20 நவம்பர், 2015

கவர்ச்சி பாதி, அதிரடி மீதி!

உலகை காக்க வருகிறார் உலகநாயகன்...
‘திருப்பதிக்கே லட்டு’, ‘திருநெல்வேலிக்கே அல்வா’, ‘ரஜினிக்கே ஸ்டைலு’, ‘மோடிக்கே ஃபாரின் டூரு’ மாதிரியான க்ளிஷேவான விஷயம்தான் ‘தினகரன் வெள்ளிமலர்’ வாசகர்களுக்கு ஜேம்ஸ்பாண்டை அறிமுகப்படுத்துவதும். நீங்களெல்லாம் சாதா வாசகர்களா என்ன, உலக வாசகர்கள் இல்லையா. உங்களுக்குத் தெரியாத எதை நாங்கள் புதியதாக எழுதிவிட முடியும்?

விதவிதமான துப்பாக்கிகள், எல்லா ‘சைஸிலும்’ பேரழகிகள், நவீனரக கார்கள், மிடுக்கான கோட் ஷூட், கொடூரமான வில்லன்கள், கொலை நடுக்கம் ஏற்படுத்தும் ஆக்‌ஷன் காட்சிகள், ரத்த அழுத்தத்தை எகிறவைக்கும் சேஸிங் சீன்... இதெல்லாம் இல்லாமல் என்ன ஜேம்ஸ்பாண்ட் படம்?

ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தலைமுறை தலைமுறையாக உலகம் ஜேம்ஸ்பாண்டை ரசித்துக் கொண்டேதான் இருக்கிறது. நம் தாத்தாவும் ஜேம்ஸ்பாண்ட் ரசிகராக இருந்தார். நம் அப்பாவும் 007க்கு வெறியராக இருந்தார். நமக்கும் அந்த பிரிட்டிஷ் உளவாளி மீது அத்தனை மோகம். தலைமுறைகளை கடந்த ரசனை இது. ஒவ்வொரு படம் வெளிவரும்போதும், அந்தந்த காலக்கட்டத்தின் விருப்பு வெறுப்புகளை கருத்தில் கொண்டு ஜேம்ஸ்பாண்ட் தன்னை சாஃப்ட்வேர் மாதிரி அப்டேட் செய்துக் கொள்கிறார் என்பதே அவரது நிஜமான வெற்றி.

நியாயத்தின் பக்கம் மட்டுமே நிற்பார். உயரிய லட்சியங்களுக்காக உயிரை பணயம் வைப்பார். தீயவர்களுக்கு தீ. அதிவேகமாக காரை ஓட்டும் அதே அனாயசமான ஸ்டைலை, அழகிகளை ஓட்டும்போதும் காட்டுவார். நவீன ஆயுதங்களை கையாளுவதில் ராட்சஸன். உலகம் சுற்றும் வாலிபன். இனம், மொழி, நாடு, அரசியல் எல்லைகளுக்கு அப்பாற்பட்டவர். இத்தகைய கல்யாண குணங்கள் கொண்ட மாப்பிள்ளையை யாருக்குதான் பிடிக்காது?

உலக வரலாற்றை கிமு, கிபி என்று பிரிப்பதைக் காட்டிலும் இ.உ.போ.மு, இ.உ.போ.பி என்று வகைபடுத்துவதுதான் நியாயம் (குழம்பாதீர்கள் இரண்டாம் உலகப்போருக்கு முன், பின் என்பதின் சுருக்கம்தான்). உலகம் அதுவரை சந்தித்திராத வகையில் ஹிட்லர் என்கிற மாபெரும் வில்லன் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா என்று வகைதொகை இல்லாமல் வல்லரசு நாடுகளின் வலிமையை அசைத்துப் பார்த்தான். அயலுறவு, உள்நாட்டுப் பாதுகாப்பு என்று உலகநாடுகள் பல விஷயங்களை கவலையோடு மீள்பரிசோதனை செய்தது அந்த சந்தர்ப்பத்தில்தான். எதிர்காலம் குறித்த அச்சம் அரசுகளுக்கு மட்டுமின்றி, சாதாரண சிவிலியன்களையும் பாடாய் படுத்தியது. அர்த்தமில்லா அச்சம், பனிமூட்டமாய் உலகை சூழ்ந்திருந்த காலக்கட்டம் அது.

