்ல பேய்கள். கெட்டவரை பழிவாங்குவதோடு சமர்த்தாக மரத்தில் தொங்க ஆரம்பித்துவிடும். டீனேஜுக்குள் நுழையும்போது அவரது சில எழுத்துக்கள் கிளுகிளுப்பும் ஊட்டியதுண்டு. விட்டலாச்சாரியா படங்களில் வருவதுபோல சில பேய்கள் இவரது கதைகளில் மனிதர்களோடு செக்ஸ் வைத்துக் கொண்டதும் கூட நினைவுக்கு வருகிறது.

மாலைமதி, குங்குமச்சிமிழ் மாதிரியான பத்திரிகைகளின் தீவிரவிசிறியான அம்மா மட்டுமே ராஜேந்திரகுமாரை ஒரு நகைச்சுவை எழுத்தாளர் என்று என்பார். அவர் குமுதத்தில் எழுதிய நகைச்சுவைத் தொடர் ‘வால்கள்’. மாணவியாக இருந்தபோது இடைவிடாமல் படித்ததாக அம்மா சொல்லுவார். வயிறுகுலுங்க சிரிக்க வைக்கும் தொடராம். ‘வால்கள்’ வந்தபோது அம்மாவுக்கு எட்டுவயசாம். அப்போன்னா ராஜேந்திரகுமாருக்கு என்ன வயசு இருக்கும்? தாத்தா வீட்டில் ’பொன்னியின் செல்வன்’ தவிர்த்து வேறு தொடர்கதைகளை ‘பைண்டு’ செய்து வைக்கும் வழக்கம் இல்லாததால் எனக்கு எதிர்ப்பார்ப்புகளை கிளப்பிய வால்களை நீண்டகாலமாக வாசிக்கும் வாய்ப்பே கிடைக்காமல் இருந்தது.

கிழக்குப் பதிப்பகத்தின் அதிரடிக் கண்காட்சி ஒன்றில் ‘வால்கள்’ கிடைத்தது ஆச்சரியமான ஒன்று. மே 2006லேயே வெளியிட்டிருக்கிறார்கள். எனக்கு எப்படி தெரியாமல் போயிற்று?

நூலை விடுங்கள். கிழக்கு தந்திருக்கும் முன்னுரை நல்ல சுவாரஸ்யம். ராஜேந்திரகுமாருக்கு வாசகர் வட்டம் பரவியதே வால்களுக்குப் பின்னர்தானாம். 1963ல் இது தொடராக வந்தபின்னர் ஏராளமான தொடர்கதைகள், சிறுகதைகளை எழுதி தமிழ்வார இதழ்களின் சூப்பர்ஸ்டாராக திகழ்ந்தாராம். இதே காலக்கட்டத்தில் ராஜேஷ்குமார் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்திருப்பார் என்று நினைக்கிறேன். திரைப்படத்துறையிலும் ராஜேந்திரகுமார் வெற்றிகண்டதாக முன்னுரையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. என்னென்ன படங்கள் என்று யாராவது பெருசுகள் பின்னூட்டத்தில் எடுத்துத்தந்தால் தேவலை.

மாவடிபுரம் லேடி சாமுவேல் நினைவு பெண்கள் உயர்நிலைப்பள்ளி. ஒன்பதாவது வகுப்பு ‘பி’ பிரிவைக் கண்டாலே மாவடிபுரத்துக்கு அலர்ஜி. அந்த ஊரின் வால்கள் மொத்தத்தையும் இந்த பிரிவிலேயே சிறை வைத்திருப்பார்கள். ஒவ்வொன்றும் ஒரு யமன். பள்ளி ஆசிரியைகளுக்கோ அந்த வகுப்புக்கு போகும் ஒவ்வொரு பீரியடும் சிம்ம சொப்பனம் தான். உள்ளே புகுந்ததுமே ‘பே’ என்று பேய்க்கத்து கத்தி அலறவைப்பார்கள். ஆசிரியைகள் ’ஙே’ என்று விழிக்க வேண்டியதுதான்.

