14 மார்ச், 2012

வீரவணக்கம்


அந்த கொடுநாள் நன்றாக நினைவிருக்கிறது.

தலை பிளக்கப்பட்ட உடல் என்.டி.டி.வி தொலைக்காட்சியில் தொடர்ச்சியாக ஒளிபரப்பப்பட, இது உண்மையாக இருக்கக்கூடாதே என்கிற பதட்டம் விரல் நடுங்கவைத்து, மனசமநிலை குலைந்து, இறுதியில் அழுகைக்கு கொண்டு சென்றது. பயமறியாத அந்த கண்கள், அடர்த்தியான மீசை.. இது அவரேதான் என்று மூளை அறிவுறுத்தினாலும், மனசு நம்ப மறுத்தது.

ஆறுதலாக சில தலைவர்கள் அவர் உயிரோடிருக்கிறார் என்று அறிக்கை விட்டார்கள். ஒரு பத்திரிகை ஒருபடி மேலே போய் அந்த வீடியோவை அவரே எங்கோ அமர்ந்து டிவியில் பார்ப்பதைப்போல ‘கிராபிக்ஸ்’ செய்து வெளியிட்டது. அவருக்கெல்லாம் சாவு வராது என்று உடனடியாக பகுத்தறிவை மறுத்து, உணர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து அந்த வீடியோவை மறந்தேன். அவரது மாவீரர் நாள் உரைக்காக காத்திருக்க ஆரம்பித்தேன்.

தொடர்ச்சியாக தமிழக மேடைகளில் சில தலைவர்கள் அவர் உயிரோடிருக்கிறார், தக்க சமயத்தில் வெளிவருவார் என்று ஆணித்தரமாக பேசியதைக் கேட்டு ஆறுதலடைந்தேன். ஒருவேளை அவரேகூட இவர்களை தொடர்புகொண்டு பேசியிருக்கலாம் என்றும் குருட்டுத்தனமாக நம்பினேன்.

தொடர்ச்சியாக மூன்று மாவீரர் தினங்களாக அவரது உரை வெளிவரவில்லை. அவர் உயிரோடு இருக்கிறார் என்று நெஞ்சத்தின் மூலையில் எங்கோ பதுங்கிக்கிடந்த நம்பிக்கை இன்று சற்றுமில்லை.

முப்பதாண்டுகளாக உலகையே எதிர்த்துப் போராடிய மாவீரம் அவரைத்தவிர உலகில் வேறு யாருக்கும் இருந்ததில்லை. இனியும் இருக்கப் போவதில்லை. ஈழப்போராட்டத்தின் ஒவ்வொரு தியாகிகளுக்கும் வீரவணக்கம் செலுத்தி கவுரவித்த அந்த மாவீரனுக்கு தமிழர்கள் வீரவணக்கம் செலுத்தமுடியாத நிலையை ஏற்படுத்தியவர்கள் யார், யாரெல்லாம் என்று ஒவ்வொருவராக இன்று நினைவுகோர வேண்டியது அவசியமாக இருக்கிறது. அவ்வப்போது இதையெல்லாம் எழுதவோ, பேசவோ நினைத்தாலும் ஏதோ ஒரு தயக்கம் இருந்துக் கொண்டேயிருக்கிறது. இன்று காலை இணையத்தளம் ஒன்றில் அந்த வீடியோக் காட்சியை கண்டபிறகும் பேசாமல் இருக்கமுடியவில்லை.

அவரை கோடாலியால் வெட்டிக் கொன்றவர்கள் சிங்களச் சிப்பாய்களாக இருக்கலாம். அவர்கள் வெறும் ஆயுதம். ஏவியது ஒட்டுமொத்த உலகம். குறிப்பாக என் தேசம். நான் தலைவர்களாக ஏற்றுக் கொண்ட இனத்துரோகிகள். புலிகளுக்கு தவறான ஆலோசனைகளை தந்த உணர்ச்சிவசப்பட்ட முட்டாள்கள்.

கடந்த ஆண்டு வெளியான நார்வே அறிக்கை மிகச்சரியாகவே அனைத்தையும், அனைவரையும் சுட்டிக் காட்டியிருக்கிறது.

