2 பிப்ரவரி, 2010

திட்டியதில் பிடித்தது!

கீழ்க்கண்ட கட்டுரையின் கடைசி பாராவை மட்டும் படிக்கவும் :

http://www.charuonline.com/Feb2010/suyapuranam.html

1 பிப்ரவரி, 2010

கிராமி நாயகன்!


நான் பணிபுரியும் பத்திரிகைக்கு ஒரு ஒவ்வாமை உண்டு. அது பிரபலங்கள் குறித்தானது. மற்ற பத்திரிகைகளிடம் இருந்து எங்கள் பத்திரிகை வேறுபடும் புள்ளியும் அதுதான். எங்களுக்கு கலைஞரோ, புரட்சித்தலைவியோ, சூப்பர்ஸ்டாரோ பிரபலம் அல்ல. எங்களுடைய பிரபலங்கள் திருப்பூண்டியிலும், கொட்டிக்காரம்பட்டியிலும் இருக்கிறார்கள். சென்னையில் குளிர் அறைகளில் முன் அனுமதி பெற்று நாங்கள் யாரையும் பேட்டி எடுப்பதில்லை. அரசுப்பேருந்தில் முன்னூறு, நானூறு கிலோ மீட்டர் பயணித்து வயலில் களை பிடுங்கிக் கொண்டிருப்பவரையும், சைக்கிளை மாங்கு மாங்குவென்று மிதித்துக் கொண்டிருப்பவரையும் பேட்டி எடுப்பதே எங்களது வழக்கமாக இருக்கிறது.

முதல்வர் கலைஞரின் போட்டோ கூட ஒரே ஒருமுறைதான் எங்கள் பத்திரிகையில் இதுவரை வெளிவந்திருக்கிறது. அதுவும்கூட அட்டைப்படச் செய்தியாக வந்ததால், முக்கியத்துவம் கருதி, பாஸ்போர்ட் அளவில்தான்.

முதன்முறையாக ஒரு விதிவிலக்கு : பத்மபூஷன் ஏ.ஆர்.ரஹ்மான்!

நான் இங்கே பணிக்கு சேர்ந்தபோதே, என்னுடைய சீனியர் கல்யாண்சார் எங்கள் பத்திரிகையின் புதிய தலைமுறைக்கு ஒரு வாக்கு கொடுத்திருந்தார். “நாம எல்லாருமா போய் ஏ.ஆர்.ரகுமானை சந்திச்சு பேட்டி எடுக்கலாம்!”.

கல்யாண்சாரை பற்றி இங்கே குறிப்பிட வேண்டியது அவசியம். 80களின் தொடக்கத்தில் ‘திசைகள்’ கண்டெடுத்த முத்துக்களில் ஒருவர். சினிமா தொடர்பானவர் என்பதால் பிரபலமான சினிமா பத்திரிகையாளராக உருவெடுத்தவர். இந்தியா டுடே தமிழில் தொடங்கப்பட்டபோது அதில் பணியில் இருந்தவர். துணை ஆசிரியராக பணியாற்றியவர். இதெல்லாவற்றையும் விட மிக முக்கியமாக குறிப்பிடப்பட வேண்டியது என்னவென்றால், ஏ.ஆர்.ரஹ்மானை ரோஜா வெளிவருவதற்கு முன்பாகவே முதன்முதலாக பேட்டி எடுத்த பத்திரிகையாளர். இதன்மூலமாக கிட்டத்தட்ட பதினெட்டு வருடங்களாக தொழில் அடிப்படையில் மட்டுமல்லாமல், தனிப்பட்ட முறையிலும் ரஹ்மானுக்கு நண்பராக இருப்பவர். இன்று தமிழ் சினிமாத் தொழிலில் இருப்பவர்களில் கிட்டத்தட்ட எழுபத்தி ஐந்து சதவிகிதம் பேராவது கல்யாண்சாரின் நண்பராக இருப்பார்கள்.