லீடர் அணிலா, சினிமாநட்சத்திரத்தின் தங்கை பிரேமாதேவி, மைதிலி, வைதேகி, ரேவம்மா, போட்டோகிராபர் சோணாச்சலம்,சீதா, விஜயா, மிலிட்டரி புருஷன் அடிக்கடி கொஞ்சும் மரகதம் டீச்சர், தலைமையாசிரியை என்று நிறைய கேரக்டர்கள். வாலுகள் சமைக்கிறார்கள், படிக்கிறார்கள், பிக்னிக் போகிறார்கள், சினிமா பார்க்கிறார்கள், நூல் முழுக்க கலகலப்பு. ஆனால், நிச்சயமாக இது குழந்தைகள் இலக்கியம் அல்ல. ஆண்ட்டிகள் படித்தால் மலரும் நினைவுகள். ஸ்கூல் ஃபிகர்கள் படித்தால் நடப்பு வாழ்க்கை. ஆண்களுக்கோ டீனேஜ் பெண்களின் புது உலகம். இளமையாக சுவாரஸ்யமாகவே இருக்கிறது. நிச்சயம் வாசிக்கலாம். 1960 என்றாலே பிளாக் & ஒயிட்டில் அழுதுவடியும் படங்கள் நினைவுக்கு வருகிறது. ஃபிலிம் மட்டும் தான் கருப்புவெள்ளை, வாழ்க்கை அப்போதும் கலர்ஃபுல்லாகவே இருந்தது என்பதற்கு இந்நூல் நல்ல ஆதாரம்.

ஆனால், எனக்கு அம்மா சொன்னமாதிரி குலுங்க குலுங்க சிரிக்கவைக்கவில்லை. கிழக்கு பதிப்பகம் நூலின் முன்னுரையில் குறிப்பிட்டிருப்பது மாதிரி ஓரிரு இடங்களில் அதிகபட்சமாக புன்னகை வந்தது அவ்வளவுதான். கிழக்கு பதிப்பக நூல்கள் மீது பலரும், பலவிதமான விமர்சனங்களை வைப்பதுண்டு. என்னுடைய விமர்சனம் என்னவென்றால் இவர்கள் நகைச்சுவை என்று வகைப்படுத்தி பிரசுரிக்கும் நூல்கள் எனக்கு நகைச்சுவையை வரவழைப்பதில்லை, கிரேஸிமோகன் நூல்கள் மாதிரியான ஓரிரண்டு நீங்கலாக. மற்றபடி வெகுஜனவாசிப்புக்கான புதிய தளத்துக்கான கதவுகளை மிக விசாலமாகவே திறந்துவைத்திருக்கிறார்கள் கிழக்குப் பதிப்பகத்தார்.


நூலின் பெயர் : வால்கள்!

நூல் ஆசிரியர் : ராஜேந்திரகுமார்

விலை : ரூ.70/-

பக்கங்கள் : 96

வெளியீடு : கிழக்கு பதிப்பகம்,
177/103, முதல் தளம், அம்பாள்ஸ் பில்டிங், லாயிட்ஸ் ரோடு,
ராயப்பேட்டை, சென்னை - 600 014.
தொலைபேசி : 044-42009601
தொலைநகல் : 044-43009701

9 ஜனவரி, 2012

இரும்புக்கை மாயாவிக்கு வயது 40

‘முத்து காமிக்ஸ்’, ‘லயன் காமிக்ஸ்’, ‘திகில் காமிக்ஸ்’, ‘மினி லயன்’, ‘ஜூனியர் லயன்’, ‘காமிக்ஸ் கிளாசிக்ஸ்’ என்றெல்லாம் நம் சிறுவயது வாழ்க்கையை சுவாரஸ்யப்படுத்திய காமிக்ஸ்கள் எத்தனை... எத்தனை? இந்த காமிக்ஸ் பத்திரிகைகளுக்கெல்லாம் பிள்ளையார் சுழி போட்ட ‘முத்து காமிக்ஸ்’க்கு இந்த பொங்கலோடு வயது நாற்பது என்று சொன்னால் நம்புவதற்கு கொஞ்சம் சிரமம்தான். ஆனாலும் நம்பித்தான் ஆகவேண்டும்.

1972 பொங்கலுக்கு ‘முத்து காமிக்ஸ்’ வெளிவந்தபோது, அதோடு முதல் இதழ் கண்ட இன்னொரு பிரபலமான பத்திரிகை ‘துக்ளக்’!