“எங்களையெல்லாம் காப்பாத்த ஒரு வேலாயுதம் வரமாட்டானா?” என்று யாரோ ஓர் அபலை கூக்குரலிட்டிருக்க வேண்டும். ‘வேலாயுதம்’ சற்று தாமதமாக 2011ல்தான் இளைய தளபதி விஜய் மூலமாக வந்தார். ஆனால் 1953லேயே சூப்பர் ஹீரோ ஜேம்ஸ்பாண்ட் வந்துவிட்டார். ஜேம்ஸ் மட்டுமல்ல. இன்று (சினிமாவிலும் நாவல்களிலும்) உலகை காக்கும் ஏராளமான சூப்பர் ஹீரோக்கள் இரண்டாம் உலகப் போருக்கு பிறகே பிறந்தார்கள். ‘தீயவர்களால் பிரச்சினையா? எங்க கிட்டே வாங்க’ என்று நம்பிக்கை கொடுத்தார்கள்.

ஜேம்ஸை பிரசவித்தவர் பிரபல நாவலாசிரியர் இயான் ஃப்ளெமிங். அந்த காலத்தில் ராபர்ட் ஃப்ளெமிங் & கோ என்கிற வங்கி, ஐரோப்பாவில் ரொம்ப பிரபலம். அந்த வங்கியின் உரிமையாளர் குடும்பத்தில்தான் ஃப்ளெமிங் பிறந்தார். இவர், முனிச் மற்றும் ஜெனிவா பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்று வங்கித் தொழிலை கவனிக்க தயாரான நிலையில்தான் இரண்டாம் உலகப் போர் வந்தது. நாட்டை காக்க ஒவ்வொரு குடும்பத்திலும் இருந்து ஒருவராவது இராணுவசேவைக்கு போவது அப்போது கடமையாக இருந்தது. ஃப்ளெமிங், அச்சந்தர்ப்பத்தில் பிரிட்டிஷ் கடற்படையில் உளவுத்துறை அதிகாரியாக பணியாற்றினார். தன்னுடைய பணியில் மகத்தான சாகஸங்களை நிகழ்த்தி, இங்கிலாந்தின் ஹீரோவாக வேண்டும் என்று தினம் தினம் கனவு கண்டார். அதற்கான சந்தர்ப்பங்கள் சரியாக வாய்க்காத நிலையில் தன் கனவுகளை கதைகளாக மூளைக்குள் அடுக்கத் தொடங்கினார். தன்னுடைய சகப்பணியாளர்களிடம் போர் முடிந்தபிறகு ஓர் உளவாளியை நாயகனாக்கி நாவல் எழுதப்போவதாக சொல்லுவார். கதையின் சம்பவங்களாக தன்னுடைய கனவுகளை விவரிப்பார்.

போர் முடிந்தது. அட்வெஞ்சரான பணிகள் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை என்கிற சலிப்பில் கடற்படைப் பணியில் இருந்து ஃப்ளெமிங்கும் விலகினார். சாகஸமானப் பணியை தேடி பத்திரிகையாளர் ஆனார். சில ஆண்டுகளில் அதுவும் வெறுத்துப் போக, போர்க்கால கனவுகளை தூசுதட்டி நாவல் எழுத உட்கார்ந்தார்.