கல்யாண்சார் எங்களுக்கு வாக்கு கொடுத்து ஆறு மாதங்களுக்கு மேலாகிவிட்டதால், அவ்வப்போது அவரை நச்சரித்துக் கொண்டிருந்தோம். இரண்டு மாதங்களுக்கு முன்பாக ஒரு மின்னஞ்சல் அனுப்பினார். பேட்டிக்கு ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்புக்கொண்டார். தேதி மட்டும் முடிவாகவில்லை. அதே நேரத்தில் எங்கள் ஆசிரியரின் அனுமதிக்கு காத்திருந்தோம். ‘பிரபல ஒவ்வாமை’ காரணமாக ஆசிரியர் அனுமதிப்பாரா என்ற சந்தேகம் எங்களுக்கு இருந்தது.

ஆசிரியருக்கு ரஹ்மானின் இசை குறித்த பெரிய அபிப்ராயம் இருப்பதாக அவரது பேச்சில் தெரியவில்லை. ‘அவரது இசையில் நேட்டிவிட்டி மிஸ்ஸிங்’ என்பதாக அவர் நினைக்கிறார் என்று கருதுகிறேன். மேலும் அவர் இளையராஜா ரசிகராகவும் இருக்கக்கூடும் என்றும் யூகிக்கிறேன். ஒவ்வொரு மேடையிலும் ‘எல்லாப் புகழும் இறைவனுக்கே’ என்று ரஹ்மான் க்ளிஷேவாக சொல்லுவார். ஆயினும் ஆஸ்கர் வாங்கியபோது ‘எனக்கு இரண்டு வழி இருந்தது. ஒன்று அன்பு, மற்றொன்று வெறுப்பு. அன்பு பாதையை தேர்ந்தெடுத்தேன். ஆஸ்கர் வரை வந்தேன்’ என்ற ரஹ்மானின் கருத்து ஆசிரியரை மிகவும் கவர்ந்திருந்தது. வாழ்ந்து முடித்த ஒருவருக்கு வந்து சேரவேண்டிய முதிர்ச்சி இளைஞரான ரஹ்மானுக்கு வாய்த்திருப்பது குறித்த ஆச்சரியம் ஆசிரியருக்கு இருந்தது. பாரம்பரியமிக்க ஆஸ்கர் மேடையில் ரஹ்மானால் தமிழ் முதன்முதலாக உச்சரிக்கப்பட்டு தமிழுக்கு பெருமையும் சேர்ந்தது. இதுவே நாங்கள் அவரை பேட்டியெடுப்பதற்கான நியாயத்தையும் தந்தது.

பொங்கல் விடுமுறை முடிந்து, ஒருநாள் மாலை ஐந்து மணிக்கு பேட்டி என்பதாக முடிவாகி இருந்தது. அன்றைய தினம் பிற்பகலில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ஆங்கிலப் படம் ஒன்றின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியும் சென்னையில் நடந்தது. ஐந்து மணியளவில் கோடம்பாக்கத்தில் இருக்கும் அவரது வீட்டில் எங்கள் குழு ஆஜர். குழுவிலிருந்த நானும், தோழர் கவின்மலரும் தீவிர இளையராஜா ரசிகர்கள். அதிஷா ஒரு பலபட்டறை. சமீபமாக விஜய் ஆண்டனியின் குத்துப்பாடல்களுக்கு ரசிகராக இருக்கிறார். புகைப்படக் கலைஞர் அறிவழகன் மட்டும் தீவிர ஏ.ஆர். விசிறி. கல்யாண்சாருக்கும் ஏ.ஆரின் இசை பிடிக்குமா என்று தெரியாது. ஆனால் எம்.எஸ்.வியின் ரசிகர் என்று மட்டும் தெரியும்.