இந்தியாவிலேயே தொடர்ச்சியாக நாற்பது ஆண்டுகளாக காமிக்ஸ் ஒரு இயக்கமாக வாழ்வது தமிழில் மட்டுமே நடந்துவரும் சாதனை.அந்த நாட்களை மகிழ்ச்சியோடு நினைவு கூர்கிறார் ‘முத்து காமிக்ஸின்’ நிறுவனர் சவுந்தரபாண்டியன்.

"ஐம்பதுகளில் இருந்தே எங்கள் குடும்பம் சிவகாசியில் அச்சு தொடர்பான தொழில்களில் ஈடுபட்டிருக்கிறது. ஐரோப்பாவில் இருந்து கலர் ஆப்செட் இயந்திரம் ஒன்றினை இறக்குமதி செய்வது எங்கள் திட்டமாக இருந்தது. நமக்கு புதியது என்பதால், அந்த இயந்திரத்தை இயக்குவதற்கு பயிற்சி தேவைப்பட்டது. அதற்காக 1967ல் சென்னைக்கு வந்தேன். நாகிரெட்டியின் வடபழனி அச்சகத்தில் அந்த இயந்திரம் இருந்தது. பயிற்சிக்காக இங்கே வந்தபோது துடிப்பான இளைஞனாக இருந்ததால் நாகிரெட்டிக்கு என்னை மிகவும் பிடித்துப் போனது. குழந்தைகளிடையே பிரபலமான ‘அம்புலிமாமா’ பத்திரிகையை நாகிரெட்டிதான் அச்சடித்து, வெளியிட்டு வந்தார்.

அங்கே அச்சடிக்கப்படும் பத்திரிகைகளை எல்லாம் ஆவலோடு வாசிப்பேன். ‘ஃபால்கன் காமிக்ஸ்’ என்று ஐரோப்பிய காமிக்ஸ்களை தமிழில் மொழிபெயர்த்து வெளியிடுவார்கள். அந்த காமிக்ஸ்க்கு பரிந்துரைக்கப்பட்ட ஒரு பாத்திரம் ‘இரும்புக்கை மாயாவி’. ஏனோ அவர்களுக்கு இவரைப் பிடிக்கவில்லை. மாறாக என்னை ரொம்பவும் கவர்ந்துவிட்டார் ‘மாயாவி’. பத்து மாத அச்சு இயந்திரப் பயிற்சி முடிந்து ஊருக்குப் போயும் மனம் முழுக்க ‘இரும்புக்கை மாயாவி’ நிறைந்திருந்தார். நாமே ஏன் ஒரு காமிக்ஸை தொடங்கக்கூடாது என்று நினைத்தேன்.

அடுத்த ஆண்டே லண்டனுக்கு பயணித்து ‘இரும்புக்கை மாயாவி’யை தமிழில் வெளியிடுவதற்கான உரிமைகளை பெற்றேன். தகுந்த காலநேரம் பார்த்து 1972 பொங்கலுக்கு ‘முத்து காமிக்ஸி’ன் முதல் இதழை கொண்டு வந்தேன். முதல் இதழை கையில் எடுத்துப் புரட்டிப் பார்க்கும்போது, என் முதல் குழந்தையை கையில் வாங்கியபோது கிடைத்த பரவசத்தை அடைந்தேன். விளையாட்டாக நாற்பது ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்போது அந்த கணத்தை நினைத்தாலும் சிலிர்க்கிறது..." பழைய நினைவுகளில் மூழ்கிப் போனார் சவுந்தர பாண்டியன்.

அப்பாவின் காமிக்ஸ் ஆர்வம் இவரது மகன் விஜயனுக்கும் தொற்றிக் கொண்டது. விளைவு, 1984ல் ‘லயன் காமிக்ஸ்’ அறிமுகம். ‘லயன் காமிக்ஸி’ன் ஆசிரியரானபோது விஜயனுக்கு வயது ஜஸ்ட் பதினேழுதான்.

‘முத்து காமிக்ஸ்’க்கு முகவரி ‘இரும்புக்கை மாயாவி’ என்றால், ‘லயன் காமிக்ஸ்’க்கு ஆரம்பக் காலத்தில் கை கொடுத்த ஹீரோ ‘சிலந்தி மனிதன் ஸ்பைடர்’. வாசகர்களிடையே பரபரப்பான வரவேற்பினை ‘லயன்’ பெற, அடுத்தடுத்து ஜீனியர், மினி லயன்கள் உருவாயின. ‘திகில் காமிக்ஸ்’ என்ற பெயரில் த்ரில்லர் காமிக்ஸ்களையும் வெளியிட்டார்கள். முத்து, லயன் காமிக்ஸ்களின் பழைய கதைகளை, புதிய வாசகர்களுக்கு தருவதற்கு ஏதுவாக ‘காமிக்ஸ் க்ளாசிக்ஸ்’ என்கிற புதிய காமிக்ஸ் பத்திரிகையும் தொடங்கப்பட்டது.

