30 டிசம்பர், 2017

தாம்பூலம் முதல் திருமணம் வரை

மகிழ்ச்சி.

ஒவ்வொரு திருமணத்தின் நோக்கமும் இதுதான்.

உங்களுக்கு திருமணமாகி இருந்தால் திருமண ஆல்பத்தை உடனே புரட்டிப் பாருங்கள். இல்லையேல் உங்கள் பெற்றோருடைய, சகோதர சகோதரிகளுடைய, நண்பர்களுடைய ஆல்பத்தை பாருங்கள். போட்டோக்களில் இடம்பெற்றிருக்கும் மணமக்கள் மட்டுமல்ல. சுற்றமும், நட்பும் கூட முகத்தில் மகிழ்ச்சியை மட்டுமேதான் சுமந்திருக்கும். எல்லோரும் மகிழ்ந்திருக்கும் ஒரே இடம் திருமணக்கூடம்.

பெண் பார்ப்பதில் தொடங்கி, சாந்தி முகூர்த்தம் வரை சம்பந்தப்பட்ட மணமக்கள் இருவருமே தங்கள் வாழ்வில் கடக்கும் ஒவ்வொரு நொடியையும் வாழ்க்கை முழுக்க மலரும் நினைவுகளாக மனதில் கல்வெட்டாக பதிந்து வைத்துக் கொள்கிறார்கள்.

கெட்டிமேளம் முழங்க மணமகன் தாலி கட்டும்போது, அட்சதை போடும் அத்தனை பேருமே, “இந்த மணமக்கள் நீடூழி வாழவேண்டும்” என்று மனமார வாழ்த்துகிறார்கள். பிள்ளையையும், பெண்ணையும் பெற்ற பெற்றோர் பெரிய மனப்பாரத்தை இறக்கி வைத்ததாக நிம்மதி கொள்கிறார்கள். ஒவ்வொரு பெண்ணுக்கும் திருமணம் என்பது செகண்ட் இன்னிங்ஸ். புதிய உறவுகள், புதிய குடும்பம், புதிய வீடு என்று எல்லாமே புதுச்சூழல். எனவேதான் திருமணத்தை ‘The big day’ என்கிறார்கள்.

இருமனம் இணைவது மட்டுமல்ல திருமணம். இச்சொல்லுக்கு ‘ஓர் ஆணுக்கும், ஒரு பெண்ணுக்கும் இடையிலான வாழ்க்கை ஒப்பந்தம்’ என்று ஒருவரியில் அர்த்தம் புரிந்துக் கொள்ளலாம். ஆனால், அது மட்டும்தானா திருமணம்? இந்த வார்த்தையை வெறும் சடங்காக மட்டும் சுருக்கி கூற இயலாது. ஒரு புதிய குடும்பத்தின் தொடக்கத்தை, தலைமுறைகளின் தொடர்ச்சியை சடங்கு என்று சுருக்கி சங்கடப்படுத்திவிட முடியுமா என்ன?

மேற்கத்திய நாடுகளில், இரு தனி நபர்களுக்கு இடையேயான குறைந்தபட்ச செயல்திட்டங்களோடு கூடிய ஒப்பந்தம் என்று திருமணத்தைக் கூறலாம். நம்முடைய மரபில் இரண்டு குடும்பங்களின் இணைப்பாக இது பாரம்பரியமாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இரு குடும்பம், அவரவருடைய தொடர்புடைய குடுங்பங்கள், நண்பர்கள் என்று இரு சமூகத்தின் உறவுப்பாலம் அல்லவா. திருமணம் என்பது நம் சமூகப் பாரம்பரியத்தில் ஆண்டாண்டு காலமாக அறுபடாத தொடர்சங்கிலி.

வரலாறாக திருமணத்தை வரையறுப்பது கொஞ்சம் கடினம். காடுகளில் வசித்து வந்த மனிதன், நாடுகளில் விவசாயம் செய்து, நிலங்களை உழுது நாகரிகமாக தொடங்கிய காலத்தில் தத்தம் உடைமைகளை பாதுகாக்கவும், முறையான சமூக அமைப்பின் அங்கமாக விளங்கவும் உருவாக்கிய ஏற்பாடே திருமணம்.

பண்டைய இந்தியாவில் எட்டு விதமான திருமண பந்தங்கள் இருந்ததாக வரலாறு சொல்கிறது. பிரம்ம விவாகம், தெய்வ விவாகம், அர்ஷ விவாகம், பிரஜபாத்யா விவாகம், காந்தர்வ விவாகம், அசுர விவாகம், ராட்சஸ விவாகம், பைசாஸ விவாகம். இதில் கடைசி நான்கு திருமணங்கள்தான் சாமானிய மக்களின் திருமணங்கள். முந்தைய நான்கும் வேற லெவல்.

காலப்போக்கில் மக்கள் ஏற்றுக்கொண்ட சமூக சீர்த்திருத்தங்களின் காரணமாக அந்த பழம்பெரும் முறைகள் பல்வேறு காரணங்களால் இன்று நடைமுறையில் இல்லை. இன்று நாட்டில் பெரும்பாலான திருமணங்கள் arranged marriages என்று சொல்லப்படும் வகையிலானவை. இத்திருமணங்களுக்கு சமூகம், வர்க்கம், குடும்பம் மூன்றும் முதன்மையான காரணிகள். யாருக்கு யார் ஜோடி என்பதை குடும்பப் பெரியவர்கள் நிச்சயிக்கிறார்கள். இப்போது தனக்கு பிடித்த பெண், பையன் என்று மணமக்களே தங்கள் துணையை விரும்பி, பெற்றோரிடம் சொல்லி திருமணம் செய்துக் கொள்ளுமளவுக்கு மாற்றம் உருவாகி வருகிறது. அடுத்தபடியாக நாகரிக வளர்ச்சியின் காரணமாக சாதி, மதம் பாராத காதல் திருமணங்களும் பெருமளவில் நடந்து வருகின்றன. காதலை பெற்றோர் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வளர்ந்து வருவது குறிப்பிடத்தக்க மாற்றம். பிரெஞ்சுப் பொண்ணுக்கு மதுரைப் பையன் மாப்பிள்ளை என்கிற அளவில் சர்வதேச அளவில் ஜோடி தேட ஆரம்பித்திருக்கிறோம்.

கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் தொழிற்புரட்சி, மேற்கத்திய நாகரிக பரவல், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி என்று பல்வேறு சூழல்கள் இந்திய சமூகத்தை தாக்கப்படுத்தி இருந்தாலும், திருமணம் மட்டுமே அதன் அடிப்படை நோக்கம் மற்றும் வழிமுறைகளில் இருந்து பெரிய அளவில் தடம் புரளவில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு பால்யவிவாகங்கள் நடந்ததுண்டு. இந்து திருமணச் சட்டம் 1955ன் படி பெண்ணுக்கு 18 வயதும், ஆணுக்கு 21 வயதும் திருமண வயதாக கட்டாயம் ஆக்கப்பட்டிருக்கிறது. ஒரு சட்டம், மக்களிடையே பெரிய மனமாற்றத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி இருக்கிறது என்றால், அது திருமண விஷயத்தில்தான்.

