2 மார்ச், 2012

கோழி மோசடி

புளி போட்டு பளபளப்பாக துலக்கி வைக்கப்பட்டிருந்த வெங்கலச் சொம்பில் ‘புளிச்’சென்று துப்பினார் நாட்டாமை. அதே ஆலமரம். அதே ஜமுக்காளம். அதே பொதுமக்கள்.

“ஆளாளுக்கு மசமசன்னு நின்னுக்கிட்டிருந்தா எப்பூடி? யாராவது பேச்சைத் தொடங்கியாகணுமில்லே?” நாட்டாமைக்கு சரிசமமாக அமர்ந்திருந்த பச்சைத்துண்டு பெருசு ஆரம்பித்து வைத்தது. தனக்கு வாகாக அவ்வப்போது ‘பீப்பி’ ஊதும் இம்மாதிரி ஆட்களுக்குதான் சரியாசனம் வழங்குவது நாட்டாமையின் வழக்கம்.

“நம்ம மாடசாமிதான் பிராது கொடுத்திருக்காப்புலே” மேடையில் அமர்ந்திருந்த இன்னொரு பீப்பி, முந்தைய பீப்பியை வழிமொழிந்தது.

“அது ஒண்ணுமில்லேங்கய்யா... நம்ம ராசாவாலே எனக்கு ஒரு ஒண்ணே முக்கா லட்சம் நஷ்டமா போயிடிச்சிய்யா... அவனாண்ட பேசி வாங்கித் தருவியளோ, இல்லேன்னா கட்டிவெச்சி அடிச்சி வாங்கித் தருவியளோ தெரியாது. என் காசு ஒண்ணே முக்கா லட்ச ரூவாய் எனக்கு வோணும்”

“என்னப்பா ராசா. மாடசாமி சொல்றது உண்மையா?”

“இல்லீங்க. என்னாலே அவனுக்கு லாபம்தானுங்க”

“ஏம்பா. அவன் லாபம்னு சொல்றான். நீ நஷ்டமுன்னு சொல்றே. என்னதான்யா உங்க கொடுக்க வாங்க”

“அய்யா. என் கோழிப்பண்ணையையே அழிச்சிப் புட்டான்யா இந்த ராசா”

“இல்லீங்கய்யா. அவன் பொய் சொல்லுதான். என்னாலே மாடசாமிக்கு நாப்பது ரூவாய் லாபம்தானுங்கய்யா”

“யோவ். ரெண்டு பேருலே ஒருத்தனாவது புரியறாமாதிரி சொல்லித் தொலைங்கடா. வெயில் ஏறிக்கிட்டே போவுது. உடம்பெல்லாம் ஒரு மாதிரி கசகசக்குது பார்த்துக்க”

மாடசாமி சொல்ல ஆரம்பித்தான்.

“அய்யாவுக்கு தெரியாதது ஒண்ணுமில்லீங்க. நான் ஆசையா ஒரு பெட்டைக்கோழியை வளர்த்து வந்தேன். எனக்கு வயித்துக்கு இருக்குதோ இல்லையோ. அதுக்கு நல்லா சத்தா தீவனம் போட்டு வளர்த்தேனுங்க. இப்போ கொஞ்சம் பணமுடை. அதனாலே அதை விலைக்கு வித்துடலாமுன்னு முடிவு பண்ணேனுங்க. நம்ம ராசா வாராவாரம் சந்தைக்குப் போவாப்புலேன்னு சொல்லிட்டு, அவனாண்ட இதை வித்துக் கொடுக்குற பொறுப்பை ஒப்படைச்சேனுங்க. அதுலேதானுங்க என்னை இவன் ஏமாத்திப்புட்டான்”

“அந்த கோழியோட விலை நூத்தி பத்து ரூவாய்ங்க. நான் நூத்தி ஐம்பது ரூவாய்க்கு வித்துக் கொடுத்தேனுங்க. அவனுக்கு நாப்பது ரூவாய் லாபம்தானுங்களே?”

“அது எப்படிங்க அய்யா? இந்த கோழி நாலு முட்டை வெச்சுருக்கும். நாலு குஞ்சு பொறிச்சிருக்கும். நாலு பதினாறாயி, பதினாறு அறுவத்தி நாலு ஆயி, அறுவத்தி நாலு இருநூத்தி ஐம்பத்தாறாயி... இப்படியே ஒரு ரெண்டு வருஷத்துலே பண்ணை ஆகியிருக்குமுங்க.. ஊர்லே பண்ணை வெச்சிருக்கிறானே முனுசாமி. அவங்கிட்டே வெசாரிச்சி கேட்டுட்டுதானுங்க சொல்றேன். ஒரு பண்ணையோட மதிப்பு ஒண்ணே முக்கா லட்சமுங்க. அப்போ என் கோழியோட மதிப்பும் அதுதானுங்களே? இவன் பாட்டுக்கு நூத்தி ஐம்பது ரூவாயை கையில் கொடுத்துட்டு போனா என்னாங்க அர்த்தம்?”