ஆங்கிலப்பட இசை வெளியீட்டு நிகழ்ச்சி நீண்டு கொண்டிருந்ததால், ஆறு மணி ஆகியும் ஏ.ஆர். வீடு வந்துசேரவில்லை. அந்த ஒரு மணி நேரத்தில் கல்யாண்சார் ரஹ்மானுடனான தனது முதல் பேட்டியில் தொடங்கி, அவருடனான அனுபவங்களை சொல்லிக் கொண்டிருந்தார். திரையுலகில் பெரும் பொருள் ஈட்டியும், அப்பாவுடைய அதே வீட்டில் ரஹ்மான் வசிக்கிறார் என்று குறிப்பிட்டார். ஒரு வெள்ளிக்கிழமை மதிய நேரத்தில் சந்திக்க வந்தபோது, ‘தொழுகை முடிச்சிட்டு வந்துடறேனே!’ என்று சொல்லி, ஒரு பிரைவேட் ஆட்டோவில் ஏறிச்சென்ற ரஹ்மானின் எளிமையை விவரித்துச் சொன்னார். ரஹ்மானின் வீட்டு மாடியில் பாகிஸ்தான் கொடி பறக்கிறது என்று ஒரு புலனாய்வு இதழ் பரபரப்பு கிளப்பியதின் பின்னணி குறித்தும் பகிர்ந்துகொண்டார்.

மூத்தப் பத்திரிகையாளரான கல்யாண்சாரின் அனுபவங்கள் சுவையாக ஓடிக்கொண்டிருந்தபோதே, ஆஸ்கர்நாயகன் வந்துவிட்டார் என்ற தகவல் கிடைத்தது. அவரது பிரத்யேக அலுவல் அறையில் அமர்த்தப்பட்டோம். ரோஜாவில் வாங்கிய விருதில் தொடங்கி, நூற்றுக்கணக்கான விருதுகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. ஆஸ்கரும், தேசிய விருதுகளும் மட்டும் மிஸ்ஸிங் என்று நினைக்கிறேன். ரோஜா படத்துக்கு இசையமைத்தபோது, அவர் வாசித்த கீபோர்டு சுவரில் மாட்டிவைக்கப்பட்டிருக்கிறது (படத்தில் பார்க்கவும்).

ஐந்து நிமிடத்தில் இசைப்புயல் கருப்புச் சட்டையில் நுழைந்தது. ஜீனியஸ், அமைதியானவர் என்றெல்லாம் ஊடகங்கள் மூலமாக அவர் குறித்த கற்பிதம் வைத்திருந்த எனக்கு, அவரது பழகும் முறை ஆச்சரியமளித்தது. ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு டிபிக்கல் சென்னை இளைஞர். அவரது பேச்சுத்தமிழ் இலகுவானதும், நட்பானதும் ஆகும். இடையிடையே ஏதாவது ஜோக்கடித்துவிட்டு, இதையெல்லாம் எழுதாதீங்க என்கிறார். சக்கரைக்கட்டி படத்தின் தோல்வி அவரை நிரம்பவும் நோகடித்திருக்கிறது. ஒருவேளை நான் மியூசிக் போடலேன்னா அந்தப்படம் வேறமாதிரி வந்து ஹிட் ஆகியிருக்கும் என்கிறார்.

ஆஸ்கர் மேடையில் அவரது பேச்சுக்குறித்து கேட்டபோது, ”அன்பு பாதை என்பது அடக்கமான பாதை. விமர்சனங்களை கண்டு நான் பதிலளிக்க முனைந்திருந்தால் அது வெறுப்புப் பாதையாக இருந்திருக்கும். ஆஸ்கர் வரை என்னால் சென்றிருக்க முடியாது” என்று விளக்கமளித்தார். கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் நீண்ட நீளமான பேட்டி அது. ஒரு நண்பரிடம் கேஷுவலாக உரையாற்றும் உணர்வையே தந்தது. எந்த ஒரு நொடியிலும் உலகரங்கில் உயரமான இடத்தில் இருக்கும் ஒருவரோடு பேசிக்கொண்டிருக்கிறோம் என்ற எண்ணமே வரவில்லை.

‘விண்ணைத் தாண்டி வருவாயா?’ குறித்து நல்ல நம்பிக்கையில் இருக்கிறார். என்னை ஆச்சரியப்படுத்திய இன்னொரு விஷயம், தேவாவின் கானா பாடல்களை ஏ.ஆர். தீவிரமாக ரசிக்கிறார் என்பது. ஒவ்வொரு இசையமைப்பாளரும் இசையின் நல்ல வடிவங்களை மக்களிடம் பரவலாக்குகிறார்கள். தேவா சென்னை இசையை தமிழர்களிடையே பரவலாக்கியிருக்கிறார் என்று குறிப்பிட்டார்.

நேரம் நீண்டுவிட்டதால், “முடிச்சுக்கலாமா?” என்று எங்களிடமே அனுமதி கேட்டார். முடிச்சுக்கிட்டப் பிறகு, பத்திரிகையாளர்களாக இல்லாமல் தனிப்பட்ட முறையில் அவரோடு தனித்தனியாக புகைப்படம் எடுத்துக் கொண்டோம். தீவிர ஏ.ஆர். வெறியரான எங்கள் புகைப்படக் கலைஞர், அவரது மாஸ் ஹிட்டுகள் குறித்த தனது அபிப்ராயங்களை கட்டுப்படுத்த முடியாத உணர்ச்சிகளோடு கொட்டியபோது, அமைதியாக புன்முறுவலோடு ரசித்தார்.

ஏ.ஆர்.ரஹ்மானின் அந்தப் பேட்டி, அடுத்தவார ‘புதிய தலைமுறை’ இதழில் வெளிவரும்.

30 ஜனவரி, 2010

சாரு நிவேதிதா இதற்கு உங்கள் பதில் என்ன?

மறந்துப்போனவை-1

ரவுண்ட் டயல் டெலிபோன்!

”ஹல்லோ 459872ங்களா”

“இல்லீங்க மேடம். 459871”

“சார்ரீ மேடம்”

“மேடம் இல்லைங்க சார்!”

“மறுபடியும் சார்ரீங்க. உங்க வாய்ஸ் லேடி வாய்ஸ் மாதிரியே இருக்கு”

“நான் சின்னப்பையன் தாங்க மேடம். பதினேழு வயசுதான் ஆவுது”

”யோவ் நானும் சின்னப்பையன்தான். எனக்கும் 20 வயசுதான் ஆவுது. மேடம் மேடமுன்னு கூப்புடாமே ஒழுங்கா சார்னு கூப்பிடு!”

டொக்.



வீடியோ கேசட்!

ஒரு நாள் மூர்த்திக்கு திடீரென்று ஏனோ ஒரு Aக்கம் ஏற்பட்டது. "மச்சான், கேசட் வாங்கி சாமிப்படம் பார்க்கணும்டா" என்றான். சண்முகத்துக்கும் அதே எண்ணம் இருந்திருக்கும் போல. பலமாக ஆமோதித்தான். எனக்கு உள்ளுக்குள் கொஞ்சமாக உதற ஆரம்பித்தது. எங்கள் ஏரியாவில் இதுமாதிரி சாமிப்படங்களுக்கு புகழ்பெற்ற தியேட்டர் ஆர்.கே. (ராமகிருஷ்ணா என்பதின் சுருக்கம், அந்த தியேட்டர் இப்போது ராஜாவாகியிருக்கிறது). அந்த தியேட்டருக்கு போகும் சில பசங்களை (சரவணா, மோகன்) கெட்ட பசங்க என்று ஒதுக்கி வைத்திருந்தோம். "இப்போ நாமளே அந்தக் காரியத்தை பண்ணுறது என்னடா நியாயம்?" என்று கேட்டேன். "மச்சான் யாருக்கும் தெரியாம நாம மட்டும் பாத்துடலாம், வெளியே மேட்டர் லீக் ஆவாது" என்று சண்முகம் சொன்னான். அப்போதெல்லாம் சிடி, டிவிடி கிடையாது. வீடியோ கேசட் தான்.

கடைசியாக சண்முகம் வீட்டில் கேசட் போட்டுப் பார்ப்பதாக முடிவு செய்தோம். காரணம் சண்முகத்தின் அப்பா, அம்மா ரெண்டு பேருமே ஒர்க்கிங். 6 மணிக்கு தான் வீடு திரும்புவார்கள். மூர்த்தி வீட்டிலும், என் வீட்டிலும் எப்போதும் யாராவது இருந்து தொலைப்பார்கள் என்பதால் சண்முகத்தின் வீடு இந்த மேட்டருக்கு வசதியாக இருந்தது. ஒரு சுபயோக சுபதினத்தில் நங்கநல்லூரில் ஒரு கேசட் கடையில் நானும், மூர்த்தியும் பக்கபலமாக இருக்க சண்முகம் தில்லாக (அவனுக்கு தான் அப்போது மீசை இருந்தது) "சாமிப்படம் இருக்கா" என்று கேட்டான். கடைக்காரர் எங்களை கலாய்ப்பதற்காக "சரஸ்வதி சபதம், திருவிளையாடல், ஆடிவெள்ளி இருக்கு. எது வேணும்?" என்று கேட்டார்.

நான் மெதுவாக மூர்த்தியிடம் "வேணாம் மச்சான். ஏதாவது பிரச்சினை ஆயிடப் போவுது" என்றேன். சண்முகமோ முன்பை விட செம தில்லாக "அண்ணே. நான் கேக்குற சாமிப்படம் வேற" என்று தெளிவாகச் சொல்லிவிட்டான். கடைக்காரரும் கடையின் பின்பக்கமாக போய் ஏதோ ஒரு கேசட்டை பாலிதீன் கவரில் சுற்றி எடுத்து வந்தார். மூர்த்தி கடைக்காரரிடம், "அண்ணே இது இங்கிலிஷா, தமிழா இல்லை மலையாளமா" என்று கேட்டான். கடைக்காரர் ஏற்கனவே சண்முகத்துக்கு அறிமுகமானவர் போல. "தம்பி! இதுக்கெல்லாம் லேங்குவேஜே கிடையாதுப்பா. இருந்தாலும் சொல்லுறேன் இது இங்கிலிஷ்" என்று சொல்லிவிட்டு கேணைத்தனமாக சிரித்தார்.

கேசட் கிடைத்ததுமே சுமார் 3 மணியளவில் சண்முகம் வீட்டுக்கு ஓடினோம். இந்த மேட்டர் யாருக்கும் லீக் ஆகிவிடக்கூடாது என்று பிராமிஸ் செய்துக் கொண்டோம். மூர்த்தி தான் ஒருவித கலைத்தாகத்துடன் மூர்க்கமாக இருந்தான். கேசட்டை வி.சி.ஆரில் செருகிவிட்டு நிமிர்ந்து உட்கார்ந்தோம். ஏதோ ஆங்கிலப்பட டைட்டில் ஓடியது. "மச்சான் பேரை பார்வர்டு பண்ணுடா" என்று மூர்த்தி அவசரப்பட்டான். அந்த வி.சி.ஆரில் ரிமோட் வசதி இல்லாததால் ப்ளேயரிலேயே சண்முகம் பார்வர்டு செய்துக் கொண்டிருந்தான். திடீரென டி.வி. இருளடைந்தது. வி.சி.ஆரும் ஆப் ஆகிவிட்டது. போச்சு கரெண்ட் கட். அந்த கந்தாயத்து வி.சி.ஆரில் கரெண்ட் கட் ஆனவுடன் கேசட்டை வெளியே எடுக்கும் வசதி இல்லை.

கொஞ்ச நேரத்தில் கரண்ட் வந்துவிடும் என்று வெயிட் செய்தோம். வரவில்லை... நேரம் 4.... 4.30 என வேகமாக பயணிக்கத் தொடங்கியது. 5.30ஐ முள் நெருங்கும் வேளையில் கூட கரெண்ட் வருவதாகத் தெரியவில்லை. சரியாக 6 மணிக்கு சண்முகத்தின் அப்பா வேறு வந்து விடுவார். அவர் வந்துவிட்டால் போச்சு. சண்முகம் மாட்டிக் கொள்வான் (உடன் நாங்களும் தான்) மூர்த்தி மெதுவாக "பாக்கு வாங்கிட்டு வர்றேண்டா" என்று சொல்லிவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டான். திரும்பி வருவது போலத் தெரியவில்லை. நானும் மெதுவாக "சண்முகம். ட்யூஷனுக்கு போனம்டா. டைம் ஆவுது" என்றேன். முகம் வெளிறிப் போயிருந்த சண்முகமோ, "டேய் ப்ளீஸ்டா... கொஞ்ச நேரம் இருடா" என்று கெஞ்ச ஆரம்பித்து விட்டான். அவன் அப்பா வரும்போது நானும் அருகில் இருப்பது Safe என்று அவன் நினைத்திருக்கக் கூடும்.

5.45 - கரெண்ட் வருகிற பாடாகத் தெரியவில்லை. டென்ஷன் கூடிக்கொண்டே போனது. என்னடா இது தேவையில்லாத ஒரு மேட்டரில வந்து மாட்டிக்கிட்டமே என்று கடுப்பாகியிருந்தேன். சண்முகத்தின் கண்கள் கொஞ்சம் கலங்கியிருந்ததைப் போலத் தெரிந்தது. பொதுவாக எதற்குமே பயப்படாமல் தில்லாக நிற்கிற அவனே இப்படி என்றால் என் நிலைமை என்ன ஆவது என்று யோசித்தேன். மனசுக்குள் முருகனை வேண்டினேன். அப்போதெல்லாம் எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம். "முருகா கரெண்ட் வரணும்" "முருகா கரெண்ட் வரணும்" என்று மந்திரம் மாதிரி உச்சரித்துக் கொண்டிருந்தேன்.

5.55 - முருகர் என் உருக்கமான வேண்டுகோளுக்கு செவி சாய்த்து விட்டார் போல. கரெண்ட் வந்தது. சண்முகம் ஒளிவேகத்தில் இயங்கி கேசட்டை எடுத்து என் பனியனுக்குள் திணித்தான். "மச்சான்! ஓடிப்போயி கேசட்டை கடையிலே கொடுத்துடு, அப்பா வர்றப்போ நான் இங்கே இல்லேன்னா அடி பின்னிடுவார்" என்றான். கேசட்டை செருகிக் கொண்டு என் சைக்கிளை எடுத்தேன். கேட் திறந்துக் கொண்டு சண்முகத்தின் அப்பா உள்ளே வந்தார். "குட்மார்னிங் அங்கிள்" என்று சொல்லிவிட்டு மெதுவாக சைக்கிளை நகர்த்தினேன். "குட்மார்னிங் இல்லேடா... குட் ஈவ்னிங்டா Fool" என்றவாறே வீட்டுக்குள் நுழைந்தார். வீட்டுக்குள் நல்ல பையன் மாதிரி சண்முகம் ஏதோ எகனாமிக்ஸ் டெபினிஷியனை சத்தம் போட்டு படிக்கும் சத்தம் வெளியே கேட்டது. தப்பித்த நிம்மதியில் மெதுவாக சைக்கிளை வீடியோ கடைக்கு மிதிக்க ஆரம்பித்தேன்.

29 ஜனவரி, 2010

'தீ ' வளர்த்தவன்!


வாழ்வில் மறக்க முடியாத தினங்கள் என்று சில தினங்கள் எல்லோருக்கும் உண்டு. பிறந்தநாள், திருமணநாள், குழந்தை பிறந்தநாள், நெருங்கியவர்களின் மறைவுநாள் என்று முக்கிய தினங்களின் தேதிப்பட்டியல் ஒவ்வொருவருக்கும் வெகுநீளம். சனவரி 29 எனக்கு மறக்கமுடியாத ஒரு தினமாகிப் போனது, உலகத் தமிழர்களை உலுக்கிய அந்த மாபெரும் தியாகத்தால், சோகத்தால். எனக்கு மட்டுமல்ல, பலரும் மறக்க இயலாத தினம் அது. உலகிலேயே மொழிக்காக, இனத்துக்காக உயிராயுதம் ஏந்துபவன் தமிழன் என்பதை மீண்டும் நிரூபித்த நாள்.

2009இ சனவரி 29 எனக்கு சோம்பலானதாய் விடிந்தது. உடல்நலம் சற்று குன்றியிருந்தேன். பணிக்குச் செல்ல சோம்பலாக இருந்தது. பத்தரை அல்லது பதினோரு மணியிருக்கலாம். என் கைப்பேசி கிணுகிணுத்தது. ஒரு தமிழ் தொலைக்காட்சியின் செய்திப்பிரிவில் பணியாற்றிக் கொண்டிருந்த என்னுடைய அண்ணன் பாலபாரதி அழைத்திருந்தார்.

பதட்டமான குரலில் “டேய் தம்பிஇ ‘பெண்ணே நீ’யிலே வேலை பார்க்குற முத்து செத்துட்டாண்டா!”

“எந்த முத்துண்ணே?” அதிர்ச்சியோடு கேட்டேன். அப் பத்திரிகையில் எனக்கு இரண்டு முத்து தெரியும். ஒருவர் உதவியாசிரியர் முத்துசூர்யா. அவருக்கு சமீபத்தில் தான் குழந்தை பிறந்திருந்தது. இன்னொருவர் லே-அவுட்டில் பணிபுரிந்தவர். மூன்று மாதங்களுக்கு முன்பாகதான் ஒரு தினப்பத்திரிகையிலிருந்து விலகி வந்து, இங்கே பணியில் இணைந்திருந்தார்.

பாலபாரதி எனக்கு பேசியதற்கு காரணமிருந்தது. அப்போது நான் ‘பெண்ணே நீ’யில் தொடர்ச்சியாக எழுதிக் கொண்டிருந்தேன். வாரம் ஒருமுறையாவது அங்கே பணி நிமித்தமாக செல்ல வேண்டியிருக்கும்.

“எந்த முத்துன்னு எனக்கெப்படி தெரியும். சாஸ்திரி பவன் வாசல்லே ஈழத்தமிழருக்காக தீக்குளிச்சிட்டான். என்ன ஏதுன்னு விசாரிச்சிட்டு திரும்ப பேசு” என்றார்.

கவுதம் சாருக்கு பேசினேன். அவர் திண்டுக்கல்லில் இருந்தார். பெண்ணே நீ பத்திரிகையின் ஆலோசகர். “ஆமாண்டா. லே-அவுட்டுலே வேலை பார்த்தானே, அவனேதான்! ஒரு ஹெல்ப் பண்ணு. உடனே பெண்ணே நீ ஆபிஸுக்கு போய் ரெக்கார்ட்ஸ்லே அவனோட பயோ-டேட்டா இருக்கும். அதுலே அவனோட போட்டோவும் இருக்கும். அதை எடுத்துட்டுப் போய் மக்கள்டிவியிலே சேர்த்துடு. பிரஸ்காரங்க போட்டோ கேட்டு தொல்லை பண்ணுவாங்க. எல்லாருக்கும் கொடுக்கணும். அதுக்கு முன்னாடி மேடம் கிட்டே பேசிடு!” என்றார். மேடம், பத்திரிகையின் ஆசிரியர்.

