23 நவம்பர், 2016

சத்ரியன் மறைந்தார்!

இந்த தலைமுறையினரில் எத்தனை பேருக்கு இந்த இயக்குநரை தெரியுமென்று தெரியவில்லை. எண்பதுகளின் குழந்தைகளான எங்களுக்கு கே.சுபாஷ், மிகப்பெரிய இயக்குநர்.

அந்த காலக்கட்டத்தில் ரஜினி - கமல் இருவரையுமோ, இருவரில் ஒருவரையுமோ இயக்காமல் தமிழில் முன்னணி இயக்குநராக கோலோச்சியவர் அனேகமாக இவர்தான்.  இருப்பினும் தொண்ணூறுகளில் திரையுலகப் படிக்கட்டுகளில் அடுத்தடுத்த நிலையில் இருந்தவர்களான விஜயகாந்த், சத்யராஜ், பிரபு ஆகியோரின் மனம் கவர்ந்த இயக்குநராக இவர் இருந்தார். பி.வாசுவுக்கு இணையான செல்வாக்கு சுபாஷுக்கும் ஒரு காலத்தில் இருந்தது.

‘நாயகன்’ படத்தின் வெற்றிக்கு கமல்ஹாசனின் நடிப்பும், மணிரத்னத்தின் இயக்கமும்தான் காரணமென்று அத்தனை பேரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். கமலுக்கும், மணிரத்னத்துக்கும்தான் தெரியும், சுபாஷின் உழைப்பு அப்படத்தின் வெற்றிக்கு எவ்வளவு உறுதுணையாக இருந்தது என்று. ‘நாயகன்’ காலத்தில் மணிரத்னத்தின் வலதுகையாக சுபாஷ் இருந்தார். எனவேதான், தனியாக படம் இயக்கப் போய் திணறிக் கொண்டிருந்தபோது, தன்னுடைய தயாரிப்பில் ‘சத்ரியன்’ இயக்கும் வாய்ப்பை அவருக்கு கொடுத்தார் மணிரத்னம்.

தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களான இரட்டை இயக்குநர்கள் கிருஷ்ணன் - பஞ்சு ஜோடியில் கிருஷ்ணனின் மகனாக பிறந்தவர் சுபாஷ். ஆனால், தன்னுடைய சினிமா சிபாரிசுக்காக எந்நாளும் அவர் தன்னுடைய தந்தை பெயரை பயன்படுத்தியதே இல்லை.

சுபாஷின் முதல் முயற்சியான ‘கலியுகம்’, புரட்சிகரமான கதையை கொண்டதாக இருந்தாலும் போதிய வெற்றி பெறவில்லை. ஆனால், இவரது இயக்கத்தில் பிரபு கம்ஃபர்ட்டபிளாக உணர்ந்தார். எனவே அடுத்து அவர் நடித்த காமெடிப் படமான ‘உத்தம புருஷன்’ படத்தின் இயக்குநர் வாய்ப்பும் சுபாஷையே தேடிவந்தது. இந்தப் படம் கமர்ஷியலாக நன்றாக போக, தமிழ் சினிமாவின் வெற்றிகரமான கமர்ஷியல் இயக்குநர்களில் ஒருவராக சுபாஷ் தடம் பதித்தார்.

1990 தீபாவளிதான் சுபாஷின் தலை தீபாவளி எனலாம். கமலின் ‘மைக்கேல் மதன காமராஜன்’, ராமராஜனின் ‘புதுப்பாட்டு’ (தயாரிப்பு : இளையராஜா), மனோபாலா இயக்கத்தில் சத்யராஜின் ‘மல்லுவேட்டி மைனர்’, பாக்யராஜின் ‘அவசர போலிஸ் 100’ என்று பலத்த போட்டிகளுக்கு மத்தியில் விஜயகாந்த் நடிப்பில் இவர் இயக்கிய ‘சத்ரியன்’ வெளிவந்து வெற்றி கண்டது. அதுவரையில் தமிழ் சினிமாவில் வெளிவந்த cop movies வகையில் அதுவே தலைசிறந்தது என்று பெயரெடுத்தது.

‘சத்ரியன்’ திரைப்படம், தமிழ் சினிமாவில் போலிஸுக்கு என்று புது இலக்கணமும் படைத்தது. இரண்டே பாட்டு, ஒரு நச் ப்ளாஷ்பேக், விறுவிறுப்பான திரைக்கதை, நறுக்கென்ற வசனங்கள் என ‘சத்ரியன்’ ஒரு டிரெண்ட் செட்டர். பிற்பாடு ஷங்கர் போன்ற பெரிய இயக்குநர்களின் கதை சொல்லும் பாணியில் ‘சத்ரியன்’ தாக்கம் கூடுதலாகவே இருந்தது. தொண்ணூறுகளின் தொடக்க நியூவேவ் மூவியாக, அடுத்த சில ஆண்டுகள் தமிழ் சினிமாவின் போக்கை தொழில்நுட்பரீதியில் தீர்மானிக்கக் கூடியதாக அப்படம் அமைந்தது. ‘பழைய பன்னீர் செல்வமா வரணும்’ என்கிற திலகனின் குரல் இருபத்தாறு ஆண்டுகள் ஆகியும் யார் காதிலாவது இன்னமும் கேட்டுக்கொண்டே தான் இருக்கிறது.