பொதுவாக நம்மூரில் நாள் நட்சத்திரம் பார்த்து திருமணத்துக்கு தேதி குறிக்கிறார்கள். திருமணத்துக்கு முன்பு இரு குடும்பமும், புதிய உறவின் அச்சாரமாக தாம்பூலம் மாற்றிக் கொள்கிறார்கள். திருமணம் அன்று மணமகனும், மணமகளும் சுற்றத்தையும், நட்பையும் சாட்சியாக வைத்து ஒரு கோயிலிலோ அல்லது கல்யாண மண்டபத்திலோ அமர்கிறார்கள். வேதமந்திரங்களை அந்தணர் ஓதுகிறார். பின்னணி இசையாக மங்கள வாத்தியம். திருமணத்துக்கு வந்தவர்களுக்கு விருந்தோம்பல். நிகழ்வின் உச்சமாக மூன்று முடிச்சுப் போட்டு மணமகளுக்கு மணமகன் தாலி கட்டுகிறார். மணமகளின் கையை மணமகன் பிடித்து இருவரும் அக்னியை சுற்றி தங்கள் திருமணத்தை உறுதி செய்கிறார்கள். பின்னர் இருவரும் ஒருவருக்கு ஒருவர் சகஜமாக வேண்டுமென்று சில விளையாட்டுகளை சுற்றம் மகிழ விளியாடுகிறார்கள். திருமணத்துக்கு வந்த விருந்தினர்கள், மணமக்களுக்கு பரிசளிக்கிறார்கள். பல நூறு ஆண்டுகளாக பொதுவான திருமண வழிமுறை இதுதான். சடங்குகள் மட்டும் சமூகத்துக்கு சமூகம், மதத்துக்கு மதம் சற்றே மாறுபடலாம்.

இந்தியாவில் இந்து மதம் தவிர்த்து இஸ்லாமியர், கிறிஸ்துவர், சிந்தி, பார்ஸி, சீக்கியர், பவுத்தம், ஜெயின் மற்றும் யூதர்கள் என்று பல்வேறு மதத்தினர், அவரவர் மத சம்பிரதாயப்படி திருமணங்களை செய்கிறார்கள். தாலிக்கு பதில் மோதிரம், மந்திரத்துக்கு பதில் புனிதநூல் ஓதுதல் மாதிரி வேறுபாடுகளை தவிர்த்துப் பார்த்தால், ‘திருமணம்’ என்பதன் நோக்கம் நம் நாட்டில் மட்டுமல்ல, உலகளாவிய அடிப்படையிலேயே ஒன்றுதான்.

தரகரிடம் தேடச்சொல்லி, தெரிந்தவர்கள் அறிந்தவர்கள் என்று நாலு இடத்தில் சொல்லிவைத்து பெண் தேடிய காலம் மட்டும் மாறியிருக்கிறது. இன்று இண்டர்நெட்டிலேயே பெண் தேடுகிறார்கள். வீடியோ சாட்டிங்கில் பெண் பார்க்கிறார்கள். மற்ற விஷயங்களை போனில் பேசிக்கொள்கிறார்கள். பஜ்ஜி, சொஜ்ஜி செலவு மிச்சம் என்றாலும், ஏகத்துக்கும் பட்ஜெட்டை எகிறவைக்கும் வேறு புதிய செலவினங்கள் உருவாகியிருக்கின்றன. பையனின், பெண்ணின் தகுதியாக படிப்பு, பாட்டு பாடுவது, நாட்டியம் ஆடுவது எல்லாம் காலாவதியாகி விட்டது. மருத்துவத்தகுதி சான்றிதழ் வாங்கி பொருத்தம் பார்க்குமளவுக்கு விழிப்புணர்வு பெறத் தொடங்கியிருக்கிறோம்.

அதெல்லாம் தனி.

ஆனால்-

கஷ்டப்பட்டு உழைத்து வாழ்நாளெல்லாம் சேமிக்கும் அத்தனை பணத்தையும் தன் மகளின் கல்யாணத்துக்குதான் என்று சொல்லும் தகப்பன்மார்கள் எத்தனை பேரை பார்த்திருக்கிறோம். நல்லபடியாக தன்னுடைய மகள் புகுந்தவீட்டில் செட்டில் ஆகவேண்டுமே என்கிற தாயின் அடிவயிற்று நெருப்பு பரிதவிப்பு நமக்கும் தெரியும்தானே? கல்யாண வீடுகளில் பாருங்கள். வியர்வை வழிய அங்கும் இங்குமாக டென்ஷனாக அல்லாடிக் கொண்டிருப்பவன் பெண்ணின் சகோதரனாகதான் இருப்பான்.

பஜ்ஜி, சொஜ்ஜி சாப்பிட்டு பெண் பார்ப்பது. பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டுக்கு வந்து கையை நனைத்து உறவை உறுதி செய்வது. பரிசம் போட்டு நிச்சயத்தாம்பூலம். கல்யாணத்துக்கு மண்டபம் பார்ப்பது. பெண்ணுக்கு முகூர்த்தப்புடவை எடுப்பது. விருந்துக்கு சுவையாக சமைக்கக்கூடிய சமையல்காரரை தேடுவது. திருமணம் செய்விக்கும் புரோகிதரை புக் செய்வது. ரிசப்ஷனுக்கு நல்ல லைட் மியூசிக் ட்ரூப்பை கண்டு பிடிப்பது. திருமண அழைப்பிதழுக்கு நல்ல டிசைன் செலக்ட் செய்வது. மேடைக்கு பூ அலங்காரம். விருந்தினர்கள் மனம் கோணாமல் உபசரிப்பு. இன்னும் எராளமான விஷயங்கள். இவை எல்லாவற்றுக்கும் லட்சக்கணக்கில் பணம்... யோசித்துக் கொண்டே போனால் ‘கல்யாணம் பண்ணிப் பார்’ என்று சும்மாவா சொன்னார்கள் நம் பெரியவர்கள்?

நம் நண்பர் ஒருவர் டீனேஜில் இருந்தபோது அவருடைய ஒண்ணுவிட்ட அண்ணனுக்கு திருமணம் நடந்தது. அந்தத் திருமணத்தில் ரெட்டை ஜடை, பாவாடைச் சட்டையோடு ஒரு பத்து வயது பெண் சுற்றிக் கொண்டிருந்தாள். மணமகளின் ஒண்ணுவிட்ட தங்கச்சியாம். பத்து ஆண்டுகளுக்கு பிறகு லைஃபில் செட்டில் ஆகிவிட்ட நம் நண்பருக்கு பெண் பார்த்தார்கள். அந்த ரெட்டை ஜடை, பாவாடைச் சட்டையே புடவை கட்டி வந்து அமர்கிறார். இருவரும் இப்போது தம்பதி சமேதரராக அந்த ஒண்ணுவிட்ட அண்ணனுக்கும், ஒண்ணுவிட்ட அக்காவுக்கும் நடந்த கல்யாண வீடியோவை அவ்வப்போது போட்டுப் பார்த்து சந்தோஷமாக ஒருவருக்கு ஒருவர் கிண்டல் அடித்துக் கொள்கிறார்கள். திருமணம், இதுபோன்ற மலரும் நினைவுகளோடு சம்பந்தப்பட்டது.