சவுந்தரபாண்டியனைத் தொடர்ந்து அவரது மகன்கள் விஜயன், பிரகாஷ் ஆகிய இருவரும் காமிக்ஸ் தொழிலில் ஈடுபட்டதைப் போலவே, இப்போது மூன்றாவது தலைமுறையாக விஜயனின் மகன் விக்ரமும் இதில் ஆர்வம் செலுத்துகிறார். இவர்களது குடும்பத்துக்கு காமிக்ஸ் என்பது பெரியதாக லாபம் தரும் தொழிலல்ல. ஆர்வத்தின் பேரிலேயே இத்தனை ஆண்டுகளாக தொடர்ச்சியாக இயங்கி வருகிறார்கள்.

இத்தனை ஆண்டு பயணத்தில் எத்தனையோ சாதனை மைல் கற்களை வாசகர்களின் ஆதரவோடு அனாயசமாக தாண்டியிருக்கிறார்கள். ஓராண்டுக்கு முன்பு இவர்கள் 860 பக்க அளவில் வெளியிட்ட ஒரே கதையான ‘இரத்தப் படலம்’ குறிப்பிடத்தக்கது. இந்திய அளவிலேயே இவ்வளவு பிரமாண்டமாக, அதிக பக்கங்கள் அளவில் காமிக்ஸ் வெளியிடப்பட்டது இதுவே முதன்முறை. 200 ரூபாய் விலையிருந்தாலும் ஆயிரத்து இருநூறு பிரதிகளுக்கு மேல் விற்று பெரும் சாதனை புரிந்தது. பெரிய எழுத்தாளர்களின் நாவல்களின் விற்பனைக்கே சவால் விடும் எண்ணிக்கை இது.

"இன்றும் காமிக்ஸ் என்பது சிறுபிள்ளை விளையாட்டாக இங்கே பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு அளவே இருக்கும் நாடான பிரான்ஸில் ஒரு காமிக்ஸ் வெளியிடப்பட்டால் நாலு லட்சம் பிரதிகள் வரை விற்பனையாகிறது. நாங்கள் அதிகபட்சம் ஒரு காமிக்ஸை முப்பத்தி இரண்டாயிரம் பிரதிகள் வரைதான் விற்றிருக்கிறோம். காமிக்ஸ் இங்கே எல்லோருக்குமான கலாசாரமாக உருவெடுக்கவில்லை. எங்களது ‘இரத்தப் படலம்’ போன்ற கதைகள் தரம் அடிப்படையில் எந்தவொரு இலக்கியத்துக்கும் குறைந்ததல்ல. நாற்பதைக் கடந்த வாசகர்கள் எங்களது கதைகளை இன்றும் ரசிக்கிறார்கள். காமிக்ஸ் என்பது சிறுவர்களுக்கான சமாச்சாரம் என்றில்லாமல், அனைவரும் வாசித்து மகிழ வேண்டியது என்பதை நாம் உணரவேண்டும்’’ என்று ஆதங்கப்படுகிறார் ‘லயன் காமிக்ஸ்’ ஆசிரியர் விஜயன்.

இந்த ஆண்டு முதல் இவர்களது காமிக்ஸ்கள் வடிவம், உத்தி அடிப்படையில் பெரும் மாற்றம் கொள்கிறது. இந்த பொங்கலுக்கு நூறு ரூபாய் விலையில் சூப்பர் ஹீரோக்கள் அசத்தும் அட்டகாசமாக ஒரு கலெக்ஷனை அறிமுகப்படுத்துகிறார்கள். சென்னை புத்தகக் காட்சியிலும் இவர்களது காமிக்ஸ் புத்தகங்கள் இடம்பெற ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

அவங்க ரெடி, நாம ரெடியா?

எழுதியவர் : அணில் :-)

நன்றி : தினகரன் வசந்தம் (08-01-2012 இதழ்)