• 2004ல் காங்கிரஸ் மீண்டும் இந்தியாவில் ஆட்சிக்கு வந்தபிறகு, தமிழர்கள் மீதான சிங்கள ராணுவ தாக்குதலை தடுத்து நிறுத்துவதற்கு எவ்விதமான அழுத்தங்களையும் பிரயோகிக்கவில்லை.

• புலிகளுக்கு ஆதரவான போக்கு நார்வேக்கு இருப்பதாக தனிப்பட்ட சந்திப்புகளில் இந்தியா கடிந்துக் கொண்டிருக்கிறது. மேலும் புலிகளை ஒடுக்குவதற்கான இந்திய தரப்பு ‘நியாயங்களை’ திரும்பத் திரும்ப வலியுறுத்தியிருக்கிறது.

• ராடார் வழங்கியதோடு மட்டுமின்றி, உளவுத் தகவல்களையும் இந்தியா இலங்கை ராணுவத்துக்கு அளித்து உதவியது. ஆபத்தான ராணுவ ஆயுதங்களை இந்தியா, இலங்கைக்கு அளிக்காவிட்டாலும், இலங்கை அவற்றை வேறு நாடுகளிடம் வாங்கியதை எப்போதுமே ஆட்சேபிக்கவில்லை.

• 2008 இறுதியில் இராணுவத் தாக்குதலில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை தடுக்கக்கோரி பல்வேறு தரப்புகள் வேண்டுகோள் விடுத்த நிலையிலும், இந்திய அரசு புலிகளைத் தோற்கடிக்கும் சிங்கள இராணுவத்தின் நடவடிக்கைகளுக்கு தனது ஆதரவினைத் தொடர்ந்தது.

• இந்திய கேபினட் அமைச்சர் பி.சிதம்பரம், புலிகளின் தலைவர் பிரபாகரனை போர் நிறுத்தத்துக்காக தொடர்புகொண்டு ஒரு ஒப்பந்தத்தை முன்வைத்தார். இந்த ஒப்பந்தத்தின் முன்வரைவில் புலிகள் ஆயுதங்களை மவுனிக்க வேண்டும் என்கிற அம்சம் முக்கியமானதாக இருந்தது.

• ஆனால் இந்தியாவின் இந்த முயற்சி அதிகாரப்பூர்வமற்ற முறையில் சிலருக்கு வெளியானது. உடனடியாக மதிமுக பொதுச்செயலர் வைகோ தலையிட்டு இந்த ஒப்பந்தத்தை நிராகரித்ததோடு, இது காங்கிரஸின் தந்திரம். பாராளுமன்றத் தேர்தலில் பாஜக வெல்லப் போகிறது. புலிகள் காப்பாற்றப்படுவார்கள் என்கிற செய்தியினை புலிகளுக்கு முன்வைத்தார். இது நடைபெறவில்லை. கடைசியாக தேர்தல் முடிவுகள் வெளிவந்த நிலையில் பிரபாகரன் கொல்லப்பட்டார்.

ஈழப்போராட்டத்து மாவீரன் பிரபாகரன் கொல்லப்பட்டதில் இந்தியாவின் வஞ்சகம் வெளிப்படையானது. அதே நேரம் ஆதரவு சக்திகளாக தம்மை வெளிப்படுத்திக் கொண்டவர்களுக்கும் இந்த பச்சைப் படுகொலையில் கணிசமான பங்கிருக்கிறது. பிரபாகரனின் மறைவு உறுதிப்படுத்தப்பட்ட பிறகும், அவர் உயிரோடு இருக்கிறார் என்கிற தகவலை திரும்பத் திரும்பச் சொல்லுவதின் பின்னிருக்கும் ஆதாயம் என்ன என்பதை யூகிப்பதில் பெரிய சிரமமில்லை. புலிகளால் கடந்த காலத்தில் வசூலிக்கப்பட்டு, கடைசிக் காலத்தில் அவர்களுக்கு உதவாத பலநூறு கோடிக்கணக்கான பணம் யார், யாரிடம் இருக்கிறது. யார் யாருக்கு, எது எதற்கு இன்று செலவளிக்கப்படுகிறது என்கிற உண்மைகளும் எதிர்காலத்தில் வெளிவரத்தான் போகிறது.