“நம்ம வாசுதேவன் கல்யாணத்துலே போட்டாங்க பாருடா சாப்பாடு. அதுதான் சாப்பாடு” என்பது மாதிரி டயலாக்குகளை அடிக்கடி கேட்கலாம். வாசுதேவனுக்கு கல்யாணம் ஆகி இருபத்தைந்து ஆண்டுகள் கழித்தும்கூட.

“நம்ம வரலட்சுமி புள்ளை கல்யாணத்துலே குறுக்கும், நெடுக்குமா நெட்டையா சிகப்பா ஒட்டறைக்குச்சி மாதிரி நடந்துக்கிட்டிருந்தாளே ஒரு பொண்ணு. நம்ம விஜயாவோட சின்ன மாமனார் பெண்ணாம். நம்ம சரவணனுக்கு கேட்டுப் பார்க்கலாமா? இவனும் ஒல்லியா, அமிதாப் பச்சன் உயரத்துலேதானே இருக்கான்?” ஒரு கல்யாணத்தால் இன்னொரு கல்யாணம் நிச்சயிக்கப்படுகிறது.

இம்மாதிரி sidelight விஷயங்கள் ஏராளம்.

இவை அத்தனையையும்தான் ‘தாம்பூலம் முதல் திருமணம் வரை’ நூல்.

அலுவல் தொடர்பான சந்திப்பு ஒன்றில்தான் திடீரென திருமணம் பற்றி பேச்சு வந்தது.

எங்கள் நிர்வாக இயக்குநர் ஆர்.எம்.ஆர் அவர்கள், அவர் பார்த்த பல்வேறு சமூகத் திருமணங்களை பற்றி சுவாரஸ்யமாக சொல்லிக் கொண்டிருந்தார். சடங்குகள், சம்பிரதாயம் பற்றியெல்லாம் பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென அவரேதான் சொன்னார்.

“இதை ஒரு தொடராவே செய்யலாம். ஏன்னா, இப்போ பல சடங்குகள் அர்த்தம் இழந்துப் போச்சி. அர்த்தமுள்ள சடங்குகளுக்கு அர்த்தம் என்னன்னு இப்போதைய தலைமுறைக்கு தெரியலை”

அந்த காலக்கட்டத்தில் திருமணம் குறித்த பல்வேறு தரப்பிலான கருத்துகள் சமூகவலைத் தளங்களில் அலசப்பட்டுக் கொண்டிருந்தது. திருமணம் என்கிற முறையே தவறு என்பது மாதிரியான விவாதங்களும் நடந்துக் கொண்டிருந்தன. அந்த விவாதத்தில் நாம் கலந்துக் கொள்ள வேண்டாம்.

ஆனால்-

‘திருமணம்’ என்கிற நிகழ்வுக்கும், அதன் தொடர்பிலான சடங்குகளுக்கும் நம்முடைய மரபில் அர்த்தத்தை தேடுவோம் என்று முடிவெடுத்தோம்.

அப்படிதான் ‘தாம்பூலம் முதல் திருமணம் வரை’ தொடரை ‘தினகரன் வசந்தம்’ இணைப்பிதழுக்கு எழுதத் தொடங்கினேன். தொடரை ஆரம்பிப்பதற்கு முன்பு ஏகத்துக்கும் உதறல் இருந்தது. ஏதேனும் தவறுதலாக எழுதிவிட்டால் அந்தந்த சமூகத்து மக்களிடம் சமாதானம் சொல்ல வேண்டுமே என்கிற தயக்கமும் இருந்தது.

எனினும், அறிவிப்பு வெளியிட்ட பிறகு தமிழ் சமூகத்துப் பெரியவர்களே என்னை வழிநடத்தத் தொடங்கினார்கள். தேவைப்பட்ட குறிப்புகளையும், நூல்களையும் அவர்களே அனுப்பி வைத்தார்கள். எப்போதும் சந்தேகம் கேட்டாலும், தெளிவான விளக்கங்களை தர அவர்கள் யாரும் தயங்கியதே இல்லை. ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக பெயர் குறிப்பிட்டு நன்றி சொல்ல ஆசைதான். எனினும், இந்த பெயர்ப்பட்டியலே தனிநூலாக போய்விடக்கூடிய அளவுக்கு நீளமான பட்டியல் என்பதால் தவிர்க்கிறேன். நூலில் குற்றம் குறை ஏதேனும் இருந்தால் அது எனது. சொல்லப்பட்டிருக்கும் நிறைவான விஷயங்கள் அத்தனைக்கும் நம் சமூகப் பெரியோரே காரணம்.

இப்போது நூலாக வெளியாகியிருக்கும் அந்த தொடரில் சில சமூகங்கள் தவிர்க்கப்பட்டிருக்கலாம். ஏனெனில், அதே சடங்குகள் வேறொரு சமூகத் திருமணங்களில் கடைப்பிடிக்கப்படக் கூடியதாக இருக்கும். சமூகத்தின் பெயரை மற்றும் மாற்றி ஏற்கனவே சொன்னதையே திரும்பச் சொல்லுவதை தவிர்க்கவே அந்த விடுபடலே தவிர வேறெந்த நோக்கமுமில்லை. அதுபோலவே, தனித்துவமான சடங்குகள் இல்லாமலேயே மிகவும் எளிமையான முறையில் திருமண பந்தத்தை உறுதி செய்யக்கூடிய சமூகங்களும் உண்டு. ஒட்டுமொத்தமாக இந்த நூலை வாசிக்கையில், திருமணம் என்கிற ஆயிரங்காலத்து பயிர் எப்படி வளர்க்கப்படுகிறது, அதற்கு உரமாக எதுவெல்லாம் அமைகிறது என்கிற பறவைப்பார்வை உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்.

என்னுடைய ஆரம்பக்கட்ட உதறலை போக்கியவர் ‘குங்குமம்’ வார இதழின் ஆசிரியர் கே.என்.சிவராமன். தொடரை ஆரம்பிக்கும்போது அவர்தான் ‘தினகரன் வசந்தம்’ இணைப்பிதழின் ஆசிரியராக இருந்தார். ‘ஏதேனும் சந்தேகம் இருந்தாலோ, சர்ச்சை வரும் என்று தெரிந்தாலோ, அதை எழுதவே எழுதாதே’ என்று அறிவுறுத்தியிருந்தார். நல்லபடியாக எவ்வித சர்ச்சைக்கும் இடமின்றி இந்தத் தொடரை நிறைவு செய்ததற்கு அந்த அறிவுரையே காரணம்.