“என் அறிவுக்கண்ணை தெறந்துட்டேய்யா..” நாட்டாமை புளங்காங்கிதப்பட்டதோடு ராசாவை நோக்கி, “ராசா நீ கோழியை யாராண்ட வித்தியோ, அந்த விற்பனையை கேன்சல் பண்ணி உடனே தீர்ப்பு கொடுக்கறேன். மரியாதையா கோழியை வாங்கி மாடசாமி கிட்டே கொடுத்துடு. அதுவுமில்லாமே ஒண்ணே முக்கா லட்ச ரூவாய் ஏமாத்தியிருக்கே. இந்த நாட்டாமையோட லெவலை தாண்டின குத்தமிது. மோசடி பண்ண குத்தத்துக்காக உன்னை இந்த பஞ்சாயத்து போலிஸிலே ஒப்படைக்குது. இதுதான் இந்த நாட்டாமையோட தீர்ப்பு!”

“அருமையான தீர்ப்புங்கய்யா...” ஊரே குலவையிட்டு நாட்டாமையை வாழ்த்தியது.

ராசா இப்போது ஜெயிலில் இருக்கிறார். மாடசாமி தன் கோழியை ஒண்ணே முக்கா லட்ச ரூபாய்க்கு விற்க ஆள் தேடிக் கொண்டிருக்கிறார்.

28 பிப்ரவரி, 2012

திராவிடர்களுக்கு

ஏன் திராவிட இயக்கம் மலர்ந்தது?

1912ல் திராவிட இயக்கம் தொடங்கப்படுவதற்கு முன் 5700 பட்டதாரிகளில் 4,074 பேர் பார்ப்பனர்கள். 3,650 வழக்கறிஞர்களில் 2686 பேர்  பார்ப்பனர்கள் . 1496 பொறியாளர்களில் 1096 பேர்  பார்ப்பனர்கள் . 3 சதவீதம் இருந்த  பார்ப்பனர்களில் பட்டதாரிகள் 70 சதவீதம், சட்டம் படித்தவர்களில் 74 சதவீதம். பொறியாளர்களில் 71 சதவீதம். ஆசிரியர்களில் 74 சதவீதம் இருந்தார்கள். பார்ப்பனரல்லாத சமூகத்தினருக்கு கல்வி மனுதர்மத்தை காட்டி மறுக்கப்பட்டதின் விளைவாக இந்த அடாத நிலை இருந்தது. மனிதராய் பிறந்தவர் அனைவரும் சமமே என்கிற கோட்பாட்டினை வலியுறுத்தவே திராவிட இயக்கம் பிறந்தது.


யாரெல்லாம் திராவிடர்கள்?
”திராவிடன் என்றால் யார்? தமிழன் என்று கூறாமல் திராவிடன் என்று கூறுவது ஏன் என்று கேட்கிறார்கள். நான் கட்டுரைகள் எழுதினாலும், அல்லது நம்முடைய கழகக் கூட்டங்களில் பேசினாலும் பேச்சின் இறுதியில் "நாம் மொழியால் தமிழர்கள், இனத்தால் திராவிடர்கள், நாடால் இந்தியர்கள், உலகத்தால் மனிதர்கள்'' என்று சொல்லி வந்ததை நினைவு கூர்ந்தால், தமிழை அகற்றி விட்டு திராவிடத்திற்குள் நாம் நுழைந்து விட்டோம் என்று பொருள் அல்ல என்பதை உணர்ந்து கொள்ளலாம்” என்று கலைஞர் சொல்கிறார். தனிப்பட்ட முறையில் ‘நாடால் இந்தியர்கள்’ என்கிற பதத்தை மட்டும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அய்யா சுபவீ அவர்கள் சொல்வதைப் போன்று சமூகநீதித் தளத்தில் ‘திராவிடன்’ என்றும், மற்ற களங்களில் ‘தமிழன்’ என்கிற அடையாளத்தையும் சுமக்க விரும்புகிறேன். எவனெல்லாம் மனிதநேயத்துக்கு எதிரான சனாதன மூட வழக்கங்களை எதிர்க்கிறானோ, எவனெல்லாம் எல்லோரும் சமம் என்று நம்புகிறானோ அவனெல்லாம் திராவிடன் என்பது என் தனிப்பட்ட நம்பிக்கை. திராவிடம் என்கிற சொல் வெறுமனே நிலவியல் பரப்பினையும், மொழியையும் வைத்து மட்டுமே வரையறுக்கப்பட்ட சித்தாந்தம் அல்ல. பாட்டாளிகளுக்காக உருவான சித்தாந்தமான மார்க்ஸின் பொதுவுடைமையைப் போன்றே ஏழை எளியவர்களுக்காகவும், மதம்-சாதியால் வஞ்சிக்கப்பட்டவர்களுக்காகவும், கடந்த நூறாண்டுகளாக தென்னிந்திய அறிவுஜீவிகளால் Collective thoughts ஆக உருவான உயரிய கோட்பாடு இது.



’திராவிடம்’ என்கிற சொல்லை திகவினரும், திமுகவினரும்தான் உருவாக்கினார்களா?


1847ஆம் ஆண்டிலேயே ‘திராவிட தீபிகை’ என்கிற இதழ் தமிழகத்தில் நடத்தப்பட்டிருக்கிறது. அதாவது இந்தியா வெள்ளையர்களிடமிருந்து சுதந்திரம் வாங்கியதற்கு நூறாண்டுகளுக்கு முன்னரே. வங்காள மகாகவியானவரும், இந்தியாவின் தேசிய கீதத்தை எழுதியவருமான ரவிந்திரநாத் தாகூர் ‘திராவிட’ என்கிற சொல்லினை தேசிய கீதத்திலேயே பயன்படுத்தியிருக்கிறார். இச்சொல்லை பயன்படுத்துங்கள் என்று அவரை பெரியாரோ, அண்ணாவோ வற்புறுத்தவில்லை. இந்திய தேசிய கீதத்திலேயே ‘திராவிடம்’ என்கிற சொல் இடம்பெற்றிருப்பதால், இந்திய தேசியம் திராவிட இனத்தை அங்கீகரிப்பதாகவே எடுத்துக் கொள்ளலாம்.