போர் நடந்துக்கொண்டே இருந்தால் யாருக்கெல்லாம் என்ன லாபம் இருந்திருக்க முடியும் என்பதை நாம் திறந்தமனதோடு யோசித்துப் பார்க்க வேண்டும். 2001 செப்டம்பர் 11-ஐ அடுத்து உலகநாடுகளிடையே, ‘போராட்டம், புரட்சி’ குறித்து மாறிவந்த மனோபாவம் எவ்வகையிலும் புலிகளால் உணரப்பட்டதில்லை. அவர்களை உசுப்பேத்தி, ஆயுதமேந்த வைத்து அரசியல் செய்தவர்களும், ஆதாயம் பெற்றவர்களும் உணர்ந்திருந்தாலும், அதை புலிகளுக்கு நேர்மையாக உணர்த்தவும் அவர்களுக்கு வக்கில்லை.

இலங்கையின் போர்க்குற்றத்துக்கு சாட்சியாக சேனல்-4 அடுத்தடுத்து பிரபாகரனின் மகன் இறந்த வீடியோ காட்சிகளையும், பிரபாகரனின் இறப்பு குறித்த வீடியோ காட்சிகளையும் ஒளிபரப்பி வருகிறது. பிரபாகரன் உயிரோடிருக்கிறார் என்றுகூறி அரசியல் செய்துவருபவர்கள் இந்த சாட்சியங்களை மறுக்கப் போகிறார்களா? பிரபாகரன் கொல்லப்படவில்லை என்று ஐ.நா. படியேறி வாதாடப் போகிறார்களா?

துரோகிகள் என்று யாரையேனும் சுட்டிக் காட்டி தூற்றவும், விசுவாசிகள் என்று மார்தட்டிக் கொள்ளவும் யாருக்கும் இனி யோக்கியதையில்லை. எல்லோரைப் போல நானும் துரோகிதான் என்றபோதிலும் குற்றவுணர்ச்சியோடு இப்போதாவது என் வீரவணக்கத்தை அம்மாவீரனுக்கு செலுத்திக் கொள்கிறேன்.

‘இந்த காலத்தில் வாழ்ந்தவர்கள் அனைவரும் துரோகிகளே, சுயநலமிகளே’ என்றுதான் வரலாறு எதிர்காலத்தில் தனது குறிப்பினில் இந்த காலக்கட்டத்தை பதிவு செய்துக்கொள்ளப் போகிறது.

7 மார்ச், 2012

ஹெல்மெட்

நான் ஹெல்மெட் அணிய விரும்பாததற்கு காரணங்கள் பின்வருமாறு :

1. பைக் ஓட்டப் பழகும்போது ரிவர்வ்யூ மிர்ரர் பார்த்து ஓட்டி பழகவில்லை. திருப்பங்களில் தலையை திருப்பிப் பார்த்தே பழகிவிட்டது. ஹெல்மெட் அணிந்திருந்தால் தலையை திருப்புவது கடினமாக இருக்கிறது. வேட்டியே அணிந்துப் பழகியவன் திடீரென ஜீன்ஸ் அணியும்போது ஏற்படும் அசவுகரியத்துக்கு ஒப்பானது இது.

2. பயணத்தின்போது ’ஜில்’லென்று காற்று முகத்தில் அறைவதில்லை. தலைமுடி ஸ்டைலாக பறப்பதில்லை. ஃபேஸ்கட் பர்சனாலிட்டி வெளிப்படையாக தெரிவதில்லையென்பதால், நம்மை அடையாளங்கண்டு சகப்பயணிகளான டூவீலர் ஃபிகர்கள் சைட் அடிப்பதில் இடையூறு ஏற்படுகிறது.

