12 ஆகஸ்ட், 2010

பாணா காத்தாடி!

“காதலிக்கும் பெண்ணிடம் பரிசு கொடுத்து காதலை சொல்ல விழைகிறான் காதலன். அவன் கொடுக்கும் பரிசு ஒரு காண்டம். அதிர்ச்சி காதலிக்கு மட்டுமல்ல, காதலனுக்கும்தான்!” – இந்த ஒன்லைனரைப் பிடித்து, பரபரவென்று நூல் விட்டு உயர பறக்கிறது பாணா காத்தாடி. களவாணிக்குப் பிறகு வரவேற்கப்பட வேண்டிய இன்னொரு மீடியம் பட்ஜெட் படம்.

காத்தாடி சீசனெல்லாம் சென்னையில் 15 வருடங்களுக்கு முன்பான அற்புதம். இப்போது சென்னைப் பசங்களுக்கு காத்தாடியில் அவ்வளவு பெரிய விருப்பமெல்லாம் எதுவுமில்லை. காத்தாடி மட்டுமல்ல, பம்பரம், கில்லியெல்லாம் கூட கொஞ்சம் கொஞ்சமாக வழக்கொழிந்துக் கொண்டிருக்கிறது.

சாந்தி தியேட்டர் வாசலில் புரட்சிப்புயல் முரளி ரசிகர்மன்றத்தினர், தங்கள் தலைவரின் மகனான அறிமுகநாயகன் அதர்வாவுக்கு அட்டகாசமாக கட்டவுட் வைத்திருக்கிறார்கள்.

ஒரு ஓட்டலில் ஹீரோவையும், ஹீரோயினையும் பார்க்கிறார் முரளி. ஹீரோவைத் தனியாகக் கூப்பிட்டு சொல்கிறார்.

“அந்தப் பொண்ணு மேலே காதல் வந்திருச்சின்னா உடனே சொல்லிடு. இல்லேன்னா என்னை மாதிரி உனக்கும் இதயத்துலே ஓட்டை விழுந்திடும்”

“நீங்க யாரு சார்?”

“நான் இதயம் ராஜா. மெடிக்கல் காலேஜ்லே ஃபைனல் இயர் படிக்கிறேன்” சொல்லிவிட்டு, ஒரு 192 புத்தக நோட்டை எடுத்துக்கொண்டு முரளி கிளம்புகிறார்.

தியேட்டரில் விசிலும், கைத்தட்டலும் ஓய ஐந்து நிமிடங்கள் ஆகிறது. எல்லா காட்சிகளையும் இதுமாதிரி எள்ளல்தன்மையோடே அணுகியிருப்பது இயக்குனரின் புத்திசாலித்தனம்.

சினிமாக்களும், பத்திரிகைகளும் மெட்ராஸ் பாஷை என்ற ஒரு வினோத பாஷையை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். “இன்னாம்மே வாம்மே போம்மே இஸ்த்துக்கிணு வலிச்சுக்கிணு” என்று ஏகப்பட்ட சொல்லாடல்கள் நிறைந்த பாஷை அது. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் அந்த காலத்து டி.டி.யில் செவ்வாய்க்கிழமை நாடகம் இயக்கிய பார்ப்பனர்கள் உருவாக்கிய கருத்தாக்கம் என்று கூட சொல்லலாம். விசு படங்களின் மெட்ராஸ் பாஷையையும் இங்கே நினைவுப்படுத்திக் கொள்ளலாம். இவர்களுக்கெல்லாம் சென்னை பாஷை இதுதானென்று பேசி நடித்துக்காட்டிய லூசுமோகனை முதலில் உதைக்க வேண்டும். கருணாஸ் பேசி நடிக்கிறார் பாருங்கள். அதுதான் ஒரிஜினல் சென்னைத் தமிழ்.

இஸ்துக்கினி, வலிச்சிக்கினு, நாஷ்டா மாதிரி சொல்லாடல்கள் எல்லாமே சென்னைத்தமிழில் இருக்கும்தான். இல்லையென்று மறுக்கமுடியாது. ஆனால் ஊடகங்களில் கட்டமைத்து வைக்கப்பட்டிருக்குமளவுக்கு லூசுத்தனமான தொடர்மொழியில் இருக்கவே இருக்காது. எங்கள் ஊர் தமிழ் எப்படியிருக்குமென்று மிகச்சரியாக, துல்லியமாக எடுத்துக்காட்டிய படம் ஜனநாதனின் ‘ஈ’. இப்போது ‘பாணா காத்தாடி’. எதைப் பேசுவதற்கு முன்பாகவும் ‘...த்தா’ போட்டுதான் பேசுவோம். சில நேரம் அம்மாவிடம் பேசும்போதே கூட அந்த வார்த்தையைப் போட்டு பேசிவிடுவதுண்டு. பாணா காத்தாடியில் மிகையில்லாத சென்னை வசனங்கள், சென்னைக்காரன் என்ற முறையில் படத்தை மனதுக்கு நெருக்கமாக உணரமுடிகிறது.

ஹீரோ அதர்வா ஸ்கூல் ஸ்டூடண்ட். ஹீரோயின் சமந்தா காலேஜ் ஸ்டூடண்ட். எட்டு வயதில்தான் அம்மா ஸ்கூல்லே சேர்த்தாங்க என்று ஹீரோ ஒரு காட்சியில் சொல்கிறார். சென்னையில் இது சகஜமான ஒன்றுதான். பத்தொன்பது வயதில் +2 படிக்கும் மாணவர்களை இங்கே சகஜமாக காணலாம். அதுபோலவே கவுன்சிலர், போலிஸ் ஸ்டேஷன், யூத்களின் நைட் ரவுண்ட்ஸ் என்று சென்னையை நன்கு அவதானித்து, நச்சென்று பதிவாக்கியிருக்கும் இயக்குனரை மலர்ச்செண்டு கொடுத்து வரவேற்கலாம்.

புதுமுக நாயகன் அதர்வா அட்டகாசம். அழகாகவும் இருக்கிறார். கொஞ்சம் சதைபோட்டு ஆக்‌ஷனில் இறங்கினால் ‘பஞ்ச் டயலாக்’ எல்லாம் அடித்து மிகவிரைவில் நாளைய முதல்வர் ஆகிவிடலாம். சமந்தா. வாவ். குட்டிக் கண்கள். சின்ன உதடுகள். கூர்மையான நாசி. குள்ளமாய், கைக்கு அடக்கமாய். பார்த்த்துமே கன்னத்தைக் கிள்ளி கொஞ்சத்தூண்டும் அழகோ அழகு.