என்னுடைய பத்திரிகையுலக வாழ்வில் ‘தாம்பூலம் முதல் திருமணம் வரை’யை மறக்கவே முடியாது. இத்தொடர் தொடங்கும்போது ‘வசந்தம்’ இதழின் மூத்த துணையாசிரியராக இருந்தேன். தொடரின் இறுதி அத்தியாயத்தை எழுதும்போது அவ்விதழுக்கு ஆசிரியர் பொறுப்புக்கு பதவி உயர்த்தப்பட்டிருந்தேன். அவ்வகையில் இந்த ‘திருமணம்’, என் வாழ்வின் சகல சவுபாக்கியங்களையும் உறுதிச் செய்திருக்கிறது.

நூல் : தாம்பூலம் முதல் திருமணம் வரை
எழுதியவர் : யுவகிருஷ்ணா
விலை : ரூ.190
பக்கங்கள் : 255
வெளியீடு : சூரியன் பதிப்பகம்,
229, கச்சேரி ரோடு, மயிலாப்பூர், சென்னை-600004.
தொ.பே 044-2209191 Extn 2115. கைபேசி : 7299027361

20 நவம்பர், 2017

எழுத்துக்கும் பேச்சுக்கும் மேக்கப்!

* மனப்பாடம் செய்து பயின்ற ஃபார்முலா மொழியில் இருந்து நாம் விடுபட வேண்டும்.

* மக்களிடம் பேசுவதற்கு கற்றுக் கொள்ள வேண்டும். ஃபார்முலாவான இலக்கிய மொழியில் அல்ல. பேசக்கூடிய ஒவ்வொரு சொல்லும், கருத்தும் இலட்சக்கணக்கானோருக்கு புரியும் விதத்தில், அவர்களது சிந்தனையை கிளறும் விதத்தில் இருக்க வேண்டும்.

* மக்களுக்கு புரியக்கூடிய மொழியில் நமக்கு பேசத் தெரியாவிட்டால், நம்மை மக்கள் ஏற்றுக் கொள்வது இயலாத காரியம்.

* கூடியிருக்கும் கூட்டத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் பொத்தாம்பொதுவாக பேசுவதோ, தேவையற்ற சொற்களால் பக்கங்களை நிரப்புவதோ, சுய அபிப்ராயத்தை பொதுக்கருத்தாக நிலைநிறுத்துவதோ, வெற்றுரை ஆற்றுவதோ கூடாது.

* மக்களை மிரட்டும் பகட்டு நடையில் பேசுவதும், எழுதுவதும் உலகெங்கும் வியாபித்திருக்கும் ஒரு பொது நோய்.

* எந்தப் பிரச்சினையையும் முழுமையாக கவனி. அந்தப் பிரச்சினையில் சிறிய சந்தேகம் ஏதாவது இருந்தாலும், அதை எழுத வேண்டாம்/பேச வேண்டாம்.

* நீங்கள் சொல்வதற்கு எதுவுமே இல்லாதபோது எதையும் சொல்லித் தொலைக்காதீர்கள். எழுதுவதற்கும்/பேசுவதற்கும் உங்களை நீங்களே நிர்ப்பந்தித்துக் கொள்ளாதீர்கள்.

* எதை எழுதினாலும் அதை குறைந்தது இரு தடவை வாசியுங்கள். தேவையற்ற ஊளைச்சதையை குறையுங்கள். ‘இரு தடவை சிந்தி’ என்று கன்பூசியஸ் இதைதான் சொல்கிறார்.

* சுற்றி வளைக்காமல் சுருக்கமாக பேசி/எழுதித் தொலை.

* உங்களுக்கு மட்டுமே புரியக்கூடிய/பழகிய அடைமொழிச் சொற்களை பொதுவில் பேசும்போதும்/எழுதும்போதும் பயன்படுத்த வேண்டாம்.

* தேய்வழக்குகள் நம் பேச்சிலிருந்தும் / எழுத்திலிருந்தும் ஒழிய வேண்டும்.


-  மேற்கண்ட கருத்துகள் என்னுடையது கிடையாது. பிப்ரவரி 8, 1942ல் ஏனான் என்கிற இடத்தில் நடைபெற்ற ஊழியர் கூட்டம் ஒன்றில் மாவோ ஆற்றிய உரையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கருத்துகள். தகவல் தொடர்பு குறித்து 75 ஆண்டுகளுக்கு முன்பே மாவோவுக்கு எத்தகைய துல்லியமான தெளிவு இருந்தது என்று புரிகிறது. தமிழில் ஐந்து பக்கங்களுக்கு மொழிப்பெயர்க்கப்பட்டிருக்கும் இந்த கட்டுரையை, சோர்வு ஏற்படும்போதெல்லாம் எடுத்து வாசிப்பது என் வழக்கம்.

ஆனால்-

‘பகட்டு எழுத்து நடையினை எதிர்ப்போம்’ என்கிற தலைப்பில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் இந்த உரை, மேற்கண்ட மாவோவின் கருத்துகள் எதையுமே பொருட்படுத்தாத / எதை செய்யக்கூடாது என்று மாவோ வலியுறுத்துகிறாரோ, அந்நடையில் மொழிப்பெயர்க்கப்பட்டிருக்கிறது.

உதாரணத்துக்கு, “அன்னிய உருப்படிவங்கள் (sterio type) ஒழிக்கப்பட வேண்டும், வெற்று அரூபமான மனப்பாங்குகள் குறைவாக இருந்திட வேண்டும், வறட்டு வாதம் அகற்றப்பட வேண்டும்” என்கிற ரேஞ்சுக்கு அந்த கட்டுரை போகிறது.

‘எளிமையாக எழுது’ என்பதையே இவ்வளவு சிக்கலாக மொழிப்பெயர்த்திருக்கிறார்கள் என்றால், அறிவார்ந்த விஷயங்களை தமிழாக்கத்தில் எப்படி சின்னாபின்னப் படுத்தி இருப்பார்கள்?

தமிழில் மொழிப்பெயர்க்கப்பட்ட கட்டுரை ஒன்றையே, மீண்டும் தமிழில் மொழிப்பெயர்த்துதான் நாம் புரிந்துக்கொள்ள முடிகிறது. மற்ற மொழிகளில் எப்படியென்று தெரியவில்லை. தமிழன் எப்போதும் எழுத்துக்கும் / பேச்சுக்கும் டிசைன் டிசைனாக மேக்கப் போட்டுக்கொண்டேதான் திரிகிறான் :(

14 நவம்பர், 2017

ஆலையில்லா ஊருக்கு அறம்!

பொதுவாக தான் நடிக்கும் படங்களின் ஆடியோ மற்றும் பிரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு வருவதையே தவிர்க்கும் நயன்தாரா, முதன்முறையாக வானத்தில் இருந்து இறங்கி தியேட்டர் விசிட் அடித்திருக்கிறார். ரஜினி பாராட்டி விட்டார். ரஞ்சித், நயன்தாராவை தோழர் என்று நெக்குருகி அழைக்கிறார். வாசுகி பாஸ்கர் புகழ்ந்து தள்ளுகிறார். தோழர்கள் தோள் மேல் வைத்துக் கொண்டாடுகிறார்கள். தலித்துகள் பெருமிதப்படுகிறார்கள். தமிழின இணையப் போராளிகள் ஆஸ்கர் அவார்டையே தூக்கிக் கொடுத்து விட்டார்கள். பத்திரிகையாளர்கள் பிரிவ்யூ காட்சியிலேயே கதறி அழுதிருக்கிறார்கள்.