கடந்த திமுக ஆட்சியில் ஹெல்மெட் கட்டாயமாக்கியபோது, கலைஞரை சபித்துக்கொண்டே வாங்கினேன். கிட்டத்தட்ட ஒரு மாத காலம் ஹெல்மெட் அணிந்து ஓட்டியபோது இரண்டு, மூன்று முறை ஏடாகூடமாக பிரேக் அடித்து, பின்னால் வரும் வண்டிகள் மோதி விபத்துக்குள்ளானது. கொடுமை என்னவென்றால், ஒருமுறை சிக்னலில் நின்றுக் கொண்டிருந்தபோதுகூட பின்னால் வந்த ஸ்கூட்டி சீமாட்டியொருவர் கண்ட்ரோல் இல்லாமல், பத்தடி முன்பிருந்தே வருமுன் மன்னிப்பாக ‘சாரீ... சாரீ...’ என்று கத்திக்கொண்டே வந்து இடித்தார். ம்ஹூம். இது வேலைக்கு ஆகாது. நமக்கு ராசியில்லை. ஹெல்மெட்டால் எனக்கு பாதுகாப்பு ஏதுமில்லை. ஆபத்துதான் அதிகமென்று தூக்கியெறிந்தேன்.

இப்போது மீண்டும் ஹெல்மெட் பிரச்சினை. ஐயாயிரம் ரூபாய் வரை அபராதமென்று அச்சுறுத்துகிறார்கள்.

இவ்வளவு நாட்களாக வெறும் தலையோடு வண்டியோட்டி சமாளிக்க ‘பிரஸ்’ அந்தஸ்தை பயன்படுத்திக் கொண்டிருந்தேன். வண்டியிலேயே ‘ஸ்டிக்கர்’ ஒட்டியிருப்பதால், காவலர்கள் பொதுவாக வண்டியை மடக்குவதில்லை. அப்படியே மடக்கிவிட்டால் கழுத்தில் தாலி மாதிரி தொங்கிக் கொண்டிருக்கும் அடையாள அட்டையை பார்த்துவிட்டு, “எல்லா நல்லது, கெட்டதையும் எழுதற நீங்களே இப்படி பண்ணலாமா சார்?” என்று கொஞ்சிவிட்டு, அனுப்பிவிடுவார்கள்.

ஆனால் ரெண்டு, மூன்று வாரங்களாகவே ‘பிரஸ்’ என்றால் தேடித்தேடி வேட்டையாடுகிறார்கள். காரணம் சக ‘பிரஸ்’ஸான தினகரன். அப்பத்திரிகையின் போட்டோகிராஃபர் காமிராவையும், கையையும் வைத்துக்கொண்டு சும்மா இல்லாமல், போனமாதம் ஒரு போட்டோவை எடுத்திருந்தார். ஒரு சார்ஜெண்ட் தொப்பியோடு பைக்கில் போவதைப் போல. அதற்கு போட்டோ கேப்ஷன் எழுதியிருந்த உதவி ஆசிரியரோ ‘ஊரையே ஹெல்மெட் போடச்சொல்லி, போடாதவர்களிடம் கப்பம் வாங்கும் போலிஸ் இப்படி தொப்பியோடு போகலாமா?’ என்று அறச்சீற்றத்தோடு குமுறியிருந்தார். கமிஷனர் போட்டோவைப் பார்த்துவிட்டு ஏறு, ஏறுவென்று ஏறியிருப்பார் போல. இப்போது ஊரிலிருக்கும் எல்லா போலிஸ்காரர்களும் சைக்கிளில் போனாலும்கூட ஹெல்மெட்டோடு போகிறார்கள். இந்த அவலநிலைக்கு காரணம் ஒரு ‘பிரஸ்’ என்பதால், ஊரிலிருக்கும் எல்லா ‘பிரஸ்’காரர்களையும் மன்மதன் சிம்பு மாதிரி தேடித்தேடி காண்டு கொண்டு வேட்டையாடத் தொடங்கிவிட்டார்கள்.

நேற்று மாலை தி.நகரில் மாட்டினோம். ‘பிரஸ்’ ஸ்டிக்கர் இல்லாத வண்டிகளை கண்டுக்கொள்ளாத சார்ஜண்ட், எங்களைப் பார்த்ததுமே வடமாநில கொள்ளையர்களை என்கவுண்டரில் போடும் வேகத்தோடு பாய்ந்துவந்து நிறுத்தினார்.

“லைசென்ஸ் காமிங்க”

காமித்தோம்.

“இன்சூரன்ஸ்?”

காமித்தோம்.

“ஹெல்மெட்?”

“இனிமேதான் சார் வாங்கணும்” என் நாக்கில் சனி.

அவர் விறுவிறுவென்று ஆகி, கன்னாபின்னவென்று கத்த ஆரம்பிக்க.. ஆசுவாசத்துக்காக இடையில் “எங்கே வேலை பார்க்குறீங்க?” என்றார்.

