7 செப்டம்பர், 2012

ஆயிரம் கொக்குகளின் கதை!


ஆகஸ்ட் 6, 1945. இரண்டாம் உலகப்போர் உச்சத்தை அடைந்திருந்தது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக ’பியர்ல் ஹார்பர்’ தாக்குதல் மூலம் தன் நாட்டை சிதைத்த ஜப்பானை பழிக்குப்பழி வாங்க அமெரிக்கா தொடை தட்டிக் கொண்டிருந்தது. அமெரிக்க விமானப்படை முதன்முதலாக அணுகுண்டுகளை ஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது வீசியது. நொடிப்பொழுதில் பேரழிவு. புழுதி அடங்கியதும் பார்த்தபோது ஒரு லட்சத்து நாற்பதாயிரம் அப்பாவி மக்கள் உயிரிழந்திருந்தார்கள்.
சடாகோ சஸாகிக்கு அப்போது வயது இரண்டு. குண்டு வீசப்பட்ட இடத்துக்கு ஒரு மைல் தூரத்தில்தான் அவளது வீடு இருந்தது. அணுகுண்டின் வீரியத்தால் பூகம்பம் வந்ததுபோல அவளது வீடு அதிர்ந்தது. சஸாகி ஜன்னல் வழியாக தூக்கியெறியப் பட்டாள். அவளது அம்மா அலறியவாறே தெருவுக்கு வந்து சிதிலங்களுக்கு இடையே சஸாக்கியின் உடலை கண்டெடுத்தாள். தன் செல்லமகள் இறந்துவிட்டாள் என்று கருதி கதறியபடியே சஸாக்கியை கட்டியணைத்தாள். உடலில் சூடு மிச்சமிருந்தது. இதயம் துடித்துக் கொண்டிருந்தது. ஆண்டவனுக்கு நன்றி சொல்லியவாறே சஸாக்கியை தூக்கிக்கொண்டு மருத்துவர்களிடம் ஓடினாள். சஸாக்கி பிழைத்தாள். காதுக்குப் பின்னான கழுத்துப் பகுதியிலும், கால்களிலும் காயம்.

கொடுங்கனவாய் இரவுகளில் மிரட்டிக் கொண்டிருந்த போர் ஒருவாறாய் முடிவுக்கு வந்தது. ஜப்பானிய மக்கள் தன்னிகரற்ற தன்னம்பிக்கையால் மேலெழத் தொடங்கினார்கள். சஸாக்கியோடு சேர்த்து அவளது தாய்க்கு மூன்று குழந்தைகள். காலனை வென்றவள் என்பதால் சஸாக்கி மீது தனி பிரியம். சஸாக்கி ஆரோக்கியமான குழந்தையாக வளர்ந்தாள். படுசுட்டி. பள்ளியிலேயே வேகமாக ஓடக்கூடியவள் என்பதால், அவள் ஓட்டப்பந்தய வீராங்கனையாக உருவெடுப்பாள் என்று அனைவரும் நம்பினர்.
பன்னிரெண்டு வயதாகி இருந்தபோது தன்னுடைய கால்களின் வலுவை இழந்துவருவதாக சஸாக்கி நினைத்தாள். பரிசோதித்த மருத்துவர் கண்ணாடியை கழட்டிக்கொண்டே உதட்டைப் பிதுக்கினார். ஏதோ தீவிரமான நோய் என உணர்ந்த பெற்றோர் உடனடியாக ஹிரோஷிமா ரெட்க்ராஸ் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். போர் முடிந்துப்போன கொடுங்கனவாக இல்லாமல் சஸாக்கியை வேறு வடிவில் துன்புறுத்தியது. அணுகுண்டு வெளிப்படுத்திய கதிர்வீச்சால் அவளுக்கு லுக்கேமியா எனப்படும் கேன்சர் நோய் பாதித்திருந்தது. சஸாக்கியின் வாழ்நாள் இன்னும் சிறிது மாதங்களில் முடிந்துவிடுமென மருத்துவர்கள் சொன்னார்கள்.