மேடமுக்கு பேசுவதற்கு முன்பாக பாலபாரதிக்கு பேசினேன். ‘எந்த முத்து’ என்று உறுதி செய்தேன். எனக்குத் தெரிந்த சில தகவல்களை பகிர்ந்துகொண்டேன். மேடமிடம் பேசியபோது மறுமுனையில் விசும்பிக் கொண்டிருந்தார். “இந்தப் பையன் இப்படிப் பண்ணிட்டானே? நெனைச்சுக் கூடப்பார்க்கலையே” என்று திரும்ப திரும்ப அழுதவாறே சொல்லிக் கொண்டிருந்தார். கோபாலபுரம் ‘பெண்ணே நீ’ அலுவலகத்துக்கு செல்ல பைக்கை ஸ்டார்ட் செய்தேன்.

முத்துக்குமார் ‘பெண்ணே நீ’ பத்திரிகைக்கு விண்ணப்பித்தபோது, அவரிடம் நேர்காணல் நடத்தியவர் கவுதம் சார். பயோ-டேட்டாவில் தன்னைப் பற்றி விசாரிக்க ‘நிழல்’ திருநாவுக்கரசு முகவரியை கொடுத்திருந்தார். ‘நிழல்’ அமைப்பு மூலமாக சிறுபடங்களையும், ஆவணப்படங்களையும் வெளிச்சத்துக்கு கொண்டுவரும் பணியை செய்துகொண்டிருப்பவர் திருநாவுக்கரசு. ‘நல்ல பையன். சினிமாவிலே இயக்குனர் ஆகணும்ங்கிற கனவோட இருக்கான்’ என்று திருநாவுக்கரசு முத்துக்குமாருக்கு சான்று கொடுத்ததன் அடிப்படையில் பத்திரிகைக்கு முத்து சேர்த்துக்கொள்ளப்பட்டார்.

2008 நவம்பரில் பணிக்கு சேர்ந்தார் என்பதாக நினைவு. அவரது குடும்பப் பின்னணி அப்போதைக்கு யாருக்கும் பெரியதாக தெரியாது. ‘அவரது அப்பாவோடு ஏதோ பிரச்சினை’ என்ற அளவுக்கு மட்டுமே தெரியும். கொளத்தூரில் இருந்து தினமும் பேருந்தில் பணிக்கு வருவார்.

பத்திரிகை அலுவலகங்கள் பொதுவாக சோம்பலோடு பத்து, பத்தரை மணிக்குதான் விழிக்கும் என்றாலும், காலை 9.30க்கெல்லாம் அலுவலகம் வந்துவிடுவார். வருகைப் பதிவேடில் ‘கு.மு’ என்று தமிழில் கையெழுத்திடுவார். வேலை தொடங்குவதற்கு முன்பே சீக்கிரம் வர அவருக்கு ஒரு காரணம் இருந்தது. இணையத்தில் செய்தித்தாள்களை வாசிப்பார்.

கூகிளில் வித்தியாசமான விஷயங்களை தேடுவார். ‘நீருக்கு அடியில் சுவாசிக்க என்னென்ன உபகரணங்கள் இருக்கிறது?’ என்பதுபோல வித்தியாசமான தேடுதல்கள். எதையாவது தேடிக்கொண்டேயிருந்த தேடல்மிக்க இளைஞர். மாநிறம், சராசரித் தோற்றம். தேவைக்கு அதிகமாக ஒரு வார்த்தைகூட பேசமாட்டார். முதன்முறை பார்ப்பவர்கள் அவரை ஒரு உம்மணாம்மூஞ்சியாகவே கருதக்கூடிய வாய்ப்புகள் அதிகம்.

முழுமையாக வாசிக்க, இங்கே சுட்டவும்....