பத்திரிகையின் பெயரை சொன்னோம். நல்லவேளையாக எங்கள் பத்திரிகை மீது அவருக்கு பெருமதிப்பு இருந்தது. “நல்ல பத்திரிகை சார். ஆனா நீங்கதான் இப்படியிருக்கீங்க. மீட்டிங்குலேயே கமிஷனர் நாலஞ்சிவாட்டி உங்களை பாராட்டியிருக்கார்” சொல்லிவிட்டு, கடைசியாக அதே டயலாக் “நீங்களே இப்படி பண்ணலாமா?”

என்னால் தாங்க முடியவில்லை. இரவு தூங்கும்போது கனவில் வந்த சார்ஜெண்ட் ஒருவர் “நீங்களே இப்படி பண்ணலாமா?” என்கிறார். காலையில் வண்டியில் வரும்போது போலிஸ்காரர்கள் யாராவது பிடித்துவிடுவார்களா என்று என்றுமில்லாத அச்சத்தோடே அலுவலகம் வந்தேன்.

மதியம் ஒரு சிறுவேலையாக வெளியே கிளம்ப, ஏர்போர்ட் அருகே மிகச்சரியாக குறிவைத்து என்னைப் பிடித்தார் அந்த போலிஸ்காரர். அக்கம் பக்கம் சுற்றிப் பார்த்தேன். ஒரு கடையில் ஹெல்மெட் தொங்கிக் கொண்டிருந்தது. வண்டியை லாக் செய்தேன். ‘ஹலோ, ஹலோ’ என்று போலிஸ்காரர் அழைக்க, கண்டுகொள்ளாமல் கடைக்குள் நுழைந்து, கைக்கு கிடைத்த ஹெல்மெட்டை வாங்கி தலையில் அணிந்தேன். நேராக சார்ஜண்டிடம் சென்றேன். சிரித்துக்கொண்டே, “போய்ட்டு வாங்க சார்” என்றார்.

இனி வண்டி ஓட்டும்போது காற்று முகத்தில் அறையாது. முடி ஸ்டைலாக பறக்காது.

6 மார்ச், 2012

சங்கரன்கோவில்


1967ல் செயிண்ட்ஜார்ஜ் கோட்டைக்குள் நுழைந்தபோதே, காங்கிரஸின் கோட்டையான சங்கரன்கோவிலிலும் ஓட்டையை போட்டுவிட்டது திமுக. பிற்பாடு திமுகவிலிருந்து அது அதிமுக கோட்டையாக உருவெடுத்தது. 80ல் தொடங்கி இரண்டே இரண்டு வருடங்கள் தவிர்த்து எப்போதுமே சங்கரன்கோவில்வாசிகளுக்கு அதிமுகவில் இருந்துதான் எம்.எல்.ஏ. 89ல் மட்டும் வைகோவின் அன்றைய அன்புத்தம்பியான தங்கவேல் திமுக சார்பாக ஜெயித்தார். 90ல் தங்கவேல் ரயில்நிலையம் கொண்டுவந்ததுதான் அத்தொகுதியின் சொல்லிக் கொள்ளும்படியான கடைசி வளர்ச்சி. தொலைநோக்கில்லாத நபர்கள் தொடர்ச்சியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் எந்தளவுக்கு ஓர் ஊர் மோசமடையும் என்பதற்கு சங்கரன்கோவில் நல்ல உதாரணம். உருப்படியாக சமீபத்தில் அங்கே தொழிற்சாலையோ, கட்டமைப்போ எதுவுமே நடந்ததற்கான அடையாளங்கள் எதுவுமில்லை.

போனவாரம் பணிநிமித்தம் போய்வந்தேன்.