நாளுக்கு நாள் சஸாக்கி மெலிந்துவந்தாள். நோய் அவளை தீவிரமாக படுத்தத் தொடங்கியது. மரணம் நிச்சயம் என்று தெரிந்தநிலையில் இன்னும் கொஞ்சநாள் வாழ அவள் ஆசைப்பட்டாள். ஒருநாள் அவளைப் பார்க்க மருத்துவமனைக்கு அவளின் உயிர்த்தோழி சிஸுகோ வந்தாள். அவளிடம் நிறைய பேப்பர் துண்டுகள் இருந்தன. ஒரு துண்டை எடுத்து ஓரிகாமி (பேப்பர் மூலமாக பொம்மைகளை உருவாக்கும் கலை) முறையில் கொக்கு ஒன்றை செய்து பரிசாகக் கொடுத்தாள். நம்மூரில் கருடனை வணங்குவதுபோல, ஜப்பானியர்களுக்கு கொக்கு வழிபடக்கூடிய பறவை. “இதே மாதிரி ஆயிரம் கொக்குகளை நீயும் உருவாக்கு. உன் கோரிக்கைக்கு கடவுள் செவிமடுப்பார்” என்று ஆறுதல் சொன்னாள் சிஸுகோ. நாம் ஆயிரத்தெட்டு முறை ஸ்ரீராமஜெயம் எழுதுவதைப் போல, இது ஜப்பானியர்களின் பாரம்பரிய நம்பிக்கை.

இந்த நம்பிக்கை சஸாக்கியை தொற்றிக் கொண்டது. தோழி கொடுத்த பேப்பர்களை மடக்கி, மடக்கி கொக்குகளை உருவாக்கத் தொடங்கினாள். ஆரம்பத்தில் ஒரு நாளைக்கு அவளால் இருபது கொக்குகளை உருவாக்க முடிந்தது. நாளுக்கு நாள் உடல் மோசமடைந்துக் கொண்டே செல்ல அவளால் நிறைய கொக்குகளை உருவாக்க முடியவில்லை. படுத்த படுக்கையாக இருந்த நிலையிலும் ஒரு நாளுக்கு மூன்று கொக்குகளையாவது செய்துக் கொண்டிருந்தாள். இந்த வேண்டுதல் கடவுளின் காதை எட்டும். தன் உயிரை காப்பார் என்று தீவிரமாக நம்பினாள்.
கடவுளுக்கு கண் மட்டுமல்ல. காதுமில்லை. 1955, அக்டோபர் 25ஆம் தேதி சஸாக்கி மரணமடைந்தாள். மொத்தம் 644 கொக்குப் பொம்மைகளை அவள் கைப்பட செய்திருந்தாள். கடைசிவரை தன்மீது நம்பிக்கை வைத்து செயல்பட்ட தன்னுடைய குழந்தையை கடவுள் கைவிட்டுவிட்டார்.

ஆனாலும் அவளது நண்பர்களும், பெற்றோரும் கடவுளை பழிக்காமல் சஸாக்கியின் ஆசையை நிறைவேற்றினார்கள். மீதி 356 கொக்குகளை சஸாக்கியின் சார்பாக அவர்களே உருவாக்கினார்கள். ஆயிரம் கொக்குகளும் சஸாக்கியோடு சேர்த்து புதைக்கப்பட்டது.

“என் குழந்தை ஒவ்வொரு கொக்கையும் மிகக்கவனமாக பேப்பரை மடித்து உருவாக்கினாள். ஒரு கட்டத்தில் பேப்பர் காலியானபோது, மருந்துச் சீட்டுகளைக் கொண்டு பொம்மைகளை செய்தாள். அந்த வேலையை செய்யும்போது அவளது கண்கள் மின்னுவதை கண்டிருக்கிறேன். குறுநகையால் உதட்டில் மகிழ்ச்சி வெளிப்படும். ஒட்டுமொத்தமாக அவளது முகம் நம்பிக்கையில் ஜொலிக்கும். இதை செய்வதின் மூலம் எப்படியும் உயிர் பிழைத்துவிடுவாள் என்று அவள் தீவிரமாக நம்பினாள்” என்று பிற்பாடு சொன்னார் சஸாக்கியின் தாய்.