பிறப்பால் பார்ப்பனர்களும் திராவிடர்களாக முடியுமா?

மாநிலக் கல்லூரி வாசலில் இருக்கும் தமிழ்த்தாத்தா சிலையின் கீழ் ’திராவிட வித்யாபூஷணம்’ என்கிற அடைமொழியில் குறிப்பிட்டிருக்கிறார்கள். பார்ப்பனர்களும் உணர்வு அடிப்படையில் திராவிடர்களாக முடியும் என்கிற பரந்த மனப்பான்மை இவ்வினத்துக்கு உண்டு என்பதற்கு இது மிக நல்ல சான்று. பிறப்பின் அடிப்படையிலோ, மொழியின் அடிப்படையிலோ, நிலப்பரப்பின் அடிப்படையிலோ மட்டுமே ஒருவன் திராவிடனாக வரையறுக்கப்படுவதில்லை என்பதுதான் யதார்த்தம்.

திராவிடத்தால் விளைந்த நன்மை என்ன?

சாமானியர்களும் சிந்தித்து, இன்று இக்கேள்வியை கேட்கும் சுதந்திரத்தை திராவிடம் ஏற்படுத்தி தந்திருக்கிறது. திராவிடம் நமக்கு தந்த பரிசு கட்டற்ற கருத்து சுதந்திரம். இவனெல்லாம்தான் கல்வி கற்கலாம், இவனெல்லாம்தான் சிந்திக்கலாம் மாதிரியான பிற்போக்கு சமூகக் கட்டுப்பாடுகளை தகர்த்தெறிந்தது திராவிடம். பிறப்பின் அடிப்படையில் யாரையும் வரையறுத்து, அவனுடைய வாழ்வியலை கட்டுப்படுத்தும் போக்கினை திராவிடம் அகற்றியிருக்கிறது. இந்தியாவின் மகத்தான மாற்றமான இடஒதுக்கீடுக்கு 1920களிலேயே திராவிடம் அச்சாரம் இட்டது. சாதி, மத மறுப்பினை திராவிடம் சாத்தியமாக்கியது. முற்போக்கு சிந்தனைகளுக்கு அரசியல் சட்ட அங்கீகாரம் வழங்கியது.

நான் திராவிடன் என்று உணர்வதில் பெருமை கொள்கிறேன். இதே பெருமித உணர்வு உங்களுக்கும் இருப்பின், தமிழ் மண் உலகுக்கு தந்த மாபெரும் சித்தாந்த கோட்பாடான திராவிடத்தின் நூற்றாண்டினை கொண்டாடுங்கள். கொண்டாட்டத்தின் அடையாளமாக ஃபேஸ்புக் திராவிடத் தோழர்கள் தயாரித்துத் தந்திருக்கும் கீழ்க்கண்ட இலச்சினையை உங்கள் வலைப்பூவிலோ, ட்விட்டர், ஃபேஸ்புக் மாதிரி சமூகவலைப்பின்னல்களிலேயோ பயன்படுத்துங்கள்.




23 பிப்ரவரி, 2012

என்கவுண்டரை எதிர்ப்போம்!

தமிழ்நாட்டின் நடுத்தர வர்க்கத்து மொக்கைகளுக்கு மீண்டும் ஒரு தீபாவளி. இந்திய மனோபாவம் முற்றிலுமாக போர்வெறி இதிகாசமான மகாபாரதத்தை பின்னணியாக கொண்டது. எனவேதான் கொலைகளை கொண்டாடுகிறார்கள். ‘இவனுங்களை எல்லாம் நடுரோட்டுலே வெச்சு சுட்டுக் கொல்லணும் சார்’, ‘கோர்ட்டுக்குல்லாம் கூட்டிக்கிட்டு போவக்கூடாது. லாக்கப்புலேயே மேட்டரை முடிச்சிடணும்’ என்று பஸ்ஸிலும், ட்ரெய்னிலும் பொழுதுபோக்குக்கு பேசுபவர்களுக்கு எவனையோ போட்டுத் தள்ளணும் என்கிற அனாவசிய வெறி. பொதுஜனத்துக்கு இப்படியொரு கொலைவெறி இருப்பதுதான் காவல்துறை, இராணுவம் மாதிரி சட்ட அங்கீகாரம் பெற்ற கொலைநிறுவனங்களுக்கு சாதகம். ‘மனித உரிமைகளை தூக்கி குப்பையில் போடு’ என்று துப்பாக்கியில் புல்லட்டுகளை நிரப்பிக்கொண்டு கிளம்பி விடுகிறார்கள்.

என்கவுண்டர்களுக்கு நியாயம் காட்டும் வகையில் பொதுமக்களின் கொந்தளிப்பினை சுட்டிக் காட்டுகிறார்கள். ஆனால், தீவுத்திடல் அருகே சிறுவனை சுட்டுக் கொன்ற முன்னாள் ராணுவ அதிகாரி மீது என்கவுண்டர் பாயவில்லை என்பதை இங்கே நினைவுறுத்திப் பார்க்க வேண்டியது அவசியம். போலிஸின் துப்பாக்கிகள் ‘செலக்டிவ்’ ஆகத்தான் தோட்டாக்களை துப்புகிறது.