கதையைப் பற்றி பெரியதாக மெனக்கெடவில்லை. ‘காதல்’ படங்களுக்கு கதை எதற்கு? விறுவிறுப்பான திரைக்கதை போதுமே. இந்த ஃபார்முலாவை அப்படியே பிடித்துக்கொண்டு மாஞ்சா போட்டிருக்கிறார்கள். ஆடியன்ஸுக்கு புதுசாக எதையாவது காட்டவேண்டுமென்ற ஆர்வத்தில் குஜராத் காத்தாடி திருவிழாவை காட்டியிருக்கிறார்கள். அவ்வளவாக ஈர்க்கவில்லை.

சமீபத்தில் வந்து பெரிய வெற்றி பெற்ற வெண்ணிலா கபடிக்குழுவின் க்ளைமேக்ஸ் ஷாக் டெக்னிக்கை இயக்குனர் தேர்ந்தெடுத்த்து பெரிய துரதிருஷ்டம். படத்துக்கு பெரிய திருஷ்டி க்ளைமேக்ஸ். ஹீரோ மீது அனுதாபம் வருவதற்குப் பதிலாக இயக்குனர் மீது ஆத்திரம்தான் வருகிறது.

பாணா காத்தாடி – க்ளைமேக்ஸ் வரை தாக்குப்பிடித்து, கடைசிநொடியில் டீலில் அறுபடுகிறது!

10 ஆகஸ்ட், 2010

ஸ்ரீமதி ஜூலியாராபர்ட்ஸ்!

மேலைநாட்டு மிஷனெரி மதத்தில் பிறந்தவர் ஸ்ரீமதி ஜூலியா ராபர்ட்ஸ். ஜார்ஜியா என்ற மிஷனெரி வெறி பிடித்த நாட்டில் பிறந்தவர். நேற்றுவரை நம் புண்ணிய பூமியாம் பாரதத்தின் புராதன புனித மதமாம் ஹிந்து மதம் பற்றி அறியாதவர். ஆனால் இன்றோ தங்கத்தாரகையை விடவும் சிறப்பாக மந்திரங்கள் சொல்கிறார். மனமுருகி பாடுகிறார். எப்படி நடந்தது இந்த அற்புதம்?

’சாப்பிடு, ஸ்ரீராமனை தொழு மற்றும் கண்ணனை காதல் செய்’ (Eat, Prey and Love) என்ற பெயரில் மிஷனெரி மொழித் திரைப்படம் ஒன்று தற்சமயம் மேலைநாட்டு ஆஞ்சநேயர் பக்தர்களால் எடுக்கப்பட்டு வருகிறது. கதைப்படி கதாநாயகி ஸ்ரீமதி ஜூலியாராபர்ட்ஸ் ஆன்மீக அனுபவம் நாடி புண்ணிய பாரதத்துக்கு வருகிறார். அங்கே புனிதமதமாம் நம் ஹிந்துமத்த்தின் அருமை பெருமைகளை உணர்கிறார். இறுதியாக கரசேவைக்கு ஊர் ஊராகச் சென்று பிச்சையெடுத்து செங்கல் சேர்த்து, ஸ்ரீராமருக்கு கோயில் கட்டுவதாக படம் முடிகிறது.

இந்தக் கதையைக் கேட்டு, உணர்ச்சிவசப்பட்டு கதறியழுத ஸ்ரீமதி ஜூலியாராபர்ட்ஸ், இத்தகைய தெய்வீக அனுபவங்களை தரும் புனிதமதமாம் ஹிந்துமதத்தில் இணைந்து ஏன் பக்தமீராவைப் போல கண்ணனுக்கு சேவை செய்யக்கூடாது என்று எண்ணினார். சீர்மிகு அரியானாவுக்கு வந்து அங்கே ஹர்மந்திர் என்ற புண்ணியஸ்தலத்தில் சுவாமிதர்மதேவ் என்பாரிடம் ஆசிபெற்றார். தன்னுடைய குழந்தைகளுக்கு கூட ஸ்ரீராமர், ஸ்ரீபலராமர் போன்ற கடவுளர்களின் பெயரை சூட்டிக் கொண்டார். முழுமையான ஹிந்துவாக மாறி சொர்க்கத்துக்கு செல்பவர்களின் பெயர் பட்டியலில் தன்னையும் இணைத்துக் கொண்டார்.

சுவாமி தர்மதேவ் அவர்கள் ஸ்ரீமதி ஜூலியாவின் இந்த நல்மதமாற்றம் குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார். படப்பிடிப்புக்காக கோயில் செட் போடப்பட்டிருந்ததாம். அங்கே உடுக்கை சிலம்பு அடித்தபோது ஸ்ரீமதி ஜூலியா ராபர்ட்ஸுக்கு சாமி வந்து ஆடியதாகவும், அதன்பின்னர் சாமியை மலையேற்றி, அவரது கையில் சிகப்புக் கயிறை கட்டி, நெற்றியில் திலகமிட்டதின் மூலமாக மிஷனெரி மதத்தில் அவர் பிறந்த பாவம் கழுவப்பட்டு, புண்ணிய கணக்கு கூடியிருப்பதாகவும் சுவாமி தர்மதேவ் அவர்கள் திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார்.

மிஷனெரி நாடுகளின் குகையான அமெரிக்காவிலேயே புண்ணிய ஹிந்துக்களுக்காக ’ஹிந்து சர்வதேச சங்கம்’ நடத்திவரும் ஸ்ரீமான் ராஜன்சேத், ஸ்ரீமதி ஜூலியாவின் இம்முடிவை வரவேற்றிருக்கிறார். ஸ்ரீமதி ஜூலியாவின் முடிவினைத் தொடர்ந்து ஸ்ரீமதி ஏஞ்சலினா ஜோலி, ஸ்ரீமதி கேட் வின்ஸ்லெட், ஸ்ரீமதி சாரா ஜெசிக்காபார்க்கர் ஆகியோரும் புண்ணிய மதத்தை தழுவிட வேண்டுமென்று 80 கோடி புனிதமக்களாம் ஹிந்துமக்கள் சார்பாக வேண்டுகோள் விடுக்கிறோம்.

ஸ்ரீமதி ஜூலியா ராபர்ட்ஸ் அவர்களை அண்டோமேனியாக்கள் முன்னுதாரணமாக கொண்டு செயல்பட்டால் புண்ணிய பாரதம் வளம்பெறும் என்பது கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை என்பது மாதிரியான பகிரங்க உண்மை. விரைவில் ஸ்ரீமதி ஜூலியாராபர்ட்ஸ் காஞ்சிபுரம் கோயில்களுக்கு வந்து கருவறைகளில் செய்யப்படும் சிறப்புப்பூசைகளை கண்காணித்து, மேன்மேலும் ஹிந்து மதத்துக்கு சேவை செய்யவேண்டுமென்பதே நம்மூர் தேவ அர்ச்சர்களின் எதிர்ப்பார்ப்பு.