என்ன எழுதுவது என்று திட்டவட்டமான ஐடியாவே இல்லை. என்னதான் சிந்தித்தாலும் மப்பாகவே இருந்தது. தன்னையே ஹீரோவாக கருதி எழுத ஆரம்பித்தார். இயல்பிலேயே மந்தமானவராக அமைந்துவிட்ட ஃப்ளெமிங், தன்னுடைய ஹீரோவையும் மிஸ்டர் மந்தமாக உருவாக்க விரும்பினார். அவனுக்கு என்ன பெயர் சூட்டுவது என்றும் தெரியவில்லை. தன் பெயரை சூட்டி, தன் குடும்பப் பாரம்பரியத்தையே கேவலப்படுத்தவும் மனமில்லை. மொக்கையான வேலையை செய்பவருக்கு மொக்கையான பெயர்தான் இருக்கும். அதுமாதிரி எந்த சுவாரஸ்யமுமில்லாத வேலையை செய்துக் கொண்டிருப்பவர் ஒருவரின் பெயரை சூட்டலாம் என்கிற முடிவுக்கு வந்தார். அக்காலத்தில் அமெரிக்காவில் பறவையியல் ஆராய்ச்சியாளர் ஒருவர் இருந்தார். நாள் கணக்கில் ஆடாமல், அசையாமல் ஒரே இடத்தில் அமர்ந்து செய்யும் அந்த வேலைதான் இருப்பதிலேயே மொக்கையான வேலை என்று முடிவுகட்டிய ஃப்ளெமிங், அவரது பெயரையே தன்னுடைய ஹீரோவுக்கு நாமகரணம் செய்தார். இந்த பெயரை கேட்டாலே, கேட்பவருக்கு மந்தமான ஃபீலிங் உருவாகும் என்று நம்பவும் செய்தார். அந்த பெயர்தான் ஜேம்ஸ்பாண்ட்.
‘எம்.ஐ-6’ என்கிற ரகசிய பிரிட்டிஷ் உளவு ஸ்தாபனத்தை தன் புனைவில் சிருஷ்டித்தார். 007 என்பது அதன் உளவாளியான ஜேம்ஸ்பாண்டின் ரகசியக் குறியீட்டு எண். தான் விரும்பி உண்ணும் உணவு, லிமிட்டாக சிப்பும் ‘சரக்கு’, ஸ்டைலாக ஊதும் சிகரெட்டு, நாகரிகமாக அணியும் உடை அனைத்தையுமே ஜேம்ஸுக்கு சொந்தமாக்கினார். ஆனால், ஃப்ளெமிங் திட்டமிட்டது மாதிரியாக இல்லாமல் ஜேம்ஸ்பாண்ட் சுவாரஸ்யமாக உருவானான். ஃப்ளெமிங்தான் ஜேம்ஸ். ஜேம்ஸ்தான் ஃப்ளெமிங். வேண்டுமென்றால் தலைவர் ஸ்டைலாக புகை பிடிக்கும் இந்தப் படத்தைப் பாருங்கள். புரியும்.

1953ல் ஜேம்ஸ்பாண்ட் நாவல் நாயகனாக பிறந்து, சரியாக பதினோரு ஆண்டுகள் கழித்து 1964ல் ஜேம்ஸை உருவாக்கிய ஃப்ளெமிங் மறைந்தார். அவர் உயிரோடு இருக்கும்போதே அவர் உருவாக்கிய ஹீரோவை வெள்ளித்திரையில் கிடைக்கும் பாக்கியம் அவருக்கு கிடைத்தது. 1962ல் ‘டாக்டர் நோ’ படம் மூலமாக, நாவலில் சாகஸங்கள் செய்துக் கொண்டிருந்த ஜேம்ஸ், சினிமாவுக்கும் தாவினார்.

ஃப்ளெமிங்கின் காலத்துக்குப் பிறகு ஜான் காட்னர், ரேமண்ட் பென்ஸன், கிங்ஸ்லி அமிஸ், செபஸ்டியன் ஃபாக், ஜெஃப்ரி டேவர் என்று ஏராளமான எழுத்தாளர்கள் ஜேம்ஸ்பாண்ட் நாவல்களையும், சிறுகதைகளையும் எழுதியிருக்கிறார்கள். காமிக்ஸ், டிவி சீரியல், வீடியோ கேம்ஸ், சினிமா, மொபைல் அப்ளிகேஷன்கள் என்று ஜேம்ஸ் இடம்பெறாத வடிவமே கிடையாது.

ஹாலிவுட்டில் மட்டுமல்ல. உலகம் முழுக்க இருக்கும் எல்லா வுட்டு மாஸ் ஹீரோக்களும் ஜேம்ஸ்பாண்ட் தாக்கத்தில் இருந்து தப்பவே முடியாது. சினிமாக்களில் மட்டுமல்ல. நம்மூர் சுஜாதா, ராஜேஷ்குமார், சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர் போன்ற எழுத்தாளர்களின் கதைகளில் வரும் துப்பறியும் ஹீரோக்களும் ஜேம்ஸ்பாண்டின் பரம்பரைதானே? அந்தகால ஜெய்சங்கர் படங்கள்தான் ஜேம்ஸ்பாண்டின் நேரடி உல்டா என்று நினைக்காதீர்கள். லேட்டஸ்ட் ‘வேதாளம்’, ‘தூங்காவனம்’ வரைக்கும்கூட ஜேம்ஸின் பாதிப்பு ஹீரோவுக்கு இல்லாமலா இருக்கிறது? லேடி ஜேம்ஸ்பாண்டு கூட உண்டு தெரியுமா? விஜயசாந்தி வேறு யார்?
ஓக்கே, கமிங் டூ த பாயிண்ட். இந்த வரலாற்று ஆராய்ச்சி எதற்கென்றால் இன்று முதல் ஜேம்ஸ்பாண்ட் இந்தியாவை காக்கவும், கலக்கவும் வருகிறார் ‘ஸ்பெக்டர்’ மூலமாக. ‘ஸ்பெக்டர்’ என்றால் Special Executive for Counter Intelligence, Terrorism, Revenge and Extortion என்பதன் சுருக்கம். அதற்கு அர்த்தம் தேடி ரொம்ப காய வேண்டாம். மக்களுக்கும் எதிரான மொள்ளமாறி அமைப்பு என்று புரிந்துக் கொண்டால் போதும்.