கடந்த பத்தாண்டுகளில் தமிழகத்தில் மட்டும் எழுபத்தைந்து பேர் என்கவுண்டரில் பலியாகியிருப்பதாக செய்திகளில் அறிகிறோம். இங்கே நடைபெறுவது ஜனநாயகமா அல்லது இராணுவ ஆட்சியா என்கிற சந்தேகம் இதனால் உருவாகிறது. குற்றவாளிகள் என்று காவல்துறை சந்தேகப்படுபவர்களை என்கவுண்டரில் போடலாம், அதற்கு மக்களின் ஏகோபித்த ஆதரவு இருக்கிறது என்றால், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தேவை கேள்விக்குரியதாகிறது. நீதிமன்றங்கள், சட்டப் பணியாளர்களின் இருப்பு அவசியமற்றதாகிறது.

தேசப்பிதாவாக காந்தியை ஏற்றுக்கொள்ளும் தேசம், காந்தியத்தை பின்பற்றுவதாக பாவனை செய்யும் மக்கள் – எப்படி இப்படியொரு சூழல் வாய்க்கப்பட்ட இந்தியாவில் என்கவுண்டர்கள் கொண்டாடப்படுகின்றன என்பதை எப்படி யோசித்தாலும் பிடிபடவில்லை. தூக்கு, என்கவுண்டர் என்றதுமே குறிப்பாக மத அடிப்படைவாதிகளின் ஆதரவுதான் விண்ணதிர எதிரொலிக்கிறது. மதங்கள் மீது நமக்கு நம்பிக்கை இல்லாவிட்டாலும், எல்லா மதங்களும் ஏதோ ஒருவகையில் அன்பை போதிக்கின்றன என்பதை ஒப்புக் கொள்கிறோம். அப்படியெனில் இம்மதங்களை தீவிரமாக நம்புபவர்கள், பின்பற்றுபவர்கள் ஏன் அரசக்கொலைகளை ஆதரிக்கிறார்கள்? அவர்கள் தமக்கும் உண்மையாக இல்லை. தாங்கள் பின்பற்றும் மதங்களையும் ஏமாற்றுகிறார்கள் என்பதுதான் உண்மை.

சென்னையில் காவல்துறையால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஐவர் கொலையை எடுத்துக் கொள்வோம். வங்கிக் கொள்ளைகளுக்குப் பிறகு ‘துப்பு’ கிடைக்காமல் அலைந்துக் கொண்டிருந்தவர்களுக்கு ஒரு ‘வீடியோ க்ளிப்’ கிடைக்கிறது. அதில் இருப்பவன் வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டவன் என்று அடையாளம் காட்டப்படுகிறது. ஊடகங்கள் மூலமாக அப்படம் வினியோகிக்கப்படுகிறது. துப்புக் கொடுப்பவர்களுக்கு பரிசு அறிவிக்கப்படுகிறது. நடு இரவில் யாரோ ஒரு முக்கிய அதிகாரிக்கு அனாமதேயமாக ஒரு அழைப்பு வருகிறதாம். அந்த அழைப்பு மூலமாக அடையாளம் காட்டப்பட்டவன் மறைந்திருக்கும் இடம் தெரியவருகிறதாம். துப்பாக்கிகளோடு சுற்றி வளைத்தார்களாம். எச்சரிக்கை விடுத்தார்களாம். அங்கிருந்து பொதுமக்களை சுடுவோம் என்று பதில் வந்ததாம். யோசிக்காமல் இவர்கள் சுட்டுத் தள்ளினார்களாம். உள்ளேப் போய் பார்த்தால் ஐவர் மரணமடைந்திருக்கிறார்களாம். இரண்டு காவல்துறை அதிகாரிகளுக்கு காயமாம்.

அய்யா, அடையாளம் காட்டப்பட்டவன் ஒருவன் தான். மீதியிருக்கும் நான்கு பேரும் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் என்பதை எப்படி காவல்துறை ’ஸ்பாட்’டிலேயே முடிவுகட்டி, துப்பாக்கிச்சூடு வரை போனது? கொள்ளையடித்தபோதே ’ஏர்கன்’ வைத்து ஏமாற்றியவர்கள், பதுங்கியிருந்தபோது ஒரிஜினல் துப்பாக்கி வாங்கிவிட்டார்களா? சுற்றி வளைக்கப்பட்டவர்கள் அடுத்த ஃப்ளாட்டுகளுக்குப் போய், தூங்கிக் கொண்டிருந்தவர்களை எழுப்பி எப்படி சுடமுடியும்? ஒருவேளை ஜனநெரிசல் மிகுந்த பகுதியில் பட்டப்பகல் வேளையில் பொதுமக்களின் தலையில் இவர்கள் துப்பாக்கியை வைத்து மிரட்டியிருந்தால் இந்தக் கதை வலுவாக இருந்திருக்கும்.

தமிழகக் காவல்துறை, லாஜிக் மீறாமல் என்கவுண்டர் கதைகள் எழுதக்கூடிய நல்ல புனைவெழுத்தாளர் ஒருவரை உடனடியாக பணிக்கு அமர்த்தியாக வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.