சஸாக்கியின் உருக்கமான கதை ஜப்பான் எங்கும் பரவியது. எந்த பாவமும் அறியாமல் அணுக்கதிர் வீச்சின் பாதிப்பால் இறந்த ஆயிரமாயிரம் ஜப்பானிய குழந்தைகளின் உருவகமாக சஸாக்கி பார்க்கப்பட்டாள். சஸாக்கியின் பள்ளி தோழர்கள் ஓர் இயக்கமாக உருவாகி, அவளுக்கு நினைவுச்சிலை எழுப்ப நிதி திரட்டத் தொடங்கினார்கள். உலகெங்கும் சுமார் 3,100 பள்ளிகளைச் சேர்ந்த குழந்தைகள் தங்கள் பாக்கெட் மணியில் இருந்து காசு கொடுத்தார்கள். சிறுகச்சிறுக சேர்ந்த பணத்தில் ஒன்பது மீட்டர் உயரத்தில் சஸாக்கிக்கு ஒரு வெண்கலச்சிலை உருவாக்கப்பட்டது. ஹிரோஷிமா நகரில் போர் நினைவாக உருவாக்கப்பட்ட அமைதிப்பூங்காவில் இந்த சிலை 1958ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. சிலையின் கையில் ஒரு கொக்கு. பீடத்தில் இவ்வாறாக எழுதப்பட்டது. “இது எங்கள் அழுகை. இது எங்கள் பிரார்த்தனை. உலகம் அமைதியாக இருக்கட்டும்”
 இன்று வருடா வருடம் ஆயிரக்கணக்கானோர் ஹிரோஷிமா நகருக்கு சுற்றுலாப் பயணிகளாக வந்துக் கொண்டிருக்கிறார்கள். போர் நினைவு அமைதிப்பூங்காவைப் பார்க்கிறார்கள். சஸாக்கியின் சிலையைப் பார்க்க வரும் குழந்தைகள் தவறாமல் தங்கள் கையால் பேப்பரில் உருவாக்கப்பட்ட கொக்கு பொம்மையோடு வரத்தவறுவதே இல்லை.

பிற்பாடு ஜப்பான் மீது குண்டு போட்ட அமெரிக்காவின் சியாட்டில் நகரில் ஓர் அமைதிப்பூங்கா உருவாக்கப்பட்டது. அந்தப் பூங்காவிலும் சஸாக்கியின் முழு உருவச்சிலை 1990ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. அந்தச் சிலை சில விஷமிகளால் 2003ஆம் ஆண்டு சேதம் அடைந்தது. பின்னர் சஸாக்கி குடும்பத்தினரின் வேண்டுகோளை ஏற்று அதே சிலையை சியாட்டில் நகரின் முக்கியமான இடமான க்ரீன்லேக் பூங்காவில் மீண்டும் நிறுவினார்கள்.

இன்று ஜப்பானில் சஸாக்கியின் கதை ஒவ்வொரு பள்ளியிலும் பாடமாக சொல்லப்படுகிறது. ஜப்பானியப் பெண்களுக்கு சஸாக்கி ஒரு கதாநாயகி. ஹிரோஷிமாவில் குண்டுவீசப்பட்ட ஆகஸ்ட் 6, தேசிய அமைதிநாளாக அங்கே கொண்டாடப்படுகிறது. அன்று சஸாக்கிக்கு அஞ்சலி செலுத்த ஜப்பானியர்கள் தவறுவதேயில்லை.
கடந்த ஆகஸ்ட் 6 அன்று, க்ளிஃப்டன் ட்ரூமேன் டேனியல் என்பவர், சஸாக்கியின் அண்ணன் மஸாஹிரோவை சந்தித்தார். ஹிரோஷிமா-நாகசாகி அணுகுண்டு நாசத்தில் பிழைத்து உயிர்வாழ்பவர்களுக்கு தன்னுடைய மரியாதைகளை தெரிவித்தார். ஜப்பான் முழுக்க இது பெரிய சம்பவமாக, தங்களது அமைதி கோரிக்கையை கடவுள் ஆசிர்வதித்ததாக பார்க்கப்படுகிறது. விஷயம் என்னவென்றால் க்ளிஃப்டனின் தாத்தா பெயர் ஹாரி ட்ரூமேன். ஜப்பானில் அணுகுண்டு வீசப்பட்டபோது இவர்தான் அமெரிக்க அதிபராக இருந்தார்.