அப்படியாப்பட்ட ‘அறம்’ அப்படியெல்லாம் இல்லை என்பதே உண்மை.

கோபிநைனார் நல்ல வசனகர்த்தா என்று தெரிகிறது. முன்பு விஜயகாந்துக்கு நாடி நரம்பெல்லாம் துடிக்க லியாகத் அலிகான் என்றொருவர் வசனம் எழுதிக் கொண்டிருந்தார். அந்த பாணியில் நக்கல், நையாண்டியுடனான அரச எதிர்ப்பு வசனங்களை துடிப்பாக எழுதியிருக்கிறார்.

ஆனால்-

இயக்கம்?

கிட்டி, நயன்தாராவை விசாரிக்கும் காட்சியில் தொடங்கி, கிளைமேக்ஸ் வரை அத்தனை அமெச்சூர்த்தனம். ஒரு சீஃப் செக்ரட்டரி (அப்படிதான் நினைக்கிறேன். அவர்தானே கலெக்டரை விசாரிக்க முடியும்?) இவ்வளவு மொக்கையாக சீரியல் மாமனார் மாதிரியா கேள்விகளை கேட்பார்?

ப்ளாஷ்பேக்கில் விரியும் கதையில் நயன்தாரா நேரடி சாட்சியாக இருந்திருக்க வாய்ப்பில்லாத ராமச்சந்திரன் – சுனுலட்சுமி பாத்திரங்களின் பின்னணி சித்தரிப்பு இடம்பெறுவதே தர்க்கமில்லாதது. மாவட்ட ஆட்சியரான நயன்தாராவை பார்த்து கேட்கப்படும் கேள்விகளுக்கு, அவர் பார்த்ததையும், குறிப்பிட்ட சம்பவம் தொடர்பான பதில்களையும் சொல்லுவதுதானே சரியாக இருக்க முடியும்? கேட்டால் சினிமாவென்றால் அப்படிதான் என்பார்கள். அப்படியெனில் இது எப்படி உலகப்படம் ஆகும்?

படத்தின் மையம் என்பது ராமச்சந்திரனின் குழந்தை, ஆழ்துளைக் கிணறில் விழுவதும், குழந்தையை சக அதிகாரிகளின் ஒத்துழையாமை மற்றும் அரசியல் குறுக்கீட்டுத் தடைகளை தாண்டி கலெக்டர் மீட்பதும்தான்.

ஆனால்-

படத்தின் தொடக்கம் தண்ணீர்ப் பிரச்சினை என்பதாக தொடங்கி, ஏழ்மை உள்ளிட்ட தமிழ் சமூகத்தின் சர்வப் பிரச்சினைகளுக்கும் வசனங்களாலேயே தீர்வு கண்டுவிடலாம் என்கிற நோக்கத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. நல்ல கலெக்டர் நயன்தாராவுக்கு மதிவதனி என்கிற பெயரை வைத்ததின் மூலம் தொப்புள் கொடி உறவுகளின் உரிமைக்குரலுக்கும் வலு சேர்த்திருக்கிறார் இயக்குநர்.

ஊடகங்களை தோலுரிப்பதெல்லாம் சரிதான். அதற்காக படத்தின் இடைஇடையில் காட்டப்படும் ‘நியூஸ்-18’ விவாதம் மூலம் இயக்குநர் என்ன சொல்லவருகிறார். அதிலும் இளங்கோ கல்லாணை டிவி விவாதங்களில் பேசுவதையே சகித்துக் கொள்ள முடியாது. சினிமாவிலும் அவரை உளறவைத்து கொட்டாவி விடவைப்பதெல்லாம், ரசிகனை செய்யும் மகா டார்ச்சர் அல்லவா கோபி சார்? பெருமாள் மணியும் அவர் பாட்டுக்கும் வந்து ஆழ்துளைக்கிணறு பிரச்சினையை பேசியிருந்தால், இந்த டார்ச்சர் இன்னும் ‘முழுமை’ பெற்றிருக்கும்.

படத்தின் ஆகப்பெரிய அபத்தம் கிளைமேக்ஸ். 93 அடி கிணற்றில் விழுந்திருக்கும் குழந்தையை தூக்க, இன்னொரு குழந்தையை கயிறு கட்டி அனுப்புகிறார்கள். இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு நாளை இதுபோல ஓர் ஆழ்துளை துயர சம்பவம், கொட்டாம்பட்டியிலோ பெண்ணாத்தூரிலோ நடந்தால்.. அங்கிருக்கும் ஊர்மக்கள் இதே பாணியில் முயற்சி செய்து ஏதேனும் விபரீதம் நிகழ்ந்தால் அதற்கெல்லாம் யார் பொறுப்பு?

இதேபோல குழியில் விழுந்துவிடும் ஒரு குழந்தையை காப்பாற்றும் திரைப்படம் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பாக வந்திருக்கிறது. ஜெயராம் – ஊர்வசி தம்பதியினரின் மகள் ஷாம்லி விழுந்துவிடுவார். மலையாளப்படமான இது தமிழில்கூட ‘பூஞ்சிட்டு’ என்பது மாதிரி ஏதோ பெயரில் டப்பிங் செய்து வெளியானது. அந்த காலத்தில் எடுக்கப்பட்ட படத்துக்கே உறைபோடக்கூட ‘அறம்’ காணாது.

மாறாக, ‘அறம்’ படத்துக்கு இப்படி பாராட்டுகள் விளம்பரமாக குவிவதற்கு என்ன காரணம் இருக்க முடியும்?

இயக்குநர், தலித் சமூகத்தைச் சார்ந்தவர் என்கிற ஒருவரி தகவல் முக்கியமான காரணம். ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை கைதூக்கி விடுவோம் என்கிற சமூகநீதி எண்ணத்தால், இந்தப் படத்துக்கு விமர்சனம் நீக்கப்பட்ட பாராட்டுகள் குவியலாம். நல்ல விஷயம்தான்.

ஆனால் –

ஒடுக்கப்பட்ட ஒருவரின் திறமையான படைப்புக்கு அப்படிப்பட்ட அங்கீகாரங்கள் கிடைத்தால் சரி. ‘அட்டக்கத்தி’க்கு கிடைத்த கவனம் நியாயமானதே. மாறாக, மிக சுமாரான ஒரு படத்தை சூப்பர் என்று சொல்லுவதின் மூலம், சம்பந்தப்பட்டவர் தன்னுடைய நிஜமான திறமையை எடைபோடக்கூட முடியாமல் குருவி தலையில் பனங்காய் வைக்கும் முயற்சியாகவே இதை பார்க்கத் தோன்றுகிறது.