இந்தக் கொள்ளையர்களை உயிரோடு பிடித்து நீதிமன்றம் முன்பாக நிறுத்தியிருந்தால் கூட அவர்களுக்கு சிறைத்தண்டனைதான் கிடைத்திருக்கும். காவல்துறை தீர்ப்பில் மரணத்தண்டனை ஐவருக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. இது அச்சு அசலான சட்டமீறல். இந்திய அரசியலமைப்புச் சட்டம் வலுவாக இருப்பின் இதற்காக சம்பந்தப்பட்டவர்கள் மீது கொலைவழக்கு தொடரப்பட வேண்டும்.

தமிழக மனித உரிமை அமைப்புகள் விழித்துக் கொள்ள வேண்டிய நேரமிது. கொள்ளை என்பது குற்றம். கொள்ளைக்கு தண்டனை கொலை என்பது அதைவிட பெரிய குற்றம். அதை மக்கள் கரகோஷத்துடன் வரவேற்பது அநியாய கொடூரம். சகிப்புத்தன்மை மிகுந்தவர்களாக அறியப்பட்ட தமிழர்கள், சவுதி அரேபியர்களாக பரிணாமம் அடைந்து வருகிறார்கள்.

தொடர்புடைய பதிவு : கொலை செய்ய விரும்பு!

21 பிப்ரவரி, 2012

அம்புலி

தமிழில் உருப்படியாக வந்திருக்கும் முதல் முப்பரிமாண படம். முப்பரிமாணத்தில் எடுக்கிறோம் என்பதற்காக கிராஃபிக்ஸுக்கும், இதர கந்தாயங்களுக்கும் தண்ணீராக பணத்தைக் கொட்டாமல், சிக்கனமாக சிறப்பாக எடுத்திருக்கும் படக்குழுவினரிடம் கைவலிக்க கைகுலுக்கலாம்.
படத்தின் மொத்தக் கதையையும் இரண்டு நிமிட டைட்டிலிலேயே ஸ்டோரிபோர்டாக சொல்லியிருக்கும் இரட்டை இயக்குனர்களின் தைரியம் அசாத்தியமானது (மைக்கேல் மதனகாமராஜன் ‘கதை கேளு, கதை கேளு’ டைட்டில் நினைவிருக்கிறதா?). ஜேம்ஸ்பாண்ட் பட பாணியில் டைட்டிலுக்கு முந்தைய – கதைக்கு நேரடியாக தொடர்பில்லாத – பிட்டு அபாரம். வெள்ளைக்காரராக சித்தரிக்கப்படும் அந்த வேட்டைக்காரர் வெள்ளையாக இருக்கிறாரே தவிர வெள்ளைக்காரர் இல்லை. பட்ஜெட் சிக்கனத்துக்கு நல்ல உதாரணம் இது.

1980ல் நடைபெறும் கதை என்பதால் பேக்டிராப்புக்காக இயக்குனர்கள் அளவுக்கு கலை இயக்குனரும் கடுமையாக உழைத்திருக்கிறார். ஃப்ரேமுக்கு ஃப்ரேம் பர்ஃபெக்‌ஷன் மிளிர்கிறது. கமலஹாசன், மணிரத்னம் உள்ளிட்ட ஒரு சிலருக்கே இந்தளவுக்கு தரம் இங்கே சாத்தியமாகியிருக்கிறது. கேமிரா, எடிட்டிங், பின்னணி இசை என்று சகலமும் சரியாக கலக்கப்பட்ட காக்டெயில் இப்படம்.

த்ரில்லர் ஃபேண்டஸியில் லாஜிக் பார்க்க முற்படுவது பைத்தியக்காரத்தனம். ஆனாலும், ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகள் படம் தொடங்கியதிலிருந்தே உறுத்திக் கொண்டிருக்கிறது. குறிப்பாக கல்லூரி – சோளக்காடு – ஏரி – பூமாடத்திபுரம் தொடர்பான நிலவியல் வரைபடம் குழப்பிக்கொண்டே இருக்கிறது.

அம்புலியின் ஆளுகைக்கு உட்பட்ட சோளக்காடு இருபது வருடமாக அப்படியே அழியாமல் இருக்குமா, சோளம் என்பது குறுகியகாலப் பயிர் இல்லையா? மக்கள் தொடர்ச்சியாக பயன்படுத்தினால்தான் காட்டுக்கு நடுவே பாதை சாத்தியம். யாரும் வராத காட்டில் ஒரு ஆட்டோ போகுமளவுக்கு பர்ஃபெக்டான பாதை எப்படி சாத்தியம்? சோளக்காடு வழியே ஊருக்கு அசால்ட்டாக ஹீரோக்கள் வந்து போகிறார்கள். ஆனால் ஊர்மக்கள் உள்ளே நுழைய சுவற்றை வெடிவைத்து தகர்க்க வேண்டியிருக்கிறது.