(நன்றி : புதிய தலைமுறை)

5 செப்டம்பர், 2012

வாலிபன் சுற்றும் உலகம்


யார் யாரோ எம்.ஜி.ஆர் படம் எடுத்திருக்கிறேன் என்று பெருமை அடித்துக் கொள்ளும் காலம் இது. எம்.ஜி.ஆர் படத்தை எம்.ஜி.ஆரின் ரசிகனால் மட்டுமே எடுக்க முடியும். ஒரு ரசிகர் எடுத்திருக்கிறார். ‘புரட்சித்தலைவரின் பாணியில் எடுக்கப்பட்ட புதிய படம்’ என்று விளம்பரப்படுத்தியிருக்கிறார்கள்.

ஒரு ஊரில் ஒரு அப்பா, ஒரு அம்மா. அவர்களுக்கு இரண்டு மகன்கள். ஒரு மகள். ‘தாயிற் சிறந்த கோயிலுமில்லை, தந்தை சொல் மிக்க மந்திரமில்லை’ என்கிற பூவை செங்குட்டுவனின் பாட்டு அவர்களது குடும்பப்பாட்டு. அப்பாவாக நடிப்பவர் எம்.ஜி.ஆர் பாணி உடை அணிந்திருக்கிறார். முகம் மட்டும் ஓ.ஏ.கே தேவர் மாதிரியிருக்கிறது. கொஞ்சம் கருப்பு. அப்பாவின் பெயர் கோபாலன். அம்மா பெயர் சத்யா. மகன்களின் பெயர் ராமன், சந்திரன்.

‘நின்னுக்கோரீஈஈ வரண்ணும்’ என்று கவுண்டமணியிடம் பாட்டு கற்றுக் கொண்டவர் டாக்டராக நடித்திருக்கிறார். அவர் ஏதோ ஒரு ஃபார்முலாவை கண்டுபிடிக்கிறார். நம்பியார் அந்த ஃபார்முலாவை வெளிநாடுகளுக்கு விற்று கோடி, கோடியாய் சம்பாதிக்க திட்டமிடுகிறார்.
மாறாக கோபாலனோ அது இந்திய மக்களுக்கு உதவவேண்டும். இந்திய அரசிடம்தான் ஃபார்முலாவை ஒப்படைக்க வேண்டும் என்று போராடுகிறார். தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதை உணர்ந்த டாக்டர், அந்த ஃபார்முலாவை மறைத்து வைத்திருக்கும் மேப்பை வரைந்து ஒரு நெக்லஸ் டாலரில் மறைத்து கோபாலனிடம் கொடுத்துவிடுகிறார். விஷயம் தெரியாத நம்பியார் ஆட்கள் டாக்டரை கொலை செய்துவிட்டு, ஃபார்முலாவை தேடி அலைகிறார்கள். டாக்டரை கொன்றது கோபாலன்தான் என்று போலிஸ் தேடுகிறது. ஃபார்முலா கோபாலனிடம்தான் இருக்கும் என்று நம்பியார் ஆட்களும் தேடுகிறார்கள். கோபாலன் தப்பிக்கும் போது அவரது குடும்பம் மூன்றாக பிரிகிறது.

இங்கேதான்டைட்டில்போடுகிறார்கள்.

டைட்டில் முடிந்ததுமே புரட்சித்தலைவர் மாதிரியே உடை, மேக்கப் போட்டிருக்கும் சந்திரன்வெற்றி, வெற்றி, வெற்றிஎன்று முழங்கிக்கொண்டே வந்து தன் தாயிடம் ஆசிபெறுகிறார். சந்திரன் தன் தாயோடு வளர்ந்துவாத்யார்ஆகிறார். கோபாலனுடன் அவரது மகள் மலேசியாவில் இருக்கிறார். ராமன், விசுவாசமான வேலைக்காரனுடன் வளர்ந்து டாக்டர் ஆகிறார். ஆனால் ராமனும், சந்திரனும் டபுள் ஆக்ஷன் புரட்சித்தலைவர் இல்லை என்பது பெரிய குறை. சந்திரன் மட்டும்தான் புரட்சித்தலைவராக நடித்திருக்கிறார். குடும்பம் எப்படி சேர்கிறது, ஃபார்முலாவின் கதி என்ன ஆனது என்று கதறக்கதற படமெடுத்து ராவடி செய்திருக்கிறார் இயக்குனர் .ஆர்.லலிதசாமி.