அடுத்து, தோழர்கள்.

இவர்களைப் பற்றி பேசி ஒன்றும் ஆகப்போவதில்லை. ‘கத்தி’யையே கம்யூனிஸப் படம் என்று கொண்டாடியவர்கள். நாலு கோமாளிகளை சேர்த்து மநகூ அமைத்து தமிழகத்தின் தலையெழுத்தையே மாற்றிவிடலாம் என்று கருதியவர்கள். இப்படி ஒப்புக்கு பெறாத விஷயங்களை பேசியாவது தாங்கள் உயிர்ப்போடு இருப்பதை நிரூபித்துக்கொள்ள வெறித்தனமாகதான் முயற்சிப்பார்கள்.

இப்போது தமிழில் படமெடுக்க நினைக்கும் படைப்பாளிகள் ஒவ்வொருவருக்கும் ‘பீப்லி லைவ்’தான் ஆதர்சப் படமாக இருக்கிறது. அதை தாண்டி ஒரு படத்தை எடுத்துவிட வேண்டுமென்று துடியாக துடிக்கிறார்கள். நாம் ஏன் ‘பீப்லி லைவ்’ எடுக்க வேண்டுமென்று தெரியவில்லை. நாம் எடுக்க வேண்டியது ‘பதினாறு வயதினிலே’க்கள்தான். அந்தப் படத்தின் சாதனையையே நாற்பது ஆண்டுகளாக இதுவரை உடைக்கவில்லை.

‘அறம்’ மாதிரியான சுவாரஸ்யமற்ற/தர்க்கமற்ற படங்களைதான் நாம் தேசிய/சர்வதேச அரங்கில் மற்ற மொழிகளுக்கு போட்டியாக முன்நிறுத்துகிறோம் என்றால், தமிழ் சினிமாவும் எடப்பாடி அரசு மாதிரி படைப்பு வறட்சியால் தடுமாறிக் கொண்டிருக்கிறது என்றே பொருள்.

எந்தவித கலைவிமர்சன நோக்குக்கும் இடம் கொடுக்காதவாறு ஏகோபித்த பாராட்டுகளை அள்ளியிருக்கும் ‘அறம்’ படத்துக்கு மாநில, மத்திய அரசுகளின் சில விருதுகள்கூட கிடைக்கலாம். ஆளும் தரப்பை மிக மென்மையாக யாருக்கும் வலிக்காமல் எதிர்த்து கையாண்ட ‘ஜோக்கர்’ படத்துக்கே விருது கொடுக்கவில்லையா? மிக மிக சுமாராக நடித்திருந்த நயன்தாராவுக்கு தேசிய விருது கிடைத்தால்கூட ஆச்சரியப்பட ஏதுமில்லை. படத்தின் இறுதியில் அவர் மக்களுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொள்வதாக சித்தரிக்கப்பட்டதைபோல, நிஜத்திலேயே அரசியலில் குதித்து ஆட்சியைப் பிடித்தாலும் யாரும் அதிர்ச்சியடையத் தேவையில்லை. ஏனெனில், இது தமிழ்நாடு.

சிறுபத்திரிகைகளில் திரைவிமர்சனம் எழுதுவது எப்படி?

முன்குறிப்பு : ‘வயது வந்தோருக்கு மட்டும்’ என்று சான்றிதழ் கையளிக்கப்படும் திரைப்படங்கள் பெரும்பாலும் வயதுக்கு வாராதோரையே கவரும் என்பது என் முன்முடிவு. வயதுக்கு வந்தோர் கண்ட காட்சிகளும், கொண்ட கோலங்களுமே ‘வயதுக்கு வந்தோருக்கு மட்டும்’ படங்களில் காட்சிப்படுத்தப் படுகின்றன. மாறாக காட்சியையோ, கோலத்தையோ காணாத வயதுக்கு வாராதோர்தான் வயதுக்கு வந்தோருக்கான படங்களை காண்பதற்கான மனப்பாங்கு கொண்டவர்களாக அமைந்திருக்கிறார்கள்.

‘துண்டு நிச்சயம் உண்டு’ என்கிற முன்முடிவோடே பால்யத்தை ஒட்டிவாழும் பார்வையாளர்கள் இம்மாதிரி படங்களுக்கு அரங்கம் முன்பாக குழுமுகிறார்கள். மீசைக்கு கீழே சில அங்குல மயிர் இல்லாவிட்டாலும், இருக்கையை நிரப்ப ஆள்வேண்டுமே என்கிற எண்ணத்தில் அவர்களும் திரையரங்கு பணியாளர்களால் அனுமதிக்கப்படுகிறார்கள்.
வயதுக்கு வந்தோருக்கு மட்டும் படங்கள், வயதுக்கு வாராதோருக்கு புரியக்கூடிய அளவிலான மேலோட்டமான பாணியில் எடுக்கப்பட்டாலும், முதிர்ச்சியான பார்வையாளர்களுக்கான திரட்சியான காட்சிகளோடு மேற்கத்தியப் பாணியை மேற்குத் தொடர்ச்சி மலை வாசனையோடு தருவது வாடிக்கை.

நிற்க.
அடிப்படையில் பாலியல் பசியை பேசினாலும், பருவப் பசிக்கு தீனி போட்டாலும் வயதுக்கு வந்தோருக்கான படங்கள் வயதுக்கு வந்தோருக்கு மட்டுமானது அல்ல என்பதே என் துணிபு.

சரி, விமர்சனத்துக்குள் நுழைவோம்.

* * *

நான்கு இளைஞர்களுக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு. அவர்களில் ஒருவனுக்கு திருமணம் ஆகிறது. அவனுடைய மனைவிக்கு மது அருந்தும் பழக்கம் கிடையாது. இதுவே அவர்கள் இருவருக்குமான ஆண் x பெண் முரணை ஏற்படுத்துகிறது. தன்னுடைய மனைவிக்கு மது அருந்தும் பழக்கமில்லை என்பது ஒருவகையில் அவனுக்கு மகிழ்வையும் தருகிறது. இரவு வேளைகளில் மது அருந்திவிட்டு, அதிகாலையில் சூரியன் உதிக்கும் வேளையில் இல்லம் திரும்புகிறான். இதனால் இரவில் அவன் செய்யவேண்டிய ‘வேலை’களை செய்ய முடியாமல் போகிறது.
புதியதாக மணம் ஆன ஒரு ஆணுக்கும், பெண்ணுக்குமான இந்த முரண் படம் நெடுக பாலியல் அங்கதச்சுவையோடு காட்சிப்படுத்தப் படுகிறது. இருவருக்குமான ஊடல் கூடலை நோக்கிச் செல்லாதவகையில் திரைக்கதை புதுமையான உத்தியில் இயக்குநர் சாஜனால் கையாளப்பட்டிருக்கிறது. இக்காட்சிகள் வயதுக்கு வாரா ரசிக மீன்குஞ்சுகளுக்கு தூண்டிலில் போடப்படும் மண்புழு.