நகர்ப்புறங்களில் எட்டு மணி நேரம், கிராமப்புறங்களில் பத்து முதல் பண்ணிரெண்டு மணி நேரம் மின்வெட்டு. விவசாயிகளும், விசைத்தறியாளர்களும் நிறைந்த பகுதி. மின்சாரம்தான் முதன்மையான வாழ்வாதாரம். அதிமுக அபிமானத்தையும் தாண்டி, இப்பிரச்சினை ‘மாற்றி’ ஓட்டுபோட வைக்குமாவென இவ்வளவு சீக்கிரமாக கணிக்கமுடியவில்லை. ‘மின்வெட்டு தவிர்த்து வேறெதுவும் பெரிய பிரச்சினை இங்கே அம்மா ஆட்சியில் இல்லை’ என்று அங்கிருக்கும் அதிமுகவினர் சொன்னாலும், மின்வெட்டை தவிர்த்து வேறு பிரச்சினை இருந்தாலும் ‘அஜ்ஜஸ்ட்’ செய்துக்கொண்டு வழக்கம்போல ரெட்டை எலைக்கு குத்தியிருப்பார்கள். காலை 6 முதல் 9 மணி வரை வெட்டப்படுவதால் வேலைக்கு கணவரையும், பள்ளிக்கு குழந்தைகளையும் கிளப்பி அனுப்ப படாத பாடு படுகிறார்கள் பெண்கள். நாள் முழுக்க கொளுத்திய வெயில் அலுப்பு நீங்க, டாஸ்மாக்குக்குப் போய் “ஜில்லுன்னு பீரு கொடுப்பா” என்று கேட்கும்போது, “கரெண்ட் இல்லைண்ணே, ப்ரிட்ஜ் ஓடலை” என்று கூறி, கிட்டத்தட்ட 100 டிகிரி செண்டிக்ரேட்டில் பீரை கொடுக்கிறார்கள். ஆண்களுக்கும் வெறுப்புதான்.

வைகோவின் சொந்த ஊரான கலிங்கப்பட்டி இந்தத் தொகுதிக்குள்தான் இருக்கிறது. எனவே மதிமுக அதிமுகவுக்கு அடுத்த இடத்தில் இங்கே இருப்பதில் ஆச்சரியமேதுமில்லை. கலிங்கப்பட்டி சுத்து வட்டாரத்தில் ‘தெலுங்கு’ பேசும் நாயக்கர் இனமக்களின் ஒட்டுமொத்த ஓட்டும் பம்பரத்துக்குதான் விழும். கிட்டத்தட்ட முப்பதாயிரம் ஓட்டுகள் என்கிறார்கள்.

கடுமையான மும்முனைப்போட்டி என்பதால் இரண்டு லட்சம் வாக்காளர்களை கொண்ட தொகுதியில் ஐம்பதாயிரம் வாக்குகள் பெறும் வேட்பாளர் வென்றுவிடலாம்.

தொகுதியை சுற்றிப் பார்த்ததில் சங்கரன்கோவில் வாசிகள் ஆளுங்கட்சிக்கு ‘ஷாக்’ கொடுப்பார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு இல்லை. வாக்கு வித்தியாசம் பெருமளவில் குறையலாம். ஐயாயிரம் டூ பத்தாயிரம் வாக்கு வித்தியாசத்தில் ரெட்டை எலை ஜெயிக்கக்கூடும் என்று கருதுகிறேன்.

அதிமுக வென்றால், கூடுதலாக ஒரு எம்.எல்.ஏ., அவருக்கு அமைச்சரவையில் இடமும் வழங்கப்படலாம். திமுக வென்றாலும் பெரிய மாற்றம் எதுவும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. தேமுதிகவுக்கு வெல்லுவதற்கு வாய்ப்பேயில்லை. இங்கே மதிமுக வெல்லவேண்டும் என்பது என்னுடைய தனிப்பட்ட விருப்பம். ஜனநாயக அமைப்பில் அனைத்துக் கட்சிகளுக்கும் பிரதிநிதித்துவம் வழங்கப்படுவதுதான் நியாயம். சதன் திருமலைக்குமார் நல்ல வேட்பாளரும் கூட. மதிமுக சார்பில் இவர் ஒருவரது குரலாவது ஈழம், கூடங்குளம், முல்லைப்பெரியாறு மாதிரியான அத்தியாவசியப் பிரச்சினைகளின்போது சட்டமன்றத்தில் எதிரொலித்தாக வேண்டும்.

பார்க்கலாம். இன்னொருமுறை சங்கரன்கோவிலுக்கு செல்ல வேண்டியிருக்கிறது. கலைஞர், அம்மா, கேப்டனின் பிரச்சாரங்கள் மக்கள் மனதில் ஏதேனும் பெரியளவில் தாக்கம் ஏற்படுத்துகிறதாவென்று கடைசிக்கட்டத்தில்தான் தெரியவரும்.