மொழிக்கு விழா எடுத்து நாட்டை அழிக்கும் கிருமிகளான திம்மிக்கள் கூட்டம் இனியாவது திருந்தி புண்ணிய மதச்சேவையில் தங்களையும் இணைத்துக்கொண்டு, திருப்பதிக்குச் சென்று மொட்டைபோட்டு ஸ்ரீராம நாமம் பாடவேண்டும். உலக செம்மத மாநாடு நடத்த முன்வரவேண்டும். மூத்த திம்மி செய்வாரா?

9 ஆகஸ்ட், 2010

PUSH - PULL?

சாமானிய சென்னைத் தமிழனுக்கு ஒரு கலவரமான விஷயமொன்று உண்டு. அதாவது கண்ணாடியால் அலங்கரிக்கப்பட்ட கடைக்கதவுகளை கண்டதுமே “ஒருவேளை ரேட்டு கூடுதலாய் இருக்குமோ?” என்று சந்தேகத்தோடே அணுகுவான். எனவேதான் ஐனாக்ஸுகளையும், சத்தியம்களையும் அனாயசமாக புறக்கணிக்கிறான். கிட்டத்தட்ட இதே டிக்கெட் ரேட்டு கொண்ட குரோம்பேட்டை வெற்றிக்கு ஓடுகிறான்.

நமக்கு இந்த ஃபீவர் கொஞ்சம் அதிகமாகவே உண்டு. ஏழெட்டு வருடங்களுக்கு முன்பாக பஸ்ஸில் போகும்போதெல்லாம் வேளச்சேரியில் ஒரு மென்ஸ் பியூட்டி பார்லரை ஏக்கமாகப் பார்ப்பேன். கலரிங், ஹேர்மசாஜ், ப்ளீச்சிங்கெல்லாம் செய்யப்படுவதாக போர்டில் அறிவித்திருக்கும் அதிநவீன ஆணழகுக் கடை அது. அங்கே கட்டிங் + ஷேவிங் செய்துக்கொள்ள எவ்வளவு கட்டணம் என்று தெரியாததால், நீண்டநாட்களாக அந்நிலையத்தை புறக்கணித்து வந்தேன். ப்ளூ கலர் சீட்டுக் கிழிந்த – கடைக்கு பெயர் கூட இல்லாத சலூன் மோகன் அண்ணனிடமே ஒன்றரை மாதத்துக்கு ஒருமுறை சிகை அலங்காரம் நமக்கு வழக்கமாக நடைபெறும். இதற்கான செலவு ரூ.35/- (வரிகள் உட்பட).

நண்பன் ஒருவன் மூலமாக அந்த ஆணழகுக் கடையின் அந்நாளைய ரேட்டை பின்னாளில் அறிய முடிந்தது. குளிர்சாதனவசதி செய்யப்பட்ட அக்கடையில் கட்டிங் + ஷேவிங்குக்கு ரூ.40/- தான் கட்டணமாம். அதாவது மணி அண்ணன் கடையைவிட விட ரூ.5/- தான் அதிகம். கட்டிங் முடித்து ஷாம்பூ போட்டு ஹீட்டரும் முடிக்கு போட்டுவிடுவார்களாம். எனவே அந்த 5 ரூபாயைக்கூட அதிகமென்று சொல்ல ஏதுமில்லை. இப்போது அந்தக்கடை அங்கு இல்லை. என்ன செய்வது? வடை போயே போயிந்தி...

லேண்ட்மார்க் மாதிரி புத்தகக்கடை தொடங்கி சாதாரண ஓட்டல்கள் வரை பலவற்றையும் நாம் அச்சத்தோடு புறக்கணிக்க இந்தக் கண்ணாடி அலங்கரிப்பு மேட்டரே காரணமாக இருக்கிறது. ஆடம்பரத்தை கண்டு அஞ்சுகிறோம்.

முன்பு தேனாம்பேட்டை எல்டாம்ஸ் ரோட்டில் ஒரு டிசைனிங் செண்டரில் வேலை பார்த்து வந்தேன். ஸ்க்ரீன் பிரிண்டிங் தொழில் பிரபலமாக இருந்த காலக்கட்டம் அது. மினி ஆஃப்செட் சந்தைக்குள் நுழைந்துக் கொண்டிருந்தது. விசிட்டிங் கார்ட், லெட்டர்பேட், லோகோ, பிரிண்ட் ஆட் என்று அங்கே டிசைனிங் செய்துக் கொண்டிருந்தோம். ஆட் ஏஜென்ஸி செய்யும் வேலைகளை விட அதிகமாக, ஆனால் கொஞ்சம் குறைந்த விலையில் செய்துத் தந்துக் கொண்டிருந்தோம்.

முதலாளிக்கு நல்ல லாபம். ஆனால் ஆபிஸ் மட்டும் மீடியம் பட்ஜெட் படங்களின் க்ளைமேக்ஸில் வரும் கொடவுனைப் போல கொஞ்சம் டொங்காக இருக்கும். ஒருநாள் முதலாளியிடம் கேட்டேன். “உங்களுக்கு வர்ற லாபம் லெவலுக்கு எங்களுக்கு சம்பளம் கொடுக்கிறதில்லை. அதை விடுங்க. ஆனா ஆபிஸை கொஞ்சம் கண்ணாடி, கிண்ணாடி போட்டு கூலிங் பேப்பரெல்லாம் ஒட்டி, கஸ்டமர்கள் வந்துபோக குஜாலான எஃபெக்ட்டைக் கொடுக்கலாமில்லே?”

முதலாளி சொன்னார். “காசு பிரச்சினையில்லை. பண்ணிடலாம். ஆனா அப்படியெல்லாம் பண்ணோம்னா சாதாரண பிரிண்டர் உள்ளே வரவே தயங்குவானில்லையா?”.

நிஜம்தான். அதே தெருவில் ஆடம்பரமான அலுவலகத்தோடு, பிற்பாடு தொடங்கப்பட்ட சில டிசைன் சென்டர்கள் - எங்களைவிட குறைவான ரேட்டு வாங்கியும் கூட- தொடங்கப்பட்ட வேகத்தோடே மூடப்பட்டு விட்டன. “அங்கேல்லாம் ஏசி போட்டிருக்காங்க சார். அந்த செலவையும் சேர்த்து எங்ககிட்டேதானே வாங்குவாங்க” என்று ஒரு வாடிக்கையாளர் சொன்னார்.