* * *

காமப்பசி தீரா பேரிளம்பெண். எனினும், அவளது உடல் கட்டோடு குழலாட ஆடவென்று கச்சிதமாக இருக்கிறது. அவரது கணவன் அயல்நாட்டில் பொருள் ஈட்டுகிறான். இந்தப் பெண்ணுக்கு பக்கத்து இல்லத்தில் கட்டிளங்காளை ஒருவன் தினசரி உடற்பயிற்சி செய்வது வழக்கம். காம்பவுண்டு தாண்டி கட்டிளங்காளை. இங்கே காமப்பசி அடங்கா காரிகை.

அந்த பேரிளம்பெண்ணின் காமம் கலங்கரை விளக்க ஒளியாய் காளையை எட்டுகிறது. கண்கூசும் காமவொளியை தாங்கவொண்ணா துயரம் கொண்டவனாய், விளக்கை அணைக்க காம்பவுண்டு தாண்டி வருகிறான். அணைக்க வேண்டியது விளக்கையல்ல. விளக்கு ஏந்திய மங்கையை என்று உணர்கிறான்.
காமச்சுவையில் இருவரும் கரைபுரண்டு ஓடுகிறார்கள். சலிக்க சலிக்க காமம். விடிய விடிய ஹோமம். ஆணுக்கு பெண், பெண்ணுக்கு ஆண் என்கிற மரபான பாலியல் செயல்பாடுகளில் மனதை வசம் இழக்கிறார்கள் இருவரும்.

இந்த காட்சிகளில் ஒளிப்பதிவாளரின் நேர்த்தியான ஒளியமைப்பும், படத்தொகுப்பாளரின் தாராள மனசும் பார்வையாளர்களுக்கு ஓர் ஐரோப்பிய திரைப்படத்தை காணும் அற்புத அனுபவத்தை ஏற்படுத்துகின்றன.

* * *
போதையிலே சுகம் காண்கிறான் மாணவன் ஒருவன். ஆரம்பத்தில் விளையாட்டாக பீர் என்கிற மதுபானத்தை சுவைக்கிறான். அதிலிருந்து சற்று முன்னேறி பிராந்தி, ரம் என்று ஐரோப்பிய பானங்களை பதம் பார்க்கிறான்.

ஒருக்கட்டத்தில் பானங்கள் பானகம் மாதிரி இனிக்கிறது. அவனது தேவை, மேலும் போதை மேலும் மயக்கம். கஞ்சா புகைக்கிறான். அந்த போதையும் போதாமல் பாலியல் தொழிலாளிகளை நாடுகிறான். போதைகளில் சிறந்தது போகம் என்று உணர்கிறான்.

* * *

மூன்று வெவ்வேறு கிளைகளாக விரிந்த இந்த சிறுகதையாடல்களை கடைசியாக மருத்துவர் ஒருவரின் ஆலோசனைக் காட்சியை நயமாக சேர்த்து பெருங்கதையாடலாக மாற்றுகிறார் இயக்குநர்.
* * *

முதல் கதையில் திருப்தியடையாத புதுமனைவி, கணவனின் நண்பர்களில் ஒருவனோடு கூடுகிறாள். இந்த காட்சி பார்வையாளனுக்கு சுவாரஸ்யமான அனுபவத்தை தருவதோடு வயதுக்கு வராத பார்வையாளர்கள் எதிர்காலத்தில் வேலை செய்யாவிட்டால் என்னவாகும் என்கிற படிப்பினையை பெறக்கூடிய பாடத்தையும் வழங்குகிறது.

இரண்டாவது கதையில், பக்கத்துவீட்டு பாலகனோடு பந்து விளையாடும் பெண், அற்பமான பாலியல் தேவைக்காக அற்புதமான இல்வாழ்க்கையை இழப்பதாக கதையின் போக்கில் அமைக்கப்பட்டிருக்கிறது.

மூன்றாவது கதையில் போதைக்கு பாதை தேடிய மாணவன், பாதை தவறி பல்லாவரத்தில் பாக்கு போட்டுக் கொண்டு பராக்கு பார்த்துக் கொண்டிருப்பதாக முடிவு.

* * *
‘மது, மங்கை, மயக்கம்’ என்கிற இந்த திரைப்படம், தணிக்கை சான்றிதழ் சுட்டுவதை போல வயதுக்கு வந்தோருக்கான பாலியல் படம் மட்டுமல்ல. பாலியலை மிகைபுனைவாக கருதும் பாலகர்களுக்கான படமும்தான். பெண்களிடம் என்ன இருக்கிறது என்று அறிய ஆர்வமாக முற்படும் ஆண்களுக்கு எதை காட்ட வேண்டுமோ, அதை மட்டும் இப்படம் சுட்டிக் காட்டுகிறது. முதிர்ச்சியான பார்வையாளன் இம்மாதிரி படங்களில் அழகியல் பாடம் கற்பான். ஐரோப்பிய புது அலை திரைப்படங்கள், ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபதுகளில்உ லகம் முழுக்க செய்தது இதைதான். ஆட்டுமந்தை மூளை கொண்டவர்களோ ‘துண்டு’ போடசொல்லி அரங்கில் விசில் அடித்து கலாட்டா செய்வார்கள். யார் யாருக்கு எது வேண்டுமோ, அவரவருக்கு அது அது கிடைக்கும்.

பின்குறிப்பு : கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் வண்ணப் படங்கள், ‘மது மங்கை மயக்கம்’ படத்தில் இடம்பெற்றவை அல்ல. பல்வேறு பாலியல் பருவ திரைப்படங்களில் இருந்து வாசகர்களின் வசதிக்காக சேகரிக்கப்பட்டவை.

13 நவம்பர், 2017

நேருவின் ரோஜா

கணவரின் கைபிடித்து முதன்முதலாக புகுந்த வீட்டுக்குள் நுழைந்த கமலாவுக்கு படபடவென்று நெஞ்சு அடித்துக் கொண்டது. இதற்கு முன்பாக இவ்வளவு பெரிய வீட்டை பார்த்தது கூட இல்லை. நவநாகரிக தோற்றத்தில் இருந்த மாமியார் வீட்டாரை பார்த்ததுமே, எப்படித்தான் இங்கே காலத்துக்கும் வாழப்போகிறோமோ என்று அச்சப்பட்டார். பதினேழு வயது. முகத்தில் அப்பட்டமாக அச்சம். டெல்லியில் காஷ்மீரி பிராமண குடும்பத்தில் பிறந்தவர். ஆச்சாரமான நடுத்தரக் குடும்பம். நொடிக்கு நாலு முறை வெட்கப்படுவார். வாய்திறந்து ‘களுக்’கென்று பேசமாட்டார். ரொம்பவும் அமைதியான சுபாவம். பெரிய குடும்பத்தில் பெண் கேட்கிறார்கள் என்றதுமே எதையும் யோசிக்காமல் கன்னிகாதானம் செய்துவிட்டார் கமலாவின் அப்பா.