ஹீரோ எம்.ஜி.ஆர்.சிவா லாங்ஷாட்டில் தலைவர் மாதிரிதான் இருக்கிறார். ஆனால் க்ளோஸப்பில் பார்க்கும்போது தாங்கமுடியவில்லை. படம் பார்க்கும் மக்கள் திலகத்தின் ரசிகன் ஒவ்வொருவனும் இந்தக் காட்சிகளில் ரத்தக் கண்ணீர் வடிக்கிறான். ‘லுக்தான் ஒருமாதிரி இருக்கிறதே தவிர நடனம், பாட்டு, மேனரிசம் ஆகியவற்றில் குறைவைக்கவில்லை ஹீரோ. குறிப்பாக ஒரு காட்சியில் கருப்பு பேண்ட், சிகப்புச் சட்டை, கூலிங் க்ளாஸ் அணிந்து வரும்போது நாமே சிலிர்ப்படைந்துவிட்டோம். பழைய எம்.ஜி.ஆருக்கும், புது எம்.ஜி.ஆருக்குமான வித்தியாசம் என்னவென்றால் புதியவர் செல்போன் உபயோகிக்கிறார்.

போஸ்டரில் லதா படத்தைப் பார்த்து அவர்தான் ஹீரோயினோ என்று கலவரமடைந்து இருந்தோம். நல்லவேளையாக அவர் புரட்சித்தலைவரின் அம்மாவாக நடித்திருக்கிறார். சீரியல் அம்மாக்களின் நடிப்பை விஞ்சும் வகையில் சிறந்த நடிப்பு.

படத்தின் ஆரம்பத்தில் வரும் நம்பியார் படம் முழுக்க வராமல், அவரது மகன் அசோகன்தான் மெயின் வில்லன். அசோகன் தோன்றும் காட்சியில் எல்லாம் ரெண்டு உருட்டுக் கட்டைகள் இடமும், வலதுமாக ஜெயமாலினி பாணி டிரெஸ்ஸிங்கில் கிளுகிளுப்பூட்டுகிறார்கள். அசோகனின் அடியாட்கள் அந்த காலத்திலிருந்தே இன்னமும் படு முட்டாள்களாகதான் இருக்கிறார்கள்.

கலைஞரை எதிர்த்துபஞ்ச்டயலாக்குகளும் உண்டு. “ஊருக்குப் பிரச்சினைன்னா மேலிடத்துக்கு கடிதம்தான் எழுதுவே. உன் பொண்ணுக்கு ஏதாவதுன்னா நேராவே போயிடுவியா?” என்று புரட்சித்தலைவரின் அண்ணன் டாக்டர் ராமன், சக டாக்டரிடம் கேட்கிறார். சக டாக்டருக்கு தலையில் முடி இல்லை. கருப்புக்கண்ணாடி போட்டிருக்கிறார்.

புரட்சித்தலைவர் படங்களுக்கேயான பிரத்யேக கச்சாப் பொருட்களான அம்மா பாசம், தங்கை பாசம், பெரியவர்களுக்கு மரியாதை, அநியாயத்தை கண்டு ஆக்ரோஷமாக கொந்தளிப்பது, ஊருக்கு உழைப்பது, காதல், செக்ஸ் என்று அனைத்தையுமே கனக்கச்சிதமாக கைக்கொண்டுள்ளார் இயக்குனர். சண்டைக்காட்சிகள் சிறப்பு.

குறிப்பாக தங்கையை புரட்சித்தலைவர் மலேசியாவில் கண்டுகொள்ளும் காட்சி அபாரம்.

நீ எந்த ஊரும்மா?”

தமிழ்நாடு

உன் அப்பா

கோபாலன்

உன் அம்மா

சத்யா

உன் அண்ணன்?”

ராமன், சந்திரன்

தங்கச்சீஈஈஈஈஈஈ

நீங்க?”