ஆங்கிலப் படங்கள் பாணியில் அவர் எடுத்த த்ரில்லரான ‘ஆயுள் கைதி’ வசூலில் சோடை போனாலும், அடுத்த தீபாவளிக்கு அவர் கொடுத்த ‘பிரம்மா’ பிளாக் பஸ்டர் ஹிட். இந்த தீபாவளிதான் பிரசித்தி பெற்ற தளபதி –- குணா மோதிய பிரபலமான தீபாவளி. ரஜினி, கமல் படங்களை பல ஏரியாக்களில் ‘பிரம்மா’ அசால்டாக தோற்கடித்தது. ‘செக்ஸ் கொஞ்சம் தூக்கல்’ என்கிற விமர்சனத்தையும் பெற்றது. ‘பிரம்மா’ ஜோடியான அதே சத்யராஜ் - பானுப்ரியாவை வைத்து அவர் இயக்கிய ‘பங்காளி’, சுபாஷுக்கு பின்னடைவாக அமைந்தது. எனினும் இன்றுவரை தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் ‘சைதை தமிழரசி தாக்கப்பட்டாரா?’ என்கிற வசனம் இடம்பெற்ற படம் அதுதான்.

‘பங்காளி’க்குப் பிறகு சுபாஷின் திரையுலக வாழ்க்கையில் பெரும் தேக்கம். அப்போது அறிமுகமாகியிருந்த அஜித்தை வைத்து அடுத்தடுத்து ‘பவித்ரா’, ‘நேசம்’ படங்களை இயக்கினார். அவை எதிர்ப்பார்த்த வெற்றியை எட்டவில்லை. பார்த்திபனை வைத்து அவர் எடுத்த ‘அபிமன்யூ’ பரபரப்பாக வசூலித்து மீண்டும் சுபாஷை லைம்லைட்டுக்கு கொண்டுவந்தது. இதன் பிறகு தரை லோக்கலுக்கு இறங்கி பிரபுதேவாவை வைத்து ‘நினைவிருக்கும் வரை’, ‘ஏழையின் சிரிப்பில்’ படங்களை வெறும் வசூலை மட்டுமே மனதில் நிறுத்தி இயக்கி வென்றார்.

பார்த்திபனை மீண்டும் அவர் இயக்கிய ‘சபாஷ்’, பழைய சுபாஷை மீண்டும் கொண்டுவந்தது. எனினும் வணிகரீதியாக சரியாக போகவில்லை. கிட்டத்தட்ட இந்தப் படத்தோடு சுபாஷின் தமிழ் திரையுலக வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாக கருதலாம். அதன் பின்னர் பிரபுதேவா சகோதரர்களை வைத்து அவர் எடுத்த ‘ஒன் டூ த்ரீ’, டிசாஸ்டர் ஆகவே அமைந்தது.
எனினும் இந்தியில் வெற்றிகரமான கதையாசிரியராக அவர் கடைசி பத்தாண்டுகளாக இருந்தார். ஷாருக்கானின் வசூல் சரித்திர சாதனைப் படமான ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்துக்கு கதை எழுதியது இவர்தான். ‘எண்டெர்டெயின்மெண்ட்’, ‘தில்வாலே’, ‘ஹவுஸ்ஃபுல்-3’ என்று இந்தியிலும் வெற்றிக்கொடி நாட்ட சுபாஷ் தவறவில்லை.

இன்று ‘தல’ அஜீத், ஷூட்டிங்கில் எல்லோருக்கும் பிரியாணி சமைத்துப் போடுவது பிரபலமான செய்தியாக, ஆர்வமாக வாசிக்கப்படுவதாக ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது. அஜீத்துக்கு ‘பவித்ரா’ படம் எடுத்த காலத்தில் பிரியாணி உட்பட விதவிதமான அசைவ உணவு வகைகளை சமைக்க கற்றுக் கொடுத்தவர் இதே கே.சுபாஷ்தான். அறிமுகக் காலத்தில் சினிமாவில் சரியான வழிகாட்டுதல் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த அஜீத்துக்கு கே.சுபாஷின் அலுவலகம்தான் வேடந்தாங்கலாக இருந்தது. ஓய்வாக இருக்கும்போது சுபாஷை பில்லியனில் அமரவைத்து சென்னை முழுக்க அதிவேகமாக பைக் ஓட்டி குஷிப்படுத்துவாராம் அஜித்.

தொண்ணூறுகளின் சினிமா ரசிகர்களுக்கு தாங்க முடியாத இழப்பு, சுபாஷின் திடீர் மரணம்.

5 கருத்துகள்: