25 ஜனவரி, 2010

கொள்ளையடிப்பது ஒரு கலை!


மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பான “மந்திரிகுமாரி”, மெகா ஹிட் திரைப்படமாகும். இதில் தி.மு.க. தலைவர் கலைஞர் எழுதிய வசனங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

கலைஞர் எப்படி பட உலகுக்கு வந்தார் என்பதை இப்போது பார்ப்போம்.

திருவாரூரில் இருந்து 15 மைல் தூரத்தில் உள்ள திருக்குவளை கிராமத்தில் 1924 ஜுன் 3_ந்தேதி பிறந்த கலைஞர், இளமையிலேயே எழுத்தாற்றலும், பேச்சாற்றலும் மிக்கவராகத் திகழ்ந்தார். அவருடைய நாடகங்களில் ஒன்றைப் பார்த்தபெரியார், அவரைப் பாராட்டியதோடு, ஈரோட்டில் இருந்து வெளிவந்து கொண்டிருந்த “குடியரசு” வார இதழின் துணை ஆசிரியராக நியமித்தார்.

1949_ம் ஆண்டு தி.மு.கழகத்தை பேறிஞர் அண்ணா தொடங்கியபோது, அதில் முக்கியப் பங்கெடுத்துக்கொண்ட கலைஞர், பின்னர் தி.மு.க. தலைவர்களில் ஒருவராக உயர்ந்தார்.

இந்த சமயத்தில், கோவை ஜூபிடர் நிறுவனத்தினர் தயாரித்த “ராஜகுமாரி” படத்துக்கு வசனம் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. இந்தப் படத்தில்தான் எம்.ஜி.ஆர். முதன் முதலாகக் கதாநாயகனாக அறிமுகம் ஆனார்.

இந்தப்படத்தை டைரக்டர் செய்தவர் ஏ.எஸ்.ஏ.சாமி. அக்காலத்தில் இவர் புகழ் பெற்ற டைரக்டராகவும், வசன கர்த்தா வாகவும் விளங்கினார். ராஜகுமாரியின் வசனங்களின் பெரும் பகுதியை எழுதியவர் கலைஞர்தான் என்றாலும் “வசனம் ஏ.எஸ்.ஏ.சாமி” என்றும், “உதவி மு.கருணாநிதி” என்றும் படத்தில் “டைட்டில்” கார்டு போட்டார்கள்.

கலைஞருக்கு தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் வரத் தொடங்கின. மனைவியுடன் கோவையில் குடியேறி, “அபிமன்யு” படத்திற்கு வசனம் எழுதினார். கருத்தாழம் மிக்க வசனங்கள் எழுதியும், படத்தில் வசன கர்த்தாவாக அவர் பெயர் இடம் பெறவில்லை.

இந்த சமயத்தில், கலைஞரின் எழுத்துத்திறமை பற்றி மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரத்திடம் கவிஞர் கா.மு.ஷெரீப் கூறினார். அதைத் தொடர்ந்து, மாடர்ன் தியேட்டர்ஸ் கதை_வசன இலாகாவில் சேர்ந்து பணிபுரியுமாறு கலைஞருக்கு தந்தி அடித்தார், டி.ஆர்.சுந்தரம். அந்த அழைப்பை ஏற்று, மாடர்ன் தியேட்டர்ஸ் கதை இலாகாவில் கலைஞர் சேர்ந்தார்.

அப்போது, மாடர்ன் தியேட்டர்சார் “சண்டமாருதம்” என்ற பத்திரிகையை நடத்தி வந்தார்கள். அதன் பொறுப்பாசிரியராக கவிஞர் கண்ணதாசன் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவர் ஏற்கனவே கலைஞரின் எழுத்துத் திறமையை அறிந்திருந்தார். மாடர்ன் தியேட்டர்ஸ் கதை இலாகாவில் சேர கலைஞர் வந்தபோது, அவரை கண்ணதாசன் அன்புடன் வரவேற்றார். இருவரும் நண்பர்கள் ஆனார்கள்.

இந்த சமயத்தில், “பொன்முடி” படம் முடிவடையும் நிலையில் இருந்தது. அப்படத்தின் பின்பகுதிக்கான கதையை அமைத்துத் தருமாறு கலைஞரை சுந்தரம் கேட்டுக்கொண்டார். அதன்படி, பொன்முடி படத்தின் இறுதிப் பகுதியை (கபாலிகர் கூட்டம் வருவது) கலைஞர் அமைத்துத் தந்தார்.

ஐம்பெரும் காவியங்களில் ஒன்றான “குண்டலகேசி”யில் வரும் ஒரு சம்பவத்தை அடிப்படையாக வைத்து, “மந்திரிகுமாரி” என்ற நாடகத்தை கலைஞர் உருவாக்கியிருந்தார். ஏற்கனவே மேடையில் வெற்றி பெற்ற அந்த நாடகத்தை திரைப்படமாகத் தயாரிக்க சுந்தரம் தீர்மானித்தார்.

திரைக்கதையை அமைத்து, வசனத்தை எழுதித் தரும்படி கலைஞரிடம் சுந்தரம் கேட்டுக்கொண்டார். அதை மகிழ்ச்சியுடன் ஏற்று, வசனம் எழுதத் தொடங்கினார் கலைஞர்.

மந்திரிகுமாரியின் கதாநாயகனாக யாரைப் போடுவது என்று சுந்தரம் யோசித்துக் கொண்டிருந்தார். ஏற்கனவே கலைஞர் வசனம் எழுதிய ராஜகுமாரி, மருதநாட்டு இளவரசி ஆகிய படங்களில் எம்.ஜி.ஆர். நடித்திருந்ததால், அவருக்கும், கலைஞருக்கும் நெருங்கிய நட்புறவு ஏற்பட்டிருந்தது. எனவே, கதாநாயகன் வேடத்துக்கு எம்.ஜி.ஆரை கலைஞர் பலமாக சிபாரிசு செய்தார்.

“ராஜகுமாரி” படத்தில் எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்திருந்தாலும், தொடர்ந்து அவருக்கு கதாநாயகன் வேடம் கிடைக்கவில்லை. சுந்தரமும் உடனடியாக அவரை கதாநாயகனாகத் தேர்வு செய்யாமல், “அவருக்கு தாடையில் பெரிய குழி இருக்கிறதே” என்றார். “அங்கு சிறிய தாடியை ஒட்ட வைத்து விட்டால் சரியாகிவிடும். தளபதி வேடத்துக்குப் பொருத்தமாக இருப்பார். சண்டைக் காட்சிகளில் பிரமாதமாக நடிப்பார்” என்று கலைஞர் எடுத்துக் கூறினார். அதன்பின் எம்.ஜி.ஆரை ஒப்பந்தம் செய்தார் சுந்தரம்.

மந்திரிகுமாரியில் வில்லன் வேடம் முக்கியமானது. அதற்கு நாடக நடிகர் எஸ்.ஏ.நடராஜன் தேர்வு செய்யப்பட்டார். மற்றும் ராஜகுமாரி வேடத்துக்கு ஜி.சகுந்தலா, மந்திரிகுமாரி வேடத்துக்கு மாதுரிதேவி, ராஜகுரு வேடத்துக்கு எம்.என். நம்பியார் ஒப்பந்தமானார்கள்.

“மந்திரி குமாரி”யின் கதை, திருப்பங்கள் நிறைந்தது. முல்லை நாட்டு மன்னரின் மகள் ஜீவரேகவும் (ஜி.சகுந்தலா) மந்திரியின் மகள் அமுதாவும் (மாதுரிதேவி) ஆருயிர் தோழிகள். தளபதி வீரமோகனை ராஜகுமாரி காதலிக்கிறாள்.

மன்னரை ஆட்டிப்படைக்கும் ராஜகுருவின் (எம்.என்.நம்பியார்) மகன் பார்த்திபன் (எஸ்.ஏ.நடராஜன்) கொடூரமானவன். பகலில் ராஜகுருவின் மகன். இரவில் பயங்கர கொள்ளைக்காரன். “கொள்ளையடிப்பது ஒரு கலை” என்பது அவன் கொள்கை.

மந்திரிகுமாரி அமுதாவைக் கண்டதும் அவளை அடையத்துடிக்கிறான். அவனுடைய சுயரூபத்தை அறியாத அவள், அவனை மணக்கிறாள். கொள்ளைக் கூட்டத்தைக் கண்டு பிடிக்கும் முயற்சியில் தளபதி ராஜமோகன் ஈடுபட்டு, பார்த்திபனை பிடித்து அரசவையின் முன் நிறுத்துகிறான். ஆனால் ராஜகுருவின் சூழ்ச்சியால் பழி ராஜமோகன் மீது விழுகிறது.

தன் கணவன் கொடியவன் _ கொள்ளைக்காரன் என்பதை, அமுதா அறிந்து கொள்கிறாள். அவனைத் திருத்த முயல்கிறாள். உண்மையை அறிந்து கொண்டு விட்டாளே என்ற ஆத்திரத்தில், அவளைத் தீர்த்துக்கட்ட பார்த்திபன் முடிவு செய்கிறான்.

“வாராய் நீ வாராய்” என்று பாட்டுப்பாடி, அவளை மலை உச்சிக்கு அழைத்துச் செல்கிறான். அங்கிருந்து அவளைத் தள்ளிவிட அவன் முயற்சி செய்யும்போது, “சாவதற்கு முன் உங்களை மூன்று முறை சுற்றி வந்து வணங்க அனுமதியுங்கள்” என்று வேண்டுகிறாள், அமுதா.

அதற்கு அவன் சம்மதிக்கிறான். மூன்றாவது முறை சுற்றி வரும் போது, அவனை மலை உச்சியில் இருந்து கீழே தள்ளி விடுகிறாள். அவள் மூலம், உண்மையை அறிகிறார், அரசர். ராஜகுரு சிறைப்படுத்தப்படுகிறார். அரசகுமாரியும், தளபதியும் ஒன்று சேருகின்றனர்.

ஆரம்பத்தில் “மந்திரிகுமாரி”யை எல்லிஸ் ஆர்.டங்கன் டைரக்ட் செய்தார். அவர் அவசரமாக அமெரிக்கா போக வேண்டி இருந்ததால், டைரக்‌ஷனை டி.ஆர்.சுந்தரம் தொடர்ந்தார். சென்சார் கெடுபிடியை சமாளித்து, 1950_ல் படத்தை வெளியிட்டார், டி.ஆர்.சுந்தரம். படம் மகத்தான வெற்றி பெற்றது.

கதை, வசனம், நடிப்பு, இசை எல்லாமே இதில் சிறப்பாக அமைந்திருந்தன. குறிப்பாக, கலைஞரின் வசனங்கள் கூர்மையாக அமைந்திருந்தன. “அனல் பறக்கும் வசனம்; கனல் தெறிக்கும் நடிப்பு” என்று விளம்பரம் செய்தார்கள்.

நம்பியாருக்கும், எஸ்.ஏ.நடராஜனுக்கும் இடையே நடைபெறும் ஒரு உரையாடல்:

“பார்த்திபா! நீ கொள்ளையடிப்பதை விட்டுவிடக் கூடாதா?”

“கொள்ளை அடிப்பதை விட்டு விடுவதா? அது கலையப்பா, கலை!”

“என்ன! கொள்ளையடிப்பது கலையா?”

“ஆம் தந்தையே! அது கலைதான். வில்லில் இருந்து புறப்படும் அம்பு எத்தனையோ உயிர்களைக் குடிக்கிறது. ஆனால், வில்வித்தை என்ற பெயரால், கொலை அங்கே கலையாகிறது. ஓவியக் கலைஞன், பெண்ணின் அங்கங்களை வரைந்து காட்டுகிறான். ஓவியக் கலையின் பெயரால், காமம் அங்கே கலையாகிறது. அதுபோல இதுவும் ஒரு கலைதான்!”

“இந்தக் கலையை விட்டுவிடக் கூடாதா?”

“கொக்கு மீனைப் பிடிக்காமல் இருந்தால், பாம்பு தவளையை விழுங்காமல் இருந்தால், நானும் என் கலையை விட்டு விடுவேன்.” இத்தகையை வசனங்கள் ஏராளம்.

“கொள்ளை அடிப்பதை கலை என்று கலைஞர் கூறுகிறார்” என்று மாற்றுக் கட்சியினர் எதிர்ப்புக் குரல் எழுப்பினர்.

அதற்குக் கலைஞர் கூறிய பதில்: “கொள்ளை அடிப்பதும் ஒரு கலை என்று, அப்படத்தில் தீயவன் ஒருவன்தான் கூறுகிறான். கடைசியில் அவன் அழிந்து போகிறான். ராமாயணத்தை எழுதியவர், கூனி பாத்திரத்தையும் படைத்தாரே, கூனியின் சுபாவம் அதை எழுதியவருக்கு சொந்தமானதா? மகாபாரதத்தை எழுதியவர், சகுனி பாத்திரத்தைப் படைத்தாரே. அப்படியானால் அவர் சகுனியின் செய்கைகளை ஆதரிப்பதாக அர்த்தமா?”

எம்.ஜி.ஆர், நம்பியார், மாதுரிதேவி ஆகிய அனைவரும் நன்றாக நடித்திருந்தபோதிலும், புதிய பாணியில் பேசி நடித்த எஸ்.ஏ.நடராஜன் பெரும் புகழ் பெற்றார்.

(மந்திரிகுமாரியைத் தொடர்ந்து, எஸ்.ஏ.நடராஜனுக்கு நிறைய வாய்ப்புகள் வந்தன. கதாநாயகனாகவும் நடித்தார். ஆனால் அதில் அவர் சோபிக்க முடியவில்லை. மந்திரிகுமாரிக்குப் பிறகு, அவருக்கு பெயர் சொல்லும் படமாக “மனோகரா” மட்டுமே அமைந்தது.)

“மந்திரிகுமாரி”யின் பாடல்களை கா.மு.ஷெரீப், மருதகாசி ஆகியோர் எழுதினர். ஜி.ராமநாதன் இசை அமைத்தார். திருச்சி லோகநாதனும், ஜிக்கியும் பாடிய “வாராய், நீ வாராய்” என்ற பாடல், இன்றைய ரசிகர்கள் கூட விரும்பும் பாடலாக விளங்குகிறது

(நன்றி : மாலைமலர்)

மூவர்ணக் கொடி!


தாயின் மணிக்கொடி பாரீர் – அதை
தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்!
பள்ளி நாட்களில் பாரதியாரின் இந்தப் பாடலை பாடாதவர் யார்?

ஒரு நாட்டின் மீது அந்நாட்டு மக்கள் கொண்டிருக்கும் பற்று தேசியக்கொடி வணக்கமாக வெளிப்படுகிறது. தேசியக்கொடியை ஏற்றி வணக்கம் செலுத்தியபிறகே நம் மத்திய, மாநில அரசுகளின் விழாக்களும், நிகழ்ச்சிகளும் தொடங்குகின்றன. தேசியக்கொடி என்பது நாட்டின் தேசிய இனம், குடிமக்களின் பண்புகள், ஆட்சி, இறையாண்மை உள்ளிட்ட விஷயங்களை குறிக்கின்ற ஒட்டுமொத்த சின்னம்.

மூவர்ண இந்திய தேசியக்கொடி இந்தியர்களின் நம்பிக்கைகளையும், எதிர்பார்ப்பையும் பிரதிபலிக்கிறது. இது தேசப்பெருமையின் சின்னம். பல்லாயிரம் பேர் இன்னுயிர் தந்து மூவர்ணக்கொடியை பட்டொளி வீசி பறக்கச் செய்திருக்கிறார்கள் என்று இந்திய தேசியக்கொடி மரபுச்சட்டம் சொல்கிறது.

தேசியக்கொடியின் நிறங்களையும், நடுவிலிருக்கும் அசோகச்சக்கரம் குறித்தும் அரசியல் சட்ட நிர்ணயசபையில் முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் அவர்களால் விரிவாக எடுத்துரைக்கப் பட்டிருக்கிறது. “காவிநிறம் தியாகத்தையும், பற்றில்லாத தன்மையையும் குறிக்கிறது. தேசத்தின் தலைவர்கள் தங்கள் சுகதுக்கம் மீது பற்றுகொள்ளாது முழு ஈடுபாட்டோடு நாட்டுக்கான கடமைகளை செய்ய இந்நிறம் வலியுறுத்துகிறது. வெள்ளை நிறம் ஒழுக்கத்தின் குறியீடு. இந்நாட்டின் மண்ணின் மீதும், மரங்களின் மீதும் நமக்கிருக்கும் உரிமையை பச்சை நிறம் போதிக்கிறது. இடையில் இருக்கும் நீலநிற அசோக சக்கரம், அசோகர் காலத்து தர்மத்தை நினைவுறுத்துகிறது, இயக்கத்தை முன்வைக்கிறது. அவ்வியக்கம் முன்னேற்றத்தை நோக்கியதாக பயணிக்க வேண்டும்”

இந்தியாவின் முதல் பிரதமர் யார்? முதல் ஜனாதிபதி யார்? சுதந்திரம் வாங்கிக் கொடுத்தது யார்? சுதந்திரநாள் எது? குடியரசுநாள் எது? என்றெல்லாம் கேட்டால் சொடுக்கு போடும் நேரத்தில் சடக்கென்று பதில் சொல்லிவிடுவோம். தேசியக்கொடியை வடிவமைத்தது யார்? என்று கேட்டால் உடனே சொல்லிவிட முடிகிறதா? இல்லைதானே!

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்திய சுதந்திரப் போராட்டம் பல்வேறு பரிமாணங்களை கொண்டிருந்தது. ’நீங்கள் வேறு, நாங்கள் வேறு’ என்று வெள்ளையர்களுக்கு கோடிட்டுக் காட்ட இந்தியர்களுக்கு ஒரு கொடி தேவைப்பட்டது. சுவாமி விவேகானந்தரின் சீடரான நிவேதிதா இந்தியர்களுக்காக ஒரு கொடியை உருவாக்க முனைந்தார். அக்கொடியில் ‘வந்தேமாதரம்’ என்ற சொல் வங்கமொழியில் பொறிக்கப்பட்டு இருந்தது.

1906, ஆகஸ்ட் 7ஆம் தேதி, வங்கப் பிரிவினையை எதிர்த்து போராடிய ஒரு போராட்டத்தின் போது முதல் மூவர்ணக் கொடி அறிமுகப்படுத்தப் பட்டது. காவி, பச்சை நிறங்களோடு இடையில் இப்போதிருக்கும் வெள்ளைக்குப் பதிலாக மஞ்சள் நிறம் இடம் பெற்றிருந்தது. இக்கொடி ’கல்கத்தா கொடி’ என்று வரலாற்றில் பெயர் பெற்றது.

கல்கத்தா கொடி பிரபலமடைந்ததை அடுத்து, ஒவ்வொரு பிராந்தியங்களில் இருந்தவர்களும் ஒவ்வொரு மாதிரியான கொடியை உருவாக்க முயன்றார்கள். சுயாட்சிப் போராட்டத்தின் போது பாலகங்காதர திலகர், அன்னிபெசண்ட் அம்மையார் ஆகியோர் உருவாக்கிய கொடியில் பிரிட்டனின் யூனியன் ஜாக் கொடிகூட சிறியதாக இடம்பெற்றது.

1916ஆம் ஆண்டிலிருந்து ஆந்திராவின் மசூலிப்பட்டினத்தைச் சேர்ந்த பிங்கலி வெங்கைய்யா என்பவர் எல்லோருக்கும் பொதுவான ஒரு தேசியக்கொடியை உருவாக்க முனைந்தார். மகாத்மா காந்தியிடம் இதற்கான ஆலோசனையை அவர் கேட்டபோது, இந்தியாவின் எழுச்சியையும், தாழ்ச்சியின் விடுதலையையும் குறிக்கும் வகையில் சக்கரத்தை சேர்க்குமாறு வலியுறுத்தினார். சிவப்பு, பச்சை நிறங்களில் ராட்டைச் சக்கரத்தை ஆதாரமாகக் கொண்டு ஒரு கொடியை வெங்கைய்யா உருவாக்கினார்.

காந்திக்கோ இக்கொடி அனைத்து மதத்தினரையும் பிரதிநிதிப்படுத்துவதாக தோன்றவில்லை. இதையடுத்து மீண்டும் ஒரு கொடி உருவாக்கப்பட்ட்து. வெள்ளை, பச்சை, சிகப்பு நிறங்களுக்கு நடுவே ராட்டைச் சக்கரம் மூன்று வண்ணங்களிலும் இடம்பெறுமாறு உருவாக்கப்பட்ட இக்கொடி, தற்காலிகமாக அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்டது.

காங்கிரஸ் என்றாலே அந்தக் காலத்திலும் கோஷ்டிப் பூசல் அளவுக்கதிகமாக இருந்திருக்கிறது. கொடி விஷயத்திலும் கோஷ்டி சேர்ந்து ஆளாளுக்கு தங்களுக்குப் பிடித்த வண்ணங்கள் கொடியில் இடம்பெற வேண்டும் என்று வலியுறுத்த தொடங்கினார்கள். ஆளாளுக்கு தனக்குப் பிடித்த வண்ணத்தில் கொடி அச்சிட்டு தூள்கிளப்பவும் ஆரம்பித்தார்கள். எனவே எந்த கொடி ‘ஒரிஜினல் கொடி’ என்ற குழப்பம் மக்களுக்கு ஏற்பட்டது.

ஒருவழியாக 1931ஆம் ஆண்டு கராச்சி நகரில் கூடிய காங்கிரஸ் குழு, பிங்கலி வெங்கைய்யா வடிவமைத்த காவி, வெள்ளை, பச்சை வண்ணங்களோடு நடுவில் ராட்டைச் சக்கரம் பொருத்தப்பட்ட கொடி ஒன்றினை ஒப்புக் கொண்டது. இன்றைய நம்முடைய மூவர்ணக் கொடிக்கு கிட்டத்தட்ட இக்கொடியே சரியான முன்னோடி எனலாம். இன்றும் இக்கொடியே இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் கொடியாக அமைந்திருக்கிறது.

இதற்கிடையே இதே வண்ணங்களில் சுபாஷ் சந்திர போஸ் தன்னுடைய தேசியபடைக்கு ஒரு கொடியை உருவாக்கி பரபரப்பு ஏற்படுத்தினார். ராட்டைச் சக்கரத்துக்குப் பதிலாக பாயும் புலி சின்னத்தை பதிந்து உருவாக்கப்பட்ட கொடி அது. இக்கொடி வன்முறையை தூண்டுவதாக கூறி மகாத்மா காந்தியின் தொண்டர்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டது.

கடைசியாக இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைப்பதற்கு இருபத்துநான்கு நாட்களுக்கு முன்பாக இந்திய தேசியக்கொடி முழுப்பரிமாணத்தையும் அடைந்தது. காவி, பச்சை நிறங்களுக்கு இடையில் வெள்ளை, வெள்ளை நிறத்துக்கு நடுவில் நீலநிறத்தில் அசோகரின் தர்மசக்கரம் என்ற பிங்கலி வெங்கைய்யாவின் வடிவமைப்பே இறுதிவடிவம் பெற்றது. இந்தியா குடியரசாக மாறிய 1950, ஜனவரி 26 அன்று இந்தியாவின் தேசியக்கொடியாக இக்கொடி அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

2002ஆம் ஆண்டுக்கு முன்புவரை தேசிய விடுமுறை நாட்களைத் தவிர்த்து மற்ற நாட்களில் தேசியக்கொடியை மக்கள் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டிருந்தது. நவீன் ஜிண்டால் என்ற தொழிலதிபர் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் இந்திய அரசுக்கு இப்பிரச்சினையை தீர்க்குமாறு உத்தரவிட்டது. அதையடுத்து 2002 ஜனவரி 26 முதல், நாட்டு மக்கள் கொடியை எல்லா நாட்களிலும் உரிய மரியாதையோடு ஏற்றலாம் என்று இந்திய அரசு அறிவித்தது. தேசியக்கொடிச் சட்டம் 2002 அமல்படுத்தப்பட்டு கொடியை எப்படிப் பயன்படுத்தலாம், எப்படி பயன்படுத்தக் கூடாது என்று வழிமுறைகள் வரையறுக்கப்பட்டது.

இந்தியத் தேசியக்கொடி ஏதாவது ஒருவகையில் அவமதிக்கப் பட்டாலோ, அல்லது தேசியக்கொடிச் சட்டத்தின் மதிக்காத வகையில் நடந்து கொண்டாலோ மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம், இல்லையேல் இரண்டுமே சேர்த்தும் வழங்கப்படும் என்று தேச அவமதிப்புச் சட்டம் சொல்கிறது..

23 ஜனவரி, 2010

சைபர் க்ரைம் - ஒரு விமர்சனம்!


யுவகிருஷ்ணா எழுதிய "சைபர் க்ரைம்" புத்தகத்தை படித்தேன். குமுதம் ரிப்போர்ட்டரில் தொடராக வந்த இந்த கட்டுரைகளை ஒரே கோப்பையில் பருகிய திருப்த்தி கிடைத்தது.

"தொழில்நுட்பம் கத்தி மாதிரி, காய்கறி வெட்டவும் பயன்படுத்தலாம், குரல்வளை அறுக்கவும் உபயோகிக்கலாம்."

யுவகிருஷ்ணா குறிப்பிட்டிருக்கும் இந்த வாசகங்கள் முற்றிலும் உண்மை. பரபப்பான இந்த உலக சூழ்நிலையில், வளர்ந்து வரும் சைபர் முன்னேற்றங்களுக்கு மனிதன் அடிமையாகி வருகின்றான். இன்டர்நெட் பயன்படுத்தும் வெகுஜென மக்களில் பலருடைய இரகசியங்கள் குறைந்த பட்சம் அரைநிர்வாணப் படுத்த படுகிறது, இதனை பலரும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை, எனினும் பிரச்சனை என்று வரும்போது புலம்பி அழுவதில் பலன் ஏதும் இல்லை. இத்தகைய பிரச்சனைகளை ஆராய்ந்து வெளிச்சம் போட்டு காட்டுகிறது இந்த புத்தகம். இன்று கத்திரிக்காய் வாங்குவதில் தொடங்கி, மனிதனின் "காரக்டரை" அறிந்துகொள்வது வரை நாம் அனைவரும் நாடுவது கூகிள் சேவை, இவ்வாறு அனைத்தையும் தேடும் வசதி வந்துவிட்ட சூழ்நிலையில், நாம் நம்மை பற்றி எத்தகைய விஷயங்களை இணையத்தில் பகிர்ந்து கொண்டால், அசிங்கபடுவதையோ அல்லது ஏமாறுவதையோ தவிர்க்கலாம் என்பது இப்புத்தகம் நமக்கு தரும் பாடம்.

சில வருடங்களுக்கு முன்னால் பெற்றோர்கள் "என் புள்ள இங்கிலீஷ்ல தான் பேசுது" என்று கூறி சந்தோஷ பட்டனர், தற்போது எல்லா பெற்றோரும், "என் புள்ள இன்டர்நெட்லதான் முழுநேரமும் கெடக்குது" என்று கூறி பெருமிதம் அடைகின்றனர். இதற்கு தேவையான அத்தனை வசதிகளையும் (தனி அறை உட்பட) செய்து தருகின்றனர். இதில் எந்த தவறும் இல்லை, எனினும் தங்கள் பிள்ளைகள் இந்த சைபர் உலகத்தில் உண்மையில் என்ன செய்கின்றனர் என்பதனை கண்காணிக்க தவறும் போது, குழந்தைகள் "தவறும்" செய்ய தொடங்குகிறார்கள். குழந்தைக்கு கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் வசதி செய்து கொடுக்க விளையும் அத்துனை பெற்றோரும் சற்று இந்த புத்தகத்தை படித்து வைத்துக்கொள்வது நல்லது.

இவ்வுலகில் உலவும் பல நுன்கருவிகளை பயன்படுத்த தெரிந்த, அனுபவம் மிகுந்த பலரும், சில நேரம் சில அறிவுரைகளை ஏற்க மறுத்து பின்பு பிரச்சனையில் சிக்கித் தவிக்கின்றனர். இதற்கு முக்கியமான காரணம், அறிவுரை கூறுபவர்கள் அதற்கான சான்றுகளை கூற தவறுவதால், பிறர் அதனை அலட்சியப்படுத்துகின்றனர். இதனை நன்கு அறிந்தவராக செயலாற்றி இருக்கிறார் யுவகிருஷ்ணா! "இதை செய்யாதே!" என்று கூறி நிறுத்தாமல் "இப்படித்தான் ஒருத்தன் செஞ்சு மாட்டிகிட்டான்" என்று புரிய வைத்திருக்கிறார். மகராசன் படத்தில் வரும் கவுண்டமணி-செந்தில் காமெடியில், "இப்படித்தான் எங்க ஊர்ல ஒருத்தன் இருமி இருமி, நுறையீரல் வெளிய வந்து விழுந்துருச்சி" என்று பொய் சொல்லாமல், நிகழ்வுகளை உண்மையான வழக்கு ஆதாரங்களால் யுவகிருஷ்ணா விளக்கியுள்ளார். சிறிய சில் முதல், செல், கம்ப்யூட்டர் வரை எத்தகைய ஆபத்துகள் இருக்கின்றன என்பது அருமையாக விளக்கப்பட்டிருக்கிறது.

கட்டற்ற மென்பொருள் மற்றும் ஒபன் சோர்ஸ் மென்பொருள்களின் மூலம் சில பாதுகாப்பு அம்சங்களை சாதிக்க முடியும் என்பதனை கூற தவறியிருந்தாலும், எப்படி நம்மை பாதுகாப்பது என்பதனை எளிய தமிழில் ஆங்காங்கே நகைச்சுவை தூவி மிகச் சிறப்பாக யுவகிருஷ்ணா எழுதி இருக்கிறார். "சைபர் க்ரைம்" - "பூஜ்ய குற்றம்" என்று மொழிபெயர்த்த யுவகிருஷ்ணாவின் இலக்கிய ஆர்வத்தை பாராட்ட வார்த்தைகள் இல்லை :)

காலத்துக்கேற்ப மாற முயலும் அனைவரும் அத்யாவசியமாக தெரிந்துகொள்ள வேண்டிய அருமை செய்திகள் பொதிந்த இந்த புத்தகத்தை, ஒரு கோப்பை கொட்டை வடிநீராக மாற்றி, பருக கொடுத்த கிழக்கு பதிப்பகத்தாருக்கு என் மனமார்ந்த நன்றி!

(நன்றி : ஸ்டைல்சென்)

இணையத்தில் இப்புத்தகத்தை வாங்க : http://nhm.in/shop/978-81-8493-266-9.html

பீஷ்மா!


கடந்த சில குடியரசுத் தினங்களில் தொலைக்காட்சிகளில் நீங்கள் கண்டிருக்கலாம். டெல்லியில் வழக்கமாக நடக்கும் ராணுவ அணிவகுப்பில் ஒய்யாரமாக வீறுநடை போடும் பீஷ்மா பலரின் கண்ணையும், கவர்த்தையும் கவர்ந்துவருகிறார். மகாபாரத பீஷ்மரைப் போலவே கம்பீரமும், ஆளுமையும் கொண்டவர் இந்த பீஷ்மரும். போர்முனையில் இவர் ஒரு வெல்லமுடியாத சிங்கம். வேதியியல், உயிரியல், அணு ஆயுதங்கள் இவரின் சுண்டுவிரலைக்கூட அசைக்க முடியாது. அடுத்த முப்பதாண்டுகளுக்கு எதிரிகளை களத்தில் ஓட ஓட விரட்டி, புறமுதுகிட்டு சிதறி ஓடச்செய்யப்போகும் இவர்தான் இந்திய ராணுவத்தின் இன்றைய ஹீரோ.

யார் இந்த பீஷ்மா?

இதுவரை இந்திய ராணுவத்துக்கு டாங்கிகள் ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டிருக்கின்றன. அல்லது உதிரிபாகங்கள் அங்கிருந்து இறக்குமதி செய்யப்பட்டு, இந்திய தொழிற்சாலைகளில் பொருத்தப்பட்டிருக்கின்றன. இந்தியாவிலேயே முழுக்க முழுக்க உருவாக்கப்பட்டிருக்கும் முதல் பீரங்கி இந்த பீஷ்மா. ரஷ்யாவிலிருந்து தொழில்நுட்ப ஆலோசனைகள் மட்டும் பெறப்பட்டிருக்கிறது. உலகளவில் போர்முனைகளில் பயன்படுத்தப்படும் டாங்கிகளில் இதுதான் லேட்டஸ்ட்.

இரவுகளிலும் துல்லியமாக போரிடவும், குண்டுகளை சுடும் அதே குழாயிலேயே குறிபார்த்து ஏவுகணைகளை ஏவவும் பீஷ்மாவில் வசதிகள் உண்டு. அணு ஆயுதங்களில் வெளிப்படும் ரேடியோ கதிர்வீச்சினை தாங்கும் சக்தி பீஷ்மாவிடம் இருப்பதால், இந்த டாங்கியை இயக்கும் குழுவுக்கு உயிர்ச்சேதம் ஏற்படும் வாய்ப்பு மிக மிகக்குறைவு என்பது தனிச்சிறப்பு. அவசியம் தேவைப்படும் காலங்களில் போர்முனைகளுக்கு மின்னல்வேகத்தில் பயணிக்கும் ஆற்றல் கொண்டது இந்த பீஷ்மா.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 24-ஆம் தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கும் இந்த டாங்கி, இந்திய ராணுவ வரலாற்றில் தனியிடத்தைப் பிடிக்கிறது. ஒரு பீஷ்மாவை உருவாக்க இந்தியாவுக்கு ஆகப்போகும் செலவு ரூபாய் பதினான்கு கோடி என்றால் இதன் முக்கியத்துவத்தை நீங்கள் உணரலாம். அடுத்த பத்தாண்டுகளில் ஆண்டுக்கு தலா 100 பீரங்கிகளை உருவாக்க சென்னை ஆவடி டாங்க் தொழிற்சாலை தயார்நிலையில் இருக்கிறது. 2020ஆம் ஆண்டு வாக்கில் 1,600 பீரங்கிகளோடு தனது தரைப்படையை உலகின் தன்னிகரற்ற, யாராலும் வெல்லமுடியாத படையாக உருவாக்க இந்தியா பெரும் முனைப்பு காட்டி வருகிறது.

ரஷ்யாவின் டி-90 டாங்கிகளின் தொழில்நுட்ப அடிப்படையில் பீஷ்மா டாங்குகள் உருவாக்கப்படுகின்றன. இந்திய ராணுவம் இதுவரை பயன்படுத்தி வந்த அர்ஜூன்ரக டாங்குகளை தயாரிக்க அதிக கால அவகாசம் தேவைப்படுகிறது. எனவே குறைந்தகால அவகாசத்தில் அதிக டாங்குகளை தயாரிக்கும் சுலபமான – அதே நேரம் சக்திவாய்ந்த தொழில்நுட்பத்தை இந்திய ராணுவம் தேடிவந்தது. இடையில் உக்ரைன் நாட்டிலிருந்து 320 டி-80 யூடி ரக டாங்குகளை வாங்க பாகிஸ்தான் முடிவெடுத்ததால் இந்திய ராணுவத்துக்கு சக்திவாய்ந்த டாங்குகளை உடனடியாக உருவாக்க வேண்டிய நெருக்கடியும் ஏற்பட்டது.

எனவே கடந்த 1998ஆம் ஆண்டு ரஷ்யாவின் இரண்டு டாங்கி மாடல்களை (டி72 மற்றும் 90) வாங்கி பாலைவனப் பகுதிகளில் பரிசோதனை நடத்தியது. இதில் டி72 குறித்த திருப்தி இந்திய ராணுவ அதிகாரிகளுக்கு சுத்தமாக இல்லை. வெப்பத்தை தாங்கக் கூடிய பலம் அந்த டாங்கிக்கு இல்லை. டி90 டாங்குகளிலும் சில அதிருப்திகள் இருந்தது. தேவையான மாற்றங்களுக்கான தொழில்நுட்ப யுக்திகளை ரஷ்யாவிடம் இருந்து பெற்று முழுக்க முழுக்க இந்தியாவிலேயே டி90 ரக பீரங்கிகளை உருவாக்க முடிவெடுக்கப்பட்டது. பீஷ்மா என்று பெயரிடப்பட்டு நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கும் அதிநவீன டாங்கியின் கதை இதுதான்.

பாகிஸ்தான் தற்போது உபயோகிக்கும் டி80 யூடி ரக டாங்குகளை விட பீஷ்மாவில் அதிகவசதிகள் உண்டு. ஏவுகணைகளில் இருவகை உண்டு. இந்த இருவகை ஏவுகணைகளையும் பீஷ்மாவில் ஏவமுடியும். மாறாக டி80 யூடியில் ஒருவகை ஏவுகணையை மட்டுமே பயன்படுத்தலாம். பாதுகாப்பு அடிப்படையில் நம் பீஷ்மா தலைசிறந்தது. எதிரிகளால் சுலபமாக வீழ்த்திவிட முடியாத அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் கனகச்சிதம். திட்டமிட்டபடி பீஷ்மா டாங்குகள் சரியான நேரத்தில் தயாரிக்கப்படுமானால் அடுத்த பத்தாண்டுகளில் இந்தியாவின் தரைப்படையை வெல்வது என்பது வல்லரசுகளுக்கே சாத்தியமில்லாததாக ஆகிவிடும்.

22 ஜனவரி, 2010

சங்கராச்சாரியார்!


எதிர்பார்த்தபடியே புதுவையில் நடந்து வரும் சங்கரராமன் கொலைவழக்கில் அடுத்தடுத்து சாட்சிகள் பல்டியடித்து வருகிறார்கள். உச்சக்கட்டமாக முக்கிய சாட்சியான ரவிசுப்பிரமணியம் ‘கொலை பற்றி எனக்கு எதுவும் தெரியாது’ என்று நேற்று பல்டியடித்து விட்டார்.

இச்சூழலில் பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன் முன்பு எழுதிய ஒரு சிறுநூல் நினைவுக்கு வருகிறது. அந்நூலில் ‘வரலாறு நெடுகிலுமே சாதாரண மக்கள் இயல்பாக உணரக்கூடிய உண்மையின் தரிசன்ங்கள் தொடர்ந்து தடுக்கப்பட்டுள்ளன என்ற வெளிச்சக்கீற்று விழுதுகளாய் எனக்குள் இறங்கியது’ என்று குறிப்பிட்டிருக்கிறார். அவரைப் போன்ற பத்திரிகையாளர்களுக்கு இறங்கிய வெளிச்சம் மீண்டும் இருளுக்குள் அமிழத் தொடங்கியிருக்கிறது. அன்றே சொன்னார் அண்ணா, ‘சட்டம் ஒரு இருட்டறை’.