மைல் கல் என்பது பெயருக்குதானே தவிர, அக்கல்லில் இத்தனை மைல் என்று எங்காவது நெடுஞ்சாலைத்துறை எழுதிவைத்திருக்கிறதா? கி.மீ தானே இந்தியக் கணக்கு? ஊருக்கு போக வேண்டுமானால் ஏரியை கடக்கவேண்டும் என்கிற நிலையில் ஹீரோயின்கள் இருவரும் காரில் கல்லூரிக்கு வருவது எப்படி சாத்தியம்? சோளக்காட்டுக்குள் மனிதவாசம் தென்பட்டாலே மரணம் எனும்போது பார்த்திபன் மட்டும் எப்படி அங்கேயே வசிக்க முடிகிறது? ஏதோ ஒரு ‘பூ’ வீட்டை சுற்றி வளர்க்கப்படும் பட்சத்தில் அம்புலி வராது என்றால், அந்தப் பூவை பறித்துக்கொண்டு சோளக்காட்டுக்குள் யார் வேண்டுமானாலும் தைரியமாக போய்வரலாமே (பார்த்திபன் வீட்டில் அந்த பூ கூட இல்லை).

அம்புலி என்று நினைத்து வேறு யாரையோ தவறுதலாக பார்த்திபன் போட்டுத் தள்ளிவிடுகிறார், அதுபற்றி போலிஸ் கவலைப்பட்டதாக தெரியவில்லை. பார்த்திபன் ஹீரோயினை மடக்கி பண்ணை வீட்டுக்குள் கட்டி போட்டு வைப்பதில் ஆகட்டும், பிற்பாடு ரெண்டு ஹீரோ மற்றும் ரெண்டு ஹீரோயின்களை தூண்டிலாக அம்புலியிடம் அழைத்துப் போவதில் ஆகட்டும்... முழம் முழமாக லாஜிக் பூ ரசிகர்களின் காதில் மைல் கணக்கில் சுற்றப்படுகிறது. இதெல்லாம் திரைக்கதையின் மூலமாகவே சரிசெய்துவிடக்கூடிய சின்ன சின்ன விஷயங்கள்தான்.

முழுநீள சுவாரஸ்யப் படத்தில் உறுத்தும் விஷயங்கள் பாடல்கள்தான். தமிழ்ப் படமென்றால் பாடல்கள் இருந்தே ஆகவேண்டுமென்று ஃபெப்ஸியிலோ, தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திலோ ஏதேனும் சட்டம் போட்டிருக்கிறார்களா என்ன? ‘நறுக்’கென்று வரவேண்டிய திரைப்படம் தேவையில்லாத பாடல்களால் ‘ஜவ்’வாக இழுத்துக்கொண்டே இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக ஓடுகிறது.

எது எப்படியாக இருந்தாலும் த்ரீ-டி த்ரில்லர் படத்தில் பகுத்தறிவுக் கருத்துகளை பரப்ப முயற்சித்த வகையில் அம்புலி ஒரு முக்கியமான ஆக்கமாக படுகிறது. இன்றைய திரைப்படங்களில் திராவிடச் சிந்தனைகளுக்கு போதிய களம் இல்லாத நிலையில், மிகத்தைரியமாக ஜெகன் பாத்திரம் மூலம் மூடநம்பிக்கைக்கு எதிரான பிரச்சாரத்தை முன்வைக்கிறார்கள் இந்த இரட்டை இயக்குனர்கள். ஜெகன் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர் என்பதை நேரடியாகக் கூறாமல், அவரது கருப்புச்சட்டை, வீட்டில் தந்தை பெரியார் படம் போட்ட காலண்டர் என்று காட்சிகளால் உணர்த்துகிறார்கள். சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கிடைக்கும் இடத்தை மேடையாக்கி, பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்வது அய்யாவுடைய தொண்டர்களின் பாணி. இறுதிக்காட்சிக்கு முந்தைய காட்சிகளில் இது மிகச்சிறப்பாக சித்தரிக்கப்படுகிறது. காரின் மீது ஏறி பொதுமக்களிடம் ஜெகன் பேசும் வசனங்கள் கூர்மையானவை.

‘பகுத்தறிவே இறுதியில் வெல்லும்!’ என்கிற கருத்தை ஒரு வணிகப்படத்தில் ஆணித்தரமாக நெற்றிப்பொட்டில் அடித்து ’நச்’சென்று சொல்லியிருப்பதால் அம்புலியை ஆரத்தி சுற்றி வரவேற்கலாம்.

16 பிப்ரவரி, 2012

முதல் காதல், முதல் கவிதை

காதல் தொடர்பான சொற்கள் நான்கைந்தை வரிசையாக சொல்லிப் பாருங்கள். உறுதியாகச் சொல்கிறேன். ‘கவிதை’ என்கிற சொல்லை கண்டிப்பாக சொல்லியிருப்பீர்கள். காதலுக்கும், கவிதைக்கும் நேரடி தொடர்பு இருக்கிறதா என்று உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் கவிதை எழுதாத அல்லது எழுத முயற்சிக்காத காதலன் எவனுமே உலகில் இல்லவே இல்லை. உலகின் முதல் காதலன் மட்டுமல்ல. முதல் கவிஞனும் ஆதாமாகத் தான் இருக்கக்கூடும்.

