
காதல் என்ற சொல்லுக்கு எந்த பொருளுமில்லை. பெண்ணின் உடல் மீதான ஈர்ப்பும், காமமுமே நம் சமூகத்தில் காதல் என்று சொல்லப்படுகிறது. இந்த காதல் என்ற கருமாந்திரம் இல்லாவிட்டால் இந்தியர்கள் தாமஸ் ஆல்வா எடிசனுக்கு முன்பே பல்பை கண்டுபிடித்து ஆட்டு ஆட்டுவென்று ஆட்டியிருப்பார்கள் என்ற சிந்தனையை உரக்கச் சொல்லவே காதல் கதை என்ற செல்லுலாய்டு குப்பையை கொட்டியிருக்கிறார் வேலுபிரபாகரன்.
சென்சார் இப்படத்தைப் போட்டுக் குதறியதில் எந்த தப்புமேயில்லை. பாடாவதி படத்தை திரும்ப திரும்ப சோர்வடையாமல் போட்டுப் பார்த்து வெட்டித்தள்ளிய சென்சார் அதிகாரிகளுக்கு கலாச்சார அமைச்சகம் சம்பள உயர்வு கொடுக்கலாம். பாடல் காட்சிகளிலும், ஏனைய காட்சிகளிலும் தாராளமாக செமி நியூட். படத்தில் நடித்த நடிகைகளுக்கு மார்பகம் குறித்த பிரக்ஞையே சற்றும் இல்லை என்பதால் தமிழ் சினிமா ஹாலிவுட் அளவுக்கு சைஸில் பெருத்து விட்டதாக எடுத்துக் கொள்ளலாம்.
காதல் மற்றும் காமம் குறித்த வேலுபிரபாகரனின் உளறல்களுக்கு இடையே பகுத்தறிவுப் பிரச்சாரக் கொடுமை. ஒரு காட்சியில் வேலுபிரபாகரன் பெரியார் வேடத்தில் தோன்றிப் படுத்துகிறார். பெரியார் திராவிடர் கழகம் போன்ற அமைப்புகள் என்ன செய்து கொண்டிருக்கிறது? கொஞ்சமும் சரக்கில்லாத மூன்றாந்தர இந்த பிட்டுப் படத்தை எடுத்துவிட்டு இத்தனை நாளாக ஊடகங்களில் வேலு பிலிம் காட்டிக் கொண்டிருந்தது ரொம்பவும் ஓவர். ரஜினிகாந்த் இப்படத்துக்கு பொருளாதார ரீதியாக உதவியிருந்தால் அதைவிட நகைச்சுவை வேறெதுவுமில்லை.
ஹீரோயின் ஷெர்லினின் கண்கள் மட்டும் ஆறுதல். முதல் படமென்றாலும் திறந்த மனதோடே கேமிராவை அணுகியிருக்கிறார். பாபிலோனா உள்ளிட்ட மற்ற கட்டைகளும் தங்கள் திறமையை சிறப்பாகவே வெளிக்காட்டியிருக்கிறார்கள். இவர்களின் இடுப்புக்கும், மார்புக்கும் ஸ்பெஷல் லைட்டிங் அமைப்பதிலேயே கேமிராமேனின் மொத்தக் கவனமும் இருந்திருக்கிறது.
பெண் உடல் மீதான கிளர்ச்சி இளைஞர்களுக்கு இருப்பதாலேயே நாட்டில் நடைபெறுகிற குற்றங்களில் எண்பது சதவிகிதம் பாலியல் குற்றமாக இருக்கிறது என்று முதல் காட்சியிலேயே பாடம் போதிக்கும் வேலுபிரபாகரன் இப்படம் மூலமாக தீர்வு எதையும் முன்வைக்கவில்லை. மாறாக மேலும் பாலியல் குற்றங்கள் முன்பைவிட தீர்க்கமாக நடைபெற உந்துசக்தியாக இப்படத்தின் காட்சிகளை அமைத்திருக்கிறார். வரைமுறையற்ற காமத்துக்கு சுதந்திரம் கோருகிறார். இந்த கண்ணறாவியைப் பார்த்துவிட்டு எந்த மாதிரியான விவாதம் சமூகத்தில் கிளம்பும் என்று அவர் எதிர்பார்க்கிறாரோ புரியவில்லை.
பிரபல கவர்ச்சி நடிகையை வேலுபிரபாகரன் திருமணம் செய்துகொண்டு சில நாட்கள் வாழ்ந்திருக்கிறார். அவர் மீது கொண்டது காதலல்ல, வெறும் காமம் என்றுணர்ந்து விலகியிருக்கிறார். பிறகு வேறொரு பெண்ணிடம் காதல்வசப்பட்டு.. மன்னிக்கவும் காமவசப்பட்டு, பின்னர் ஏமாற்றப்பட்டிருக்கிறார். எனவே காதல் என்பது பொய், காமம் என்பதே மெய் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார். இப்படியாக சொந்தவாழ்வில் ஏற்பட்ட சில காம, காதல் குளறுபடிகளால் மனம் குழம்பி ‘வேலுபிரபாகரனின் காதல் கதை' என்று படமெடுத்து மக்களையும் குழப்ப கிளம்பியிருக்கிறார்.
ஆர்ட் டைரக்ஷன் தவிர்த்து தொழில்நுட்பரீதியாகவும், உள்ளடக்க ரீதியாகவும் மகா மகா மட்டமான படைப்பு இது. ஒரு மேட்டர் படத்துக்கு எப்படி இசையமைக்க வேண்டுமோ, அப்படியே கச்சிதமாக இசையமைத்திருக்கிறார் இசைஞானி. தியேட்டரில் எக்ஸ்ட்ரா பிட் ஓட்டாதது ஒன்றுதான் பாக்கி. மற்றபடி முழுநீல வண்ணப்படம். அரங்கு நிறைந்து ஓடுகிறது. இதுபோதாதா வேலுபிரபாகரனுக்கு?