இருப்பினும் ‘ரேட்’ குறித்த அச்சம் கொஞ்சம் அகன்றுவிட்டது. அது எப்படியெனில் ஏதோ ஒரு ஓட்டல் பாரில் முதன்முதலாக பீர் அடித்தபோது கிடைத்த சொகுசுதான் காரணம். இங்கிலீஷ் படங்களில் வருவதைப் போல மிதமான லைட்டிங், யூனிஃபார்ம் போட்ட சிப்பந்திகள், அவித்த வேர்க்கடலை பப்படம் ஃப்ரீ சைட் டிஷ் என்றெல்லாம் அனுபவித்துவிட்டு, பில்லைப் பார்த்தால்.. டாஸ்மாக் செலவை விட கொஞ்சமே கொஞ்சம் அதிகம். (ஹாட்டுக்கு இது வேலைக்கு ஆகாது என்பது வேறு விஷயம்)

எனவே இப்போது எந்த கடைக்குப் போனாலும் கண்ணாடி இருக்கிறதா, கூல் பேப்பர் ஒட்டப்பட்டிருக்கிறதா என்றெல்லாம் பெரியதாக மெனக்கெடுவது இல்லை. வாங்க விரும்புகிற பொருளின் விலையை மட்டும் விசாரித்துவிட்டு, மற்ற சாதாக்கடைகளின் ரேட்டை மனதுக்குள் ‘கம்பேர்’ செய்து கணக்கு போட்டுவிட்டு வாங்கிவிடுகிறேன்.

இங்கே விளம்பரம் செய்வதற்கு ஒரு அடிப்படை விதி உண்டு. இது இந்திய நுகர்வோர் மனநிலைக்கு கச்சிதமாகப் பொருந்தும் – பெரிய பிராண்டுகளுக்கு விதிவிலக்கு. எந்தப் பொருளை விளம்பரப் படுத்தினாலும், விளம்பரத்தில் ‘ரேட்டை’ குறிப்பிட்டுவிட்டால், அவ்விளம்பரம் மற்ற விளம்பரங்கள் ஏற்படும் தாக்கத்தைவிட டபுள் தாக்கத்தை ஏற்படுத்தும். யுனிவர்செல்லைவிட பூர்விகாவின் விற்பனை வருடாவருடம் அதிகரித்துக் கொண்டேச் செல்கிறது என்பதைவைத்து இந்த விளம்பர டெக்னிக்கின் அவசியத்தைப் புரிந்துகொள்ளலாம்.

முன்பெல்லாம் சட்டையோ, பேண்ட்டோ எடுக்கவேண்டுமானால் சரவணாவைத் தவிர வேறு கடை தெரியாது. இப்போது டெர்பீகாரன்கூட விளம்பரத்தில் விலையை குறிப்பிட்டு விடுவதால், அவன் கடைக்கு கண்ணாடி இருக்கிறது, ஏசி போட்டிருக்கிறான், கடைப்பெண் ஏர் ஹோஸ்டஸ் மாதிரி இருக்கிறாள் போன்ற மனத்தடை எதுவுமின்றி நேராக கடைக்குப் போய் எதையாவது வாங்கிவந்துவிட முடிகிறது.

ஆனாலும் இன்றும் கூட எனக்கு கண்ணாடி போட்ட ஆபிஸுக்கு ஏதாவது வேலையாகப் போகும்போது கொஞ்சம் படபடப்பாகத்தான் இருக்கும். வரவேற்பரையில் குஷன் வைத்த நாற்காலியில் உட்காரும்போது கொஞ்சம் அந்நியமாகவே ஃபீல் செய்கிறேன்.

இந்த ஆடம்பர கண்ணாடிக் கதவு விஷயத்தில் பெரிய பிரச்சினை என்னவென்றால் PUSH அல்லது PULL என்று ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார்கள். PUSH என்றால் அமுக்கித் தள்ளவும் என்று பாலாஜீஸ் ஈஸிவே டூ ஸ்பீக் இங்க்லீஷ் புத்தகத்தில் படித்து தெரிந்து கொண்டிருக்கிறேன். PULL என்றால் இழு என்றும் அதே புத்தகத்தில் குறிப்பிடப் பட்டிருக்கிறது. ஆனாலும் ‘PULL – தள்’ என்று மனம், ஏதோ ஒரு ஆங்கிலத்தமிழ் ஒப்பீட்டு வார்த்தை விளையாட்டை விளையாடி குழப்பிவிட்டிருக்கிறது. PULLஅ வேண்டிய இடத்தில் தள்ளித் தொலைத்துவிட்டு பலர் முன்னிலையில் அசிங்கப்பட்டுத் தொலைக்க வேண்டியிருக்கிறது. நம் பர்சனாலிட்டியும் பார்க்க புல் தடுக்கி பயில்வான் மாதிரி இருப்பதால், கண்ணாடிக் கதவோடு PULLU முள்ளு செய்துக் கொண்டிருக்கையில், பார்க்கிறவர்கள் எல்லாம் ஏதோ வாழைப்பழத் தோலில் வழுக்கி விழுந்தவனை பார்த்து சிரிப்பது மாதிரி அசட்டுச்சிரிப்பு சிரித்து தொலைக்கிறார்கள்.

6 ஆகஸ்ட், 2010

பாதுகாப்பானதா ரயில் பயணம்?

பிப்ரவரி 13, 2009, வெள்ளிக்கிழமை.

பாராளுமன்றத்தில் ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அன்றைய ரயில்வே அமைச்சர் லாலுபிரசாத் யாதவ். இந்திய ரயில்வேத் துறை விபத்தின்றி செயல்பட மேற்கொள்ளப்பட்டுவரும் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பற்றிய விரிவான விளக்கங்களை அள்ளித் தெளித்துக் கொண்டிருந்தார். அவரது உரையில் பெருமிதம் ஒளிர்ந்தது. . நகைச்சுவையாகப் பேசுவதில் வல்லவரான லாலுவின் பேச்சு எதிர்க்கட்சிகளுக்கு சவால் விடும் தொனியைக் கொண்டிருந்தது. அவருடைய பெருமிதத்துக்கும், சவாலுக்கும் காரணமிருந்தது. கடந்து போயிருந்த 2007 மற்றும் 2008 ஆண்டுகளில் பெரிய அளவில் ரயில் விபத்து ஒன்றுகூட நாட்டில் நடைபெற்றிருக்கவில்லை. ஆனால்-

அவரது உரை முடிந்த சில மணி நேரங்களில் புவனேஸ்வருக்கு 120 கிலோ மீட்டர் வடக்கே அந்தப் பெரிய விபத்து நிகழ்ந்தது. இந்திய ரயில்வேயின் பெருமைக்குரிய ரயில்களில் ஒன்றான கோரமண்டல் எக்ஸ்பிரஸ்ஸின் 14 பெட்டிகள் தடம்புரண்டன. ஹவுராவிலிருந்து வெள்ளிக்கிழமை மதியம் கிளம்பிய அந்த ரயில், இரவு 7.50 அளவில் விபத்துக்குள்ளானது.. சம்பவ இடத்திலேயே 14 பேர் மரணம். நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டார்கள்.

அந்த விபத்து ஒரு தொடக்கம்தான். அதைத் தொடர்ந்து, கடைசியாக அண்மையில் ஜூலை 19 அன்று, மேற்குவங்காளத்தின் சைந்தியாவில் நடந்த உத்தரபங்கா எக்ஸ்பிரஸ் விபத்துவரை மொத்தமாக 13 பெரிய விபத்துகள் நிகழ்ந்திருக்கின்றன. .

2010ன் தொடக்கமே இந்திய ரயில்வேக்கு மோசமானதாக அமைந்தது. புத்தாண்டின் இரண்டாம் நாளில், உத்தரப்பிரதேசத்தில் மட்டுமே பனி காரணமாக மூன்று விபத்துகள். மறுநாளும் கூட அருணாச்சல் எக்ஸ்பிரஸ் விபத்துக்குள்ளானது. அம்மாதத்திலேயே மேலும் மூன்று விபத்துகள். நடப்பு ஆண்டின் முதல் 7 மாதங்களில் மட்டும் 11 விபத்துகள். இதற்கு முன் எப்படி என்று பார்த்தோமானால் ஆண்டுக்கு 5 பெரிய விபத்துகள் என்பதுதான் அதிகபட்சம். இந்திய ரயில்வே தனது வரலாற்றில் இவ்வருடம் விபத்துக்களின் எண்ணிக்கையில் சாதனை – மன்னிக்கவும் – வேதனை படைத்திருக்கிறது!

விபத்துகளால் ஏற்படும் பொருளிழப்பைக் கூட விட்டுவிடலாம். மனித உயிரிழப்புக்கு எதைக்கொண்டு ஈடு செய்ய இயலும்? தொடர்ச்சியாக நடந்துவரும் ரெயில் விபத்துகள், மற்றும் விபத்துக்களைக் குறிவைத்து நடத்தப்படும் நாசவேலைகளின் காரணமாக, இனி ரயில் பயணங்கள் பாதுகாப்பானவைதானா? என்ற கேள்வியை ஒவ்வொரு ரயில் பயணியும் தனக்குள்ளே கேட்டுக்கொள்ளும் சூழல் இன்று நிலவுகிறது.

இப்படி அடிக்கடி விபத்துகள் ஏற்பட என்ன காரணம்?


ஊழியர்கள்

2003ஆம் ஆண்டு ரயில்வே அமைச்சராக இருந்த நிதீஷ்குமார் . பாதுகாப்பு குறித்த வெள்ளை அறிக்கை ஒன்றை நாடாளுமன்றத்தில் சமர்பித்தார். அதில் “விபத்துகள் மூன்றில் இரண்டு ஊழியர்களின் தவறுகளால் நிகழ்கிறது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ஊழியர்கள் தவறு செய்ய அவர்களது பணிச்சுமையும் ஒரு காரணமாக இருக்கலாம். உலகெங்கும் டிரைவர்களின் வேலை நேரம் ஒரு நாளைக்கு 6 மணி நேரம் (வாரத்துக்கு 36 மணி நேரம்) என்றிருக்கையில், ஒரு இந்திய ரயில்வேயின் டிரைவர் குறைந்தபட்சம் 10 மணி நேரம் வேலை பார்க்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. டிரைவர்கள் மட்டுமல்ல, டிராஃபிக் ஊழியர்களும், கார்டுகளும், கேட்மேன்களும் கூட 12 மணிநேரம் வேலைவாங்கப்படுவது சகஜமாக இருக்கிறது.

மற்ற வேலை மாதிரி இல்லை ரயில்வே வேலை. ஒரு ஊழியர் தொடர்ச்சியாக 12 மணி நேரம் வேலை பார்த்தால், அவரை விடுவிக்க இன்னொரு ஊழியர் வந்தாக வேண்டும். வரவேண்டிய ஊழியர் ஏதோ தனிப்பட்ட காரணங்களால் வர இயலவில்லை என்றால் அப்படியே விட்டு விட்டு போக முடியாது. ஏற்கனவே வேலை பார்த்த ஊழியர், அடுத்த 12 மணி நேரமும் சேர்த்து 24 மணி நேரமும் விழித்திருக்க வேண்டிய நிலை. ரயில்வே பணியாளர்களிடம் பேசியபோது 36 மணி நேரங்கள் தொடர்ச்சியாக விழித்து வேலை பார்ப்பதெல்லாம் சகஜம் என்கிறார்கள்.

ஆள்பற்றாக்குறை

ஊழியர்களின் பணிச்சுமையைக் குறைக்க காலியாக இருக்கிற பணியிடங்களை நிரப்பினாலே போதும். இந்திய ரயில்வேயில் 89,000 காலியிடங்கள் இருக்கின்றன. அவற்றில் 20,000 பணிகள் பாதுகாப்பு தொடர்பானவை என்று செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் உண்மையில் காலியிடங்கள் இதைவிட அதிகம் என்கிறார் தெற்கு ரயில்வே தொழிலாளர்கள் யூனியனின் (டிஆர்.இ.யூ) செயல் தலைவரான இளங்கோவன். “தோராயமாக ஒரு லட்சத்து 70 ஆயிரம் காலியிடங்கள் இருக்கின்றன. இவற்றில் சுமார் 80 ஆயிரம் இடங்கள் பாதுகாப்பு தொடர்பான பணிகளில் இருப்பவை.” என்கிறார். தனது கூற்றுக்கு ஆதாரமாக ரெயில்வே அமைச்சர் பாராளுமன்றத்தில் பேசியதைக் குறிப்பிடுகிறார்.