ஐரோப்பாவில் போன மாதமும், அமெரிக்காவில் இம்மாத தொடக்கத்திலும் வெளியாகிவிட்ட ‘ஸ்பெக்டருக்கு’ கறாரான விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்கள்தான் வந்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், அறிவுஜீவி விமர்சகர்களை வழக்கம்போல புறந்தள்ளிவிட்டு ஜேம்ஸை கொண்டாடித் தீர்க்கிறார்கள் ரசிகர்கள். வசூல் மழை கொட்டோ கொட்டுவென்று கொட்டிக் கொண்டிருக்கிறது. ‘ஸ்பெக்டர்’ இந்தியாவில் வெளியான பிறகு இந்த மழை, சுனாமியாகக்கூடும் என உலக சினிமா வானிலை ஆராய்ச்சி நிலையத்தைச் சேர்ந்த குமணன் என்பவர் ஜோஸியம் சொல்லியிருக்கிறார்.
ஜேம்ஸ்பாண்ட் சினிமா வரிசையில் இது 24வது திரைப்படம். மெக்ஸிகோவின் ‘டே ஆஃப் டெட்’ திருவிழாவில் ஆரம்பக்கும் காட்சியில் தொடங்கி, இறுதி வரை விறுவிறுப்பாக படம் போகிறது என்று ஜேம்ஸ் ரசிகர்கள் சிலாகிக்கிறார்கள். ‘ட்ஜாங்கோ அன்செய்ன்ட்’ படத்துக்காக ஆஸ்கர் வென்ற கிறிஸ்டோப் வால்ட்ஸ்தான் வில்லன் என்பது எதிர்ப்பார்ப்புகளை எகிறச் செய்கிறது. செக்ஸ் பாம் மோனிகா பெலூச்சியின் தாராளக் கவர்ச்சி, தீபாவளிக்குப் பிந்தைய போனஸாம். இப்படத்தின் பாண்ட் கேர்ளான லியா சீடோக்ஸும் சும்மா கும்மென்று இருப்பதாக படம் பார்த்தவர்கள் வெட்கத்தோடு சொல்கிறார்கள்.

முந்தைய ஜேம்ஸ் படமான ‘ஸ்கைஃபால்’தான் இதுவரை வந்த ஜேம்ஸ் படங்களிலேயே வசூலை அதிகமாக வாரிக் குவித்தது. அதை இயக்கிய சாம் மெண்டிஸே ‘ஸ்பெக்டரையும்’ இயக்கியிருக்கிறார்.

ரைட்டு. நாம் பேசிப்பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம். ஜேம்ஸ் படங்கள் பேசுவதற்கானவை அல்ல. பார்த்து ரசித்து கொண்டாடி தீர்ப்பதற்கானவை. ஹேப்பி ஜேம்ஸ் டே!

(நன்றி : தினகரன் வெள்ளிமலர்)

4 கருத்துகள்:

  1. திரைமேதை ஹிட்ச்ஹாக் இயக்கிய ‘நார்த் பை நார்த் வெஸ்ட்’ திரைப்படம்தான் ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரம் உருவாக ‘அடிப்படையான மூல காரணம்’.

    பதிலளிநீக்கு
  2. சுவாரஸ்யமான தகவல்கள்! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  3. Please read
    http://www.bbc.com/travel/story/20150901-canadas-real-life-james-bond

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா12:13 AM, நவம்பர் 21, 2015

    When talking about SPECTRE, being a comic fan, I thought you would figure out the link to AaKoThee Kazhagam (Azhivu, Kollai, Theemai Kazhagam). How did you miss it?

    பதிலளிநீக்கு