கால்கள் - கலந்துரையாடல்

5 மார்ச், 2012

அமலாபால்

ஒன்று.

எனக்கு கண்ணில் ஏதோ பிரச்சினை.

இரண்டு.

இப்போது தமிழர்களுக்கு ரசனைக்குறைவு.

இந்த இரண்டே வாய்ப்புகள்தான் இருக்கிறது.

ஏன் தமிழர்கள் போயும், போயும் இந்த அமலாபாலை போய் ரசியோ, ரசியென்று இப்படி ரசித்துத் தொலைக்கிறார்கள் என்றே புரியவில்லை. தயாரிப்பாளர்களோ ஒருபடி மேலே போய் அவர் வீட்டு முன்பாக, நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயிலுக்கு வியாழக்கிழமைகளில் நீள்வது மாதிரியான க்யூவில் அட்வான்ஸ் பணத்தோடு நின்றுக் கொண்டிருக்கிறார்கள்.

லோ பட்ஜெட் படங்களில் ஹீரோயினுக்கு தங்கையாக வருவதற்கோ அல்லது க்ரூப் டேன்ஸர்களில் முன்வரிசையில் ஆடுமளவுக்கோதான் அவருக்கு அழகு இருப்பதாக கருத வேண்டியிருக்கிறது. ரிச் கேர்ள்ஸ் ஆக கூட அமலாபால் செலக்ட் ஆயிருந்தாலே அது அதிசயம். கத்தி மாதிரி கண்களைத் தவிர்த்து வேறெதுவும் அவருக்கு ப்ளஸ்ஸாக இருப்பதாக தோன்றவேயில்லை. பொதுவாக ஆண்கள் விரும்பும் ‘ப்ளஸ்’ அமலாவைப் பொறுத்தவரை பெரிய ‘ப்ளஸ்’ இல்லை என்பதை அவருடைய எல்லாப் படங்களையும், உறுத்து உறுத்துப் பார்த்ததில் உணர்ந்துக் கொண்டேன். அமலாபால் அளவுக்கு சுமாரான அழகிருக்கும் பெண்ணை காதலிப்பதிலோ, கல்யாணம் செய்துக் கொள்வதிலோ எனக்குப் பிரச்சினையில்லை. யதார்த்தத்தில் இவரை விட சுமாராகதான் டிபிக்கல் ஹவுஸ் ஒய்ஃப்கள் இருக்கிறார்கள்.

நிலைமை இப்படியிருக்க, அமலாபால் ஏன் நதியாவைப் போல, கவுதமியைப் போல, சிம்ரனைப் போல இப்போது தமிழ்த் திரையுலகின் உச்சத்தில் இருக்கிறார்?

நிஜமாகவே விடை தெரியாத கேள்விதான் இது.

ஸ்ரீதேவி கோலோச்சியதற்குப் பிறகு சுமார் ஃபிகர்களான அம்பிகா-ராதா சகோதரிகள் தமிழ் சினிமாவில் பட்டையைக் கிளப்பினார்கள். அதற்குப் பிறகு கவுதமி. தமிழர்களுக்கு ‘ஒல்லியான’ பெண்களைப் பிடிக்கும் என்றொரு கருத்துருவாக்கம் ஏற்பட்டிருந்த நிலையில், புசுபுசுவென புயலாக உள்ளே நுழைந்தார் குஷ்பு. பின்னர் சுகன்யா மாதிரி ஆண்ட்டி லுக் ஃபிகர்களையும் ஆராதித்தார்கள் தமிழர்கள். ஒல்லி சிம்ரன், குண்டு ஜோதிகா என்று ஒரே சமயத்தில் டபுள் சைட் எக்ஸ்ட்ரீம் ரசனையையும் வெளிப்படுத்தி தாவூ தீர வைத்தார்கள். கிரணையும் ரசித்தார்கள். இலியானாவுக்கும் விசில் அடித்தார்கள். இப்போது அமலா பாலை ஆராதிக்கிறார்கள்.