தெற்கு ரயில்வேயில் மட்டுமே பாதுகாப்பு தொடர்பான பணிகளில் 6000 காலியிடங்கள். டிராக்மேன் உள்ளிட்ட ‘டி’ பிரிவு பணியிடங்கள் 35,000 காலியாக இருக்கின்றன..
ஒருகாலத்தில் 20 லட்சம் ஊழியர்கள் இருந்த ரயில்வேயில் இன்று 13 லட்சம் பேர்தான் பணியாற்றுவதாக தொழிற்சங்கங்கள் கூறுகின்றன

தண்டவாளங்கள்

தண்டவாளங்களைப் பொறுத்தவரை தமிழகத்தில் நிலைமை கவலை தருவதாகவே இருக்கிறது.. விழுப்புரம் அருகே ரெயில் தண்டவாளம் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது. ஈரோடுக்கு அருகே தண்டவாளத்தில் பாறாங்கல் வைக்கப்பட்டது. சென்னைக்கு அருகே பட்டாபிராம் என்ற இடத்தில் சிமெண்ட் ப்ளேட் வைத்து ரயிலை கவிழ்க்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கோவை அருகே அடுத்தடுத்து ரெயில்களை கவிழ்க்க தொடர் சதித்திட்டம் மேற்கொள்ளப்பட்டது.

சதித்திட்டங்கள் ஒருபுறம் இருக்க தண்டவாளத்தில் விரிசல் காணப்படுவதும் ரயில் பயணங்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்துகின்றன. கடந்த மூன்று மாதங்களில் மட்டும் தெற்கு ரயில்வே மண்டலத்தில் 32க்கும் மேற்பட்ட இடங்களில் விரிசல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உதாரணத்துக்கு கடந்த ஜூலை 22, விடியற்காலை ஒரு மணியளவில் உளுந்தூர்ப்பேட்டை அருகே நிகழ்ந்த சம்பவத்தை சொல்லலாம் பு.மாம்பாக்கம் ரயில்வே மேம்பாலத்துக்கு மேலே பாண்டியன் எக்ஸ்பிரஸ் வந்து கொண்டிருந்தது. திடீரென்று ரயிலில் கடுமையான அதிர்வு ஏற்பட, ரயிலின் டிரைவர் உளுந்தூர்பேட்டை ரயில் நிலைய அதிகாரியிடம் தகவல் தெரிவித்திருக்கிறார். விரைந்து சென்று பார்த்தபோது தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. தற்காலிகமாக அது சரிசெய்யப்பட்டு, வந்துகொண்டிருந்த ரயில்கள் மிக குறைவான வேகத்தில் அவ்விடத்தை கடந்தன. விரிசலுக்கு நாசவேலையெல்லாம் காரணமில்லை. வெல்டிங் செய்யப்பட்டதில் ஏற்பட்ட பழுதுதான் காரணமாம்.

தண்டவாளத்தில் விரிசல் ஏற்படுவதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று சரக்கு ரயில்களில் ஏற்றப்படும் அளவுக்கு அதிகமான சுமை. ஒவ்வொரு ஆண்டும் நஷ்டத்தைச் சந்தித்து வந்த இந்தியன் ரயில்வே முதல் முறையாக லாலு அமைச்சராக இருந்த போது லாபம் ஈட்டியது. அதற்குக் காரணம் சரக்குப் போக்குவரத்து. அப்போதிருந்து ரயில்வே நிர்வாகம் சரக்குப் போக்குவரத்தின் மீது கவனத்தைத் திருப்பியது. நிர்ணயிக்கப்பட்ட அளவிற்கும் அதிக அளவு எடை வேகன்களில் ஏற்றப்படுவதாகச் சொல்லப்படுகிறது. விளைவு தண்டவாளத்தில் விரிசல்.

இந்தப் பிரசினையை ஆராய்ந்து ரயில்வே வெளியிட்ட ஆய்வறிக்கை சரக்கு ரயில்களுக்குத் தனிப்பாதை என்ற தீர்வை முன்வைத்தது. ரயில்வே அமைச்சகமும் இந்தத் தீர்வை ஏற்றுக் கொண்டு 2007-08 பட்ஜெட்டில் தனி இருப்புப்பாதை திட்டத்தை அறிவித்தது. ஆயினும் இதனை நிறைவேற்றுவதில் அது முனைப்புக் காட்டவில்லை

விரிசலுக்கான மற்றொரு காரணம், ஒன்றன் பின் ஒன்றாகக் குறைந்த இடைவெளியில் செல்லும் அதி வேக ரயில்கள். கடந்த சில ஆண்டுகளில் 82 விரைவு ரயில்கள் அதிவேக ரயில்களாக மாற்றப்பட்டிருக்கின்றன. இந்த அதி வேக ரயில்களின் வேகத்தைத் தாங்கும் சக்தி தற்போதுள்ள தண்டவாளங்களுக்கு இல்லை.2020க்குள் பயணிகள் வண்டிகளின் வேகம மணிக்கு 130 கிலோ மீட்டரிலிருந்து 200 கிலோ மீட்டர் வரை இருக்குமாறு அதிகரிப்பதைத் தனது லட்சியமாக அறிவித்திருக்கிறது ரயில்வே. தண்டவாளங்களைப் பலப்படுத்தாமல் அல்லது மாற்றாமல் இதைச் செய்தால் அது தற்கொலை முயற்சியாக முடியும்.

ரோந்துப் பணியை மேற்கொள்வதன் மூலம் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருக்கிறதா அல்லது சதி வேலைகள் நடந்திருக்கிறதா என்பதை முன்கூட்டியே கண்டறிய முடியும். ஆனால் பணியாட்கள் பற்றாக்குறையால் இந்தப் பணி சரியாக நடப்பதில்லை.

மனித வளம் குறைவாக இருக்கும் நாடுகளில் இது போன்ற பணிகளை மேற்கொள்ள அல்ட்ராசானிக் ஒலி அலைகளைப் பயன்படுத்தும் தொழில் நுட்பம் செயல்படுத்தப்படுகிறது. நமது ரயில்வேயில் அண்மைக்காலத்தில்தான் (2000க்குப் பிறகு) இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தொழில் நுட்பம்

’நகரும் அருங்காட்சியகங்கள்’ (Museum on the move) என்று வெளிநாட்டவர் நமது ரயில்களைக் கேலி செய்வதுண்டு. அதற்குக் காரணம் அவை நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில்லை. உதாரணமாக இந்த நேரம் (Real Time) எந்த ரயில் எங்கிருக்கிறது என்பதைக் கண்டறிய GIS, GPS. என்ற இரண்டு சிஸ்டம்கள் உலகெங்கும் பயன்படுத்தப்படுகின்றன. GIS கணினி சார்ந்தது. GPS செயற்கைக் கோள் சார்ந்தது, இவற்றை ரயில் என்ஜின்களில் பொருத்திவிட்டால் தான் சென்று கொண்டிருக்கும் தண்டவாளத்தில் வேறு ஏதேனும் ரயில் வந்து கொண்டிருக்கிறதா, நின்று கொண்டிருக்கிறதா என்பதை ரயில் ஓட்டுபவர் கண்டு கொள்ள முடியும். மூடூபனிக்காலத்திலும் சிக்னல்கள் தெளிவாகத் தெரிய LED விளக்குகளைப் பயன்படுத்தலாம். .

