
டெலிகிராப் இணையத்தில் பீட்டர் போஸ்டர் என்பவர் எழுதிய ஒரு கட்டுரையின் சுட்டியை தோழர் பிரகாஷ் மின்னுரையாடல் மூலமாக வழங்கியிருந்தார். முக்கியத்துவம் கருதி, அக்கட்டுரையை தமிழாக்கம் செய்யுமாறு நான் கேட்டுக் கொண்டதற்கு இணங்க தமிழாக்கமும் செய்து தந்திருக்கிறார். தோழர்கள் பார்வைக்கு அக்கட்டுரை...
ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கை அரசாங்கம் மீண்டுமொருமுறை தன்னுடைய சகிப்புத்தன்மை இல்லாத வழக்கத்தினை காட்டி வருகிறது. விளைவு, சரத் பொன்சேகாவின் கைது. பொன்சேகா தனது ராணுவ ஜெனரல் பதவியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டு, தற்பொழுது நடந்த தேர்தலில் மகிந்தா ராஜபக்சேவிற்கு எதிராக நின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
டீன் நில்சன் என்பவர் பொன்சேகாவின் கைதை ஒட்டி நடந்த சம்பவங்களை இங்கே தொகுத்துள்ளார். பொன்சேகாவை ராணுவ வீரர்கள் விசாரணைக்கு அராஜகமாக இழுத்துச் சென்றிருக்கின்றனர். சமீபத்தில் இலங்கையில் நடந்த மிக மோசமான சம்பவம் இது. கடந்த நான்கு ஆண்டுகளாக இலங்கை ராஜபக்ஷே ஆட்சியின் கீழ் சர்வாதிகார நாடாக உருமாறி வருவதற்கு இது சரியான ஒரு உதாரணம்.
அரசாங்கத்துக்கு எதிரான குரல்கள் மோசமான முறையில் ஒடுக்கபட்டு வருகிறது. பத்திரிக்கையாளர்கள் இயங்குவதற்கு மிகவும் ஆபத்தான நாடாக இலங்கை மாறி வருகிறது. இதற்க்கு பிரபல பத்திரிக்கையாளர் லசந்தா விக்ரமதுங்கேவின் மரண சாசனமே தக்க எடுத்துக்காட்டு. அவரது மரணசாசனத்தை வாசிக்காதவர்கள் இங்கே வாசிக்கலாம்.
சரி. சீனாவிற்கும், இலங்கைக்கும் என்ன சம்பந்தம்? சீனாவின் மக்கள் ஜனநாயக சர்வாதிகார அரசு புதிதாக முளைத்திருக்கும் இலங்கையின் ’மக்கள் சர்வாதிகார’ அரசிற்கு பொருளாதார ரீதியில் ஆதரவுக்கரம் நீட்டி வருகிறது. இது உலகளாவிய ரீதியில் சீனாவின் மோசமான நிலைப்பாட்டை காட்டுகிறது.
பூகோள ரீதியில் இலங்கைக்கான முக்கியத்துவம் மிகச்சிறியதுதான். என்றாலும் கிழக்காசியாவில் ஜனநாயக நாடாக இருந்து வந்த இலங்கை இப்போது ஊழல் நிறைந்த எதேச்சாதிகார சர்வாதிகார நாடாக மாறி வருவது எல்லோருக்குமே மிகவும் கவலை அளிக்கக்கூடிய விஷயம்.
பல்லாண்டு காலமாக இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் சீனா தலையிடாமலேயே இருந்து வந்தது. இந்தியா சங்கடப்பட்டு விடக்கூடாது என்பதில் சீனா கவனமாக இருந்தது. ஆனால் 2007 ஆம் ஆண்டு ராஜபக்ஷேவின் பீஜிங் பயணத்தில் இருந்து இந்த நிலைப்பாடு கொஞ்சம் கொஞ்சமாக மாறத்தொடங்கியது . அப்பயணத்தின் விளைவாக பொருளாதார ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் சீனாவின் உதவிகளை இலங்கை பெறும் வாய்ப்பு தோன்றியது. இரு அரசாங்கங்களும் ’தீவிரவாதம், பிரிவினைவாதம், பயங்கரவாதம்’ ஆகியவற்றுக்கு எதிராக போராட ஒப்பந்தம் செய்து கொண்டன. இத்தகைய வார்த்தை பிரயோகங்களின் மூலமாகவே ராஜபக்ஷே சமீபத்தில் விடுதலை புலிகளுக்கு எதிரான போரை வெற்றிகரமாக முடித்துக் காட்டினார்.
சீன அரசிற்கு சொந்தமான China Harbour Engineering Company (CHEC) என்னும் கட்டுமான பெருநிறுவனம் ஒன்று தற்போது இலங்கையின் தென்மூலையில் உள்ள ஹம்பண்டோடாவில் புதிய துறைமுகம், விமான நிலையம் மற்றும் தலைநகர் கொழும்புவுடன் மற்றப் பாதைகளை இணைக்கும் ஒரு எக்ஸ்பிரஸ் பாதையையும் அமைத்து வருகிறது.
சில ஆப்ரிக்க நாடுகளுடன் ஏற்கனவே செய்து வருவதைப் போல, நேரடியாக ஈடுபடாமல் நாட்டுடைய ஆளுங்கட்சியின் கையை பலப்படுத்துவது என்ற உத்தியின் மூலமாகவே இதை சீனா செய்துவருகிறது. ஹம்பண்டோட்டா ராஜபக்ஷேவின் சொந்தத் தொகுதி என்பதையும் நாம் இங்கே நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இலங்கை அரசின் சமீபக்கால போர்க் குற்றங்களை விசாரிக்க நடந்த ஐநா சபை விவாதத்தின் போதும் கூட அந்நாட்டின் புதிய நண்பரான ரஷ்யா இலங்கைக்கு ஆதரவுக்கரம் நீட்டியது. இப்போது இலங்கைக்கு ரஷ்யா 300 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு நிகரான ஆயுதம் கொடுப்பது பற்றியும் பேச்சு வார்த்தை மும்முரமடைந்திருக்கிறது. சீனாவின் பங்காளியான ஈரானும் மலிவு விலைக்கு எண்ணெய் மற்றும் சில பொருளாதார உதவிகளை இலங்கைக்கு செய்துத்தர முன்வந்திருக்கிறது .
பிரிட்டன், இலங்கைக்கு எதிராக குரல் கொடுப்பதோடு மட்டுமில்லாமல், பொருளாதார உதவிகளை ரத்தும் செய்து வருகிறது. ஆயினும் முன்பு கிடைத்து வந்த பிரிட்டனின் பொருளாதார உதவி சொற்பமானது என்பதால், இலங்கை உதறித்தள்ளிவிட்டு போய்க்கொண்டே இருக்கிறது. பெரியண்ணன் அமெரிக்காவோ அடிக்கடி, ’நிலைமை மோசம்’ என்று முணங்கிக்கொண்டே இருக்கிறதே ஒழிய, அதன் பங்கிற்கான ஆக்கப்பூர்வமான முயற்சிகள் எதையும் முன்னெடுக்கவில்லை.
கடந்த வாரம் ஐரோப்பிய கூட்டமைப்பு, மனித உரிமை மீறல்களை காரணம் காட்டி, இலங்கையுடனான வர்த்தகங்களை ரத்து செய்துள்ளது. எப்படியிருந்தாலும் இதை நடைமுறைப்படுத்தும் தாமதத்தை சீனாவின் பொருளுதவி ஈடுகட்டிவிடும் என்பதாக தெரிகிறது.
இப்பிரசினையில் சீனாவின் மூக்கு நுழைப்பைப் பற்றி நிருபர்கள் கேட்ட கேள்விக்கு, அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் மா சாவோக்சு, ”இலங்கை தனது சமூக ஸ்திரத்தன்மையை பேண வேண்டும்” என்று மட்டுமே சொல்லியிருக்கிறார். இவ்வகையில் எல்லாம்தான் வெள்ளை வேன்களுடன் பாசிஸம் புரிந்துவரும் ராஜபக்ஷே அரசிற்கு ஆதரவாக சீனா சப்பை கட்டு கட்டுகிறது.
இலங்கையில் நடக்கும் மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்த இந்த உலகம் விழித்துக்கொண்டால் மட்டுமே முடியும், ஆனால் அது நடக்குமா என்பது சந்தேகமே.