கொஞ்சம் தீவிரமாக சிந்தித்து நம்முடைய கனவுக்கன்னிகளை வரிசைப்படுத்திப் பார்த்தால் சீரான ஒழுங்குவரிசையற்ற ஒருமாதிரியான நான்-லீனியர் தன்மை கொண்ட ரசனையை தமிழன் வெளிப்படுத்தி வருகிறான் என்பது புரியும். இவனுக்கு பிடிப்பது குண்டா, ஒல்லியா.. குள்ளமா, உயரமா.. கருப்பா, சிவப்பா என்று அறுதியிட்டு யாராலும் சுலபமாக வரையறுத்துவிட முடியாது. “சுலக்‌ஷணா கூட எங்க காலத்தில் கனவுக்கன்னி“ என்று சாட்டிங்கில் வந்து அதிரவைக்கிறார் ஒரு ஃபிப்டி ப்ளஸ் நண்பர். ஸ்ரீதேவியை கனவுக்கன்னி என்றால் புரிந்துகொள்ள முடிகிறது. சுலக்‌ஷணா எப்படி கனவுக்கன்னி என்று மண்டையை பிய்த்துக்கொள்ளத்தான் இயலுகிறது.

‘மைனா’ தவிர்த்து வேறெந்த உருப்படியான படத்தில் அமலா பால் நடித்திருக்கிறாரென்று தெரியவில்லை. சிந்து சமவெளி என்கிற விவகாரமான பிட்டே இல்லாத பிட்டு படத்தில் நடித்தது அவருக்கு ஒரு கூடுதல் தகுதியாக இருக்கலாம். இப்படத்தில் நடித்து பரவலானதால்தான் மீண்டும் மீண்டும் விசில் அடிக்கும் ரசிகர்கள் அமலா பால் என்றாலே குஷியாகி தியேட்டர்களுக்கு வருகிறார்களோ என்று யூகிக்கிறேன். அமலாபால் நடித்த சுமார் படங்களை விட, ‘விகடகவி’ மாதிரி மொக்கைப்படங்களே அதிகமென்று அவருடைய கேரியர் கிராப் கூறுகிறது. அப்படியிருந்தும் இன்று தமிழின் நெ.1 மாதிரி அமலாதான் இருக்கிறார்.

கடந்த வருடத்தைவிட அமலா ஃபீவர் இவ்வருடம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. இரண்டே மாதத்தில் அவர் நடித்த மூன்று படங்கள் வெளியாகியிருக்கிறது. வேட்டையின் ’பப்பரப்பா’ பாட்டில் அவருடைய மேக்கப்பை கண்டதுமே பேஜாராகிவிட்டது. இந்த மேக்கப்மேன் முன்னதாக கிரணுக்கு மேக்கப் போட்டவராக இருக்கக்கூடும். ‘படமெடுத்து சொதப்புவது எப்படி?’ என்று பாடமெடுத்த ‘காதலில் சொதப்புவது எப்படி?’யில் அமலா பாலின் மேக்கப் அத்தனை மோசமில்லையென்றாலும், நடிப்பென்றால் கிலோ என்ன விலையென்று தெரியாத அப்பாவியாக சிறப்பாகவே அவர் நடித்திருந்தார். ‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’ கொடுமை. போதாக்குறைக்கு கிட்டத்தட்ட இரட்டை வேடம். குள்ளமான அமலாபாலுக்கு, படம் முழுக்க மாடர்ன் ட்ரெஸ் வேறு. வசனகர்த்தாவோ மனச்சாட்சியே இல்லாமல் “அவளைப் பார்த்தேன்னா, நீ பொண்ணுங்கிறதையே மறந்துட்டு யூ வில் ஃபால் இன் லவ்” என்றெல்லாம் கவுதமேனத்தனமாக டயலாக் எழுதியிருக்கிறார்.

எனக்கென்னவோ, நம்மூரில் சாணி தட்டும் குணசுந்தரி மாதிரி ஃபிகர்களுக்கு மாடர்ன் ட்ரெஸ் போட்டு, நன்றாக தலைவாரி, லேசாக ப்ரூஸ் பவுடர் போட்டு, லிப்ஸ்டிக் தடவிவிட்டால் அமலாபாலை விட அழகாக இருப்பார்கள் என்று தோன்றுகிறது.