இந்தியா தகவல் தொழில்நுட்பத்துறையில் அடைந்திருக்கும் முன்னேற்றத்தை பயன்படுத்திக் கொள்ள ரயில்வே துறை முன்வருமாயின் விபத்துக்களை மட்டுமல்ல, நிர்வாகக் குளறுபடிகள் பலவற்றையும் கூட தவிர்க்கலாம்.

அரசியல் அக்கப்போர்

ரயில் போக்குவரத்துத் துறையை விபத்தின்றி நடத்த வேண்டிய பொறுப்புக் கொண்ட அமைச்சர் மம்தா பானர்ஜி இது போன்ற பிரசினைகளையோ, தீர்வுகளையோ பற்றிப் பேசாமல், விபத்துகளை அரசியலாக்கி வருகிறார். அவரது சொந்த மாநிலமான மேற்கு வங்காளத்தில் அடுத்தடுத்து இரண்டு விபத்துகள் நடைபெற்றிருப்பதால், “எதிர்க்கட்சிகளின் சதி”யென்று மாநிலத்தை ஆளும் மார்க்சிஸ்டுகளின் மீது பாய்கிறார். லாலு அமைச்சராக இருந்த காலத்தில் நிர்வாகம் சரியில்லை என்று வெள்ளை அறிக்கை சமர்ப்பித்ததில் தொடங்கி மம்தாவின் ரயில்வே நிர்வாகம் என்பது அவரது அரசியலையொட்டியே நடைபெறுகிறது

ஒரு விபத்து நடந்தாலே தார்மீகப் பொறுப்பேற்று அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிடும் லால்பகதூர் சாஸ்திரி காலத்து அரசியல் மரபு இன்று இல்லை. ஆயினும் சுதந்திரம் பெற்றதிலிருந்தே எந்த ரயில்வே அமைச்சரின் நிர்வாகக் காலத்திலும் இவ்வளவு எண்ணிக்கையிலான விபத்துகள் நடந்ததில்லை என்பதை மம்தாபானர்ஜி முதலில் உணர்ந்தாக வேண்டும்.

’விபத்தில்லா ரயில்வே. தவறில்லா கருவிகள்’ என்பதே தனது லட்சியமென்று அறிவித்து, இந்த இலக்கை 2020க்குள் அடைய வேண்டும் என்று ரயில்வே நிர்வாகம் பேசிவருகிறது. அதை அடைய வேண்டுமானால் தவிர்க்கப்பட வேண்டியது அரசியல் அக்கப்போர். செய்யப்பட வேண்டியது ஆக்கபூர்வமான சீரமைப்பு.


எக்ஸ்ட்ரா மேட்டர் 1 :

ஏழையின் உயிர் என்றால் அத்தனை அலட்சியமா?

நான் அடிக்கடி சென்னைக்கு வேலைநிமித்தமாக வந்து செல்பவன். திட்டமிடப்படாத பயணம் என்பதால் பெரும்பாலும் ‘அன்ரிசர்வ்ட்’ பெட்டிதான். ரயில் நிலையங்களுக்குள் நுழையும்போது கவனித்திருக்கிறேன் பணக்காரர்கள் பயணிக்கக்கூடிய பெட்டிகள் பெரும்பாலும் நிலையத்துக்குள் நுழைந்ததுமே ஏறுவதற்கு வசதியாக . ரயிலின் மத்தியிலும், ஏழைகள் பயணிக்கும் அன் ரிசர்வ்ட் பெட்டிகள் முதலிலும், கடைசியிலுமாக அமைக்கப்பட்டிருக்கின்றன. போர்ட்டர் வைத்து சுமைகளை கொண்டு வரக்கூடிய வசதி படைத்தவர்களுக்கு நிலையத்தில் நுழைந்ததுமே பெட்டி தயாராக இருக்கும். சுமைகளை தானே சுமந்து செல்ல வேண்டிய நிலையில் இருப்பவர்கள் பல மீட்டர் தூரம் நடந்து சென்று முதல் பெட்டியிலோ, கடைசி பெட்டியிலோ ஏறவேண்டும்.

விபத்துக்கள் நடக்கும் போதும் அதிகம் பாதிக்கப்படுபவை முத்லிலும் கடைசியிலும் இருக்கும் பெட்டிகள்தான். என்றுமே இந்தியாவில் ஏழைகள் உயிர் மட்டும் மிக மலிவு! .

தினசேகரன், போத்தனூர்.


எக்ஸ்ட்ரா மேட்டர் 2:

கடந்த இருபதாண்டுகளில் ரயில் விபத்துகளில் உயிரிழந்தவர்களின் சராசரி எண்ணிக்கை: வருடத்துக்கு 186.

கடந்த 9 மாதங்களில் மட்டும் ரயில் விபத்துக்களில் உயிரிழந்தவர்கள் : 233 பேர்


எக்ஸ்ட்ரா மேட்டர் 3 :

இந்திய ரயில்வேயின் மொத்த இருப்புப்பாதை 64,000 கி.மீ

நவீன பாதுகாப்பு கருவிகள் கண்காணிக்கும் தூரம் சுமார் 1,700 கி.மீ மட்டுமே!


எக்ஸ்ட்ரா மேட்டர் 4 :

“அவர்கள் (மார்க்சிஸ்ட்கள்) மாநிலத்தின் வளர்ச்சியைத் திட்டமிடுவதிலை.ரயில் தண்டவாளங்களின் இணைப்பை அகற்றுவதில் ஈடுபட்டிருக்கிறார்கள். சில ‘தோழர்’கள் அதை அறிவியல்ரீதியாகத் திட்டம தீட்டிக் கொண்டிருக்கிறார்கள்”
-மம்தா பானர்ஜி

“அமைச்சரின் கவனம் முழுவதும் வேறெதிலோ (மே.வங்க அரசியலில்) இருக்கிறது. நாடு அதன் பலனை அனுபவிக்கிறது”
-சீதாராம் யெச்சூரி

(நன்றி : புதிய தலைமுறை)

5 ஆகஸ்ட், 2010

உல்டா!