பெண்களுக்கு நிஜமாகவே கவிதை பிடிக்குமா என்கிற சந்தேகம் எனக்குப் பல வருடங்களாக உண்டு. கடும் குளிரடித்த, வெக்கையால் தொப்பை தொப்பலான, கோரஸாக கொசுக்கள் ரீங்காரமிட்ட.. என்று பலவகைகளில், காலப்பருவங்களில் வேறுபட்ட ஏராளமான இரவுகளை வீணடித்து, மூளையைக் கசக்கிப் பிழிந்து, அடித்துத் துவைத்து யோசித்ததில் ஒரே ஒரு உண்மை சட்டென்று பல்பிட்டது. நியாயமாக பார்க்கப் போனால் ‘யுரேகா’ என்று கத்திக்கொண்டு அம்மணமாக அன்று இரவு நான் தெருவுக்கு ஓடி வந்திருக்க வேண்டும். மாறாக ‘காயத்ரீ’ என்று அப்போது லவ்விக் கொண்டிருந்த ஃபிகரின் பெயரை உரக்கச் சொல்லிக் கொண்டே ஓடினேன். அதிர்ஷ்டவசமாக லுங்கி மட்டுமாவது இடுப்பில் இருந்தது. “மாரியாத்தா எம்புள்ளைக்கு பேய் புடிச்சிடிச்சி” என்று என் பின்னாலேயே அம்மாவும், “கிறுக்குப்பய மவனே!” என்று அப்பாவும் ஓடிவந்ததும் நினைவிருக்கிறது.

நான் கண்டறிந்த உண்மை யாதெனில் பெண்களுக்கு ‘பாவனை’ அதிகம். சில விஷயங்களைப் பிடிக்கிறதோ இல்லையோ ரொம்பப் பிடிப்பதைப் போலவே பாவனை செய்வார்கள். சிவாஜி, மார்லன் பிராண்டோவையெல்லாம் மிஞ்சக்கூடிய நடிப்பு பெண்களுக்கு உண்டு. குறிப்பாக காதல் விவகாரங்களின் போது ஓவர் ஆக்டிங்குக்கு போய்விடுவார்கள். பெண்களுக்கு teddy bear பிடிக்கும் என்று கண்டறிந்து, காதலர் தினத்துக்கு பரிசாக முதன்முதலாக பரிசளித்த காதலன் எவனென்று கண்டுபிடித்து அவனைச் செருப்பால் அடிக்க வேண்டும். காதலனிடம் குழந்தைத்தனமான குணம் கொண்டவள் என்று வெளிப்படுத்திக் கொள்ள ஒவ்வொரு காதலியும் தனக்கு teddy bear பிடிப்பதாக நடிக்கிறாள். ஒரு பொம்மையின் விலை அநியாயத்துக்கு ஐநூறு ரூபாய் விற்கிறது சார். ஐஸ்க்ரீமே பிடிக்காத பெண் கூட “ஸ்ட்ராபெர்ரி சாப்பிடலாமா?” என்று காதலித்ததும் கொஞ்சத் தொடங்கி விடுகிறாள். ‘அ ஆ இ ஈ’ படிக்கத் தெரியாத சர்ச்பார்க் பெண் கூட “ஐ லைக் பாலகுமாரன் ஸ்டோரீஸ்யா” என்று ஃபிலிம் காட்டுகிறாள். இதுமாதிரியான பாவனைகளில் ஒன்றுதான் அவர்களுக்குக் கவிதை பிடிப்பதும்கூட. அது எப்படி சார்? ஸ்டெல்லாவுக்கும் கவிதை பிடிக்கிறது, ஃபாத்திமாவுக்கும் கவிதை பிடிக்கிறது, பத்மினிக்கும் கவிதை பிடிக்கிறது. பெண்கள் எல்லோருக்கும் கவிதையைப் பிடிக்குமென்றால், கவிதைத் தொகுப்புகள் லட்சக்கணக்கில் விற்பனையாகி கவிஞர்கள் எல்லாம் அம்பானி ஆகியிருக்க வேண்டுமா, இல்லையா?

கவிதை மீது இவ்வளவு obsession எனக்கிருப்பதை வைத்து, நான் ஒரு கவிஞனாகவோ அல்லது தீவிர கவிதை வாசகனாகவோ இருக்கக்கூடும் என்று இந்நேரம் நீங்கள் யூகித்திருக்கக்கூடும். உங்கள் மூளையில் தோன்றிய இந்த படிமத்தை உடனே delete keyயைத் தட்டி தயவுசெய்து அழித்துவிடுங்கள். குறிப்பாகக் காதல் தொடர்பான கவிஞர்களைக் கழுவில் ஏற்றவேண்டும், அந்தக் கவிதைத் தொகுப்புகளை நடுத்தெருவில் கொட்டி போகி எரிக்கவேண்டும் எனுமளவுக்கு நான் ஒரு கவிதை அந்நியன். இப்படிப்பட்ட என்னையே ஒருத்தி கவிதை மாதிரி எதையோ கிறுக்க வைத்துவிட்டாள் என்கிற கோராமையை எங்கு போய் சொல்வது?

அது என்னுடைய வெற்றிகரமான முதல் காதல். முதல் முத்தமும் கூட என்று நினைக்கும்போது பதினைந்து ஆண்டுகள் கழிந்த நிலையிலும்.. சனியன்.. இப்போது வெட்கம் பிடுங்கித் தொலைக்கிறது. மிகச்சரியாக பதினாறு வயதில் மலர்ந்த காதல். அந்த வயதில் வசீகரப்படுத்த வைக்கும் தோற்றப் பொலிவு எனக்கு இல்லாத நிலையில், அதை ஈடுக்கட்டும் வகையில், அவளை வசியப்படுத்த செய்த கோமாளித்தனங்களுக்கு அளவேயில்லை.