2004, நவம்பர் 11 கைதுக்குப் பிறகான சில சம்பவங்களை மீள்பார்வை செய்துப் பார்க்கவே இப்பதிவு. சங்கராச்சாரியார் கைதின்போது ஏற்பட்ட சில நிகழ்வுகளை தனது துல்லிய ஆய்வுகள் மூலமாக வெளிப்படுத்தியிருந்தார் சாவித்திரி கண்ணன். இவர் துக்ளக்கில் ஏராளமான கட்டுரைகளை எழுதியவர் என்பது இங்கே தேவையில்லாத, ஆனால் அவசியம் குறிப்பிட வேண்டிய ஒரு தகவல்.

ராதாகிருஷ்ணன் மற்றும் மாதவன் என்பவர்கள் மீது ஏற்கனவே கொலைதாக்குதல் முயற்சிகள் நடத்தியவர், பாலியல்ரீதியான பலவீனங்களை கொண்டவர், கூலிக்கு கொலை செய்யும் அடியாள் கூட்டத் தலைவர்களோடு நெருங்கிய நட்பு பாராட்டியவர் என்றெல்லாம் பரபரப்பான செய்திகள் நாள்தோறும் வெளியாகின. பல்லாண்டுகளாக திரையிட்டு மறைக்கப்பட்ட புனிதம் வெட்டவெளிச்சத்துக்கு வந்து சிதைந்துப் போனது.

ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டதற்கான காரணங்களும், கொலையான சங்கரராமன் மீதான அனுதாபமும் முற்றிலுமாக நிராகரிக்கப்பட்டு, கைதுக்குள்ளானவரின் அந்தஸ்து பற்றியும், கைது செய்யப்பட்ட முறை பற்றியுமே அதிகமாக பேசப்பட்டது.

இத்தனைக்கும் பாரம்பரியமிக்க கோயிலில், இந்து நம்பிக்கையில் ஆழ்ந்தப் பற்று கொண்ட வைதீக பிராமணர் பட்டப்பகலில் வெட்டிச் சாய்க்கப்பட்டது குறித்து இந்து அமைப்புகள் கள்ள மவுனம் காத்தன. இந்துமத எதிர்ப்பு இயக்கமான திமுகதான் அந்த ஏழை பிராமணரின் படுகொலைக்கு காரணமான உண்மை குற்றவாளியை கைது செய்யக்கோரி போராட்டம் நடத்தியது.

இந்துக்களின் பண்டிகையான தீபாவளியன்று மதத்தலைவரை கைது செய்யலாமா என்று கேணைத்தனமாக கேள்வி எழுப்பினார்கள். கிறிஸ்துமஸ் வரும் வரை போலிஸ்காரர்கள் காத்துக் கொண்டிருக்க வேண்டும் என்று விரும்பினார்கள் போலும். அயோத்தியைப் பிடித்து தொங்கிக் கொண்டிருந்த மத அரசியல் கட்சியான பிஜேபி ஒரே நாளில் ‘இஸ்லாமியர்களுக்கு மெக்கா, கிறிஸ்தவர்களுக்கு ஜெருசலேம், எங்களுக்கு காஞ்சி’ என்று கொதித்து எழுந்தது. ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவர் சோனியா கிறிஸ்தவ மதத்தவர் என்பதாலேயே இந்துமதத் தலைவரை அவமானப்படுத்துகிறார்கள் என்று புரளி பரப்பியது.

ஆடிட்டர் குருமூர்த்தி போன்றவர்களின் உண்மை முகத்தை அறிய ஜெயேந்திரர் கைது துணைபுரிந்தது. “பத்திரிகைகள் பொறுப்பற்று எழுதுகின்றன. மடிப்பத்திரிகைகளுக்கும், மஞ்சள் பத்திரிகைகளுக்கும் இப்போது வித்தியாசம் தெரியவில்லை” என்று கொதித்து எழுந்தார். மடிப்பத்திரிகைகள் என்றால் பிராமணப் பத்திரிகைகளாம். அப்பட்டமான ஜாதியப் பார்வை இவ்வளவு நாட்களாக அறிவுத் தளத்தில் இயங்கிக் கொண்டிருந்ததாக பாவனை காட்டிக் கொண்டிருந்தவர்களுக்கு இருந்தது என்பதை மக்கள் இலகுவாக விளங்கிக் கொண்டார்கள்.

அந்தப் புத்தகத்தில் வலுவான ஒரு கருத்தை தனது சுயகருத்தாகவும் சாவித்திரி கண்ணன் சொல்லியிருந்தார். “சங்கராச்சாரியார்களிடமிருந்து இந்து மதத்தைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்”

இன்று விசாரணை போகும் போக்கைப் பார்த்தால், ‘இந்து மதத்தின் கதி அதோகதிதான்’ என்று தோன்றுகிறது. கையும் களவுமாக பிடிபட்டிருந்தாலும், யார் ஆட்சியில் இருந்தாலும் ‘அவர்களின்’ லாபி மிகச்சிறப்பாகவே செயல்படும் என்பது மீண்டும் ஒருமுறை வெற்றிகரமாக நிரூபணமாகியிருக்கிறது. வழக்கிலிருந்து விரைவில் விடுவிக்கப்படப் போகும் ஜெயேந்திரருக்கு நமது வாழ்த்துகள்!

நூல் : சங்கராச்சாரியார்களும், இந்துமதமும் - சிதைக்கப்பட்ட உண்மைகள்
ஆசிரியர் : சாவித்திரி கண்ணன்
பக்கங்கள் : 40
விலை : ரூ.10/-
வெளியீடு : மாணிக்க சுந்தரம் வெளியீட்டகம்,
522, 2வது மேற்கு தெரு, காமராஜர் நகர்,
திருவான்மியூர், சென்னை-600 041.