‘உல்டா’ என்றொரு அழகிய தமிழ் சொல்லாடலை என்னுடைய பதின்ம வயதுகளில் அடிக்கடி கேட்டு சிலாகித்திருக்கிறேன். அப்போதெல்லாம் ஏதாவது வித்தியாசமான காட்சிகள் சினிமாத் திரையில் தெரிந்தால், அப்படியே இங்கிலீஷ்லேருந்து ‘உல்டா’ பண்ணிட்டாண்டா என்று ஸ்பாட்டிலேயே கண்டுபிடித்து ரசிகர்கள் நொங்கெடுத்து விடுவார்கள்.

இதுமாதிரியெல்லாம் நொங்கெடுக்க ‘உல்டா’ ஒன்றும் தீண்டாமை மாதிரி பாவச்செயல் அல்ல. ‘உல்டா’ என்றொரு தொழில்நுட்பம் இல்லாது போயிருந்தால் விஜயகாந்த் இங்கே புரட்சிக்கலைஞர் ஆகியிருக்கவே முடியாது. தென்னாட்டு மைக்கேல் ஜாக்சனாக பிரபுதேவா உயர்ந்திருக்க முடியாது. கமல்ஹாசன் காட்ஃபாதர் ஆகியிருக்க மாட்டார். ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ஆகியிருக்க வாய்ப்பிருந்திருக்காது.

90களில் இதுபோல ’உல்டா’க்களை கண்டறிந்து கட்டுரை எழுதுவது இதழியலின் அத்தியாவசியத் தேவையாகக்கூட இருந்ததுண்டு. ‘வெண்ணிலவே வெண்ணிலவே’ பாட்டு ஹிட் ஆனபோது, மெட்ரோப்ரியா கூட குமுதத்தில், அப்பாடல் எந்த ஆங்கிலப் படத்திலிருந்து பிட் அடிக்கப்பட்டது என்று எழுதியிருந்தார். ‘உல்டா’ காட்சிகளை அமைப்பதில் வல்லவரான இயக்குனர் வசந்தே கூட வெறுத்துப் போய் ‘உல்டா’ என்ற பெயரில் ஒரு அருமையான சிறுகதையை விகடனில் எழுதியிருந்ததாக ஞாபகம்.

அமெரிக்க லத்தீன் இலக்கிய ரசனை கொண்ட என்னுடைய வாசகர்களே! மேற்கண்ட மூன்று பாராகிராப்புகளின் மூலமாக நான் உங்கள் மனதுக்குள் புகுந்து, உங்கள் மனோவோட்டத்தை மாற்ற முயற்சிக்கிறேன் என்பதை இன்னேரம் புரிந்துகொண்டிருப்பீர்கள். நான் ஆயிரக்கணக்கான இலக்கியங்களை படைத்து சோர்வு அடைந்துவிட்டிருப்பது உங்களுக்கு தெரியும்.

சோர்வடைந்தும் தொடர்ச்சியாக பிரிண்டிங் மிஷின் மாதிரி நான் படைப்புகளை படைத்துக்கொண்டே போவதற்கு நான் காரணமல்ல என்பதை நீங்கள் அவசியம் புரிந்துகொள்ள வேண்டும். என்னுள் மார்க்குவேஸும், டால்ஸ்டாயும், தஸ்தாவேஸ்கியும், இன்னும் ஏகப்பட்ட இலக்கிய அஸ்கு புஸ்குகளும் பேயாய் இறங்கி, புயலாய் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

ஏன் என்னால் மட்டும் உலகின் தலைச்சிறந்த எழுத்தாளன் ஆகமுடிந்திருக்கிறது, உங்களால் ஏன் முடியவில்லை என்று தீவிரமாக ரூம் போட்டோ, பாம் போட்டோ யோசித்துப் பாருங்கள். ஏனெனில் நீங்கள் நானில்லை. நான் நினைத்தாலும் அழித்துவிடமுடியாது என்னுடைய பிரபலத்துக்கு காரணமென்ன? ஏனெனில் நான் நீங்களில்லை.

தமிழின் முன்னணி பத்திரிகைகளும், தெலுங்கு பத்திரிகைகளும், கன்னட, மலையாள, அரபி, ஹீப்ரு, லத்தீன், ஜெர்மானிய, பிரெஞ்சு, அல்பேனிய, ஆப்ரகாமிய மற்றும் மூவாயிரத்து சொச்ச மொழிகளில் வெளிவந்துக் கொண்டிருக்கும் பத்திரிகைகளும், அம்மொழிகளில் எழுதிக் கொண்டிருக்கும் எழுத்தாளர்களும் என்னுடைய எழுத்துகளை ‘உல்டா’ அடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அவ்வப்போது கண்டறிந்து எனக்கு மின்னஞ்சல் அனுப்பிக் கொண்டிருக்கிறீர்கள்.

உல்டா தொடர்பான இதுபோன்ற மின்னஞ்சல்கள் எனக்கு ஒரு நாளைக்கு ஒரு லட்சமாவது வருவதால், கூகிள் நிறுவனம் என்னுடைய மின்னஞ்சலுக்கான இடத்தை ஒரு லட்சம் ஜிகா பைட்டாக உயர்த்தியிருக்கிறார்கள். ஷேக்ஸ்பியர் கூட அடையமுடியாத உயரமிது.

இதைப்போலவே என்னைப்போன்ற நோபல்தன்மை கொண்ட மாற்றுமொழி சமகாலப் படைப்பாளிகளுக்கும் அவர்களது படைப்பை நான் உல்டா அடிப்பது தொடர்பாக, அவரவரது ரசிகர்கள் அவரவர்க்கு மின்னஞ்சல் மழை பொழிந்துக் கொண்டிருப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன். அவர்கள் நானாக முடியாது என்றாலும் அவர்களும் எழுதுகிறார்கள் என்றவகையில் அவர்களை மதிக்கிறேன்.

இதுவரையில் இப்பதிவில் பதியப்பட்ட 280 வார்த்தைகளை வாசித்ததில் உங்களுக்கு ஒன்று புரிந்திருக்கும். இதுதான் உண்மை. பேருண்மை. இதை நேரிடையாக ஒப்புக்கொள்ள எனக்கு தயக்கமோ, வெட்கமோ, அருவருப்போ, ஆனந்தமோ, அகஞானமோ, புறத்தேடலோ, வேறு எந்த கருமாந்திரமோ தேவைப்படவில்லை. “உல்டா இன்றி அமையாது உலகு”