அலகாபாத்துக்கு வந்தபிறகுதான் தெரிந்தது, தான் வாழ்க்கைப்பட்டிருக்கும் குடும்பம் அரசக்குடும்பத்துக்கு நிகரான அந்தஸ்தோடு வாழ்கிறார்கள் என்று. ‘ஆனந்த பவன்’ என்கிற அந்த மாபெரும் மாளிகைக்குள் கவனமாக வலதுகாலை எடுத்து வைத்து நுழைந்தார் கமலா நேரு.

மேற்கத்திய நாகரிகத்தில் வாழும் கணவர். வீட்டில்கூட நுனிநாக்கு ஆங்கிலத்தில் பேசுவதை பார்க்க பார்க்க பற்றிக்கொண்டு வந்தது. கமலாவுக்கு ஒரு வார்த்தைகூட ஆங்கிலத்தில் பேசவராது. மனைவியையும், குடும்பத்தையும் விட நாடுதான் முக்கியம் நேருவுக்கு. எப்போது பார்த்தாலும் அரசியல், போராட்டம், பயணம். திருமணமாகி சில நாட்களிலேயே இமாலயத்துக்கு ‘டூர்’ போட்டார் நேரு. தேனிலவு அல்ல, தனியாகதான். பின்னர் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றில் இச்சம்பவத்தை எழுதும்போது, “அப்போது கிட்டத்தட்ட கமலாவை நான் மறந்தேவிட்டேன்” என்று வேடிக்கையாக குறிப்பிடுகிறார் நேரு.

“எங்கள் மணவாழ்வில் நாங்கள் இருவரும் சேர்ந்திருந்த நாட்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அரிதிலும் அரிதான அச்சந்திப்புகளுக்கு விலைமதிப்பே இல்லை” என்றும் நேரு சொல்கிறார்.

கமலாவின் ஒரே ஆறுதல் நாத்தனார் விஜயலஷ்மி பண்டிட்தான். நேருவுக்கு இணையான புத்திக்கூர்மையும், கல்வியறிவும் பெற்றிருந்தவர். தன்னுடைய அண்ணியை எப்படியாவது தேற்றிவிட வேண்டுமென்று விஜயலட்சுமி கடுமையாக முயற்சித்தார். அவரது உழைப்பு வீண் போகவில்லை. சீக்கிரமே மாமியார் வீட்டை புரிந்துக்கொண்டு, தன்னை புகுந்த வீட்டோடு இயல்பாக பொருத்திக்கொள்ள தொடங்கினார் கமலா. கல்யாணம் ஆன அடுத்த வருடமே நேருவை அச்சு அசலாக உரித்துக்கொண்டு அழகான மகள் பிறந்தாள். இந்திரா பிரியதர்ஷனி. இந்திராவுக்கு பிறகு பிறந்த மகன், ஒரு வாரத்திலேயே காலமாகிவிட்டான்.

கணவர் ஏன் எப்போதும் ஊர் சுற்றிக் கொண்டே இருக்கிறார் என்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்த கமலாவுக்கு சுதந்திரப் போராட்டம், காங்கிரஸ் குறித்து பாடமெடுத்தார் விஜயலஷ்மி. இதையடுத்து நாட்டுக்காக கணவரோடு இணைந்து போராடுவது தன்னுடைய கடமை என்கிற முடிவுக்கு அவர் வந்தார்.

1921ல் நடந்த ஒத்துழையாமை இயக்கம் மூலமாக பொதுவாழ்வுக்கு வந்தார். அலகாபாத் நகர் மகளிரை ஒன்றிணைத்தார். அயல்நாட்டு பொருட்களையும், மதுவகைகளையும் விற்றுவந்த கடைகளுக்கு முன்பாக மறியல் செய்தார். ஒத்துழையாமை இயக்கத்தின் அவசியத்தை விளக்கி மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்றினை நடத்த நேரு திட்டமிட்டிருந்த நிலையில், அவரை வெள்ளையர் கைது செய்தனர்.

கணவர் திட்டமிட்டிருந்த கூட்டத்தை வெற்றிகரமாக கமலா கூட்டினார். அக்கூட்டத்தில் ஆற்றுவதற்காக நேரு தயார் செய்திருந்த உரையை கமலா வாசித்தார். அந்நிய ஆட்சிக்கு எதிராக போர் முழக்கம் புரிந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பாக ஆங்கிலவாசனையே இல்லாமல் ஆனந்தபவனுக்குள் கமலாவா இதுவென்று நேரு குடும்பத்துக்கே ஆச்சரியம்.

நேருவுக்கு இணையான அச்சுறுத்தல் அவரது மனைவி கமலாவாலும் தங்களுக்கு நேரலாம் என்று வெள்ளையர்கள் யூகித்தனர். ஏனெனில் கமலாவின் பின்னால் அலகாபாத் பெண்கள் மட்டுமல்லாமல், நாடு முழுக்கவிருந்த பெண்களும் அணிதிரள தயார் ஆனார்கள். அடுத்தடுத்து இருமுறை கமலா கைது ஆனார். தொடர்ச்சியான போராட்டங்கள், சிறைவாசமென்று அவரது உடல் சீர்குலைந்தது. ஏற்கனவே காசநோய் பிரச்சினை இருந்தது. சிறப்பு சிகிச்சை அளிப்பதற்காக ஐரோப்பாவுக்கு மனைவியை அழைத்துச் சென்றார் நேரு. இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து என்று பல இடங்களுக்கும் மகள், மனைவியோடு சுற்றிக் கொண்டிருந்தார்.

இந்தியாவில் உப்பு சத்தியாக்கிரக போராட்டங்கள் உக்கிரம் பெற்ற நிலையில் குடும்பத்தோடு அப்போராட்டங்களில் கலந்துகொண்டார். நேரு, அவரது மனைவி, தங்கை என்று மொத்தமாக குடும்பத்தோடு சிறைவைக்கப் பட்டார்கள். சிறையில் மீண்டும் கமலாவின் உடல்நிலை படுமோசமானது. ஐரோப்பாவில் அவருக்கு சிகிச்சை தேவைப்பட்ட நிலையில் வெள்ளையர் அரசு கருணை அடிப்படையில் அவர்களை விடுதலை செய்தது.

சுவிட்சர்லாந்தில் கமலாவுக்கு சிகிச்சை தொடர்ந்தது. அவர் படுத்த படுக்கையானார். இந்தியாவில் நேருவின் சுதந்திரப் போராட்டம், சுவிட்சர்லாந்தில் கமலாநேரு உயிருக்குப் போராட்டமென்று குடும்பம் தத்தளித்தது.

இந்த அவலம் வெகுவிரைவிலேயே முடிவுக்கு வந்தது. கமலா நேரு 1936ல் தன்னுடைய 37வது வயதில் சுவிட்சர்லாந்தில் காலமானார். மனைவியின் நினைவாக தன்னுடைய உடையில், கமலாவுக்கு பிடித்த சிகப்பு ரோஜாவை செருகிக்கொள்ளத் தொடங்கினார் நேரு. இந்தப் பழக்கம் 1964ல் அவர் மரணிக்கும் வரை தொடர்ந்தது.