நான்தாம்மா உன்னோட ரெண்டாவது அண்ணன் சந்திரன்

அண்ணாஆஆஆஆ

தங்கச்சீஈஈஈஈஈஈ

இப்படியான உருக்கமான, புதுமையான காட்சிகள் படம்நெடுக ஏராளமாக உண்டு. அம்மாவைப் பிரிந்த மகனும், மகளும் நீண்டகாலம் கழித்து காணும் காட்சி. அப்பாவைப் பிரிந்த மகன் அவரை காணும் காட்சி. கணவனும், மனைவியும் இணையும் காட்சி என்று நிறைய சொல்லலாம்.

இசை எம்.எஸ்.விஸ்வநாதன். டி.எம்.எஸ், எம்.எஸ்.வி., எஸ்.பி.பி.யெல்லாம் பாடியிருக்கிறார்கள். ‘உன்னை நான் சந்தித்தேன்பாட்டைத் தவிர்த்து மத்ததெல்லாம் டப்பா. பின்னணி இசை படு கோராமை. முத்தமிழ் பாடலின் லிரிக்ஸ் ஓக்கே. ‘உன் விழி முதல் தமிழ். உன் மொழி இரண்டாம் தமிழ். உன் இடை மூன்றாம் தமிழ். உன் நடை முத்தமிழ்என்று போகிறது. வாலி, காமகோடியான் இருவரும் பாடல்களை எழுதியிருக்கிறார்கள்.

படத்தின் மிகப்பெரிய ஆறுதல் ஹீரோயின் மீனாட்சி. ஃபேஸ்கட் அடிப்படையில் சுமாரான ஃபிகர் என்றாலும், சரியான திம்சுக்கட்டை. முதுகு 70 எம்.எம்.மாக இருப்பதில் ஆச்சரியமில்லை. இவருக்கு தொப்பையும் சினிமாஸ்கோப். படத்தில் மொத்தமே மூன்றோ, நாலோ காட்சிகள்தான். ஆனால் பாடல்காட்சிகள் அதிகம். ஒரு அருவிப் பாடலில் முழங்காலுக்கு மேலே பாவாடையை தூக்குகிறார். இடுப்புக்கு மேலே கச்சிதமாக உடலைக் கவ்விய மேலாடை அணிந்து, பயங்கர ஆட்டு ஆட்டி நடனமாடுகிறார். இவரது கவர்ச்சியில் மயங்கி காதல்வசப்பட்ட தலைவரும் வாய்ப்பை பயன்படுத்தி செம தடவு தடவியிருக்கிறார்.

எம்.ஜி.ஆர் ஃபார்முலா எல்லாம் பக்காதான். ஆனால் சிரத்தையே இல்லாமல் சீரியஸாக எடுத்து ஸ்பூஃப் மாதிரி ஆக்கிவிட்டார்கள். பட்ஜெட் சிக்கனம் அநியாயம். மலேசியா காட்சிகளை எல்லாம் உள்ளூர் ஸ்டுடியோவில் படம் எடுத்துவிட்டு, மலேசியா என்று ஸ்லைட் போடுவதெல்லாம் கொடூரம். சீரியஸாகவே சந்தானம் மாதிரி ஹீரோவை வைத்து ஒரு எம்.ஜி.ஆர் ஃபார்முலா படமெடுத்தால் நிச்சயமாக சூப்பர்ஹிட் ஆகும். இந்தப்படம் படுமொக்கை என்றாலும், ஹார்ட்கோர் வாத்யார் ரசிகர்களுக்கு மட்டும் பரிந்துரைக்கிறோம்.

க்ளைமேக்ஸில் முதல்வராக புரட்சித்தலைவி வருகிறார். ஒரிஜினல் புரட்சித்தலைவி மட்டும் இந்தப் படத்தை பார்த்தாரென்றால் படமெடுத்த இயக்குனர், தயாரிப்பாளர், ஹீரோ, ஹீரோயின், கேமிராமேன், எடிட்டர், லைட் பாய்ஸ், ஆபிஸ் பாய்ஸ் என்று யூனிட்டில் இருந்த அத்தனை பேர்மீதும் அவதூறு வழக்கு தொடுத்துவிடுவார்.

1 செப்டம்பர், 2012

முகமூடி சோடாமூடி


பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் மை பிலவ்ட் மிஷ்கின் சார்.

அடுத்த முறையிலிருந்து உங்கள் படங்கள் பேசட்டும்.