பதிமூன்று வயதுப் பெண்ணுக்கு காதல் கவிதை பிடிக்கும் என்று யாராவது என் எதிரில் இப்போது சொன்னால், இடுப்பிலிருக்கும் ரிவால்வரை எடுத்து நெற்றிப்பொட்டை குறிவைத்து ‘டுமீல்’ என்று சுட்டுவிடுவேன். துரதிருஷ்டவசமாக காதல்வசப்பட்டிருந்த நான் அப்போது நம்பித் தொலைத்தேன். எனக்குள் இல்லாத கவிஞனை, இருப்பதாக எண்ணி பேப்பரும், பேனாவுமாக பாத்ரூம் போய் உட்கார்ந்தேன். அப்போது ஹைக்கூ பிரபலமாகிக் கொண்டிருந்த காலக்கட்டம். சுலபமாக எழுதிவிடக் கூடிய வடிவமென்பதால் ஹைக்கூவில் அவளை அசத்தலாம் என்பது என் திட்டம். எவ்வளவோ சிந்தித்தும், அவ்வப்போது சிறுநீர் வந்ததே ஒழிய, கவிதை வந்து தொலைத்தபாடில்லை. இரவு முழுக்க என் படைப்பாற்றலை பால் கறந்து முயற்சித்தும், படைப்புக்காம்புதான் இரத்தம் கட்டிக் கொண்டதே தவிர கவிதை சுரக்கவேயில்லை.

தூக்கமின்றி எரிச்சலடைந்து சிவந்த கண்களோடு வகுப்பறைக்குச் சென்றால் மேத்ஸ் மாஸ்டர் எதையோ சுவற்றில் கிறுக்கி தாலியறுத்துக் கொண்டிருந்தார். கடைசி பெஞ்ச் என்பதால், டேபிளில் தலைவைத்து தூங்கிவிட்டேன். தூக்கம் வரத் தொடங்குவதற்கு முன்பே கனவு வந்துவிட்டது. கனவுக்கு நிறம் கருப்பு வெள்ளை. ஆனால் காதலிகள் வரும் கனவுகள் மட்டும் வண்ணமாய் தெரிவதாய் காதலன்களுக்கு அப்படியொரு மூடநம்பிக்கை. அன்றைய கனவில் வெள்ளுடையில் அவள் வந்தாள். அசத்தலான குரலில், மொழியில் ‘ஐ லவ் யூ’ சொன்னாள். பறக்கும் முத்தம் தந்தாள். ஒரு கதாநாயகனைப் போல ஸ்டைலாக அவளை நெருங்கினேன். கண்களாலேயே பேசினேன். அவள் நாணினாள். கோணினாள். உதட்டோடு உதட்டை நெருக்கமாக கொண்டுச் செல்ல அவள் விலகினாள். வற்புறுத்தினேன். ‘ணங்’கென்று மண்டையில் கொட்டு வைத்தாள். கனவென்றால் வலிக்க வேண்டிய அவசியமில்லை. மாறாக சுறாத்தனமாக வலித்தது. அனிச்சையாக ‘அனிதா’வென்று கத்திக் கொண்டு தலையைத் தடவ, இன்ஸ்டண்ட் பூரி மாதிரி டீக்கடை பொறை சைஸில் நடுமண்டை வீங்கியிருந்தது. கனவு எது, மெய் எது என்று புரியாத தருணம் அது. கண் திறந்துப் பார்த்தால் கட்டை டஸ்டர் வைத்து என் நடுமண்டையை பதம் பார்த்திருந்தார் மேத்ஸ் மாஸ்டர்.

(அதையடுத்து நடந்த சோக நிகழ்வினை சொன்னால் இக்கட்டுரையின் காதல் சுவை கெடக்கூடும். என்னுடைய ரொமான்ஸ் மூட் ஸ்பாயில் ஆகும். எனவே அடுத்த மூன்று பாராகிராப்புகளை இங்கே தணிக்கை செய்கிறேன்)

அந்தக் கனவால் விளைந்த பயன் யாதெனில், ஓரிரவு செலவிட்டும் என்னால் எழுத முடியாத கவிதையை ஓரிரு நொடிகளில் கண்டுகொண்டேன். அவள் பெயரைவிட சிறந்த கவிதையை என்னால் எழுதிவிட முடியாதென்று தெளிவு கண்டேன்.

வகுப்பறைக்கு வெளியே முட்டி போட்டுக் கொண்டிருந்த நேரத்தில், குப்பையாக கீழேக் கிடந்த ஒரு காகிதத்தில் என்னுடைய முதல் காதல் கவிதையை எழுதினேன்.

அனிதா..
இரு இமைகளை
இறுகமூடி
தேன்சுளை உதடு விரித்து
Honey தா!

(சுபம்)

கட்டுரை ஆசிரியரின் பின்குறிப்பு : வாசகர்களே! இந்தக் கவிதை அனிதாவுக்கு பிடிக்கவில்லை, வாசித்துவிட்டு நம் இன்ஸ்டண்ட் கவிஞரின் முகத்தில் கொத்தாக காறி உமிழ்ந்திருப்பாள் என்பதையெல்லாம், அச்சு பிச்சுவென்று இம்மாதிரி ஆரம்பத்தில் சில காதல் கவிதைகளை எழுதிய நீங்களே இன்னேரம் யூகித்துவிட்டிருப்பீர்களே? விடுங்க பாஸூ. ALL IS WELL.

(நன்றி : பண்புடன்.காம் காதலர்தின ஸ்பெஷல்)